இலங்கையின் சுதந்திர தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர்

இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கலந்துகொள்ளவுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், அம்மாதம் 3ஆம் திகதி தாய்லாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுவிஸ் மற்றும் உகண்டா செல்வதற்கு முன்னர் சில முக்கிய சந்திப்புகளை நாட்டில் முன்னெடுத்திருந்தார். இதில் முக்கியமான ஒன்றாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வு ஏற்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போதே சுதந்திர தினத்தின் விசேட விருந்தினராக தாய்லாந்து பிரதமரை அழைத்துள்ளமை குறித்து தகவல் வெளியிட்டார்.

மேலும் இலங்கையின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் நினைவு பதிப்பொன்றை அச்சிட்டு வழங்கவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். இதேவேளை சுதந்திர தினத்தினை ‘புதிய நாட்டை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தலைமையிலான உயர் மட்ட குழுவினரின் இலங்கை விஜயத்தின்போது இரு நாடுகளுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்குறிப்பிட்ட கலந்துரையாடலின்போது உறுதிப்படுத்தினார்.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனான ஒப்பந்தங்களைத் தொடர்ந்து இது இலங்கையின் நான்காவது சுதந்திர வர்த்தக ஒப்பந்தமாகும். இதனூடக தேயிலை, தேங்காய் பால் மற்றும் ஆடை உற்பத்தி போன்ற முக்கிய ஏற்றுமதிகளில், தாய்லாந்து சந்தையில் வரி இல்லாத அணுகலை இலங்கை பெறும்.

தாய்லாந்து உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இதுவரையில் இருதரப்பினருக்கும் இடையில் எட்டு சுற்று பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு இறுதி இலக்கை அடைந்துள்ளன. மறுப்புறம் இந்தியாவுடன் காலதாமதமான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்கும், சீனாவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் தாய்லாந்துடனான ஒப்பந்தம் சிறப்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தாய்லாந்து மிகவும் நெகிழ்வான மற்றும் புரிதலுடன் செயல்பட்டமை உள்ளிட்ட இரு நாடுகளுக்கு இடையிலான கலாச்சார இணைப்புகள் முக்கியத்துவம் பெற்றிருந்ததாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

எவ்வாறாயினும் ஒப்பந்தத்தின் பின்னர் பல ஏற்றுமதி பொருட்களுக்கான தாய்லாந்து சந்தையில் உடனடி வரியில்லா அணுகலை இலங்கை பெறுகிறது. உதாரணமாக, தாய்லாந்து, இலங்கை தேயிலைக்கான ஒதுக்கீட்டை பராமரிக்கும் போது (வரம்புக்கு அப்பால் எந்த இறக்குமதியும் அனுமதிக்கப்படாது), மேலும் அதன் மீது விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத வரியை நீக்குவதுடன், உலர் தேங்காய் மீதான 54 சதவீத வரியை தாய்லாந்து நீக்கும்.

வெவ்வேறு வகைகளில் வரும் தேங்காய்ப் பாலை இரு நாடுகளும் சுங்க வரியின்றி இறக்குமதி – ஏற்றுமதி செய்யும். இலங்கை வரியில்லா அனுமதி கோரிய 15 வகையான ஆடைகளுக்கான வரிகளை தாய்லாந்து தள்ளுபடி செய்யும். இதில் உள்ளாடைகள் மற்றும் பிற சிறப்புப் பொருட்களும் அடங்குகின்றன.

ஒப்பந்தம் ஊடாக தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகியவை 15 ஆண்டுகளில் அதிக கட்டண தாராளமயமாக்கல் திட்டத்துக்கு உறுதியளித்துள்ளன. தாய்லாந்தில் சுமார் 11,000 கட்டண வரிகள் உள்ளன. அதே வேளை இலங்கையில் சராசரியாக 8,500 கட்டண வரிகள் உள்ளன. இரு நாடுகளும் இவற்றில் 80 சதவீதத்தை தாராளமயமாக்குவதுடன் 5 சதவீதத்தை ஓரளவு தாராளமயமாக்கும். மீதமுள்ள வீதம் எதிர்மறையான பட்டியலில் இருக்கும்.

எதிர்மறை பட்டியல்களில் எந்த சலுகைகளும் (இறக்குமதி கட்டணங்களில் குறைப்பு) அனுமதிக்கப்படாத உருப்படிகள் உள்ளன. தற்போது, இலங்கையின் எதிர்மறையான பட்டியல்களில் விவசாயம் மற்றும் மீன்பிடி பொருட்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

தாய்லாந்துடனான பேச்சுவார்த்தைகள் முதலில் 2015 – 2017 ஆண்டுகளில் தொடங்கப்பட்டன. அப்போது மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் சீனா மற்றும் இந்தியா உட்பட அனைத்து நாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளையும் 2018க்குப் பிறகு இலங்கை நிறுத்தி வைத்தது. இவ்வாறானதொரு நிலையிலேயே தாய்லாந்துடனான பேச்சுவார்த்தைகள் 2023ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

இதற்கிடையில், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுடன் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8-10 திகதிகளில் கலந்துரையாடல்களை இலங்கை முன்னெடுத்திருந்தது. இது இருதரப்புக்கும் இடையிலான 13ஆவது சுற்று பேச்சுவார்த்தைகளாகும். மறுபுறம் சீனாவுடனான உத்தேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் மக்களின் பசியைப் போக்கக்கூடிய தலைமைத்துவம் தெரிவு செய்யப்பட வேண்டும் – பேராயர்

ஒரு நிகழ்ச்சி நிரலிலிருந்து வெளியேறி பிறிதொரு நிகழ்ச்சி நிரலுக்குள் சிறை பிடிக்கப்படுவதை தேர்தலின் மூலம் நாம் எதிர்பார்க்கவில்லை. இந்த ஆண்டு தேர்தலுக்குரிய ஆண்டாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே மேற்கத்தேய முறைகளின் கீழ் செல்லாமல் மக்களின் பசியைப் போக்கக்கூடிய தலைமைத்துவம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

முகத்துவாரம் புனித ஜோன் தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற விசேட ஆராதனையின் போதே பேராயர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இலங்கைக்குள் காணப்படும் பிரச்சினைகளிலிருந்து எம்மால் ஒதுங்கியிருக்க முடியாது. மத தலைமைத்துவம் என்பது வழிபாட்டுத் தலங்களுக்குள் சென்று போதனை செய்துகொண்டிருப்பது மாத்திரமல்ல. மக்களுக்கு துயரம் ஏற்பட்டால், அவர்களுக்காக வீதிக்கு இறங்கி குரல் கொடுப்பதே உண்மையான தலைமைத்துவமாகும்.

இந்த ஆண்டு தேர்தலுக்கான ஆண்டாகும் என அனைவராலும் கூறப்படுகிறது. ஒரு நிகழ்ச்சி நிரலிலிருந்து வெளியேறி பிரிதொரு நிகழ்ச்சி நிரலுக்குள் சிறைபிடிக்கப்படுவதை தேர்தலின் மூலம் நாம் எதிர்பார்க்கவில்லை. நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதே எமது தேவையாகும். சில நியாயங்களுக்கு அடிமையாகி, வெளிநாடுகளில் நிராகரிக்கப்பட்டுள்ள நியாயங்களின் பின்னால் செல்வது பிரயோசனமற்றது.

அவற்றின் பின்னால் சென்று நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. இலங்கையில் காணப்படும் சுயநலவாத போக்கு முன்னேற்றத்துக்கு தடையாக உள்ளது. மேற்கத்தேய கலாசாரம் எமது நாட்டுக்கு பொருந்தாது. நாட்டிலுள்ள மக்களின் பசியைப் போக்கும் அரசியலே இலங்கைக்கு பொருத்தமானது. அவ்வாறு செயற்படுவதே தலைமைத்துவத்தின் பொறுப்பாகும் என்றார்.

இந்த ஆண்டு புதிய அரசாங்கத்துக்கான மாற்றத்தை உருவாக்க முடியும் – அநுரகுமார

தற்போதுள்ள ஆட்சி முறையை மாற்ற வேண்டும் என்ற மக்களினதும், தேசிய மக்கள் சக்தி கட்சியினதும் கொள்கை இன்று ஒன்றாக மாறியுள்ளதால், இந்த ஆண்டில் புதிய அரசாங்கத்துக்கான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கண்டியில் தெரிவித்துள்ளார்.

அனைத்து வகையிலும் மூழ்கிக்கொண்டிருக்கும் நாட்டை காப்பாற்ற புதிய மறுமலர்ச்சி யுகம் காலத்தின் கட்டாயத் தேவை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்கரின் ஆசி பெற்ற பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

தற்போதுள்ள ஆட்சி முறையை மாற்றுவது வெறும் அரசியல் வேலைத்திட்டம் அல்ல, தேசிய செயற்பாடு. புதிய மாற்றத்துக்காக மக்கள் தற்போது முன்வருகின்றனர்.

பொருளாதார ரீதியிலும் அனைத்து துறைகளிலும் நாட்டின் வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் இன்று இருந்த இடத்தில் இருந்து ஒரு படி முன்னேறி நாட்டை கட்டியெழுப்பியுள்ளதாக கூறப்படுவது நகைப்புக்குரிய விடயமாகும்.

ஆகவே, இந்தப் பேரினவாதக் கும்பலிடம் இருந்து நாட்டை விடுவித்து, நாட்டைப் புதிய பாதைக்கு வழிநடத்த வேண்டும். இதுவே தேசிய மக்கள் சக்தியின் இலக்காகும்.

மக்கள் வாக்குகள் தேசிய மக்கள் சக்தியிடம் இருப்பதை அறிந்த அரசாங்கம் தற்போது ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துவதா அல்லது பொதுத் தேர்தலை நடத்துவதா என்ற குழப்பத்தில் உள்ளது.

எந்தத் தேர்தலை முதலில் நடத்தினாலும் அதனை எதிர்கொள்ள தேசிய மக்கள் சக்தி கட்சி தயாராக உள்ளது.

நாட்டில் மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. தேவைக்கு ஏற்றவாறு விநியோகம் இல்லாதபோது விலை அதிகரிப்பது சந்தைக் கோட்பாடு. இந்த சூழலில் இதனை அரசாங்கம் தலையிட்டு முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்றார்.

வடக்கு மாகாணத்துக்கு விசேட உதவிகள்-சந்தோஸ் ஜா

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அவர்களை, வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது.

இதில் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் , அபிவிருத்தித்திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

மேலும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவி செய்யும் என தெரிவித்த உயர்ஸ்தானிகர், விசேடமாக வடக்கு மாகாணத்துக்கான ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவர் நியமனம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதற்கினங்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் வாக்கெடுப்பு திருகோணமலையில் இடம்பெற்றது.

இந்நிலையில் வாக்கெடுப்பில் 184 வாக்குகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்றிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

‘தமிழ் கட்சிகளின் ஒற்றுமைக்கு பொருத்தமானவரை தலைவராக்குங்கள்’: தமிழ் அரசு கட்சி உறுப்பினர்களிற்கு ஜனா எம்.பி அழைப்பு!

கடந்த காலத்தை போன்று தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் யார் தலைவராக வரவேண்டும் என்பதை தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரன்(ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு திக்கோடையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பிற்பாடு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்-

தமிழரசுக் கட்சி தலைவருக்காக மூன்று பேர் போட்டியிடும் நிலை உருவாகி இரண்டு பேராக் மாறியுள்ளது. அதற்கான வாக்களிப்பு நாளையாகும். உண்மையில் தமிழரசுக் கட்சி என்பது தனியொரு அரசியல் கட்சி. அதற்கு நீண்ட நெடியதொரு வரலாறு இருக்கின்றது. கட்சி தலைவர் பிரச்சினை என்பது அவர்களது உள் வீட்டு பிரச்சினை. அதில் நாங்கள் கருத்து கூறமுடியாது. இருந்தாலும் நானும் தமிழன் என்ற வகையிலும் தமிழ் மக்களின் போராட்டங்களோடு பின்னி பிணைந்து நின்று தற்போது அரசியலில் இருப்பவன் என்ற வகையில் கருத்து கூறாமல் இருக்க முடியாது.

அந்த வகையில் தமிழ் தேசியம் என்பது தமிழரின் இரத்தத்தில் ஊறிய விடயமொன்றாகும். காரணம் சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகளாக கணிக்கப்பட்டதன் காரணத்தால் எங்களது மூத்த அரசியல் தலைவர்கள் அகிம்சை வழியில் போராடி அந்த உரிமைகளை வென்றெடுக்க முடியாமல் ஆயுத போராட்டத்தின் ஊடாக வென்றெடுக்க போராடினார்கள். அந்த போராட்டத்தில் பங்குபற்றி வடுக்களை சுமந்தவன் என்ற வகையிலே எப்பொழுதும் தேசியம் என்பது வெல்ல வேண்டும் என்று நான் நினைப்பவன்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஈழ விடுதலைப் போராட்டம் மௌனிக்க பட்டதன் பின்னர் அதற்கு முன்னர் இருந்த ஒற்றுமையில் இருந்து விலகி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இன்று சிதறுண்டு போய் இருக்கிறது. இந்த ஒற்றுமை இன்மையை பயன்பாடுத்தி இலங்கை அரசு பிரித்தாள நினைக்கின்றது. இந் நிலமை தொடருமாக இருந்தால் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியாமல் போகலாம்.

எனவே கடந்த காலத்தை போன்று தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் யார் தலைவராக வரவேண்டும் என்பதை தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் சிந்தித்து நாளைய தினம் வாக்களிக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

ஜெனிவா தீர்மானங்களை பலவீனப்படுத்த கூட்டுச் சதி நடக்கிறது – சபா குகதாஸ் குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் தொடர்பான குற்றங்களை அடிப்படையாக வைத்து கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் பல நெருக்கடிகளை சர்வதேச ரீதியாக கொடுப்பதை தவிர்க்க எதிர்வரும் கூட்டத் தொடர்களில் புதிதாக வர இருக்கும் தீர்மானங்களை பலவீனப்படுத்து இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச சக்திகளும் இணைந்து பெரும் கூட்டுச் சதி ஒன்றை மேற் கொள்ள ஆரம்பித்துள்ளனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட பொறுப்பாளரும், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமானசபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசாங்கம் உள் நாட்டில் பல போலியான செயற்பாடுகளை பாதிப்புக்களுடன் தொடர்பற்ற தரப்புக்களை வைத்து அரங்கேற்றுகின்றனர். அண்மையில் நீதி அமைச்சர் விஜயதாஸ வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து இன நல்லிணக்கம் பற்றிய பேச்சை சிறு குழுக்களை வைத்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் கலந்துரையாடியுள்ளார் உண்மையில் உள்ள நாட்டில் இன நல்லிணக்கத்திற்கு யார் தடை என்றால் ஆளும் அரசாங்கம் மட்டுமே தான் ஏனைய தரப்புக்கள் யாரும் தடை இல்லை.

கடந்த காலங்களில் ஆபிரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்க சார்பு நாடுகள் தான் ஐெனிவா தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்கினர் இதனால் இலங்கை அரசாங்கத்திற்கு பாதிப்பு அதிகம் இதனை மாற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற் கூறிய நாடுகளின் பிரதி நிதிகளுடன் இராஐதந்திர உரையாடலை ஆரம்பித்துள்ளார் இதற்கு சர்வதேச சக்திகளும் மறைமுகமாக ஆதரவை வழங்குகின்றன இதனால் எதிர் காலத்தில் தீர்மானங்கள் வருகிற போது இலங்கைக்கு எதிரான தீர்மானமாக இருந்தாலும் வலுக் குறைந்த விடையங்களை உள்ளடக்கியதாக மாறும் அபாயம் உள்ளது.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை தொடர்ந்து பயன்படுத்தி தங்கள் பூகோள அதிகாரங்களை நிலைப்படுத்த நினைக்கும் சர்வதேச சக்திகள் தமிழர் தரப்பின் நீதியை பலவீனப்படுத்தி இலங்கை அரசாங்கத்தை நெருக்கடிகளில் இருந்து பாதுகாக்க கூட்டுச் சதியில் இறங்கியுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நீதியை நிலைநாட்டும் சட்டங்கள் சர்வதேச தரத்துக்கு அமையவே கொண்டுவரப்படுகின்றன – நீதியமைச்சர் விஜயதாஸ

இலங்கையில் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையை உறுதிப்படுத்துவதற்காக கொண்டுவரப்படும் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் சர்வதேச தரத்துக்கு உட்படும் வகையில் வெளிப்படைத் தன்மையை பாதுகாத்துக்கொண்டு கொண்டுவரப்படுகின்றன என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அன்றூ பிரேன்ச் மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் வியாழக்கிழமை (18) நீதி அமைச்சில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கையில் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையை உறுதிப்படுத்துவதற்காக கொண்டுவரப்படும் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் சர்வதேச தரத்துக்கு இசைவாக வெளிப்படைத் தன்மையை பாதுகாத்துக்கொண்டு கொண்டுவரப்படுகின்ற விடயத்தை சுட்டிக்காட்டியதுடன் உலக நாடுகளில் நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகளை வெற்றிகரமாக்கிக்கொள்ளும் காலத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுபவங்கள் தொடர்பாகவும் ஒருங்கிணைப்பாளர் அமைச்சருடன் கருத்து பரிமாறிக்கொண்டுள்ளார்.

அத்துடன் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையை மிகவும் உறுதிமிக்கதாக முன்னெடுத்துச் செல்வதற்காக கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டங்கள் அனைத்தும் மிகவும் ஜனநாயக முறையில் அனைவரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு அந்த சட்டங்கள் அமைக்கப்பட்ட முறை தொடர்பாகவும் அமைச்சர் ஒருங்கிணைப்பாளருக்கு தெளிவு படுத்தியிருந்தார்.

அதேபோன்று எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல் மிகவும் முக்கியமாகும் எனவும் அமைச்சர் இதன்போது எடுத்துரைத்துள்ளதாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே சீனக் கொள்கையை இலங்கை எப்போதும் ஏற்றுக் கொள்கின்றது – சபாநாயகர் மஹிந்த யாப்பா

அரசாங்கம் என்ற வகையில் இலங்கை எப்பொழுதும் ஒரே சீனா என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங்கிடம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று வெள்ளிக்கிழமை (19) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவும் கலந்துகொண்டார்.

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) ஸாவோ லெஜின் புதுவருட வாழ்த்துச் செய்தியை இதன்போது சீனத் தூதுவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்தார்.

இரு தரப்பினருக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் ‘ஒரே சீனா’ என்ற கொள்கை தொடர்பில் இலங்கை வழங்கிவரும் ஆதரவுக்கு சீனத் தூதுவர் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

அரசாங்கம் என்ற வகையில் இலங்கை எப்பொழுதும் ஒரே சீனா கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர திட்டம் உள்ளிட்ட இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீன முதலீட்டு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இரு தரப்பினருக்குமிடையில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மீளப்பெறுமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தல்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை அரசு முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அதீத கவனம் செலுத்தியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் ஊடகப் பேச்சாளர் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

தற்போது காணப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக, இலங்கை அரசு முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது இலங்கையின் உள்ளகப் பாதுகாப்பு தொடர்பிலான சிறந்த மறுசீரமைப்பின் ஒரு முயற்சியாகக் காணப்பட்டாலும்இ உத்தேச புதிய சட்டமூலம் ஊடாக கடந்த காலத்தில் இருந்து நிலவிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்கள் அவ்வாறே இடம்பெறும் அபாயம் காணப்படுகின்றது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தேச சட்டமூலத்தில் பயங்கரவாதத்துக்கான வரைவிலக்கணம்இ தடுப்புக் காவல் உத்தரவின் சட்டபூர்வத் தன்மையைச் சவாலுக்குட்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், தடுப்புக் காவல் இடங்களைப் பார்வையிடுவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இருக்கின்ற வாய்ப்புகளை வரையறுக்கும் விடயமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, சர்வதேச மனித உரிமை கொள்கைகளுக்கு ஏற்றால் போன்று, உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தைத் திருத்தியமைக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.