வடக்கை மட்டும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

வடக்கின் அதிகாரப் பரவலாக்கம், நிர்வாகம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் போது கிழக்கு மாகாணத்தையும் ஒன்றிணைத்து நடத்துவது சிறந்ததாக உள்ளது. எனவே இவ் விடயத்தில் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் 11 ,12,13 ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து பேச உள்ளதாகவும் அதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது வடக்கின் அபிவிருத்தி மற்றும் அதிகார பரவலாக்கம் தொடர்பாகவும் வடக்கில் இடம் பெறுகின்ற பிரச்சினைகள் மற்றும் அதற்கு தீர்வு எடுப்பதற்கான விடயங்கள் குறித்து ஆராயப்படும் கூட்டமாக அமைந்துள்ளது.

எங்களைப்பொருத்தவகையில் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது, வடக்கு கிழக்கு எமது தாயக பூமி.

எங்களுடைய தமிழ் மக்கள் ஒரு இனப்பிரச்சினை சார்ந்து நாங்கள் வடக்கு கிழக்கு சார்ந்து இந்த மண்ணை காப்பதற்காகவே எத்தனையோ போராளிகளும் பொது மக்களும் மரணித்தார்கள்.

எனவே வடக்கில் மட்டும் அபிவிருத்தி மற்றும் அதிகார பரவலாக்கம் தொடர்பாகவும் வடக்கில் இடம் பெறுகின்ற பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வு எடுப்பதற்கான விடையங்கள் குறித்து எடுக்கப்படுகின்ற முயற்சிகள் காலத்தை கடத்துகின்ற ஏமாற்றுகின்ற செயல்பாட்டை கையால் வதாகவும் அமைந்துள்ளது.

ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன் வைக்கின்றோம்.

வடக்கு கிழக்கு சார்ந்த அபிவிருத்தி, அதிகார பரவலாக்கல், வடக்கு கிழக்கில் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைக்கின்றோம்.

கோரிக்கை நிறைவேற்றப்படாது விட்டால் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதா? இல்லையா? என்பதை நாங்கள் முடிவெடுக்க கூடும்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு இவ் விடையம் குறித்து ஆராய உள்ளது.

எனவே வடக்கு கிழக்கு இணைந்த அபிவிருத்தி, அதிகார பரவலாக்கல் தொடர்பாக, பேச்சுவார்த்தை இடம் பெற வேண்டும்.என்பது எமது கோரிக்கை.எனவே கிழக்கை விடுத்து எவ்வித நல்லெண்ண முயற்சிகள் எடுத்தாலும்இஅந்த முயற்சி தோல்வியடையும்.

எங்களைப் பொறுத்த மட்டில் வடக்கு, கிழக்கு பிரதான மூச்சாக உள்ளது. எனவே கிழக்கை விடுத்து வடக்கை மட்டும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.இவ்விடயம் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன்.

வடக்கு கிழக்கு இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடலை நடத்த வேண்டும்.

அதன் அடிப்படையில் உரிய காலத்திற்கு முன் தனது கருத்தை மாற்ற வேண்டும். இல்லை என்றால் எதிர்வரும் 11,12,13 ஆகிய திகதிகளில் இடம்பெற உள்ள கூட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியாத துர்பாக்கிய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரமுயர்த்தும் வர்த்தமானியை வெளியிடுமாறு பிரதமருக்கு ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.அவசர கடிதம்

மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு இன்று (03) திங்கட்கிழமை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் அமைச்சரவையில் இருந்து அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

எனினும், இன்னும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படவில்லை என்பதனை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

எனவே, விரைவில் மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) பிரித்தானியக் கிளைக்கூட்டம் இன்று இடம்பெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பிரித்தானியக் கிளையின் கூட்டம் சனிக்கிழமை மாலை கரோவில் தலைவர் திருவாளர் சாம் தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக கட்சியின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கெளரவ. கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்கள் கலந்து கொண்டு சமகால அரசியல் நிலைப்பாடுகள் பற்றிய கலந்துரையாடல்களுடன் எதிர்காலத்தில் வெளிநாட்டு கிளைகளின் பங்களிப்புகள், புலம்பெயர் அமைப்புக்களையும் இணைத்து பயணித்தல் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது.


இன்றைய கூட்டத்தில் இணைந்து கொண்டு சிறப்பித்த மூத்த உறுப்பினர்கள் மற்றும் சக கிளைத்தோழர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

தமிழ் பண்பாட்டு அழிப்பிற்கு எதிராக வடக்கு, கிழக்கில் மாவட்டம் தோறும் போராட்டம்!

வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த அடையாள திணிப் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட 7 கட்சிகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

எம்.ஏ.சுமந்திரன் கூட்டத்திற்கு வந்த போதும், பிறிதொரு நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டியிருந்தால் புறப்பட்டு சென்று விட்டார்.

அத்துடன், தென்னிந்திய திருச்சபையின் பேராயர், வேலன் சுவாமிகள், சைவமகாசபை செயலாளர் பரா.நந்தகுமார் உள்ளிட்ட 22 பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த அடையாள திணிப் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் போராட்டங்கள் நடத்துவது தொடர்பில் அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் பொறுப்பு த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த போராட்டங்களை ஒழுங்கமைப்பதற்கு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. ரெலோ ஊடகப் பேச்சாளர் கு.சுரேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், க.சர்வேஸ்வரன், மற்றும் விதுசன்,  நிஷாந்தன், வேலன் சுவாமி, கலையமுதன் ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கிறார்கள்.

இனப்பிரச்சினை தீர்வுக்கான நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் முன்வைக்க வேண்டும் – செல்வம் எம்.பி

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் நாட்டில் நீண்ட காலம் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் நாடாளுமன்றத்தில்தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

சர்வதேச நாணய நிதியம் நாட்டுக்கு கடன் உதவியை வழங்குவதாக அதிபர் தெரிவித்துள்ளார். இந்த நிதி எமது ஏழை மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும் நடவடிக்கைகளுக்கும் அத்துடன் வைத்தியசாலைகள், பாடசாலைகளின் தேவைகளுக்காக பயன்படுத்தப்படவும் வேண்டும்.

அதேவேளை, நாட்டில் நீண்ட காலமாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்ச்சியாக ஏமாற்றமாகவே காணப்படுகிறது. அதன் முக்கியத்துவம் உணரப்பட்டு சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளில் அதுவும் ஒரு அம்சமாக அமைய வேண்டியது அவசியம்.இந்த எமது கோரிக்கையையும் அதில் உள்ளடக்குமாறு நாம் சர்வதேச நாணய நிதியத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளை, ஊழல் மோசடிகளை தடுப்பது தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. ஆட்சியாளர்கள் ஊழல்களுக்கு முக்கியம் கொடுத்து செயற்பட்டமையே நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டமைக்கான காரணமாகும். ஊழல்களைத் தடுப்பதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த விடயத்தில் நீதியாக நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் அதிபரைக் கேட்டுக்கொள்கின்றோம். ஊழலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து நாடு செழிப்புள்ளதாக மாறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கில் ஆயிரம் பேருக்கு புலமைப்பரிசில் பாகிஸ்தான் வழங்குவதன் நோக்கம் என்ன? செல்வம் எம்.பி சபையில் கேள்வி

 

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கிழக்கு மாகாணத்தில் ஒரு குறித்த பிரதேசத்தில் உள்ள 1000 பேருக்கு மாத்திரம் புலமைப்பரிசில்களை வழங்குவதன் நோக்கம் என்ன? அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளாமல் இவ்வாறு புலமைப்பரிசில்கள் வழங்கப்படுவது தவறான நிலைமையை தோற்றுவிக்கும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் சர்வஜன வாக்குரிமை தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 2023 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு அல்ல என ஜனாதிபதியும் அரசாங்கமும் குறிப்பிடுகின்ற நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு திகதி நிர்ணயித்துள்ளது. தேர்தல் விவகாரத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டுக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இழுபறியால் நாட்டு மக்களும் வேட்பாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தேர்தல் நடக்குமா, அல்லது பிற்போடப்படுமா என்பதை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதனை விடுத்து இரு தரப்பினரும் முரண்பட்டுக் கொண்டிருந்தால் தேர்தல் மீதான நாட்டு மக்களின் நம்பிக்கை சிதைவடையும்.

மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கி மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். சர்வதேசமும் இதனையே வலியுறுத்துகிறது. 13ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாண சபைகள் நிறுவப்படும் என அரசாங்கம் சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்குகிறது. ஆனால், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிர்வது முழுமையான தீர்வாக அமையாது. அதிகார பகிர்வு என்பது அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஓர் ஆரம்பப் புள்ளியாக கருதப்படும். மத்திய அரசாங்கத்திடம் உள்ள பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட நிறுவன மட்ட அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு உரித்தாக்கப்பட வேண்டும்.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவராலயங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்கள் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் வழங்கல் திட்டங்களை முன்னெடுக்கின்றன. கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கிழக்கு மாகாணத்தில் ஒரு குறித்த பிரதேசத்தில் ஆயிரம் பேருக்கு மாத்திரம் புலமைப்பரிசில் வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கத்துடன் ஒன்றிணையாமல் முன்னெடுத்துள்ளதன் நோக்கம் என்ன? நாட்டில் மூவின மக்கள் வாழ் கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் ஒரு பிரதேசத்தில் மாத்திரம் புலமைப்பரிசில் வழங்குவது தவறான நிலையை தோற்றுவிக்கும். ஆகவே இந்த விடயம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் – என்றும் கூறினார்.

அரசும் தேர்தல் திணைக்களமும் பொதுமக்களை ஏமாற்றக்கூடாது – ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

அரசாங்கமும், தேர்தல் திணைக்களமும் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றும் வேலையை செய்யக்கூடாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ரெலோ கட்சியின் பணிமனையில் அவர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் தேர்தல் தொடர்பான தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. வரவு – செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்குமாறும், தேர்தல் நடத்துவதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், ஜனாதிபதி தேர்தல் இல்லை எனத் தெரிவித்துள்ளார். தேர்தல் திணைக்களம் தேர்தலை நடத்துவதாக கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றது. வேட்பாளர்கள் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் தேர்தல் நடக்குமா இல்லையா என்ற சிந்தனையே உள்ளது.

ஆகவே, தேர்தல் திணைக்களம் தேர்தலை வைப்பதாயின் உடனடியாக தனது நிலைப்பாட்டை சொல்ல வேண்டும். தற் போது 9 ஆம் திகதி தனது கருத்தை சொல்வதாக தேர்தல் திணைக்களம் கூறுகிறது. நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது என்பது தெரியாமல் இருக்கு. தேர்தல் வருமா, வராதா என கட்சிகளும், வேட்பாளர்களும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றும் வேலையை அரசாங்கமும், தேர்தல் திணைக்களமும் செய்யக் கூடாது. ஆகவே, இறுதி முடிவை 9ஆம் திகதியாவது அறிவிக்க வேண்டும் – என்றார்.

Posted in Uncategorized

மாகாண சபைக்கான அதிகாரங்களை பெற்றுத் தருகின்ற கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது – செல்வம் எம்.பி

மாகாணசபை முறைமையை எதிர்க்கும் தமிழ் காங்கிரஸ் கட்சி மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவார்களா. அல்லது எதிர்த்து நிற்பார்களா  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்  கேள்வி எழுப்பியுள்ளார்.

வவுனியாவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”தேர்தல் என்ற ஒன்று இல்லை என்ற ஜனாதிபதியின் கூற்று எந்தளவிற்கு சரியானதாக இருக்கும் என்று சொல்லத்தெரியவில்லை.

ஏனெனில்  தேர்தலிற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும்போது ஐக்கியதேசியக்கட்சியை சேர்ந்தவர்களும்  பல இடங்களில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருந்தார்கள்.

தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டார்கள், அப்படியிருக்கும் போது ஜனாதிபதியின் கூற்று வேடிக்கையானதாகவே இருக்கின்றது.

தேர்தலை நடாத்துவதில் நிதிப்பிரச்சனை இருக்குமானால் அதனை முன்னமே அறிவித்திருக்க வேண்டும்.இன்னும் சொற்ப நாட்களே இருக்கும் போது அவர் இவ்வாறு தெரிவிப்பதில் நியாயம் இருக்குமா என்று தெரியவில்லை.எனவே தேர்தலை நிறுத்துவது ஜனநாயக விரோதமானது என்பதே எனது கருத்து. உண்மையில் மாகாணசபை தேர்தலே முதலில் நடாத்தப்பட்டிருக்க வேண்டும்.

தென்னிலங்கை கட்சிகள் அதனை முதன்மையானதாக கருதவில்லை. எமது நிலங்களை பாதுகாப்பதற்கான அதிகாரம் 13 வது திருத்ததில் இருக்கின்றது. மாகாணசபை முறைமை கட்டாயம் வேண்டும் அதற்கான தேர்தல் நடாத்தப்படவேண்டும்.

அதன் அதிகாரங்கள் அதிகரிக்கப்படவேண்டும். தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்கும் போது முதலில் எதிர்ப்பவர்கள் பௌத்த பிக்குகளாகவே இருக்கின்றனர். இது ஒரு அர்த்தமில்லாத செயற்பாடு.

வடகிழக்கில் ஒரு நீதியான தீர்வை வழங்கமுடியாது என்ற செய்தியை பிக்குகள் தொடர்ச்சியாக வெளிப்படுத்தியுள்ளனர். 13 வது திருத்தம் அமுல்படுத்தப்பட்டாலும்பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாது என்று ஜனாதிபதி சொல்கிறார். அவரும் பௌத்த பிக்குகளின் சிந்தனையில் செயற்ப்படுவதுபோல தெரிகின்றது. எனினும் சிங்கள மக்கள் அதனை எதிர்க்கின்றார்கள் என்று அர்த்தமில்லை.

தமிழ்த்தரப்பிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி அதனை  எதிர்க்கின்றது. பௌத்தபிக்குகளுடன் இணைந்து அவர்கள் இதனை எதிர்ப்பது வேடிக்கையானதாக இருக்கின்றது. சமஸ்டியே வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள் ஆனால் அதனை பெறுவதற்கான செயற்பாட்டை முன்வைக்கவில்லை. அதனை வென்றெடுப்பதற்கான திட்டம் எதனையும் முன்வைக்கவில்லை.

நான் அவர்களிடம் கேட்கின்றேன் மாகாணசபை முறைமையை எதிர்க்கும் நீங்கள் மாகாணசபை தேர்தல் வந்தால் போட்டியிடுவீர்களா. அல்லது எதிர்த்து நிற்பீர்களா. இந்த கேள்விக்கு பதில் வழங்க வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுநிற்கின்றேன்.

13 வது திருத்ததின் ஊடாக மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட்டு அதற்கான அதிகாரங்களை வழங்குவதற்கான கடப்பாடு இந்தியாவிற்கு இருக்கின்றது. இது அரசியல் சாசனத்தில் ஒரு அங்கமாக இருக்கிறது. அதனை நடைமுறைப்படுத்துமாறே நாம் கேட்கின்றோம். எனவே இந்தவிடயத்தில் இந்தியா தலையிட வேண்டும். அவர்கள் அதை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம். என்றார்.

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பதவியை ரெலோ தலைவர் செல்வம் எம்.பி நிராகரித்தார்

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை ஏற்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை நோக்கிய செயன்முறையில், நம்பிக்கை கொள்ளத்தக்க எந்தவிதமான உடனடி நடவடிக்கைகளையும் காண முடியவில்லை. காணி சுவீகரிப்பு, அரசியல் கைதிகள் விவகாரம், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம, மக்களின் வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என எதையும் அரசாங்கம் செய்யாத சூழலில், அரசை காப்பாற்றும் விதமான எந்த முடிவுகளையும் எடுக்க மாட்டோம் என செல்வம் அடைக்கலநாதன் நேரடியாக குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கைதிகள் விடுதலைக்கு யாருடைய ஒப்புதலும் அவசியமில்லை; நீதி அமைச்சருக்கு கூட்டமைப்பு கண்டனம்

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு யாருடைய ஒப்புதலும் அவசியமில்லை . அமைச்சர் கதை அளப்பதை நிறுத்தி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வந்த பிரதிநிதி ஒருவருக்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ அவர்கள் நன்றாக கதை அளந்து இருக்கிறார். நேற்றைய அரச ஊடகப் பத்திரிகையில் இதை கண்ணுற்றது வேடிக்கையாக இருந்தது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தடையாக ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் இருப்பதாகவும் அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமையால் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாமல் இருப்பதாக கூறியிருப்பது விஷமத்தனமானதும் சிறுபிள்ளைத்தனமானதுமாகும்.

நாட்டின் நீதி அமைச்சராக இருக்கும் ஒருவர் அரசியல் கைதிகள் விடுதலை பற்றிய நீதிப்பொறிமுறைகளை அறியாதவராக இருக்கின்றாரா என்ற கேள்வி எழுகிறது. ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட முடியும் என்பதை பட்டியலிட்டு ஆதாரத்தோடு ஜனாதிபதியிடம் கடந்த ஆவணி மாத சந்திப்பிலே நாங்கள் கையளித்திருந்தோம். அதன் பிரகாரம் 13 அரசியல் கைதிகள் வெளிவந்திருப்பது வரவேற்கத்தக்கது. அதன் அடிப்படையில் மற்ற அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட முடியும் என்பதை அரசியல் யாப்பு தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது. வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் மாத்திரம் வழக்கை மீள பெற்ற பின்னர் விடுதலை செய்யப்பட முடியும் என்பதையும் சட்டம் சொல்கிறது.

இது இப்படி இருக்க சிறுபிள்ளைத்தனமான ஒரு புதுக் கதையை நீதி அமைச்சர் அளந்து இருப்பதானது அரசியல் கைதிகள் விடுதலையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் பற்றிய சட்ட விவகாரங்களை அவர் அறிந்திருக்கவில்லையோ என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. இதுவரை காலமும் விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகள் யாருடைய ஒப்புதலின் பேரில் அதுவும் எந்த தமிழ் அரசியல்வாதிகளின் ஒப்புதல் பேரில் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பதை அவர் விளக்குவாரா? அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கைக்கு நாட்டின் நீதி அமைச்சர் என்ற முறையிலே விஜயதாச ராஜபக்க்ஷ அவர்கள் வழங்கிய பதில் அந்தக் கோரிக்கையை எள்ளி நகையாடி இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

நீதி அமைச்சராக தன்னுடைய கடமையை சரியான முறையில் அவர் செயல்படுத்த வேண்டுமே தவிர சிறுபிள்ளைத்தனமான சாட்டுப்போக்குகளைச் சொல்லி தனது கடமைகளை தவிர்த்துக் கொள்வதை அல்லது சட்டத்திலே இருக்கக்கூடிய ஏற்பாடுகளை மூடி மறைப்பதை நாங்கள் கவலையோடு உற்று நோக்குகிறோம்.
அவருடைய இந்த கருத்தானது ஒட்டுமொத்த நாட்டினுடைய நீதிப் பொறிமுறையின் செயல்பாடு எந்த அளவிற்கு சிறுமைப் படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி உள்ளது.