வருமான வரி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

வருமான வரி  திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அசாதாரண வரி அறவீட்டை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தா விட்டால் அனைத்து தொழிற்சங்கங்களுடனும் இணைந்து பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என தொழிற்சங்கத்தினர் குறிப்பிட்டனர்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், அரச பல் வைத்தியர்கள் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், மருத்தவ பீட ஆசிரியர்கள் சங்கம்,இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களின் பிரதிநிதிகள்  இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் வீதியோரத்தில் குறித்த சட்டமூலத்திற்கு எதிராக வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான வகையில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் இரத்தினசிங்கம் கூறுகையில்,

வருமான வரி வசூலிப்பு சட்டத்தில் வைத்தியர்கள் உள்ளிட்ட முக்கிய தொழிலில் ஈடுபடுவோருக்கு பாதிப்பான வகையிலேயே திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. மாதத்திற்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை பெறுபவர்களுக்கு வரிகள் அறவிடப்படவுள்ளன. இதனூடாக விசேட வைத்தியர் ஒருவர் வருடத்திற்கு இரண்டு முதல் இரண்டரை மாத சம்பளத்தை வரியாக செலுத்தும் நிலைமை ஏற்படுகின்றது.

வரி அறவீடுகள் அனைவருக்கும் ஏற்றால் போன்று நியாயமானதாக இருக்க வேண்டும். பண வீக்கம் அதிகரித்து, வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு வரி திருத்தங்களை மேற்கொள்வதை ஏற்றுக்கெகாள்ளள முடியாது. இதனால் அசாதாரண வரி அறவீட்டை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தா விட்டால் நாங்கள் அனைத்து தொழிற்சங்கங்களுடனும் இணைந்து பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் வேலுகுமார்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை உடனடியாக கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்வதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைக்குழு சார்பாக கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அத்துடன் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையை அரசியல் குழு எடுக்கும் என்றும் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

அரசை எதிர்த்து வாக்களிக்கத் தவறி, அரசுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்து, கட்சி நிலைப்பாட்டையும், கட்டுப்பாட்டையும் மீறிய காரணத்தால் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை உடனடியாக கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்வதாகவும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையை அரசியல் குழு எடுக்கும் என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைக்குழு சார்பாக கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை கடனுதவியைப் பெற்றுக்கொள்ளவுள்ளமை தொடர்பான மாநாடு

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை கடனுதவியைப் பெற்றுக் கொள்ள உள்ளமையுடன் தொடர்புடைய முக்கியத்துவம் மிக்க மாநாடு வியாழக்கிழமை (டிச.08) சீனாவின் பீஜிங் நகரில் ஆரம்பமாகியது.

‘உலகலாவிய பொது அபிவிருத்திக்கான ஒத்துழைப்புக்கள்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் சீன அதிகாரிகன் , உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

பீஜிங் மாநாட்டில் சீன அதிகாரிகளுடன் தீர்க்கமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா கடந்த வாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை போன்ற பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் கடன் நெருக்கடி உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக பீஜிங் மாநாட்டில் பங்கேற்குமாறு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதானிகளுக்கு சீனா அழைப்பு விடுத்திருந்தது.

அதற்கமையவே உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச பொருளாதார மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதானிகள் குழுவொன்று பீஜிங்கிற்கு விஜயம் செய்துள்ளது.

‘ இலங்கை தற்போதைய நெருக்கடிகளிலிருந்து மீண்டு, நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொள்வதற்காக சர்வதேச நிதி நிறுவனங்களுடன் சீனா சாதகமான முறையில் செயற்படும் என்று அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் அரசியல் கைதிகளை ஒரே தடவையில் பொது மன்னிப்பில் விடுவிக்க ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் – மனோ

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பின் பேரில் ஒரே தடவையில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் நாட்டில் வறுமை நிலை 26வீதமாக அதிகரித்துள்ள நிலையில் மலையக தோட்டப்பகுதிகளில் அது 53 வீதமாக அதிகரித்துள்ளது. அது தொடர்பிலும் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிச. 08) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு, மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தெரிவிக்கும்போது, இன்னும் 40 பேரே அவ்வாறு சிறைச்சாலைகளில் உள்ளதாகவும் அவர்கள் தொடர்பான விசாரணைகள் சம்பந்தமாகவும் தெரிவித்தார்.

எனினும் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களை கட்டங்கட்டமாக அல்லாமல் ஒரே தடவையில் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க முடியும். அத்தகைய நம்பிக்கையளிக்கும் நடவடிக்கைகள் மூலமே தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியும்.

ஏற்கனவே கடந்த தீபாவளியின் போது எட்டுப் பேரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தது போன்று எதிர்வரும் பொங்கல் தினத்திலும் மேலும் சிலரை விடுதலை செய்யுமாறு நாம் அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.

அதேவேளை அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பின் பேரில் ஒரே தடவையில் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் வரவு -செலவுத் திட்டத்தில் மலையக தோட்டப்பகுதி மக்கள் தொடர்பில் எத்தகைய வேலை திட்டங்களும் முன் வைக்கப்படவில்லை.

தற்போதைய நிலைமையில் நிவாரணங்களை வழங்க முடியாது என்றாலும் குறைந்தபட்சம் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றாவது குறிப்பிட்டிருக்க வேண்டும்.

நாட்டில் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் பேசப்படும் நிலையில், கிராமப் புறங்களில் அது 36 வீதமாகவும் நகர்ப்புறங்களில் அது 46 வீதமாகவும் காணப்படுவதுடன் மலையகத் தோட்டப்புறங்களில் அது 53 வீதமாகவும் காணப்படுகின்றது.

அது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்துவதுடன் தோட்டப் பகுதி மக்களுக்காக அரசாங்கம் எத்தகைய திட்டத்தை முன்னெடுக்கப் போகின்றது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

அதேபோன்று கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சமுர்த்தி உதவி வழங்குவது முறைப்படுத்தப்பட வேண்டும் அதற்காக தற்போதுள்ள சமுர்த்தி பட்டியலை நீக்கிவிட்டு மின் கட்டண பட்டியலை வைத்து அதற்கான செயற் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் நியாயமானதாக அமையும் என்பதால் அதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

நிரந்தர அரசியல் தீர்வைப் பெறுவதற்கான பொறிமுறை – அனைத்து தமிழ்த் தேசியத் தரப்பினருக்கும் ரெலோ முன்மொழிவு

  1. இந்தியாவின் தலைமையில் மேற்பார்வை
  2. சர்வதேச நாடுகளின் பங்களிப்பு
  3. ஐநாவின் பிரதிநிதித்துவம்
  4. நிபுணர்கள் குழு உருவாக்கம்
  5. புலம்பெயர் உறவுகள் ஒருங்கிணைப்பு
  6. தீர்வு நடைமுறைப் படுத்தும் வரையான செயல்பாடு

 

இந்தியாவின் தலைமையில் மேற்பார்வை

தமிழ் தேசிய அரசியல் தரப்பில் செயல்படும் அனைவரும் சமஸ்டி முறையான அரசியல் தீர்வே இறுதி நிலைப்பாடு என்பதை ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனர். இதில் குறிப்பிடும் அம்சமாக ஒற்றையாட்சி அற்ற, தமிழ் மக்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கு இணைந்து, எமது சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய முற்று முழுதாக அதிகார பகிர்வோடு கூடிய அலகாக அமைய வேண்டும் என்பதில் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளோம். அதே நேரம் அரசியல் யாப்பிலே ஏற்கனவே உள்ள அதிகாரங்களை முற்றும் முழுதாக நடைமுறைப் படுத்தி மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்பதிலும் ஒத்த நிலைப்பாட்டில் உள்ளோம்.

பிராந்திய வல்லரசாகவும், தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினையில் ஆரம்ப கட்டத்தில் இருந்து அக்கறையோடு செயற்பட்டு வந்த அண்டை நாடாகவும், இலங்கை அரசியலிலே செல்வாக்கு செலுத்தக்கூடிய நிலையிலேயே உள்ளமையாலும், இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாக இருப்பவர்களாகவும், ஏற்கனவே இலங்கை அரசியல் யாப்பிலே அதிகாரப் பகிர்வுக்கான ஒரு ஏற்பாட்டை செய்தவர்கள் என்ற வகையிலும், தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகளை தீர்க்கக்கூடிய அரசியல் தீர்வை வலியுறுத்தி வருபவர்களாகவும் இருப்பதனாலே இந்தப் பேச்சுவார்த்தை இந்தியாவின் தலைமையிலான மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

சர்வதேச நாடுகளின் பங்களிப்பு

சர்வதேச நாடுகளான பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி மற்றும் நாடுகளும் இந்தியாவுடன் இணைந்து இப்பொறிமுறையில் பங்குபெற்றல் அவசியமானது. ஐநா பொதுச் சபை, பாதுகாப்புச் சபை மற்றும் மனித உரிமை பேரவை என்பவற்றில் செல்வாக்கு செலுத்தக்கூடியவர்களாக, ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் அக்கறை கொண்டவர்களாகவும் முன் நின்று செயல்படுபவர்களாகவும், பல சர்வதேச நாடுகளில் ஏற்பட்ட இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நமது பங்களிப்பை வழங்கியதோடு அது பற்றிய அனுபவம் உள்ளவர்களாகவும், இலங்கை அரசாங்கத்தின் மீது பொருளாதார ரீதியாகத் தாக்கத்தை செலுத்தக் கூடியவர்களாகவும், மற்றைய நாடுகளையும் தங்கள் பின் அணி திரட்டக் கூடிய வல்லமை கொண்டவர்களாகவும் இருப்பதானாலே இவர்கள் பங்களிப்பு அவசியமானது. குறிப்பாக பிரித்தானியா இலங்கையை காலனித்துவ ஆட்சியில் வைத்திருந்த நாடாகவும் இங்கு நிலவியிருந்த சமஸ்டி ஆட்சி முறையை ஒற்றையாட்சி முறைமைக்கு மாற்றியவர்களும் அதனால் தமிழ் மக்களுக்கு பொறுப்பு கூறுவதற்கு கடமைப்பட்டவர்களாகவும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐநாவின் பிரதிநிதித்துவம்

ஐநாவின் பிரதிநிதித்துவம் இந்த பொறிமுறையில் அவசியமாகிறது. பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விடயங்களை தாண்டி தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை என்பன மீள நிகழாமையை உறுதிப்படுத்துவது நிரந்தரமான அரசியல் தீர்வு ஆகும். மேலும் உலக நாடுகளில் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளை ஆணைக்குழுக்கள், தீர்ப்பாயங்கள் மற்றும் நிபுணர் குழுவின் மூலம் தீர்த்து வைத்த அனுபவமும் வரலாற்றையும் கொண்டது ஐநா.

நிபுணர்கள் குழு உருவாக்கம்

மேற்கூறிய பிராந்திய சர்வதேச வல்லரசுகளின் நிபுணர்களும் ஐநாவின் நிபுணர்களும் தமிழ் மக்கள் தரப்பில் அரசியல் யாப்பு தயாரிப்பு சம்பந்தமான நிபுணர்களும் எல்லைகள் மீள் நிர்ணயம் நிர்வாகம் மற்றும் நிதிய ஆளுமை சம்பந்தமான நிபுணர்களும் கொண்ட குழு உருவாக்கப்பட வேண்டும். இந்த குழுவில் தமிழ் மக்கள் சார்பில் புலம் பெயர் உறவுகளில் இருந்து நிபுணர்களும் இடம் பெறுவர். தவிர ஆலோசனை வழங்கவும் நிபுணர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவும் உருவாக்கப் பட வேண்டும்.

புலம்பெயர் உறவுகள் ஒருங்கிணைப்பு

தமிழ் தேசியத் தரப்பினரும் புலம்பெயர் உறவுகளும் ஒருமித்து, இந்த நிபுணர் குழுவினருக்கான செயல்பாட்டை உறுதி செய்யவும், ஏதுவான அரசியல் சூழ்நிலைகளை உரிய தரப்புகளுடன் இணைந்து ஏற்படுத்துவதும் முக்கியமானதாகும். இந்த அடிப்படையிலான பங்களிப்புடனும் வழிகாட்டுதலுடனும் அரசியல் தீர்வு எட்டப்படுதல் வேண்டும். அதற்கான தொடர்ச்சியான செயல்பாடும் அவசியமாகும்.

அரசியல் தீர்வானது இந்த நிபுணர் குழுவினர்கள் வழிகாட்டுதலிலே முற்றும் முழுதாக நடைமுறைப் படுத்தப்படும் வரை நாங்கள் பரிந்துரைத்த பொறிமுறை செயற்பாட்டில் இருக்க வேண்டும். முற்று முழுதான அதிகார பகிர்வு முறைமையை எங்கிருந்து ஆரம்பிப்பது, எப்படி நடைமுறைப்படுத்துவது, எப்படி முற்றுப் பெற வைப்பது என்பதை இந்தப் பொறிமுறையின் வழிகாட்டுதலுடன் தமிழ் தலைவர்கள் ஒப்பேற்ற வேண்டும்.

தீர்வு நடைமுறைப் படுத்தும் வரையான செயல்பாடு

கடந்த காலங்களில் அதிகாரப் பகிர்வு முறைமை அரசியல் யாப்பிலே உருவாக்கப்பட்டு இருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படாமல் வெற்றுக் காகிதங்களாகவே அமைந்துள்ளன. அப்படியல்லாமல் நியாயமான அரசியல் தீர்வை எட்டுவதும் அதனூடான அதிகார பகிர்வினை உறுதி செய்து நடைமுறைப் படுத்தும் வரை இந்தப் பொறிமுறையை தொடர்ச்சியான செயல்பாட்டில் வைத்திருப்பது அவசியமானது. தமிழ் மக்களுடைய நிரந்தரமான அரசியல் விடிவை எட்டுவதற்கு அனைத்து தமிழ் தேசிய தரப்பினரும் நாட்டிலும் புலம்பெயர் தேசத்திலும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

அரசுடனான பேச்சுவார்த்தையை ஆரம்பித்து இறுதி இலக்கை எட்டும் வரைக்குமான விடயங்களை அரசியல் மாற்றங்களைத் தாண்டி தொடர்ச்சியாக முன்னெடுக்கும் பொறிமுறையை நாங்கள் முன்மொழிந்திருக்கிறோம். தமிழ்த் தேசியப் பரப்பில் செயலாற்றும் அனைத்து தரப்பினரும் இந்தப் பொறிமுறையை மேலும் செழுமைப்படுத்த உங்கள் பங்களிப்பை கோரி நிற்கிறோம். குறை குற்றம் கூறி, ஒருவர் மீது ஒருவர் சேறு வாரி வீசிக் காலத்தை வீணடிக்கும் வெட்டி விவாதங்களை தவித்துக் கொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுகிறோம்.

உங்கள் பரிபூரண ஆதரவுடன் மேற் குறிப்பிட்ட பொறிமுறையின் உருவாக்கம், நடைமுறை, மற்றும் செயற்பாட்டை முன்னெடுக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். தமிழ் தேசிய இனத்தின் இறுதி இலக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதற்கான இந்த அரிய சந்தர்ப்பத்தை ஒருமித்து பயன்படுத்துவோமாக.

குருசுவாமி சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்- ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 43 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் சற்றுமுன் நிறைவேறியது.

வாக்கெடுப்புக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் பதிவாகியிருந்தன.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமவிங்கவினால், 2023 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடந்த மாதம் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் மின் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழி இல்லை – ரணில்

மின்சார சபையின் நட்டத்தை போக்க மின் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழி இல்லை. நாடு என்ற ரீதியில் பிரபல்லியமற்ற தீர்மானங்களை எடுக்கவேண்டி இருக்கின்றது. அவ்வாறு எடுக்கப்படும் தீர்மானங்களால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

நாங்கள் எப்போதும் பிரபல்லியமற்ற தீர்மானங்களை எடுக்க தவறியதாலே இந்த நிலையில் இருக்கின்றோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (08) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு, மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் மின் கட்டணம் அதிகரித்தது. என்றாலும் அது போதாது.  மேலும் 152 பில்லியன் நட்டம் ஒன்று ஏற்பட இருக்கின்றது. 2013 இல் இருந்து மின்சார சபையின் மொத்த நட்டம் 300 பில்லியனாகும்.

இந்த தொகையை இந்த காலப்பகுதியில் தேடிக்கொள்ளவேண்டி இருக்கின்றது. குறிப்பாக அடுத்த வருடம் நடுப்பகுதியில் வரட்சி ஏற்படலாம் அவ்வாறு ஏற்பட்டால் எமக்கு மேலதிகமாக 420 பில்லியன் ரூபா தேவைப்படுகின்றுது.

சாதாரண மழைவீழ்ச்சி கிடைத்தால் எமக்கு 352 பில்லியன் ரூபாவரை தேவைப்படும்.  அவ்வாறு இல்லாமல் அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றால் 295 பில்லியன் ரூபா வரை தேவைப்படுகின்றது. இந்த தொகையை நாங்கள் எவ்வாறு தேடிக்கொள்வது?. இது தான் பிரச்சினை.

அத்துடன் அரசாங்கத்துக்கும் வருமானம் இல்லை. பணம் அச்சிட்டால் ரூபா வீழ்ச்சியடையும். வரி அதிகரித்தால் பொருட்களின் விலை அதிகரிக்கப்படும். அப்போதும் பிரச்சினைதான். அப்படியானால் கட்டணம் அதிகரிக்கப்படவேண்டும்.

இது பிரச்சினைக்குரிய விடயம் என்பதை நான் அறிவேன். மின் துண்டிப்புக்கு செல்ல முடியும். ஆனால் அடுத்து மாதம் உயர்தர பரீட்சை இடம்பெற இருப்பதால் மின் துண்டிப்பை நிறுத்தவேண்டி இருக்கின்றது. மின் கட்டணம் அதிகரிக்க யாரும் விரும்பப்போவதில்லை.

இதனால் மக்களுக்கு ஏற்படப்போகும் சுமையும் எமக்கு தெரியும். இதனைத்தவிர எமக்கு இருக்கும் மாற்று வழி என்ன? நாங்கள் பொருளாதாரத்தை மிகவும் சிரமத்துக்கு மத்தியில் தாக்கிப்பிடித்துக்கொண்டு, தற்போது சீனாவுடன் கலந்துரையாடி முடிவுக்கு வரும்போது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லாம்.

நாங்கள் நட்டத்தை காட்டி வருமானத்தை காட்டாவிட்டால் வெளிநாட்டுகளிடமிருந்து உதவிகள் கிடைக்கப்போவதில்லை. அதனால் விருப்பம் இல்லாவிட்டாலும் இதனை செய்யவேண்டும் என நாங்கள் தீர்மானித்தோம்.

சில சந்தர்ப்பங்களில் நாங்கள் நாடு என்ற ரீதியில் பிரபல்லியமற்ற தீர்மானங்களை எடுக்கவேண்டி இருக்கின்றது. அவ்வாறு எடுக்கப்படும் தீர்மானங்களால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

நாங்கள் எப்போதும் பிரபல்லியமற்ற தீர்மானங்களை எடுக்க தவறியதாலே நாங்கள் இந்த நிலையில் இருக்கின்றோம். 2013க்கு பின்னர் மின் கட்டணம் அதிகரிக்கப்படவி்ல்லை. அதற்கு நாங்கள் அனைவரும் பொறுப்பக்கூற வேண்டும். வேறு நாடுகள் கடினமான தீர்மானங்களை எடுத்தன. ஆனால் நாங்கள் அதில் இருந்து தப்பிச்சென்றோம். இப்போது என்ன செய்வது என எங்களிடம் கேட்கின்றனர்.

அத்துடன் 2001இல் நான் பிரதமராகியதுடன் ஜப்பானுடன் இருந்த நுரைச்சோலை நிலக்கறி திட்டத்தை நிறுத்தினேன். அதற்கு நிதி பிரச்சினை ஏற்படுவதால் 6மாதத்துக்கு நிறுத்தினேன். ஆனால் எமது அரசாங்கம் தோல்வியடைந்தவுடன் மீண்டும் இந்த இடத்தில்தான் அதனை போடவேண்டும் என அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது அவர்கள் அனைவரும் ஓய்வு பெற்றுச்சென்றுள்ளனர். அதேபோன்று 2002இல் நாங்கள் உலக வங்கியின் உதவியை பெற்றுக்கொண்டு, மின்சக்தி தொடர்பில் எமக்கு அறிக்கை ஒன்றை தந்தார்கள். அந்த அறிக்கையை பெற்றுக்கொண்டு, தற்போது இருக்கும் மின்சாரம் தொடர்பான சட்டமூலத்தை கருஜயசூரிய கொண்டுவந்தார்.

ஆனால் நாங்கள் தேர்தலில் தோலியடைந்ததுடன் அந்த சட்டமூலத்தை செயற்படுத்தவில்லை. 2007 சட்டமூலத்தை கொண்டுவருமாறு தெரிவித்தனர். அப்போது நாங்கள எந்த மின்சார உற்பத்தி நிலையத்தையும் ஏற்படுத்தவில்லை. அதனால் அதன் பிரகாரம் செயற்பட முடியாமல் போனது.

பின்னர் 2017, 2018,2019 காலத்தில் நாங்கள் இந்தியா, ஜப்பானுடன் கலந்துரையாடி எல்..என்.ஜி. மின் உற்பத்திய நிலையங்கள் 2 பெற்றுக்கொண்டோம்.

தேர்தல் முடிந்து எமது அரசாங்கம் சென்ற பின்னர், இவர்கள் என்ன செய்தார்கள். அந்த ஒப்பந்தத்தை இரத்துச்செய்யாமல், அமெரிக்காவின் நியுபோட்ரஸுக்கு வழங்கினார்கள். அதன் பின்னர் நியுபாேட்ரஸுக்கு விருப்பம் இல்லாமல் அதனை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வழங்கினார்கள். தற்போது ஒரே பூமியில் இந்தியா, ஜப்பான், சீனா, பாக்கிஸ்தான், அமெரிக்கா அனைத்து நாடுகளும் இருக்கின்றன.

ரஷ்யா மாத்திரமே இல்லை. உலக யுத்தம் ஒன்று ஏற்படாததுதான் ஆச்சரியமாக இருக்கின்றது. ஒரே இடத்தை அனைத்து நாடுகளுக்கும் கொடுத்துவிட்டு தற்போது பிரச்சினையை தீர்க்குமாறு என்னிடம் தெரிவிக்கின்றனர். இறுதியில் எல்.என்.ஜியும் இல்லை எதுவும் இல்லை.

மாண்டெஸ் சூறாவளியால் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில பிரதேசங்களிலும் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வங்காள விரிகுடாவின் தென் கிழக்கு கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, சூறாவளியாக வலுவடைந்துள்ளதால் இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூறாவளிக்கு மாண்டெஸ் (Mandous) என பெயரிடப்பட்டுள்ளது.

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் அமைப்பு இலங்கைக்கு அவசியம் – சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன்

கோட்டடாபய ராஜபக்ஷ சில காலம் சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு தனது நாடு அனுமதியளித்ததன் மூலம் இலங்கையில் அமைதியான ஆட்சிமாற்றத்திற்கு உதவியுள்ளது என கருதுவதாக சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

சிஎன்பிசிக்கு வழங்கிய பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையில் நல்லிணக்கத்திற்கான அவசியம் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் பேட்டியில் தெரிவித்துள்ளதாவது,

கேள்வி:- நல்லாட்சியும் ஊழல்இன்மையும்,இலங்கைக்கு மிகமுக்கியமான சொற்பதங்கள் முக்கியமான அபிலாசைகள். நானும் நீங்களும் பலதடவை இலங்கை குறித்தும் அதற்குள்ள ஆற்றல் குறித்தும் பேசியுள்ளோம்.

அமைச்சர் அவர்களே நாங்கள் மீண்டும் இந்த வருட ஆரம்பத்திற்கு திரும்பி செல்வோம் என்றால்  ஏன் சிங்கப்பூர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுமதியளித்தது- புகலிடம் இல்லை அதனை நான் தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றேன்.

நான் இங்கு சந்தித்த இலங்கையர்களும் புலம்பெயர் தமிழர்களும் இந்த அனுமதி குறித்து கடும் அதிர்ச்சியும் சீற்றமும் வெளியிட்டிருந்தனர் – பிழையான செய்தியை இது சொல்லியதாக கருதினர்?

பதில் :- நான் இது குறித்து என்ன தெரிவிக்க விரும்புகின்றேன் என்றால் அதிகாரமாற்றம்  மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றது.

ஜனாதிபதி சிங்கப்பூரிற்கு வந்தவேளை அவர் அப்போதும் ஜனாதிபதியாக காணப்பட்டார், அவர் அதன் பின்னர் தனது இராஜினாமாவை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

அவர் அதன் பின்னர் ஒரு சாதாரண இலங்கை பிரஜையாக விளங்கினார்,நாங்கள் அவரை ஒரு சாதாரண இலங்கை பிரஜையாகவே நடத்தினோம்.

அவர் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே சிங்கப்பூரில் தங்கியிருந்தார், எந்த இலங்கை பிரஜைக்கும் அதற்கான உரிமையுள்ளது.

நாங்கள் அவருக்கு எந்த சலுகையையும் வழங்கவில்லை, விடுபாட்டுரிமையையும் வழங்கவில்லை,பாதுகாப்பையும் வழங்கவில்லை.

இது சட்டத்தின் ஆட்சி தொடர்பானது மிகவும் அவதானமாக நியாயமான முறையில் நடந்துகொள்வது தொடர்பானது நாங்கள் அதனை செய்தோம்.

இலங்கையில் அமைதியான முறையில் அதிகாரமாற்றத்திற்கு நாங்கள் உதவியுள்ளோம் என்றால் அது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றோம். அவர் மீண்டும் இலங்கைக்கு சென்றுள்ளார்.

நான் அந்த நாட்டில் தேசிய நல்லிணக்கம் ஏற்படும் என நம்புகின்றேன். நான் பல தடவை இலங்கைக்கு சென்றிருக்கின்றேன்,உலகம் முழுவதும் இலங்கை மக்கள் மிகவும் வெற்றிகரமானவர்களாக திகழ்கின்றனர்,

இலங்கை ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட தீவு.ஆனால் அவர்களிற்கு அரசியல் அமைப்புமுறையொன்று அவசியம், நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் அமைப்பு- இனம் மதம் மொழி

அனைத்து மக்களிற்கும் அவர்கள் தங்கள் ஆற்றலை பயன்படுத்துவதற்கான  நியாயமான வாய்ப்பை  வழங்கவேண்டும்,இது இலங்கைக்கு முக்கியமான விடயம் என நான் கருதுகின்றேன்.

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டுமாயின் நாட்டில் நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் – சித்தார்த்தன்

வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டுமாயின் நாட்டில் நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

தமிழ் தரப்பினர்  அரசியல் கட்சி பேதங்களை விடுத்து அரசியல் தீர்வு விடயத்தில் ஒன்றுபட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிச.08) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்ளைகள் அமைச்சு, முதலீட்டு மேம்பாடு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்ட பின்னணியில் பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்ட போது, பொருளாதார நெருக்கடிக்கு ஓரளவு தீர்வு எட்டப்பட்டு, வரிசை யுகம் கட்டம் கட்டமாக முடிவுக்கு கொண்டு வரப்படும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது.

நடைமுறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண பிரதமர் உட்பட அமைச்சரவை ஒத்துழைப்புடன் செயற்படுகிறது என்பதை குறிப்பிட வேண்டும்.

நிலையான பொருளாதார மீட்சிக்கான திட்டங்கள் முறையாக செயற்படுத்தப்படவில்லை. நாட்டில் பணவீக்கம் தற்போது குறைவடைந்துள்ளது, இருப்பினும் அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது.

பூகோள ரீதியான காரணிகள் தற்போதைய பொருளாதார பாதிப்புக்கு ஒரு காரணம் என்று குறிப்பிடுவதை மறுக்க முடியாது.

தேசிய கொள்கை வகுத்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பங்களிப்பு கிடையாது. தேசிய கொள்கை வகுப்பில் தெற்கு அரசியல் கட்சிகள் முன்னிலையில் இருந்து செயற்படுகின்றன.வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகள் கோரப்படுவதில்லை.

வடக்கு மாகாணத்தில் ஒருகாலத்தில் மீன்பிடி மற்றும் உற்பத்தி கைத்தொழில் முன்னேற்றமடைந்திருந்தது. மொத்த மீன்பிடியில் மூன்றில் இரண்டு பங்கு நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

இந்த முன்னேற்றம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டது. இருப்பினும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னரும் இந்த துறைகள் மீள கட்டியெழுப்பப்படவில்லை. நாட்டின் உற்பத்தி துறைகள் முறையாக மறுசீரமைத்தால் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையும்.

பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண வேண்டுமாயின் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்த வகையில் தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்றார்.