மாகாண அதிகாரங்களைப் பரவலாக்க நிபுணர் குழு என்பது சர்வதேசத்தை ஏமாற்றும் ஜனாதிபதியின் தந்திரம்: ஜனா எம்.பி

மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுணர் குழுவை ஜனாதிபதி நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்தியாவையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் மாத்திரமல்ல உலகத் தமிழர்கள் மத்தியிலும் இன்று பேசுபொருளாக மாறியிருக்கின்ற விடயம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாகக் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டம். இந்தப் 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு 36 ஆண்டுகள் கடந்திருந்தாலும் இலங்கை அரசியலமைப்பிலிருக்கும் இந்தச் சட்டம் இன்னும் முழுமையாக அமுல்ப்படுத்தப்படாமல் இருக்கின்றது. அந்த வகையில் இந்த நாட்டில் மாறி மாறி அரசாங்கத்தைக் கைப்பற்றி ஆண்டு கொண்டிருக்கும் கட்சிகளும், தலைவர்களும் இலங்கையின் அரசியலமைப்பையே மீறிக் கொண்டிருக்கின்ற சட்டவிரோதமான நடவடிக்கையைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில் இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 13வது திருத்தச் சட்டத்தைப் பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்து பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்று கூறுகின்றார். உண்மையிலேயே அன்று 1987ல் 6 இல் 5 பெரும்பான்மையைக் கொண்ட பாராளுமன்றத்திலே தான் இந்த 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அது மாத்திரமல்ல அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் உட்பட அக்கட்சியின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்காத நிலையில் ஒட்டுமொத்த சிங்கப் பிரதிநிதிகளை மாத்திரம் வைத்தே 6 இல் 5 பெரும்பான்மையாக நிறைவேற்றப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை மீண்டும் ஒரு தடவை பாராளுமன்றத்திற்குக் கொண்டுபோக வேண்டிய தேவை இருக்காது.

ஆனால் 13வது திருத்தச் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து சிங்கள மக்கள் மத்தியில் இன்று செல்லாக் காசுகளாக இருக்கும் அரசியல்வாதிகளைத் தட்டியெழுப்பி இனங்களுக்கடையிலே மேதலை, முறுகலை ஏற்படுத்தி மீண்டும் ஒரு இனக்கலவரத்தை உருவாக்;கும் சூழ்நிலைக்கு ஜனாதிபதி கொண்டு வந்திருக்கின்றார் என்றே எண்ணத் தோணுகின்றது.

அதுமாத்திரமல்லாமல் தற்போது 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும் என்றும் சிங்கள இனவாதிகள் கூறுகின்றார்கள். இந்தப் 13வது திருத்தச் சட்டத்தையும் அதனூடாக ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமையையும் இல்லாதொழிப்பதற்கான சட்டம் அவர்களால் பாராளுமன்றத்திலே கொண்டுவரட்டும் அதற்குப் பின்னர் இந்த நாடு எந்த நிலைமைக்குச் செல்கின்றது என்பதை அவர்களே உணர்ந்து கொள்வார்கள்.

இந்தப் 13வது திருத்தச்சட்டத்தினூடாகக் கொண்டுவரப்பட்ட மாகாணசபைத் தேர்தலை நடத்தாது ஜனாதிபதி அவர்கள் நீண்ட காலமாக இழுத்தடிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் ஒரு ஜனநாயக நாட்டிலே மக்கள் தங்களை ஆளக்கூடிய பிரதிநிதிகளைத் தெரிய வேண்டும். ஆனால் இன்று மாகாணசபைத் தேர்தலை நடத்தாது மாகாணசபைகளுக்கு நிபுணர் குழுவை அமைப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் முயற்சிக்கின்றார். அதற்கு முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உட்பட சில கட்சிகள் அதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன.

மாகாணசபைகளுக்கு நிபுனர் குழுவை அமைப்பதென்பது மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கான தந்தரமே ஒழிய இதன் மூலம் வேறு எதுவுமே சாதிக்க முடியாது. மாகாணத்திற்கும், மத்திக்கும் இடையிலான அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்த மாகாண நிபுனர் குழு அமைப்பதாகக் கூறுகின்றார்கள். ஆனால் அதிகாரங்கள் எவ்வாறு பகிரப்பட வேண்டும் என்பது 13வது திருத்தச் சட்டத்திலே விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரம் தொடர்பிலும் அதில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாகாணப் பொலிஸ் ஆணைக்குழுவில் மாகாண முதலமைச்சரின் பிரதிநிதி, மத்திய பொலிஸ் ஆணைக்குழுவின் பிரதிநிதி, அரசாங்கத்தினால் நியமிக்கப்படுகின்ற பிரதிநிதி என மூவர் இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இங்கு சிலருக்கு வரலாறு தெரியாது.

1988ம் ஆண்டு இறுதியிலே வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையிலே பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆனந்தராசா அவர்களை அப்போதைய ஜனாதிபதியாக இருந்த பிறேமதாசா அவர்கள் நியமித்திருந்தார்கள். அவரின் கீழே 3000 மாகாண பொலிசார்களை நியமிப்பதற்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு 13வது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்டிருக்கின்றது என்பது தான் உண்மை.

அந்த வகையில் மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுணர் குழுவை ஜனாதிபதி நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்தியாவையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இன்றும் குருந்தூர் மலையிலே பெரிய களேபரம் நடக்க இருக்கின்றது. தொல்பொருள் திணைக்களம் அங்கிருக்கின்ற இந்துக் கோவிலில் பூசை செய்ய விடாமல் தடுக்கின்றார்கள். ஆனால் அங்கிருக்கின்ற இந்துக்கள் இன்று அந்தக் கோவிலில் பொங்கல் வழிபாடு செய்ய இருக்கின்றார்கள். அதனைத் தடுப்பதற்காக பௌத்தர்கள் செல்கிறார்கள். உதய கம்மன்பில போன்ற இனவாத அரசியல்வாதிகளும் செல்கின்றார்கள். இவர்களையெல்லாம் ஜனாதிபதி அவர்கள் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாகவே நாங்கள் எண்ணுகின்றோம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்து கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது மாத்திரமல்லாமல், புறையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் கண்டு இந்த நாடுஇஸ்திரமான நாடாக இருப்பதற்குமான வழியினை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

தேவைப்படும் போது தமிழர்களுடன் ஒப்பந்தம் செய்வதிலும், தேவை முடிந்ததும் கிழித்தெறிவதிலும் சிங்களவர்கள் வல்லவர்கள்: ஜனா எம்.பி

இலங்கையின் கடந்த கால அரசியல் வரலாற்றை நன்கு கற்றுணர்ந்த எமக்குத் தெரியும் சிங்கள அரசாங்கமும் பௌத்த சிங்கள பேரினவாதிகளும் தமக்குத் தேவையெனில் இரு தரப்பு ஒப்பந்தங்களைச் செய்வதில் வல்லவர்கள். அதே போல அந்த ஒப்பந்தங்களைச் செயற்படுத்தாமல் பின்வாங்குவதில் அதனைக் கிழித்தெறிவதில் அதைவிட வல்லவர்கள் என்பதை நான் மட்டுமல்ல, இந்த நாடு மட்டுமல்ல, சர்வதேசமும் நன்கு அறியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்று (8) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வேர்களை மீட்டு உரிமையை வென்றிட என்ற மலையக எழுச்சிப் பயணம் தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை சென்றுகொண்டிருக்கிறது. அதற்கு எங்களது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொண்டு, அவர்களது வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, அதே போல ஏறாவூர் 5ஆம் குறிச்சியில் நகர சபையிலே தொழிற்செய்யும் 15 குடும்பங்களுக்கு மேற்பட்டவர்களும் அதே போன்று வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது அந்தப் பிரதேசத்தின் ஞானசேகரம் கஜேந்திரன் என்பவரின் முயற்சியினால் நான் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்திருந்தேன் இருந்தும் அந்த நிலமை இப்போது கிழக்கு மாகாண ஆளுநரின் கைகளுக்குச் சென்றிருக்கின்றது. ஆவர்களுக்கும் ஒரு நல்ல வாழ்வு கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

இலங்கை அரசியலமைப்பில் ஒரு அங்கமாக இருக்கின்ற 13ஆவது திருத்தச் சட்டம் சம்பந்தமாக சில வார்த்தைகள் பேசலாம் என்று நினைக்கின்றேன்.

13ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதில் இத்தனை வருடகாலமாக அரசாங்கம் ஏன் முழுமையான அக்கறையைச் செலுத்தவில்லை என்பதனை இச் சபையில் கேள்வியாக முன்வைக்க விரும்புகிறேன்.

இலங்கை அரசாங்கத்தின் தலைவராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கும் இந்திய நாட்டின் பிரதமரான ராஜீவ் காந்திக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது. வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்திற்குத் தீர்வாக இந்த மாகாண சபை முறைமை அமையும் என்ற நம்பிக்கை அன்றைய நிலையில் முழுமையாக இருக்கவில்லை என்பது உண்மை.

1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னரான காலத்தில் தமிழர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளான மொழி, பல்கலைக்கழக அனுமதி, இனக்கலவரம், தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் உள்ளிட்டவைகள் பின்னரான காலத்தில் தமிழ், சிங்கள மக்கள் இடையே மோதல்களை உருவாக்கியது.

1956ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்த டட்லி சேனாநாயக்க பதவி விலகியதையடுத்து ஆட்சி பீடம் ஏறிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, பிரதமராக பதவியேற்று சிங்கள பண்பாட்டின் பாதுகாவலன் என தன்னை அடையாளப்படுத்தி சிங்கள மொழிச் சட்டத்தைக் கொண்டுவந்தார்.

தமிழர்களின் மொழி மற்றும் பண்பாட்டிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் சட்டமாக இது பார்க்கப்பட்டது. இதற்கெதிராக தமிழர்கள் அறவழிப் போராட்டங்;களை நடத்தினர். இதையடுத்து, அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவிற்கும், தந்தை செல்வநாயகத்திற்கும் இடையில் பண்டா – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக பௌத்த பிக்குகள், எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதனால் அவ் ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது.

தமிழ் – சிங்கள மக்களிடையே இனப் பிரச்சினை ஏற்படுவதற்கு முதலாவது காரணியாக தனிச் சிங்கள சட்டம் அமைந்தது.

அடக்குமுறைகள், சிங்களக்குடியேற்றங்கள், பல்கலைக்கழக தரப்படுத்தல், 83 கலவரம் எனத் தொடர்ந்த நெருக்கடிகளுக்கிடையில் தமிழர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும் வகையில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கும் இடையில் மாகாண சபைகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் 1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் திகதி அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் கைச்சாத்திடப்பட்டது.

காணி, பொலீஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கும் வகையில் வடக்கு, கிழக்கை இணைத்து 8 மாகாணங்கள் உருவாக்கப்பட்டன.

மாகாண சபை முறையின் ஊடாக, காணி, நிதி மற்றும் பொலீஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், மத்திய அரசாங்கமானது இன்று வரை மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரங்களை வழங்கவில்லை.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே 13வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக இருக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி 2006ஆம் ஆண்டு இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து வடக்கு கிழக்கு இணைப்பு சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் 2007ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இரண்டாக பிரித்து உத்தரவு பிறப்பித்தது.

வடக்குக் கிழக்கு மாகாண சபையை தமிழர்கள் ஏற்றுக் கொண்டிருந்த போதிலும் அதன் முழுமையான நடைமுறைப்படுத்தலின்மை காரணமாகவே அன்றைய முதலமைச்சர் வரதராஜபெருமாள் அவர்கள் தமிழீழத்தினைப் பிரகடனப்படுத்திவிட்டு இந்தியாவுக்குச் சென்றார்.

13ஆம் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாது போனாலும், பல குறைபாடுகளுடன் வடக்கு கிழக்கு தனித் தனியாகப் பிரிக்கப்பட்டு 2008ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டு மாகாண சபை இயங்கச் செய்யப்பட்டது. அதன் பின்னர் வடக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடத்தப்பட்டு மாகாண சபை இயங்கச் செய்யப்பட்டது. இரு சபைகளும் கலைக்கப்பட்டு பல வருடங்கள் கடந்த பின்னரும் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. ஆனால், ஆளுனர்களின் அதிகாரத்தின் கீழே இச் சபைகள் இரண்டும் இப்போது இயங்கி வருகின்றன.

2009ஆம் ஆண்டில் தமிழர்களின் இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டது. அதன் பின்னர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி அவர்கள் 13 பிளஸ், பிளஸ் வழங்கப்போவதாக இந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கும் வாக்குறுதியளித்தார். ஆனால் அதுவும் நடைபெற்றிருக்கவில்லை. இப்போதும் காலங் கடத்தல்களுக்கான முயற்சிகளே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் வேரூன்றிய சட்டவிதிக் கூறுகளைக் கொண்டுள்ள நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஸ்ரியைக் கோரும் தமிழர்கள் 13யேனும் அரசாங்கம் வழங்கும், அதற்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில், ஒற்றையாட்சி முறையின் கீழுள்ள இலங்கை அரசாங்கமானது மாகாண அரசின் நிரல் ஊடாகவோ அன்றேல் மத்தியும் மாகாணமும் ஒத்துப்போகவேண்டிய நிரல் ஊடாகவோ அமுலாக்கப்படக்கூடிய எந்த அதிகாரப்பரவலாக்கல் மூலமாகவும் வடக்குக் கிழக்குக்கான தீர்வு வழங்கப்படாது என்ற சிந்தனையுடன் தமிழர்களின் ஒருதரப்பினர் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.

இலங்கையில் இருக்கும் நீதி மற்றும் மக்களாட்சி முறைகள் ஒரு போதும் தமிழர்கள் சிறிதளவேனும் அதிகாரத்தினைப் பெற்றுவிடக் கூடாது என்ற சிந்தனையுடன் இருக்கின்ற பெரும்பான்மைச் சமூகத்தினருடன் உடன்பாட்டுக்கு வரப்போவதில்லை.

அரசியல் யாப்புத் தொடர்பான கள யதார்த்தங்களுக்கு மத்தியிலும் இந்தியா உள்ளிட்ட சர்வதேசத் தரப்புகளிடம் உச்சபட்சக் கோரிக்கைக்கான தீர்வாக எதனைக் கோருவது என்ற கேள்விக்குப் பதிலாக 13ஆம் திருத்தத்தையேனும் உடனடித் தீர்வாக வழங்குவதற்கு இந்தியா ஒத்துழைக்கும் என்று நாங்கள் இப்போதும் நம்புகிறோம்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் என்ற போர்வையிலும் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையிலும் வடக்கு-கிழக்கு மீதான நெருக்கடிகளும் அத்துமீறல்களும் நடந்து வருகின்றன.

இன்றைய ஜனாதிபதி 13வது திருத்தத்தினை தன்னுடைய நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக அமுல்படுத்துவதற்கான செயற்பாட்டை மேற்கொள்ளாது தன்னுடைய தந்திரத் தனத்தினைப் பயன்படுத்தி காலங்கடத்துவதற்கான செயற்பாடுகளை சர்வகட்சிச் சந்திப்பென்றும், நிபுணர் குழு அமைத்தலென்றும் மேற்கொண்டு வருகிறார். இதுவும் கடந்த காலத்தில் நாம் அடைந்த ஏமாற்றங்களில் ஒன்றாக மாறும் என்று நாங்கள் அச்சம் கொண்டிருக்கிறோம். அதனை இல்லாமல் செய்வது ஜனாதிபதி அவர்களின் கைகளிலேயே இருக்கிறது.

ஈழத்தமிழர் மற்றும் தமிழ் பேசும் மக்களின் இணைபிரியா வடக்கு-கிழக்குத் தாயகம் என்ற சிந்தனையை தவிடு பொடியாக்கும் செயற்பாடான சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது இப்போது வடக்கு கிழக்கில் தமிழர்களின் பெரும்பான்மையை இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது,

சிங்கள தேரவாத பௌத்த மேலாண்மையின் மஹாவம்ச மனநிலையோடு முன்னெடுக்கப்படும் ஒற்றையாட்சிச் சட்டக்கூறுகளுக்குள் புரையோடிப் போயுள்ள இலங்கை அரசியலமைப்பினது அதன் ஒரு அங்கமாக இருக்கின்ற 13ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஏன் ஜனாதிபதி பாராளுமன்றத்தினை நாடுகிறார் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. அதே நேரத்தில், 2009 இற்குப் பின்னரான கடந்த 14 வருடங்களிலும், நாடு கண்டிருக்கின்ற பல்வேறு சவால்களையும் அது சீர்தூக்கிப் பார்க்கவில்லை என்பதனையே இது காட்டுகிறது.

அரசியற் கோரிக்கைக்காக அரம்பிக்கப்பட்ட போராட்டமானது கழுதை தேய்ந்து கட்டெறுப்பான கதைக்கொப்பாக மாறிவிட்டது,
பூட்டானின் திம்புவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையால் உருவான திம்புத் தீர்மானம் முதல் அதன் பின்பு வந்த ஒப்பந்தங்கள். பேச்சுக்களின் முடிவுகள், தீர்மானங்கள் எல்லாமே இலங்கைத் தமிழர்களின் முரண்பாட்டைத் தீர்த்து வைக்கவில்லை. இவ்வாறிருக்கையில் இப்போதும் 13 கோரப்படுகிறது. அதற்கும் தமிழ்த் தரப்பின் சிலரும் கடும் போக்குச் சிங்கள அரசியல்வாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்தே வருகின்றனர்.

அபிவிருத்தி அரசியலும் நல்லிணக்க மாயையும் பூசப்பட்டு மேற்கொள்ளப்பட்டுவருகின்ற பூசி மெழுகலை நாம் எவ்வாறு நம்பமுடியும்.

அரசியலமைப்பிலுள்ள மாகாண சபை முறைமையை அமல்படுத்துமாறு தமிழர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற போதிலும், இன்று வரை அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியை வழங்க மத்திய அரசாங்கம் தவிர்த்து வருகின்றது.

2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி கொண்டாடப்பட்ட 75வது சுதந்திர தினத்திற்கு முன்பாக தமிழர் பிரச்சினைக்கு தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி வழங்கினார். ஆனால் அது நடைபெறவில்லை. இப்போது 13ஐ நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் அனுமதி கேட்கிறார். இது பெரும் நகைப்புக்கானது என்றே கூறிக் கொள்ளவும் முடியும்.

இந்த உயரிய சபையில் இதுவரை நான் உரையாற்றியதற்கும் இன்று உரையாற்றுவதற்குமிடையிலே பாரிய வித்தியாசத்தை உணர்கின்றேன். இதுவரை நான் உரையாற்றிய வேளை ஏற்படாத துயரம், கவலை, சோகம் இன்று இந்த உரையினையாற்றும்போது ஏற்படுகிறது.

எனது அரசியல் பயணம் பற்றி இங்கு இருப்பவர்கள் பலருக்குப் புரியாது. ஒரு சிலர் அறிந்திருக்கக் கூடும். இந்த நாட்டில் தமிழர்கள் தமிழர் தம் பிரதேசங்களில் தமது மண்ணை, தமது மொழியை, தமது பிராந்தியத்தை, தமது கலாசார பாரம்பரிய தொன்மங்களைப் பாதுகாத்து பெருமையுடன் வாழமுடியாது அதற்கு உங்கள் பௌத்த சிங்கள மகாவம்ச மேலாதிக்கம் இடம்தராது என்பதை கற்றுத்தந்த உங்களது ஆட்சி காரணமாக எமது மண்ணை, எமது மக்களை, எமது மொழியை, எமது பண்பாட்டுப் பாரம்பரியத் தொன்மங்களைப் பாதுகாக்க, ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய முன்னாள் ஆயுதப் போராளி.

எனது அரசியல் வாழ்வொன்றும் இங்குள்ள பலரைப் போல அப்பன், பாட்டன், முப்பாட்டன் வழிவந்ததல்ல. அவர்கள் சேர்த்த பெயர், சொத்து, சுகம் வழி வந்ததுமல்ல. எம் மண், என் நிலம், என் மொழி, என் மக்கள், அவர் தம் வாழ்வுரிமை என்பவற்றுக்காக என் கல்வி துறந்து என் இளமையைத் தியாகம் செய்து, என் உயிரினை துச்சமென மதித்து, மேனியெங்கும் விழுப்புண்பட்டு ஒரு காலம் ஆயுதம் ஏந்திப் போராடிய ஆயுதப் போராளி என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கின்றேன்.

ஆயுதப் போராட்ட வரலாற்றில் ஏற்பட்ட திடீர் மாற்றம். அதைத் தொடர்ந்து உருவான இலங்கை இந்திய ஒப்பந்தம். அதனால் நாட்டுக்கு வருகை தந்த இந்திய அமைதிப்படை எமது ஆயுதங்களைக் களைந்து தேசிய அரசியல் நீரோட்டத்தில் எம்மைக் கலக்க வைத்தது.

இலங்கையின் கடந்த கால அரசியல் வரலாற்றை நன்கு கற்றுணர்ந்த எமக்குத் தெரியும் சிங்கள அரசாங்கமும் பௌத்த சிங்கள பேரினவாதிகளும் தமக்குத் தேவையெனில் இரு தரப்பு ஒப்பந்தங்களைச் செய்வதில் வல்லவர்கள். அதே போல அந்த ஒப்பந்தங்களைச் செயற்படுத்தாமல் பின்வாங்குவதில் அதனைக் கிழித்தெறிவதில் அதைவிட வல்லவர்கள் என்பதை நான் மட்டுமல்ல, இந்த நாடு மட்டுமல்ல, சர்வதேசமும் நன்கு அறியும்.

டட்லி -செல்வா ஒப்பந்தம், பண்டா – செல்வா ஒப்பந்தம், யாழ். நகரில் அன்றைய பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல அளித்த வாக்குறுதி என்று செய்யப்பட்ட ஒப்பந்தங்களும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் எம்மை நம்பவைத்து கழுத்தறுத்தவையே.

இலங்கை இந்திய ஒப்பந்தம் சர்வதேச ஒப்பந்த நியமங்களுக்கு உட்பட்ட ஒரு ஒப்பந்தம் என்பதனால், அதனை மீறமாட்டீர்கள் அதன் வழி வந்த 13ஆவது அரசியல் சீர்திருத்தத்தையும் நடைமுறைப்படுத்துவீர்கள் என்று நம்பினோம். ஆனால், ஒப்பந்தக் கடப்பாட்டை மீறுவதில் சர்வதேசத்துக்கே தண்ணீர் காட்டும் திறமையுள்ளவர்கள் என்பதனைக் காட்டிவிட்டீர்கள்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தையடுத்து இலங்கை அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது அரசியல் சீர்திருத்தம் உட்பட இதுவரை எமது அரசியலமைப்பு 22 சீர்திருத்தங்களைக் கண்டுள்ளது. இவை யாவும் இலங்கை அரசியலமைப்பின் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிகளின் பிரமாணங்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டது. திருத்தம் நிறைவேற்றிய பின்னர் அத் திருத்தங்கள் யாவும் அரசியலமைப்பின் பிரிக்க முடியாத ஒரு பாகமாக சட்ட ரீதியான வலுவினைப் பெற்றுக் கொண்டன.

எனவேதான் நான் கூறுகின்றேன். எமது 13வது அரசியலமைப்புச் சீர்திருத்தம் எமது அரசியலமைப்பின் குறைப் பிரசவம் அல்ல. கருச்சிதைவுக்குட்பட்டு வந்ததுமல்ல. வலதுகுறைந்ததுமல்ல. 13வது அரசியல் சீர்திருத்தத்தின் ஒவ்வொரு பிரிவும், ஒவ்வொரு வரிகளும் இலங்கையின் பிரிவுபடாத் தன்மையையும் ஒற்றையாட்சித் தன்மையையும் பேணிப் பாதுகாக்கும் வகையிலான ஏற்பாடுகளையே கொண்டுள்ளது. உண்மையிலேயே நான் கேட்கின்றேன். இந்த உயரிய சபையிலிருக்கும் எத்தனைபேர் எமது அரசியலமைப்பின் 13ஆவது சீர்திருத்தத்தினை கருத்தூன்றி தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் வாசித்துள்ளீர்கள். கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான் என்பது போல, யாரோ அன்று கூறியவற்றை இன்று மனதில் ஏற்றுக் கொண்டு 13ஆவது அரசியல் சீர்திருத்தம் பற்றிக் கதைக்கின்றீர்களேயொழிய, 13ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டு கதைப்பதாக நான் உணரவில்லை.

எமது அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் இன்னும் ஒரு வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. இதுவரை நிறைவேற்றப்பட்ட ஏனைய அரசியல் சீர்திருத்தங்களை விடவும் பெருமைமிக்கது. இலங்கைப் பாராளுமன்றத்தில் 6 இல் 5 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட ஒரேயொரு சீர்திருத்தம் இந்த 13ஆவது சீர்திருத்தம். அதில் இன்னுமொரு முக்கிய விடயம் அரசியலமைப்பின் 6ஆவது திருத்தத்தால் பாராளுமன்றத்தில் தமிழர் தரப்பை பிரதிநிதித்துவம் செய்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர் இச் சீர்திருத்தத்தில் வாக்களிக்கவில்லை. அப்படியெனில் இந்தப் 13ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கு 6இல் 5 பெரும்பான்மையுடன் வாக்களித்து சாதனை படைத்து நிறைவேற்றிய பெருமை முற்று முழுதாக சிங்கள பேரினவாதக் கட்சிகளையே சாரும். இந்த உண்மையினை உணராது 13ஆவது திருத்தச் சட்டத்தை இந்தப் பாராளுமன்றத்தில் ஏதோ தமிழ்க் கட்சிகள் நிறைவேற்றியதுபோல் கோசமும் கூக்குரலுமிடுகின்றீர்கள்.

எல்லாவற்றையும் விட இந்த 13ஆவது அரசியல் சீர்திருத்தத்தில் குறிப்பிடக்கூடிய இன்னுமொரு முக்கிய விடயம் இச்சீர்திருத்தம் நிறைவேற்றப்பட்டபோது எமது நாட்டின் தற்போதைய ஜனாதிபதி அவர்கள், அந்த அமைச்சரவையில் முக்கிய கபினற் அமைச்சராக இருந்தவர். இச் சீர் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கும் நிறைவேற்றுவதற்குரிய கூட்டுப் பொறுப்பினை அளிக்கவேண்டிய வரலாற்றுக் கடமைமிக்கவர் நாட்டில் அண்மைக்காலமாக தொல்லியல் வரலாறு, புராதன விகாரைகள் வரலாறு, மகாவலி காணி வரலாறு போன்ற யாவற்றையும் அக்குவேறு, ஆணி வேறாக உரிய அதிகாரிகளிடத்தில் கேட்கும் அளவுக்கு கற்றுணர்ந்த எமது ஜனாதிபதி இந்த 13வது அரசியல் சீர்திருத்த விடயத்தில் தனது வரலாற்றுக் கடமையினை மறந்திருக்கமாட்டார் என நான் நினைக்கின்றேன்.

எமது அரசியலமைப்பின் 13வது சீர்திருத்தத்தின் மூலம் மாகாண சபைகள் உருவாகியது. அத்தியாயம் 17 (அ) மூலம் மாகாண சபைகள் ஸ்தாபிப்பது, ஆளுநர் நியமனம், ஆளுநர் அதிகாரம், மாகாண சபைகள் ஆக்கும் நியதிச்சட்ட விதிகள், மாகாண அமைச்சரவை பற்றிக் குறிப்பிடுகின்றது.

அதன் 9ஆம் அட்டவணை நிரல் ஒன்று மாகாண சபைகள் பிரயோகிக்கக்கூடிய அதிகார எல்லைகளைக் குறித்துநிற்கின்றது. பின்னிணைப்பு ஒன்று சட்டமும் ஒழுங்கும் பற்றிக் குறிப்பிடுகிறது. இதில் மாகாண பொலிஸ் அதிகாரம் பற்றி மிகத் தெளிவாகக் கூறுகிறது. பொலிஸ் மா அதிபர் இலங்கைப் பொலிஸ் படையின் தலைவராக இருப்பார் மாகாண மட்டப் பொலிஸ் படையானது பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் இயங்கும். இதே போல தேசிய பொலிஸ் ஆணைக்குழு, மாகாண பொலிஸ் ஆணைக்குழு தொடர்பாகவும் விளக்கமாக, புரியக்கூடிய வகையில் எடுத்துரைக்கின்றது. இந்த ஏற்பாடுகளின் கீழ் தான் இலங்கையின் மாகாண சபைகள் ஆரம்பிக்கப்பட்ட போது ஒன்றிணைந்த வட- கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆனந்தராஜா அவர்கள் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் தற்பொழுது நீங்கள் மாகாண சபை பொலிஸாருக்கு பொல்லுப் பொலிசா, கம்புப் பொலிசா, தடிப் பொலிசா என வியாக்கியானம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

13ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தம் இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மையை எவ்விதத்திலும் குலைக்கவில்லை. ஒற்றையாட்சிக்குள் நிருவாகப் பரவலாக்கத்தை மட்டுமே மேற்கொண்டுள்ளது. மாகாண சபையைப் பற்றிப் போசும் போது, 13ஆவது திருத்தம் பற்றிப் பேசும் பொழுது எமது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை என்பது ஏதோ வட கிழக்குக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டது என்ற பிரம்மையில் இன்றும் இருக்கின்றார்கள். உண்மையில் இந்த 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபையினை, அதன் அதிகாரங்களை அதிகம் சுவைத்ததும், அதன் மூலம் அதிகம் பயன் பெற்றதும் வட- கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்கள் என்பதே உண்மையாகும்.

இந்த உயரிய சபையில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சரவை உறுப்பினர்கள், ஜனாதிபதி அவர்கள் உட்பட அனைவரும் பதவியேற்கும் போது செய்யப்பட்ட சத்தியப்பிரமாண வாசகத்தின்பால் உங்களை ஈர்க்கின்றேன். எமது சத்தியப்பிரமாணத்தின் போது இலங்கை ஜனநாயக் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கும் சட்டத்திற்கும் இணங்க பற்றுறுதியோடு எனது கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பை உறுதியாக போற்றிக் காப்பேனென்றும் பயபக்தியுடன் வெளிப்படுத்தி உறுதி செய்கின்றேனென்று பிரமாணம் எடுத்துள்ளீர்கள். அப்படியானால் அரசியலமைப்பின் பிரிக்கமுடியாத ஒரு அங்கமான 13ஆவது சீர்திருத்தத்திற்கு முரணாக, எதிராக, உங்கள் கருத்துக்களை வெளியிடுவது நீங்கள் செய்த சத்தியத்துக்கு முரணானதாக அமையாதா, அது அரசியலமைப்பை மீறும் செயலாகாதா?, அவ்வாறெனில் அரசியலமைப்பை மீறிய தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்கு உங்களை உட்படுத்த முடியாதா, ஜனாதிபதி அவர்கள் தான் செய்த, செய்யாத செயலுக்கு தண்டனைக்குட்படுத்த முடியாதவரெனினும் அரசியலமைப்பை மீறும் போது அவரும் அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்படவேண்டியவரென்று பொருள் கோடல் செய்யமுடியாதா.

தூங்குபவர்களைத் தட்டியெழுப்பலாம், புரியாதவர்களுக்குப் புரிய வைக்கலாம், அறிவில்லாதவர்களெனின் அறிய வைக்கமுடியும். ஆனால், நமது அரசியல்வாதிகள் இவற்றை புரிந்து கொள்ளும் பக்குவத்தில் இல்லை. தெரிந்து கொள்ளும் பக்குவத்திலுமில்லை. அறிந்து கொள்ளும் பக்குவத்திலுமில்லை. ஆனால், இவர்கள். எமது நாட்டின் எதிர்காலத்தோடு விசப்பரீட்சை விளையாட்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் ஒரு ஆறு தசாப்த காலம் எம் நாடு பின்நோக்கிச் செல்வதற்கான முன்னாயத்தங்களை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றை மட்டும் சிந்தியுங்கள். எம் நாடு பெரிதா, நம் நாட்டுக்கான தீர்மானம் எடுப்பது பெரிதா, இல்லை. நமது கட்சி, நமது பதவி, நமது அதிகாரம் தொடர்பான தீர்மானம் மட்டுமே முக்கியமா என்பது பற்றிச் சிந்திக்க வேண்டிய இறுதித் தருணம் இது என்பதை மறவாதீர்கள்.

நெல் விலை நிர்ணயத்தில் விவசாயிகளது வாழ்வாதாரமே கவனமாக இருத்தல் வேண்டும் – ஜனா எம்.பி

நெல் விலை நிர்ணயத்தில், அரிசி ஆலை உரிமையாளர்கள் அழுத்தம் ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ளாது ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை அரசாங்கம் கவனத்திலெடுக்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு தொடர்பான இன்றைய (20) விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

தோடர்ந்து உரை நிகழ்த்திய பாராளுமன்ற உறுப்பினர் ஜனா,

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே வரவு செலவுத்திட்டம் மூலமாக ஒதுக்கப்படும் நிதிகள் ஒதுக்கப்படாமல் நாங்கள் எந்தவித அபிவிருத்தி வேலைகளையும் எமது மக்களுக்குச் செய்யமுடியாத சூழ்நிலையில் இருந்து கொண்டு இந்த வரவு செலவுத்திட்ட அலுவலகம் சம்பந்தமான விவாதத்தில் எப்படிப் பங்கு பெறலாம் என்று யோசிக்கின்றேன்.

இருந்தாலும் எனது மாவட்ட மக்கள் சம்பந்தமாக சில விடயங்களையும்; இந்த விவாதத்தில் எடுத்துரைக்கலாம் என்று நினைக்கிறேன்.

முதலாவதாக கடந்த 28.05.2023 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தவேந்திரன் மதுசிகன் என்ற 20 வயது மாணவண் இந்தியாவின் தனுஸ்கோடியிலிருந்து தலைமன்னார் வரையான 30 கிலோமீற்றர் கடலை நீந்திக் கடந்திருக்கின்றார். ஒரு சாதனை புரிந்திருக்கின்றார். அதுவும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் கடலில் பிளாஸ்ரிக் கழிவுகள் அதிகரிப்பதனால் ஏற்படும் பின்விளைவுகளையும், பின்விளைவுகளைத் தடுப்பதற்கும் மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகா, சிறுவயதில தற்கொலைக்குச் செல்லாத மனோநிலையை வலுப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் சாதனைகளை நிறைவேற்ற வேண்டும என்ற சிந்தனையுடன் செயற்பட்டால் இவ்வாறான விடயங்களிலிருந்து விடுபடலாம் என்ற விழிப்புணர்வுகளுக்காக இந்த சாதனையைப் புரிந்துள்ளார். அந்தவகையில் இந்தப் பாராளுமன்றத்தின் ஊடாக அந்த மாணவனுக்கு பாராட்டுக்களைச் தெரிவிக்கவேண்டிய கடமையிலிருக்கின்றேன்.

அது மாத்திரமல்ல இன்றைய விவாதத்தின் ஆராம்பத்திலே 27/2 கேள்வியின் மூலமாக இந்தச் சபையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் ஒரு கூற்றை முன்வைத்திருந்தார். உண்மையிலேயே விவசாயிகள் சார்பாக நான் அவருக்கு பாராட்டுத் தெரிவிக்கிறேன். இன்று மட்டக்களப்ப மாவட்டம் மாத்திரமல்ல அம்பாரை போன்ற பிரதேசங்களிலும் நெல் அறுவடை ஆரம்பித்து விட்டது;. ஆனால் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக அவர்களுடைய நெல்லை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை என்பது மாத்திரமல்லாமல் நெல்லுக்குரிய சரியான விலையைக் கூட இந்த அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை.

இன்றைய 27/2 கீழான கேள்விக்குக் கூட விவசாய அமைச்சர் அவர்கள் சரியான பதிலைக் கூறாமல் தாங்கள் கூடி முடிவெடுத்து அறிவிப்பதாகக் கூறியிருக்கின்றானர். இன்றைய பொருளாதார நிலைமையில் அரசாங்க விதை உற்பத்திப் பண்ணைகளில் கூட விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு கிலோ நெல்லை 95 ரூபாவுக்கு விற்ற பண்ணைகள், இன்று ஒரு கிலோ நெல்லை 200 ரூபாவுக்கு விற்கக் கூடிய ஒரு சூழ்நிலையில் இருக்கின்றது. ஏனென்றால் அதற்குரிய உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பதாகக் கூறுகின்றனர்.

உண்மையில் உற்பத்திச் செலவு அதிகரிப்பதாக இருந்தால் அரசாங்க விதை உற்பத்திகளுக்கு மாத்திரமல்ல ஏழை விவசாயிகளுக்கும் அந்த உற்பத்திச் செலவு அதிகரித்திருக்கின்றது. கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் நெல்வயல் செய்கை பண்ணுவதற்கு ஒரு லட்சத்து 25ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவு செய்யும் போது இன்றைய நெல்லின் விலை 75- 80ரூபாவுக்கு மேல் தாண்டவில்லை. எனவே இந்த அரசாங்கம் ஆகக்குறைந்தது நெல்லின் விலையை 120ரூபாவுக்காவது நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாகப் பெற்றுக் கொண்டால் மாத்திரமே அவர்கள் அவர்களுடைய நெருக்கடியிலிருந்து மீள்வார்கள். ஒரு கிலோ அரிசி 200 ரூபாவுக்கு விற்கப்படுகின்ற நிலையில். அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லின் விலையை நிர்ணயிக்க முடியாது. அத்துடன் அரிசி ஆலை உரிமையாளர்கள் விலை நிர்ணயத்தில் அழுத்தம் கொடுக்கின்றார்கள். அரசாங்கம், அவர்களது ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ளாது ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கவனத்திலெடுக்க வேண்டும் என்பதுடன் அதற்காக பாடுபட வேண்டும்.

அத்துடன் கடந்த சில வாரங்களாக அதிபர் சேவைக்கான நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன. ஆந்த அதிபர் சேவை போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்படும் போது பல்கலைக்கழகப் பட்டம் அத்துடன் பட்டப் பின் கல்வி டிப்ளோமா இருக்க வேண்டும் அத்துடன் 5 வருட சேவைக்காலமும் இருக்க வேண்டும் அதைவிடுத்து கல்வியியல் கல்லூரி முடித்தவர்களுக்கு 6 வருட சேவை அனுபவம் இருந்தால் அதற்கு விண்ணப்பிக்க முடியும் என்ற சுற்றறிக்கை இருந்தது. ஆனால் அந்த கல்வி டிப்ளோமா பட்டம், பட்டப்பின் டிப்ளோமா, விஷேட தேவைகள் சார் பட்ட பின் கல்வி டிப்ளோமா பெற்றவர்கள் அந்தப் பரீட்சையில் சித்தியடைந்திருந்தாலும் நேர்முகப் பரீட்சையில் அவர்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றார்கள். இது மிகவும் துரதிஸ்டவசமானது. இலங்கை அதிபர் சேவை தரம் III ல் ஆட்சேர்ப்பு செய்வதற்காக பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இதில் சேவை நிபந்தனை பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பான வர்த்தமானிப் பத்திரிகை அறிவித்தல் 2018.10.19 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதில் சேவை நிபந்தனை பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “ இலங்கை சனநாயகச் சோசலிசக் குடியரசின் இலக்கம் 1885/31 மற்றும் 2014.10.22 ஆம் திகதி கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கும், அப்பிரமாணக்குறிப்பில் இதற்குப் பின்னர் மேற்கொள்ளும் திருத்தங்களுக்கும், அரச சேவையின் நியமனங்களை நிர்வகிக்கும் பொது நிபந்தனைகளுக்கும் உட்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரி இலங்கை அதிபர் சேவையின் III ஆம் தரத்திற்கு நியமிக்கப்படுவார்”

இந்த நியமனமானது 2023யிலேயே வழங்கப்படவுள்ளது. எனவே பரீட்சை ஏலவே நடைபெற்றிருப்பினும், 2023இற்கு முன்னர் அதிபர் சேவைப் பிரமாணக்குறிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு அமையவே நியமனம் வழங்கப்படல் வேண்டும் என்பது நியதியாகும். இதன் அடிப்படையில் 2255/55 ஆம் இலக்க 2021.11.26 ஆம் திகதிய அதி விஷேட வர்த்தமானி பத்திரிகையில் வெளியாகிய இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின் 4ஆவது திருத்தத்தின் படி விசேட தேவைகள் சார் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் அமுல்படுத்தப்படும் திகதி குறிப்பிடப்படாமையினால் இது 2014 ஆம் ஆண்டிலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பது நியதியாகும்.

மேலும் 2010 இல் விஷேட தேவைகள் சார் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவானது சாதாரண பட்டப்பின் கல்வி டிப்ளோமாவிற்கு சமமானது என கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையும் குறிப்பிடுகின்றது. மேலும் திறந்த பல்கலைக்கழக உபவேந்தரினாலும் இது தெட்டத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நேர்முகப்பரீட்சை நடாத்தி, அதன் அடிப்படையில் அவர்களையும் இலங்கை அதிபர் சேவைக்கு உள்வாங்குவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஊடக அடக்குமுறையின் கீழ் அதிகமான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட வரலாறு இலங்கைக்கே உண்டு – ஜனா எம்.பி

மக்களுக்கோ மக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கோ எதிராக செயற்படும் எந்த அரசாங்கத்தினையும் தேர்தல் மூலமாக மாத்திரமல்ல வேறுவிதமாகவும் துரத்தியடிக்கும் நிலையுருவாகும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

ஊடக அடக்குமுறையின் கீழ் 50க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்ட வரலாறு இந்த நாட்டுக்கு மட்டுமே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஊடக ஒடுக்குமுறை சட்டத்தினை ஊடகங்கள் தங்களுக்கு எதிரான கருத்துகளை வெளிவராமல் தடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கொண்டுவருகின்றது.

இந்த அரசாங்கம் நூறு வருடத்திற்கு இந்த நாட்டினை ஆளப்போவதில்லை என்பதை இவர்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.

இன்னுமொரு கட்சி அடுத்ததேர்தலில்வெற்றிபெற்று ஆட்சியமைக்கும்போது தற்போது உள்ள அரசாங்கத்திற்கு சார்பான ஊடகங்களை இதே சட்டத்தினைக்கொண்டு அடக்குவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றது.

தாங்கள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்கமுடியாது என்பதை நினைவில்கொண்டு அவர்கள் செயற்படவேண்டும்.

மக்கள் தீர்ப்பு என்பதை அரசியல்ரீதியாக நாங்கள் அனைவரும் அறிந்த விடயம். 2019ஆம் ஆண்டு 69இலட்சம் மக்கள் வாக்களித்து ஜனாதிபதியான கோத்தபாய, அதே மக்களினால் இருப்பதற்கு இடமில்லாமல் துரத்தியடிக்கப்பட்டார். அந்த நிலைமை இன்னுமொருவருக்கு வராது என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை.

மக்களுக்கோ மக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கோ எதிராக செயற்படும் எந்த அரசாங்கத்தினையும் தேர்தல் மூலமாக மாத்திரமல்ல வேறுவிதமாகவும் துரத்தியடிக்கும் நிலையுருவாகும். ஏற்கனவேயிருந்துள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு செயற்படவேண்டும்.

ஊடகம் என்பது இந்த நாட்டில் உள்ள செயற்பாடுகளை மக்களுக்கு தெளிவுபடுத்தும் ஒரு சாதனம் என்பதை இந்த அரசாங்கம் புரிந்துகொண்டு செயற்படவேண்டும்.- என்றார்.

ஜனா எம்.பியின் வேண்டுகோளுக்கிணங்க கதிர்காமப் பாதயாத்திரை காட்டுப்பாதை எதிர்வரும் 27ம் திகதி வரை திறந்து வைத்திருப்பதற்கு ஆளுநர் உத்தரவு

2ம் திகதி திறக்கப்பட்ட உகந்தை வழி கதிர்காமப் பாதயாத்திரை காட்டுப்பாதை எதிர்வரும் 25ம் திகதியுடன் மூடப்படவிருந்த நிலையில் மட்டக்களப்பில் பிரசித்திபெற்ற ஆலயங்களின் தீர்த்தோற்சவத்தில் கலந்துகொள்ளும் அடியவர்களும் பாதயாத்திரையை மேற்கொள்ளும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க காட்டுப்பாதையை எதிர்வரும் 27ம் திகதி வரை திறந்து வைத்திருப்பதற்கு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்யை தினம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இவ்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவிக்கையில்,நேற்றைய தினம் அம்பாறை மாவட்ட செயலகத்திலே கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து சில விடயங்கள் சம்மந்தமாகப் பேசியிருந்தோம். அதிலே முக்கியமாக கதிர்காம பாதயாத்திரை உகந்தை முருகன் ஆலயத்தில் இருந்து காட்டுவழிப்பாதை நேற்றைய தினம் ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தோம்.

எங்களுடன் இக்கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட அரச அதிபர், லாகுகல பிரதேச செயலாளர், கிழக்கு மாகண பிரதம செயலாளர், கிழக்கு மாகண உள்ளூராட்சி ஆணையாளர், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை உத்தியோத்தர்கள், உகந்தை முருகன் ஆலய தலைவர் உள்ளிட்ட இவ்விடயத்துடன் தொடர்பு பட்டவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.

யாத்திரிகர்களின் நன்மை கருதி, அவர்களுக்குச் சாதகமாக இங்கு ஆளுநரின் தலைமையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

உகந்தையில் இருந்து கதிர்காமம் வரையான காட்டுப்பாதை சுமார் 56 மைல்கள் இருக்கும். இதனூடாக யாத்திரிகர்கள் செல்லும் போது பல அசௌகரிகங்களை எதிர்நோக்குகின்றார்கள். அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு தொடர்ச்சியாக குடிநீர் வழங்கல் செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும், நான்கு மைல்களுக்கு இடையிடையே தற்காலிக மலசல கூடங்கள் அமைக்கப்பட வேண்டும், ஒவ்வொரு இரவுகளிலும் தங்குமிடங்களுக்கு அருகே பெண்கள் உடைமாற்றும் கூடாரங்கள் அமைக்கப்பட வேண்டும் போன்ற முடிவுகள் இங்கே எடுக்கப்பட்டன. அந்த முடிவுகள் இந்தப் பாதையாத்திரையுடன் அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு மேலாக மட்டக்களப்பிலே மிகப் பிரபல்யமான களுதாவளை பிள்ளையார் கோவில் உள்ளிட்ட சில கோவில்களின் தீர்த்தோற்சவம் எதிர்வரும் 26ம் திகதி இடம்பெற இருக்கின்றது. பாத யாத்திரிகர்களுக்காக 12ம் திகதி திறக்கப்பட்ட காட்டுப் பாதை எதிர்வரும் 25ம் திகதியுடன் மூடுவதாக ஏற்கனவே முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன. இருப்பினும் மேற்குறிப்பிட்ட மட்டக்களப்பின் ஆலயங்களின் தீர்த்தோற்சவத்தின் பின்னர் யாத்திரை செல்ல விரும்பும் அடியவர்களுக்கு இவ்விடயம் சாத்தியமற்றதாகக் கருதி திறக்கப்பட்ட காட்டுப்பாதையை மேலும் இரண்டு நாட்கள் நீடித்து எதிர்வரும் 27ம் திகதி மூடுமாறு இதன்போது என்னால் பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டது.

அந்த விடயத்தை முறையாகப் பரிசீலித்து அப்பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. எனவே மேற்குறிப்பிட்ட ஆலயங்களின் தீர்த்தோற்சவத்தில் கலந்துகொள்ளும் அடியவர்கள் கூட கதிர்காமம் பாதயாத்திரையை முன்னெடுக்கும் வகையிலான ஏற்பாடுகள் பண்ணப்பட்டிருக்கின்றது.

இவ்வேளையில் இக்காட்டுவழிப்பாதை திறந்திருக்கும் ஒவ்வொரு நாட்களிலும் தங்களுக்கு சுமார் ஒன்றில் இருந்து ஒன்றரை இலட்சம் ரூபாய் செலவாகுவதாக லாகுகல பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார். அதில் ஒரு பங்கை நாங்கள் பொறுப்பெடுத்து அப்பாதையை மூடும் நாட்களை இரண்டு நாட்கள் பிற்போட்டுள்ளோம்.

அரச அதிகாரிகள் தங்களின் வேலை பழுக்கள் காரணமாக இந்த விடயத்திற்கு பின்டித்த நேரத்திலே ஆளுநர் அவர்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கி கட்டாயம் 27ம் திகதி சவவரை காட்டுப் பாதை திறந்திருக்க வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்தார். எனவே பாதயாத்திரை செல்லும் அடியவர்கள் எதிர்வரும் 27ம் திகதி வரை காட்டுப்பாதையூடாக யாத்திரையைத் தொடரலாம் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன் என்று தெரிவித்தார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) பிரித்தானியக் கிளைக்கூட்டம் இன்று இடம்பெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பிரித்தானியக் கிளையின் கூட்டம் சனிக்கிழமை மாலை கரோவில் தலைவர் திருவாளர் சாம் தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக கட்சியின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கெளரவ. கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்கள் கலந்து கொண்டு சமகால அரசியல் நிலைப்பாடுகள் பற்றிய கலந்துரையாடல்களுடன் எதிர்காலத்தில் வெளிநாட்டு கிளைகளின் பங்களிப்புகள், புலம்பெயர் அமைப்புக்களையும் இணைத்து பயணித்தல் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது.


இன்றைய கூட்டத்தில் இணைந்து கொண்டு சிறப்பித்த மூத்த உறுப்பினர்கள் மற்றும் சக கிளைத்தோழர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

தேர்தலை பிற்போடும் உத்தியை சுமந்திரனிடமே ரணில் கற்றார் – ரெலோ செயலாளர் நாயகம் ஜனா எம்.பி

கருணாவிடமிருந்து பெற்ற இரகசியங்களை விடுதலைப் புலிகளை அழிக்க அரசாங்கம் பயன்படுத்தியதை போல, சுமந்திரனிடமிருந்து கற்ற விடயங்களை கொண்டு ரணில் தேர்தலை பிற்போட்டு வருகிறார் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) . தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சிங்கள தலைவர்கள் எங்களிடமிருந்தே பலவற்றை கற்றுக்கொண்டு, எங்களிடமே பரீட் சித்துப் பார்க்கும் நிலைமையுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைப் பற்றி நாங்கள் அனைவரும் அறிவோம். அவர்களின் புலனாய்வுப் பிரிவு பரந்துபட்டு, மிகவும் வித்தியாசமாக இருந்தது.

எனினும், கருணா 2004இல் புலிகளில் இருந்து பிரிந்து சென்று, இலங்கை இராணுவத்திடம் அந்த புலனாய்வுத் தந்திரங்களை கூறியபடியால், இன்று இலங்கை பாதுகாப்பு பிரிவினர் மிகப் பலமான புலனாய்வு கட்டமைப்பை வளர்த் துள்ளனர்.

கிழக்கு மாகாண சபை தேர்தல் 5 வருடங்களாகவும், வட மாகாண சபை தேர்தல் 4 வருடங்களாகவும் நடக்கவில்லை. 2016ஆம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சிக்குள் சுமந்திரன் போன்றவர்களுடன் முரண்பட்டதால், க. வி. விக் னேஸ்வரன் தமிழ் தேசிய கூட் டமைப்பை விட்டு வெளியேறியிருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு ஆதரவாக இளைஞர் பட்டாளம் திரண்டு, அவரது பதவியைக் காப்பாற்ற போராடினார்கள்.

2018ஆம் ஆண்டு வட மாகாண சபையின் ஆட்சிக் காலம் முடிந்ததும், அவர் மீண்டும் போட்டியிட்டால் பெரு வெற்றியீட்டுவார் என்ற காரணத்தால் இருக்கலாம் ரணில் பிரதமராக இருந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 50-50 என தேர்தல் முறை மாற்றப்பட்டு, எல்லை மீள்நிர்ணய விவகாரத்தால் மாகாண சபை தேர்தல் நடத்த முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதை ரணிலுக்கு சொல்லிக் கொடுத்தது சுமந்திரன். அந்த சட்டமூலத்தை உருவாக்குவதற்கு முக்கிய பாத்திரமாக இருந்தவர் சுமந்திரன். அப்போது கற்றுக்கொண்டவற்றை வைத்து, இப்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற் போட ரணில் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார் – என்றார்.

நீதிமன்ற உத்தரவை மீறி மயிலத்தமடு,மாதவனை பகுதியில் காணி அபகரிப்பு – ஜனா எம்.பி

நீதிமன்ற உத்தரவினையும் மீறிய வகையில் மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறிய காணி அபகரிப்புகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மேய்ச்சல் தரை பகுதியாக காணப்படும் மயிலத்தமடு,மாதவனை ஆகிய பகுதிகளில் நிலைமைகளை கண்டறிவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அப்பகுதிக்கு கள விஜயத்தினை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான ஈபிஆர்எல்எப் கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்,புளோட்டின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.கேசவன் உட்பட பலர் இதன்போது கலந்துகொண்டனர்.

கடந்த சில தினங்களாக மயிலத்தமடு,மாதவனை பகுதியில் வேறு மாவட்டங்களிலிருந்துவருவோர் அத்துமீறிய பயிர்ச்செய்கையினை முன்னெடுத்துவரும் நிலையில் கடந்த சில தினங்களாக மேய்ச்சல் தரையில் உள்ள மாடுகள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுவருகின்றன.

கடந்த சில தினங்களில் ஒரு மாடு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் ஐந்து மாடுகள் வெட்டி கொலைசெய்யப்பட்டுள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லையெனவும் இன்றைய தினம் ஒருவர் கரடியனாறு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டபோதிலும் முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லையென பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துவருவதாகவும் கருணாகரம் எம்.பி.இதன்போது குற்றஞ்சாட்டினார்.

கல்வி நிறுவனங்களில் அரசியல்வாதிகளின் அளவுக்கு மீறிய இடையூறே கல்வித் துறையின் வீழ்ச்சிக்குக் காரணம் – ஜனா எம்.பி

கல்வி நிறுவனங்களில் அரசியல்வாதிகளின் அளவுக்கு மீறிய இடையூறே கல்வித் துறையின் வீழ்ச்சிக்குக் காரணம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் மகளிர் விவகாரங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எமது நாட்டின் கல்வித்துறை வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு சவால் விடுக்கக் கூடிய வகையில் பெருமைப்படக்கூடியதாக அமைந்திருந்தது. கல்வி அமைச்சு, மகளிர் சிறுவர்கள் சமூக வலுப்படுத்தல்கள் அமைச்சுக்கள் தொடர்பான நடவடிக்கைகளில் நாம் சுதந்திரத்துக்குப் பின்னர் வளர்ச்சியடைந்துள்ளோமா என வினவுகிறேன்.சுதந்திரத்துக்குப் பின்னரான டொமினியல் காலத்தில் வலு வேறாக்கல் கொள்கை முறையாக கடைப்பிடிக்கப்படு வந்தது.72 ஆம் ஆண்டு குடியரசான பின்னர் கல்வித்துறையில் அரசியல் செல்வாக்கும் அரசியல்வாதிகளின் செல்வாக்கும் அரசாங்க கட்சிகளின் செல்வாக்கும், அவர்களின் அடிவருடிகளின் செல்வாக்கும் பூரணமாக உள்நுழையத் தொடங்கியது. அரசியல் துறையின் அளவுக்கு மீறிய அத்துமீறல் கல்வித் துறையில் நடக்கின்றது.

கல்வியமைச்சின் கீழ் இருக்கின்ற நிறுவனங்களிலும் திணைக்களங்களிலும் தலைவர்கள் முதல் சிற்றூழியர்கள் வரை நியமனம் செய்யப்படுவது சேவை மூப்பின் அடிப்படையிலோ கல்வித் தகைமையின் அடிப்படையிலோ இன விகிதாசார அடிப்படையிலும் அல்ல. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புக்கேற்ப பாடசாலை அதிபர் தொடக்கம் நிறுவனங்களின் உயர் தலைவர் வரை நியமனம் செய்கின்றீர்கள். வட கிழக்கின் வாழ் கல்வித் திணைக்களங்களின் செயற்பாடுகள் எம்மால் திருப்திப்படக்கூடிய வகையில் இல்லை. வட கிழக்கு வாழ் அரசாங்க சார்பு அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தக் கூடியதாக மட்டுமே உள்ளது. பதவியிலுள்ளவர் அடுத்த பதவி உயர்வை எடுப்பதற்காக ஆளும் கட்சி அரசியல்வாதியின் காலில் விழுந்தால் எமது நாட்டின் கல்வியின் நிலை எப்படி உயரும். இப்படியான ஒரு கல்வியினால் எப்படி உயர்ந்த சமுதாயத்தை கட்டி எழுப்ப முடியும்.

பல்கலைக்கழக அனுமதிக்கு மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கபடும் என்பதை வரவேற்கிறேன். தேசிய கல்வி நிறுவனம் 30 வருடங்களாக இயங்குகின்றது. தேசிய கல்வி நிறுவனத்தை வெளிநாடுகளில் காணப்படுவது போன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் பல்கலைக்கழகமாக இணைத்துக் கொள்ள வேண்டும். தேசிய கல்வி நிறுவனத்தில் பல கலாநிதிப் பட்டங்களை முடித்தவர்களும், பாரிய கட்டிடங்களையும் இதர வசதிகளையும் கொண்டிருப்பதால் இலகுவாக பல்கலைக்கழகமானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஒரு பல்கலைக்கழமாக மாற்றிக் கொள்ளலாம். தேசிய கல்வி நிறுவகத்துக்கு 4000 மாணவர்களுக்குப் பதிலாக 8000 மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிகிறது. ஒரு ஆசிரிய மாணவருக்கு 5000 ரூபா தான் ஒதுக்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் விலை அதிகரிப்பில் குறித்த தொகை போதாது. அமைச்சர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். ஜெய்க்கா திட்டத்தினூடாக விசேட தேவையுடையவர்களுக்கான கல்வி பயிலுநர்களுக்கான விண்ணப்பத்தை கோரி இருந்தார்கள். கல்வி அமைச்சுக்கு 09 ஆம் திகதி செப்ரெம்பர் மாதம் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாகாண கல்வித்திணைக்களுக்கு 22 ஆம் திகதி நவம்பர் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் விண்ணப்ப முடிவுத் திகதி 23 ஆம் திகதி ஒரு மணிக்கு முதல் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு 23 ஆம் திகதி காலை 10 மணிக்கே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது . 03 மணித்தியால காலப்பகுதியினுள் எப்படி விண்ணப்பிக்க முடியும்? இது முழு நாட்டிலும் நடைபெற்றுளது. இதனூடாக அவர்கள் ஜெய்க்காவின் குறித்த கல்வி நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளது என தெரிவித்தார்.

இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்களே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை இழுத்தடிப்பு செய்து வந்துள்ளன- ரெலோ செயலாளர் நாயகம் ஜனா எம்.பி

இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் அரசியல் தீர்வு விடயமாக இழுத்தடிப்புச் செய்து வந்துள்ளன. பிரேமதாஸவின் காலத்தில்கூட 1989, 1990களில் தமிழீழ விடுதலைப் புலிகளும். சர்வகட்சி மாநாட்டில் பங்கு பற்றியிருந்தார்கள். அந்த நேரத்தில் இறுதியில் பிரேமதாஸவால் கூறப்பட்டது தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைந்து ஒருமித்து ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்தால் அதனைப் பரிசீலிக்கின்றேன் என தெரிவித்திருந்தார். தற்போது அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா அவர்களும் அதே கருத்தாக சமஸ்ட்டி தீர்வைத் தருவதற்கு முன்னர் தமிழ் மக்கள் ஒன்றாக வேண்டும் என கூறியிருக்கின்றார்.

என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பெரியகல்லாறு முகத்துவாரம் வெட்டப்படும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(06) இடம்பெற்றது. இதனைப் பார்வையிட வந்திருந்த மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரிடம் இனப்பிரச்சனைக்குரிய தீர்வுத்திட்டம் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

தமிழ் மக்களுக்குத் தீர்வைக் கொடுப்பதற்கு சிங்களக் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும், சிங்கள மக்கள் மத்தியில் ஒரு மனமாற்றம் ஏற்படல் வேண்டும், என்பதை நான் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா அவர்களுக்குக் கூறிக் கொள்கின்றேன். இந்த நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைக்கு இனப்பிரச்சனைதான் முக்கியமான காரணமாகும். அதற்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வைக் கொடுக்க வேண்டும் என சிங்கள மக்கள் மனம்மாறிக் கொள்ள வேண்டும். தமிழர்களும் இந்த நாட்டுப்பிரஜைகள், அவர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் எனவும் சிங்கள மக்கள் நினைக்க வேண்டும்.

புதிய அரசியலமைப்பினூடாக ஒரு வருடத்தினுள் இனப்பிரச்சனைக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கப்படும் என புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். அதபோன்று நீதி அமைச்சரும் புதிய அரசியலமைப்பினூடாக அரசியல் தீர்வைக் கொடுப்போம் எனக் கூறியிருக்கின்றார். கடந்த நாடாளுமன்றத்திலே 21வது திருத்த சட்டம் நிறைவேறியிருக்கின்றது. அதற்குக்கூட சில இனவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் ஆளும், எதிர்க்கட்சி, மற்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட 179 வாக்குகளை அளித்து அதனை நிறைவேற்றியிரக்கின்றார்கள். அதபோன்று இனப்பிரச்சனைக்குரிய தீர்வு கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். ஏனெனில் அரசாங்கம் இனைப்பிரச்சனைக்குத் தீர்வு வழங்கினால்தான் சர்வதேசம் தமக்கு அழுத்தங்களைக் கொடுக்காமல் உதவிகளைச் செய்யும் என்ற நிலைப்பாட்டுக்கு அரசாங்கம் வந்துள்ளது. இதற்காக வேண்டி புலம்பெயர் மக்களும் அந்த அந்த நாடுகளிலுள்ள அரசாங்கங்களுக்கு அளுத்தங்களைக் கொடுத்து வருகின்றார்கள்.

பிரித்தானியாவினால் ஐ.நா வில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட இரண்டு பிரேரணைகளுக்கும் எமது புலம்பெயர் தேசத்து தமிழர்களின் வேண்டுகோளின் பெயரில் கொண்டு வரப்பட்டுள்ளது. இது இலங்கைக்கு ஒரு இக்கட்டான நிலமையைக் கொண்டு வருகின்றது. இதிலிருந்து இலங்கை விடுபட வேண்டுமானால் இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சனைக்குரிய தீர்வைக் காணவேண்டியுள்ளது. அதனை இந்த அரசு உணர்ந்திருக்கின்றது. எதிர்காலத்தில் சுபீட்சமான நாடாக இலங்கை திகழ வேண்டுமானால் இனப்பிரச்சனைக்குரிய தீர்வை அரசு முன் வைக்க வேண்டும். அது நிறைவேறினால் இந்நாட்டில் அனைத்து மக்களும் சந்தோசமாக வாழ்வார்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்.