கடன் மீளச் செலுத்துவதை மறுசீரமைத்தால் மாத்திரமே இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியும் – ரணில்

இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமாயின், கடன் மீளச் செலுத்துவதை மறுசீரமைக்க வேண்டும். அத்தோடு மிகத் திருத்தமான பொருளாதார முறைமையொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நெருக்கடி நிலைமையிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் முதன்மையானதும் மிகவும் எதிர்பார்ப்புடையதுமான வருடாந்த பொருளாதார நிகழ்வான, 2022ஆம் ஆண்டுக்கான இலங்கை பொருளாதார மாநாடு திங்கட்கிழமை (டிச. 05) ஷங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. ‘ கொந்தளிப்பில் இருந்து வாய்ப்புக்கு மீள்வது’ என்ற தொனிப்பொருளின் இந்த மாநாடு நடைபெற்றது.

இந்நிகழ்வை அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ,

2050ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் வகையில் வலுவான புதிய பொருளாதார முறைமையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருளாதார மறுசீரமைப்புக்கு மேலதிகமான பணியாகும்.

பழைமையான பொருளாதார முறைமையை கையாள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது. இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முதலாவதாகவும் இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் தேவைப்படுவது அந்நியச்செலாவணியே ஆகும்.

மேலும், இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமாயின், கடன் மீளச் செலுத்துவதை மறுசீரமைக்க வேண்டும் என்பதுடன், மிகத் திருத்தமான பொருளாதார முறைமையொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

இந்நிலைமையிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளோம். இதற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளது.

அடுத்த வருடம் மின் சக்தித் துறைக்கு மாத்திரம் 300 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்படவுள்ளது. இதனால் இச்செலவை மீளப் பெற்றக்கொள்வதற்கான மாற்றுவழிகளைத் தேட வேண்டியுள்ளது. வலுச்சக்தி துறையில் புதிய மாற்று சக்திகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது. புதுப்பிக்கத்தக்க சக்திக்கு பதிலாக பசுமை ஹைட்ரஜன் சக்தியில் கவனம் செலுத்த அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது என்றார்.

உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் , இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் விஷ் கோவிந்தசாமி, இந்திய என்.ஐ.டி.ஐ யின் பிரதம நிறைவேற்ற அதிகாரி பரமேஸ்வரன் ஐயர் ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர். பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரட்ன, ஹர்ஷ டி சில்வா மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஒருங்கிணைந்த நிதி உதவித் திட்டங்கள் இலங்கைக்கு அவசியம் – சர்வதேச நிதி நிறுவன தலைவர்கள் தெரிவிப்பு

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பல்தரப்பு நிதி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த உதவித் திட்டம் இலங்கைக்கு அவசியமென சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

உலக வங்கி , ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளே மேற்படி தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.

கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன்  செவ்வாய்க்கிழமை (நவ.06)  இடம்பெற்ற நீண்ட, வட்டமேசை கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , நீண்டகால அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சியுடன் இணைந்ததான இலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்வைத்தார்.

உலக வங்கியின் துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் , ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணைத் தலைவர் ஷிக்சின் சென், சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரி பீட்டர் ப்ரூயர், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி கலாநிதி. உர்ஜித் பட்டேல் ஆகிய சர்வதேச நிதி நிறுவனங்களின் பிரதானிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

அத்தோடு பிரதமர் தினேஷ் குணவர்தன, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் தினேஷ் வீரக்கொடி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி. நந்தலால் வீரசிங்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி உள்ளிட்டோரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மின் கட்டணம் அதிகரிக்கப்படாவிடில் 6-8 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு – கஞ்சன விஜேசேகர

நடைமுறைக்கு பொருந்தும் வகையில் மின்கட்டணத்தை திருத்தம் செய்யாவிட்டால் எதிர்வரும் ஆண்டு நாளாந்தம் 6 முதல் 8 மணித்தியாலங்கள் வரை மின்துண்டிப்பை அமுல்படுத்த நேரிடும்.மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதை தவிர்த்து தற்போதைய நிலையில் மாற்றுத்திட்டம் ஏதும் கிடையாது என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவாறு குறிப்பிட்டார்.

மின்சார சபை எதிர்கொண்டுள்ள நட்டத்தை ஈடு செய்வதற்காக மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும்,இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவும் நாட்டு மக்களை தவறான வழிநடத்தியுள்ளனர்.

கடந்த காலங்களின் எதிர்கொண்ட நட்டத்தை முகாமைத்துவம் செய்யும் வகையில் மின்கட்டணத்தை திருத்தம் செய்யும் எவ்வித பரிந்துரைகளும் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவில்லை.

மின்னுற்பத்திக்கான செலவை முகாமைத்துவம் செய்யல்,ஒரு வருடத்தில் இருமுறை மின் கட்டணத்தை நடைமுறைக்கு சாத்தியமான வகையில் திருத்தம் செய்யும் யோசனைகள் மாத்திரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டுக்கான மின்னுற்பத்திக்கான மொத்த செலவை இலங்கை மின்சார சபை மதீப்பீடு செய்து அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ளது.

நீர்மின் மற்றும் உராய்வு எண்ணெய் ஊடாக மின்சார உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படுகிறது.

ஒரு மின்னலகு உற்பத்திக்கு மாத்திரம் 56.6 ரூபா செலவாகும் நிலையில் எதிர்வரும் ஆண்டு இந்த தொகை பன்மடங்கு அதிகரிக்க கூடும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.மின்சார உற்பத்திக்கு மாதம் 800 பில்லியன் ரூபா செலவாகும் நிலையில் 500 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு கடந்த ஆகஸ்ட் மாதம் மின்கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்கியது.ஒவ்வொரு ஆண்டும் மின்சார கட்டணத்தை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு திருத்தம் செய்திருந்தால் தற்போது இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காது.

ஒரு மின்னலகு உற்பத்திக்கு 56.6 ரூபா செலவாகும் நிலையில் பொது மக்களிடமிருந்து தற்போது ஒரு மின் அலகுக்கு 29.14 ரூபா அறவிடப்படுகிறது.இலங்கை மின்சார சபை மாதாந்தம் 423 பில்லியன் ரூபாவை வருமானத்தை காட்டிலும் மேலதிகமாக செலவிடுகிறது.இந்த தொகையை வழங்க முடியாது என திறைச்சேரி குறிப்பிட்டுள்ளது.

நடைமுறைக்கு பொருத்தமான முறையில் மின்சார கட்டணத்தை திருத்தம் செய்யாவிடின் எதிர்வரும் ஆண்டு நாளாந்தம் 6 அல்லது 8 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை செய்ய நேரிடும்.மின்கட்டணத்தை தவிர்த்து பிற திட்டங்கள் ஏதும் கிடையாது.தனியார் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு மாத்திரம் 70 பில்லியன் ரூபாவும்,மின் விநியோகஸ்தர்களுக்கு 40 பில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டும். மின்விநியோகஸ்தர்களுக்கான கட்டணத்தை வழங்காவிடின் அது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும்.

மின்கட்டணத்தை அதிகரிக்கும் அமைச்சரவை யோசனை சட்டபூர்வமானது இல்லை என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளமை பொருத்தமற்றது. சட்டமாதிபரின் ஆலோசனைக்கு அமையவே மின்கட்டணம் திருத்தம் தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது என்றார்.

விவசாயத்துறை நெருக்கடி நிலைக்கு தீர்வு காணப்படாவிடில் நாடு மோசமான விளைவுகளை எதிர் நோக்கும் – மைத்திரி

விவசாயத்துறையில் எடுத்த தீர்மானங்களின் விளைவை முழு ,நாட்டு மக்களும் தற்போது நன்கு எதிர்கொண்டுள்ளார்கள். விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு விரைவான தீர்வை காணாவிட்டால் நாடு மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.06) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் விவசாயம், நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் ஆகிய அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

விவசாய நடவடிக்கைகளுக்கான பயிர் விதை விநியோகத்தில் பாரிய தட்டுப்பாடு காணப்படுகிறது. காலநிலை மற்றும் மண்வளத்திற்கு உகந்த வகையிர் பயிர் விதைகள் சந்தையில் விநியோகிக்கப்படுவதில்லை.

தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உணவு பொருட்கள் தற்போது முழுமையாக இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்பட்டுள்ளது.

நாட்டின் உணவு பாதுகாப்பு எந்நிலையில் காணப்படுகிறது என்பதை பற்றி புதிதாக குறிப்பிட வேண்டிய தேவை கிடையாது.

உணவு பாதுகாப்பிற்கு உரிய சட்டம் இதுவரை இயற்றப்படவில்லை. உணவு பாதுகாப்புக்கு விரைவான தீர்வு எடுக்காவிட்டால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

விலங்குகளினால் பயிர்செய்iகைக்கு ஏற்படும் விளைகள் தொடர்பில் தொழினுட்ப ரீதியில் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

நா நாட்டில் உரம் தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளது.சந்தையில் உரம் ஒவ்வொரு விலையில் காணப்படுகிறது.

நெல்லுக்கான உத்தரவாத விலை இல்லாத காரணத்தினால் விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நெற்பயிர்ச்செய்கை உற்பத்திக்கான செலவுக்கும், நெல் சந்தைப்படுத்தல் சபை நிர்ணயிக்கும் விலைக்கும் இடையில் பாரிய வேறுப்பாடு காணப்படுகிறது. ஆகவே விவசாயிகள் திருப்தியடையும் வகையில் நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்க வேண்டும்.

விவசாயத்துறையில் எடுத்த தீர்மானங்களின் விளைவை முழு நாட்டு மக்களும் தற்போது நன்கு எதிர்கொண்டுள்ளார்கள்.

விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு விரைவான தீர்வை காணாவிட்டால் நாடு மிக மோசமான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உரங்களின் தரம் குறித்து பாரிய பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது. சேதன பசளை உற்பத்திகள் தொடர்பில் விவசாயத்துறை அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

வடக்கில் இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலுக்கு தீர்வு காணப்பட வேண்டும் – ஜே.வி.பி யின் விஜித ஹேரத்

இந்திய படகுகள் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்தால் துப்பாக்கியால் சுடுவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் போது குறிப்பிட்டார்.

அவர் தற்போது ஜனாதிபதி ஆகவே ஒரு தீர்மானம் குறித்து அவதானம் செலுத்தலாம் என மக்கள் விடுதலை முன்னணியின்  பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கடற்றொழில் அமைச்சரிடம் குறிப்பிட்டார்.

இதேவேளை ஜனாதிபதி எனக்கு முழு அதிகாரம் வழங்கியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்.

இலங்கை -இந்திய பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிடப்படுகிறதே தவிர தீர்வு எட்டப்படவில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (டிச. 06) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்  திட்டத்தில் விவசாயம்,நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் ஆகிய அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

விவசாயம்,கடற்றொழில் மற்றும் நீர்பாசனம் ஆகிய அமைச்சுக்கள் நாட்டின் தேசிய உற்பத்தி தொழிற்துறையை இலக்காக கொண்டவை.1977 ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியில்  விவசாயத்துறை 30 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது.

ஆனால் தற்போது மொத்த தேசிய உற்பத்தியில் விவசாயத்துறை 6.2 சதவீத பங்களிப்பை மாத்திரம் வழங்குகிறது. இதை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது.

இதுவே அரசாங்கம் செயல்படுத்திய செயற்திட்டங்களின் பெறுபேறு. முன்னாள் ஜனாதிபதி கோட்டய ராஜபக்ஷ தூரநோக்கற்ற வகையில் விவசாயத்துறையில் செயற்படுத்திய தீர்மானங்கள்  இன்று முழு விவசாயத்துறையும் முழுமையாக இல்லாதொழித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

எவ்வித தடையும் இல்லாமல் சிறுபோகம் மற்றும் பெரும்  போகத்திற்கு உரம் கிடைத்த போது ஒரு வருடத்திற்கு 34 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி விவசாயிகள் உற்பத்தி செய்வார்கள்.

ஒருவருடத்திற்கு 24 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி மொத்த சனத்தொகையின் கொள்வனவிற்கும் போதுமானதாக அமைந்தது, ஒருவருடத்திற்கு  மேலதிகமாக 10 இலட்சம் அரிசி உற்பத்தி செய்யப்பட்டது.ஆனால் கோட்டாபய ராஜபக்ஷவின் விவசாய கொள்கையினால் முழு விவசாயத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

விவசாய நடவடிக்கைகளுக்கு முழுமையான உரம் வழங்கப்படும் என அரசாங்கம் பேச்சளவில் குறிப்பிடுகிறதே தவிர செயலளவில் ஏதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. வாக்குறுதிகளை வைத்துக் கொண்டு விவசாயிகளினால் விவசாயம் செய்ய முடியாது. உர பிரச்சினைக்கு இதுவரை அரசாங்கம் சிறந்த தீர்வை பெற்றுக்கொடுக்கவில்லை.

நெனோ நைட்ரஜன் உர இறக்குமதிக்கு மக்கள் வங்கியில் தனிப்பட்ட கணக்கு எவ்வாறு திறக்கப்பட்டது. அரசாங்கம் உரம்  இறக்குமதி செய்யும் போது எவ்வித முறைகேடும் இடம்பெறவில்லை என முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த குறிப்பிட்டார்.

ஆனால் தற்போது குறிப்பிடுகிறார். உரம் இறக்குமதிக்கும் தனது அமைச்சுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்கிறார். இந்த உர இறக்குமதி தொடர்பில் இன்று பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த முறைகேட்டினால் இழக்கப்பட்ட அரச வருமானத்திற்கு யார் பொறுப்பு என்பது இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

ஒரு கிலோகிராம் நெல்லுக்கான உத்தரவாத விலை 90 ரூபாவாகவே காணப்படுகிறது. வி வசாயிகளின் உற்பத்திக்கு செலவுக்கு  கூட உத்தரவாத விலை சாதகமாக அமையவில்லை.

இவ்வாறான பின்னணியில் விவசாயிகள் எவ்வாறு தொடர்ந்து விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். 2023 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை. 350 கோடி ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே மீன்பிடி துறையில் ஒருபோதும் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது.

நீர்கொழும்பு களப்பு பகுதிகளில் இயற்கை அம்சங்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன. நாட்டில் உள்ள களப்புக்களில் இரசாயன பதார்த்தங்கள் மாசுப்படுத்தப்படுகின்றன.

ஆகவே  களப்பு அபிவிருத்தி அதிகார சபையை ஸ்தாபிக்குமாறு பலமுறை அறிவுறுத்தியும் இதுவரை அது செயற்படுத்தப்படவில்லை.

ஒலுவில் துறைமுகம் தவறான திட்ட அபிவிருத்தியாகும்.இன்று வெறும் கட்டடம் மாத்திரமே மிகுதியாக உள்ளது.வாழைச்சேனை துறைமுகத்தில் அடிப்படை வசதிகளில் பாரிய குறைபாடு காணப்படுகிறது.

ஆகவே ஒலுவில் துறைமுகத்தில் தேங்கியுள்ள மண்ணை  அகற்றுவதற்கு நோர்வே அரசாங்கம் வழங்கிய இயந்திரத்திற்கு நேர்ந்தது என்ன என்பதை கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட வேண்டும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு மூன்று மாத காலவகாசம் வழங்குங்கள். அபிவிருத்தி பணிகள் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய விஜித ஹேரத் இலங்கை –இந்திய பிரச்சினை தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாக உள்ளது.

கிளிநொச்சி,யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்ளது.

இதனால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இருதரப்பு இணக்கப்பாட்டுக்கு வந்து எல்லை அடிப்படையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

ஆழ்கடல் மீன்பிடி மற்றும் சாதாரண மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

எரிபொருள் விலையேற்றம் அவர்களின் உழைப்பை தீர்மானிக்க முடியாத நிலையில் உள்ளது. மீனவர்களுக்கு முறையான காப்புறுதி கிடைக்கப்பெறுகிறதா என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது.

இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் இலங்கை கடற்பரப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் ஒட்டுமொத்த மீனவர்களும் ஏதாவதொரு வழிமுறையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு முழுமையாக வழங்கப்படவில்லை. சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா? நட்டஈடு மதிப்பிடப்பட்டுள்ளதா? சட்ட நடவடிக்கை என்ன இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண கடற்றொழில் அமைச்சு துரிதமாக  செயற்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய அமைச்சர் டலஸ் டக்லஸ் தேவானந்தா இலங்கை இந்திய பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை மேற் கொள்ளப்பட்டுள்ளது,தீர்வு காண்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் பெரிய படகுகளில் வருகிறார்கள்.

ஆனால் எதுவு மில்லை. இலங்கை மீனவர்கள் சிறிய படகுகளை பயன்படுத்துகிறார்கள். கைப்பற்றப்பட்டுள்ள இந்திய படகுகளை திருத்தி அதனை இலங்கை மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய விஜித ஹேரத் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் போது மன்னார் மாவட்டத்திற்கு சென்று ‘இந்திய படகுகள் வந்தால் சுடுவேன்’ என்றார் தற்போது அவர் ஜனாதிபதி ஆகவே உங்களுக்கு தீர்மானம் எடுக்க முடியும் என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர் (ஜனாதிபதி) எனக்கு முழுமையான அதிகாரம் வழங்கியுள்ளார்,அவதானம் செலுத்தப்படும் என்றார்.

80 பில்லியன் ரூபா கடன் ; வீதி புனரமைப்புக்கள் தற்போது சாத்தியமில்லை – பந்துல

நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்கனவே புனரமைக்கப்பட்ட வீதிகளுக்காக ஒப்பந்தக்காரர்களுக்கு நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சினால் 80 பில்லியனுக்கும் அதிக தொகை செலுத்தப்பட வேண்டியுள்ளது.

இதனை செலுத்தாமல் அவர்களால் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட மாட்டாது. தற்போது வீதி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கக் கூடிய சாத்தியமும் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (டிச.06) நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது அரச ஊடகமொன்று புனரமைக்கப்படாத வீதிகள் தொடர்பில் தினமும் செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.

நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் தனிப்பட்ட ரீதியில் என்னால் அந்த வீதிகளை புனரமைக்க முடியாது. அரசாங்கம் அமைச்சிற்கு நிதியை வழங்கினால் மாத்திரமே வீதிகளை புனரமைக்க முடியும்.

ஏற்கனவே அமைக்கப்பட்ட வீதிகளுக்காக ஒப்பந்தக்காரர்களுக்கு 80 பில்லியனுக்கும் அதிக தொகையை செலுத்த வேண்டியுள்ளது.

இந்தத் தொகையை தொகுதிகளாக மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே செலுத்திக் கொண்டிருக்கின்றோம். செலுத்த வேண்டிய பணத்தை வழங்காவிட்டால் , ஒப்பந்தக்காரர்கள் வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பிக்கமாட்டார்கள்.

மக்களின் வரிப்பணத்தில் கிடைக்கப் பெறும் வருமானம் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்திற்கும் அபிவிருத்தி பணிகளை பேணுவதற்கும் செலவிடப்படுகிறது.

இதனால் எஞ்சிய தொகை எதுவும் இல்லை. முன்னர் பணம் அச்சிடப்பட்டு இந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டன. எனினும் தற்போது அவ்வாறு செய்ய முடியாது. எனவே இது முறையாக முகாமைத்துவம் செய்யப்பட வேண்டிய பிரச்சினையாகும். நிதி முகாமைத்துவம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும் என்றார்.

அதிகாரப் பகிர்வை இனவாதிகளே வலியுறுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் – டக்ளஸ்

அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளுமாறு இனவாதிகளும் சொல்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமே தவிர, இனவாத சக்திகளுக்கு மெல்வதற்கு அவலை கொடுக்க கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (6) இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த விவாதத்தில், கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள், கடந்த கால அடைவுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்திய கடற்றொழில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“கௌரவ ஜனாதிபதி அவர்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு விடுத்திருக்கின்ற அழைப்பினை ஏற்று அதனை எமது மக்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு தமிழ் அரசியல் தரப்பினர் முன்வர வேண்டும்.

எம்மைப் பொறுத்தவரையில், தற்போது இந்த நாட்டின் அரசியல் யாப்பில் நடைமுறையில இருக்கின்ற எமது அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்தினை பலப்படுத்தி அதனை முன்னெடுப்பதையே எமது மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைக்கு ஓர் ஆரம்பத் தீர்வாகக் கருதுகிறோம்.

இல்லாததைப் பற்றிக் கதைத்து இருப்பதையும் கைவிட்டு விடக்கூடாது என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.

தமிழ் மக்களது பிரச்சினை தொடர்பில், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இப்போதே சில நாடகங்கள் அரசியல் அரங்கில் மேடையேற்றப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அரிசிக்காக அயல் நாடுகளிடம் கையேந்தி நிற்கும் நிலைமைக்கு யார் காரணம்? – ஜனா எம்.பி

அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் நாங்கள் எதிர்ப்பவர்கள் அல்ல. அதே போல ஏற்றுக் கொள்ளக் கூடியவற்றைச் செய்தால் அதனை எடுத்துரைக்காதவர்களும் அல்ல. இதுவே எமது நிலைப்பாடு. அதே போலவே விவசாய அமைச்சை விமர்சித்தது மாத்திரமல்ல, இன்றைய சூழலில் அவரைத் தட்டிக் கொடுத்து நிலைமையினை சீராக்க வேண்டிய பாரிய பொறுப்பும் எங்களுக்குள்ளது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று நாம் கமத்தொழில் அமைச்சு, நீர்பாசன அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டிருக்கிறோம். ஒன்றோடொன்று தொடர்புடைய மிக முக்கியமான அமைச்சுகள் இவைகளாகும்.

எனது உரையினை ஜனாதிபதி அவர்களின் வரவு செலவுத்திட்ட உரையின் வாசகங்கள் சிலவற்றுடன் இணைத்து ஆரம்பிப்பது பொருத்தம் என நினைக்கிறேன். சுதந்திரத்தின் பின்னர் 75 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் எமது நாடு குறித்து எம்மால் திருப்திப்படுத்த முடியுமா? நாம் எங்கே தவறுவிட்டோம். தவறிய இடம் எது என்று அவர், வினவினார்.

அது மாத்திரமல்ல அப்போது ஆசியாவில் யப்பானுக்கு அடுத்த படியாக தனிநபர் வருமானத்தில் இரண்டாம் இடத்தில் நமது நாடு இருந்ததாகவும் கூறினார்.

அதே போன்று ‘இரந்து பெற்று விருந்து உண்ணும்’ போக்கே எமது போக்காக இதுவரை இருந்துள்ளது என்றும் எடுத்துரைத்தார். இது உண்மையை உணர்த்துகின்ற உரையாகவே பார்க்கிறேன். ஆனால் இவற்றிற்கு யார் பொறுப்பு. மக்களா, இல்லை சுதந்திரம் பெற்ற காலம் முதல் மாறிமாறி வந்த அரசாங்கங்களா என்பதை எமது ஜனாதிபதி அவர்கள் தனது வரவு செலவுத்திட்ட உரையில் கூற மறந்துவிட்டாரா, இல்லை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டாரா என்பது எனக்குத் தெரியாது.

எமது நாடு நான்கு புறமும் கடலால் சூழப்பட்டது. அதனால், மீன்பிடித்துறையும் கமத்தொழிலும் எமது மக்களது பிரதான வருமான மார்க்கமாகும். ஆனால், நாம் எமது விவசாயம், மீன்பிடி ஆகியவற்றில் எமது முழு இயலளவையும் பயன்படுத்தியிருக்கின்றோமா? அல்லது பயன்படுத்துகிறோமா என்றால், கிடைக்கும் பதில் இல்லை என்பதே ஆகும்.
சின்னஞ்சிறிய தீவுக் கூட்டங்களைக் கொண்ட மாலை தீவு தனது கடல் வளத்தை முழுமையாகப் பயன்படுத்துகின்றது. நாம் நாற்புறமும் கடல் சூழ்ந்திருந்தும் பற்றாக்குறையான அன்னியச் செலாவணியைச் செலவழித்து வேறு நாடுகளிலிருந்து ரின் மீன், மாசி, கருவாடு என்பவற்றை இறக்குமதி செய்கிறோம். இதே போலவே விவசாயத்துறைக்கும் போதுமான நிலவளம், நீர்வளம்;, அதற்கு உகந்த காலநிலை இருந்தும் நாம் அரிசிக்காக அயல்நாடுகளிடம் கையேந்தி நிற்கின்றோம். இந்நிலைமைக்கு யார் காரணம்.

பராக்கிரமபாகு மன்னன் எமது நாட்டு நீர்வளம் குறித்து கூறிய கூற்று ஒன்று எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. ‘எமது நாட்டின் நதிகளினது நீரில் ஒரு சொட்டு நீர் தானும் கடலுக்குச் செல்வதைத் தடுத்து கமத்தொழிலுக்குப் பயன்படுத்த வேண்டும்’ என்று சூழுரைத்தார். அதனைச் செயல்படுத்தியும் காட்டினார். குளம் கட்டி வளம் பெருக்கி எமது நாட்டின் விவசாயத் துறையை தன்னிறைவடைந்த நாடாக மாற்றினார்.

அன்று பராக்கிரமபாகு மன்னனால் முடியுமாக இருந்தது இன்று ஏன், எம்மால் முடியவில்லை என்று ஆட்சியாளர்கள் உங்களது மனச்சாட்சியிடம் வினாவியுள்ளீர்களா? பராக்கிரமபாகு மன்னன் நாட்டையும், தன் நாட்டு மக்களையும் உளமார நேசித்தார். அதன் விளைவுதான் அவரது செயலில் இருந்தது. உங்களைப் போன்று போலித் தேசியவாதியாக பராக்கிரமபாகு மன்னன் இருக்கவில்லை. பராக்கிரமபாகு மன்னன் மாத்திரமல்ல நாட்டை ஆண்ட அனைத்து மன்னர்களும் நாட்டின் நீர்வளத்தை சிறப்பான முறையில் முகாமைத்துவம் செய்து விவசாயத் துறையில் பூரண வெற்றி கண்டனர். வடக்கு, கிழக்கு வடமத்தி, வட மேற்கு என்று அனைத்த மாகாணங்களிலும் இருக்கும் குளங்கள் யாவும் மன்னர்கள் காலத்தில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்காக கட்டப்பட்ட குளங்களே ஆகும். அப்போது ஊழல், இலஞ்சம், கொள்ளை என்பன இருக்கவில்லை. அதனால் செயற்றிட்டம் சிறப்பாக இருந்தது. ஆனால், அவர்களால் முறையாகப் பேணப்பட்ட நீர் முகாமைத்துவத்தைக் கூட எம்மால் முறையாகச் செய்ய முடியவில்லை. மழைக்காலத்தில் குளங்களின் வான் கதவுகளைத் திறக்கின்றோம். நீர் வடிந்தோடியதும் வான்கதவுகளைப் பூட்டுகின்றோம். இறுதியில் பாசனத்துக்கு நீரில்லை. மழை வந்தால் வான் கதவைத் திறந்து மழை நின்றவுடன் வான் கதவைப் பூட்டுவதற்கு ஒரு அமைச்சு, ஒரு அரசாங்கம் தேவையா?

எம்மால் முறையாக நீர் முகாமைத்துவம் செய்ய முடிந்திருக்குமானால் தென்னாசியாவின் தானியக் களஞ்சியமாக நமது நாடு மிளிர்ந்திருக்கும்.

ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளால், குறிப்பாக இரசாயன உரம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையானது நலிவுற்று, நோயாளி நிலையில் இருந்த விவசாயத்துறையினை சமாதி கட்டிய துறையாக மாற்றிவிட்டது. இதனால் மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதாரச் சுமையை புழுவுயு புழு ர்ழுஆநு எனும் அறகலயவிற்கு ஆதார சுருதியாகியது. இதனால் கோட்டா ஜனாதிபதி பதவியை இழந்தது மாத்திரமல்ல, பிரதமர் தனது பதவியை இழக்க வேண்டியும், நிதி அமைச்சர் நாடு கடக்கவும் காரணமாகியது.

எமது விவசாயத்துறையை, மீன்பிடித்துறையை, நீர்ப்பாசனத் துறையை இன்றைய சரிவிலிருந்து மீட்டு கடந்த மன்னராட்சிக் காலங்கள் போல தன்னிறைவு அடையக்கூடிய வாய்ப்பு இன்னமும் குறைந்துவிடவில்லை. ஆனால், அதற்கு உங்களுக்கு உண்மையான அர்ப்பணிப்பும் உண்மையான தேசாபிமானமும் வேண்டும். கமிசன், தரகுப்பணம், இலஞ்சம் என்பவற்றையே இலக்கு வைத்துள்ள உங்களால், மக்களை உசுப்பேற்றுவதற்கு மாத்திரம் போலித் தேசியவாதம் பேசும் உங்களால் இதனை ஏற்படுத்த முடியாது என்பதை இந்த உயரியசபையில் மிகுந்த கவலையுடன், பதிவு செய்கின்றேன்.

நாட்டில் இவ்வளவு அக்கப்போர் நடைபெறும் இன்றைய சூழ் நிலையிலும் கூட பல துறைகளில் கமிசன்களும், தரகுப் பணங்களும் இடம்பெறுவதாக இந்த உயரிய சபையில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதனை வெறுமனே புறந்தள்ளி ஒதுக்கிவிடாதீர்கள் இன்னமும் இவை இப்படிய நடைபெற்றால் எப்படி நாம் இத்துறைகளில் தன்னிறைவடைய முடியும்.

எனது மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் நிலங்கள் கமத்தொழில் துறையில் பாவனையிலுள்ளது. இதில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் நிலம் இரு போகப் பயிர்ச்செய்கைக்கு உரிய நிலங்களாகும். கடந்த கால இரசாயன உரக் கொள்கையினால் எமது விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். தமது தங்க ஆபரணங்களை தனியாரிடமோ, வங்கிகளிடமோ, அல்லது வேறு நிதி நிறுவனங்களிலோ அடகு வைத்து விவசாயத்துறையில் முதலிட்டு அறுவடையின் போது அவற்றை மீட்டெடுத்து மீணடும் முதலீட்டுக்காக அவற்றைப் பயன்படுத்துவதே வழக்கமாகும்.

ஆனால் விவசாயத்துறையில் ஏற்பட்ட பாதிப்பு தாம் பெற்ற கடனையோ, தாம் அடகு வைத்த தம்முடைய தங்க நகைகளையோ மீளப் பெற முடியாது உள்ளனர். நமது நாட்டின் நிலைதான் நமது நாட்டு மக்களுக்கும். நமது நாடு தாம் பெற்ற கடனை எவ்வாறு மீளச் செலுத்த முடியாதுள்ளதோ அவ்வாறே தாம் பெற்ற கடனை மீளச் செலுத்த முடியாது, தாம் அடகு வைத்த நகைகளை மீளப் பெறமுடியாது. அனைத்தையும் இழந்து பொருளாதார நிலையில் அநாதையாகியுள்ளனர் நம் மக்கள்.

எனினும் தற்போது உரக் கொள்கைளில் தளர்வு ஏற்பட்டு இரசாயன உர விநியோகம் நடைபெறுகின்றது. ஒரு அந்தர் இரசாயன உரத்தினைக் கொள்வனவு செய்வதற்கு விவசாயி பத்தாயிரம் ரூபாவுக்கும் சற்றுக் கூடுதலாக செலவு செய்யவேண்டியுள்ளது. இந்த உர விநியோகத்தில் ஆங்காங்கே ஒரு சில பிரச்சினைகள் ஏற்பட்டு இருந்தது என்ற உண்மையை ஏற்றுக் கொண்டாலும் இந்த உர விநியோகக் கொள்கையை செயற்படுத்திய அமைச்சரையும், அரசையும் நான் பாராட்டாவிட்டாலும் தட்டிக் கொடுக்கின்றேன். இன்னமும் திறம்படச் செயற்படுங்கள் உங்களைப் பாராட்டுகிறேன்.

இதிலிருந்து நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் நாங்கள் எதிர்ப்பவர்கள் அல்ல. அதே போல ஏற்றுக் கொள்ளக் கூடியவற்றைச் செய்தால் அதனை எடுத்துரைக்காதவர்களும் அல்ல. இதுவே எமது நிலைப்பாடு. அதே போலவே விவசாய அமைச்சை விமர்சித்தது மாத்திரமல்ல, இன்றைய சூழலில் அவரைத் தட்டிக் கொடுத்து நிலைமையினை சீராக்க வேண்டிய பாரிய பொறுப்பும் எங்களுக்குள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாரிய குளங்கள், சிறிய குளங்கள் தொடர்பாக நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் தனது கவனத்தைச் செலுத்த வேண்டும். நான் முன்பு கூறியது போல நீர்ப்பாசன அமைச்சில் முறையான நீர் முகாமைத்துவக் கொள்கைக்கான திட்டமிடல் செயற்பாடுகள் அவசியம் மேற்கொள்ளப்படவேண்டும். எமது நாட்டில், பொங்கிப் பிரவாகித்து ஆர்ப்பரித்துவரும் நதிகளின் நீர் அனைத்தும் பாசனத் துறைக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.

வெறுமனே நதிகள் கடலில் கலப்பதுதான் நியதி என்ற பத்தாம் பசிலித்தனமான, கதைகளை உதறி எறிந்து நீர்ப்பாசன முகாமைத்துவத்தை சிறப்பான முறையில் கடைப்பிடிப்பீர்களாக இருந்தால் நிச்சயம் நாம் தென்னாசியாவின் நெற் களஞ்சியமாகத் திகழ்வோம். காலம் இன்னும் கடந்து விடவில்லை. பாசனக் குளங்கள் முறையாகப் பேணப்பட வேண்டும். தூர்வாரப்படவேண்டும். என குறிப்பிட்டார்.

அரச அதிகாரிகளின் விருப்பத்திற்கு அமையவே எல்லை நிர்ணயம் செய்யப்படுகிறது – வினோ எம்.பி

மக்கள் பிரதிநிதிகளினதும், மக்களினதும் விருப்பத்திற்கு முரணாக உள்ளுராட்சிமன்றங்களின் எல்லை தொகுதிகள் நிர்ணயம் செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அரச அதிகாரிகளின் விருப்பத்திற்கு அமையவே எல்லை நிர்ணயம் செய்யப்படுகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் விவசாயம், நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் ஆகிய அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொகுதி தொடர்பான எல்லை நிர்ணய குழுவின் கூட்டங்கள் மாவட்ட ரீதியில் இடம்பெறுகின்றன.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டுமாக இருந்தாலும் அவசர அவசரமாக எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட்டு மக்கள் பிரதிநிதிகளினதும், மக்களின் விருப்பமில்லாமல், அதிகாரிகளின் விருப்பத்திற்கமைய எல்லை நிர்ணயம் செய்யப்படுவது. உண்மையான நோக்கத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

அரச அதிகாரிகளின் விருப்பத்திற்கமைய மாத்திரம் எல்லை நிர்ணயம் செய்யப்படுகிறது, இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமைக்கு அமைய தேர்தல் நடத்தப்பட வேண்டும். எல்லை நிர்ணயங்களை தமது விருப்பத்திற்கு அமையவே அரசாங்கம் நிர்ணயம் செய்ய முயற்சிக்கிறது, இது முழுமையாக நிறுத்தப்பட வேண்டும்.

வனவள திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் பயிர்செய்கைகளுக்காக வழங்கப்படும் என விவசாயத்துறை அமைச்சர் குறிப்பிட்டார், ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

வடக்கு மாகாணத்தில் வடக்கு மாவட்டத்தில் மக்கள் காலம் காலமாக விவசாயம் செய்த காணிகளை வனவளத்துறை திணைக்களம் கையகப்படுத்தியுள்ளது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் விவசாயத்துறை அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும்.

பொருளாதார பாதிப்பில் இருந்து மீள வேண்டுமாயின் நாட்டில் விவசாயத்துறை மேம்படுத்த வேண்டும். ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாய காணிகளை வனவளத்துறை திணைக்களம் ஏதாவதொரு காரணத்தை குறிப்பிட்டுக் கொண்டு சுவீகரிப்பதையே பிரதான இலக்காக கொண்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் மீனவர் பிரச்சினை, விவசாய பிரச்சினை தொடர்பான கூட்டங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படுவதில்லை. வடக்கு மாவட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு நியமிக்கப்படாத காரணத்தினால் அரச அதிகாரிகள் தன்னிச்சையாக செயற்படுகிறார்கள்.

மக்கள் பிரநிதிகள் மக்கள் பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்த உரிய வழிமுறை காணப்படவில்லை. அனைத்து பிரச்சினைகளுக்கும் பாராளுமன்றத்தின் ஊடாக மாத்திரம் தீர்வு காண முடியாது, ஆகவே மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாவட்ட மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். என தெரிவித்தார்.

இலங்கையின் கடன் சுமைக்கு தீர்வை காண்பதற்கான கூட்டு முயற்சிகளிற்கு சீனா அழைப்பு

இலங்கையின் கடன்சுமைக்கு தீர்வை காண்பதற்கான கூட்டு முயற்சிகளிற்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கை போன்ற நாடுகளின் கடன்தறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக  சர்வதேச நாணயநிதியத்தின் குழுவொன்று இந்த வாரம் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்துடனும் ஏனைய நிதியமைப்புகளுடனும் சீனாவிற்கு நீண்ட கால நல்லுறவு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நெருக்கடிகள் சவால்களிற்கு சீனா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இந்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்கு நிதியமைப்புகளிற்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம் என சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் அதன் கடன் சுமையை குறைத்து பேண்தகு அபிவிருத்தியை சாத்தியமாக்குவதற்கும் உரிய சர்வதேச நிறுவனங்கள் சீனாவுடன் இணைந்து செயற்படும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.