இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் ; பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

இலங்கையில் இன்னமும் நம்பத்தகுந்த நல்லிணக்கப்பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கவலை வெளியிட்டிருக்கும் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

பிரிட்டனில் ஏற்பாடு செயப்பட்டிருந்த தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர்.

பிரிட்டனில் வாழும் தமிழர்கள் அந்நாட்டுக்கு வழங்கியுள்ள பங்களிப்பை நினைவுகூர்ந்திருக்கும்  பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் எட் டெவி, தமிழர்களுக்கு எதிரான தொடர் அடக்குமுறைகள் மற்றும் சுயநிர்ணய உரிமையை உறுதிசெய்வதில் நிலவும் பின்னடைவு என்பவற்றை மனதிலிருத்திச்செயற்படவேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள அவர், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனேடிய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட தடையை வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு அவர்கள் இருவருக்கு எதிராகவும் பிடியாணை பிறப்பிக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் ரிம்ஸ், இருப்பினும் நம்பத்தகுந்த நல்லிணக்கப்பொறிமுறையொன்று இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான லூயிஸ் பிரென்ச், டோன் பட்லர், சாரா ஜோன்ஸ் மற்றும் தெரேஸா வில்லியர்ஸ் ஆகியோர் தமிழ் மக்களுடனான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதுடன் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு தாம் அரசியல் ரீதியில் மேற்கொள்ளவேண்டிய மேலும் பல விடயங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு முழுமையான ஆதரவு வழங்குங்கள்; 6 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அமெ. காங்கிரஸிடம் கோரிக்கை

தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறும் தமிழ் அரசியல் நிலையை ஜனநாயக ரீதியில் நிர்ணயித்துக்கொள்வதை முன்னிறுத்தி சுதந்திரமான சர்வஜன வாக்கெடுப்புக்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்காவின் 6 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்விற்காக இதனை முன்னெடுக்குமாறு 6 அமைப்புகளும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.

1. உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு
2. வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு
3. நியூயோர்க் இலங்கை தமிழ் சங்கம்
4. இலங்கையின் சமத்துவம் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு
5. ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் நடவடிக்கை குழு
6. உலகத்தமிழர் அமைப்பு

ஆகிய 6 அமைப்புகளே அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு கூட்டாக கடிதமொன்றை அனுப்பியுள்ளன. புத்தாண்டு புதிய நம்பிக்கைகளைக் கொண்டு வருவதைப் போன்று, இலங்கையில் 7 தசாப்த காலத்துக்கும் மேலாக தொடரும் இனப்பிரச்னைக்கான தீர்வினை வழங்குவதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதி செய்வற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு காங்கிரஸை வலியுறுத் துவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தம், தமிழ் மக்கள் மீது மிக மோசமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 3 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமலாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில், இறுதிக்கட்ட போரின் போது, சுமார் 1,46,679 தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என தெரியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் கருத்து தெரிவித்திருந்ததுடன், ‘இனப்படுகொலையை தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தவறியிருப்பதாக’ அவர் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் தமிழ் மக்களின் அரசியல் அடையாளத்தை சுதந்திரமாக நிர்ணயித்துக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் விவகாரத்தில், சர்வதேச சட்டங்கள் அனுசரிக்கப்படுவதை அமெரிக்கா உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறித்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இவ்வாறான பின்னணியில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதை முன்னிறுத்திய அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் பயன்படுத்துமாறும், இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது என்ற விடயத்தை ஏற்றுக்கொள்ளுமாறும் வலியுறுத்துவதாக 6 புலம் பெயர் தமிழர் அமைப்புகள் அமெரிக்க காங்கிரஸிடம் கோரியுள்ளன.

யாழ் மாவட்டத்தில் 402 உள்ளூராட்சி உறுப்பினர்களை தெரிவு செய்ய 4111 வேட்பாளர்கள்

யாழ். நிர்வாக மாவட்டத்தில் 17 உள் ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 4111 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாண தேர்தல்கள் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- யாழ். நிர்வாக மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இம்முறை போட்டியிடும் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இந்த முறை தேர்தலில் யாழ்.மாவட் டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 15 சுயேச் சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 13 அரசியல் கட்சிகள் சார்பில் 135 வேட்புமனுக்களும் 15 சுயேச்சைக் குழுக் கள் சார்பில் 15 வேட்புமனுக்களுமாக 150 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டு தேர்தலுக்குரிய வேலைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.

இந்த முறை தேர்தலில் வாக்களிப் பதற்கென யாழ்.மாவட்டத்தில் 4 லட் சத்து 86 ஆயிரத்து 423 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளார்கள். அவர்கள் வாக்களிப்பதற்காக 514 வாக்களிப்பு நிலையங்கள் யாழ்.மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இம்முறை உள்ளூராட்சி மன்ற சட்டத்திற்கிணங்க அந்தந்த வட்டாரங்களிலேயே வாக்குகள் எண்ணப்பட்டு வட்டாரங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவேண்டிய நிலையில் உள்ளோம்.

அந்த வகையில் 243 வாக்கு எண்ணும் நிலையங்கள் யாழ். மாவட்டம் முழுவதும் அமைக்கப்படவுள்ளன. அந்த 243 வாக்களிப்பு நிலையங் களில் வாக்குகள் எண்ணப்பட்டு வட்டார தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பின்னர் மாவட்ட ரீதியாக முடிவுகள் அறிவிக்கப்படும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கும் வட்டார அடிப்படையில் 243 உறுப்பினர்களும் கட்சிகள் பெற்றுக்கொள்கின்ற வாக்குகளின் அடிப்படையில் தெரிந்து அனுப்பப்பட வேண்டிய 159 வேட்பாளர்களு மாக 402 உறுப்பினர்கள் 17 சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ளனர்.

இந்த 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக யாழ். மாவட்டத்தில் 4111 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 13 கட்சிகள் சார்பில் 3686 வேட்பாளர்களும் 15 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 425 வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர்.

இதன் அடிப்படையில் மொத்த வாக்காளர் தொகையிலேயே 0.85 வீதமான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது என்றார்.

பிரான்ஸ் செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்

கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் பிரான்சின் ரீயூனியன் தீவுக்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டு அந்நாட்டு அதிகாரிகளால் விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட 38 இலங்கை பிரஜைகளும் புதன்கிழமை (25) இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தது.

நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 2022 டிசெம்பர் 1 ஆம் திகதி ஐந்து பணியாளர்களுடன் புறப்பட்ட பலநாள் மீன்பிடி இழுவை படகு, புத்தளம் பத்தலங்குண்டுவவிலிருந்து 03 டிங்கி படகுகள் மூலம் மாற்றப்பட்ட 64 சட்டவிரோத குடியேற்றவாசிகளை டிசெம்பர் 13ஆம் திகதி ஏற்றிச் சென்றதாக கடற்படை தெரிவித்தது.

ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற குழுவினரை ஜனவரி 14ஆம் திகதி கைது செய்த அந்த தீவின் அதிகாரிகள், கைது செய்யப்பட்ட குழுவை அந்நாட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, ஜனவரி 25ஆம் திகதி அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் படகில் பணிபுரிம் 03 ஆண்கள் உட்பட 33 ஆண்களும் 18 வயதுக்கு மேற்பட்ட 02 பெண்களும், 18 வயதுக்குட்பட்ட 02 ஆண்களும் 01 பெண்ணும் உட்பட 38 பேர் அடங்குகின்றனர்.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த கடத்தலுக்கு தலைமை தாங்கிய கல்பிட்டி மற்றும் கண்டி பிரதேசங்களை சேர்ந்த ஆட்கடத்தல்காரர்கள், நபரொருவருக்கு 4 இலட்சம் ரூபாயிருந்து 10 இலட்சம் ரூபாயை வசூலித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் மருந்துத் தட்டுப்பாட்டை நீக்க உலக சுகாதார நிறுவனம் தலையிடவேண்டும்

அதிகாரிகளின் அலட்சியத்தால் நாடு எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கையிலுள்ள அலுவலகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

நாட்டில் நிலவி வரும் மருந்து தட்டுபாட்டை நீக்குவதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மூவர் கொண்ட குழுவை அமைத்து, இந்த குழுவின் ஊடாக இந்த மருந்து தட்டுபாட்டை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் என்ன போன்ற விடயங்கள் தொடர்பாக ஆலோசனை செய்து, சுகாதார அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி, ஆகியோருக்கு தெளிவாக கூறியிருந்த நிலையில், தற்போது நாடளாவிய ரீதியில் பெரிய வைத்தியசாலைகள் தொடக்கம் சிறிய வைத்தியசாலைகள் வரை இந்த மருந்து தட்டுபாடு நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்த நிலைழைய தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சு உடனடியாக நிலையான தீர்வை முன்வைக்க தவறியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள், வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே, தற்போது ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாடு, மருந்து விலை அதிகரிப்பு, மருந்து கொள்வனவில் ஏற்படும் ஊழல் விடயங்களை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க உலக சுகாதார ஸ்தாபனம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க கோரி, கொழும்பிலுள்ள உலக சுகாதார ஸ்தாபன அலுவலகத்தில் ​நேற்று (26) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அத்துடன், உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ச்சியாக இலங்கைக்கு மருந்து பொருட்களை வழங்க உதவி செய்ய வேண்டும் என்ற கோரரி்கைகையும் விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

நட்டஈடு எங்களுக்கு வேண்டாம் சுவீகரித்த காணிகளே வேண்டும் ; வலி வடக்கு மக்கள் கோரிக்கை

“காணிகளுக்கான நட்டஈடு தேவையில்லை காணிகளே எமக்கு தேவை. காணிகள் இல்லாமல் 30 வருடங்களாக வாடகை வீட்டில் இருந்து துன்பப்படுகிறோம், விவசாயம் செய்த காணி தற்போது விவசாயம் செய்யாமல் கூலி தொழிலுக்கு செல்கிறோம். காணியின் பெறுமதி தற்போதைய சூழ்நிலையில் ஒரு ஏக்கர் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக மாக இருக்கும்”

ஆனால் இவர்கள் என்ன பெறு மதியை தரப்போகிறார்கள், வய தான காலத்தில் எங்களுக்கு என்று ஒரு காணி கூட இல்லாமல் தெரு வில் நிற்கிறோம்.” -இவ்வாறு தெரிவித்துள்ளனர் வலி.வடக்கில் அரசினால் சுவீகரிக் கப்பட்ட காணிகளின் உரிமை யாளர்கள்.

பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான காணி விஸ்தரிப்புக்காக கடந்த காலங்களில் மக்களின் காணிகள் சுவீ கரிக்கப்பட்டடிருந்தன. வலி.வடக்கு பிரதேச மக்களின் காணிகள் நீண்ட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வந்தன. இந்தநிலையில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் வலி.வடக்கு பிரதேசத்தில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்து சென்றனர்.

இவ்வாறான நிலையில் பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப் பட்ட காணிகளின் உரிமையாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நேற்று முன் தினம் தெல்லிப்பளை பிரதேச செயலகத் தில் நடைபெற்றது.

இந்த நடவடிக்கையில் தெல்லிப் பளை பிரதேச செயலாளர் எஸ்.சிவசிறி, நிலஅளவை திணைக்களம், விலை மதிப் பீட்டு அதிகாரிகள், கிராம சேவகர்கள் ஈடுபட்டனர்.

இப்பதிவு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினர்.

எங்களுக்கு நட்ட ஈடு எதுவும் தேவை யில்லை. எமது சொந்தக் காணிகளே வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.

மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் பேசாத ரணிலின் சர்வகட்சி மாநாட்டை மலையகக் கூட்டணி புறக்கணிப்பு

ரணில் விக்கிரமசிங்கவின் சர்வ கட்சி மாநாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துக்கொள்ளாது என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உங்கள் அறிவிக்கப்பட்ட செயற்பாட்டில், இந்திய வம்சாவளி மலையக தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடனும், எமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் பேசுங்கள்” என நாம் திரும்ப, திரும்ப ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் கோரினோம்.

“எமது பிரச்சினைகள் பற்றி பேச உங்கள் தலைமையில் விசேட அதிகாரம் கொண்ட குழுவை நியமியுங்கள்” எனவும் கோரியுள்ளோம்.ஆனால், பகிரங்க மேடைகளில் இருந்து கூறப்பட்ட சில கருத்துகளை தவிர, இது தொடர்பில் இதுவரை ஜனாதிபதி விக்கிரமசிங்க அதிகாரபூர்வமாக எதுவும் செய்யவில்லை.

ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, பொறுப்பு கூறல் தொடர்புகளில் வடகிழக்கு கட்சிகளுடன் நடத்தப்படும் பேச்சுகளை நாம் முழு மனதுடன் வரவேற்கிறோம்.ஆனால், மலையக தமிழரின்  அரசியல் அபிலாஷைகள் இன்று “தோட்ட வரம்புகளுக்கு” வெளியே வளர்ந்து விட்டன என்பதை அனைத்து தரப்பினரும் அறிய வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினை என்பது இன்று வடக்கு கிழக்கை மட்டும் மையம் கொண்டதல்ல, அது தேசியமயமானது என்பதை அரசு புரிந்துக்கொள்ள வேண்டும்.தமிழ் முற்போக்கு கூட்டணி, ஒரு எதிரணி கட்சியாக இருந்தாலும்கூட, “தேசிய இன பிரச்சினை தொடர்பில் பேச்சுகளை நடத்த ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இருக்கிறதா” என நாம் கேள்வி எழுப்பவில்லை.

இந்நாட்டின் பிரதான பிரச்சினை தேசிய இன பிரச்சினை ஆகும். இந்நாட்டின் எந்தவொரு அரசு தலைவருக்கும் இதற்காக விசேட மக்களாணை அவசியமில்லை என்பது எமது நிலைப்பாடு.இந்த கருத்தை நாம் நமது வடகிழக்கு நட்பு கட்சிகளுடனும் பரிமாற்றி கொண்டுள்ளோம்.

ஆகவே, இன்று ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் இது தொடர்பான நடத்தையில் நாம் அதிருப்தியடைந்துள்ளோம்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகளுக்கு லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூட கிடையாது – ஜனாதிபதி

13ஆவது அரசியல் மறுசீரமைப்பை நீக்குங்கள் அல்லது 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள். எமக்கு நடுவில் இருக்க முடியாது. ஒன்றில் அதனை ஒழிக்க வேண்டும், இல்லையேல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என இன்று இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

“நான் நிறைவேற்று அதிகாரம் கொண்டவர். அந்த வகையில் இருக்கும் சட்டத்தை நான் நடைமுறைப்படுத்துவேன். எமது அரசியலமைப்பில் கடந்த 37 ஆண்டுகளாக 13ஆவது அரசியல் திருத்தம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நான் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். நான் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் யாராவது 22ஆவது மறுசீரமைப்பைக் கொண்டு வந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும். இங்கு என் மீது சத்தம் போடுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

எனவே இரண்டில் ஒன்று நடைபெற வேண்டும். 13ஆவது அரசியல் மறுசீரமைப்பை நீக்குகங்கள். அல்லது 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள். அதனை இல்லாமல் ஒழிக்காவிட்டால், எமக்கு நடுவில் இருக்க முடியாது. ஒன்றில் அதனை ஒழிக்க வேண்டும் இல்லையேல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தனிப்பட்ட பிரேரணையொன்றைக் கொண்டு வந்து யாருக்கு வேண்டுமானாலும் அதனை நீக்க முடியும். அதற்கு பெரும்பான்மையானோர் தமது விருப்பத்தை தெரிவிக்காவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அபப்டியாயின், 13ஐ நடைமுறைப்படுத்த நேரிடும்.

ஆனால் இதனால் நாடு பிளவுபடாது. விசேடமாக 13ஆவது அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவின் தீர்மானத்துக்கமைய பார்த்தால் நாம் ஒற்றையாட்சியில் இருக்கிறோம். அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு நான் உடன்படுகின்றேன்.

நாம் தற்போது உருவாக்கிக் கொண்டுள்ள மாகாண சபைகளுக்கு லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூட கிடையாது. லண்டன் நகரசபைக்கு இதனை விடவும் அதிகாரங்கள் உள்ளன. எனவே இதனை பெடரல் இராச்சியம் எனக் கூறமுடியுமென நான் நினைக்கவில்லை.

அதனை நடைமுறைப்படுத்தவில்லையென்றால் நாம் அதனை நீக்க வேண்டும். அரசியலமைப்பில் வைத்துக் கொண்டு அதனை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது சரியானதல்ல.” என்றார்

மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரம்; சர்வ கட்சி கூட்டத்தில் ஆளும் தரப்புகள் கடும் எதிர்ப்பு

மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்குவதற்கு ஆளும் தரப்பினர் சிலரே நேற்றைய சர்வகட்சி கூட்டத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின்பேரில் நேற்றைய தினம் சர்வகட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பேச்சு எழுந்தது. இதன் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படும்”, என்று உறுதியளித்தார்.

இதன்போது, ஆளும் தரப்பை சேர்ந்த கட்சிகளின் தலைவர்களே கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், தமது ஆதரவு இன்றி 13ஆம் திருத்தத்தை முழுமை யாக செயல்படுத்த முடியாது என்றும் அவர்கள் ஜனாதிபதியிடம் கூறினார்கள். இதற்கு, பதிலளித்த ஜனாதிபதி ஏற்கனவே சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்த நிறைவேற்று அதிகாரம் போதுமானது. பாராளுமன்றின் அனுமதி தேவையில்லை என்று கூறினார்.

இந்த சமயத்தில், தமிழ் மக்கள் கூட் டணியின் தலைவர் க. வி. விக்னேஸ்வரன், கடந்த காலங்களில் 13ஆம் திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்காக காலத்துக்கு காலம் வெளியிடப்பட்ட சுற்று நிரூபங்கள் மற்றும் அறிவித்தல்கள் தொடர்பில் எடுத்துக் கூறினார். அவ்வாறு வெளியிடப்பட்ட கட்டளைகளை நீக்குவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியதுடன், அது தொடர்பாக தாம் தயாரித்த ஆவணம் ஒன்றையும் ஜனாதிபதியிடம் கையளித்தார். இதன் பின்னர், இனப்பிரச்னைக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி இந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றுக்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

இந்த சமயத்தில், பேராசிரியர் திஸ்ஸ விதாரண, “கடந்த காலத்தில் இனப்பிரச்னை தீர்வுக்காக எனது தலைமையில் 127 கூட்டங்களை நடத்தி பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.”, என்று சுட்டிக் காட்டினார்.

அவருக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதியரசர் நவாஸ் தலைமையிலான குழு அந்த அறிக்கையை பரிசீலிக்கின்றது. அதிலிருக்கும் பரிந் துரைகள் தொடர்பிலும் கவனம் செலுத் தப்படும். இது தொடர்பான விடயங்களும் எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் என்றார். மேலும், இன்னும் இரண்டு கூட்டங்களில் இனப் பிரச்னைக்கான தீர்வு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதேசமயம், கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்த் தரப்பினர் உறுதியளிக்கப்பட்டபடி காணிகள் விடுவிக்கப்படாதமை தொடர்பில் தமது அதிருப்தியை வெளி யிட்டனர்.

இதற்கு உறுதியளித்தபடி இனங் காணப்பட்ட 100 ஏக்கர்கள் காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும். சில தடங்கல்கள் காரணமாக காணிகள் விடுவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 3ஆம் திகதிக்கு முன்னர் காணிகள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்தார்.

இதேபோன்று, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து விஜயதாஸ ராஜபக்ஷ தலைமையிலான குழு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. விரைவில் 15 அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்றும் மீண்டும் உறுதிமொழி அளிக்கப்பட்டது.

சர்வகட்சி கூட்டத்தில் தமிழ்த் தேசியத் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புளொட்டின் த. சித்தார்த்தன், ரெலோவின் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்கவில்லை. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இரா. சம்பந்தன், சுமந்திரன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் க. வி. விக்னேஸ்வரன் ஆகியோரே பங்கேற்றனர். இதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 74 ஆவது குடியரசு தின நிகழ்வு

இந்தியாவின் 74ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்றது.

இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

அதைத் தொடர்ந்து குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வில் தூதரக அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.