ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட,கிழக்கில் தனித்துப் போட்டி – ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் மாலை (ஜன. 10) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் தற்போதைய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது பற்றியும் எதிர்கால கட்சியின் செயற்றிட்டங்கள் பற்றியும் கலந்துரையாடும் நோக்கில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில்,

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வடக்கு, கிழக்கில் தனித்து தனது மரச் சின்னத்தில் போட்டியிடும்.

ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த தேர்தலில் தனித்தே போட்டியிடும். இதன் மூலம்  பலத்தையும் கண்டுகொள்ள முடியும்.

தேர்தல் முடிந்த பிறகு கூட்டமைப்பு அமைப்பது தொடர்பில் யோசிப்போம். இதற்கு சஜித் பிரேமதாஸவும் உடன்பாட்டை தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பலத்தை வெளிக்காட்டுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், அலி சாஹீர் மெளலானா, கட்சியின் தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜீட், செயலாளர் நாயகம் /ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர், கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் இறுதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதற்கான குழுவொன்று பிரதேச ரீதியாக அமைக்கப்பட்டது.

இலங்கையின் பொருளாதாரம் 2023 மேலும் வீழ்ச்சியடையும் – உலக வங்கி

இலங்கையின் பொருளாதாரம் 2023 இல் மீண்டும் வீழ்ச்சியடையும் என உலக வங்கிதெரிவித்துள்ளது.

உணவு மற்றும் எரிபொருளிற்கு செலுத்துவதற்கான அந்நிய செலாவணி இல்லாமல் போனதால் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததால் இறக்குமதிகள் வீழ்ச்சியடைந்தன இதன் காரணமாக இலங்கையின் உற்பத்தி 2022 இல் 9.2 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என மதிப்பிடப்படுவதாக உலகவங்கி தெரிவித்துள்ளது.

2023 ம் ஆண்டிற்கான உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் குறித்த அறிக்கையிலேயே உலக வங்கி இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையின் அதிகாரிகள் ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை உணவு மருந்து எரிபொருள் தட்டுப்பாடுகளை மக்கள் எதிர்நோக்குவது குறித்து உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது.

நெருக்கடி மற்றும் அதன் விளைவுகள் வறுமையை அதிகரித்துள்ளதுடன் கடந்த தசாப்த காலத்தில் பெறப்பட்ட பலாபலன்களை இல்லாமல் செய்துள்ளன எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த வருடம் 4.3 வீதத்தினால் வீழ்ச்சியடையும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

தொடரும் அந்நியசெலாவணி பிரச்சினைகள் உயர் பணவீக்கத்தின் தாக்கம் முக்கிய வர்த்தக  சகாக்களின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி காரணமாக  2023ம் ஆண்டு குறித்து முன்னர் எதிர்வுகூறப்பட்டவற்றை மாற்றவேண்டிய நிலையேற்பட்டுள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.

தென்னாசிய குறித்து தெரிவித்துள்ள உலக வங்கி உக்ரைன் யுத்தத்தின் தாக்கங்களை இந்த பிராந்தியம் தொடந்தும் அதிகரிக்கின்றது என தெரிவித்துள்ளது.

தென்னாசிய பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி 2023 இல் 5.3 வீதமாக காணப்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

தமிழ் அரசு கட்சி வெளியேறிய பின் கூட்டமைப்பு பலமடைந்துள்ளது; கஜேந்திரகுமாரும் இணைந்துகொள்ள வேண்டும்: செல்வம் எம்.பி அழைப்பு

தமிழரசுக் கட்சி வெளியேறினாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்கள் மீள இணைந்துள்ளமையால் இந்த கூட்டு பலமடைந்துள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இந்த கூட்டில் இணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அலுவலகத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியை சந்திக்க செல்கின்ற போது நிலங்களை சுவீகரிக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி, எடுக்கப்பட்ட நிலங்களை மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கும் செயலை செய்ய வேண்டும் எனக் கோரினோம். அதேபோல் அரசியல் கைதிகளின் விடுதலை சம்மந்தமாக பேசியதுடன், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினோம். காணாமல் போனோர் சம்மந்தமான பிரச்சனை தொடர்பிலும் பேசினோம். இவ்வாறான விடயங்களை உடனடியாக செய்ய வேண்டும் என 31 ஆம் திகதி காலக்கெடு கொடுத்து இருந்தும் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. இவை தொடர்பில் ஒன்றுமே நடைபெறவில்லை.

இதனை நாம் ஜனாதிபதிக்கு நேற்று (10) தெரியப்படுத்தினோம். 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரும் போது நிலம் சம்மந்தமாக தான் சில தீர்மானங்களை எடுப்பதாகக் கூறினார். காணி பறிப்பு தொடர்ந்தும் பறிக்கப்படுகின்றது.

அரசியல் யாப்பில் உள்ள அதிகார பரவலாக்கல் சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஏற்கனவே அதிகாரங்கள் ஊடாக எடுக்கப்பட்ட சட்டங்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தோம். அதில் பொலிஸ், நில அதிகாரங்கள் சம்மந்தமாக சில முணு முணுப்புக்களை அங்கு காண முடிந்தது. எதிர்வரும் 4 ஆம் திகதி தீர்வை வழங்குவதாக சொல்லியிருந்தார். ஆனால் எதுவும் நடைபெறாமல் தொடர்ச்சியாக மேசையில் பேசி போகும் நிலைதான் காணப்படுகின்றது. ஆகவே, நாங்கள் கூறிய விடயங்களில் எதை செய்யப் போகின்றீர்கள் என்பதை வெளிப்படையாக சொல்லுங்கள் அதன் பின் நாம் தொடர்ந்து பேசுவதா, இல்லையா என தீர்மானம் எடுப்போம் எனத் தெரிவித்தோம். அரசியல் யாப்பில் உள்ள சட்டங்களை கூட நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் எப்படி இனப் பிரச்சனையை தீர்க்க முடியும். நாங்கள் போயிருக்கா விட்டால் தாம் பல விடயங்களை செய்ய இருந்ததாகவும், நாம் வர வில்லை எனவும் கூறுவார்கள். அதற்காகவே பேச்சுவார்த்தைக்கு சென்றோம்.

தமிழ் தரப்பு வில்லை எனச் சொல்லியிருப்பார்கள். இதனால் சென்றோம். அவர்கள் நல்லிணக்க சமிஞ்க்ஞையை காட்ட வேண்டும். எனவே இந்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதைப் பொறுத்து தான் அடுத்த பேச்சுக்கு செல்ல முடியும் எனத் தெரிவித்தார்.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித் தனியாக பிரிந்து உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது,

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம் எப்படி என்பது உங்களுக்கு தெரியும். இறுதியாக மூன்று கட்சிகள் கூட்டமைப்பில் இணைந்து பயணித்தன. எங்களைப் பொறுத்தமட்டில் நானும், சித்தார்த்தன் அவர்களும் கட்சி ரீதியாக தமிழரசுக் கட்சிக்கு கடிதம் எழுதினோம்.

ஏனைய கட்சிகளையும் அரவணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தி, அதனூடாக நாங்கள் எல்லோருக்கும் வலுவான ஒற்றுமையாக இருப்பதாக காட்ட முடியும். மக்களது அபிலாசைகளை வென்றெடுக்க முடியும். நாங்கள் 6 கட்சிகள் ஐ.நா சபைக்கு கடிதம் எழுதினோம். பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதினோம். இதன்போது, எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட்டதன் காரணமாக ஏனைய தேசிய கட்சிகளையும் உள்ளெடுப்பது சம்மந்தமாக சம்மந்தன் ஐயாவுடனும் பேசினோம். கடிதமும் எழுதினோம். ஆனால் அந்த கடிதத்திற்கான பதில் வருவதற்கு முன்னர் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுகின்ற முடிவை எடுத்திருந்தார்கள். அந்தவகையில், நாங்கள் வைத்த கோரிக்கைகு பதில் தராது இந்த முடிவை எடுத்து வெளியில் செல்லும் நிலையை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

கூட்டமைப்பில் இருந்து வெளியே சென்ற கட்சிகளில் உள்ளே வர வேண்டும் என கருதிய கட்சிகள் எல்லோரும் அணிதிரண்டுள்ளோம். குறிப்பாக இந்த சந்தர்ப்பத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் எமது கூட்டில் இணைய வேண்டும் என வேண்டுகோள் விடுகின்றேன். தமிழ் மக்களின் பிரச்சனையை வென்றுறெடுப்பதற்கு நாங்கள் பலமான கூட்டாக ஒற்றுமையாக பயணிக்க வேண்டும். அதனடிப்படையில் இந்த கூட்டில் வந்து இணைய வேண்டும் என நான் அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

எனவே கூட்டு என்பது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் செயற்படும். அதில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பங்களிப்பு இருக்கும். தனிப்பட்ட கட்சிகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டுக் கொடுக்க முடியாது. மட்டக்களப்பில் நடந்த கூட்டத்தில் தனித்து செல்ல தமிழரசுக் கட்சி முடிவெடுத்தது. ஆனால் மட்டக்களப்பு மாவட்ட பத்திரிகையாளர்கள் இந்த கூட்டமைப்பு உருவாக்கத்தில் முன்னின்று செயற்பட்டார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக இந்த தேர்தலில் போட்டியிடும். தொடர்ச்சியாக 6 கட்சிகள் ஒற்றுமையாக பயணித்தோம்.

தேர்தல் தொடர்பில் எங்களது கடிதத்தில் எதுவும் தெரிவிக்கவில்லை. அவர்களது முடிவு கவலையளிக்கிறது. மக்கள் ஒற்றுமையைத் தான் விரும்புகிறார்கள். அவர்கள் தங்களது தனித்துவத்தை காட்ட வேண்டும் என நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை. கூட்டமைபில் இருந்து ஒரு கட்சி விலகிச் சென்றாலும், முன்னர் விலகிச் சென்றவர்கள் உள்ளே வந்துள்ளார்கள். அந்த அடிப்படையில் மக்கள் எமக்கு ஆதரவு தருவார்கள். கூட்டமைப்பு சிதைவு பட முடியாது. மக்கள் எமது பக்கம் இருப்பார்கள். தற்போது தேர்தல் ஒன்று வந்துள்ளது. தேர்தல் தான் எங்களது குறிக்கோள் அல்ல. இந்த தேர்தல் முடிந்த பின் சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்ட கட்டமைப்பை உருவாகின்ற, தொடர்சியான தலைமைத்துவத்தை கொண்டிருக்கின்ற, மக்களது ஆலோசனைகளைப் பெறுகின்ற செயற்பாடுகளை செய்ய இருக்கின்றோம். தனிப்பட்ட கட்சிகளின் விருப்பு வெறுப்பு இங்கு இருக்காது. இது ஒரு கூட்டு. சுழற்சி முறையில் தலைமைத்துவம் பேணப்படும். நாம் பிளவுபடாமல் மக்களது நம்பிக்கையை வீண்போகாது, மக்களது நலனை முன்னிறுத்தி கட்டுக்கோப்பாக செயற்பட வேண்டும். அதற்கு கூட்டமைப்பு பதிவு செய்யப்படும். பொது சின்னம் தெரிவு செய்யப்படும். தற்போது பொது சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.

கனடாவின் செயற்பாடு பொறுப்பற்ற செயலாகும் – அலி சப்ரி அதிருப்தி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடா அரசாங்கம் தடைகளை விதித்தமை தொடர்பில் இலங்கை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் ஆகியோருக்கு இடையில் இன்று (ஜன 11) புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இலங்கையின் அதிருப்தியை அமைச்சர் அலி சப்ரி வெளிப்படுத்தியுள்ளார்.

மனித உரிமை மீறல்களை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை கனேடிய அரசாங்கத்தினால் பல்வேறு முக்கிய தடைகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையிலேயே நேற்றைய தினம் கனேடிய உயர்ஸ்தானிகரை , வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கு வரவழைத்து அமைச்சர் இலங்கையின் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தமை இந்த முக்கியமான தருணத்தில் பொறுப்பற்ற செயலாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, நல்லிணக்கத்தை அடைவதற்காக ஆழமான  பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களில் நாடு ஈடுபட்டுள்ள வேளையிலேயே இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவின் இந்த நடவடிக்கையானது தற்போதைய சந்தர்ப்பத்தில் உதவியற்றதும் , இலங்கையிலுள்ள சமூகத்தினரை ஓரங்கட்டுவதைப் போன்ற செயற்பாடுமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தனிநபர்களை தடை செய்வதுமாத்திரம் போதாது- சர்வதேச நீதி பொறிமுறை அவசியம் – புலம்பெயர் செயற்பாட்டாளர்

தனிநபர்களை தடை செய்வது மாத்திரம் போதாது  குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தும் சர்வதேச பொறிமுறை அவசியம் என இலங்கையின் நீதி மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பின் ஆலோசகர் மரியோ அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.

தடை ராஜபக்ச சகோதரர்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை குறைத்து மதிப்பிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அமெரிக்க கனடா இங்கிலாந்து போன்ற நாடுகளிடமிருந்து பல வருடங்களாக அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது இலங்கை தான் தொடர்ச்சியாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது, எனவும் மரியோ அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு பின்னர் கனடா தடைகளை அறிவித்துள்ளமை தமிழ் மக்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள்  இலங்கையை துரத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தனிநபர்களை தடை செய்வது மாத்திரம் போதாது  குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தும் சர்வதேச பொறிமுறை அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் கருத்துகளை தமிழரசுக் கட்சியினர் மதிக்கவில்லை – வினோ எம்.பி

அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் ஆர்வத்துடன் கருத்துகள் தெரிவித்து வரும் இந்த நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சி வெளியேறி சென்றுள்ளது. இதன் மூலம்  தமிழ் மக்களின் கருத்துகளை தமிழரசுக் கட்சியினர் மதிக்கவில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் விநோநோகராதலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் விநோநோகராதலிங்கம் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுடைய கடந்த கால போராட்டம், இழப்புக்கள் மற்றும் தியாகங்கள் அனைத்தையும் தமிழரசுக் கட்சி செய்த இந்த செயல் மூலமாக கொச்சைப் படுத்தியுள்ளார்கள்.

தமிழரசுக் கட்சியினர் உண்மையான அக்கறையோடு தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருந்திருக்கவில்லை என்பதை அவர்களுடைய இந்த முடிவு உணர்த்துகிறது.

தற்போது அது தேர்தலாக இருந்தாலும் சரி பேச்சுவார்த்தை மற்றும் ஜனாதிபதி சந்திப்புகளாக இருந்தாலும் சரி அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் ஆர்வத்துடன் கருத்துகள் தெரிவித்து வரும் இந்த நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சி வெளியேறி சென்றுள்ளது. இதன்மூலம் தமிழ் மக்களின் கருத்துகளை தமிழரசுக் கட்சியினர் மதிக்கவில்லை என்பது வெளிச்சமாகியுள்ளது.

அதாவது இவர்கள் பிரிந்து சென்று தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளனர். இது தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அத்துடன் இவர்களின் நடவடிக்கை அற்ப தேர்தல் கதிரைகளுக்காக தமிழர்களுக்கு துரோகம் விளைவிக்கும் செயற்பாடாகும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் விநோநோகராதலிங்கம் மேலும் தெரிவித்தார்.

இலஞ்சம் வாங்கிய முன்னாள் ஜனாதிபதி செயலக அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது

கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் இயந்திர உபகரணங்களை பெற்றுத் தர சிபாரிசு செய்வதற்காக 10 கோடி ரூபா இலஞ்சம் கோரி அதில் முற்பணமாக 2 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற்ற விவகாரத்தில் குற்றவாளியாக காணப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவின் அலுவலக பிரதானியாக செயற்பட்ட ஐ.கே. மஹநாம மற்றும் மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க ஆகியோரின் தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (11) உறுதி செய்தது.

குறித்த இருவரினதும் மேன் முறையீட்டு மனுக்களை கடந்த 2021 மார்ச் 16 ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம் இன்று அது குறித்த தீர்ப்பை அறிவித்து, விஷேட நிரந்தர மேல் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.

நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையிலான , எல்.ரி.பி. தெஹிதெனிய, ப்ரீத்தி பத்மன் சுரசேன, எஸ். துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகிய நீதியரசர்களைக் கொண்ட குழாம் இதற்கான தீர்ப்பை நேற்று அறிவித்தது.

இந்த இலஞ்ச விவகாரம் தொடர்பில் கடந்த 2018 மே 3 ஆம் திகதி மேற்படி இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிரான விஷேட நிரந்தர மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ததை அடுத்து கடந்த 2019 செப்டம்பர் 5 ஆம் திகதி முதல் விசாரணைகள் இடம்பெற்றன. இருவருக்கும் எதிராக 24 குற்றச்சாட்டுக்கள் சட்ட மா அதிபரால் சுமத்தப்பட்டிருந்தன.

இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி (தற்போதைய பிரதி சொலிசிட்டர் ஜெனரால்) ஜனக பண்டார மன்றில் ஆஜரானதுடன் முதல் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட ஜனாதிபதியின் முன்னாள் செயலணி பிரதானி ஐ.கே. மஹநாம சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆஜராகினார். 2 ஆம் பிரதிவாதியான மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அரசகுலரத்ன ஆஜராகி வாதிட்டிருந்தார்.

இந்நிலையில் விசாரணைகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த 2019 டிசம்பர் 19 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இதன்போது சட்ட மா அதிபர் முன்வைத்த 24 குற்றச்சாட்டுக்களில், முதல் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் செயலணி பிரதானி ஐ.கே. மஹநாம 13 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டார். அத்துடன் 2 ஆம் பிரதிவாதியான மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க 11 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டார்.

இதனையடுத்தே தண்டனை விபரத்தை அறிவித்திருந்த, விஷேட நிரந்தர மேல் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதியின் முன்னாள் செயலணி பிரதானி ஐ.கே. மஹநாமவிற்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்தது. அத்துடன் 65 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தது. அத்துடன் அவர் பெற்ற 2 கோடி ரூபா இலஞ்சத்தையும் மீள செலுத்தவும் அவருக்கு இதன்போது உத்தரவிடப்பட்டது. அத்துடன் மரக் கூட்டுத்தாபணத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்கவுக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்த நீதிபதிகள் 55 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தனர்.

இந்த தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றில் விஷேட மேன் முறையீடு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தண்டனை விதிக்கப்பட்ட முறைமை முற்றிலும் தவறானது எனவும், அதனால் அத்தண்டனையை ரத்து செய்து தம்மை விடுவித்து விடுதலை செய்யுமாறும் மேன் முறையீட்டில் கோரப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த உயர் நீதிமன்ற ஐவர் கொண்ட நீதிபதிகள் குழாம் விஷேட மேல் நீதிமன்ற தீர்ப்பை சரியானது என ஏகமனதாக அறிவித்து மேன் முறையீட்டை நிராகரித்து தீர்ப்பளித்தது.

அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபை சிரேஷ்ட பணிப்பாளர் – ஜனாதிபதி இடையே சந்திப்பு

அமெரிக்கா தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்மிரல் திருமதி ஐலின் லொவபக்கர் ( Eileen Laubacher) இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்தார்.

நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னெடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் பாராட்டுகளை திருமதி ஐலின் லொவபக்கர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதாரத் திட்டங்கள் குறித்து திருமதி லொவபக்கருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, போதைப்பொருள் கடத்தலை தடுப்பது மற்றும் அந்த நோக்கத்திற்காக கடல்சார் ஒத்துழைப்பைப் பெறுவது தொடர்பிலும் கலந்துரையாடினார்.

இலங்கையின் கூட்டிணைவை அமெரிக்கா பாராட்டுகின்ற அதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாகவும் திருமதி லொவபக்கர் இங்கு மேலும் குறிப்பிட்டார்

ஜனாதிபதிக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நிறைவடைந்தது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற பேச்சுவார்த்தை இறுதி உடன்பாடு எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தாம் முன்வைத்த 3 முன்மொழிவுகள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு அரசாங்கம் ஒருவார கால அவகாசம் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக மூன்று நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த கலந்துரையாடல் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

Posted in Uncategorized

யாழில் உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள்

உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள் யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது ஹிந்தி மொழிக் கற்ற்கையினை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. மேலும் ஹிந்தி மொழி சார்ந்த கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

யாழ் இந்திய துணைத் தூதுவர் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தூதரக அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.