நீண்ட போராட்டத்திற்கு எங்களைத் தயார்ப்படுத்தாமல் விட்டால் இவளவு காலமும் செய்த தியாகங்கள் விழலுக்கு இறைத்ததாகிப் போய்விடும் – சுரேஸ் பிரேமச்சந்திரன் கவலை

நீண்ட போராட்டத்திற்கு எங்களைத் தயார்ப்படுத்தாமல் விட்டால் இவ்வளவு காலமும் செய்த தியாகங்கள் விழலுக்கு இறைத்ததாகிப் போய்விடும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற சிவகுமாரின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1974 ம் ஆண்டு தமிழாராட்சி மாநாட்டில் பல பேர் கெல்லப்பட்டமைக்கு காரணமாயிருந்த பொலிஸ் பொறுப்பதிகாரியை பழி தீர்க்க வேண்டுமென சிவகுமாரன் உட்பட்டோரால் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் பல கட்டங்களைக் கண்டு ஆயுதப் போராட்டமாக 2009 வரை நீடித்தது.

24 வயதில் தனது உயிரை ஈழ விடுதலைக்காக ஈந்த பொழுது நாங்கள் மாணவனாக இருந்தோம். பொன் சிவகுமாரனின் இறுதியஞ்சலியில் கலந்து கொண்டது. இன்றும் பசுமையாக ஞாபகத்தில் இருக்கின்றது.

அவருக்கும் எனக்கும் 7 வயது இடைவெளி காணப்படும் வேளை இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் 73 வயதை அடைந்திருப்பார்.

வருகின்ற வருடம் அவர் இறந்து 50 வது வருடத்தைக் கொண்டாடவுள்ள நிலையில் ஈழ விடுதலைக்காக அவர் ஆரம்பித்து வைத்த யுத்தம் 2009 வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் , போராளிகள் எனக் கொலை செய்யப்பட்டாலும் இன்றும் நாங்கள் இராணுவ அடக்குமுறைக்குளிருக்கும் துப்பாக்கிய சூழ்நிலைக்குள் தான் இருக்கின்றோம்.

இன்றைய நிலையில் வடகிழக்கு முழுவதும் சி்ங்கள பௌத்த மேலாதி்கத்தை நிறுவுவதற்கான போக்கையே காண முடிகின்றது. ஆகவே நாங்கள் பல தூரம் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

நீண்ட போராட்டத்திற்கு எங்களைத் தயார்ப்படுத்தாமல் விட்டால் இவளவு காலமும் செய்த தியாகங்கள் விழலுக்கு இறைத்ததாகிப் போய்விடும்.

இன்று இலங்கை பொலிஸ் , இராணுவம் உட்பட உயர் மட்டத்திலுள்ளோர் தமிழ் மக்களை குத்திக் குதறப்பட வேண்டிய இனமாகத்தான் பார்க்கின்றார்கள்.அன்று பாராளுமன்ற உறுப்பினர்களான அமிர்தலிங்கம் , யோகேஸ்வரன் தாக்கப்பட்டதைப் போன்று இன்று தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.

அந்த வகையில் தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுத்து சுயாட்ச பிரதேசத்தில் தமது பிரச்சினைகளை கௌரவமாக வன்றெடுக்கக்கூடியநிலைக்கு மாற்றப்பட வேண்டுமாயின் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் ஐக்கியப்பட்டு செயற்படத் தவறும் பட்சத்தில் தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைக்கின்றோம் என்பதே கருத்தாகும் எனக் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் போராட்டத்தை கேவலப்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கத்தின் பொது தூபி – சுரேஷ் பிரேமசந்திரன்

விடுதலை போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களை, கொன்றவர்களையும் ஒன்றாக இணைத்து நினைவு தூபி அமைப்பது என்பது தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தினை கேவலப்படுத்துவது போன்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

பொது தூபி அமைப்பது தொடர்பில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

அண்மையில் ஜனாதிபதி யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூறும் முகமாக ஒரு தூபியினை கட்டுவதாகவும், அதற்காக முடிவெடுத்துள்ளார் என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன.

அதையடுத்து தமிழ், சிங்கள சமூகங்களிற்கிடையே இது பற்றிய பேச்சுக்கள் எழுந்தன.

தமிழர்களை பொறுத்த வரை விடுதலைக்காக போராடிய இனமே எம் இனம். அவ்வாறான போராட்டத்திற்கு அடக்கு முறையும், ஆட்சியாளர்களும் மூலகாரணம்.

அதிகளவான பொதுமக்கள் , போராளிகள் என்று பலர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் விடுதலைக்காக போராடிய ஒரே ஒரு காரணத்தாலே இடம்பெற்றது.

இவ்வாறாக கொல்லப்பட்டவர்களை, சுட்டு கொன்றவர்களையும் ஒன்றாக இணைத்து பொது தூபி என்ற பெயரினையும் வைத்து அதனை நாம் கொண்டாடுவோம் என்று கருதுவது எமது விடுதலை போராட்டத்தினை கேவலப்படுத்த கூடிய ஒரு செயற்பாடே. அதனால், இவ்வாறான பொது ஏற்பாடு என்பது தேவையற்றது.

ஆனாலும் யுத்தத்தில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களிற்காக பொது விழாக்கள் மேற்கொள்ளப்படுகின்றது. அதனை அவர்கள் தொடர்ந்தும் செய்யலாம்.

அதே போன்று யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகள் ,போராளிகள் மற்றும் தமிழ் மக்களிற்காக அஞ்சலி செலுத்த வேண்டியது தமிழர்களின் கடமையும் தேவையுமாக காணப்படுகின்றது. அதனால் அதற்கான ஏற்பாடுகளை தமிழ் மக்கள் முன்னெடுப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.

சிங்களவர்களை பொறுத்த மட்டில் இது பயங்கரவாதிகளின் போராட்டமாக இருக்கலாம் ஆனால் எம்மை பொறுத்த மட்டில் இது விடுதலை போராட்டம்.

இவ்வாறாக எமது மக்களையும் போராளிகளையும் நாம் கௌரவப்படுத்துவதை தடை செய்ய கூடாது. அதற்கான உரிமை சர்வதேச ரீதியில் அவர்களிற்கு கிடையாது.

அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்வதுடன், லட்ச கணக்கான எமது மக்களை கொன்று குவித்து விட்டு அதற்காக ஆதங்கப்பட்டு ஒன்றாக இணைத்து தூபி கட்டுவது என்பது தேவையில்லாத வேலை. மாறாக யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளிற்காகவும், போராளிகளிற்காகவும் தூபி கட்டுவதற்கு தமிழ் மக்களிற்கு வழி விடுங்கள்.

அதை விடுத்து இணைத்து தூபி கட்ட நடவடிக்கை எடுத்தால் அதனை தமிழ் மக்கள் ஏற்றக்கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

நீரே வராத மகாவலி ஆற்றுத்திட்டத்திற்கு புதிய வலயம் எதற்கு?: சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவையும் முல்லைத்தீவு மாவட்டத்தையும் மையப்படுத்தி மகாவலி ஜெ வலயம் என்ற பெயரில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் புதிய வலயம் ஒன்றைத் தோற்றுவிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. ஏற்கனவே மகாவலி ஆற்றின் நீர் வடக்கு மாகாணத்திற்கு வருவதற்கு சாத்தியமேயில்லை என்று மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் தெரிவித்துள்ள நிலையில் புதிதாக உருவாக்கப்படும் ஜெ வலயத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை உருவாக்குவதற்கான முயற்சியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

நாடு சுதந்திரமடைந்த பின்பு, பல இலட்சம் மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக்கி, அவர்களை நாடுகடத்தினீர்கள். பின்னர் இனக்கலவரங்கள் என்ற பெயரில் தென்பகுதியில் இருந்த தமிழ் மக்களைக் கொன்று, அவர்களது வியாபாரம், சொத்துகளை அழித்து, அவர்களது பூர்வீகத் தாயகமான வடக்கு-கிழக்கிற்குத் துரத்தினீர்கள். பின்னர் யுத்தம் ஒன்றைத் தொடங்கி, வடக்கு-கிழக்குத் தமிழர்களை உலகெங்கும் அகதிகளாகத் துரத்தினீர்கள். அவர்களது காணிகளைப் பறிமுதல் செய்து சிங்கள மக்களைக் குடியேற்றினீர்கள்.

இன்று தமிழ் மக்களின் பூர்வீக நிலமான முல்லைத்தீவு மணலாற்றை மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில், சிங்கள மக்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்து இதற்கு வெலிஓயா என்று பெயரையும் சூட்டியுள்ளீர்கள். மகாவலி எல் வலயம் என்று சொல்லப்படும் இந்தப் பிரதேசத்திற்கு இதுவரையில் மகாவலி நீர் எட்டிப்பார்த்ததும் கிடையாது. எட்டிப்பார்க்கப் போவதுமில்லை. மாறாக, அந்நிலங்களில் பூர்வீகமாக பயிர்செய்த தமிழ் மக்களின் காணிகள் பறிமுதல் செய்யப்பட்டு, சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

இன்று மகாவலி எல் வலயத்திற்கே அந்நதியின் நீர் வராத நிலையில், நெடுங்கேணி, மாங்குளம், வவுனிக்குளம், துணுக்காய் போன்ற பிரதேசங்களை உள்ளடக்கி மகாவலி ஜே என்னும் புதியதோர் வலயத்தை உருவாக்குகிறீர்கள். இதுவும் எல் வலயம் போன்று சிங்களக் குடியேற்றங்களுக்கே தவிர, இங்கு மகாவலி நீர் வரப்போவது கிடையாது. இந்த புதிய வலயம் தொடங்குவதற்கு முன்பாகவே, நெடுங்கேணியில் 1000ஏக்கர் நிலத்தை சீனக்கம்பெனியின் பினாமி நிறுவனமான தாய்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்கு, கரும்பு பயிருடுவதற்கு கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ள நிலங்கள் ஏற்கனவே மத்தியதர வகுப்பினருக்குப் பிரித்து வழங்கப்பட்ட நிலங்கள் ஆகும். யுத்தத்தின் காரணமாக அந்த நிலங்கள் காடுமண்டிப்போக, அவற்றை வன இலாகாவிற்குச் சொந்தமான காணிகள் எனக்கூறி, அவற்றை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கதும் கண்டனத்திற்குரியதுமாகும். இவ்வாறான கரும்பு பயிரிடுவதற்கு எத்தனையாயிரம் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்படும் என்பது யாருக்கும் தெரியாது. மணாலாற்றிற்கு நேர்ந்ததுதான் நெடுங்கேணி, மாங்குளம், வவுனிக்குளம் போன்றவற்றிற்கும் ஏற்படும் என்பதை தமிழ் மக்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் மனதில் கொள்ளவேண்டும். ஏற்கனவே திருகோணமலையைச் சுற்றிவளைத்து சிங்களக் குடியேற்றத்தின் மூலம், எவ்வாறு சேருவாவில என்ற சிங்கள தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டதோ, அதே போல வவுனியாவைச் சுற்றிவளைத்து, சிங்கள குடியேற்றங்களைக் கொண்டுவருவதற்கான ஒரு திட்டமாகவே இது இருக்கின்றது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், மகாவலி அபிவிருத்தி என்பது முழுக்க முழுக்க சிங்கள குடியேற்றங்களுக்கே என்பதை தமிழ்க் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். மிகப் பாரிய விவசாய நிலப்பரப்பைக் கொண்ட வன்னி மண்ணைப் பாதுகாப்பதன் ஊடாக தமிழ் மக்களின் விவசாயம், பொருளாதாரத்தை நிலைநிறுத்த முடியும். மாறாக இவற்றை வெளிநாட்டுக் கொம்பனிகளுக்கு விற்பதனூடாக அரசாங்கம் ஏதோவொரு வகையில் தான் நினைத்ததை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விவசாய நிலங்களைத் தாரை வார்ப்பதை தமிழ் மக்கள் முற்றுமுழுதாக நிராகரிப்பதுடன், வடக்கு மாகாண தமிழ் மக்களுக்கு மகாவலி அபிவிருத்தி சபை தேவையில்லை என்பதையும் அரசாங்கம் புரிந்துகொண்டு, அதனை வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோருகின்றோம்.

சீன அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கையில் சீன அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்க கூடிய செயற்பாடுகளுக்கு வடக்கு கிழக்கில் இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் நேற்று இடமபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்

ஆக்கிரமிப்புக்களை எதிர்த்து வடக்கு கிழக்கில் போராட்டம்

வெடுக்குநாறி, குருந்தூர்மலை, கன்னியா, பச்சனூர்மலை உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வரலாற்று மற்றும் மத வழிபாட்டு இடங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்களை நிறுத்தக் கோரி வடக்கு கிழக்கில் போராட்டம் இடம்பெறவுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அதுமட்டுமன்றி, காணிகள் ஆக்கிரமிப்பை கைவிடக்கோரியும் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டத்தினை அமுலாக்கப்படுவதை நிறுத்துமாறும் இந்தப்போராட்டத்தின் போது வலியுறுத்தப்படவுள்ளதாக கூறினார்.

ஆகவே குறித்த போராட்டத்திற்கு, அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியன ஆதரவினை வெளியிட்டுள்ள என்றும் அதேபோன்று வடக்கு, கிழக்கு வாழ் ஒட்டுமொத்த தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட கலாசார அடிப்படையிலான இனப் படுகொலையை எதிர்த்து பாரிய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என ரெலோவின் ஊடகப்பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்

கச்சத்தீவில் பௌத்த விகாரை அமைப்பட்டமை இன,மதவாத்தின் உச்சக்கட்டம்- சுரேஷ் பிரேமச்சந்திரன்

கச்சத்தீவில் பௌத்த விகாரை அமைப்படுதல் என்பது இலங்கை அரசாங்கத்தின் இனவாதத்தினதும், மதவாதத்தினதும் உச்ச கட்டமாகவே தென்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று அவரது இல்லத்தில் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலார் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கச்சத்தீவில் பௌத்த விகாரை அமைக்கப்படுவது தொடர்பாக குறிப்பிடுகையில்,

கச்சதீவானது இலங்கைக்கு திருமதி.இந்திராகாந்தி அவர்களால் கையளிக்கப்பட்ட பொழுது இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் பயன்படுத்தல்,வலை காய விடுதல் மற்றும் ஓய்வெடுத்தல் போன்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டதுடன் அங்கிருக்கும் அந்தோனியார் ஆலயத்திற்கு வருடம் ஒருமுறை திருவிழா நடத்துவது போன்ற ஏற்பாடும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

அந்த ஆலயத்தின் திருவிழாவினை யாழ்ப்பாணம், பங்கு தந்தையர்கள் தலைமை தாங்கி நடத்துவதுடன் இலங்கையின் வடமாகாணம் மற்றும் திலகத்திலிருந்தும் மக்கள் பங்கேற்று வரும் நிலையில் இந்த முறை இடம்பெற்ற திருவிழாவில் என்றும் இல்லாதவாறு பௌத்த பிக்குக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் கடற்படையின் உதவியுடன் அங்கு பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளது அல்லது கட்டப்பட்டுக்கொண்டு வருவதுடன் வெடியரசன் கோட்டையும் பௌத்தர்களுடையது என கூறி கடற்படையினரால் அவற்றை பிரதிபலிக்கும் பெயர் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக சிங்களவர்கள் வாழாத அல்லது செல்லாத கச்சத்தீவில் பௌத்த விகாரை கட்டப்படுவதானது வடக்கு கிழக்கில் மிக விரைவாக பௌத்தத்தினை பரப்புவதற்கான ஏற்பாடாகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளிற்கு இந்திய ஸ்வேரும் பார்வைர்வையாளராக இருக்குமாயின் எதிர்காலத்தின் கச்சத்தீவின் மூலம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதில் உத்தரவாதம் இல்லை எனவும் ஐயம் வெளியிட்டுள்ளார்.

95 சதவிகிதமாக தமிழர் வாழும் வடக்கு மாகாணத்தில் சிங்கள மக்களை குடியமர்த்துவது மற்றும் பௌத்த விகாரைகளை அமைத்து போன்ற விடயங்களை கட்டுப்படுத்த இந்தியா முழு மூச்சுடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா அனைத்து விடயங்களிலும் பாராமுகமாக இருக்கின்றதா என்ற கேள்வி இலங்கை தமிழர்களிடம் உள்ளதாகவும் அவ்வாறு இந்தியா அமைதி காத்தால் தமிழ் மக்களிடமிருக்கும் நம்பிக்கையும் பறிபோகும் எனவும் தெரிவித்துள்ளார்.

13வது திருத்தம் தொடர்பில் பட்டிமன்றம் நடத்தாமல் முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் தோன்றுகின்ற பொழுது 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறுவதும் இதனை சிங்கள இனவாத சக்திகள் எதிர்ப்பதும் பின்னர் அதனை திசைதிருப்பும் நோக்கில் செயற்படுவதும் இலங்கையை மாறிமாறி ஆட்சி செய்பவர்களின் வழக்கமாகிவிட்டது.

தென்னிலங்கை அரசியல் சமூகமும் பௌத்த மதகுருமார்களும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்ந்தால் மாத்திரமே இந்த நாடு முன்னேற்றமடையும் என்பதை ஏற்க மறுத்து, தமது குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தொடர்ந்தும் தமிழர் விரோதப்போக்கைக் கடைப்பிடிப்பது இந்த நாட்டின் நெருக்கடிக்குத் தீர்வாகாது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு,

ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் பேசியபொழுது, பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறை படுத்துவதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவைக் கோரினார். 13ஐப்பற்றிப் பேசிவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவர்கள் 13ஆவது திருத்தத்திற்கு மேலே சென்று அதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தான் தயார் எனக் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களும் 13ஆவதில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்த தனது சம்மதத்தைத் தெரிவித்திருந்தார். ஜேவிபியினரும்கூட அதற்கு ஆதரவான கருத்தையே வெளியிட்டிருந்தனர்.

சிங்கள இனவாதிகளின் தூண்டுதலின் பேரில் பௌத்த பிக்குகளை உள்ளடக்கிய இனவாதக்குழுக்கள் சில 13ஆவது திருத்தத்தை நிறைவேற்றக்கூடாது என்று போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சில இனவாத சக்திகளான விமல்வீரவன்ச, உதயகம்மன்பில, சரத்வீரசேகர போன்றோரும் குரல்கொடுத்தனர்.

இது இவ்வாறிருக்க, முன்னர் இதற்கு ஆதரவு தெரிவித்த மகிந்த ராஜபக்ச அவர்கள் இப்பொழுது 13ஐ நிறைவேற்றத் தேவையில்லை என்று சிங்கள ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சிங்கள வாக்கு வங்கியை நம்பியிருக்கக்கூடிய தரப்புகளும் தங்களது வாக்குவங்கிகளுக்குப் பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இதே நிலைப்பாட்டை எடுக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக 13ஐ நடைமுறைப்படுத்துவேன் என்று உத்தரவாதம் அளித்த ஜனாதிபதி அவர்கள் இன்றுவரை அதுதொடர்பில் ஒரு சிறுதுரும்பைத்தன்னும் நகர்த்தவில்லை.

இதுதொடர்பாக சர்வகட்சி மகாநாடுகளை ஜனாதிபதி நடத்தியபொழுதிலும் இவற்றை நிறைவேற்றுவதற்காக ஒரு கால அவகாசத்தை தமிழ்க் கட்சிகள் குறிப்பிட்டபொழுதும் அவை எதுவும் கவனத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இவை இவ்வாறிருக்க, 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது எனவும் அவை ஒற்றையாட்சிக்கு உட்பட்டது எனவும் அதனை நடைமுறைப்படுத்தக் கோருபவர்கள் இந்தியாவின் முகவர்கள் எனவும் அடிவருடிகள் எனவும் பிரச்சாரம் செய்யும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் ஒற்றையாட்சியின் கீழ் இருக்கும் அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்டு, அந்த அரசியல் சாசனத்தைக் காப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் வேடிக்கையும் இங்கேதான் நிகழ்கிறது.

பதின்மூன்றாவது திருத்தம் என்பது ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் அங்கீகரித்து நிறைவேற்றப்பட்டது அதுமாத்திரமல்லாமல், இலங்கையின் உயர்நீதிமன்றத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அரசியல் சாசனத்தில் உள்ள இந்த விடயங்களை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி யாரிடமும் அங்கீகாரமோ அனுமதியோ பெற வேண்டிய தேவையில்லை. 1988ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை, இலங்கையில் மாகாணசபைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அதற்கு உர்pத்தான அதிகாரங்களில் சில கொடுக்கப்பட்டிருப்பதும் சில கொடுக்கப்படாமலிருப்பதும் நிதர்சனமான உண்மையாகும்.

ஆகவே, நாங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் முழுமையாக நடைமுறைப்படுத்துமாறே கோருகின்றோம். ஆனால் இலங்கையின் அரசியல் சாசனத்தில் உள்ள இந்த விடயங்களை சிங்கள தரப்பில் இருக்கக்கூடிய குறுகிய அரசியல் இலாபம் கொண்ட கட்சிகள் இதனை மறுதலிப்பதும் அதற்கு எதிராகப் போராடுவதும் புரிந்துகொள்ளக்கூடியதே.

ஆனால் தமிழ்த் தரப்பில் இயங்குகின்ற அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் போன்றவர்கள் அதே சிங்கள இனவாதக் குழுக்கள்போல் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராகச் செயற்படுவதும் எந்த வகையில் தமிழ் மக்களுக்கு அனுகூலமாக இருக்கும் என்பதை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.

மேலும், இவர்கள் கூறுகின்ற சமஷ்டி அரசியல் சாசனத்திற்கான வழிமுறைகளையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். சட்டத்தின்பால் கிடைத்தவற்றை ஏற்கமறுத்து, அதனை வேண்டாம் என்று தூக்கியெறியக்கூடிய தமிழ் தரப்பு அரசியல் விற்பன்னர்களை இப்பொழுதுதான் காணக்கூடியதாக இருக்கின்றது.

சமஷ்டி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு புதிய கோரிக்கை அல்ல. தந்தை செல்வா அவர்கள் சமஷ்டி கட்சியைத்தான் ஆரம்பித்து அதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி என்று பெயரையும் வைத்தார்.

ஆனால் இலங்கை அரசாங்கத்திற்கும் சிங்கள இனவாத சக்திகளுக்கும் சமஷ்டி என்ற சொல் வேப்பங்காயாகக் கசக்கிறது. இப்பொழுது இருக்கக்கூடியது ஒற்றையாட்சி முறையைக் கொண்ட அரசியல் சாசனமே.

இந்த நாட்டில் சமஷ்டி ஆட்சிமுறையைக் கொண்டுவரவேண்டுமாக இருந்தால், சமஷ்டி முறைமையை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்படவேண்டும்.

அவ்வாறான சமஷ்டி அரசியல் சாசனத்திற்கு தமிழர் தரப்பில் யாரும் எதிரானவர்கள் அல்ல. ஆகவே, ஒரு சமஷ்டி அரசியல் சாசனத்திற்காகப் போராடக்கூடியவர்கள் அதற்கான வழிமுறைகளை வகுத்து தமது போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லலாம். அதற்கு தமிழ் மக்களின் முழுமையான ஆதரவும் இருக்கின்றது. அது ஒரு நீண்ட போராட்டமாக அமையப்போகிறது என்பதுதான் யதார்த்தமானது.

இந்த நிலையில், ஒரு மாற்று ஏற்பாடு இல்லாமல், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் காரணமாக உருவாக்கப்பட்ட மாகாணசபைகளை நிராகரிப்பதும் அதனை அரசியல் சாசனத்திலிருந்து தூக்கியெறிய வேண்டும் என்று சொல்வதும் தமிழ் மக்களுக்குக் கிடைத்தவற்றையும் இல்லாமல் செய்யக்கூடிய அறிவீலித்தனமான செயலாகும்.

பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது. அதுமாத்திரமல்லாமல், சர்வதேச ரீதியிலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தினூடாகவும் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியா கோரிக்கை விடுத்து வருகின்றது. இதுதான் இலங்கை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு என்று இந்தியாவும் கூறியது கிடையாது.

இந்த நிலையில், பதின்மூன்றாவது திருத்தம் வேண்டுமா? வேண்டாமா? அதனை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்று பட்டிமன்றம் நடத்துவதை விடுத்து, தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ளவும் நாட்டை முன்னோக்கி நகர்த்தவும் பதின்மூன்று முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலே சாத்தியமாகும் என்பதைப் புரிந்துகொண்டு செயற்படுவது நாட்டின் அனைத்து அரசியல் சமூகத்திற்கும் நல்லது

தமிழர்களின் மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கு அதற்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

திருக்கோணேஸ்வரத்தில் இந்த அரசாங்கம் புதிய கட்டடத் தொகுதியை அமைப்பதனூடாக அதன் புனிதத்தைக் கெடுத்து, அதனை ஒரு சிங்கள பௌத்த பிரதேசமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இந்திய தூதுவர் நேரடியாக அங்கு சென்று, நிலைமையை நேரில் அறிந்து வந்தார். இதைப்போலவே முல்லைத்தீவு, வவுனியா போன்ற பிரதேசங்களிலும் புராதன சைவக் கோயில்கள் இருந்த இடங்களில் அவை அகற்றப்பட்டு புத்த கோயில்களை உருவாக்கும் நடவடிக்கைகளும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையில் தமிழ் மக்களின் மரபுரிமைகளைக் காப்பாற்றுவதாக இருந்தால், அதனைக் காப்பாற்றுவதற்கான அதிகாரங்கள் தமிழ் மக்க ளுக்கு இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்- இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் கடந்த 13.12.2022 அன்று காசியில் நடந்த பாரதியார் பிறந்தநாள் விழாவில், மரபுரிமைகளைப் பாதுகாக்கும் கடமைகளை இந்தியாவில் மட்டுமன்றி ஏனைய நாடுகளிலும் இந்தியா செயற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். அந்த வகையில் 12 ஆண்டுகாலமாகப் பூட்டியிருந்த இலங்கையின் பாடல் பெற்ற தலமான திருக்கேதீஸ்வரத்தையும் தாங்கள் மீளக் கட்டியெழுப்பி புனர்நிர்மாணம் செய்திருப்பதாகவும் அதன் மூலம் மறு மலர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலநூறு கோடி ரூபாய்களை செலவு செய்து ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கேதீஸ்வரம் சிவாலயத்தை மீட்டெடுத்து புனர் நிர்மாணம் செய்தமையை தமிழ் மக்கள் சார்பாக வரவேற்பதுடன் எமது நன்றிகளையும் தெரிவித் துக்கொள்கின்றோம்.

இலங்கை திருநாடு இராவணேஸ்வரன் ஆண்ட சிவபூமி என அழைக்கப்படுகிறது. இலங்கைத் தீவைச் சுற்றி ஐந்து ஈஸ்வரங்கள் (சிவஸ்தலங்கள்) இருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் கூறுகின்றனர். அவ்வாறான ஒரு நாட்டில், சைவக் கோவில்கள் இடிக்கப்பட்டு, புதிய புதிய பௌத்த கோயில்களை உருவாக்குகிற ஒரு வேலையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து செய்து வருகின்றது.

திருக்கேதீஸ்வரத்திற்கு இணையாக பாடல் பெற்றுத் திகழும் திருக்கோணேஸ்வரத்தில்கூட இந்த அரசாங்கம் புதிய கட்டடத் தொகுதியை அமைப்பதனூடாக அதன் புனிதத்தைக் கெடுத்து, அதனை ஒரு சிங்கள பௌத்த பிரதேசமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இந்திய தூதுவர் நேரடியாக அங்கு சென்று, நிலைமையை நேரில் அறிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் போலவே முல்லைத்தீவு, வவுனியா போன்ற பிரதேசங்களிலும் புராதன சைவக் கோயில்கள் இருந்த இடங்களில் அவை அகற்றப்பட்டு புத்த கோயில்களை உருவாக்கும் நடவடிக்கைகளும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆகவே, இலங்கையில் தமிழ் மக்களின் மரபுரிமைகளைக் காப்பாற்றுவதாக இருந்தால், அதனைக் காப்பாற்றுவதற்கான அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு இருக்கவேண்டும். இல்லாவிட்டால் கேதீஸ்வரம், கோணேஸ்வரம் ஆகியவற்றின் அடையாளங்களை எப்படி இலங்கை அரசு மாற்ற முற்படுகிறதோ அவ்வாறே ஏனைய இடங்களும் மாற்றப்படும்.

தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பது தொன்மைமிக்க சைவ ஆலயங்களைப் பாதுகாப்பது போன்ற அனைத்து உரிமைகளும் அதிகாரங்களும் தமிழ் மக்களுக்குக் கிடைப்பதன் ஊடாகவே நீண்ட நெடிய வரலாறுகளைக் கொண்ட அவர்களது மரபுரிமையும் பாதுகாக்கப்படும். ஆகவே இந்திய அரசாங்கம் இவற்றைக் கவனத்தில் எடுத்து தமிழ் மக்களின் மரபுரிமைகளை காலாதி காலத்திற்குப் பாதுகாத்துக்கொள்ளும் அதிகாரங்களை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் – என்று தெரிவித்துள்ளார்.

ரெலோவின் பொறிமுறை யோசனைக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். சாதகமான சமிக்ஞை

அரசாங்கத்துடன் ஆரம்பிக்க உள்ள பேச்சுவார்த்தை தொடர்பில் ரெலோவின் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் அவர்கள் சில பொறி முறைகள் குறித்து ஊடகத்திற்குக் தெரிவித்திருந்தார். அதில் ஏனைய கட்சிகளும் தமது ஆலோசனைகளை முன்வைக்குமாறும் கோரியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது கருத்துகளை முன்வைத்துள்ளது.

தமது கட்சியின் கருத்துகளை முன் வைத்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விவரம் வருமாறு:-

ரெலோ அமைப்பு பேச்சுவார்த்தை தொடர்பான பொறிமுறை ஒன்றை 09. 12.2022 அன்று பொதுவெளியில் வெளியிட்டிருப்பதுடன் அவை தொடர்பான ஆக்கபூர்வமான ஆலோசனைகளை தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ளோரிடமிருந்து கோரியிருக்கின்றது. இந்தக் கோரிக்கை பொதுவெளியில் இருப்பதன் காரணமாக, அதற்கான எமது கருத்துக ளையும் ஆலோசனைகளையும் பொது வெளியில் வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

முதலாவதாக, அரசாங்கம் குறிப்பிட் டுள்ள தமிழர் தரப்பினருடனான பேச்சு வார்த்தையானது வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பானதா? அல்லது புதியதோர் அரசியல் யாப்பு தொடர்பானதா? அல்லது வடக்கு – கிழக்கு மக்களின் அன்றாட பிரச் சினைகளுக்கான தீர்வு தொடர்பானதா? என்பதை முதலில் அரசாங்கம் தெளிவு படுத்த வேண்டும்.

தமிழர் தரப்பும் தாம் எது தொடர்பில் பேசப்போகிறோம் என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அதற்கேற்ற வகையில்தான் பேச்சுவார்த்தைகளுக்கான ஒருபொறிமுறையை வகுக்க முடியும். ரெலோ அமைப்பு வெளியிட்டுள்ள பொறிமுறையைப் பார்க்கின்றபொழுது, அது தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைக்கான பொறிமுறையாகவே தோன்றுகின்றது.

தேசிய இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு வரையறுக்கப்பட்டாலே அந்தத் தீர்வை உள்ளடக்கியதான அரசியல் யாப்பை உருவாக்க முடியும். ஆகவே அந்த வகையில் அரசாங்கத்திற்கும் தமிழர் தரப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை என்பது முதன்மையானது. ஏற்கனவே அரசாங்கம் நியமித்த பல ஆணைக்குழுக்கள் பல அறிக்கைகளைத் தயார் செய்தும் சகல அரசாங்கங்களாலும் அவை குப்பைத் தொட்டியில் வீசியெறியப் பட்டனவேயொழிய அவை நடைமுறைப் படுத்தப்படவில்லை. இந்த நிலையில், மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் என்பது வரவேற்கப்படக்கூடிய ஒரு விடயமே. ஆனால் அரசாங்கம் உள்நாட்டிலேயே எமது பிரச்சினையைத் தீர்க்க விரும்புவதாகக் கூறுகின்றது. அதே சமயம் அவர் கள் இதைத் தீர்க்கமாட்டார்கள் என்பதை வரலாறு எமக்கு உணர்த்தி நிற்கின்றது.

எனவே, உண்மையில் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதில் இலங்கை அரசாங்கம் இதயசுத்தியுடன் செயற்படுவதாக இருந்தால், அது மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த பேச்சுவார்த் தைகளுக்கு முன்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் போன்ற கட்சிகளும் ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தன. அந்த வகையில், காணிகள் தொடர்ந்து பறிமுதல் செய்வதை நிறுத்துவதுடன், யுத்தத்தின் பொழுதும், அதன் பின்னரும் மக்களிடம் இருந்து கபளீகரம் செய்யப்பட்ட காணிகளை மீண்டும் மக்களிடமே கையளிப்பதற்கான காலவரையறை ஒன்றை வகுத்துக்கொள்ள வேண்டும். அந்தக் கால எல்லை மிகக்குறுகிய காலஎல்லையாக இருத்தலும் வேண்டும்.

இரண்டாவதாக, 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தமும் அதனைத் தொடர்ந்து இயற் றப்பட்ட அதிகாரப்பகிர்விற்கான சட்டங்க ளும் முழுமையாக நிறைவேற்றப்படல் வேண்டும். ஏற்கனவே இவை சட்டங்களாக இருப்பதன் காரணத்தினால் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி கால தாமதமின்றி இவற்றை நிறைவேற்று வதற்கான வழிவகைகளையும் செய்ய முடியும்.

மூன்றாவதாக, தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கான ஒருகுழு வினை தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள கட்சிகள் இணைந்து உருவாக்கிக் கொள்ளவேண்டும். இவ்வாறான தேசிய இனப் பிரச்சினை தீர்வு தொடர்பாக ஆலோசனைகளையும் ஆக்கபூர்வமான கருத்து களையும் பெற்றுக்கொள்ளும் வகையில், இந்தத்துறையில் பரிச்சயம் பெற்ற, நிபு ணத்துவம் பெற்றவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக துறைசார் நிபுணத்துவம் கொண்டவர்களையும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நிபுணத்துவம் உள்ளவர்களையும், புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்கியும் ஓர் ஆலோசனைக்குழுவும் அமைக்கப்படல் வேண்டும். இவை தவிர, இந்தியாவின் தலைமையில் ஐ.நா. பிரதிநிதிகள், அமெரிக்க, ஐரோப்பிய பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு குழுவானது மத்தியஸ்தம் வகிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடலாம். இவை தொடர்பாக இந்தியா, ஐ.நா. மற்றும் ஏனைய நாடுகளுடன் பேசி அத்தகையதொரு நிலைமையைத் தோற்றுவிக்க முயற்சிக்க வேண்டும். இவை பேச்சுவார்த்தை தொடர்பான சில அடிப்படையான அம்சங்கள் என்பதை முன் வைக்க விரும்புகின்றோம். – என்றுள்ளது.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் கடலட்டை பண்ணைத் திட்டத்தை மீள்பரிசீலனை செய்க- சுரேஷ் பிரேமச்சந்திரன்

யாழ்ப்பாணத்தில் ஐயாயிரம் கடலட்டை பண்ணைகளை அமைக்கும் கடற்றொழில் அமைச்சரின் முயற்சி பல்வேறு சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்றும் அத்தகைய சிக்கல்கள் தோன்றாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அமைச்சரின் பொறுப்பாகும் என்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

வடக்கு மாகாணத்தில் கடலட்டை பண்ணைகள் மிகப் பெருமளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. கடல்தொழில் அமைச்சர், தற்பொழுது ஏறத்தாழ ஆயிரத்து இருநூறு கடலட்டை பண்ணைகள் இருப்பதாகவும் இந்தப் பண்ணைகளை ஐயாயிரமாக உயர்த்த வேண்டுமென்றும் அதற்கான நடவடிக்கைகளைத் தான் எடுப்பதாகவும் ஊடகங்களுடாக செய்திகளை வெளியிட்டுள்ளார். கடலட்டைகள் என்பது மிக விலைமதிப்புள்ள ஏற்றுமதிப்பொருள் என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை. முன்னரும் பாக்குநீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவிலிருந்து கடலட்டைகள் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் இப்பொழுது கடலட்டை பண்ணைகளை உருவாக்கி, அதன் மூலம் பாரிய அந்நியச் செலாவணியைக் கொண்டுவர முடியுமென்றும் குறுகிய காலத்திற்குள் மீனவர்கள் பெரும் பணம்படைத்தவர்களாக மாறலாம் என்றும் அமைச்சரினால் ஆசைவார்த்தைகள் கூறப்படுகின்றது.

கடலட்டை பண்ணைகள் அமைப்பதெற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன. இரண்டு கடலட்டைப் பண்ணைகளுக்கு இடையில் ஏறத்தாழ 1000மீ இடைவெளி இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. உருவாக்கப்பட்டுள்ள பண்ணைகளில் அத்தகைய இடைவெளியில்லை என்பது மீனவர்களின் குற்றச்சாட்டுகளாக இருக்கின்றது.

இரண்டாவதாக அப்பிரதேசங்களில் உள்ள மீனவர்களுக்கு பண்ணைகளை வழங்குவதை விடுத்து, அப்பிரதேசங்களைச் சாராதவர்களுக்கும் வெளியாட்களுக்கும் அந்தப் பண்ணைகள் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

மூன்றாவதாக குறுகிய காலத்திற்குள் வருமானம் ஈட்ட முடியுமென்று மீனவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். ஆனால் புத்தளம், சிலாபம் போன்ற இடங்களில் இறால் பண்ணையில் ஏற்பட்ட இழப்புகள் கடலட்டைகள் பண்ணைகளுக்கும் ஏற்படலாம் என்ற அச்சமும் ஐயமும் தோன்றியுள்ளது. கடலட்டைப் பண்ணைகளைத் தோற்றுவிப்பதன் ஊடாக, பாரம்பரியமாக எமது மீன்பிடி, அதனூடாக வடக்கு மாகாணம் பெற்றுவந்த கடலுணவுகள், ஆயிரக்கணக்கான கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் இவையெல்லாம் அழிந்துவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

பல்வேறுபட்ட இடங்களில் அமைசசரின் பிணாமிகளின் பெயரில் கடலட்டை பண்ணைகளுக்கான நிறுவனங்கள் திறக்கப்படுவதாகவும் அதன் பெயரில் பண்ணைகள் உருவாக்கப்படுவதாகவும் இதனால் அந்த பிரதேசத்து மீனவ மக்களுக்கு தொழில் செய்யும் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. முன்னர் மீனவர்கள் தொழில் செய்த இடங்களில் பண்ணைகளை உருவாக்குவதன் ஊடாக, அந்த மீனவர்களுக்கான பாரம்பரிய தொழில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகின்றது. இதன் காரணமாகவே பல்வேறு மீனவ சங்கங்களும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

இவை ஒருபுறமிருக்க, 5000 பண்ணைகளுக்கான கடலட்டை குஞ்சுகளைக் கொடுக்கப்போவது யார் என்று பார்த்தால் அது யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே மையம்கொண்டுள்ள சீன நிறுவனம் ஒன்றே இந்த கடலட்டை குஞ்சுகளை வினியோகிக்கப்போகும் ஏக வினியோகஸ்தர்களாக இருக்கப்போகின்றனர். இந்த சீன நிறுவனம், கடலட்டை குஞ்சு பொரிப்பதற்கான தொழில்நுட்பத்தை உள்ளுர் மீனவர்களுடன் பரிமாறிக்கொள்வதற்குத் தயாரில்லை. அந்த தொழில்நுட்பம் ஏகபோக உரிமையாக சீனர்களின் வசமே இருக்கப்போகின்றது. இதனூடாக வடக்கில் சீனா நிரந்தரமாகக் காலூண்றும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகின்றது.

அது மாத்திரமல்லாமல் சீன நிறுவனம் தீர்மானிக்கும் விலைக்கே பண்ணையாளர்கள் கடலட்டைக் குஞ்சுகளை கொள்வனவு செய்ய வேண்டியிருக்கும். இந்த குஞ்சுகளின் மூலம் கிடைக்கப்பெறும் கடலட்டைகளை நாளை கொள்வனவு செய்யும் நிறுவனமாகவும் இதே சீனநிறுவனம்தான் திகழப்போகிறது. இதனால் குஞ்சுகளை கொள்ளை இலாபத்திற்கு விற்று, குறைந்த விலையில் கடலட்டைகளைக் கொள்வனவு செய்து சீனா இரட்டிப்பு இலாபத்தினை அடையப்போகிறது. மேலும், இந்தியாவுடன் மிக நீண்ட எல்லைத் தகராறுகளைக் கொண்டுள்ள சீனா, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் காலூண்றுவதினூடாக இந்தியாவின் தென்பகுதியான தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளுக்கும் பாதுகாப்புத் தொடர்பான அச்சத்தை ஏற்படுத்துகின்றது. அதற்கு நாங்கள் உடந்தையாக இருக்கக்கூடாது என்பதை எமது அமைச்சரும் மீனவ சகோதரர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

எமது பாரம்பரிய மீன்பிடியைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், வடக்கு மாகாண மக்களுக்கும் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் இங்கிருந்து கிடைக்கக்கூடிய கடலுணவுகள் கிடைக்காமல் போவதற்கான வழிமுறையாக இந்தப் பண்ணைத்திட்டங்கள் அமைந்துவிடக்கூடாது என்பதை அமைச்சருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதேபோன்று கடலட்டை குஞ்சுகளுக்கான ஏகபோக வினியோகத்தை சீன நிறுவனத்திடம் கையளித்து, முழு மீனவ சமுதாயமும் அவர்களில் தங்கியிருப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதும் மிக மோசமான பின்விளைவுகளை உருவாக்கிவிடும் என்பதையும் அமைச்சருக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கடலட்டைப் பண்ணை அமைக்கும் நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பிலும் ஏராளமான கரிசனைகளை உருவாக்கும். ஆகவே இவை அனைத்தையும் கவனத்திலெடுத்து அமைச்சர் செயற்படுவார் என்றும் செயற்படவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.