காணி விடுவிப்பு நல்ல விடயம்; மக்கள் அங்கே செல்லும் போது கைது செய்து நீதிமன்றம் அனுப்பக் கூடாது – செல்வம் எம்.பி

மக்களுடைய காணிகள் திட்டமிட்டு அபகரிக்கின்ற சூழ்நிலையிலே விடுவிப்பு என்பது நல்ல விடயமாக பார்க்க கூடியதாக இருக்கின்றது.

இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலொ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (16) இடம்பெற்றிருந்தது. கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்று முல்லைத்தீவிலே காணி விடுவிப்பு சம்மந்தமான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தின் முடிவிலே இடம்பெறும் பிரச்சினைகளை அனுப்ப வேண்டிய தேவை இருக்கின்றபடியால் இன்றைய கூட்டம் இடம்பெற்றிருந்தது.

வனஇலாகா பொறுப்பதிகாரிகள் இங்கே அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்த அடிப்படையில் மாவட்ட செயலகம் கொடுத்த பல இடங்களில் தற்போது சில இடங்கள் விடுவிக்கின்ற முடிவை எட்டியிருக்கின்றன.

அதேபோல் விடுவிக்கப்பட வேண்டிய காணிகளாக இருந்தாலும் இங்கு இருக்கின்ற அதிகாரிகளினால் இயலாத ஒரு நிலை ஏற்படுகின்ற போது அதனை நடுவர் குழுவிற்கு அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எங்களை பொறுத்தமட்டில் இந்த விடயங்கள் நடைமுறைக்கு வர வேண்டும் என்பதனை பெரிதாக எதிர்பார்க்கின்றோம். ஏனென்றால் இது மக்களுடைய காணிகள் ஏற்கனவே திட்டமிட்டு அபகரிக்கின்ற நிலைகள் இருந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையிலே விடுவிப்பு என்பது உண்மையிலே நல்ல விடயமாக பார்க்க கூடியதாக இருக்கின்றது. இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் .

கூட்டம் போட்டு பேசி முடிவுகளை எடுத்ததன் பின் மீண்டும் அந்த மக்கள் அங்கே செல்கின்ற போது கைது செய்து நீதிமன்றத்திற்கு அனுப்புகின்ற செயற்பாடுகள் இருக்க கூடாது என்பது எங்களுடைய எண்ணமாக இருக்கின்றது.

அந்தவகையிலே எடுக்கப்பட்ட தீர்மானங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற விடயத்தை நாங்கள் கோரியிருக்கின்றோம். பல விடயங்களை ஆராய்ந்து உடனுக்குடன் தீர்வுகளை கண்டிருக்கின்றோம். அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஜனாதிபதியிடம் முன்மொழிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஜனாதிபதியிடம் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இன்றையதினம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஐந்து அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்கவை நேரில் சந்தித்து முன்மொழிவுகளை கையளித்தனர்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாங்கள் ஐந்து அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டணியாக மேற்கூறியவை தொடர்பாக உங்கள் Ref PS/PCA/03-iii 2023 ஆகஸ்ட் 2 தேதியிட்ட கடிதத்தை மேற்கோள் காட்டி, எங்கள் கருத்துக்களைப் பின்வருமாறு முன்வைக்க விரும்புகிறோம்.

1. ஏற்கனவே 1988 இல் பாராளுமன்றத்தில் 5/6 பெரும்பான்மையுடன் 13A அரசியலமைப்பில் இணைக்கப்பட்டது.
2. அன்றிலிருந்து நாடு முழுவதிலும் மாகாண சபைகள் நிறுவப்பட்டு, தேர்தல்கள் நடத்தப்பட்டு, தேர்தலை நடத்துவதற்காகக் கலைக்கப் படும் வரை செயல்பட்டன.
3. எனவே ஏற்கனவே இருக்கின்றதானதும் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதையும் நடைமுறைப்படுத்துவதற்கு கருத்துக்களை கோர வேண்டிய அவசியமில்லை.
எவ்வாறாயினும், 13A இன் கீழ் வழங்கப்பட்ட சில மாகாண சபை அதிகாரங்கள் திட்டமிட்ட வகையில் காலத்திற்கு காலம் அவ்வப்போது திரும்பப் பெறப்பட்டன.

மாகாண சபைகளில் இருந்து மீளப் பெறப்பட்ட அவ் அதிகாரங்களை மீண்டும் வழங்கி, காணி, பொலிஸ், நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்களுடன் 13A ஐ அதன் அசல் வடிவில் நடைமுறைப் படுத்த நாங்கள் முன்மொழிகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தீர்வில்லையேல் இந்தியாவின் ஒரு பகுதியாக வடக்கு கிழக்கினை இணைக்க நேரிடும் – செல்வம் எம்.பி.எச்சரிக்கை

தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்றால் வடக்கு கிழக்கினை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும் என கோர வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அதன் மூலமே தமிழர்களின் இறையாண்மையினை பாதுகாக்க முடியும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

சிங்ளவர்கள் தமிழர்களின் இரத்ததினை குடிக்கும் நோக்குடன் மட்டுமே செயற்படுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நாட்டை வலுப்பெறச்செய்ய வேண்டும் என்பதை சிந்திக்காது, தமிழர்களை எவ்வாறு முடக்குவது என்றுதான் அரச தலைவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள் என குறிப்பிட்டார்.

பல வேற்றுமைகள் இருந்தாலும் எமது மக்களுக்காக நாம் ஒற்றுமைப் பட வேண்டும் என்றும் இந்த ஒற்றுமை புலம்பெயர் தேசத்து கட்டமைப்புகளும் ஒன்றுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உதட்டளவில் தேசியம் பேசாமல் அனைவரையும் ஒன்றிணைக்கின்ற செயற்பாட்டை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் செய்யும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

கடற்படையில் சமையல்காரராக இருந்த சரத் வீரசேகர மனநோயாளி ; தமிழினத்தை சீண்ட வேண்டாமென எச்சரிக்கின்றோம் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

கடற்படையில் சமையல்காரராக இருந்த சரத் வீரசேகர மனநோயாளியாகி விட்டார்.எமது மக்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல இனவாதம் கக்குவதை சரத் வீரசேகர தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் எமது மக்கள் கிளர்தெழுவார்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற வங்கித்தொழில் விசேட ஏற்பாடுகள் சட்ட மூல விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஒரு மனநோயாளி .அவர் கடற்படையில் சமையல்காரராகத்தான் இருந்துள்ளார்.

போர்க்காலத்தில் தொடர்ந்தும் அவரை சமையலறையில்  வைத்திருந்ததன் காரணமாக ஒரு மனநோயாளி போல் தற்போது செயற்படுகின்றார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இடமளிக்க போவதில்லை  என்கிறார்

அதே போல் சமஸ்டியை வழங்க முடியாது என்கின்றார். குருந்தூர் மலையில் தமிழர் வழிபாடுகளை நடத்த முடியாது என்கின்றார்.

இவ்வாறு சொல்வதற்கு இவர் யார்?எந்த அடிப்படையில் இவர் இவ்வாறு பேசுகின்றார் ? இருக்கு ஆதரவாக இருப்போர் யார்? இவரின் கருத்துக்கள் அரசியல் சாசனத்தையும்,அரசியமைப்பையும்  எதிர்ப்பவையாகவே உள்ளன.

இப்போது பார்த்தால் கனடா உயர்ஸ்தானிகரை  நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்கின்றார். அமெரிக்க தூதுவரை  மிக மோசமாக சாடுகின்றார்.

இந்தியாவையும் அவர் சாடுகின்றார். வெளிநாடுகளின் நிதியை பெற்று  சாப்பிட்டு வயிறு வளர்த்துக்கொண்டிருக்கும் சரத் வீரசேகர எங்களது நியாயமான உரிமைகள் நாங்கள் கோருகின்ற போது அதனை அவர்  எந்த அடிப்படையில் எதிர்க்கின்றார்?

அதனால்தான் அவர் ஒரு மனநோயாளி என நாங்கள் கூறுகின்றோம்.அவரின் கருத்துக்களை இங்கு யாரும் எதிர்க்கவில்லை.

சரத் வீரசேகர மிக மோசமாக நடந்து கொண்டுள்ளார். அவரின் கட்சித்தலைமை அவரை அடக்கி வைத்திருக்க வேண்டும்.  அத்துடன்   அவரை இந்த சபையிலிருந்து நீக்க வேண்டும்.

எமது மக்கள் சாதாரணமானவர்கள் அல்ல. போராடியவர்கள் குண்டுகளைத் தாங்கியவர்கள்.விடுதலை வேட்கை கொண்டவர்கள்.

தமிழினத்தை  சீண்ட வேண்டாமென சரத் வீரசேகரவை எச்சரிக்கின்றோம்.  உங்களின் தடிப்பு கதைகளை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். எமது மக்கள் தொடர்ந்தும் மௌனமாக இருக்க மாட்டார்கள்  தொடர்ந்தும் சரத் வீரசேகர இனவாதம் கக்கினால்  எமது மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என சரத் வீரசேகரவுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

13ஐ அமுல்படுத்த இலங்கையை வலியுறுத்துமாறு கனேடிய தெற்காசிய விவகார பணிப்பாளரிடம் தமிழ்த் தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தல்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறையவே பேசுகின்றார். குறைவாகவே செய்கின்றார். அரசமைப்பு சட்டத்தில் உள்ள 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்து முதலில் தமது நேர்மையை பறை சாற்றும்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கனடா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளடங்கிய சர்வதேச சமூகம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும். இதற்கு கனடா முன்முயற்சி எடுக்க வேண்டும். நாட்டை வெளியேறிய தமிழர் பெருந்தொகையினருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடு என்ற வகையில் கனடாவுக்கு இதற்கு உரிமை உள்ளது.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., தமிழீழ விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. ஆகியோர், கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகார பணிப்பாளர் நாயகம் மரியா லூயிஸ் ஹனானிடம் நேரில் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

“13 ஆவது திருத்தம் தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு அல்ல. இது எமக்குத் தெரியும். ஆனால், புதிய சட்டங்களை உருவாக்க முன், அரசமைப்பு சட்டத்தில் இன்று இருக்கும் 13 ஆவது திருத்த அதிகாரப் பகிர்வு சட்டதையும், 16 ஆவது திருத்த மொழியுரிமை சட்டதையும் அமுல் செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காட்டட்டும். அதை சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். இன்று நாம் இலங்கை அரசுடன் பேசி சலித்துப் போய் விட்டோம். அதேபோல் சர்வதேச சமூகத்திடமும் மீண்டும் இவற்றையே பேசி சலித்துப் போய் கொண்டிருக்கின்றோம்” – என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள கனேடியத் தூதுவரின் இல்லத்தில் இன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வெல்ஷ், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதி சின்னையா இரத்தின வடிவேல், கனேடியத் தூதரக அரசியல் அதிகாரி கோபிநாத் பொன்னுத்துரை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இது தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. விடுத்துள்ள ருவீட்டர் பதிவில்,

“பன்மைத்தன்மையை கொண்டாடுவது, அதிகாரப் பகிர்வு, 13ம் திருத்தம், மொழியுரிமை மற்றும் சமத்துவம், ஆகியவை பற்றி கனேடியத் தரப்புடன் பயன்தரும் விதத்தில் பேசப்பட்டன” – என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நாட்டில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி பிரதிநிதிகள், கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரப் பணிப்பாளர் நாயகத்திடமும், இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடமும், இந்த நாட்டை சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு எனத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், இத்தகையை கொள்கையை முன்னெடுக்கும் எந்தவொரு கொழும்பு அரசையும் தாம் எதிர்த்துப் போராடுவோம் எனவும் கூறினர்.

தமது அபிலாஷைகள் தொடர்பில் அரசுடன் பேச்சு நடத்துவதைப் போன்று, சர்வதேச சமூகத்திடம் எடுத்துக் கூறுவதிலும் சலிப்படைந்து வருகின்றார்கள் என்று தமிழ்த் தலைவர்கள் இன்று கூறியதைத் தாம் புரிந்துகொள்வதாகவும், அது தமக்கு ஒரு செய்தி என்றும் கனேடியத் தரப்பினர் தம்மைச் சந்தித்த கட்சித் தலைவர்களிடம் தெரிவித்தனர்.

வவுனியா மக்களுக்காக முதலீட்டை உருவாக்க முயற்சிப்பதாலேயே சீனித்தொழிற்சாலைக்கு எதிர்ப்பு – செல்வம் எம்.பி

சீனித் தொழிற்சாலை தொடர்பில் யாரும் கஷ்டப்பட வேண்டாம். வவுனியா மக்கள் வேண்டாம் என்றால் திருப்பி அனுப்புறோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (03) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது வவுனியாவில் சீனித் தொழிற்சாலை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் – சீனித் தொழிற்சாலை தொடர்பில் 4வது தடவையாக அமைச்சரவை அனுமதி கிடைத்திருக்கின்றது. ஆனாலும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை.

நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலீட்டாளர்கள் இன்னும் தமது கருத்துக்களை சொல்லவில்லை. ஆனால் பலர் அதில் பெரிதும் விருப்பம் தெரிவிக்கவில்லை . சிங்கள குடியேற்றம் வரும் எனவும், சீனா முதலீடு எனவும் கூறுகிறார்கள்.

எம்மைப் பொறுத்த வரை தமிழீழ விடுதலை இயக்கம் சீனாவின் முதலீட்டை அதாவது இந்தியாவுக்கு எதிரான முதலீட்டை ஏற்கமாட்டோம்.

இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு விடயங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. சீனா முதலீட்டை எதிர்ப்போம். நாம் ஒரு போராட்ட இயக்கம். நிச்சயமாக சிங்கள குடியேற்றங்களையும் எதிர்ப்போம்.

சீனித் தொழிற்சாலை முறையாக நடைமுறைப் படுத்தப்படாத நிலையில், வவுனியா மக்களோ அல்லது வவுனியாவில் உள்ள அரசியல்வாதிகளோ இது தொடர்பில் கருத்து சொல்லவில்லை.

வவுனியாவிற்கு வரும் முதலீடு என்ற அடிப்படையில் எங்களது மக்களின் கருத்துக்களையும், இங்குள்ள அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோரது கருத்துக்களையும் பெற்ற பின் தான் இங்கு கொண்டு வருவதா இல்லையா என முடிவெடுப்போம்.

ஆகவே, தயவு செய்து யாரும் தேவையில்லமால் தலையிட வேண்டாம். சீனித் தொழிற்சாலையால் சிங்கள குடியேற்றம் வரும். சீனா வரும் என நிரூப்பிக்க முடிந்தால் நிரூப்பிக்கவும்.

இந்த தொழிற்சாலை தாய்லாந்து நிறுவனத்தின் முதலீடு. இதில் தமிழீழ விடுதலை இயக்கம் எந்தப் பங்காளியும் இல்லை. இது தென்னிலங்கைக்கு செல்வதற்கான வாய்ப்பை தடுத்து நிறுத்தி வடக்கிற்கு கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியே. இதற்கான பங்காளிகளாக நாம் இருக்கப் போவதில்லை.

முதலீட்டாளர்களை கொண்டு வருவதற்கான ஒரு செயற்பாட்டு பங்காளர் இல்லை. மக்களின் நலன், விவசாயிகளின் நலன் என்பன பற்றி கவனம் செலுத்தி வவுனியா மக்களோடு கலந்தாலோசித்து எமது கருத்தை சொல்ல தெரிவிக்கின்றோம்.

வவுனியா மக்கள் விரும்பவில்லை என்றால் சிங்கள இடத்திற்கு போகட்டும். மக்கள் அபிப்பிராயம் பெற்று தான் நாம் முடிவெடுப்போம்.

எங்களைப் பொறுத்த வரை எமது தேசத்தில் முதலீடுகள் நடைபெற வேண்டும். ஆகவே இதில் முதலீட்டை பார்ப்பதை விட்டுவிட்டு கனவுகளோடு பார்க்க வேண்டாம். ஆதாரம் இல்லாத கருத்துக்களை கூற வேண்டாம்.

வவுனியா மக்கள் ஆதரவு தந்தால் கொண்டு வர முயற்சி செய்வோம். அவர்கள் வேண்டாம் என்றாம் திருப்பி அனுப்புவோம். தமிழீழ விடுதலை இயக்கம் முதலீட்டை கொண்டு வர முயற்சிக்கின்றது என்பதற்காக சிலர் இதை எதிர்க்கிறார்கள். இது எங்களது ஒரு முயற்சி அவ்வளவு தான். இதை பற்றி யாரும் கவலை பட தேவையில்லை என தெரிவித்தார்.

சரத் வீரசேகர இராணுவத்தில் ரொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார்? ; முடிந்தால் தமிழ் எம்.பிக்களை கைது செய்யுங்கள் – செல்வம் எம்.பி சவால்

முடிந்தால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து காட்டுங்கள். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்க சொல்வதற்கு சரத் வீரசேகரவுக்கு என்ன உரிமை இருக்கிறது? முடிந்தால் அதை செய்து பார்க்கட்டும் – இவ்வாறு சவால் விட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன். வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கடந்த காலங்களில் பல கருத்துகளைக் கூறியுள்ளார். குறிப்பாக, தமிழ் பிரதேசங்களில் நடைபெறுகின்ற அடக்கு முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார். மாகாண சபை முறைமையையும் இல்லாது ஒழிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

சரத் வீரசேகர இராணுவத்தில் ரொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார். ஏனெனில், எங்கள் மக்களின் பிரச்னை என்பது காலம்காலமாக இருந்து வரும் பிரச்னை. தங்களின் பிரச்னைகளை பேசுவதற்கே மக்கள் தமது பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்புகிறார்கள். தங்களுக்கான அநீதிகளை சுட்டிக்காட்டும் வழியிலும் தான் பாராளுமன்றம் அனுப்புகிறார்கள்.

அந்தவகையில் தங்கள் தேசத்து மக்களின் பிரச்னைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுகிறார்கள். இவர் யார்? – தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்க சொல்வதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? முடிந்தால் அதை செய்து பார்க்கட்டும். சும்மா இராணுவத்தில் இருந்து எதையெல்லாமோ செய்து போட்டு வந்து கொக்கரிக்கக் கூடாது. அவருக்கு சவால் விடுகின்றேன். மக்கள் நலன் சார்ந்து பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்யுங்கள் பார்க்கலாம். அடுத்து என்ன நடக்கும் என்று பார்ப்பீர்கள் – என்றார்.

கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் முயற்சி மிலேச்சத்தனமானது- செல்வம் எம் பி காட்டம்

கஜேந்திரகுமார் எம்.பி மீதான புலனாய்வாளர்களின் தாக்குதல் முயற்சி தமிழ் மக்களுக்கு விடப்படும் அடுத்தகட்ட அச்சுறுத்தல் என்பதோடு மிலேச்சத்தனமானதுமாகும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது புலனாய்வாளர்கள் தாக்குதல் முயற்சியை மேற்கொள்ள முனைந்தமைக்கு கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் குறைகேள் செயற்பாடுகளையும் அரசியல் செயற்பாடுகளையும் முன்னேடுக்கும் போது புலனாய்வாளர்களின் இடையூறுகள்  தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

எனினும் இவற்றை பொருட்படுத்தாது  பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது செயற்பாடுகளை முன்னேடுத்து வருகின்றனர்.

தமிழ் மக்களின் காவலர்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடும் வகையிலான செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் புலனாய்வாளர்களை வைத்து செயற்படுத்த முனைவதானது தமிழ் மக்களுக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதை புடம்போட்டுக் காட்டுகின்றது.

இந்நிலையில் கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் முயற்சிக்கு தகுந்த விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறாத வகையில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்திக்குழு கூட்டங்களில் மக்கள் சார்ந்த விடயங்களிற்கு உடனடியாக முடிவெடுக்கப்படுவதில்லை- செல்வம் எம்.பி குற்றச்சாட்டு

அபிவிருத்திக்குழு கூட்டங்களில் மக்கள் சார்ந்த விடயங்களிற்கு உடனடியாக முடிவெடுக்கப்படுவதில்லை. அதிகாரிகளும் சமூகமளிப்பதில்லை இது தொடர்பில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் கவனமெடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மின்சார கட்டண விடயத்தில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் நியாயமாக நடந்துள்ளதுடன் அவரது கடைமையை சரியாக செய்துள்ளார். அரசாங்கம் மின்சார கட்டணத்தை அதிகரித்ததுடன், அது தொடர்பாக சரியான வழிமுறைகளை கையாளாத சூழ்நிலையில் அவர் தனது எதிர்ப்பை தெரிவித்தார். அந்த வகையில் அவரின் எதிர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவது தொடர்பான மசோதா வருகின்ற போது தமிழ் தேசிய கூட்டமைப்பும். ஏனைய தமிழ் கட்சிகளும் இணைந்து இந்த விடயம் தொடர்பாக ஒரு முடிவெடுப்போம்.

விலைவாசி அதிகரிப்பின் போது அவர் மக்கள் சார்பாக நின்றவர். எனவே பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவருக்கு ஆதரவழிக்கும் சூழல் உருவாகும். எனவே நாம் கூடி இறுதி முடிவெடுத்து அவருக்கு ஆதரவாக செயற்படுவதே சாலச்சிறந்தது.

அத்துடன் வவுனியா பிரதேச அபிவிருத்திக்கூட்டங்களில் நாம் கலந்துகொள்வதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. உண்மையில் பிரதேசஅபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெறும் நேரங்களில் கொழும்பில் முக்கிய சந்திப்புக்கள், இடம்பெறும் போது அதில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்படுகின்றது.

எம்மிடம் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதுடன் வினோநோகராதலிங்கம் பெரும்பாலான கூட்டங்களில் தனது பங்களிப்பை செய்துள்ளார். அத்துடன் முழுமையாக நாங்கள் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை தவிர்ப்பதில்லை. இனிவரும் கூட்டங்களில் நாங்கள் கலந்து கொள்வோம்.

அத்துடன் அபிவிருத்தி குழு என்ற போர்வையில் ஒரு விடயம் முடிவாக எடுக்கப்படாமல், காலம் தாழ்த்தப்படுகின்றது.முதலில் தீர்மானமாக எடுப்போம், பின்னர் ஜனாதிபதிக்கு கொடுப்போம் என்றவாறே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றது.

மாறாக மக்கள்நலன் சார்ந்த விடயங்களிற்கு உடனடியாக முடிவெடுக்கப்படுவதில்லை. அத்துடன் இக்கூட்டங்களிற்கு திணைக்கள அதிகாரிகள் கூட கலந்து கொள்வதில்லை.

எனவே கூட்டங்களின் போது முடிவெடிக்க வேண்டிய விடயங்களிற்கு அன்றையதினமே முடிவெடுத்தாக வேண்டும். அதற்காக நாங்கள் நிச்சயமாக குரல் கொடுப்போம். வெறும் கூட்டமாக இல்லாமல், அதிகாரிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை அபிவிருத்திக்குழு தலைவர் ஏற்படுத்த வேண்டும்.

அதிகாரிகள் வராவிடில் அவ்விடயம் முடிவு எட்டமுடியாத நிலை ஏற்படும். எனவே அபிவிருத்திக்குழு தலைவர் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். என்றார்.

மகிந்த குடும்பத்தின் ஊழல்களை உடனடியாக விசாரிக்கவேண்டும்! செல்வம் எம்.பி. வலியுறுத்து

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஊழல்கள் உடனடியாக விசாரிக்கப்படவேண்டும் என்பதுடன் ஊழல் பணம் அனைத்தும் மக்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்தப்படவேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நேற்று ரெலோ இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-
நாணய நிதியம் பணம் கொடுப்பது சம்பந்தமாக சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளில் ஊழல்கள் விசாரிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் காரணமாகத்தான் இந்த நாடு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆகவே இந்த ஊழலை விசாரிக்காத பட்சத்தில் நாடு மிகவும் மோசமான சூழலில் அதாவது பின் தங்கிய நிலையில் தொடர்ந்து செல்லும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆகவே மகிந்த ராஜபக்ஷ குடும்பம் இந்த ஊழல் செயற்பாடுகள் மூலம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சியை கொண்டு வந்து இன்றும் நடமாடிக்கொண்டிருக்கும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசாரணை செய்யப்படவேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் கோரிக்கையாக முன் வைக்கிறோம். அப்படி இல்லை என்றால் இங்கு முதலீடு செய்யப்பட்ட வங்கிகளின் பணங்கள் எல்லாம் இந்த கடனுக்காக எடுக்கப்பட்டு மிக மோசமான ஒரு சூழல் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆகவே ஊழலை விசாரிப்பதன் ஊடாகத்தான் இந்த நாட்டில் முன்னேற்றகரமான செயற்பாடுகளைச் செய்ய முடியும். ஜனாதிபதி இனப்பிரச்னைக்கு இவ் வருடத்துக்குள் தீர்வு என மீண்டும் அறிவிக்கத் தொடங்கி இருக்கிறார்.

எங்களை பொறுத்தவரை தீர்வு என்பது எப்படி கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. அந்தக் கேள்வியை ஜனாதிபதியிடமே நாங்கள் கேட்கின்றோம்.

வடக்கு-கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுகின்ற வேலை தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது. அது புத்தசாசன அமைச்சாக இருக்கலாம், வனவள திணைக்களமாக இருக்கலாம், வன ஜீவராசிகள் திணைக்கள மாக இருக்கலாம். இப்படி திணைக்களங்களிடம் அதிகாரங்களைக் கொடுத்து விட்டு இனப்பிரச்னைக்கு தீர்வு என்பது எப்படி சாத்தியாகும்? – என்றார்.