விசா கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

இரட்டை குடியுரிமைக்கான விண்ணப்பம் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கான விசா கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இரட்டை குடியுரிமையை வழங்குவற்கான கட்டணம் மூன்று இலட்சத்து 45 ஆயிரம் ரூபாவில் இருந்து இரண்டாயிரம் அமெரிக்க டொலர்களாக திருத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், குடியுரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தாட்சி பத்திரங்களின் பிரதிகளுக்கான கட்டணம் 1,150 ரூபாவில் இருந்து 2000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மேலும் சில பிரிவுகளுக்கான விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

விட்டுக்கொடுப்பு இல்லாது தீர்வில்லை

–  எம்.எஸ்.எம். ஐயூப்

 

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவைக் கூட்ட முடிவுகளைத் தெரிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு பெரும்பாலும் அப்போதைய இராஜாங்க அமைச்சராக (தகவல் அமைச்சராக) இருந்த ஆனந்த திஸ்ஸ டி அல்விஸின் தலைமையிலேயே நடைபெற்றறது.

அல்விஸ், 1950களில் பிரதமராக இருந்த ஜோன் கொத்தலாவலவின் செயலாளர்களில் ஒருவராகவும் கடமையாற்றியவர். இந்த மாநாடுகளின் போது அவர் மிகவும் சுவாரசியமான கதைகளைச் சொல்வார். அவ்வாறான ஒரு மாநாட்டின் இறுதியில் அவர் off the record (வெளியிட வேண்டாம்) என்று கூறி ஒரு கதையைக் கூறினார். இது தான் அந்தக் கதை.

இந்திய வம்சாவளி மக்களின் பிரஜா உரிமை 1949 ஆம் ஆண்டு இரத்துச் செய்யப்பட்டு இருந்த நிலையில் ஜோன் கொத்தலாவல அம்மக்களின் பிரச்சினையைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புதுடெல்லிக்குச் சென்றிருந்தார். அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவுடன் அவர் பேச்சுவார்ததை நடத்தும் போது ஒரு கட்டத்தில் நேரு இவ்வாறு கூறினார்.

‘மிஸ்டர் கொத்தலாவல, உங்கள் நாடு சிறியதாக இருந்தாலும் இந்தப் பத்து இலட்சம் மக்களை உள்வாங்கிக் கொள்வது உங்கள் நாட்டுக்கு பெரிய விடயமல்ல. ஆனால், நீங்கள் அதனைச் செய்யப் போனால் உங்கள் எதிர்க் கட்சிக்காரர்கள் உங்களை அரசியலில் இருந்தே விரட்டிவிடுவார்கள். இவர்களை உள்வாங்கிக் கொள்வது இந்தியாவுக்கு அதை விட எவ்வளவோ சிறிய விடயம். ஆனால், எங்கள் எதிர்க் கட்சிகளும் அதற்கு இடம் கொடா. எனவே, இதனை நாம் இரு நாடுகளினது அதிகாரிகளிடம் ஒப்படைத்தால் அவர்கள் உலக அழிவு வரை அதைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். எங்களுக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படாது.’

அன்று நேரு கூறியதைப் போல் அதிகாரிகளிடம் ஒப்படைக்காவிட்டாலும் இலங்கையில் இனப் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்ததைகளும் உலக அழிவு வரை நடைபெறும் போல் தான் தெரிகிறது.

பிரஜா உரிமை தொடர்டபான பேச்சுவார்ததைகள், 50:50 கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை, பண்டா-செல்வா ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்தை, இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பான சிறிமா-சாஸ்திரி பேச்சுவார்த்தை, அதே பிரச்சினை தொடர்பான சிறிமா-இந்திரா பேச்சுவார்ததை, டட்லி-செல்வா ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை, ஜே.ஆரின் வட்ட மேசை மாநாடு, அரசியல் கட்சி மாநாடு (PPC), இந்திய அதிகாரிகளான கோபாலசுவாமி பார்த்தசாரதி மற்றும் ரொமேஷ் பண்டாரி ஆகியோருடனான பேச்சுவார்த்தைகள், திம்புப் பேச்சுவார்த்தைகள், இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள், ரணசிங்க பிரேமதாசவின் சர்வ கட்சி மாநாடு, புலிகளுடனும் தமிழ் கட்சிகளுடனும் பல அரசாங்கங்கள் நடத்திய பேச்சுவார்ததைகள் போன்ற பல பேச்சுவார்ததைகள் 1940களில் இருந்து இன்று வரை இடம்பெற்றுள்ளன.

அதற்குப் புறம்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்பினர்கள் இடையே எத்தனையோ சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. எத்தனையோ முறை இரு சாராரும் உடன்பாடுகளுக்கும் வந்துள்ளனர். ஆனால், இன்னமும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதா இல்லையா என்று வாதிட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.

பொதுவாக இனப் பிரச்சினை இன்னமும் ஏறத்தாழ தொடங்கிய இடத்திலேயே இருக்கிறது. தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று சிங்கள் மக்கள் இன்னமும் கேட்கிறார்கள். சிங்களத் தலைவர்கள் சமஷ்டி முறையை பிரேரித்த போது தமிழர்கள் எதிர்த்தார்கள். இப்போது தமிழர்கள் அதனைக் கேட்கும் போது சிங்கள மக்கள் அதனை எதிர்க்கிறார்கள். 40 ஆண்டுகளாக அதிகார பரவலாக்கலைப் பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்றும் மாகாண சபைகளை அறிமுகப்படுத்தி சுமார் 35 ஆண்டுகள் கழிந்தும் அதிகாரப் பரவலாக்கலால் நாடு பிரிந்துவிடும் என்று சிங்கள் அரசியல்வாதிகள் இன்னமும் வாதிடுகிறார்கள்.

இந்த நிலையில் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினையைப் பற்றி பேச்சுhவர்த்தை நடத்த அரசியல் கட்சிகளுக்கு கடந்த வாரம் அழைப்பு விடுத்தார். பாராளுமன்றத்தில் வரவு- செலவுத் திட்ட விவாதத்தின் போது அந்த அழைப்பை விடுத்த அவர் அதிகார பரவலாக்கலை விரும்புகிறீர்களா என ஒவ்வொரு கட்சித் தலைவர்களிடமும் கேட்டார்.

பேச்சுவார்த்தையே தீர்வுக்காகன ஒரே வழி என்பதால் நேர்மையானதோ இல்லையோ ஜனாதிபதியின் இந்த அழைப்பு பாராட்டுக்குறியதாகும். ஆனால், சுமார் 75 ஆண்டுகளாக நடைபெறும் இந்தப் பேச்சுவார்ததைகளைப் பற்றிய அனுபவத்தின் அடிப்படையில் பார்த்தால் இந்நாட்டு மக்களில் குறைந்தபட்சம் ஒரு சத வீதத்தினராவது ஜனாதிபதி நடத்தப் போகும் பேச்சுவார்தைகள் வெற்றியளிக்கும் என்று நம்புகிறார்களா என்பது சந்தேகமே.

அது அவர் மீதான நம்பிக்கையின்மை மட்டுமல்ல. ஓரளவுக்கு அதுவும் ஒரு காரணம் தான். அதேவேளை அது பொதுவாக தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் திறந்த மனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவார்களா என்பதைப் பற்றிய நம்பிக்கையின்மையேயாகும்.

தமிழ் தலைவர்கள் அதிகார பரவலாக்கல் வேண்டும் என்கிறார்கள. சில சிங்களத் தலைவரகள் அதிகார பரவலாக்கலால் நாடு பிளவுபடும் என்று கூறுகிறார்கள். ஆனால் 34 ஆண்டுகளாக மாகாண சபைகளுக்கு அரசியல் அதிகாரம் பரவலாக்கப்பட்டுத் தான் இருக்கிறது. அவ்வாறு இருந்தும் எந்தவொரு சாராரும் விட்டுக்கொடுக்கவும் தயாராக இல்லை.

தமிழ் தலைவர்கள் இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வே வேண்டும் என்கிறார்கள். அதற்குக் குறைந்த ஒரு தீர்வை எந்தவொரு தமிழ் கட்சியாவது ஏற்றுக் கொண்டால் ஏனைய தமிழ் கட்சிகள் அக்கட்சியின் தலைவர்களை துரோகிகள் என்பார்கள். அதேபோல் சிங்களத் தலைவர் ஒருவர் சமஷ்டி முறையை ஏற்றுக் கொண்டால் இனவாத சிங்களக் கட்சிகள் அவரை துரோகி என்பார்கள். துரோகிப் பட்டம் அடுத்த தேர்தலில் தம்மை பாதிக்கும் என்பதால எவரும் அதனை ஏற்கத் தயாராக இல்லை. இவ்வாறு எந்தவொரு தரப்பினரும் இறங்கி வரத் தயாராக இல்லாவிட்டால் பொது இணக்கப்பாட்டுக்கு வருவது எவ்வாறு?

2015 ஆம் ஆண்டு பதவிக்க வந்த ‘நல்லாட்சி’ அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதற்காக 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசியலமைப்புச் சபையொன்றை நிறுவியது. அச்சபையால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அதில் தமிழர்கள் வெறுக்கும் ஒற்றை ஆட்சி என்ற பதம் தமிழில் இருக்கவில்லை. சிங்கள மொழியில் இருந்தது. சிங்கள தேசியவாதிகள் வெறுக்கும் சமஷ்டி என்ற பதம் எந்த மொழியிலும் இருக்கவும் இல்லை. இனப் பிரச்சினைக்கான தீர்வாக அதில் ‘ஒருமித்த நாடு’ என்ற எண்ணக்கருவே தமிழ் மொழியில் முன்வைக்கப்பட்டு இருந்தது. இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டது. ஆனால் அது சமஷ்டிக் கோரிக்கையை நிராகரிப்பதாகும் என்றும் சிங்கள பௌத்த ஆதிக்கத்தை அங்கீகரிப்பதாகவும் அப்போதைய வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் கூறினார்.

அதேவேளை அந்த அறிக்கையானது தந்திரமாக சமஷ்டி முறையை திணிக்கும் முயற்சி என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சிங்கள் இனவாதிகள் கூறினர். இந்த இழுபறியோடு வேறு பல அரசியல் பிரச்சினைகள் உருவாகி அந்த அரசியலமைப்பு தயாரிப்பு முயற்சி கைவிடப்பட்டது. சண்டையிட்டோர் அந்தத் திட்டத்தின் பெயரை வைத்து தான் சண்டையிட்டார்களேயொழிய அதன் உள்ளடக்கத்தை எவரும் எதிர்க்கவில்லை.

இது ஒற்றையாட்சி என்ற பதத்தை கைவிட சிங்களத் தலைவர்களுக்கும் சமஷ்டி என்பதைக் கைவிட தமிழ் தலைவர்களுக்கும் எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. எனினும் ஜனாதிபதி சந்திரிகா 1995 ஆம் ஆண்டு முன்வைத்து ‘பக்கேஜ்’ என்ற அக்காலத்தில் சகலராலும் அழைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தில் இலங்கை ஒரு பிரந்தியங்களின் ஒன்றியம் என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒற்றையாட்சி என்ற பதம் அதில் இருக்கவில்லை. அதுவே பொருத்தமான தீர்வு என்று சில தமிழ் தலைவர்களும் கடந்த வாரம் கூறியிருந்தனர்.

அத்திட்டத்தை ஏற்றிருக்கலாம் என்று புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கமும் 2003 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் புலிகளின் புதிய நீதிமன்றத் தொகுதியை திறந்து வைக்கும் வைபவத்தின் போது கூறினார். ஆனால் ஜீ.எல். பீரிஸூடன் சேர்ந்து அந்தத் தீர்வுத் திட்டத்தை தயாரித்த நீலன் திருச்செல்வத்தை புலிகளே 1999 ஆம் ஆண்டு தற்கொலை குண்டுதாரி ஒருவர் மூலம் கொன்றனர்.

ஒற்றையாட்சிக்குப் பதிலாக சமஷ்டி முறையின் அடிப்படையில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்று புலிகளும் ரணிலின் அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் 2002 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் ஒஸ்லோ நகரில் வைத்து உடன்பாட்டுக்கு வந்தனர். ஆனால் புலிகள் அந்த இணக்கப்பாட்டை உதறித் தள்ளிவிட்டு 2005 ஆம் ஆண்டு இறுதியில் மீண்டும் போரை ஆரம்பித்தனர்.

இந்த ஒற்றையாட்சி – சமஷ்டி சர்ச்சை விடயத்தில் போலவே வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்திலும் சம்பந்தப்பட்ட எவரும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. அவ்வாறாயின் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் பேச்சுவார்த்தை நடத்தி எதனை சாதிக்கப் போகிறார்கள்? நியாயத்தின் அடிப்படையில் விட்டுக்கொடுக்க சகல தரப்பினரும் தயாராக இல்லாவிட்டால் பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தையும் சிரமத்தையும் வீணடித்து போதாதக்குறைக்கு இன உணர்வுகளையும் தூண்டுவிடுவதை விட சும்மா இருப்பதே மேல் என்றும் வாதிடலாம். எனினும் பேச்சுவார்த்தையைத் தவிர் தீர்வுக்கு வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை.

ரணில் விரித்திருக்கும் புதிய வலை


புருஜோத்தமன் தங்கமயிலால் எழுதப்பட்டு டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி தமிழ் மிரர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த நாட்களில் வெளியிட்ட இருவேறு கருத்துக்கள் தமிழ் மக்களை எரிச்சலடைய வைத்திருக்கின்றன. முதலாவது, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு தமிழ்க் கட்சிகள் முன் நிபந்தனைகள் ஏதுமின்றி வரவேண்டும் என்பது. இரண்டாவது, ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் முன்வைக்கப்பட்டு தோல்வியடைந்த மாவட்ட அபிவிருத்தி சபைகளை மீள கொண்டுவருவது தொடர்பிலானது.

சுதந்திர இலங்கையில் தமிழ்த் தரப்புக்களுக்கும் தென் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் இடையில் பல்வேறு தடவைகள் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. அவை பண்டா -செல்வா, டட்லி – செல்வா ஒப்பந்தங்கள் தொடங்கி, நல்லாட்சிக் காலத்தில் புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வு காண்பது வரையான பேச்சுக்கள் வரை நீண்டிக்கின்றன. பண்டா – செல்வாவுக்கு இடையிலான ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருந்தால், நாடு நீண்ட நெடிய ஆயுத மோதலைக் கண்டிருக்காது. இன முரண்பாடுகள் பாரியளவில் எழுந்தும் இருக்காது. ஆனால், நாட்டின் நலன், ஒருமைப்பாடு, இன நல்லிணக்கம் கடந்து பௌத்த சிங்கள அடிப்படைவாதத்தின் மேலாண்மையும் அதன் வழியான ஆட்சியமைப்பும் பிரதான இடத்தில் இருப்பதாலேயே நாடு படுபாதாளத்துக்குள் வீழ்ந்தது. பௌத்த சிங்கள மேலாதிக்கத்தினால் தென் இலங்கையின் சிங்கள மக்கள் எதுவித நன்மையையும் அடைந்துவிடவில்லை. மாறாக, ஆளும் வர்க்கமும், அவர்களுக்கு இணக்கமான தரப்புக்களுமே ஆதாயங்களை அடைந்திருக்கின்றன.

அப்படியான நிலையில், நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை ஆளும் வர்க்கமும், பௌத்த சிங்கள மேலாதிக்க சக்திகளும் தொடர்ச்சியாக தவிர்த்தே வந்திருக்கின்றன. நாட்டில் நீடிக்கும் அரசியல் பிரச்சினையும் அதனால் மேலும் மோசமடையும் இன முரண்பாடுகளுமே ஆட்சியைப் பிடிப்பதற்கும் தக்க வைப்பதற்குமான பிரதான சூத்திரமாக தென் இலங்கையில் பேணப்படுகின்றது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளினால் அரசியல் பிரச்சினைகளுக்கான பேச்சுவார்த்தைக்கு ஆளும் தரப்பு வந்தால், அதனை எதிர்க்கட்சி பலமாக எதிர்க்கும். அந்த எதிர்க்கட்சியே, அடுத்து ஆளும்தரப்பாக வந்ததும் பேச்சுவார்த்தை நடத்தினால், முன்னைய ஆளும்கட்சி அதனை எதிர்க்கும். இதுதான், தென் இலங்கை ஆட்சியாளர்களின் தொடர் செயற்பாடு.

பண்டா – செல்வா ஒப்பந்தம், பௌத்த தேரர்களின் போராட்டத்தினால் எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் கிழித்தெறியப்பட்டது. அந்த ஒப்பந்தம் சிலவேளை நடைமுறைக்கு வந்திருந்தால், சிலவேளை, இலங்கை முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக இருந்திருக்கும். இலட்சக்கணக்கான உயிரிழப்புக்கள் தடுக்கப்பட்டிருக்கும். பல்லாயிரக்கணக்கானவர்கள் கடத்தல்கள் காணாமல் போதால்களினால் இல்லாமல் ஆகியிருக்க மாட்டார்கள். ஆனால், நடந்ததோ வேறு. சிங்கள மட்டும் சட்டத்தினை முன்னிறுத்தி இனவாத அரசியலை ஆட்சிபீடம் ஏறுவதற்காக முன்னிறுத்திய பண்டாரநாயக்க, அதனை பேரழிவின் பெரும் புள்ளியாக வைத்துச் சென்றார்.

பிரித்தானியாவிடம் இருந்து ஆட்சியுரிமையை தென் இலங்கையின் பெரும் அரசியல் வர்த்தக குடும்பங்கள் பெற்ற போது, வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களும் தென் இலங்கையின் சாதாரண சிங்கள மக்களும் எதுவித நம்பிக்கைகளும் இன்றியே இருந்தார்கள். அந்த நம்பிக்கையீனம் இன்று வரையில் மாறவில்லை. மாறாக இனவாத, வர்க்க முரண்பாடுகள் தென் இலங்கை பூராவும் விதைக்கப்பட்டன. குறிப்பாக, மகா வம்ச மனநிலையோடு, பௌத்த அடிப்படைவாத சிந்தனைகளை முன்னிறுத்தினார்கள்.

அப்படி முன்னிறுத்தியவர்களில் பெரும்பாலானோர், பிரித்தானிய ஆட்சிக்காலத்தில், பிரித்தானியரின் மதத்தையும், கல்வியையும் பெற்றவர்கள். அவர்களுக்கு பௌத்தம் குறித்த எந்தவித கோட்பாட்டு விளங்கங்களோ, அறிவோ இல்லை. மாறாக, சுதந்திர இலங்கையில் ஆட்சியைப் பிடிப்பதற்கு பௌத்த அடிப்படைவாதத்தை முன்னிறுத்துவதே இலகுவான வழி என்ற புள்ளியில் அவர்கள் அனைவரும் அதனை தெரிவு செய்தார்கள்.

சேனநாயக்க குடும்பம், விஜயவர்த்தன குடும்பம், பண்டாரநாயக்க குடும்பம் என்று இலங்கை ஆட்சி செய்து யார் யாரெல்லாம் சீரழித்தார்களோ, அவர்கள் எல்லாருக்கும் அது பொருந்தும்.

சிங்கள மட்டும் சட்டமும், பௌத்தத்துக்கு முதலிடம் எனும் நிலையும் தென் இலங்கை ஆட்சியாளர்களினால் நாட்டை சீரழிப்பதற்காக வைக்கப்பட்ட பொறிகள். சுதந்திரத்துக்குப் பின்னரான 75 ஆண்டுகளில் இந்த இரு சட்டங்களினாலும் தென் இலங்கையின் சாதாரண மக்கள் கூட எந்தவித நன்மையையும் அடையவில்லை. மாறாக, இன்றைக்கு தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்ற எந்த வேறுபாடுமின்றி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான உணர்வோடு அலைகிறார்கள். இப்போது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கு மாதக்கணக்கில் வரிசையில் காத்திருக்கும் நிலை இருக்கின்றது. வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையில் கடவுச்சீட்டுக்கான வரிசை, காத்திருப்பு காணப்படுவதாக குடிவரவு -குடியகல்வு திணைக்களம் அறிவித்திருக்கின்றது.

அப்படியானால், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் பேர் தயாராக இருக்கிறார்கள். அதில், பெரும்பான்மையான சாதாரண மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான வசதி வாய்ப்பின்றி இருக்கிறார்கள். இல்லையென்றால், ஒருசில மாதங்களிலேயே நாட்டிலிருந்து கணிசமானவர்கள் வெளியேறிவிடுவார்கள். அதுதான் இன்றைய நிலை. இதுதான் பெளத்த சிங்கள அடிப்படைவாதமும், அதனைமுன்னிறுத்தி விட்ட ஆட்சிமுறையும் செய்த சாதனைகள்.

நிலைமை அப்படியிருக்க, தமிழ்க் கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு முன் நிபந்தனைகள் இன்றி வர வேண்டும் என்று ரணில் கூறுவதை எவ்வாறு காண வேண்டும். தமிழ்க் கட்சிகள் முன்வைக்கும் நிபந்தனைகள், பௌத்த சிங்கள மேலாதிக்க நிறுவனங்களும், கட்டமைப்பும் வடக்கு கிழக்கில் புரியும் அத்துமீறல்கள் ஆக்கிரமிப்புக்களை நிறுத்தக் கோருவதாகும். அதனை, அரச இயந்திரம் நினைத்தால் உடனயே நிறுத்திவிடலாம்.

ஏனெனில், அந்த ஆக்கிரமிப்புக்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுபவை. அப்படியான நிலையில், அதனை நிறுத்தக் கோருவது முன் நிபந்தனையாக கொள்ள வேண்டியதே இல்லை. அத்தோடு, தமிழ் மக்களின் பாரம்பரிய நிலப்பகுதியில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை கோருவது எவ்வாறு முன் நிபந்தனையாகலாம் என்று தெரியவில்லை. தமிழ் மக்களின் தொடர் கோரிக்கையே, பாரம்பரிய நிலப்பகுதியில், மேலாதிக்கம், ஆக்கிரமிப்புக்கள் அற்ற, ஒருங்கிணைந்த நாட்டுக்குள்ளான ஆட்சி முறையே, அதனையே, சமஷ்டி என்கிற சொல்லின் கீழ் வரையறுக்கிறார்கள். பேச்சுவார்த்தை மேசையில் சமஷ்டி அதிகார பகிர்வு குறித்து பேச வேண்டும் என்று கோருவதை முன் நிபந்தனையாக ரணில் காட்டுவது, மிக மோசமான அணுகுமுறை.

அத்தோடு, ஜே.ஆர். காலத்து மாவட்ட அபிவிருத்தி சபைகள் என்கிற முறையினூடாக நாட்டின் பிரச்சினைகளைத் தீர்த்துவிடலாம் என்று அவர் பேச ஆரம்பித்திருப்பது சதி நோக்கிலானது. அது, இந்திய – இலங்கை ஒப்பந்தங்களின் பிரகாரம் தோற்றம்பெற்ற மாகாண சபைகளையும் இல்லாமற் செய்யும் தந்திரத்துடனானது. அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளை இல்லாமற் செய்ய வேண்டும் என்பது, தென் இலங்கையின் இனவாத மதவாத சக்திகளின் ஒரே நிலைப்பாடு. அப்படியான நிலையில், அதனை நிறைவேற்றுவதற்காக மாவட்ட அபிவிருத்தி சபை என்கிற தோல்வியடைந்த முறையை ரணில் முன்நகர்த்துவது திட்டமிட்ட செயலாகும்.

அதன்போக்கில்தான், சமஷ்டி கோரும் தமிழ்க் கட்சிகளை முன் நிபந்தனைகள் இன்றி பேச்சுக்கு வருமாறு அவர் கோருகிறார். அவர், அதிகபட்சம் மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்குள் விடயத்தை முடித்துக் கொள்ள நினைக்கிறார். ஆனால், தமிழ்க் கட்சிகளோ மாகாண சபை முறைகளைத் தாண்டிய சமஷ்டிக் கோரிக்கைகள் சார்ந்த நிலைப்பாடுகளில் இருக்கின்றன. அப்படியான நிலையில், ரணிலின் பேச்சினை விசமத்தனமாக கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாதது. காலங்காலமாக தென் இலங்கை ஆட்சியாளர்கள் தந்திரத்தின் வழியாக தமிழ் மக்களை தோற்கடிக்க முயற்சித்திருக்கிறார்கள். அந்த முயற்சி தமிழ் மக்களை மாத்திரமல்ல, ஒட்டுமொத்த நாட்டையுமே தோற்கடித்திருக்கின்றது. இப்போதும் அந்த முயற்சிகளிலேயே ரணில் ஈடுபடுகிறார். அவர், தன்னுடைய முன்னோர்கள் வழியில் நின்று விலகுவதற்கு தயாராக இல்லை.

யாழில் இருந்து சென்னைக்கு 12ஆம் திகதி முதல் விமான சேவைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் – சென்னை இடையேயான விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப பணிகளிற்காக நேற்றைய தினம் சுற்றுலா அதிகார சபையில் இருந்து இரு அதிகாரிகள் யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

மேலும் விமான சேவைக்கான விமான சீட்டுக்கள் இன்று முதல் முற்பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு திறக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமானது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படவில்லை – சாந்த தேவராஜன்

தொழில்நுட்ப வல்லுனர்களை செவிமடுப்பதற்கு பதில் இலங்கை அதன் மக்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதை செவிமடுக்கவேண்டும் என உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் பேராசிரியர் சாந்த தேவராஜன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் கருத்துக்களிற்கு செவிமடுக்காத பட்சத்தில் தேசிய பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்காக தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் ஆலோசனை குழுக்களை அமைப்பதிலும் செயலணிகளை அமைப்பதிலும் கவனம் செலுத்தினார்கள் ஆனால் இந்த நடவடிக்கைகள் மக்கள் எதிர்கொண்டுள்ள உண்மையான பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு உதவவில்லை சவால்களிற்கு தீர்வை காண்பதற்கு உதவவில்லை என தெரிவித்துள்ள அவர் மக்களின் குரல்கள் புறக்கணிக்கப்பட்டமையே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக பொருளாதார பிரச்சினை இலங்கையில் தொழில்நுட்ப பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது திறமைசாலிகளை தெரிவு செய்து அவர்களை ஒரு அறையில் இருக்கiவைத்தால் அவர்கள் மிகச்சிறந்த பொருளாதார கொள்கைகளை வகுப்பார்கள் என்ற சிந்தனை காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ள சாந்ததேவராஜன் இதுவே பிரச்சினை எனவும் தெரிவித்துள்ளார்.

மக்களை உண்மையில் செவிமடுக்கும் கொள்கை உருவாக்கல் நடைமுறைகள் அவசியம் மக்கள் முக்கியமான சில விடயங்களை தெரிவிக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப வல்லுனர்களின் கொள்கை தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முயல்வதன் காரணமாக யதார்த்தத்தையும் பொதுமக்களின் உண்மையான பிரச்சினைகளையும் தொடர்புபடுத்த முடியாத புரிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கி சர்வதேச நாணயநிதியம் போன்றவற்றுடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்வது அவசியம் அதேவேளை பொதுமக்களை கலந்தாலோசிப்பதும் அவசியம் ஆனால் அவ்வாறான நடவடிக்கைகளில் எவரும் ஈடுபடப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2023 வரவு செலவுதிட்டம் மக்களின் மக்களின் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டமைக்கான சிறந்த உதாரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின் கட்டணத்தை இரு கட்டங்களாக மேலும் 70% அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

கடந்த காலங்களில் மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தாலும் அது மின்சார சபையின் நட்டத்தை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்பதால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் மேற்கொண்ட கோரிக்கைக்கு தற்பொழுது அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவில் இன்று வெளிப்பட்டது.

அதற்கமைய, 2023 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு கட்டங்களாக மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும், அதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் மின்சார சபையின் மேலதிகப் பொது முகாமையாளர் ரொஹான் செனெவிரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இடம்பெற்ற பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவில் இந்த விடயங்கள் புலப்பட்டன.

மின்சக்தித் துறையில் காணப்படும் சிக்கல்களை தீர்ப்பது தொடர்பான முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் மின்சக்தித் துறையுடன் சம்பந்தப்பட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

தற்பொழுது காணப்படும் நட்டத்தை ஈடுகட்டுவதற்கு மின்சாரக் கட்டணம் 70வீத அளவில் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் மின்சார சபையின் பிரதிநிதிகள் இதன்போது குறிப்பிட்டனர்.

மின்சார சபையின் நட்டத்தை ஈடுகட்டும் நோக்கில் மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தாலும் அது தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்குச் சென்று வர்த்தகங்கள் வீழ்ச்சியடையும் ஆபத்து தொடர்பிலும் குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மின்சார சபை தற்பொழுது வங்கிகள் மற்றும் மின்சக்தி விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்குச் செலுத்தவேண்டிய கடனாக 650 பில்லியன் ரூபாய் காணப்படுவதாகவும் இதன்போது புலப்பட்டது. இதில் சுமார் 35 பில்லியன் ரூபாய் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி விநியோக நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டியுள்ளதாகவும், சுமார் 75 பில்லியன் ரூபாய் அனல் மின் உற்பத்தி விநியோகஸ்தர்களுக்கும் செலுத்த வேண்டியுள்ளதாகவும் மின்சார சபை பிரதிநிதிகள் இதன்போது குறிப்பிட்டனர். அதற்கமைய, எதிர்வரும் காலத்தில் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் 50 பில்லியன் ரூபாவில் இந்த விநியோகஸ்தர்களின் கடன்களில் ஒரு பகுதியை வழங்க எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

சூரிய சக்தி உள்ளிட்ட மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையின் பிரதிநிதிகள், மின்சக்தியுடன் தொடர்புபட்ட ஏனைய தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் தமது சிக்கல்கள் மற்றும் மின்சக்தித் துறையில் மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புகள் தொடர்பில் குழுவில் அறிவித்தனர்.

பெளத்தத்தின் பெயரில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதை உறுதிப்படுத்திய கடற்றொழில் அமைச்சர்

பௌத்த மதத்தின் பெயரால் காணிகள் அபகரிக்கப்படுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் இருக்கின்ற இனவாதிகள், பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக வைத்திருக்கின்ற முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற, சுகாதார அமைச்சு மற்றும் பௌத்த சாசன, கலாசார மற்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சு தொடர்பிலான வரவு – செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உiராயற்றிய கடற்றொழில் அமைச்சர், ‘ஒரு காலத்தில் தென்னிலங்கை அரசாங்கங்கள் தமிழ் மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையில் கையாண்டனர்.

அதேபோல் தொடர்ச்சியான இனக் கலவரங்கள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்காகவும் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் ஒரு காலத்தில் நாம் உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

எமது அந்த போராட்டத்தின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களில் ஏற்பட்ட குணாம்ச ரீதியான மாற்றங்கள் காரணமாக, பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு அவை முன்வந்திருந்தன. எனினும் அதற்கு இடம்கொடுக்காமல் – உரிமைப் போராட்டத்தின் விளைவாக கிடைத்ததை மழுங்கடிக்கக்கூடிய வகையில், ஓரு வன்முறை போராட்டம் தொடர்ந்து, யுத்;தமாக மாற்றமடைந்து, அந்த யுத்தம் தமிழ் மக்கள் என்ற அடிப்படையிலும் இலங்கையர் என்ற அடிப்படையிலும் பலரைக் காவு கொண்டது.

இருந்தாலும் 2009 ஆம் ஆண்டு அந்த யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்கைளுக்கு ஊடாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டது. எனினும் துரதிஸ்டவசமாக, தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லிக் கொள்கின்றவர்கள் அந்தச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தாமல், தங்களுடைய சுயலாப அரசியலுக்காக அந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்த விடயத்;தில் நான் தமிழ் தரப்பினரை மட்டும் சொல்லவில்லை, சிங்கள மக்கள் மத்தியிலும் இனவாதிகள் இருக்கின்றனர். ஆக இரண்டு தரப்பிலும் இருக்கின்ற இனவாதிகள் இநதப் பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகாக வைத்திருக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். எனவே இந்த நாட்டு மக்கள் அனைவரும் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை இந்;த சந்தர்ப்பத்தில் முன்வைக்கின்றேன்.

அடுத்ததாக, யுத்தத்தில் இறந்தவர்களை அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் யாரும் நினைவு கூரமுடியும். அதில் பிரச்சினையே இல்லை. எனினும் அவ்வாறான நினைவுகூரல்களை அரசியல் ஆதாயத்திற்காக சிலர் பயன்படுத்துவதுதான் பிரச்சினையான விடயமாக இருக்கின்றது என்பதை சம்மந்தப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட முறையிலும், இந்த சமூகத்தின் பிரஜை என்ற வகையிலும் நான் பலரை இழந்திருக்கின்றேன். எனவே, உறவுகளை இழந்தவர்களின் வலி எந்தளவிற்கு கொடுமையானது என்பதை நான் நன்கு அறிவேன். அதனால்தான் இந்தப் பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகளை மூலமே தீர்த்துக் கொள்வற்கான முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றேன்.

என்னைக்கூட கொலை செய்வதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 15 வருடங்களுக்கு முன்னர், இன்றைய நாளில்கூட என்னைக் கொலை செய்யும் முயற்சியில் ஒரு தற்கொலை குண்டுதாரி உயிரிழந்திருந்தார். அவ்வாறு உயிரிழந்த தற்கொலை குண்டுதாரியை நினைத்து நான் பரிதாபப்படுகின்றேன் – அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்நிலையில், இன்றைய விவாதத்துடன் சம்மந்தப்பட்ட அமைச்சு தொடர்பான எனது கருத்துக்களையும் தெரிவிக்க விரும்புகின்றேன். குறிப்பாக திருகோணமலை திருக்கோணேஸ்வரம், வவுனியா வெடுக்கநாரி விவகாரம் மற்றும் முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் போன்ற சில விவகாரங்கள் தீர்க்கப்பட வேண்டியிருக்கின்றன. இதுதொடர்;பாக துறைசார் அமைச்சர் விதுர விக்கிரநாயக்கவுடன் கலந்துரையாடியுள்ளேன். நீண்டகால நண்பரான கௌரவ அமைச்சர் அவர்கள், நியாயமாகவும் யாதார்த்தமாகவும் பிரச்சினைகளை கையாண்டு வருகின்றார். நாம் இருவரும் திருகோணேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று நிலைமைகளை நேரடியாக ஆராய்ந்து கொள்கை ரீதியான முடிவுகளை மேற்கொண்டிருக்கின்றோம். அந்தப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்; என்று நம்புகின்றேன்.

அதேபோன்று வெடுக்குநாரி மற்றும் குருந்தூர் விவகாரங்கள் நீதிமன்றத்துடன் சம்மந்தப்பட்டிருப்பதனால், குறித்த விடயம் தொடர்பாக நேரடியாக சென்று ஆராய்வதுடன் நீதிமன்றத்தின் ஊடக அந்த விடயங்களை தீர்க்க முடியும் என்று நம்புகின்றேன.

இந்த இடத்தில் இன்னொரு விடயத்தினையும் தெரிவிக்க விரும்புகின்றேன். இந்து சமயத்தவர்களோ தமிழ் மக்களோ என்றைக்குமே பௌத்த மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை. கடந்த காலங்களில் தமிழ் மக்களும் பௌத்த மதத்தினை பின்பற்றி இந்த நாட்டிலே வாழ்ந்திருக்கின்றார்கள். ஆனால், பௌத்தத்தின் பெயரால் காணிகள் அபகரிக்கப்படுவதையும் அல்லது பலாத்கார குடியேற்றங்களையுமே தமிழ் மக்கள் விரும்பவில்லை. இதனை கௌரவ துறைசார் அமைச்சர் புரிந்துகொண்டிருப்பார் என்று நம்புகின்றேன்.

அதேபோன்று எமது ஜனாதிபதி அவர்களும் குறித்த விடயங்களில் நல்ல புரிதலுடன் செயற்பட்டு வருவதுடன், பதவியேற்று குறுகிய காலத்திலேயே பல்வேறு விடயங்களை தீர்ப்பது தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். எனவே அவருடைய முயற்சிகளுக்கு பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்கி எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்’ என்று தெரிவித்தார்.

மட்டக்களப்பை சிறந்த சுற்றுலாத் தளமாக மாற்றும் நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த காணிகளை அடையாளம் காணும் கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (30) நடைபெற்றது.

இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெருகல் ஆறு தொடக்கம் மட்டக்களப்பு வரையான அரச மற்றும் தனியார் துறையினருக்கு சொந்தமான கரையோர காணிகளை அடையாளம் காண்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இப்பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்து மட்டக்களப்பை 2023 ஆம் ஆண்டில் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவது இதன் நோக்கமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜூம் ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே கருணாகரன் உட்பட பிரதேச செயலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் டபிள்யூ.ஏ.சூலானந்த பெரேரா, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.சி.எம். ஹேரத் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

பிரித்தானிய தூதுவர் யாழ் மாநகர முதல்வர் இடையே சந்திப்பு

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் இன்று புதன்கிழமை (30) யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ். மாநகர சபைக்கு மாலை 6.30 மணியளவில் விஜயம் செய்த பிரித்தானிய தூதுவர் குறித்த சந்திப்பில் ஈடுபட்டார்.

இதன்போது யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார்.

அரசியல் தீர்வுக்கான பொறிமுறையை உருவாக்க தமிழ்த் தேசியத் தரப்புக்கள் ஒருமிப்பது அவசியம் – ரெலோ கோரிக்கை

சமஷ்டி முறைதான் எமது அரசியல் தீர்வு என்பதில் தமிழ்த் தேசியத் தரப்பினரிடம் தெளிவும் உறுதியும் உள்ளன. ஆனால் அதை அடையும் வழியும் பொறிமுறையும் எம்மிடம் இல்லை. அதை வகுப்பது மிக அவசியம். தென்னிலங்கை தலைவர்கள் அழைக்கும் போதெல்லாம் நாம் சென்று பேசுவதால் மாத்திரம் எமது அரசியல் தீர்வு சாத்தியமாகாது. இப்படியே பயணிப்பதால் அரசியல் இலட்சியங்களை நாங்கள் அடைய முடியாது. அதை அடைவதற்கான பொறிமுறையே எமது தீர்வை சாத்தியமாக்கும்.

நிரந்தரமான அரசியல் தீர்வுக்காக தமிழர்கள் பல காலமாக வெவ்வேறு வழிகளில் போராடி வருகிறோம். மாறி வரும் அரசாங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்திருக்கிறோம். அதன்பின் ஏற்படுகின்ற அரசியல் குழப்பங்கள் காரணமாக பேச்சுவார்த்தைகள் பயனளிப்பதில்லை. அல்லது இறுதிக் கட்டத்தில் குழம்பி விடுகின்றன. இதற்கு காரணமாக அரசியல் மாற்றங்களை அமைந்திருக்கின்றன. பிராந்திய அரசியலில் ஏற்படும் மாற்றங்கள், உள்ளக அரசியலில் குறிப்பாக தென்னிலங்கையில் ஏற்படும் மாற்றங்கள் அதே போன்று தமிழர் தரப்பில் ஏற்படுகின்ற மாற்றங்கள் என்று வகைப்படுத்தலாம்.

சந்திரிகா அம்மையார் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அரசியல் தீர்வு இறுதியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் காரணமாக பாராளுமன்றம் கலைக்கப் பட்டதோடு முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் விடுதலைப் புலிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. முக்கியமாக சர்வதேச நாடுகள் இதற்கு ஆதரவை வழங்கியிருந்தன.

அதன் பின்னர் தமிழ் அரசியலில் பேரம் பேசும் சக்தி மெளனிக்கப் பட்டு ஏற்பட்ட மாற்றங்களினால் இந்த முயற்சியை தொடர முடியவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் யாப்பு மாற்றத்தையே தோற்றுவித்து இறுதிச்சுற்று வரை சென்ற அரசியல் தீர்வு விடயம் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் முடிவுக்கு வராமல் போனது.

தற்போது தமிழ் தரப்பில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் பிரதிநிதித்துவ மாற்றங்கள் எமது பேரம் பேசும் பலத்தை வெகுவாகப் பாதித்திருக்கிறது. தெற்கில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் தீர்வுக்கான தெளிவான பாதையை திறக்கவில்லை. அதனை வலியுறுத்த எமது பலமும் போதாமல் இருந்தது.

இன்று ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலை எமது அரசியல் தீர்வுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி வருவதாக தோற்றம் தருகிறது. பேச்சுவார்த்தைக்கு நம் தரப்பு தயாராகின்ற போதிலும், இதைக் கையாளும் ஒருமித்த பொறிமுறை எம்மிடம் இல்லை. பேச்சுவார்த்தைகள் தோல்வி காண்பதற்கான காரணங்களை அனுபவப் பாடங்களாகக் கொண்டு அவற்றை தவிர்க்க அல்லது எதிர்கொள்ள சரியான பொறிமுறையை நாம் ஏற்படுத்துவதே எம் இனத்துக்கு நலன் பயக்கும்.

தமிழ்த் தேசியப் பரப்பில் செயலாற்றி வரும் அனைத்து கட்சிகளும் எமது அரசியல் தீர்வு சம்பந்தமான ஒருமித்த நிலைப்பாட்டை கொண்டுள்ளன. தீர்வின் இறுதி வடிவம், கட்டமைப்பு சமஸ்டி முறையில் தான் அமைய வேண்டும் என்பதை எல்லோரும் மாறாத நிலைப்பாடாகக் கொண்டுள்ளோம். அதே நேரம் அதற்கான விடயங்களைக் கையாள எமது அரசியல் தீர்வுக்கான நிலையான பொறிமுறையுடன் கூடிய கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும்.

சர்வதேச, பிராந்திய, தென்னிலங்கை, மற்றும் தமிழர் தரப்பில் ஏற்படும் அரசியல், பிரதிநிதித்துவ மாற்றங்களினால் இந்தப் பொறிமுறையின் செயற்பாடுகள் குழப்பம் அடைய மாட்டாது. மாறாக விட்ட இடத்தில் இருந்து பேச்சுவார்த்தைகளை தொடருவதற்கு வழி அமைக்கும்.

கடந்த காலங்களில், தெற்கிலுள்ள அரசாங்கங்கள் முன்மொழியும் அல்லது அழைக்கும் தற்காலிக கட்டமைப்புகளில் நாம் கலந்து கொள்வதாக அமைந்துள்ளதே தவிர எமது இனத்தின் உறுதியான அரசியல் தீர்வுக்கான ஒரு பொறிமுறையை நாம் கொண்டிராமல் இருப்பது துரதிஷ்டவசமானது. இதை நாங்கள் இப்பொழுது தீர்க்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. கூட்டமைப்புகள், கூட்டணிகள், கட்சிகள், கட்சி நிலைப்பாடுகள், கொள்கைகள், தேர்தல் நோக்கங்கள் என்பவற்றைத் தாண்டி இந்த பொறிமுறையை வகுத்து, உருவாக்கி, செயல்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவது காலத்தின் தேவை.

எமது இனத்தின் அரசியல் தீர்வுக்கான பொறிமுறையை ஏற்படுத்தும் இந்த முயற்சிக்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளினதும், தரப்புகளினதும் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்- ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு