புதிய நாடாளுமன்ற உறுப்பினராக நயன வாசலதிலக்க சத்தியப்பிரமாணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக நயன வாசலதிலக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்த விஜேசிறி அந்த பதவியில் இருந்து விலகியதை அடுத்து ஏற்பட்ட நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு நயன, வாசலதிலக்கவை நியமனம் செய்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றையதினம் வெளியிடப்பட்டது.

இதன்படி பதுளை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியின் அறிவிப்பின் பிரகாரம், தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது.

அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹப்புத்தளை தொகுதி அமைப்பாளர் ஆவார். 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அவர் 31,307 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் ஆபத்துக்கள் தொடர்பில் ஆசிய இணைய கூட்டமைப்பு கடும் எச்சரிக்கை

இலங்கை அரசாங்கம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் விரிவான திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என கூகுள் மெட்டா அமேசன் உட்பட பாரிய தொழில்நுட்ப நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஆசிய இணைய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆசிய இணைய கூட்டமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

உத்தேசசட்டமூலம் அதன் வடிவத்தில் தற்போது பல ஆபத்துக்களை கொண்டுள்ளது என ஆசிய இணையகூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலம் தடை செய்யப்பட்ட அறிக்கைகள் என்பதை பரந்துபட்ட அளவில் வரையறை செய்கின்றது இணையவழி கருத்துப்பரிமாறை சட்ட விரோதமாக்குகின்றது என ஆசிய இணைய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தணிக்கை மற்றும் கருத்துவேறுபாடுகளை அடக்குதல் குறித்த கரிசனைகள் எழுந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

உத்தேச சட்டமூலத்தில் காணப்படும் குற்றங்கள் என தெரிவிக்கப்படும் விடயங்கள் பல ஏற்கனவே சட்டத்தில் உள்ளன இதன்காரணமாக சட்டநிச்சயமற்ற தன்மைதேவைக்கு அதிகமான தன்மை காணப்படுகின்றது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தவறான அல்லது தீங்குஏற்படுத்தும் இணையவழி உள்ளடக்கங்களை குற்றமாக்குவது என்பது கருத்துச்சுதந்திரத்தின் மீதான கடுமையான மற்றும் தேவையற்ற தடையாகும் எனவும் என ஆசிய இணைய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழு என்ற கட்டமைப்பு குறித்து புதிய சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள இந்த அமைப்பு இது அரசியல் தலையீடுகள் அதிகார துஸ்பிரயோகம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் வளர்ச்சியடைந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு இதனால் பாதிப்பு ஏற்படலாம் என தெரிவித்துள்ள பாரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டுப்பாட்டு சட்டங்கள் புத்தாக்கத்தையும் முதலீட்டையும் பாதிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளன.

பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்படும் நயன வாசலதிலக

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதவி விலகியதன் பின்னர் வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நயன வாசலதிலக நியமிக்கப்படவுள்ளார்.

அவர் 2020 பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி 31,307 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அறிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்ததாக அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இராஜினாமா

பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை மக்களின் சாபம் எமது பிள்ளைகளையும் பாதிக்கும். அதனால் மக்களின் சாபத்தில் இருந்து எனது பிள்ளைகளை பாதுகாக்கும் பொருட்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீங்கிக்கொள்ள தீர்மானித்தேன். சஜித் பிரேமதாச நாட்டின் அரசியல் அதிகாரத்தை அமைக்கும்போது மீண்டும் அரசியலில் ஈடுபட நடவடிக்கை எடுப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஜமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஆரம்ப பாடசாலைக்கு செல்லும் 3 பிள்ளைகள் எனக்கு இருக்கின்றனர். அவர்களை பாடசாலைக்கு அழைத்துச்செல்வும் பாடசாலையில் இருந்து அழைத்து வரவும் நானே செல்கிறேன்.

அந்த விடயத்தில் நான் அடிமையாகி இருக்கிறேன். எனது பிள்ளைகள் என்றதாலே அதனை நான் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் சமூகத்தில் ஏற்படும் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கிறேன்.

குறிப்பாக மக்கள் பிரதிநிதிகள் தொடர்பாக சமூகத்தில் பாரிய விரக்தி ஏற்பட்டிருக்கிறது. 225பேரின் பிள்ளைகளும் மக்களின் சாபத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

அதனால் இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு தொடர்ந்து அரசியலில் இருக்கின்றதா என்ற கேள்வி தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் சிந்தித்தே எனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளருக்கு கையளித்தேன்.

பாராளுமன்ற சட்டதிட்டங்கள் புத்தகத்தில் இருந்தாலும் அது நடைமுறையில் செயற்படுவதில்லை. பாராளுமன்றம் தொடர்பாக மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை.

மக்களின் சாபம் எனது பிள்ளைகளையும் பாதிக்கும். அதனால் மக்களின் சாபத்தில் இருந்து எனது பிள்ளைகளை பாதுகாக்கவும் மக்கள் ஆணை இல்லாத பாராளுமன்றத்துக்கு எனது விடைகொடுப்பானது, மக்கள் ஆணையுள்ள புதிய பாராளுமன்றம் ஒன்றை அமைத்துக்கொள்ள ஓரளவு அழுத்தம் கொடுக்கும் என நான் நம்புகிறேன்.

அத்துடன் நான் அரசியலில் இருந்து விலகினாலும் தொடர்ந்தும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இருப்பேன். ஐக்கிய மக்கள் சக்தியை தவிர வேறு கட்சி எனக்கு இல்லை. கட்சியில் எனக்கு எந்த அநீதியும் ஏற்படவில்லை. நாட்டின் எதிர்கால சிறுவர்களுக்கு பொறுப்புக்கூற முடியுமான தலைவர் ஒருவர் இருக்கிறார்.

அவர் நாட்டின் அரசியல் அதிகாரத்தை அமைக்கும்போது, எனக்கு முடியுமானால் நான் மீண்டும் அரசியலில் ஈடுபட நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

லசந்தவைக் கொன்ற குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு சஜித் கோரிக்கை

”ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துமாறு” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”15 வருடங்களுக்கு முன்னர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவிற்கு நீதி வழங்குவோம் என கடந்த தேர்தல்களின் போது அரசியல்வாதிகள் பலர் வாக்குறுதியளித்திருந்த போதிலும் யாரும் அதனை நிறைவேற்றவில்லை.

லசந்த தனது வாழ்நாளில், மக்களுக்கு உண்மையையும், சமூக அநீதிகளையும், நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த அஞ்சாதும் செயற்பட்டவர் ஆவார். இதன் விளைவாக அவர் தனது உயிரை தியாகம் செய்ய நேரிட்டது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதியாக்கும் பயணத்தில் பல்வேறு விதமான பங்களிப்புகளை வழங்கியவர் லசந்த விக்கிரமதுங்க. எனவே லசந்தவின் கொலையாளிகள் யார் என்பது தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதியிடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துங்கள். நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுங்கள்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான சட்டமூலம் நிறைவேற்றம்

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலம் 41 மேலதிக வாக்குகளினால் நிறை வேற்றப்பட்டது.

 இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 48 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே 41 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலத்தை  நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச சபைக்கு செவ்வாய்க்கிழமை (09) சமர்ப்பித்தார். இதனையடுத்து இடம்பெற்ற  விவாதத்தின் முடிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.  வாக்கெடுப்பைக் கோரினார்.

இதனையடுத்தது இடம்பெற்ற வாக்கெடுப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே .வி.பி. ஆகியன புறக்கணித்த நிலையில் தமிழ் தேசியமக்கள் முன்னணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிராக வாக்களித்தது.   அரச தரப்பினர் ஆதரவாக  வாக்களித்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்மபலம், கஜேந்திரன் ஆகிய எம்.பி.க்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் இரா. சாணக்கியன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், வினோநோகராதலிங்கம் , கோவிந்தன் கருணாகரம் ஆகிய எம்.பி.க்களுமே எதிர்த்து வாக்களித்தனர்.

இதேவேளை, இந்த விவாதத்தில் உரையாற்றும்போதே இந்த சட்ட மூலத்தை தான் கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்த  முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி. யுமான  சரத் வீரசேகர வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் !

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (13 ) பாராளுமன்றில் இடம்பெற்றது.

இதற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட மூலம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம் விவாதத்திற்கு விடப்படாது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு, கூச்சல் .குழப்பங்களுக்கு மத்தியில் 45 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசிப்புக்கள் மீதான விவாதத்திற்கு இரவு 8 மணிவரை நேரம் சபாநாயகர் அறிவித்த நிலையில் மாலை 4.30 மணிக்கே வாக்கெடுப்பு நடத்தப்பட்டதால் சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

பெறுமதி சேர்வரி (திருத்தச்) சட்டமூலம், நிதிச் சட்டமூலம் ஆகியவை தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்கு ஞாயிற்றுக்கிழமை முழு நாள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் வற் வரியில் புதிதாக இணைக்கப்படும் 97 பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பட்டியலை சபைக்கு சமர்ப்பிக்குமாறு அரசிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதும் அதனை சமர்ப்பிக்காது வற் வரி சட்டமூல விவாதத்தை தொடர்ந்து முன்னெடுத்து சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசு முயற்சித்தது.

என்றாலும் எதிர்க்கட்சிகள் ” கூட்ட நடப்பெண்” கோரிய நிலையில் அதற்கு தேவையான 20 எம்.பி. க்கள் சபையில் இல்லாத நிலையில் பிரதி சபாநாயகர் சபையை ஒத்திவைத்ததால் பெறுதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலம் (வற்)மீதான விவாதம் இடை நடுவில் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இந்த விவாதத்தை திங்கட்கிழமை (11) நடத்தி அவற்றை நிறைவேற்றுவது தொடர்பில் சபைமுதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது. ஒதுக்கீடு (2024) சட்டமூலம் மீதான திங்கட்கிழமை தினத்துக்குரிய குழுநிலை அலுவல்கள் நிறைவுற்றதை தொடர்ந்து ஒழுங்குப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீட்டை விவாதித்து திங்கட்கிழமையே நிறைவேற்றுவதற்கான பிரேரணையை சபை முதல்வர் முன்வைத்தார். அத்துடன், குறைநிரப்புத் தொகை செலவீனத் தலைப்பையும் திங்கட்கிழமையே அங்கீகரிப்பதற்கும் அவர் முன்மொழிந்தார்.

அதற்கமைய, இந்தப் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகோரிக்கை விடுத்தது. இதற்கமைய நேற்று காலை 10 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலம்மற்றும் நிதிச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீட்டை விவாதித்து திங்கட்கிழமையே நிறைவேற்றுவதற்கு ஆதரவாக 92 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்ததுடன்,அதற்கமைய ஆளும் கட்சியால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 51 மேலதிக வாக்குகளால்நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் திங்கட்கிழமை (11) 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கடற்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதம் இடம்பெற்ற நிலையில் அதனுடன் இணைந்ததாக இந்த பிரேரணை மீதான விவாதத்தையும் முன்னெடுக்க சபாநாயகர் முயற்சித்தார்.

எனினும் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தவே ”சரி அப்படியானால் வரவு செலவுத்திட்ட திங்கட்கிழமை (11) விவாதம் முடிந்தவுடன் தனியாக விவாதத்திற்கு எடுப்போம். விவாதம் 8 மணியானாலும் விவாதத்தை தொடர்வோம் ”எனக்கூறிய சபாநாயகர் அதற்கு சபையின் அனுமதியும் கோரினார். இதற்கு சபையும் அனுமதி வழங்கியது. எனினும் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கடற்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் அரசு தரப்பினரின் நேரத்தை மட்டுப்படுத்தி எதிர்கட்சியினருக்கான நேரம் வழங்கப்பட்ட நிலையில் இவ்விவாதம் மாலை 4.30 மணிக்கு நிறைவுற்றது.

இதனையடுத்து உடனடியாகவே சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம், நிதிச் சட்டமூலம் ஆகியவை தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்கு எடுக்கப்பட்டு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க உரையாற்றினார்.அவரின் உரை முடிந்தவுடன் அரசு பிரேரணையை நிறைவேற்ற முற்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன் தமது உரைகளுக்கு நேரம் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தின .ஆனால் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் எதிரிக்கட்சிகள் தமது கருத்துக்களை முன்வைத்ததால் திங்கட்கிழமை (11) விவாதம் தேவையில்லையென சபாநாயகர் கூறியதனால் சபையில் கடும் அமளிதுமளி ஏற்பட்டது.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுந்து, சபைமுதல்வர் சுசில் பிரேமஜயந்த இந்த விவாதத்தை நடத்த போதுமான காலத்தை வழங்குவதாக காலையில் சபையில் தெரிவித்தார். அதனாலே நாங்கள் அதற்கு இணங்கினோம். ஆனால் தற்போது விவாதத்துக்கு இடமளிக்காமல் வாக்களிப்புக்கு செல்வது ஜனநாயக விராேத செயலாகும் என்றார்.

இருந்தபோது வாக்களிப்புக்கு செல்ல கோரம் மணியை ஒலிக்கவிடுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். அதன் பிரகாரம் வாக்களிப்பு மாலை 4,45 மணியளவில் இலத்திரணியல் முறையில் இடம்பெற்றது.

அதன் பிரகாரம் பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலம், இரண்டாம் மதிப்பீடு வாக்களிப்புக்கு விடப்பட்ட நிலையில் ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 57 மேலதிக வாக்குகளினால் நிரைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம், மூன்றாம் மதிப்பீடும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆதரவாக 100 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 45 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

வாக்களிப்பில் ஆளும் கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ரோஷான் ரணசிங்க சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் இதேவேளை நிதிச் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

‘கேக்’ விற்ற சிறுவன் பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது; சபையில் ஜனா எம்.பி. ஆதங்கம்

பேக்கரியில் ”கேக் ”விற்ற ஒரு சிறுவன் மாவீரர் தினத்தை காரணம் காட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை   தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான கோவிந்தன் கருணாகரம் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

பாராளுமன்றத்தில்  இன்று (30) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்  சுகாதார அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே இந்த விவகாரத்தை சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மட்டக்களப்பில் கடந்த வாரம் 10 க்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனக்கு தெரிந்த ஒரு சிறுவன் மட்டக்களப்பில் உள்ள பேக்கரியில் வேலை செய்கின்றார். அவர் கடந்த வாரம் கேக் ஒன்றை விற்றுள்ளார். அந்த கேக்கை வாங்கியவர் அதனை கொண்டுபோய் அதில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என பெயர் எழுதியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் குறிப்பிட்ட பேக்கரிக்கு சென்று சி.சி.டிவி கமராவை ஆராய்ந்துள்ளனர். அதில் அந்த சிறுவன் கேக்கை மாத்திரம்தான் கொடுத்துள்ளார். அதில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என எழுதிக்கொடுக்கவில்லை.

ஆனால், அந்த பேக்கரியில் வேலைசெய்த குற்றத்துக்காக அந்த சிறுவன் பயங்கரவாதத்தடை சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்படியே செல்லுமாக  இருந்தால் இந்த நாடு அழிந்து போகும் என்றார்.

வரவு செலவுத் திட்டம் “தம்பி கால்நடை, பேச்சு பல்லக்கு’’ என்பதை நினைவுபடுத்துகிறது – ஜனா எம்.பி

“தம்பி கால்நடை பேச்சு பல்லக்கு” என்பதை போலத்தான் இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அடைய முடியாத இலக்குகளை வரவு செலவு திட்டத்தில் எடுத்துரைத்து நாட்டையும் நாட்டு மக்களையும் கற்பனை உலகில் சஞ்சரிக்க வைத்துள்ளார் எமது நிதி அமைச்சர் என தெரிவித்துள்ளார் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்.

இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மரம் ஓய்வெடுக்க விரும்பினாலும் காற்று ஓய்வெடுக்க விடுவதில்லை என்றார் தோழர் மாவோ. மௌனமாக இருக்கத்தான் நான் முயன்றாலும் காற்று மரத்தை அலைக்கழிப்பதைப்போல இந்த வரவு செலவுத்திட்டம் தொடர்பாக நானும் அலைக்கழிக்கப்படுகின்றேன். இந்தக் காற்றசைவில் நான் இசையாவிட்டால் எம் மக்கள் பிரதிநிதியாக இப் பாராளுமன்றத்தில் இருப்பதில் பயன் என்ன?

இந்த வரவு செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றுவது வழமையான சம்பிரதாய பூர்வமான நிகழ்வேயொழிய, ஆக்க பூர்வமான நிகழ்வொன்றல்ல என்பதையே இந்த வரவுசெலவுத்திட்ட விவாத உரைகள் சுட்டி நிற்கிறது.

ஒரு நாட்டின் வரவு செலவுத்திட்டம் என்பது வெறுமனே இலக்கங்களுக்கும் வார்த்தை ஜாலங்களுக்கும் மட்டுப்பட்டதல்ல. மாறாக நாட்டின் எதிர்காலம் தொடர்பான, நாட்டின் ஆக்கபூர்வமான, அறிவு பூர்வமான, விஞ்ஞான பூர்வமான, அடையக் கூடியதான ஏற்கத் தக்கதான, ஏற்புடைத்தான, முன்மொழிவுகளை எடுத்தியம்பவேண்டும். அது நம்பகத்தன்மைகொண்டதாக இருக்க வேண்டும். வெறுமனே விலைவாசி உயர்வைப் பிரகடனப்படுத்துவதாகவோ, நிவாரணங்களை எடுத்துரைப்பதாகவோ இருக்கக் கூடாது. ஆனால், கடந்த பல தசாப்தங்களாக எம் ஆட்சியாளர்கள். வரவு செலவுத்திட்டத்திற்கு பிழையான வரைவிலக்கணத்தை மக்கள் நம்பும் படி வளர்த்துவிட்டார்கள். அத்தகைய பிழையான வரைவிலக்கணத்துக்குட்பட்ட வரவுசெலவுத்திட்டமே இந்த வரவுசெலவுத்திட்டம் என்பது என்கருத்தாகும்.

ஒரு நாட்டின் வரவு செலவுத்திட்டம் அந்த நாட்டின் அடுத்த வருடத்துக்கான வருமான மூலங்கள் பெறும் வழிகள், பெறத்தக்க மூலகங்கள் ஒவ்வொன்றிலுமிருந்து, பெறத்தக்க தொகைகள் எவ்வளவு வரி வருமானங்களிலிருந்து பெறத்தக்க வருமானங்கள் எவ்வளவு, வெளிநாட்டு உதவிகள் ஊடாக பெறுபவைகள் எவ்வளவு, உள்நாட்டு வருமான மூலங்களிலிருந்து பெறப்படுபவைகள் எவ்வளவு என்று பிற வருமான மூலங்களிலிருந்து பெறுபவற்றை தெளிவாக எடுத்துரைப்பதோடு, நாட்டின் அடுத்த வருட செலவீனங்கள் தொடர்பாக மூலதனச் செலவு மீண்டெழும் செலவு இவையாவும் துறை ரீதியாக அலசி அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்து அதை வெளிக் கொணர வேண்டும். வருமானத்துக்கும் செலவீனத்துக்குமான துண்டுவிழும் தொகை எவ்வளவு. துண்டு விழும் தொகை எவ்வாறு சீர் செய்யப்படும் என்பதெல்லாம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாக வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளில் எடுத்தியம்பப்பட வேண்டும்.

வரவு செலவுத்திட்டம் ஊடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்குகள் எவ்வாறு அடையப்பட வேண்டும். சிற்றினப் பொருளாதாரம் பேரினப் பொருளாதார கொள்கைகள் இக்காலத்தில் எவ்வாறு கையாளப்பட வேண்டும். அவற்றை அடைவதிலுள்ள சவால்கள் சிக்கல்கள், அதை எதிர்நோக்கி மீண்டெழும் திட்டங்கள் யாவும் உள்ளடக்கப்படவேண்டும். அது மட்டுமல்ல அவை நடைமுறைக்கு சாத்தியமானதாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருக்க வேண்டும்.

எமது நிதியமைச்சரால் முன்மொழியப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் உத்தேச வருமான இலக்கு 4ஆயிரத்து 127 பில்லியன் ரூபா, உத்தேச செலவீனம் 6ஆயிரத்து தொள்ளாயிரத்து 78 பில்லியன் ரூபா, வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறை 2ஆயிரத்து எண்ணுற்றி 51 பில்லியன் ரூபா. ஒரு நாட்டின் வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையில் இத்தகையதொரு பாரிய பற்றாக்குறை பொருளாதார அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத தொகையாகவே நான் கருதுகின்றேன். இத்தகைய வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையை வைத்துக் கொண்டு நிதியமைச்சர் முன்மொழிந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின் இலக்குகளை அடைய முடியுமா என்பது தொடர்பாக, எனது கருத்து நமது நாட்டுக்கு அலாவுதீனின் அற்புத விளக்கொன்றே தேவையாகும். அலாவுதீனின் அற்புத விளக்கொன்று இல்லாவிட்டால் இந்த வரவு செலவுத்திட்ட இலக்குகளை எம்மால் அடையும் இயலுமை உள்ளதா என்பதை எனது பொருளியல் அறிவு என்னைக் கேள்விக்குட்படுத்துகிறது.

இந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை எதிர்க்கட்சியினர் விமர்சித்தால் அதைக் காழ்ப்புணர்வு எனக் கூறி கடந்து விடலாம். ஜே.வி.பி. யினர் விமர்சித்தால் ‘ஏக்கத்தமாய் மூ’ எனக் கூறித் தப்பிக்கலாம். தமிழ்த் தேசியக் கட்சிகள் விமர்சித்தால் ‘அற கொட்டியாலா மேக்கத் தமாய் கியனவா’ எனக் கூறிக் கடந்துவிடலாம். ஆனால், வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் முடிந்த கையோடு இந்த வரவு செலவுத்திட்டத்தை எதிர்க் கட்சியினர் விமர்சிக்க முன்னர் அதிகம் விமர்சித்த பிரமுகர்கள் ஆளும் பொது ஜன பெரமுன கட்சியினரே. பொது ஜன பெரமுன கட்சியின் முக்கிய பிரமுகர் நாமல் ராஜபக்ச அவர்கள் இந்த வரவு செலவுத்திட்டமானது பொது ஜன பெரமுன கொள்கைக்கு ஏற்புடையதல்ல என்றார். இது தொடர்பாக நாம் ஆலோசிப்போம் என்றார். அப்படியானால் இந்த வரவு செலவுத்திட்டம் ஆளும் கட்சியினுடைய வரவு செலவுத்திட்டமா இல்லை, ஜனாதிபதி சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டமா?

ஆட்சியாளர்களுக்குள்ளேயே இத்தனை குழறுபடியெனில் எதிர்க்கட்சிகள் எப்படி ஆதரிக்கும் என நிதி அமைச்சரும் ஆளும் கட்சியினரும் எதிர்பார்க்கின்றனர்?

எமது நிதி அமைச்சரே ஜனாதிபதியாகவும் உள்ளார். இந்த நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளில் குறுகிய காலத்தில் கூடிய தடவைகள் பாராளுமன்றத்தில் உரையாற்றியவர் என்ற பெருமைக்குரியவர். அவரது அறிவு, ஞானம், புத்தி கூர்மை, தர்க்க வாதத்திறன், சர்வதேச அறிவு, சட்ட அறிவு பற்றி நான் நன்கு அறிந்தவன். அதை ஏற்றுக் கொள்பவன். ஆனால் அவர் பாடசாலை மாணவர்களுக்கு வகுப்பெடுப்பது போல் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதை மட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ற முறையில் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

எமது ஜனாதிபதி அவர்கள் இன்னும் பழைய புண்ணைப் பிச்சைக்காரன் தோண்டுவதைப்போல வங்குரோத்தான நாட்டை நான் பாரமெடுத்தேன். அழைப்பு விடுத்த எவரும் நாட்டைப் பாரமெடுக்க முன்வராத போது நான் நாட்டைப் பாரமெடுத்தேன். அன்று வரிசை யுகம் இருந்தது. மின்சாரமில்லை. இருண்ட யுகத்துக்குள் நாடு இருந்தது. போதிய மருந்தில்லை. சுகாதாரக் கட்டமைப்பு சீரழிந்திருந்தது என்று இது போல பண்டைக் கதைகள் பேசுவதில் இனிப் பயனில்லை. எவரும் இத்தகைய சவால் மிக்க நிலையில் நாட்டை ஏற்க முன்வராத போது இத்தகைய சவால்களைச் சமாளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான் அரசியலமைப்பின் தேவைப்பாடுகளுக்கு ஏற்ப நீங்கள் ஜனாதிபதி ஆகியுள்ளீர்கள். எனவே இன்று உங்கள் முன்புள்ள முக்கிய கடமை பண்டைப் பழங்கதைகள் பேசுவதல்ல. உங்கள் முன்னுள்ள சவால்களை வெற்றி கொண்டு காட்டுவதேயாகும்.

இன்று நம் நாட்டின் யதார்த்த நிலை ஆளும் கட்சியினரே ஆட்சி மீது அதிருப்தி, எதிர்க்கட்சிகள் ஆட்சி மீது அதிருப்தி, தமிழத் தேசியக் கட்சிகள் ஆட்சி மீது அதிருப்தி, அரச உத்தியோகத்தர்கள், தொழில்சார் நிபுணர்கள் ஆட்சி மீது அதிருப்தி, புத்திஜீவிகள் ஆட்சி மீத அதிருப்தி, பொது மக்கள் ஆட்சி மீது அதிருப்தி, எங்கெங்கு நோக்கினும் அரச கட்டமைப்பில் ஊழல் இதனால் அனைவரும் அதிருப்தி. இப்படி நாட்டில் எட்டுத் திசையும் ஆட்சி மீது அதிருப்தி எனில் எம் நாடு எப்படி வளம் பெறும்.

இப்படியொரு நாட்டில் ஆட்சி மீது சகல பிரிவினரும் அதிருப்தி கொண்டுள்ளார்கள் என்று உரையாற்றும் போது அன்று நான் பாடசாலையில் ஐரோப்பிய வரலாறு கற்ற அனுபவம் ஒன்று ஞாபகம் வருகிறது. அதுவும் உலக வரலாற்றைப் புரட்டிப்போட்ட முக்கிய ஆண்டான 1789ஆம் ஆண்டு எனக்கு ஞாபகம் வருகிறது. அதுதான் மாபெரும் பிரஞ்சியப் புரட்சி. அன்றைய பிரஞ்சியப் புரட்சியை ஆய்வு செய்த வரலாற்றாசிரியர்கள் பிரான்சில் அத்தகைய புரட்சி ஏற்படுவதற்குக் காரணம் அந்த நாட்டின் அனைத்துப் பிரிவினரும் அதிருப்தியில் இருந்தார்கள். அதுதான் புரட்சிக்கான கருவினை விதைத்தது. குறிப்பாக பிரபுக்கள், மேன் மக்கள், மத்திய தர வர்க்கத்தினர், உழைப்பாளர்கள், புத்திஜீவிகள் என்று இவர்கள் மத்தியில் தோன்றிய அதிருப்தியே பிரஞ்சியப் புரட்சிக்கு வழி கோலியது. பிரான்சில் ஏற்றத்தாழ்வு மறைந்து சமத்துவம், சகோதரத்துவம் மிளிர வழி சமைத்தது.

அந்தப் பிரஞ்சுப் புரட்சியின் குழந்தையே மாவீரன் நெப்போலியன். பிரான்ஸ்சின் “அரகலய“விலிருந்து நெப்போலியன் தோன்றியதைப் போல நமது நாட்டின் சகல பிரிவினரதும் அதிருப்தி ஏற்படுத்திய அரகலயவின் குழந்தையாக நீங்கள் ஜனாதிபதியாகியுள்ளீர்கள். இன்னுமொரு புதிய அரகலயவில் நீங்கள் புதையக் கூடாது என்பது என் அவா. உங்கள் புத்தி ஜீவித் தனத்தை சொற்பொழிவுக்குள் மட்டும் மட்டுப்படுத்தாது உங்கள் அறிவு ஞானத்தை, வாத விவாதத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தாது நாட்டின் அபிவிருத்திக்கு அர்ப்பணியுங்கள். நாட்டில் எங்கும் எதிலும் புரையோடிப் போயுள்ள ஊழல்களைக் களைய உங்கள் அறிவு ஞானத்தைப் பயன்படுத்துங்கள். நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வைக் கொண்டுவருவதற்கு உங்கள் அறிவு ஞானத்தைப் பயன்படுத்துங்கள்.

நமது நிதியமைச்சர் வரவு செலவுத்திட்ட விவாதத்தை ஆரம்பிக்கும் போது கௌதம புத்தரின் ‘சம்ஜீவி கதா,” அதாவது கௌதம புத்தர் அவர்களின் சமநிலை வாழ்க்கைச் சூத்திரத்தை எடுத்துரைத்தார். இடையிடையே மக்களின் வாழ்வு இன்பம், துன்பம், இயலுமை, இயலாமை, வறுமை, செல்வம், தொடர்பான பல கௌதம புத்தரின் சூத்திரங்களையும் எடுத்துரைத்தார்.

பாராளுமன்றத்தில் நிதியமைச்சரால் நிகழ்த்தப்பட்ட வரவு செலவுத்திட்ட உரையின் பெரும்பாலான இடங்களில் கௌதம புத்தர் அவர்களின் சூத்திரங்கள், எடுகோளாக மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்டது. அச் சூத்திரங்களின் கருவும் உருவும் கௌதம புத்தரின் ஜீவ அணுவும் இந்து மதத்திலிருந்தே உருவானது. இந்து மதத்தின் கருத்தியலிலிருந்து பெறப்பட்டது வரவு செலவுத்திட்டத்துக்காக கௌதம புத்தர் அவர்களின் சூத்திரங்களை நாடும் நம் ஜனாதிபதி அவர் மூப்பு, பிணி, சாக்காடு கண்டு மக்களின் துன்ப நிவர்த்திக்காக குரல் கொடுத்து, மானிடத்தைப் பேணி, உலக வாழ் உயிர்கள் மீது அவர் கொண்ட கருணையினை தன் பாராளுமன்ற உரையில் என்றாவது வெளிப்படுத்தியிருந்தால் அவர் மீது இன்னும் என் மதிப்பு அதிகரித்திருக்கும்.

இந்த வரவு செலவுத்திட்டம் கடந்த வருட வரவு செலவுத்திட்டத்தின் தொடர்ச்சி. கடந்த வருட வரவு செலவுத்திட்டத்தின் மறு பதிப்பு என்று எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியினர் எடுத்துரைத்துள்ளனர். இது தொடர்பாக எமது நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் அமைச்சர் உரையாற்றும் போது ஆங்கில இலக்கிய வித்தகர் சேக்ஷ்பியர் நூலின் மறுபதிப்பு சிங்கள இலக்கிய வித்தகர் மாட்டின் விக்கிரம சிங்கவின் நூலின் மறுபதிப்பு, எவ்வளவு முக்கியம், எவ்வளவு சிறப்பு அது போலத்தான் இந்த வரவு செலவுத்திட்டமும் கடந்த வரவு செலவுத்திட்டத்தின் மறு பதிப்பென்றால் அத்தகைய நூலாசிரியர்களின் நூல்களின் மறுபதிப்புக்குள்ள பெருமை போல இந்த வரவு செலவுத்திட்ட மறுபதிப்புக்கும் பெருமைதானே என்றுரைத்தார்.

நீதியமைச்சர் அவர்களே வில்லியம் சேக்ஷ்பியர் உலகளாவிய மதிப்புறு படைப்பாளி மார்டின் விக்கிரமசிங்க நம் நாட்டின் மதிப்புறு படைப்பாளி அவர்களது படைப்பொன்றும் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு ஒப்பானதல்ல.

அவற்றின் மறுபதிப்பு மாண்புறுவது, சிறப்புறுவது. ஒரு நாட்டின் வரவு செலவுத்திட்டத்தின் மறுபதிப்பென்பது அந்நாட்டின் நிதி முகாமைத்துவத்தின் நிருவாக கட்டமைப்பின் அரசியல் கொள்கை வகுப்பாளர்களின் ஆட்சியாளர்களின் சீரழிவைக் குறித்து நிற்பது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடைவை தேக்கத்துக்குட்படுத்துவது. நீங்கள் கடந்த கால வரவு செலவுத்திட்டத்தின் மறுபதிப்பாக இந்த வருட வரவு செலவுத்திட்டத்தினை நோக்குவதன் மூலம் இதனை ஏற்றுக் கொள்கின்றீர்களா?

இந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலமான எனது ஒட்டு மொத்த சுருக்கமான கணிப்பு எங்கள் தமிழ் மொழியில் கூறுவார்கள் “தம்பி கால்நடை பேச்சு பல்லக்கு” அது போலத்தான் இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அடைய முடியாத இலக்குகளை எடுத்துரைத்து நாட்டையும் நாட்டு மக்களையும் கற்பனை உலகில் சஞ்சரிக்க வைத்துள்ளார் எமது நிதி அமைச்சர்.

எனக்கு பழைய சிங்கள யாதகக் கதையொன்று இந்த வரவு செலவுத் திட்ட உரையை முடித்து வைக்கும் போது ஞாபகம் வருகிறது.

“ஒரு கொடுங்கோல் மன்னன் ஒரு நாட்டை ஆட்சி புரிந்தானாம். இன்றைய நமது நாட்டு ஆட்சியாளர்கள் போல அவன் சொல்வதே வேதவாக்காகும். ஒரு நாள் அவனுக்கோர் விசித்திரமான ஆசை வந்ததாம் உலகில் எவரும் அணியாத ஆடையொன்றை தான் அணிந்து அரச அவையையும் நாட்டு மக்களையும் மகிழ்விக்க வேண்டுமென்று, இதை மன்னன் அரசவையில் அறிவிக்க அரசவையும் உடனே முரசறைந்து இதுவரை எந்த அரசர்களும் அணியாத ஆடையை நம் மன்னர் அணிய வேண்டும். இதனை ஆடை தயாரிப்பவர்கள் தயாரிக்க வேண்டுமென்று அறிவித்தார்களாம்.

எவருக்குமே இதைத் தயாரிக்க முடியவில்லை. ஆனால், அந் நாட்டிலிருந்த என் போன்ற எதிர்க்கட்சி புத்தி ஜீவி ஆடை தயாரிப்பாளன் அன்று, இல்லாத ஆடையொன்றை எடுத்துச் செல்வது போல் பாவனை செய்து அரண்மனை சென்று அந்த ஆடையை அணிவிப்பது போல் அபிநயம் செய்து, மன்னரே இந்த ஆடை உங்களுக்கு எவ்வளவு அலங்காரமாக இருக்கிறது. இதுவரை எந்த ஒரு மன்னனும் இவ்வாறான ஆடை அணிந்ததில்லை என்று கூற அரசனும் அக மகிழ்வு கொண்டு, தன் அமைச்சர் குழாமிடம் எப்படி இந்த ஆடையென்று கேட்டானாம். அதற்கோ அமைச்சர்கள் ஐயோ அபாரம், அற்புதம் இத்தகைய ஆடையொன்றை நாம் கண்டதில்லை என்று புகழ்ந்தார்களாம். அந்தப் புகழ்ச்சியில் மகிழ்ந்த மன்னன் மக்களுக்கு தன் ஆடையின் மதிப்பைக் காட்ட நகர் வலம் வந்தானாம். மன்னனைப் பற்றியறிந்த மக்களோ அணியாத நிர்வாண ஆடையினை புகழ்ந்து மகிழ்ந்தார்களாம். அப்போது ஓடிவந்த சிறுவன் ஒருவன் ஐயோ! அரசே அம்மணமாக வருகின்றீர்களே! உங்களுக்கு ஆடையில்லையா? என்று தன்னுடையைக் கொடுத்தானாம். அப்போதுதான் மன்னன் தன் அம்மணம் உணர்ந்தானாம். இதுதான் இந்த வரவு செலவுத்திட்டம் மீதான என்பார்வை.

சுற்றியிருப்பவர்கள் அறிவுரை சொல்பவர்கள் பதவி அனுபவிப்போர், பதவிக்காய் காத்திருப்போர், உங்கள் அம்மணத்தைக் காண்பிக்க மாட்டார்கள். நீங்கள் இளைஞர் விவகார அமைச்சராக இருந்த காலத்திலிருந்து இளைஞர் கழக அங்கத்தவராக இருந்து உங்களுடன் பழகியவன், அறிந்தவன் என்ற வகையில் அந்த அரசனின் அம்மணத்தைச் சுட்டிக்காட்டிய சிறுவனாக உங்கள் வரவு செலவுத்திட்டத்தின் அம்மணத்தை விமர்சிக்கின்றேன். இது விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டது. நம் நாடு தொடர்பானது.

இப்போது எனக்கு பிரபலமான சினிமாப் பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது. காதலியை நோக்கி காதலன் பாடுகின்றான். உன்னைவிட்டால் யாருமில்லை என் கண்மணியே என் கையணைக்க என்று.

எம் நாட்டை நினைத்து இன்றைய நிலையில் நான் பாடுகின்றேன் உங்களை நோக்கி, உம்மைவிட்டால் யாருமில்லை எம் நாட்டை இன்று மீட்பதற்கென்று. மீட்பீர்களா? மீட்பீர்கள் என்ற நம்பிக்கையில் என்னுரையை முடிக்கின்றேன் என்றார்.