பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயார்- கோப் குழு தலைவர்

எதிர்க்கட்சியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை தான் நிராகரிப்பதாகவும் இது குறித்து சபாநாயகருக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாகவும் கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார இன்று பாராளுமன்றத்தில் கூறினார்.

பாராளுமன்றத்தில் தான் இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில், தன் மீதும் தன்னுடைய குழுவை சேர்ந்த இருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றசசாட்டுக்களை மறுப்பதாகவும், முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டை விசாரணை செய்வதன் மூலம் அது நிரூபிக்கப்பட்டால் தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தாயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், என் மீது குற்றம் சுமத்திய பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதாரன, குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாக இனம்காணப்பட்டால் அவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார கூறினார்.

Posted in Uncategorized

இலங்கை அரசாங்கத்தின் புதிய பட்ஜெட் ஒரு அழகான காகித பூ போன்றது – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள பட்ஜட் என்பது  பார்வைக்கு நன்றாகவும் அழகாக இருந்தாலும் அது எங்களுடைய மக்களை சென்றடையுமா? ஒழுங்காக நடைமுறைக்கு வருமா போன்ற பல்வேறு கேள்விகள் எங்கள் மத்தியில் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை (17) மன்னார் ரெலோ அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்னை பொருத்த மட்டில் வரவு செலவு திட்டம் என்பது இப்போது வாசிக்கப்பட்டிருக்கிறது அதிலே சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் அரச ஊழியர்களுக்கு விவசாயிகளுக்கு மீனவர்களுக்கு ஒட்டுமொத்தமாக  எல்லாருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அடுத்த முக்கியமான விடயம் மாகாண சபைகள் பல்கலைக்கழகங்களை உருவாக்கலாம் என்ற விடயமும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இது ஒரு மிகச் சிறந்த  தீர்மானம். ஆனால் இது ஒரு காகித பூவாகத்தான் நான் பார்கின்றேன்.

ஏன் என்றால்  பொருளாதார ரீதியிலே பின்தங்கி இருக்கிற ஒரு நாட்டிலே இந்த பத்தாயிரம் கொடுப்பனவு என்பதை பார்க்கின்ற போது வரி விதிப்பு என்பது ஜனவரி மாதமே வர இருக்கிறது ஆகவே அவர்களுடைய சம்பள உயர்வு என்பது நான் நினைக்கின்றேன் மார்ச் மாதத்துக்கு பின்னரே கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது ஆகவே இந்த வரியை கட்டுவதற்கு இந்த பத்தாயிரம் ரூபாய்க்கு மேலே செலுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மேலும் மாகாண சபை தேர்தல் நடைபெறவில்லை மாகாண சபைகளுக்களுக்கு  பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான அதிகாரம் தொடர்பில்  சொல்லப்பட்டிருக்கின்றது.

காணாமல் போன உறவுகளுக்கு  கொடுக்கின்ற தொகை உயர்த்தப்பட்டிருக்கின்றது என்று அன்றைக்கு ஜனாதிபதி வாசித்தார் என்னை பொருத்தமட்டிலே அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனென்றால் அந்த மக்கள்   போரிலே தங்களுடைய உறவுகளை கண்முன்னாலே ஒப்படைத்து நியாயம் கேட்கின்ற,பல வருடங்களாக போராடிக்கொண்டு இருக்கின்ற மக்களாக இருக்கிறார்கள்.

அந்த மக்களின் பிரச்சினைகளை நிவாரணத்தின் மூலம் நிவர்த்தி செய்யலாம் என்பது  ஏற்றுக்கொள்ள முடியாது ஆகவே சலுகைகள் என்பது என்னும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதாற்கான வாய்ப்புகள் என்னை பொருத்தவரை குறைவாக தான் இருக்கின்றது.

அந்தந்த நேரத்திலே வாசிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்ற போது முக்கியமாக விவசாயிகளுக்கு மீனவர்களுக்கு மக்களுக்கு இன்னும் அரசு ஊழியர்களுக்கு இப்படியான சலுகைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பட்சத்தில் நாங்கள் அதை வரவேற்க முடியும்.

அது நடைமுறைபடுத்தும் வரையில் எங்களா கருத்துக்கள் தெரிவிக்க முடியாது இருப்பினும் என்னை பொருத்தவரையில் இந்த வரவு செலவு திட்டம் என்பது என்னை   பார்வைக்கு நன்றாக இருந்தாலும் அழகாக இருந்தாலும் அது எங்கள் மக்களை சென்றடையுமா அல்லது இந்த பத்தாயிரம் வரிகட்டுவதற்கே சரியாகிவிடுமா என்ற கேள்விகள் இருப்பதாகவும் மொத்ததில் இந்த பட்ஜட் ஒரு அழகான காகித பூ மாத்திரமே என அவர் தெரிவித்துள்ளார்.

அதிருப்தியளிக்கும் கோப் தலைவரின் செயற்பாடுகள்; பதில் தலைவரை நியமிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

கோப் குழுவின் தலைவர் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை. ஆகவே கிரிக்கெட் தொடர்பான விசாரணைகள் கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தலைமையில் முன்னெடுக்கப்படுமாயின் கோப் குழுவில் நாங்கள் பங்குப்பற்ற போவதில்லை. ஆகவே உரிய தீர்மானத்தை எடுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

கோப் குழுவின் தலைவரின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன. ஆகவே கிரிக்கெட் சபை தொடர்பான விசாரணைகளை அவர் தலைமையில் முன்னெடுப்பது முறையற்றது. பதில் தலைவரை நியமியுங்கள் என எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்கள். முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உரிய தீர்மானம் எடுப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற அமர்வின் போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் செயற்பாடுகளை சுட்டிக்காட்டி அவருக்கு எதிரான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார உரையாற்றுகையில், பாராளுமன்ற குழுக்களில் கோப் குழு கௌரவமானது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழுவுக்கு ஒருமுறை நான் முன்னறிவிப்பு இல்லாமல் சென்றதால் அவர் என்னை குழுவில் கலந்துக் கொள்ள அனுமதிக்கவில்லை. அனுமதி பெற்றுக்கொண்டதன் பின்னர் குழு நடவடிக்கையில் கலந்துக்கொள்ளுமாறு உறுதியாக அறிவித்தார்.ஆனால் தற்போது பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையிலான கோப் குழுவுக்கு வருபவர்கள் யார் என்று தெரியவில்லை.

கோப் குழுவின் நடவடிக்கைகளில் கலந்துக் கொள்ள ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் கோப் குழுவின் தலைவரின் ஊடக செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.கோப் குழுவின் கௌரவத்தை பாதுகாப்பதை விடுத்து பேராசிரியர் ரஞ்சித் பண்டார கோப் குழுவின் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு நிறுவனங்களுடன் மோசடி செய்கிறார். ஆகவே இவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கோப் குழுவின் தலைவரது செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிடுகிறோம்.கிரிக்கெட் விவகாரம் தொடர்பில் கோப் குழுவில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தலைமையில் முன்னெடுப்பதை நிறுத்தி மாற்று தீர்மானங்களை முன்னெடுங்கள் என்பதை வலியுறுத்துகிறேன் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோப் குழுவின் தலைவர் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை.ஆகவே கிரிக்கெட் தொடர்பான விசாரணைகளை கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தலைமையில் முன்னெடுக்கப்படுமாயின் கோப் குழுவில் நாங்கள் பங்குப்பற்ற போவதில்லை.ஆகவே உரிய தீர்மானத்தை எடுங்கள் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல இவ்வாறான பிரச்சினைகள் தோற்றம் பெறும் என்பதால் தான் கோப் மற்றும் கோபா உள்ளிட்ட முக்கிய குழுக்களின் தலைமைத்துவ பதிவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குங்கள் என்று வலியுறுத்தினேன். மக்கள் போராட்டத்துக்கு பயந்து நீங்கள் ( சபாநாயகரை நோக்கி) அப்போது அதற்கு இணக்கம் தெரிவித்தீர்கள். போராட்டம் முடிவடைந்ததன் பின்னர் வழங்கிய வாக்குறுதியை மறந்து விட்டீர்கள். இதுவே உண்மை என்றார்.

கோப் குழு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு உரிய தீர்மானத்தை அறிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

வடக்கு கிழக்கில் இடம்பெற்றது இன அழிப்பு என இலங்கை அரசு ஒப்புதல் வாக்குமூலம் – சபையில் ஜனா எம்.பி

ஹாசாவில் இஸ்ரேல் நடத்தும் மனித உரிமை மீறும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முரணான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் மேற்குலகம் எமது நாட்டின் மீது மட்டும் மனித உரிமை தொடர்பான பிரச்சினைகளை கேள்விக்குட்படுத்தும் காரணம் என்ன? என ஜனாதிபதி அண்மையில் கோரியதன் மூலம் இன்று ஹாசாவில் இஸ்ரேல் செய்துவரும் இன அழிப்பையே அன்று நாங்களும் வடகிழக்கில் செய்தோம். இன்று இஸ்ரேலை ஆதரிக்கும் மேற்குலக்கு அன்று நாம் செய்தவற்றைக் கண்டிப்பதற்கு தார்மீக உரிமை இல்லை என மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டுக்குக் கிடைத்துள்ள கடல் வளம் உலகில் எந்த நாட்டுக்கும் கிடையாதது. எமது கடற் பரப்பு கடல் வாழ் உயிரினங்கள் வளர்வதற்கேற்ற தட்ப வெப்ப சூழ்நிலை கொண்டது. எமது கடற்கரையைச் சுற்றி கடல்வாழ் உயிரினம் வாழ்வதற்கேற்ற கண்ட மேடையும் உள்ளது. கடல் சூழ்ந்த நாடுகள் அனைத்திலுமே இத்தகைய ஒரு பௌதீகச் சூழல் இருப்பதில்லை. உலகில் எந்த நாட்டுக்கும் கிடையாத நன்னீர் வளமும் எமது நாட்டுக்குக் கிடைத்திருப்பது எமக்குக் கிடைத்த பெரும் பொக்கிசமாகும். இவ் வளங்களை நாம் முறையாகப் பயன்படுத்துகின்றோமா? இவ் வளங்களின் பயன்பாடு மூலம் எமது நாடு வளம் பெறுகிறதா? என்று எம்மை நாமே வினாவினால் வருகின்ற விடை பூச்சியமே.

இந்த வளம் மாத்திரமல்ல இது போன்ற எல்லா வளமும் நிரம்பிய நாடு எமது நாடு விவசாயத்துறையை எடுத்துக் கொண்டால் நெல் உற்பத்தியில் தன்நிறைவு கண்ட நாடு. இதற்கு முதல் கால்கோளிட்டவன் குளம் தொட்டு வளம் பெருக்கிய பராக்கிரமபாகு மன்னன். ஆனால், இன்று அரிசியை இறக்குமதி செய்யவேண்டிய நிலை எமக்கு, பண்ணை விவசாயம் செய்து விலங்கு வேளாண்மையில் தன்நிறைவு காணவேண்டிய நாம் இன்று விலங்கு உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்யவேண்டிய அவலம். முட்டையைக் கூட அயல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய பரிதாபம் எமக்கு. இவை யாவற்றுக்கும் காரணம் என்ன? ஊழலும் மக்கள் நலன் கருதாத அரசுமே இதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

Fisheries and Aquatic Resources Act Ni ik 1996 சட்டம் அதற்குக் காலத்துக்குக் காலம் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் துறைசார் அமைச்சு மூலம் வெளியிடப்பட்ட வர்த்தமானி வெளியீடுகள் துறைசார் அமைச்சின் மூலம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மூலம் இதுவரை நாம் அடைந்த பயன் என்ன என்ற கேள்விக்குறியோடு இன்று இச் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தமும் ஏதேனும் பயனை எமது நாட்டுக்கும் மக்களுக்கும் தந்துவிடுமா.? அவ்வாறு அத்தகைய சட்டங்கள் மூலம் எம் மக்கள் உரிய பயன் பெறுவதற்குரிய இயலுமையை இந்த அமைச்சும் இந்த அரசாங்கமும் கொண்டிருக்கிறதா என்ற ஐயம் எனக்கு இன்னும் உள்ளது. எனது சிந்தனை எதிர்மறையாக உள்ளது என யாரும் நினைக்க வேண்டாம். எமது நாட்டின் கடந்த கால அனுபவம் என்னை அவ்வாறு நினைக்கத் தூண்டுகிறது.

அங்கு இங்கு எங்கும் போக வேண்டாம். ஆகக் குறைந்தது எமது அண்மையிலிருக்கும் மாலைதீவிலிருந்து இவ்விடயங்கள் தொடர்பாக நாம் ஏன் பாடங்களைக் கற்றுக் கொள்ளக்கூடாது. குறைந்த பட்சம் வட கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளையாவது, நன்னீர் வளங்களையாவது வட கிழக்கு மக்கள் முறையாகப் பயன்படுத்த அனுமதித்தால் கூட நாட்டின் முழுத் தேவையை இல்லாவிட்டாலும் இவ்வளங்கள் தொடர்பான முக்கால் வாசித் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய தைரியமும் மனத்திடமும் இயலுமையும் வட கிழக்கு மக்களிடமுண்டு. ஆனால் இவை தொடர்பான வட கிழக்கு வளங்கள் யாவும் தென்னிலங்கையாலும் அயல் நாடுகளாலும் கபளீகரம் செய்யப்படுகிறது. இதற்குரிய நிவாரணங்களை எம் மக்கள் எமது அரசியலமைப்பு வழங்கிய உரிமைகளுக்கமைவாக எடுத்துக்காட்டினால் அவர்கள் பயங்கரவாதிகள், அவர்கள் பிரிவினைவாதிகள் எனக் கருதுவதே எமது நாட்டின் வரலாறு. இதற்கான தண்டனைகளை அனுபவிப்பதே எமது வட கிழக்கு மக்களின் தலைவிதி.

கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. இதற்கான நல்லதொரு உதாரணம் கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாததும் மாறி மாறி வந்த ஆட்சியாளர்களினதும் மாறி மாறிப் பதவியிலிருந்த அரச உயர் அதிகாரிகளினதும் மறைமுக ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் அளவீடு செய்து வர்த்தமானி மூலம் மயிலத்தமடு – மாதவணையில் மேய்ச்சல் நிலமாக ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கு இன்று நடைபெறும் சம்பவங்கள் தகுந்த உதாரணங்களாகும்.

எமது மாவட்ட மக்கள் இந் நாட்டின் தேசிய உற்பத்திக்கு பங்களிப்பதற்கு இந்த மேய்ச்சல் தரை நிலம் முக்கியமானதாகும். பண்ணை உற்பத்தியில் பாரிய பங்களிப்பினை நல்குவதற்கும் இந்த மேய்ச்சல் தரை நிலம் முக்கியமானதாகும். தசாப்தங்களுக்கு மேலாக இம் மேய்ச்சல் தரையால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு மட்டங்களில் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண எடுத்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கா நிலையில் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் அதன் தலைவர்கள் அனைவரும் இணைந்து எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களோடு உயர் மட்டப் பேச்சுகளை அண்மையில் நடத்தினர்.

எமது ஜனாதிபதியும் இது தொடர்பாக எமது மக்களுக்குச் சாதகமான பதிலைக் கூறியதாக ஓரளவுக்கு மகிழ்ந்தோம் என்பது உண்மைதான். ஆனால், இவ்வளவும் நடந்த பின்னரும் எங்கிருந்தோ கிழக்கு மாகாணத்திற்கு ஆளுநராக வந்த முன்னாள் ஆளுநரும் மட்;டக்களப்பு அடாவடிப் பிக்குவும் புத்தர் சிலை வைத்து எம் மக்களின் வாழ்வுரிமையைக் கேள்விக்குட்படுத்தியுள்ளார்கள். இந்த விபரம் தற்போது ஏறாவூர் நீதிமன்றத்தில் உள்ளதாகவும் அறிகின்றேன்.

கடந்த மாதம் ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்புக்கு வருகை தந்தபோது மேய்ச்சல் தரைப்பிரச்சினை தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்ப்பதற்காக எமது அரசியலமைப்பின் 14ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளின் கீழ் தமது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். இது ஒன்றும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியோ, அல்லது அறகலய போன்ற ஆட்சியாளர்களை விரட்டும் போராட்டமோ அல்ல. பாதிக்கப்பட்ட மக்கள் ஜனாதிபதி அவர்கள் பயணிக்கும் போது வீதியின் இரு மருங்கிலுமிருந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த இருந்தனர். இதற்காக ஜனாதிபதி தனது பயணப்பாதையை மாற்றவேண்டிய தேவை அங்கு எழவில்லை. ஆனால், அன்று நடந்தது என்ன? ஜனாதிபதி தனது பயணப் பாதையை மாற்றினார். அரசியலமைப்பில் வழங்கப்பட்ட உரிமைகளின் அடிப்படையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்திய சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் இன்று நீதிமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வழக்கினை எதிர் நோக்கியுள்ளனர். இதில் இன்னும் ஓர் விநோதம் என்னவென்றால் அன்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாத பல தமிழ் அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கும் எதிராக இவ்விடயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கினைத் தொடுத்து தமது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பாரிய பொறுப்பை எமது பொலிஸ் படையினர் நிறைவேற்றியுள்ளனர்.

நான் மேலும் கூறுவதென்னவென்னால் வட கிழக்கில் பணியாற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு வருடத்திலும் குறிப்பிட்ட சில மாதங்கள் தெரியும். அம் மாதங்களில் குறிப்பிட்ட சில திகதிகளும் தெரியும். வட கிழக்கில் குறிப்பிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பிட்ட சில அரசியல் கட்சிப் பிரமுகர்கள், குறிப்பிட்ட சில சமூக ஆர்வலர்களது பெயர்களையும் பட்டியலோடு வைத்திருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் அந்த மாதங்களை அந்தத் திகதிகளை மறந்தாலும் எமது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்க நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணிப் பாதுகாக்கும் பொலிசார் அந்த மாதங்களை, திகதிகளை ஞாபகப்படுத்திவிடுவார்கள். இதற்காக முன்கூட்டியே கலந்து கொள்ள நினைக்காதவர்களின் பெயரிலும் கூட தடையுத்தரவினைப் பெற்றுவிடுவார்கள். எனக்குக் கூட இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது.

நீதிமன்றத் தடையுத்தரவை மீறி நினைவேந்தல் நிகழ்வொன்றில் பங்குபற்றியதாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் எனக்கு எதிராக கொக்கட்டிச்சோலைப் பொலிசாரால் வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தனைக்கும் எனக்கு எவ்வித நீதிமன்றத் தடையுத்தரவும் கிடைக்கப்பெறவில்லை. இருந்தாலும் என்மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதனை சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயாராகவேயுள்ளேன்.

ஆயுதப் போராளியாக இருந்து ஜனநாயக வழிமுறைக்கு வந்த பின்னர் எந்த ஒரு காலத்திலும், எந்த ஒரு இடத்திலும் ஏன், பாராளுமன்றத்தில் கூட எனது கருத்துக்களை, எனது முரண்பாடுகளை, எனது எதிர்ப்புக்களை சட்டரீதியாகவே வெளிப்படுத்தி வந்துள்ளேன். ஆனால், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிசார் என் மீதும் எமது மக்கள் மீதும், சட்ட முரணாகவே நடந்து கொள்கின்றனர்.

56 இனக்கலவரம், 77 இனக்கலவரம், 83 இனக்கலவரங்களின் போதெல்லாம் வெளிப்படுத்தப்படாத இன, மத முரண்பாடுகளை வெளிப்படுத்தும் விதமாக பகிரங்க வெளியில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தமிழ் மக்களை வெட்டி, வெட்டிக் கொல்வேனென்று கருத்து வெளியிட்ட போது, அவர் பொலிசாருடன் மோதும் போது, அவர்களின் சீருடையை பிடித்து அசிங்கப்படுத்தும் போது, அவர்களுடைய தொப்பியைக் கழற்றி வீசும் போது, அதனை அமைதியாக ஏற்றுக் கொண்ட பொலிசார் எமது அரசியலமைப்பின் 12ஆவது பிரிவின் முதலாம் உப பிரிவு வழங்கிய சட்டத்தின் முன் சகலரும் சமம் என்ற கோட்பாட்டை அப்பட்டமாக மீறியுள்ளனர். இப்படியொரு செயற்பாட்டை ஒரு இந்து மதகுரு, கிறிஸ்தவ மதகுரு, ஒரு இஸ்லாமிய மதகுரு செய்திருந்தால் இதே மௌனத்தை எமது பொலிசார் கடைப்பிடிப்பார்களா?

இதேவேளை, மட்டக்களப்பு சித்தாண்டியில் மேய்ச்சற்தரைப் பிரச்சனைக்காக இடம்பெறும் பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வந்து அகிம்சை ரீதியாக போராட்டமொன்றை நடத்தினார்கள். ஆனால், இந்தப் பிக்கு செய்யும் அடாவடிகளை பார்த்துக் கொண்டிருக்கும் பொலிசார் அமைதியான ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மாணவர்களை சிறைப்பிடித்து நீதிமன்றத்தின் முன்நிறுத்தி சிறையில் அடைக்கின்ற கைங்கரியத்தினையே செய்துள்ளனர். இவ்வாறாயின் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாடு இந்த நாட்டில் இருக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.

எமது நாட்டை இன்று ஆள்வது யார்? ஆளும் கட்சிக்கே தாம் தான் ஆளும்கட்சியென்று புரியாத அவல நிலை. இன்று நம் நாட்டின் ஜனாதிபதியை விரட்டுவோம், வரவு செலவுத்திட்டத்தைத் தோற்கடிப்போம் என்று எதிர்க்கட்சிகள் கோசமிட்ட காலம் போய் ஆளும் கட்சியினரே இவ்வாறு கோசமெழுப்புவது சாதாரணமாகியுள்ளது.

எமது ஜனாதிபதி அவர்கள் ஒரிரு நாட்களின் முன் மேற்குலக நாடுகளுக்கு அறைகூவல் ஒன்று விடுத்தார். ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை போன்றவற்றுக்கு மேற்குலக நாடுகள் வரும் போது பரிசுத்தமான கரங்களுடன் வரவேண்டுமென்றுரைத்தார். எமது ஜனாதிபதி அவர்களது புலமை, திறமை தொடர்பாக எனக்கு மதிப்புண்டு. ஆனால், இந்தக் கருத்தினை வெளியிடும் போது அவர் மறைமுகமாக எமது நாட்டில் நடைபெற்ற இனப் படுகொலையினையும், இனச் சுத்திகரிப்பினையும் ஏற்றுக் கொள்கின்றார் என்று கருதக் கூடியதாக இருக்கின்றது. ஹாசா யுத்தத்தில் இஸ்ரேல் நடத்தும் மனாதாபிமானமற்ற மனித உரிமை மீறும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முரணான நடவடிக்கைகளுக்கு தமது ஆதரவினை நல்கும் மேற்குலகம் எமது நாட்டின் மீது மட்டும் மனித உரிமை தொடர்பான பிரச்சினைகளை கேள்விக்குட்படுத்தும் காரணம் என்ன? எனக் கோரியதன் மூலம் இன்று ஹாசாவில் இஸ்ரேல் செய்துவரும் இன அழிப்பையே அன்று நாங்களும் வடக்கு கிழக்கில் செய்தோம். இன்று இஸ்ரேலை ஆதரிக்கும் நீங்கள் அன்று நாம் செய்த செயலை கண்டிப்பதற்கு உங்களுக்கு தார்மீக உரிமை இல்லை என குறிப்பிடுவதன் மூலம் இஸ்ரேலும் நாமும் ஒன்றையே செய்தோம் என மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார்.

எமது நாட்டில் சட்டங்கள் ஆக்கப்படுகிறது. காலத்துக்கு ஏற்ப சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. ஏற்றுக் கொள்ளக்கூடிய பாராட்டப்பட வேண்டிய விடயங்களே இவை. ஆனால், இவை மட்டும் போதாது. இயற்றப்படும், திருத்தப்படும் சட்டங்கள் இன, மத, மொழி பேதமின்றி பிரதேச வேறுபாடுகளின்றி அரசாங்கப் பிரமுகர்கள், எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் என்ற வேறுபாடுகளின்றி பௌத்த, இந்து, கிறிஸ்த்தவ, இஸ்லாமிய மதகுருக்கள் என்று வேறுபாடின்றி நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் நாட்டின் ஒற்றுமைக்கும், சமாதான, சகவாழ்வுக்கும் சவாலாக இருக்கும் அனைவர் மீதும் சட்டம் சமமாக பிரயோகிக்கப்படவேண்டும். அப்போது மட்டுமே எம் நாட்டில் சட்ட ஆட்சி நிலவும் இல்லையெனில் இன்றைய நிலைமை ஒரு தொடர்கதையாகவே முடியும். இது இன்று சமர்ப்பிக்கப்படும் கடற்றொழில் சட்டமூலத்துக்கும் பொருத்தமாகும்.

இன்றைய தேவை கருதி ஒரு முக்கிய விடயம் ஒன்றை இந்த உயரிய சபையின் கவனத்தின் பால் ஈர்க்க விளைகின்றேன். எமது நாட்டில் பொருட்களின் விலைவாசிகள் நினைக்க முடியாத அளவுக்கு உயர்வடைந்து வருகின்றது. மக்கள் வாழ முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்ணுவதே சிரமம் என்னும் நிலை இன்னும் ஓரிரு நாட்களில் ஏற்படினும் ஆச்சரியமில்லை. உயர் வருமானம் பெறும் அரச உத்தியோகத்தர்கள், நிபுணத்துவ உத்தியோகத்தர்கள், தொழில் சார் வல்லுனர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றார்கள். சாதாரண மக்கள் மின்சாரம், எரிபொருள், எரிவாயு என்பவற்றை பாவிக்க முடியாத அளவுக்கு இவற்றின் விலையேற்றம் உள்ளது.

ஓன்றிணைந்த தொழிற் சங்கங்கள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். குறைந்த பட்சம் 20 ஆயிரம் ரூபாவாவது தேவை என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது. இன்றைய வாழ்க்கைச் செலவுக்கு 20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு போதுமானதென நியாயமாகச் சிந்திக்கும் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், இதையாவது அரச ஊழியர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற முறையான நிதி நிருவாக முகாமைத்துவத்தினை ஏற்படுத்த வேண்டும். அரச உயர் மட்டத்தில் நிலவும் ஊழல்கள் முற்றாக இல்லாமலாக்கப்படவேண்டும்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் எரிபொருட்கள், எரிவாயு, அத்தியாவசியப் பொருட்கள் இருந்த விலைகளை நாம் அறிவோம் அரச ஊழியர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த சம்பளத்தையே தற்போதும் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். தற்போது விலைவாசிகள் மூன்று மடங்கு உயர்ந்திருக்கின்றது. உண்மையிலேயே அவர்கள் தங்கள் சம்பளத்தில் மூன்று மடங்கு உயர்வினைக் கேட்க வேண்டிய நிலையில் வெறுமனே இருபதாயிரம் சம்பள உயர்;வையே கேட்கின்றார்கள். எனவே எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அண்மையில் தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக அந்த இறக்குமதியாளர் நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய கூற்று எமது நாட்டில் ஊழல் இன்னமும் எந்த அளவுக்கு வேரோடி உள்ளது என்பதற்கு தக்க உதாரணமாகும். இவற்றைக் கருத்தில் கொண்டு எமது மக்களின் எதிர்கால வாழ்வின் சுபீட்சத்துக்காக சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்டம் வழி வகுக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.

நவம்பர் 13 பாராளுமன்றில் பட்ஜெட் சமர்ப்பிப்பு

2024 ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகள் மீதான விவாதம், 26 நாட்களுக்கு இம்முறை நடைபெறவுள்ளது. வரவுசெலவுத்திட்ட உரை நவம்பர் 13 திங்கட்கிழமை மதியம் 12  மணிக்கு நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவினால்   நிகழ்த்தப்படும்

அதற்கு முன்னர்,  பாராளுமன்றம் நவம்பர் 7 முதல் 10 வரை கூடும் என  பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் 2023 ஒக்டோபர் 19 ஆம் திகதி பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடிய போதே இது தொடர்பில் இணக்கம் காணப்பட்டது.

 வரவுசெலவுத்திட்ட விவாதம்

எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், 2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாம் மதிப்பீடு எனப்படும் ‘வரவுசெலவுத்திட்ட உரை’ பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்படவுள்ளது. அதன்பின்னர், நவம்பர் 14 முதல் 21 வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 7 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (வரவுசெலவுத்திட்ட) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அத்துடன், வரவுசெலவுத்திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து, குழுநிலை விவாதம் நவம்பர் 22 ஆம் திகதி புதன்கிழமை முதல் டிசெம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 19 நாட்கள் இடம்பெறவுள்ளது. அதற்கமைய, 2024 நியதியாண்டுக்கான வரவு-செலவுத்திட்ட மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசெம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் போது ஒவ்வொரு நாளும் மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை விவாதம் இடம்பெறவுள்ளதுடன், வாக்கெடுப்பு இடம்பெறும் நாட்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் பி.ப. 6.00 மணி முதல் பி.ப. 6.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதன விவாதம் இடம்பெறும்.

ஜனாதிபதித் தேர்தல்,நாடாளுமன்றத் தேர்தல்களை ஒத்தி வைக்க முடியாது – டியூ குணசேகர

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன எனத் தகவல்கள் வெளியாகும் நிலையில், இவ்விரு தேர்தல்களையும் ஒத்திவைக்க முடியாது என்று இலங்கை கம்யூனிஸ் கட்சி தலைவரான டியூ குணசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு அரசமைப்பில் இடமுள்ளது. ஆனால், அதனை ஒத்திவைப்பதற்கு இடமில்லை. அதேபோல் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கும் அரசமைப்பில் இடமில்லை. ஆளுந்தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடினால்கூட அதற்கான வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்றே நம்புகின்றேன்.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் அரசமைப்புக்கு அப்பால் சென்று, சிற்சில சட்ட ஏற்பாடுகளைப் பயன்படுத்தி ஒத்திவைக்கப்பட்டன. இதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலை பிற்போட நிறைவேற்று அதிகாரத்துக்கு அதிகாரம் இல்லை.” – என்றார்.

அமைச்சரவை மாற்றத்தில் மகிழ்ச்சியில்லை‌ : பொதுஜன பெரமுன!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (23) அமைச்சரவையில் மாற்றம் செய்தார்.

03 அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் நேற்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

எவ்வாறாயினும், இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றத்தினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கவலையடைந்துள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் நாயகம் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியின் தீர்மானம் ஜனாதிபதி எடுத்த தவறான முடிவாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை வழிநடத்தும் பலத்தை பாராளுமன்றத்தின் தலைவருக்கு வழங்குகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த ஆற்றலை வழங்குகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஐந்து பேர் மாத்திரமே உள்ளனர். ஆனால் இங்கிருந்து ஒரு அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய அரச அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமை எமக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. அது தவறு. தவறை தவறு என்று சொல்ல நாங்கள் பயப்படுவதில்லை. ஜனாதிபதி கூட தவறு செய்தால் தவறுதான்.

இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீரவும், சுகாதார அமைச்சராக டொக்டர் ரமேஷ் பத்திரனவும் நியமிக்கப்பட்டனர்.

மேலும், தற்போது நிதி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டியவை, அரச பெருந்தோட்ட முயற்சியாண்மை மறுசீரமைப்பு அமைச்சரவை அல்லாத அமைச்சராகவும் ஜனாதிபதி நியமித்தார்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் ஐ.நா பரிந்துரைகள் உள்வாங்கப்படவில்லை; நிபுணர்கள் கவலை

இலங்கை அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் நாங்கள் முன்வைத்த பரிந்துரைகள் உள்வாங்கப்படவில்லை என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டின் மிகவும் கடுமையான பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படும் பலவீனங்களை நிவர்த்தி செய்வதாக காணப்படவில்லை எனவும் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய சட்டம் சர்வதேச தராதரத்தை பூர்த்தி செய்வதாக காணப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கையின் தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச சட்டங்களை மீறுகின்றது அடிப்படை மனித உரிமைகளிற்கான பாதுகாப்பற்றது மற்றும் சுயாதீன மேற்பார்வையற்றது என பலவருடங்களாக ஐநா நிபுணர்களும் சர்வதேச அமைப்புகளும் தெரிவித்து வந்துள்ளன என தெரிவித்துள்ள ஐநா நிபுணர்கள் உத்தேச சட்டமூலம் இந்த குறைபாடுகளிற்கு தீர்வை காணமுயலவில்லை என்பது ஆழ்ந்த கவலைக்குரிய விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பெரும்பான்மையின மக்களின் வாக்குகளுக்காக இனவாத வழியில் பயணிக்கும் ரணில் விக்கிரமசிங்க – வினோ எம்.பி

சிறுபான்மையின மக்களின் வாக்குகள் இனித் தேவையில்லை என்பதையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேசத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

சிங்கள மக்களின் வாக்குகளை கவர்வதற்காக ராஜபக்ஷர்கள் பயணித்த இனவாத வழியில் ஜனாதிபதி பயணிக்கத் தொடங்கியுள்ளார் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) இடம்பெற்ற மூளைசாலிகள் வெளியேற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

22 மில்லியன் சனத்தொகை கொண்ட நாட்டில் ஒரு அரசாங்கம் சீரான அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது என்றால் அது மிகவும் பரிதாபத்துக்கு, அவ்வாறான நாட்டை கேவலத்துக்குரிய நாடாகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது,

அருகிலுள்ள தமிழ்நாட்டை பாருங்கள் சுமார் 76 மில்லியன் மக்கள் வாழ்கின்ற தமிழ்நாட்டில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஒரு நல்லாட்சி நடந்து கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சியை வழங்க முடியும் என்றால் ஏன் இலங்கையில் அது முடியாது?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஜேர்மன் நாட்டு ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் வழங்கியிருந்தார். அந்த நேர்காணலில் அவரின் தொனி எமக்கு பல விடயங்களை தெளிவுப்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில் குண்டு வெடிப்புக்கள் மூலம் ஆட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் கைப்பற்றியதாக சொல்லப்படுகின்றது.

இவ்வளவு காலமும் ரணில் விக்கிரமசிங்கவை சிறுபான்மையின மக்கள் ஒரு வேறுபட்ட கண்ணோட்டத்துடன் பார்த்த நிலைமை இருந்தது.

ஆனால் ஜேர்மன் ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் அவர் ஒட்டு மொத்த சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக, ஆட்சியை பிடிப்பதற்காக பொதுஜன பெரமுனவினர் எப்படி முயன்றார்களோ அதேபோன்று சிறுபான்மையினத்தை விடுத்து,சிறுபான்மையின மக்களின் வாக்குகள் தேவையில்லை ,அவர்கள் தேவையில்லை என்ற நோக்கத்தில் தான் கருத்துக்களை ஆவேசமாக முன்வைத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த நேர்காணலை சிங்கள ஊடகங்கள் வரவேற்றுள்ளன,சிங்கள மக்கள் ஆதரிக்கின்றார்கள். வரவேற்கின்றார்கள்.

கடந்த காலங்களில் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் ஜனாதிபாதியாக தற்போதிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேவைப்பட்டது.

ஆனால் தற்போது தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அவருக்கு தேர்தல் வெற்றியே ஒரே குறிக்கோளாகவுள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ஷ போன்று சிங்கள மக்களின் வாக்குகளைக் கவர அவர் வழங்கியுள்ள இந்த நேர்காணல் மூலம் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் தனக்கு தேவையில்லை என்பதனை வெளிப்படுத்த்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகள் சபை,மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராஜபக்ஷர்களும் கடந்த காலங்களில் இவ்வாறான வழியில் தான் ஆட்சிக்கு வந்தார்கள்.இறுதியில் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளினார்கள்.பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு சிங்கள மக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் தேட அவர் முயற்சிக்கின்றார்.

இலங்கையின் குரங்குகளை சீனா மட்டுமின்றி வேறு நாடுகளும் கோருவதாக விவசாய அமைச்சர் கூறியிருந்தார். ஆகையால் முதலில் இங்குள்ள மனிதக் குரங்குகளை, அரசியல் குரங்குகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் வெளிநாடுகளுக்கு அப்புறப்படுத்த வேண்டும் அப்படி செய்தால்தான் இந்த நாட்டிலுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை காணமுடியும் என்றார்.

மயிலத்தமடு மாதவனை மேயச்சல் தரை தொடர்பில் நீதி கோரி தமிழ் எம்.பிக்கள் நாடாளுமன்றில் போராட்டம்

நாடாளுமன்றத்தில் இன்று (6) தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வினோநோகராதலிங்கம், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சி.சிறிதரன், இராசபுத்திரன் சாணக்கியன், தவராசா கலையரசன், மலையக மக்கள் முன்னணியின் வே.இராதாகிருஸ்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழர் நிலங்களை அழிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் என கோசமெழுப்பியபடி நாடாளுமன்றத்தின் மன்றத்தின் மையப்பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை (6) முற்பகல் 9.30க்கு  குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத்தொடந்து, சபையில் விசேட கூற்றை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான இராசமாணிக்கம் சாணக்கியன்,  மயிலத்தமடு மாதவனை பகுதியில் பண்ணையாளர்கள் முன்னெடுக்கும் போராட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்து ”எமது நிலம் எமக்கு வேண்டும்”, ”எமது வளம் எமக்கு வேண்டும்”, மகாவலி ”அதிகாரசபை கெடுபிடிகளை நிறுத்து” என்று கோசங்களை எழுப்பியும் பதாகையை ஏந்தியவாரும் சபைக்கு நடுவே சென்றார்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய எம்.பிக்களும் அவ்விடத்திற்கு வந்ததுடன் கைகளில் ‘மயிலத்தமடு மக்களுக்கு வேண்டும்’, ‘மகாவலி ஆக்கிரமிப்பை நிறுத்து’ என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு சபாபீடத்திற்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய  பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், உங்கள் பிரச்சினையை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிப்பதாகவும் சபையின் தினப் பணிகளுக்கு இடமளிக்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தார்.

எனினும் அவர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சபை முதல்வரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சபையில் இல்லை. அது தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடலாம் என்று கூறினார். இவ்வேளையில் சபை முதல்வருடன் சாணக்கியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இவ்வேளையில் ஆளும் கட்சி உறுப்பினர் பிரேமநாத் சீ தொலவத்த, சாணக்கியனை நோக்கி கடுமையாக பேசாமல் போய் அமருங்கள் என்று கூச்சலிட்டார். அவரை நோக்கி பதிலளித்த சாணக்கியன். நாங்கள் எங்கள் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் போராடுகின்றோம். தேவையில்லாத விடயத்தில் நீங்கள் தலையிடாது உங்களின் வேலையை பாருங்கள் என்று கூறினார். இதன்போது சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதேவேளை இராஜாங்க அமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தன் சபையில் இருந்ததுடன், அவர் நடப்பவற்றை நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தார்.

அத்துடன் தமிழ் முற்போக்குக் கூட்டணி எம்.பியான வீ.இராதகிருஷ்ணனும் சபை நடுவே சென்று சிறிது நேரம் அவர்களுடன் நின்றுவிட்டு பின்னர் தனது ஆசனத்திற்கு சென்று அமர்ந்துகொண்டார்.

தொடர்ந்தும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சபையின் தினப் பணிகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்றும், ஆசனங்களில் சென்று அமருமாறும் சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் அடிக்கடி வலியுறுத்திய நிலையில், சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் பிரச்சினையை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு தெரிவித்து தீர்வை பெற்றுத்தருவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, அவர்கள்  ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு தமது ஆசனங்களில் சென்று அமர்ந்துகொண்டனர்.