பொலிஸ் அதிகாரம் இன்றிய மாகாண சபையுடன் அடுத்த வருடம் தீர்வு; மனித உரிமை மீறல்களுக்கு நாட்டினுள்ளேயே தீர்வு – ஜனாதிபதி ரணில்

“இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளைக் காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும் பேச்சுகளை நடத்தவுள்ளேன்.” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வேறுபாடுகளை முன்நிறுத்தி மோதல்களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவை சந்திக்க நேரிட்டது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் ரீதியான வேறுபாடுகளும் இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு பூர்த்தி விழா நிகழ்வில் நேற்று கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி மாணவர்களுடன் சுமுகமாகக் கலந்துரையாடினார்.

அதனையடுத்து பாடசாலை மாணவர்களால் தேசிய கீதம் தமிழ், சிங்கள மொழிகளில் இசைக்கப்பட்டன.

அது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, ‘‘தேசிய கீதத்தில் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்று கூறப்படுவதால் அதனை சிங்களத்தில் இசைத்தாலும் தமிழில் இசைத்தாலும் பிரச்சினைகள் இல்லை. அனைவரும் ஒன்றுபட்டு ஒரே தேசமாக முன்னோக்கிச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம்.

வேறுபாடுகளை முன் நிறுத்தி மோதல் களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவைச் சந்திக்க நேரிட்டது. அரசியல் ரீதியான வேறுபாடுகளும் இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. நான் அனைத்து தலைவர்களுடனும் பேச்சு நடத்தவே எதிர்பார்க்கின்றேன். இன மத பிரச்சினைகளை நாம் தீர்க்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவோம். மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன்.

பொலிஸ் அதிகாரங்களை ஒருபுறம் வைத்துவிட்டு விடயங்களைப் பார்ப்போம். நான் கல்வி அமைச்சராக இருந்தபோது நாட்டில் ஒன்பதாயிரம் பாடசாலைகள் காணப்பட்டன. அவற்றை ஒரு போது என்னால் நிர்வாகம் செய்ய முடியாமல் போனது. ஒன்பதாயிரம் பாடசாலைகளையும் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டியுள்ளது. மாகாண சபைகளையும், ஒழுக்கத்தையும் பேணுவது மத்திய ஆட்சியின் செயற்பாடாகும்.

மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அதனை நாம் நாட்டுக்குள்ளேயே தீர்த்துக் கொள்வோம். வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை. சர்வதேசத்திற்கு சென்று அதனை தீர்த்துக் கொள்ள முடியும் என்று நான் நம்பவில்லை என்றார்

நாட்டின் பொருளாதாரம் முழுமையாகச் சரிவடைந்ததால் கடந்த வருடத்தில் நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்ற. அனைத்து வேறுபாடுகளையும் விடுத்து நாட்டுக்காக அனைவரும் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டும். உள்நாட்டுப் பிரச்சினைகளை நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக சர்வதேசத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை.” – என்றார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான எஸ்.வியாழேந்திரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருடன் மட்டக்களப்பு சென்.மைக்கல் கல்லூரியின் அதிபர் எண்டன் பெனடிக் உட்பட பாடசாலையின் ஆசிரியர் குழாம், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட னர்.

மயிலத்தமடு மேய்சற்தரையை விவசாயத்திற்கு வழங்க கோரி சுமனரத்ன தேரர் தலைமையில் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

பாரம்பரிய மேய்ச்சற் தரையாகப் பயன்படுத்தப்படும் மயிலத்தமடு பிரதேசத்தை விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு கோரி அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படும் சிங்கள மக்கள் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டனர்.

ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம் இடம்பெறவுள்ள நிலையில் மேற்படி பயிர்செய்கையாளர்கள் உள்ளிட்ட குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மட்டக்களப்பு விஜயத்தினை முன்னிட்டு ‘ரணிலுக்காக நாம் 2024’ என்ற பாரிய கட்டவுட் மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் கட்டவுட் முன்னால் தும்புத்தடியோடு நின்றவாறும் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிபரே கேளுங்கள் சிங்களவர்களை துரத்துகின்றார்கள், சாணக்கியன் தொண்டமான் எமக்கு வேண்டாம்,இனவாதம் தூண்ட வேண்டாம் என்ற கோசங்களை எழுப்பியவாறு இவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை தங்கள் கால்நடைகளின் பாரம்பரிய மேய்ச்சற்தரையாக விளங்கும் மயிலத்தமடுவில் அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களை அகற்றி அங்கு தமது கால்நடைகளை பாதுகாப்பாக மேய்ப்பதற்கு இடமளிக்குமாறு கோரிய கால்நடை வளர்ப்பாளர்களின் தொடர் போராட்டமானது இன்றுடன் 23 நாட்களாக இடம்பெறுகின்றமையும் குறிப்பிடப்படுகின்றது.

மயிலத்தமடு மாதவனை மேயச்சல் தரை தொடர்பில் நீதி கோரி தமிழ் எம்.பிக்கள் நாடாளுமன்றில் போராட்டம்

நாடாளுமன்றத்தில் இன்று (6) தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வினோநோகராதலிங்கம், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சி.சிறிதரன், இராசபுத்திரன் சாணக்கியன், தவராசா கலையரசன், மலையக மக்கள் முன்னணியின் வே.இராதாகிருஸ்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழர் நிலங்களை அழிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் என கோசமெழுப்பியபடி நாடாளுமன்றத்தின் மன்றத்தின் மையப்பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை (6) முற்பகல் 9.30க்கு  குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத்தொடந்து, சபையில் விசேட கூற்றை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான இராசமாணிக்கம் சாணக்கியன்,  மயிலத்தமடு மாதவனை பகுதியில் பண்ணையாளர்கள் முன்னெடுக்கும் போராட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்து ”எமது நிலம் எமக்கு வேண்டும்”, ”எமது வளம் எமக்கு வேண்டும்”, மகாவலி ”அதிகாரசபை கெடுபிடிகளை நிறுத்து” என்று கோசங்களை எழுப்பியும் பதாகையை ஏந்தியவாரும் சபைக்கு நடுவே சென்றார்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய எம்.பிக்களும் அவ்விடத்திற்கு வந்ததுடன் கைகளில் ‘மயிலத்தமடு மக்களுக்கு வேண்டும்’, ‘மகாவலி ஆக்கிரமிப்பை நிறுத்து’ என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு சபாபீடத்திற்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய  பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், உங்கள் பிரச்சினையை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிப்பதாகவும் சபையின் தினப் பணிகளுக்கு இடமளிக்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தார்.

எனினும் அவர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சபை முதல்வரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சபையில் இல்லை. அது தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடலாம் என்று கூறினார். இவ்வேளையில் சபை முதல்வருடன் சாணக்கியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இவ்வேளையில் ஆளும் கட்சி உறுப்பினர் பிரேமநாத் சீ தொலவத்த, சாணக்கியனை நோக்கி கடுமையாக பேசாமல் போய் அமருங்கள் என்று கூச்சலிட்டார். அவரை நோக்கி பதிலளித்த சாணக்கியன். நாங்கள் எங்கள் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் போராடுகின்றோம். தேவையில்லாத விடயத்தில் நீங்கள் தலையிடாது உங்களின் வேலையை பாருங்கள் என்று கூறினார். இதன்போது சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதேவேளை இராஜாங்க அமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தன் சபையில் இருந்ததுடன், அவர் நடப்பவற்றை நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தார்.

அத்துடன் தமிழ் முற்போக்குக் கூட்டணி எம்.பியான வீ.இராதகிருஷ்ணனும் சபை நடுவே சென்று சிறிது நேரம் அவர்களுடன் நின்றுவிட்டு பின்னர் தனது ஆசனத்திற்கு சென்று அமர்ந்துகொண்டார்.

தொடர்ந்தும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சபையின் தினப் பணிகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்றும், ஆசனங்களில் சென்று அமருமாறும் சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் அடிக்கடி வலியுறுத்திய நிலையில், சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் பிரச்சினையை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு தெரிவித்து தீர்வை பெற்றுத்தருவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, அவர்கள்  ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு தமது ஆசனங்களில் சென்று அமர்ந்துகொண்டனர்.

ஜனாவின் வாக்குமூலம்: 40 வருட போராட்ட, அரசியல் வரலாறு நூல் ஒக்ரோபர் 1இல் வெளியீடு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) , எதிர்வரும் ஒக்ரோபர் 1ஆம் திகதி 60 வயதை பூர்த்தி செய்யவுள்ள நிலையில், அன்று மட்டக்களப்பில் நூல் வெளியீடு இடம்பெறவுள்ளது.

ஜனாவின் வாக்குமூலம்- எனது 40 வருட போராட்ட, அரசியல் வரலாறு என்ற நூல் வெளியிப்படவுள்ளது.

இதையொட்டி ஒக்ரோபர் 1ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறும் நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் செயலாளர் கி.துரைராசசிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் ஆகியோருடன், கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானும் நிகழ்வில் உரையாற்றவுள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நீண்டகால தேவையினை பூர்த்தி செய்ய நடவடிக்கை – ஜனா எம்.பி

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நீண்டகால தேவையாகயிருந்த இருதய சிகிச்சைப்பிரிவிற்கான இருதய சோதனைக்கான இயந்திரத்தினை சுகாதார அமைச்சு வழங்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று(02.09.2023) அவரது மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முன்னுரிமை வழங்கி குறித்த இயந்திரத்தினை வழங்குவதற்கு சுகாதார அமைச்சரும் சுகாதார அமைச்சரின் செயலாளரும் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2021ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கென கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரமொன்று வேறுமாவட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அதனை பெறுவதற்கு பல்வேறு பிரயனத்தனங்கள் செய்து கொண்டுவரப்படாத நிலையில் இந்த இயந்திரத்தினை கொண்டுவர அனைவரும் நடவடிக்கையெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது மயிலத்தமடு,மாதவனை பகுதியில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்து மாவட்ட அபிவிருத்திக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மயிலத்தமடுவுக்குச் சென்ற மத தலைவர்களை 6 மணிநேரம் தடுத்து வைத்திருந்த பின் விடுவித்த பௌத்த தேரர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மாதவனை பகுதி பண்ணையாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனை மற்றும் அத்துமீறி பௌத்த விகாரை அமைப்பது, காணி அபகரிப்பு தொடர்பாக ஆராய்வதற்கு செவ்வாய்க்கிழமை (22) சென்ற சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட 18 பேரை பௌத்த தேரர் தலைமையிலான காணி அபகரிப்பு குழுவினர் வழிமறித்து தடுத்து வைத்தனர்.

குறித்த பிரதேசத்தில் காணி அபகரிப்பு மற்றும் விகாரை அமைப்பது தொடர்பாகவும் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பாகவும் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய மத தலைவர்கள், ஊடகவியலாளர்கள் கொண்ட குழுவினர் சம்பவதினமான செவ்வாய்க்கிழமை (22) காலை மயிலத்தமடு மாதவனை பிரதேசத்திற்கு வாகனங்களில் இரு அருட்தந்தையர்கள், ஒரு மெனளவி, இரு இந்து குருக்கள், 3 ஊடகவியலாள்கள் உட்பட 18 பேர் அடங்கிய குழுவினர் அங்கு சென்று பண்ணையாளர்களை சந்தித்து கலந்துரையாடிவிட்டு பகல் ஒரு மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு எல்லை பகுதியில் அமைந்துள்ள கம்பி பாலத்திற்கு அருகாமையில் வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்த பல்சமய மத தலைவர்களின் வாகனங்களை கம்பி பாலத்தில் குறுக்கே தேரர் ஒருவருடனான நூற்றுக்கு மேற்பட்வர்கள் ஒன்றிணைந்து வீதி தடையை போட்டு வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகனங்களின் திறப்புக்களை பிடுங்கி எடுத்து அவர்களை தடுத்து வைத்ததுடன் இந்து குருக்கள் ஒருவரை தாக்க முற்பட்டதையடுத்து அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

இச் சம்பவத்தையடுத்து கரடியனாறு மற்றும் அரங்கலாவ பொலிஸ் பொறுப்பதிகாரிகள் கொண்ட பொலிஸ் குழுவினர் அந்த பகுதிக்குச் சென்று பௌத்த தேரர் உடனான குழுவினருடன் பேச்சில் ஈடுபட்டுவருவதாகவும் அவர்கள் ஊடகவியலாளர்களின் கமராவில் பதிவு செய்த காட்சிகள் அனைத்தையும் தேரர் அச்சுறுத்தி அழித்ததுடன் இந்த செய்தியை பிரசுரிக்கக் கூடாது என கடிதம் ஒன்றை வற்புறுத்தி பெற்றுள்ளனர்.

தொடர்ந்தும் பௌத்த தேரர் உடனான குழுவுடன் பொலிசார் பேச்சவார்த்தையில் ஈடுபட்டு பின்னர் 6 மணித்தியால தடுத்துவைப்பின் பின்னர் மாலை 6 மணிக்கு விடுக்கவிக்கப்பட்டனர்.

மயிலந்தனை படுகொலை 31 ஆம் ஆண்டு நினைவுநாள் அனுட்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் மயிலந்தனை கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று புதன் கிழமை (9) ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.

உயிர் நீத்தவர்களின் நினைவாக ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று, பொதுச் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தியதுடன் உணர்வு பூர்வமாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

நினைவேந்தல் உரையினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ குகன் மற்றும் வடக்கு கிழக்கு ஓருங்கிணைப்பு குழுவின் செயற்பாட்டாளர் கண்டுமணி லவகுகராசா ஆகியோர்கள் நிகழ்த்தினார்கள்.

இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறவுகளுக்கு நீதி கோரிய மகஜர் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டது.

கடந்த 9.8.1992 ஆம் ஆண்டு அன்று புனானை மயிலந்தனை கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள்,பெண்கள் உட்பட 39 பேர் வெட்டியும் சுடப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.34 பேர் காயமடைந்தனர்.

நேரில் கண்ட சாட்சியங்களின் அடிப்படையில் புணானை இராணுவத்தினரே இப் படுகொலையை நிகழ்த்தியதாக தெரிவித்து வழக்கு தொடுக்கப்பட்டது.

அப்போது இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் 24 இராணுவத்தினர் அடையாளம் காட்டப்பட்டனர்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எந்த ஒரு இராணுவத்தினரும் குற்றம் இழைக்கவில்லை என தீர்ப்பளிக்கப்பட்டது.மேன் முறையீடு செய்வதற்கு அப்போதிருந்த சட்டமா அதிபர் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே 2002 நவம்பர் 27 இல் குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்டனர்.

எனவே மீளவும் நீதிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு சென்ற பஸ் ஆற்றில் விழுந்து விபத்து 11 பேர் உயிரிழந்தனர்

70 பயணிகளுடன் மட்டக்களப்பு – காத்தான்குடி நோக்கி வந்த பேருந்து ஆற்றில் வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். 40பேர் மருத்துவமனைகளில் சேர்க் கப்பட்டுள்ளனர்.

நேநற்றிரவு 8 மணிக்கு சற்று முன்னதாக பொலநறுவை மன்னம்பிட்டி பாலத்தில் இந்த விபத்து இடம்பெற்றதாக அறிய வருகின்றது.

பொலநறுவை – கதுரவெல நகரத்தில் இருந்து மட்டக்களப்பின் காத்தான்குடி நகரத்துக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்தே இவ்வாறு விபத்துக்கு உள்ளானது. சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 70 பேர் இந்தப் பேருந்தில் பயணித்தனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்தது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். 40 பேர் மீட்கப்பட்டனர்.

பொலிஸாரும் அப்பகுதி மக்களும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண் டிருந்தனர். நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் இரவு 11 மணியளவில் மீட்பு நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்தன. காணாமல் போன பலர் மீட்கப்பட்டதுடன், ஆற்றில் பாய்ந்த பேருந்தும் மீட்கப்பட்டது. இந்த விபத்துக் குறித்து மன்னம்பிட்டி பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்

Posted in Uncategorized

வடக்கு, கிழக்கில் தற்போது நடந்து கொண்டிருப்பது ஒரு மௌன யுத்தம் – ஜனா எம்.பி

இந்த நாட்டில் தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைக்கவேண்டும் திட்டமிட்டு  1949 ம் ஆண்டு முதல் பிரதமரான டி.எஸ்.சேனநாயக்கா கிழக்கு மாகாணத்திலே கல்லோயா குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்த காலம் தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களின் காணிகள் அபகரித்து விகாரைகள் அமைக்கும்  திட்டங்களை செய்து வருகின்றனா் என வடக்கு கிழக்கில் தற்போது நடந்து கொண்டிருப்பது ஒரு மௌன யுத்தம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா உள்ளிட்ட தியாகிகளின் 33வது நினைவு அஞ்சலி சனிக்கிழமை (24) அனுஸ்டிக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர்  உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை போராட்டத்திலே  பல நாட்டகள் தமிழ் மக்களால் மறக்க முடியாத வடுக்கள் நிறைந்த நாளாக இருக்கின்றது.

அந்த நாட்களின் ஒரு நாளாகவே 19 யூன் 1990 ம் ஆண்டு விடுதலைப் போரட்ட பாதையிலே ஒரு கறுப்பு புள்ளி விழுந்த நாளாகும்.

தமிழ் மக்கள் ஆயுத போராட்டத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல ஆயுத போராட்டம் எங்கள் மீது திணிக்கப்பட்டது இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து நாங்கள் தமிழினம் இரண்டாம் தர பிரஜைகளாக இந்த நாட்டிலே அழைக்கப்பட்டோம் .

இவ்வாறு தனி சிங்களசட்டம் கொண்டுவரப்பட்டதில் இருந்து தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட 1957, 1958, 1978, போன்ற கலவரங்களை தொடர்ந்து மிகவும் மோசமாக83 கலவரத்தை உருவாக்கி கப்பல் மூலம் வட கிழக்கிற்கு சொந்த நாட்டிலே அகதிகளை அனுப்பிய வரலாறு ஆகும்.

இவ்வாறு தமிழர்கள் மீது நடந்தேறிய இனழிப்பிற்கு எதிராக அகிம்சை மூலமாக போரடிய எமது தலைவர்கள் அதில் நம்பிக்கையிழந்து உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாங்கள் ஆயுத போராட்டத்திற்குள் தள்ளப்பட்டோம் அதனால் 1969 ஆயுத போராட்டம் முதல் முதல் தமிழ்ஈழ விடுதலை இயக்கம் அதில் பிரபாகரன் உட்பட போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் இருந்தார்கள்.

இந்த நிலையில் 83 கலவரத்தை அடுத்து ஈழவிடுதலை போராட்டம் ஒரு வித்தியாசமான பாதைக்குள் சென்றது. முன்னணியில் 5 போராட்ட இயக்கங்கள் இருந்தது அப்போது அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் தான் எமது இலக்கை அடையமுடியும் என 1984 ம் ஆண்டு ஈழ தேசிய விடுதலை முன்னணி என்று ஈரோஸ், ரொலே, ஈபிஆர்எல்எப். என மூன்றும் ரி.என்.எல்.எப். உருவாகியது பின்னர் விடுதலைப் புலிகளும் அதில் இணைந்தனர் என்பது வரலாறுகள்.

ஆனால் விடுதலைப் புலிகள் மாத்திரம் வடகிழக்கிலே இந்த போராட்ட பாதையில் நின்று இருந்தாலும் 2009 மே 18 உடன் இந்த ஆயத போராட்டம் முற்று முழுதாக மௌனிக்கப்பட்டது இந்த போரட்டம் மௌனிக்கப்படும் முன்னர் பல தலைவர்களை இழந்திருக்கின்றோம் அதில் போரட்ட தலைவர்கள் மாத்திரமல்ல மிதவாத கட்சியான தழிழர் விடுதலைக் கூட்டணி தமிழரசு கட்சி போன்றவற்றின் தலைவர்கள் அமிர்தலிங்கம் உட்பட பல தலைவர்களை இழந்திருக்கின்றோம்.

ஜே,ஆர். ஜெயவர்த்தனா காலத்திலே சமாதன பேச்சுக்கே இடமில்லாமல் தமிழ் மக்களின் குரல்வலையை நசுக்கினார் 2009 வரை தமிழ் மக்களை வஞ்சித்துக் கொண்ட அரசு ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு வடகிழக்கில் வித்தியதசமான ஒரு திணிப்பை செய்துவருகின்றது

அதுதான் தமிழர் தேசத்தில் விகாரைகள் அமைக்கவேண்டும் தமிழரின் குடிபரம்பலை எவ்வளவு வேகமாக மாற்றி அமைக்கவேண்டும் இணைந்திருந்த வடகிழக்கை வெலிஓயா குடியேற்றம் மூலம் நில தொடர்பற்ற மாகாணங்களாக இரண்டு மாகாணங்களையும் பிரிப்பது போன்ற நடவடிக்கையை திட்டமிட்டு செய்துவருகின்றது

தற்போதைய எதிர்கட்சி தலைவாரான சஜித் நல்லாட்சி காலத்தில் புத்தசாசன அமைச்சராக இருந்தபோது வடகிழக்கில் ஆயிரம் விகாரை அமைக்கவேண்டும் என்ற அவர் தற்போது இலங்கையிலே ஆயிரம் தாது கோபுரங்களை படிப்படியாக அமைக்கவேண்டும் என கூறியுள்ளார்.

ஆகவே தற்போது வடகிழக்கில் நடந்து கொண்டிருப்பது ஒரு மௌன யுத்தம் தமிழ் மக்களின் காணிகள் அபகரிப்பு தமிழர் பிரதேசங்கள் எங்கும் விகாரைகள் குறிபாக உயர்ந்த மலைகளில் அமைப்பது சுற்றுலா பயணிகள் கூட இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை பறைசாற்றுவதற்காக இந்த திட்டங்களை செய்து வருகின்றனர்.

குருந்தூர் மலையிலே பூர்வீகமாக தமிழ் மக்கள் வாழ்ந்த காணிகள் இன்று தொல்பொருள் என்று பெயரில் அபகரிக்கட்டுள்ளது சரத்வீரசேகர, உதயகம்பன்வெல, விமல்வீரன்ச போன்ற அரசியல்வாதிகள் தங்களது நிரச்சி நிழலுக்குள் செயலாற்றிக் கொண்டு வடகிழக்கு மாகாணங்கள் தமிழ் தாயகம் என தம்பட்டம் அடிக்கும் தமிழர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக சரத்வீரதேசகர தெரிவித்தார்

எனவே தமிழர்களுடைய தாகம் விடுதலை நோக்கம் இன்னும் தனியவில்லை என அமைச்சருக்கு தெரியவேண்டும். அதேவேளை கோட்பாயாவின் விசுவாசியான புதிதாக தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்றம் வந்த வெளிநாட்டு அமைச்சர் ஒரே இரவில் தீர்வை கொடுக்கமுடியாது கிடைப்பதை பெற்றுக் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார் எனவே இனப்பிரச்சனை தோன்றி எத்தனை ஆண்டுகள் என அவருக்கு தெரியாமல் இருக்கலாம், ஒரே இரவில் இந்த பிரச்சனைக்கான தீர்வை கேட்கவில்லை

நாடு சுதந்திரமடைந்த காலம் இருந்தே தமிழர்கள் இனப்பரச்சனையை தீர்ப்பதற்காக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம் தந்தை செல்வா பேச்சுவார்த்தை , பண்டா செல்வா ஒப்பந்தம்,  டட்லி செல்வா ஒப்பந்தம், மற்றும் திம்பு பேச்சுவார்த்தை, 2001 பேச்சுவார்த்தை 2009 பின் மகிந்தவுடன் 18 சுற்று பேச்சுவார்த்தை. உட்பட தற்போதும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

தற்போதைய ஜனாதிபதி ஒரு சர்வதேச அழுத்தத்தின் மத்தியிலே இந்த நாட்டை நடாத்துகின்றார் 1987 இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது அதன் மூலம் உருவாகிய குறைமாத குழந்தையான மாகாணசபை முறைமை ஏற்படுத்தப்பட்டது இந்த 13 திருத்த சட்டத்தை முற்று முழுதாக தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்காக யாரும் ஏற்றுக் கொள்ள வில்லை,

ஆனால் அரசியல் அதிகாரத்தில் ஆசையற்ற பத்மநாபா கிடைப்பதை எற்றுக் கொண்டு அதிலிருந்து நாங்கள் முன்னேறிச் செல்வோம் என்ற அடிப்படையில் அந்த மாகாணசபை அதிகாரத்தை பெற்றுக் கொண்ட முதல் தலைவர் பத்மநாபா அதிகாரத்தில் ஆசையில்லாத காரணத்தால் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை அப்படிப்பட்ட ஒரு தலைவரது ஞாபகாத்த தினம்தான் இந்த 19 யூன் என்பது.

எனவே நாங்கள் கிடைப்பதை பெற்றுக் கொண்டு எங்கள் மக்களுக்கு துரோகம் செய்வதற்கு நாங்கள் அரசியல் செய்யவில்லை. தமிழ் தேசிய கூட்டடைப்பு விடுதலைப் புலிகள் இயங்கு நிலை இருந்த காலத்திலே 2001 உருவாக்கப்பட்டது அப்போது கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து தமிழ் மக்களுக்கு ஒரு பலமான அரசியல் சக்தி இருக்கவேண்டு என்ற காரணத்திற்காக இந்த கூட்டமைப்பை உருவாகினோம்.

2009 ம் வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு அசைக்கமுடியத சக்த்தியாக இருந்தது 2004 தமிழ் விடுதலை கூட்டணி வெளியேறியது 2010 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெளியேறியது 2015 ஈபிஆர்எல்எப் வெளியேறியது அதேபோன்று 2023 தமிழரசு கட்சி வெளியேறியுள்ளது ஆனால் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு பலமான 5 கட்சிகள் கொண்ட அணியாக செயற்படுகின்றோம். என்றார்.

நெல் விலை நிர்ணயத்தில் விவசாயிகளது வாழ்வாதாரமே கவனமாக இருத்தல் வேண்டும் – ஜனா எம்.பி

நெல் விலை நிர்ணயத்தில், அரிசி ஆலை உரிமையாளர்கள் அழுத்தம் ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ளாது ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை அரசாங்கம் கவனத்திலெடுக்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு தொடர்பான இன்றைய (20) விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

தோடர்ந்து உரை நிகழ்த்திய பாராளுமன்ற உறுப்பினர் ஜனா,

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே வரவு செலவுத்திட்டம் மூலமாக ஒதுக்கப்படும் நிதிகள் ஒதுக்கப்படாமல் நாங்கள் எந்தவித அபிவிருத்தி வேலைகளையும் எமது மக்களுக்குச் செய்யமுடியாத சூழ்நிலையில் இருந்து கொண்டு இந்த வரவு செலவுத்திட்ட அலுவலகம் சம்பந்தமான விவாதத்தில் எப்படிப் பங்கு பெறலாம் என்று யோசிக்கின்றேன்.

இருந்தாலும் எனது மாவட்ட மக்கள் சம்பந்தமாக சில விடயங்களையும்; இந்த விவாதத்தில் எடுத்துரைக்கலாம் என்று நினைக்கிறேன்.

முதலாவதாக கடந்த 28.05.2023 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தவேந்திரன் மதுசிகன் என்ற 20 வயது மாணவண் இந்தியாவின் தனுஸ்கோடியிலிருந்து தலைமன்னார் வரையான 30 கிலோமீற்றர் கடலை நீந்திக் கடந்திருக்கின்றார். ஒரு சாதனை புரிந்திருக்கின்றார். அதுவும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் கடலில் பிளாஸ்ரிக் கழிவுகள் அதிகரிப்பதனால் ஏற்படும் பின்விளைவுகளையும், பின்விளைவுகளைத் தடுப்பதற்கும் மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகா, சிறுவயதில தற்கொலைக்குச் செல்லாத மனோநிலையை வலுப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் சாதனைகளை நிறைவேற்ற வேண்டும என்ற சிந்தனையுடன் செயற்பட்டால் இவ்வாறான விடயங்களிலிருந்து விடுபடலாம் என்ற விழிப்புணர்வுகளுக்காக இந்த சாதனையைப் புரிந்துள்ளார். அந்தவகையில் இந்தப் பாராளுமன்றத்தின் ஊடாக அந்த மாணவனுக்கு பாராட்டுக்களைச் தெரிவிக்கவேண்டிய கடமையிலிருக்கின்றேன்.

அது மாத்திரமல்ல இன்றைய விவாதத்தின் ஆராம்பத்திலே 27/2 கேள்வியின் மூலமாக இந்தச் சபையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் ஒரு கூற்றை முன்வைத்திருந்தார். உண்மையிலேயே விவசாயிகள் சார்பாக நான் அவருக்கு பாராட்டுத் தெரிவிக்கிறேன். இன்று மட்டக்களப்ப மாவட்டம் மாத்திரமல்ல அம்பாரை போன்ற பிரதேசங்களிலும் நெல் அறுவடை ஆரம்பித்து விட்டது;. ஆனால் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக அவர்களுடைய நெல்லை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை என்பது மாத்திரமல்லாமல் நெல்லுக்குரிய சரியான விலையைக் கூட இந்த அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை.

இன்றைய 27/2 கீழான கேள்விக்குக் கூட விவசாய அமைச்சர் அவர்கள் சரியான பதிலைக் கூறாமல் தாங்கள் கூடி முடிவெடுத்து அறிவிப்பதாகக் கூறியிருக்கின்றானர். இன்றைய பொருளாதார நிலைமையில் அரசாங்க விதை உற்பத்திப் பண்ணைகளில் கூட விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு கிலோ நெல்லை 95 ரூபாவுக்கு விற்ற பண்ணைகள், இன்று ஒரு கிலோ நெல்லை 200 ரூபாவுக்கு விற்கக் கூடிய ஒரு சூழ்நிலையில் இருக்கின்றது. ஏனென்றால் அதற்குரிய உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பதாகக் கூறுகின்றனர்.

உண்மையில் உற்பத்திச் செலவு அதிகரிப்பதாக இருந்தால் அரசாங்க விதை உற்பத்திகளுக்கு மாத்திரமல்ல ஏழை விவசாயிகளுக்கும் அந்த உற்பத்திச் செலவு அதிகரித்திருக்கின்றது. கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் நெல்வயல் செய்கை பண்ணுவதற்கு ஒரு லட்சத்து 25ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவு செய்யும் போது இன்றைய நெல்லின் விலை 75- 80ரூபாவுக்கு மேல் தாண்டவில்லை. எனவே இந்த அரசாங்கம் ஆகக்குறைந்தது நெல்லின் விலையை 120ரூபாவுக்காவது நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாகப் பெற்றுக் கொண்டால் மாத்திரமே அவர்கள் அவர்களுடைய நெருக்கடியிலிருந்து மீள்வார்கள். ஒரு கிலோ அரிசி 200 ரூபாவுக்கு விற்கப்படுகின்ற நிலையில். அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லின் விலையை நிர்ணயிக்க முடியாது. அத்துடன் அரிசி ஆலை உரிமையாளர்கள் விலை நிர்ணயத்தில் அழுத்தம் கொடுக்கின்றார்கள். அரசாங்கம், அவர்களது ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ளாது ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கவனத்திலெடுக்க வேண்டும் என்பதுடன் அதற்காக பாடுபட வேண்டும்.

அத்துடன் கடந்த சில வாரங்களாக அதிபர் சேவைக்கான நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன. ஆந்த அதிபர் சேவை போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்படும் போது பல்கலைக்கழகப் பட்டம் அத்துடன் பட்டப் பின் கல்வி டிப்ளோமா இருக்க வேண்டும் அத்துடன் 5 வருட சேவைக்காலமும் இருக்க வேண்டும் அதைவிடுத்து கல்வியியல் கல்லூரி முடித்தவர்களுக்கு 6 வருட சேவை அனுபவம் இருந்தால் அதற்கு விண்ணப்பிக்க முடியும் என்ற சுற்றறிக்கை இருந்தது. ஆனால் அந்த கல்வி டிப்ளோமா பட்டம், பட்டப்பின் டிப்ளோமா, விஷேட தேவைகள் சார் பட்ட பின் கல்வி டிப்ளோமா பெற்றவர்கள் அந்தப் பரீட்சையில் சித்தியடைந்திருந்தாலும் நேர்முகப் பரீட்சையில் அவர்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றார்கள். இது மிகவும் துரதிஸ்டவசமானது. இலங்கை அதிபர் சேவை தரம் III ல் ஆட்சேர்ப்பு செய்வதற்காக பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இதில் சேவை நிபந்தனை பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பான வர்த்தமானிப் பத்திரிகை அறிவித்தல் 2018.10.19 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதில் சேவை நிபந்தனை பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “ இலங்கை சனநாயகச் சோசலிசக் குடியரசின் இலக்கம் 1885/31 மற்றும் 2014.10.22 ஆம் திகதி கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கும், அப்பிரமாணக்குறிப்பில் இதற்குப் பின்னர் மேற்கொள்ளும் திருத்தங்களுக்கும், அரச சேவையின் நியமனங்களை நிர்வகிக்கும் பொது நிபந்தனைகளுக்கும் உட்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரி இலங்கை அதிபர் சேவையின் III ஆம் தரத்திற்கு நியமிக்கப்படுவார்”

இந்த நியமனமானது 2023யிலேயே வழங்கப்படவுள்ளது. எனவே பரீட்சை ஏலவே நடைபெற்றிருப்பினும், 2023இற்கு முன்னர் அதிபர் சேவைப் பிரமாணக்குறிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு அமையவே நியமனம் வழங்கப்படல் வேண்டும் என்பது நியதியாகும். இதன் அடிப்படையில் 2255/55 ஆம் இலக்க 2021.11.26 ஆம் திகதிய அதி விஷேட வர்த்தமானி பத்திரிகையில் வெளியாகிய இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின் 4ஆவது திருத்தத்தின் படி விசேட தேவைகள் சார் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் அமுல்படுத்தப்படும் திகதி குறிப்பிடப்படாமையினால் இது 2014 ஆம் ஆண்டிலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பது நியதியாகும்.

மேலும் 2010 இல் விஷேட தேவைகள் சார் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவானது சாதாரண பட்டப்பின் கல்வி டிப்ளோமாவிற்கு சமமானது என கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையும் குறிப்பிடுகின்றது. மேலும் திறந்த பல்கலைக்கழக உபவேந்தரினாலும் இது தெட்டத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நேர்முகப்பரீட்சை நடாத்தி, அதன் அடிப்படையில் அவர்களையும் இலங்கை அதிபர் சேவைக்கு உள்வாங்குவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.