சீன எக்சிம் வங்கியுடன் இணக்கப்பாட்டை எட்டினால் மாத்திரமே முன்னேற்றம் – ஹர்ஷ டி சில்வா

நாட்டின் மொத்த வெளிநாட்டு கடன் தொகையில் 50 சதவீதம் சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும். அவற்றில் பெருமளவான தொகையை சீன எக்சிம் வங்கிக்கு செலுத்த வேண்டியுள்ளது.

எனவே கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன எக்சிம் வங்கியுடன் இணக்கப்பாட்டை எட்டினால் மாத்திரமே ,  அடுத்தகட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

எதிர்வரும் 4 மாதங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பணிப்பாளர் மட்ட இணக்கப்பாட்டினை எட்ட முடியாத நிலைமை ஏற்பட்டால் என்னவாகும்? மக்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை வழங்கக் கூடிய இயலுமை எமக்கிருக்கின்றதா? என்ற கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் பதிலை எதிர்பார்ப்பதாகவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உலகின் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி குறித்த கலந்துரையாடல்களில் கலந்துகொள்ள சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக ,சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ள விடயம் இன்று பேசுபொருளாகியுள்ளது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கு காணப்படுகின்ற பிரதான சவால் சீனாவாகும். சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கான தெளிவானதொரு வேலைத்திட்டம் தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை. எமது மொத்த வெளிநாட்டு கடனில் 50 சதவீதம் சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.

அதிக அதிக தொகையை சீன எக்சிம் வங்கிக்கு செலுத்த வேண்டியுள்ளது. அதற்கமைய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாம் உண்மையில் கலந்துரையாட வேண்டிய ஒரேயொரு வங்கி சீன எக்சிம் வங்கி மாத்திரமேயாகும். எக்சிம் வங்கியுடன் ஏதேனுமொரு இணக்கப்பாட்டை எட்டினால் மாத்திரமே , எம்மால் அடுத்தகட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.

உலக நாடுகள் இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் வருமானம் குறைந்த நாடுகள் ஜீ.20 பொது கட்டமைப்பின் கீழ் எவ்வாறு கடன் மறுசீரமைப்பினை மேற்கொள்வது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளன. எனினும் இலங்கை போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் இதில் உள்ளடக்கப்படவில்லை. எனவே இவ்வாறான நாடுகள் எவ்வாறு கடன் மறுசீரமைப்பினை மேற்கொள்ளப் போகின்றன என்பதற்கான புதிய வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பணிப்பாளர் மட்ட இணக்கப்பாட்டை எட்டுவது தொடர்பில் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.

நாடு எந்த பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது என்பது தொடர்பில் அரசாங்கத்திடம் தெளிவான பதில் இல்லை. வருடாந்தம் ரூபாவின் பெறுமதியை தக்க வைத்துக் கொள்வது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு , மத்திய வங்கியினால் வழிகாட்டல் வரைபடம் தயாரிக்கப்படும். எனினும் 2023 ஆம் ஆண்டுக்கான வரை படம் வழங்கப்படவில்லை. எனவே அடுத்த ஆண்டு நாம் பயணிக்கவுள்ளோம் என்பது கேள்விக்குரியாகும்.

எதிர்வரும் 4 மாதங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பணிப்பாளர் மட்ட இணக்கப்பாட்டினை எட்ட முடியாத நிலைமை ஏற்பட்டால் என்னவாகும்? மக்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை வழங்கக் கூடிய இயலுமை எமக்கிருக்கின்றதா? இதற்கான பதிலையே அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கின்றோம். வழிகாட்டல் வரைபடமொன்று 2023 இல் எங்கு செல்கின்றோம் என்பது தெரியாமலேயே பயணிக்கவுள்ளோம்.

சர்வதேசம் எதிர்பார்க்கும் வேலைத்திட்டமொன்றை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் , ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் முடியாமல் போயுள்ளது. இதற்கான ஒரேயொரு மாற்று வழி புதிய அரசாங்கமொன்றாகும். புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் வேலைத்திட்டத்தை சர்வதேசமும் நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவர்களால் நாட்டைக் கொண்டு செல்ல முடியாது. சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடு தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்க முடியாத அரசாங்கத்தால் , எவ்வாறு நாட்டை நிர்வகித்துச் செல்ல முடியும்?

மக்களுக்கு மேலும் மேலும் சுமையை சுமத்தாமல் , அவர்கள் விரும்பும் ஆட்சியை அமைப்பதற்கு வாய்ப்பினை வழங்குமாறு வலியுறுத்துகின்றோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவி காலம் காணப்படுகிறது. எனினும் மார்ச் மாதத்தின் பின்னர் பொதுத் தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் அவருக்கு காணப்படுகிறது. அரசியலமைப்பின் படி அதற்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டு;க் கொள்கின்றோம் என்றார்.

காரைக்கால் – காங்கோன்துறை கப்பல் சேவை பெப்ரவரி ஆரம்பம் – யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேயரம்

காரைக்கால் – காங்கோன்துறை கப்பல், சேவை அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் ஆரம்பிக்குமென யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேயரம் தெரிவித்துள்ளார்.

யாழ். வணிகர் கழகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி தைப்பொங்கலின் பின்னர் பெப்ரவரி ஆரம்பத்திற்குள் காரைக்கால் காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பிக்குமென எதிர்பார்ப்பதோடு இரண்டு நிறுவனங்கள் இதனை ஆரம்பிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறிய கப்பல்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் அதேவேளை அவை 1000 மெட்ரிக் தொன்னிற்கும் குறைவாக கொள்ளளவுடையவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனவரி முதல் பலகட்ட பேச்சுக்கள் முன்னெடுக்கப்படும் – அலி சப்ரி

இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு குறித்து அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் பலகட்டப்பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தயாராகியுள்ளது என்று வெளிவிவகர அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பேச்சுவார்த்தை விடயத்தில் அர்ப்பணிப்புடனேயே செயற்பட்ட வருகின்றது என்று தெரிவித்த அவர், அனைத்து இனக்குழுமங்களின் அரசியல் தரப்புக்களிலும் ‘பிச்சைக்காரன் புண்போன்று’ இந்த விடயம் நீடிக்க வேண்டும் எனக் கருதும் வன்போக்கு நிலைப்பாடுகளை உடையவர்கள் உள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

சர்வகட்சி மாநாட்டின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனங்களுக்கிடையிலான தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் நீண்டகாலமான கரிசனை கொண்டவராக இருக்கின்றார்.

இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு பல தசாப்தங்களாகவே இருந்து வருகின்றது.

இவ்வாறான நிலையில், தற்போது சர்வகட்சிகளின் பங்கேற்புடன், பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகளை எதிர்மறையாகப் பார்ப்பவர்களும் உள்ளார்கள்.

குறிப்பாக, ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு தேடுவதற்கான முன்னெடுக்கப்படுவதாகவும் கூறுகின்றார்கள். சர்வதேச நாயணநிதியத்தின் உதவிகளைப்பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் செயற்படாகவும் பிரசாரம் செய்யப்படுகின்றது.

உண்மையிலேயே சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களுக்கும் இனப்பிரச்சினை உள்ளிட்ட இதர பிரச்சினைகள் குறித்த பேச்சுக்களுக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை.

நாணயநிதியத்துடனான பேச்சுக்கள் தொடர்பாக பிரத்தியோகமான சந்திப்புக்களும் பேச்சுக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தப் பேச்சுவார்த்தைக்கும் இனப்பிரச்சினைக்கான  தீர்வு குறித்த பேச்சுக்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை. தமிழ், முஸ்லிம், சிங்க, மலையக தரப்புக்களில் இனப்பிரச்சினையாது தீர்க்கப்பட்டு விடாது ‘பிரச்சைக்காரன் புண்’ போல நீண்டுகொண்டிருக்க வேண்டும் என்று கருதுகின்ற தரப்பினர் இருக்கின்றார்கள்.

இது துரதிஷ்டவசமானது. அத்துடன், அவர்களை வெற்றிகொள்வதும் சவால்கள் நிறைந்தது. ஆனால், அவ்விதமான விடயங்களை எல்லாம் கடந்து தான் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அதற்கு தயாராகவே உள்ளது.

குறிப்பாக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பல்வேறு கட்டப்பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதில் எவ்விதமான தயகத்தினையும் அரசாங்கத்தரப்பு காண்பிக்கப்போவதில்லை.

மேலும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஸ்தாபித்தல், கைதிகளின் விடுதலை உள்ளிட்டவற்றுக்கான அடிப்படைச் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு விட்டன. காணமாலாக்கப்பட்டவர்களின் உறவிர்கள் பற்றியும் கவனத்தில் கொண்டு இழப்பீடு உள்ளிட்ட நடவடிக்கைகளை வழங்குவதற்கு தயராகவே உள்ளோம் என்றார்.

இலங்கையின் மறுசீரமைப்புக்கு இதை விட சிறந்த சந்தர்ப்பம் எதிர்காலத்தில் அமையாது

இலங்கையின் மறுசீரமைப்புக்கு இதை விட சிறந்த சந்தர்ப்பம் எதிர்காலத்தில் அமையாது என்று அரசியல் ஆய்வாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

மறுசீரமைப்பின் மக்கள் இயக்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘இலங்கையின் மறுசீரமைப்புக்கான அம்ச கோரிக்கைகள்’ அடங்கிய ஆவணத்தை அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்கு கையளித்து விளக்கமளிக்கும் செயற்பாடுகள் கடந்த வாரம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, 43ஆவது படையணி, தமிழர் விடுதலை கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைமைகளுடன் சந்திப்புக்களும் நடைபெற்றன.

இந்த சந்திப்புக்களில் மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் அதன் அழைப்பாளர் குழு உறுப்பினர்களான விக்டர் ஐவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த செயற்பாடு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையானது வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் பொருளாதார ரீதியாக அதள பாதாளத்தில் விழுந்துள்ளது. அதேநேரம் பொருளாதார ரீதியாக மாத்திரமல்லாமல், சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் இலங்கை பின்னடைந்தே காணப்படுகின்றது.

இந்த எல்லா விடயங்களிலும் மறுசீரமைப்பு செய்துகொள்ள வேண்டிய அவசியம் நிலவுகின்றது.

இலங்கை இப்போது இருக்கும் நிலைமையில் இதற்கு முன்னர் எப்போதும் இருந்ததில்லை. இந்த சமகாலத்து பிரஜைகளான இலங்கையர்கள் அனைவருக்குமே பாரியதொரு பொறுப்பும் கடமையும் இருக்கிறது. அது நாட்டில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பாகும்.

இலங்கைச் சமூகம் இன்னும் பழமைவாத எண்ணக்கருக்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவில்லை.

இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள வர்த்தக நிலுவை, சென்மதி நிலுவையை சரிசெய்துவிடுவதனால் மாத்திரமே இந்த பழமைவாத சிந்தனைகளை சீர்செய்துவிட முடியாது.

இதற்கு திறந்த கலந்துரையாடலும் உறுதியான தீர்வு முன்வைப்புகளும் வேண்டும்.

அத்தகைய உரையாடல் புள்ளிகள் தொடங்கப்பட வேண்டிய 13 அம்ச முன்மொழிவுகள் அடங்கிய ஆவணமொன்றை தயாரித்து, நாங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் பேசி வருகிறோம்.

நாம் சந்தித்த அனைத்துக் கட்சிகளும் மறுசீரமைப்பு சார்ந்து நாங்கள் முன்வைக்கும் யோசனைகளை பரிசீலிக்க தயாராகவே உள்ளன. எனவே, இதுதான் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு சிறந்த தருணமாக நான் பார்க்கிறேன் என்றார்.

இதேவேளை எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோருடன் சந்திப்புக்களை நடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

சர்வ கட்சி மாநாட்டினூடாக 13 க்கு அப்பால் செல்வது சவாலானது – பாக்கியசோதி சரவணமுத்து

தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் உட்பட இனப்பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக தீர்மானங்களை முன்னெடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வகட்சிகளின் மாநாட்டின் ஊடாக 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் செல்வது சவலானது விடயமாகும் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி.பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வகட்சிகளின் மாநாட்டில் தமிழ்க் கட்சிகளின் பங்கேற்பு தொடர்பில் இருவேறு பிரதிபலிப்புக்கள் வெளிவந்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நோக்கத்தினையும் உள்ளடக்கி சர்வகட்சிகளின் மாநாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் வெளிப்படுத்துவதற்கு கிடைகின்ற அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்த வேண்டும்.

அந்தவகையில், இந்த மாநாட்டில் பங்கேற்பதை தவறாக கொள்ள முடியாது. ஆனால் இந்த மாநாட்டில் பங்கேற்பதன் ஊடாக பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குதல், அதன் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தல் காணமாலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கான தீர்வினை முழுமையாகப் பெற்றுக்கொடுபதற்கு அதியுச்சமாக முனைய வேண்டும்.

இதனைவிடவும் குறித்த மாநாட்டில் இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக கரிசனை கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அது 13ஆவது திருத்தச்சட்டத்தினை மையப்படுத்தியதாகவே இருக்கும்.

அதாவது, அரசியலமைப்பில் உள்ளவாறு 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறே கோரமுடியும்.

அதற்கு, அப்பால் சென்று அதிகாரப்பகிர்வுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படுமாக இருந்தால் அவை நடைமுறையில் சாத்தியமாகுமா என்ற சந்தேகம் எனக்குள்ளது. ஏனென்றால், தற்போதைய அரசாங்கம் மக்கள் அiணையை முழுமையாக பெறாதவொன்றாகும். அத்துடன், ஸ்திரமான நிலைமையிலும் இல்லை.

ஆகவே, அவ்விதமான அரசாங்கமொன்றால் அரசியலமைப்பினை மாற்றியமைக்க வல்ல தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்துவது என்பது மிகக் கடினமானவிடயமாகும். அந்தஅடிப்படையில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தச் செய்வதே உசிதமானதாக இருக்கும் என்றார்.

இராணுவ செலவீனங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு முன்னதாக அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள இலங்கை அரசாங்கம் முப்படையினரின் பதவிகளை வெற்றிடமாக்குவதற்கு தீர்மானித்துள்ளது.

இராணுவத்தினருக்கான செலவினங்களைக் குறைப்பதற்காகவும் நாட்டின் பொருளாதாரத்திற்கு மனித வளத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு ஏனைய திறன்களுக்காக பயிற்சியளிக்கவும் விருப்ப ஓய்வு வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழிந்திருந்தார்.

அதேநேரம், பாதுகாப்பு அமைச்சும் முப்படைகளில் இருந்து வெளியேறியவர்களுக்கு பொதுமன்னிப்புக் காலமொன்றை 15 நவம்பர் முதல் 31 டிசம்பர் 2022 வரை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், முப்படைகளின் செயற்பாட்டுடன் தொடர்பில்லாதிருக்கும் நபர்கள் பிரகடனப்படுத்தப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்திற்குள் உரிய அறிவிப்புக்களை செய்யாது விட்டால் அந்தந்த சேவைகளிலிருந்து சட்டப்பூர்வ வெளியேற்றப்படத் தகுதியுடையவர்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில், அதிகாரிகள் மற்றும் ஏனைய தரவரிசைப் படையினர் உட்பட இதுவரை 16, 141 பேர் பொதுமன்னிப்புக்காக விண்ணப்பித்துள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 12 அதிகாரிகள் மற்றும் பிற தரவரிசைகளை உடையவர்கள் 96 பேர் வெளிநாட்டில் உள்ளனர். அவர்களில் விண்ணப்பங்களைச் அனுப்பியவர்கள் பற்றிய பரிசீலனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் துஷாந்த விஜேசிங்க குறிப்பிடுகையில், 983 விமானப்படை வீரர்கள் பொதுமன்னிப்புக்காக விண்ணப்பித்துள்ளதுடன், 732 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடற்படையால் எத்தனை பேர் விடுவிக்கப்பட்டனர் உறுதிப்படுத்தப்படவில்லை.

வடக்குக் கடலில் தத்தளித்த படகு 130 மியன்மார் அகதிகளுடன் மீட்பு

மியன்மார் நாட்டை சேர்ந்த ரோகிங்கியர்கள் எனக் கருதப்படும் சுமார் 130 பேர் வரையில் பயணித்த படகு ஒன்று வட இலங்கைக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண் டிருந்த போது இலங்கைக் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்கள் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் இருந்து சுமார் 30 நோட்டிக் கல் தொலைவில் அதிகளவானோரை ஏற்றிய படகு ஒன்று நிற்பதனை அவதானித்த மீனவர் ஒருவர் படகை அண்மித்து அவதானித்த சமயம் படகில் இருந்தவர்கள் சிறுவர்களை தூக்கி காண்பித்தமையினால் படகு ஆபத்தில் நிற்பதனால் உதவி கோருகின்றனர் என்பதனை மீனவர் ஊகித்துக்கொண்டார்.

இதனையடுத்து கரை திரும்பிய மீனவர் வழங்கிய தகவலின் பெயரிலேயே சம்பவ இடத்திற்கு கடற்படையினர் சென்றுள்ளனர்.

கடற்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட படகை அவதானித்து படகை மீட்டு காங்கேசன்துறைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

இதனிடையே மீட்கப்பட்ட படகு சேதம் காரணமாக விரைந்து பயணிக்க முடியாத காரணத்தாலும் வெளிநாட்டவர்கள் என்பதனால் இதற்கான அனுமதிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தாமதங்களினாலும் நேற்றிரவு படகை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வருவதில் தாமதம் நிலவியதாக முதலில் கிடைத்த செய்திகள் தெரிவித்தன.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை ஜனநாயக ரீதியில் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து ஜனநாயகப் போராளிகள் கட்சியினை ஆரம்பித்து ஏழு வருடங்களின் பின்னர் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் நிருவாகக் கட்டமைப்பு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், கட்சியின் கொள்கைப் பிரகடணம் கட்சியின் தலைவரால் வெளிப்படுத்தப்பட்டது. அத்துடன் வருகை தந்த அரசியற் பிரமுகர்களின் வாழ்த்து மற்றும் கருத்துரைகளும் இடம்பெற்றிருந்தன.

இதன் போது கட்சியின் தலைவராக சி.வேந்தன், உபதலைவராக ந.நகுலேஸ், செயலாளராக இ.கதிர், உபசெயலாளராக த.கவியரசன், பொருளாளராக த.விதுரன், தேசிய அமைப்பாளராக க.துளசி, மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளராக ந.நகுலேஸ், வவுனியா மாவட்ட இணைப்பாளராக நெல்சன், திருகோணமலை மாவட்ட இணைப்பாளராக நவமேனன், யாழ் மாவட்ட இணைப்பாளராக கவியரசன், கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளராக கருணாகரன், முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளராக ஆதவன், மன்னார் மாவட்ட இணைப்பாளராக ஜீவா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தலைமையில் இடம்பெற்ற இத் தேசிய மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் இ.கதிர், தேசிய அமைப்பாளர் க.துளசி, உபதலைவர் ந.நகுலேஸ், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தைச் (ரெலோ) சேர்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளருமான நிரோஷ் உள்ளிட்ட அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வடக்கு கிழக்கு மாகாண உறுப்பினர்கள், முன்னாள் போராளிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த வழிமுறையாக சர்வக்கட்சி தலைவர் கூட்டம் – எரிக் சொல்ஹெய்ம்

இலங்கையின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த வழிமுறையாக சர்வக்கட்சி தலைவர் கூட்டம் காணப்படுகிறது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களை நெருக்கடி நிலையில் இருந்து மீட்பதற்கு சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயாராகவுள்ளேன் என சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.

உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள எரிக் சொல்ஹெய்ம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடி மற்றும் பசுமை நிலைபேறான திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகை தந்துள்ளேன்.

இலங்கைக்கு காற்றாலை மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் முன்னேற்றத்திற்காக புதிய முதலீடுகளை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளேன்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த வாரம் அரசியல் கட்சி தலைவர்களுடன் இடம்பெற்ற சர்வக்கட்சி தலைவர் கூட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எனக்கு தெளிவுப்படுத்தினார். இலங்கையின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணும் முக்கிய செயற்பாடாக சர்வக்கட்சி தலைவர் கூட்டம் காணப்படுகிறது.

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழி தமிழர்கள்,மேல்நாட்டு தமிழர்கள் மற்றும் சிங்கள,முஸ்லிம் சமூகத்தினருடன் அமைதியான முறையில் வாழும் அபிலாசையை அவர் தெளிவுப்படுத்தினார். அத்துடன் இலங்கையில் ஏழ்மை நிலையில் வாழும் பெருந்தோட்ட மக்களுக்கான உணவு மற்றும் ஏனைய சேவை விநியோகம் தொடர்பில் இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

மிகமோசமான நிலையில் வாழும் இலங்கை மக்களை நெருக்கடி நிலையில் இருந்து மீட்பதற்கு என்னால் இயலுமான ஒத்துழைப்பை வழங்குவேன். நாட்டில் பெரும்பாலானோருக்கு உணவு பற்றாக்குறை காணப்படுவதாகவும்,ஒரு சிலர் உணவை உட்கொள்ளும் வேளையை குறைத்துக் கொண்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இந்நிலையில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக உள்ளேன்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி பாரிய முயற்சிகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துள்ளார். பொருளாதாரத்தை மீட்சிப்படுத்தும் திட்டங்கள் வெற்றி பெற்றால் அது அனைவருக்கும் பயனுடையதாக அமையும் என்றார்.

மனோ கணேசனுடன் எரிக் சொல்ஹெய்ம் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும் நோர்வேயின் முன்னாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் மீண்டும் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும் நோர்வேயின் முன்னாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனை நேற்று (16) சந்தித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் நுகேகொடையிலுள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. (a)