வடக்கில் கால்நடைப் பண்ணைகளை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானம்

வடக்கு மாகாணத்தில் உள்ள கால்நடைப்  பண்ணைகளை ஒழுங்குபடுத்துவற்கு சில சட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் வசீகரன்  தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் சுமார் 80 வீத கால் நடைகள் திறந்த வெளிகளிலேயே வளர்க்கப்படுகிறது. இவை உற்பத்தி திறன் குறைந்தவையாக காணப்படுகின்றன. வடக்கில் 4 இலட்சம் மாடுகள், 10 ஆயிரம் எருமை மாடுகள், 3 இலட்சம் ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றில் 3 இலட்சம் மாடுகள் பால் உற்பத்திக்காக  திறந்த வெளிகளில் வளர்க்கப்படுகின்றன. இவை நாட்டு இன மாடுகாளாக காணப்படுகின்றன.

அத்துடன் நாட்டின் மொத்த இறைச்சித் தேவையில் 30 வீதத்தை வடக்கு மாகாணம் பூர்த்தி செய்கிறது. இதனால் வருமானமும் அதிகரிக்கிறது. எனினும் விவசாயத்தின் முக்கியத்துவம் தற்போது அதிகமாக காணப்படுகின்றன. இதனால் வயல் நிலங்களை நாசம் செய்துவிடும் என்ற காரணத்தால், கால்நடைகள் பொருத்தம் இல்லாத இடங்களுக்கு மேய்ச்சலுக்காக விடப்படுகின்றன. இதனால் கால்நடைகள் ஆபத்தை எதிர்நோக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

சுமார் 30 ஆண்களுக்குப் பின்னர் வடக்கில் ஒரு துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.கோடை காலத்தில் நீர் இல்லாமலும், மழை காலத்தில் வெள்ளத்தாலும் மாடுகள் இறப்பது வழமை. ஆனால் இப்போது முதல் தடவையாக குளிரால் மாடுகள் அதிகளவில் சில தினங்களுக்கு முன்னர் இறந்துள்ளன.

இதற்கு காரணம் மாடுகளில்  கொழுப்புப் படை இன்மையே ஆகும். 90 வீத மாடுகளுக்கு கொழுப்புப் படை இல்லை.இந்த பெரும் போக காலத்தில் அவைகளுக்கு  தீவனம் இல்லை. இம்முறை தான் இந்தப் குளிர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை நாம் கவனமாக அணுக வேண்டும்.

திறந்த வெளிகளில் மாடுகளை வளர்ப்பவர்கள் அலட்சியமாக உள்ளனர்.பண்ணைகளைப்  பதிவு செய்வதில்லை. மாடுகளின் இலக்கங்களை பெறுவதில்லை. உரிய காலத்தில் தடுப்பூசிகளை பெறுவதில்லை. இவ்வாறு அவர்கள் எமக்கு ஒத்துழைப்பை வழங்குவதில்லை. கால் நடைகளுக்கான பராமரிப்பு போதியளவு இல்லை.

ஆகவே கால் நடைகளின் இறப்புகளை தவிர்ப்பதற்கு சில நடவடிக்கைளை, சில சட்டங்களை பிறப்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக நடைமுறைப் படுத்த எண்ணியுள்ளோம். முறையான பதிவு மூலம் பண்ணைகளை நடாத்தி, அந்த கால்நடைகள் உயிரிழந்திருந்தால் ,அரசாங்கம் நட்ட ஈடு வழங்கும் பட்சத்தில்  நாம் பண்ணையாளர்களுக்கு வழங்குவோம் என்றார்.

குளிர்காரணமாக கிளிநொச்சியில் 529 மாடுகளும் முல்லைத்தீவில் 524 மாடுகளும் வவுனியாவில் 28 மாடுகளும் உயிரிழந்துள்ளன. இதேவேளை, யாழ்ப்பாணத்திலும் மாடொன்று உயிரிழந்துள்ளது.

அத்துடன், குளிர் காரணமாக  கிளிநொச்சியில் 266 ஆடுகளும்  முல்லைத்தீவில் 199 ஆடுகளும் வவுனியாவில் 52 ஆடுகளும் உயிரிழந்துள்ளன என்றார்.

வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராட்டம்

வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக பல்வேறுபட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இலங்கை ஆசிரியர் சங்கம் இன்றைய தினம் (புதன்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது.

“வடமாகாண கல்வி அமைச்சில் காணப்படும் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாகவும் நிர்வாக ஆளுமையற்ற தன்மை காரணமாகவும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்ததாக ஆசியர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை, வடமாகாண கல்வித்துறையில் உள்ள சீர்கேடுகள் தொடர்பில் 2021 டிசம்பர் மாதம் வடமாகாண ஆளுநர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 100 பக்க முறைப்பாடு ஒன்றை வழங்கியிருந்தோம்.

அதற்கு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தனர். குறித்த விசாரணை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை கேட்டபோதும் அது இதுவரை எமக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

முறைப்பாட்டை வழங்கி அண்ணளவாக ஒரு வருடமாகிய போதும் கூட விசாரணை இன்னும் முடிவுறாத நிலைமையில் எமக்கு இதனுடைய பின்னணி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மூன்றாம் தவணை ஆரம்பித்த போதும் இரண்டாம் தவணைப் பரீட்சையை வைக்கமுடியாத அளவுக்கு வடமாகாண கல்வியமைச்சு மற்றும் வடமாகாண கல்வித் திணைக்களத்தின் நிலைமை போயுள்ளது.

இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தோம் என்றனர்.

மண்டாஸ் புயல் தாக்கம் வட, கிழக்குக்கு பாதிப்பு

ஒருவர் உயிரிழப்பு-  2,143 பேர் பாதிப்பு – 275 மாடுகள் பலி – 510 வீடுகள் சேதம்

மண்டாஸ் புயல் நேரடியாக தாக்காத போதிலும் தொடர்ச்சியான மழை, கடும் குளிர், வேகமான காற்றால் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன. கிழக்கு மாகாணத்தில் ஒருவர் உயிரிழந்தார். 245 குடும்பங்களை சேர்ந்த 883 பேரும், 484 குடும்பங்களை சேர்ந்த 1,659 பேருமாக 729 குடும்பங்களை சேர்ந்த 2143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, வடக்கு கிழக்கில் 275இற்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்தன. வங்கக்கடலில் மையம் கொண்ட தாழமுக்கம் மண்டாஸ் புயலாக மாற்றம் கொண்டது.

இது வடக்கு – வடமேற்காக நகர்ந்தது. தமிழகக் கரையை புயலாக இது நள்ளிரவை தாண்டி கடந்தது. இந்த புயலின் நகர்வின் தாக்கத்தால் நேற்று முன்தினம் இரவு வடக்கு – கிழக்கில் அதிக மழைவீழ்ச்சி பதிவானது. அத்துடன், மிகக் குளிரான காலநிலையும் நீடிக்கிறது. மேலும், வேகமான காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல மரங்கள் வீடுகளின்மீது வீழ்ந்ததில் அவை சேதமடைந்தன.

வடக்கில் 1,659 பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் 112 குடும்பங்களை சேர்ந்த 407 பேரும் முல்லைத்தீவில் 141 குடும்பங்களை சேர்ந்த 454 பேரும், வவுனியாவில் 9 குடும்பங்களை சேர்ந்த 29 பேரும், கிளிநொச்சியில் 172 குடும்பங்களை சேர்ந்த 585 பேரும், மன்னாரில் 50 குடும்பங்களை சேர்ந்த 184 பேருமாக 484 குடும்பங்களை சேர்ந்த 1,659 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேசமயம், யாழ்ப்பாணத்தில் ஒரு வீடு முழுமையாகவும் – 76 வீடுகளும், முல்லைத்தீவில் 141 வீடுகளும், வவுனியாவில் 7 வீடுகளும், கிளிநொச்சியில் 34 வீடுகளும், மன்னாரில் முழுமையாக ஒரு வீடும் பகுதியளவில் 11 வீடுகளுமாக வடக்கு மாகாணத்தில் 2 வீடுகள் முமுமையாகவும் 269 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

கிழக்கில் ஒருவர் பலி!

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியான மழை மற்றும் கடும் குளிரான காலநிலையால் ஒருவர் உயிரிழந்தார். மட்டக்களப்பு வெல்லாவெளியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இதனிடையே, மட்டக்களப்பு மாவட்டத்தில் 44 குடும்பங்களை சேர்ந்த 173 பேரும், திருகோணமலையில் 71 குடும்பங்களை சேர்ந்த 251 பேரும், அம்பாறையில் 130 குடும்பங்களை சேர்ந்த 459 பேருமாக கிழக்கு மாகா ணத்தில் 245 குடும்பங்களை சேர்ந்த 883 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் 44 வீடுகளும், திருகோணமலையில் 68 வீடுகளும், அம்பாறையில் 129 வீடுகளுமாக கிழக்கு மாகாணத்தில் 241 வீடுகள் சேதமடைந்துள்ளன.

275 மாடுகள் பலி!

கிளிநொச்சி, முல்லைத்தீவு, திரு கோணமலை மாவட்டங்களில் 275இற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்தன. கிளிநொச்சி மாவட்டத்தில் 165 மாடுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 மாடுகளும், திருகோணமலையில் 50 மாடுகளும் உயிரிழந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலுக்கு தீர்வு காணப்பட வேண்டும் – ஜே.வி.பி யின் விஜித ஹேரத்

இந்திய படகுகள் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்தால் துப்பாக்கியால் சுடுவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் போது குறிப்பிட்டார்.

அவர் தற்போது ஜனாதிபதி ஆகவே ஒரு தீர்மானம் குறித்து அவதானம் செலுத்தலாம் என மக்கள் விடுதலை முன்னணியின்  பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கடற்றொழில் அமைச்சரிடம் குறிப்பிட்டார்.

இதேவேளை ஜனாதிபதி எனக்கு முழு அதிகாரம் வழங்கியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்.

இலங்கை -இந்திய பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிடப்படுகிறதே தவிர தீர்வு எட்டப்படவில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (டிச. 06) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்  திட்டத்தில் விவசாயம்,நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் ஆகிய அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

விவசாயம்,கடற்றொழில் மற்றும் நீர்பாசனம் ஆகிய அமைச்சுக்கள் நாட்டின் தேசிய உற்பத்தி தொழிற்துறையை இலக்காக கொண்டவை.1977 ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியில்  விவசாயத்துறை 30 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது.

ஆனால் தற்போது மொத்த தேசிய உற்பத்தியில் விவசாயத்துறை 6.2 சதவீத பங்களிப்பை மாத்திரம் வழங்குகிறது. இதை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது.

இதுவே அரசாங்கம் செயல்படுத்திய செயற்திட்டங்களின் பெறுபேறு. முன்னாள் ஜனாதிபதி கோட்டய ராஜபக்ஷ தூரநோக்கற்ற வகையில் விவசாயத்துறையில் செயற்படுத்திய தீர்மானங்கள்  இன்று முழு விவசாயத்துறையும் முழுமையாக இல்லாதொழித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

எவ்வித தடையும் இல்லாமல் சிறுபோகம் மற்றும் பெரும்  போகத்திற்கு உரம் கிடைத்த போது ஒரு வருடத்திற்கு 34 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி விவசாயிகள் உற்பத்தி செய்வார்கள்.

ஒருவருடத்திற்கு 24 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி மொத்த சனத்தொகையின் கொள்வனவிற்கும் போதுமானதாக அமைந்தது, ஒருவருடத்திற்கு  மேலதிகமாக 10 இலட்சம் அரிசி உற்பத்தி செய்யப்பட்டது.ஆனால் கோட்டாபய ராஜபக்ஷவின் விவசாய கொள்கையினால் முழு விவசாயத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

விவசாய நடவடிக்கைகளுக்கு முழுமையான உரம் வழங்கப்படும் என அரசாங்கம் பேச்சளவில் குறிப்பிடுகிறதே தவிர செயலளவில் ஏதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. வாக்குறுதிகளை வைத்துக் கொண்டு விவசாயிகளினால் விவசாயம் செய்ய முடியாது. உர பிரச்சினைக்கு இதுவரை அரசாங்கம் சிறந்த தீர்வை பெற்றுக்கொடுக்கவில்லை.

நெனோ நைட்ரஜன் உர இறக்குமதிக்கு மக்கள் வங்கியில் தனிப்பட்ட கணக்கு எவ்வாறு திறக்கப்பட்டது. அரசாங்கம் உரம்  இறக்குமதி செய்யும் போது எவ்வித முறைகேடும் இடம்பெறவில்லை என முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த குறிப்பிட்டார்.

ஆனால் தற்போது குறிப்பிடுகிறார். உரம் இறக்குமதிக்கும் தனது அமைச்சுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்கிறார். இந்த உர இறக்குமதி தொடர்பில் இன்று பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த முறைகேட்டினால் இழக்கப்பட்ட அரச வருமானத்திற்கு யார் பொறுப்பு என்பது இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

ஒரு கிலோகிராம் நெல்லுக்கான உத்தரவாத விலை 90 ரூபாவாகவே காணப்படுகிறது. வி வசாயிகளின் உற்பத்திக்கு செலவுக்கு  கூட உத்தரவாத விலை சாதகமாக அமையவில்லை.

இவ்வாறான பின்னணியில் விவசாயிகள் எவ்வாறு தொடர்ந்து விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். 2023 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை. 350 கோடி ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே மீன்பிடி துறையில் ஒருபோதும் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது.

நீர்கொழும்பு களப்பு பகுதிகளில் இயற்கை அம்சங்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன. நாட்டில் உள்ள களப்புக்களில் இரசாயன பதார்த்தங்கள் மாசுப்படுத்தப்படுகின்றன.

ஆகவே  களப்பு அபிவிருத்தி அதிகார சபையை ஸ்தாபிக்குமாறு பலமுறை அறிவுறுத்தியும் இதுவரை அது செயற்படுத்தப்படவில்லை.

ஒலுவில் துறைமுகம் தவறான திட்ட அபிவிருத்தியாகும்.இன்று வெறும் கட்டடம் மாத்திரமே மிகுதியாக உள்ளது.வாழைச்சேனை துறைமுகத்தில் அடிப்படை வசதிகளில் பாரிய குறைபாடு காணப்படுகிறது.

ஆகவே ஒலுவில் துறைமுகத்தில் தேங்கியுள்ள மண்ணை  அகற்றுவதற்கு நோர்வே அரசாங்கம் வழங்கிய இயந்திரத்திற்கு நேர்ந்தது என்ன என்பதை கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட வேண்டும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு மூன்று மாத காலவகாசம் வழங்குங்கள். அபிவிருத்தி பணிகள் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய விஜித ஹேரத் இலங்கை –இந்திய பிரச்சினை தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாக உள்ளது.

கிளிநொச்சி,யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்ளது.

இதனால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இருதரப்பு இணக்கப்பாட்டுக்கு வந்து எல்லை அடிப்படையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

ஆழ்கடல் மீன்பிடி மற்றும் சாதாரண மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

எரிபொருள் விலையேற்றம் அவர்களின் உழைப்பை தீர்மானிக்க முடியாத நிலையில் உள்ளது. மீனவர்களுக்கு முறையான காப்புறுதி கிடைக்கப்பெறுகிறதா என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது.

இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் இலங்கை கடற்பரப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் ஒட்டுமொத்த மீனவர்களும் ஏதாவதொரு வழிமுறையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு முழுமையாக வழங்கப்படவில்லை. சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா? நட்டஈடு மதிப்பிடப்பட்டுள்ளதா? சட்ட நடவடிக்கை என்ன இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண கடற்றொழில் அமைச்சு துரிதமாக  செயற்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய அமைச்சர் டலஸ் டக்லஸ் தேவானந்தா இலங்கை இந்திய பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை மேற் கொள்ளப்பட்டுள்ளது,தீர்வு காண்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் பெரிய படகுகளில் வருகிறார்கள்.

ஆனால் எதுவு மில்லை. இலங்கை மீனவர்கள் சிறிய படகுகளை பயன்படுத்துகிறார்கள். கைப்பற்றப்பட்டுள்ள இந்திய படகுகளை திருத்தி அதனை இலங்கை மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய விஜித ஹேரத் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் போது மன்னார் மாவட்டத்திற்கு சென்று ‘இந்திய படகுகள் வந்தால் சுடுவேன்’ என்றார் தற்போது அவர் ஜனாதிபதி ஆகவே உங்களுக்கு தீர்மானம் எடுக்க முடியும் என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர் (ஜனாதிபதி) எனக்கு முழுமையான அதிகாரம் வழங்கியுள்ளார்,அவதானம் செலுத்தப்படும் என்றார்.

வட – கிழக்கு மாகாண வீட்டுத் திட்டங்களை இடையில் நிறுத்தாமல் முடித்துத் தாருங்கள் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி கோரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைநிறுத்தப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தை துரிதமாக நிறைவு செய்ய எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். எமது மக்கள் படும் துன்பம் குறித்து கரிசனை கொள்ளுங்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

எவ்வித திட்டமிடலும் இல்லாத வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தினால் அப்பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

இடைநிறுத்தப்பட்டுள்ள நிர்மாண பணிகள் மீள ஆரம்பிக்கப்படும்.புதிய வீடமைப்பு திட்டங்கள் ஏதும் ஆரம்பிக்கப்படமாட்டாது என வீடமைப்புத்துறை அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  சனிக்கிழமை (டிச. 03) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நல்லாட்சி அரசாங்கத்தில் நன்மை என்று கருதி செய்த விடயங்களில் வீட்டுத்திட்டம் உரிய இலக்கை அடையவில்லை. வீட்டுத்திட்டம் சிறந்ததாக அமைந்திருந்தால் இன்று ஏழ்மை நிலையில் வாழும் மக்கள் நன்மை அடைந்திருப்பார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தில் அறிமுப்படுத்தப்பட்ட வீட்டுத்திட்டத்தினால் ஏழ்மையில் வாழந்த மக்கள் இன்று மென்மேலும் பாதிக்கப்பட்டு, வங்கி கடனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

வீட்டுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதியுதவி இதுவரை முழுமையாக மக்களுக்கு கிடைக்காததால் மக்கள் அரைகுறை குடியுறுப்புக்களுடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்களை பிறிதொரு அரசியல் கொள்கை கொண்ட கட்சி ஆட்சிக்கு வரும் போது அந்த அபிவிருத்தி திட்டத்தை கண்டு கொள்வதில்லை.

வீட்டுத்திட்ட கடனால் பெரும்பாலானோர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்கள். பலர் சொல்லனா பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே மக்கள் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள்.

ஒரு அரசாங்கம் எடுத்த செயற்திட்ட அபிவிருத்தி பணிகளை தொடர கூடாது என்ற நிலைப்பாடு அரசுகளுக்கு இருக்க கூடாது. வீட்டுத்திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு என்ன தீர்வு, நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதியாக உள்ளார் என்றார்

வட மாகாணத்தை இலக்காக கொண்டு சுற்றுலாத்துறையை, கைத்தொழிலை விரிவுபடுத்த விசேட கவனம் – ஹரின்

கொழும்பில் இருந்து யாழ். பலாலி விமான நிலையத்துக்கான ‘லயன் எயார்’ விமான சேவை இம்மாதம் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.

வடக்கு மாகாணத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை விரிவுபடுத்த விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (டிச. 2) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுற்றுலாத்துறை, சுற்றாடல் துறை மற்றும் வனஜீவராசிகள் ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளலாம்; ஆலோசனைகளை முன்வைக்கலாம்.

யாழ்.பலாலி விமான நிலையத்துக்கான ‘லயன் எயார்’ விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை சேவையை மேம்படுத்துவது பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மேம்பாட்டுக்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம் என்றார்.

ஆளுநரின் செயற்பாடு தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிடுவோம் – சீ.வீ.கே. சிவஞானம்

வடக்கு ஆளுநரால் நிறைவேற்றப்பட்ட நியதி சட்டம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளோம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம் தெரிவித்தார்.

கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்,

வடக்கு ஆளுநர் கடந்த 27 திகதி இரண்டு நியதி சட்டங்கள் என்று சொல்லப்படுகின்ற இரண்டினை வர்த்தமானியில் பிரசித்துள்ளார். ஒன்று வாழ்வாதாரம் தொடர்பான விடயம் மற்றையது சுற்றுலா தொடர்பான விடயங்கள் என்ற இரண்டு நியதிச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.

இந்த இரண்டுமே ஆளுநருடைய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதும் சட்டவிரோதமானதும் முறையற்றதுமான மாகாண சபைகள் சம்பந்தமான அரசியலமைப்பு மற்றும் மாகாண சபைகள் கட்டளை சட்டத்திற்கு முரணானது.

மாகாண சபை சட்டத்தின் படி ஆளுநர் தனது அதிகாரங்களை ஜனாதிபதியின் பணிப்புரையின் பெயரால் செயற்படுத்த முடியும் என்றுள்ளது.

எனவே ஆளுநருக்கு சட்டவாக்க அதிகாரம் எந்த இடத்திலும் கொடுக்கப்படவில்லை, எந்த இடத்திலும் ஆளுநர் சட்டம் இயற்றலாம் என்று குறிப்பிடப்படவில்லை.

இவர் துணிவாக எதேச்சாதிகாரமாக தனது இரண்டு நியதி சட்டங்களை பிரகடனப்படுத்தியுள்ளார்.

இருக்கக்கூடிய அதிகாரங்களையும் ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஆளுநர் பறித்தெடுக்கின்றார் என்பதே விடயம். அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இது பாரதூரமான ஒரு விடயம் அரசியல் ரீதியாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம். எங்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களையும் பறிக்கக் கூடிய ஒரு செயற்பாடாக காணப்படுகின்றது.

இந்த விடயத்தில் விழிப்பாக நாங்கள் இருக்க வேண்டியதுமாகும், ஆளுநர் எதேச்சாதிகாரமாக கேட்பதற்கு யாரும் இல்லை என்ற நிலையில் செயற்படுகின்றார்.

எனவே இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவதற்கு நாங்கள் தீர்மானித்து உள்ளோம். உடனடியாகவே ஜனாதிபதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கும் இந்த விடயத்தினை உடனடியாக தெரியப்படுத்துவதற்கு நாங்கள் தீர்மானித்து உள்ளோம் என்றார்.

வடக்கு ஆளுநரை சந்தித்த ஐ.நா பிரதிநிதிகள்

யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட  ஐ.நாவுக்கான சிறப்பு அதிகாரிகள் நேற்று (19) குழு வட மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன் போது எதிர்கால வடக்கு அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதுடன் வடக்கு அபிவிருத்திக்கு தமது தொடர்ச்சியான பங்களிப்பு இருக்கும் என ஐ.நா நிறுவனப் பிரதிநிதிகள் ஆளுநருக்கு தெரிவித்தனர்

குறித்த சந்திப்பில் ஐ.நாவின் ஆசிய பசுபிக் பிராந்திய அரசியல் விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி பீட்டர் நிக்கோலஸ் டியு, மற்றும் இலங்கைக்கான ஐ.நா  பதிவிட பிரதிநிதி ஹான சிங்கர் மற்றும் ஐக்கிய நாடுகள் நிறுவன அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – ரணில்

காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்களை நியமிக்க உள்ளதாகவும் இதன்மூலம் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) முற்பகல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றதுடன், அந்த மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

மாகாணத்தில் காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுகள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வடமாகாணத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக வடமாகாணத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

வடக்கில் இதுவரையில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேவையான தீர்வுகளை வழங்குவதற்கு அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

செட்டிகுளம் பிரதேசத்தின் காணிப்பிரச்சினை தொடர்பில் மத்தியஸ்தம் செய்து 03 மாதங்களுக்குள் தீர்வுகாணுமாறு வவுனியா மாவட்ட செயலாளருக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, இது தொடர்பில் நீதியமைச்சு மற்றும் காணி அமைச்சிடம் விசாரணை செய்வதாகவும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

வடமாகாண மக்களின் வீட்டுப் பிரச்சினை தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், வடமாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளதாகவும், அதற்கு மேலும் சுமார் மூவாயிரம் மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடளாவிய ரீதியில் தற்போது பல வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், வடக்கு மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு விரைவான தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

வவுனியா குளம் மற்றும் திருக்குளம் குளத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களின் தேவைகள் குறித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைத்தல், உரப்பிரச்சினைக்கு தீர்வு காணல் மற்றும் விநியோக நடவடிக்கைகளை சீர்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
வடமாகாணத்தில் நிலவும் சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் வைத்தியர் பற்றாக்குறை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி தேவையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

வடபகுதியில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிப்பு

யாழ். போதனா  வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை பிரிவில் கடந்த வருடத்தோடு  ஒப்பிடும்போது இந்த வருடம் சுமார்  3,000க்கும் மேற்பட்ட நீரிழிவு  நோயாளர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்படுவதாக யாழ். போதனா  வைத்தியசாலை நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி விசேட வைத்திய நிபுணர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

வடபகுதியில் நீரிழிவு நோயின் தாக்கம் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

நீரிழிவு நோயின்  தாக்கம் தொடர்பில் மிக அண்மைய  தரவுகளின் படி கொழும்பு மாகாணத்தில் குறிப்பாக மேல் மாகாணத்தில்  30% மானோருக்கு நீரிழிவு நோயின்  தாக்கம் காணப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 15% சதவீதமானவர்களுக்கு நீரிழிவு நோயின்  தாக்கம் காணப்படுகின்றது.

நீரிழிவு நோய் தொடர்பிலான ஆய்வுகளை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம்.

யாழ்.  போதனா  வைத்தியசாலையில் நீரிழிவு சிகிச்சை பிரிவை எடுத்துக் கொண்டால் கடந்த வருடத்தோடு  ஒப்பிடும் போது இந்த வருடம் சுமார்  3,000-க்கும் மேற்பட்ட நோயாளர்கள் புதிதாக பதிந்திருக்கின்றார்கள்.

அதாவது நீரிழிவு நோயின் தாக்கமானது சிறிது சிறிதாக அதிகரித்துச் செல்வதனை   காணக்கூடியதாக உள்ளது.

உலகளாவிய ரீதியில் அதிகரிப்பது போல  வளர்முக நாடுகளில் குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளில்  எமது வடபகுதியில் இந்த நீரழிவு நோயின் தாக்கமானது அதிகரித்து காணப்படுகின்றது

நவம்பர் மாதம் உலகளாவிய ரீதியில் நீரிழிவு விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக இந்த உலக நீரிழிவு விழிப்புணர்வு வாரத்தில்  யாழ். மாவட்டத்தில் பல செயற்திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளது.

மிக முக்கியமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் நீரழிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமானது.

கடந்த இரண்டு மூன்று வருடங்களாக நீரிழிவு தாக்கமானது வடபகுதியில் அதிகரித்து செல்வதனை காணக்கூடியதாகவுள்ளது.

வடமாகாணத்தில் இளைஞர், யுவதிகள் மத்தியில் நீரிழிவின் தாக்கமானது அதிகரித்து செல்வதை காணக் கூடியதாக உள்ளது. இவ்வாறு நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்துச் செல்வதற்கு மிக முக்கியமான காரணமாக அமைவது எமது வாழ்க்கை நடைமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள்.

குறிப்பாக சொல்லப் போனால் தவறான உணவு பழக்க வழக்கங்கள் அப்பியாசம் அற்ற வாழ்க்கை முறை என்பன மிக முக்கியமான காரணங்களாக உள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் இந்த மேலைத்தேய உணவுகள் துரித உணவுகளில்  நாட்டம் அதிகரித்து செல்வதனால் நீரிழிவின் தாக்கமானது அதிகரித்துச் செல்வதை நாங்கள் காணக்கூடியதாக உள்ளது. அதேபோல உடல் அப்பியாசம் உடற்பயிற்சி செய்வது குறைவடைவது ஒரு மிக முக்கியமான காரணமாகும்.

அதேபோல்  மன அழுத்தம், நித்திரை குறைவு போன்ற பல காரணங்களும் இதற்கு ஏதுவாக  அமைகின்றன.

ஆகவே, நீரிழிவு விழிப்புணர்வு மாதத்தில் மக்களுக்கு நீரிழிவு நோய் என்றால் என்ன என்பது  தொடர்பான விழிப்புணர்வு அவசியமாகும்.

நீரிழிவு நோய்  ஏற்படும்போது சில அறிகுறிகள் ஏற்படும். அந்த அறிகுறிகளை நாங்கள் அடையாளம் கண்டு உரிய முறையில் சிகிச்சை மேற்கொள்ளும்போது குறித்த நோயிலிருந்து  தப்பித்துக் கொள்ள முடியும்.

இல்லாவிட்டால் அந்த நீரழிவு நோயானது ஒரு பாரிய நோயாகும் உலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் நோயாகும்

எனவே வட பகுதியில் உள்ள மக்கள் இந்த நீரிழிவு நோய் தொடர்பில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்றார்.