இலங்கைத் தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியப் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க பிரதமர் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரசியலாளரும், வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கருத்து கூறியுள்ளார். காமராஜரின் ஸ்தாபனக் காங்கிரஸ், திமுக, மதிமுக ஆகிய கட்சிகளிலும் முக்கிய பங்கு வகித்த இவர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 1983-ம் ஆண்டு ஜூலை கலவரத்தை நினைவுகூரும் ‘கறுப்பு ஜூலை’ தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி பின்வருமாறு:

  • இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் உருவான ஈழத் தமிழர் பிரச்சினை இன்னும் முடியாமல் நீள்கிறதே?

ஆங்கிலேயரிடம் இருந்து 1948-ல் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பு சிம்லாவில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அப்போது, ‘‘இந்தியாவின் ஒரு தீவாகத்தான் இலங்கை இருந்தது’’ என்று கூறி அதையும் சேர்த்துக் கொள்ள மவுன்ட்பேட்டன் யோசனை தெரிவித்தார். அதற்கு நேருவும், வல்லபபாய் படேலும் சம்மதிக்கவில்லை என்ற கூற்றும் உண்டு. மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பணியாற்றியதாலும், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் வாழ்ந்த பூர்வீகத் தமிழர்களாலும் மவுன்ட் பேட்டனுக்கு இந்த யோசனை உதித்துள்ளது.

இந்த இரு தரப்பினரும் அப்போது சிங்களவர் எண்ணிக்கைக்கு இணையாக இருந்துள்ளனர். இதை குறைக்க தேயிலை தொழிலாளர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு தமிழகம் அனுப்பப்பட்டனர். அதன்பின்னர் தமிழர்களுக்காக இலங்கை அரசு 1964-ம் ஆண்டுவரை 9 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு அவற்றில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. காவல் துறை, அரசு நிர்வாகம் என அனைத்திலும் சிங்களர்கள் ஆதிக்கம். இவற்றை எதிர்த்து நடத்தப்பட்ட அரசியல் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன. இதுபோன்ற பல இன்னல்களால், மே 14, 1976-ல் கொண்டுவரப்பட்ட வட்டுக்கோட்டை மாநாட்டின் தீர்மானத்துக்கு பிறகு தமிழர்களின் போராட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. 1970,1974-ம் ஆண்டுகளை விடப் பெரிதாக, 1983-ல் ‘கருப்பு ஜூலை’ எனும் பெரும் கலவரம் ஏற்பட்டது.

தலைநகர் கொழும்பில் கடந்த ஜூலை 24, 1983-ல் தொடங்கி 6 நாட்கள் நடைபெற்ற கலவரம் தனித்தமிழ் ஈழப்போராட்டமாக மாறியதில், அப்போதுசுமார் 5,000 பேர் உயிரிழந்து ஒன்றரை லட்சம் தமிழர்கள் வீடுகளை இழந்தனர். பிரபாகரனை போன்ற இலங்கை தமிழர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன்பிறகு தான் இலங்கை தமிழர்கள் அகதிகளாக நாட்டை விட்டு கிளம்பத் தொடங்கினர். இதை முன்னின்று நடத்தியவர் அன்று அமைச்சராக இருந்தவரும், ஜெயவர்தனேவின் மருமகனுமான தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கே.

இப்பிரச்சினையில், முன்னாள் பிரதமர்களை விட தற்போதைய பிரதமர் மோடியின் அணுகுமுறை எப்படி உள்ளது?

பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தில், சீனாவின் ஆதிக்கமும், கோயில்களில் புத்த விஹாரங்கள் அமைத்து மாற்றப்படுவதும் என இரண்டு பிரச்சினைகளும் கவனத்தில் உள்ளன.யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்காக ஒரு கலாச்சார மையம் கட்ட வைத்துள்ளார் பிரதமர் மோடி. இவர், இந்து மகா சமுத்திரத்தில் இந்தியாவுக்கு சவாலாகி வரும் புவி அரசியலையும் திறமையுடன் சமாளித்து வருகிறார்.

இந்தச் சூழலில், ஈழத் தமிழர்கள் பிரச்சினையை கையில் எடுக்கும்படி பிரதமர் மோடியை என் போன்றவர்கள் வலியுறுத்துகின்றனர். ஏனெனில், புவிஅரசியலில் ஈழத் தமிழர்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு கேடயமாக இருப்பார்கள் என்பதை பிரதமர் மோடி உணர்கிறார். எனவேதான், பல்வேறு உத்திகளை பிரதமர் மோடி வகுத்துள்ளார். அவற்றை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூலமாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் கிடைக்கிறது. ஐஎப்எஸ் அதிகாரியாக இருந்த காலம் முதல் இலங்கை தமிழர்கள் பிரச்சினையை ஜெய்சங்கர் நன்கு அறிந்தவர். அதனால் இந்த பணிகளுக்கு ஜெய்சங்கர் முக்கிய பங்காற்றுவார்.

  • இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு முடிவுகட்ட உங்களுடைய யோசனை என்ன?

ஆங்கிலேயர் காலம் முதலாகவே இலங்கையில் தமிழர்கள் இரண்டாம்தரக் குடிமகன்களாகவே நடத்தப்பட்டனர். இதை சுதந்திரப் போராட்டக் காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு வந்த மகாத்மா காந்தியும், நேருவும் கூட உணர்ந்தனர். எனவே, இலங்கை தமிழர்கள் போராட்டம் முதல் நடைபெற்ற தமிழின அழிப்பு, தமிழ்த் தலைவர்கள் படுகொலைகள் உள்ளிட்ட கொடுமைகள் மீதுசர்வதேச அளவில் ஒரு சுதந்திரமான விசாரணை தேவை. முள்ளிவாய்க்கால் சம்பவமும் ஐக்கிய நாடுகள் சபையில் நிலுவையில் உள்ளது. இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும்.

இலங்கை மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை அறியபொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதிகாரங்கள் இன்றி பொம்மைகளாக இருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு முழு அதிகாரங்கள் வழங்க வேண்டும். இறுதிப் போர் நடைபெற்ற முள்ளிவாய்க்காலில் காணாமல் போன ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதே முள்ளிவாய்கால் போருக்கு பின் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மாநிலங்களில் தமிழர்களது காணி நிலங்களில் 14 வருடங்களாக ராணுவம் அமர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அவசியம் இல்லாத இந்தராணுவத்தை அங்கிருந்து விலக்க வேண்டும்.

தமிழர்களுக்காக இந்திய அரசுஅளித்த நிதி முழுமையாக செலவிடப்படவில்லை. தமிழர்களே இல்லாத ராஜபக்சவின் தொகுதியான காழியில் மிகப்பெரிய ரயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில், பிரதமர் மன்மோகன் ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா அந்த ரயில் நிலையத் திறப்புவிழாவுக்கு சென்றிருந்தார். இதுபோன்ற தவறுகளை இந்திய அரசு கணக்கு எடுத்து தம் நிதியை பயனுள்ள வகையில் செலவிட வலியுறுத்த வேண்டும்.

  • பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாக ஒரு கருத்து எழுந்துள்ளதில் உண்மை என்ன?

பிரபாகரனுக்கு மிகவும் வேண்டியவர்களில் முதலாமவர் நெடுமாறன், அடுத்து நான், பிறகு புலவர் புலமைப் பித்தன். கடந்த 1982-ல் பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பின்புதான் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வெளியில் பரவலாக அறியப்பட்டார்.

ஆனால், அதற்கும் பல வருடங்களுக்கு முன்பே அவரை எங்களுக்கு தெரியும். சென்னையில் பிரபாகரன் மயிலாப்பூர் வீட்டில் என்னுடன்சுமார் ஒரு வருடம் தங்கி இருந்தார். நெடுமாறன் கூறியதன்படி நானும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவே நம்புகிறேன். இதை ஒரு காலத்தில் மதிமுக தலைவர் வைகோவும் வழிமொழிந்திருந்தார். அவர் எங்கோ உயிருடன் இருக்கிறார். இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கினால் ஒருநாள் வருவார்.

பிரபாகரன் உயிரிழந்ததாக இலங்கை அரசு கூறும் தகவல்களில் முரண்பாடுகள் உள்ளன. அவரது உடலின் டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டதாக வெளியான தகவலும் பொய். ஏனெனில், பிரபாகரன் உறவினர்களில் யாரிடம் இருந்து ரத்தம்எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை.

அப்போது, இந்த சோதனைக்கான வசதி இலங்கையில் இல்லை. அதற்காக இலங்கை அரசு இந்தியாவிலும் அதை செய்யவில்லை. டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வெளியாக குறைந்தது ஒரு வாரமாகும். ஆனால், இவர்கள் 24 நேரத்தில் செய்து கண்டுபிடித்ததாகக் கூறுவதை நம்ப முடிய வில்லை.

  • மீன்பிடிக்கச் செல்லும் போது இலங்கையில் சிக்கும் மீனவர்களுக்கும் தீர்வு காண முடியாமல் உள்ளதே?

இருதரப்பு மீனவர்கள் இடையே தேவையில்லாத மோதலை இலங்கை அரசு உருவாக்கி வருகிறது. கச்ச தீவை மீட்டால் தமிழக மீனவர்கள் பிரச்சினை தீர ஒரு வழி பிறக்கும். இது மீட்கப்பட்ட பின் அங்கு காவலுக்கு இருக்கும் இந்திய பாதுகாப்பு படை தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பளிக்கும். கச்சத் தீவு அளிக்கப்பட்ட போது முறையாக வழிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை.

இதுதொடர்பான மசோதாக்களும் நமது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்படவில்லை

நாட்டில் மனித படுகொலைகளுக்கான நீதியைக் கூட  பெறமுடியாது நாம் போராடுகின்றோம் – முன்னாள் தவிசாளர் நிரோஷ்

தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு  அரசு பொறுப்புச் சொல்வதற்கோ அல்லது நீதிக்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கோ தயாரில்லை. இந்நிலையில், சர்வதேசத்தின் தலையீடு காத்திரமாக அயைவேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலி- கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் குருந்தூர் மலை விவகாரம் மற்றும் மனிதப் புதைகுழிகளுக்கு நீதிவேண்டி இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போராட்டத்தின் பின்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும், இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் பின்பாக அப் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீட்சியடைவதற்காக பௌத்த சிங்கள பேரினவாதத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பர் என தமிழ் மக்கள் நம்பினர். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக என்றாலும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு அரசு பெறுப்புச் சொல்லும் என்பதுடன் மீள அவ்வாறாக நடைபெறாமையை பொறுப்புச் சொல்வதன் வாயிலாக உறுதிப்படுத்தி நீதி கிட்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் துரதிஸ்டவசமாக தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழ்நிலைகள் உரியவாறு உறுதிப்படுத்தப்படாமல் நாட்டில் பொருளாதார ரீதியிலான சீராக்கங்களுடன் சர்வதேச உதவிகளை அரசு பெற்றுக்கொண்டுள்ளது. இதனை தமிழ் மக்கள் பேரிடியாகப் பார்க்கின்றனர். அடிப்படையில் உள்நாட்டில் நீதியில்லை. நியாயமில்லை. இனரீதியிலான படுகொலைகளுக்கு பாரிகாரங்கள் இல்லை என்ற நிலையில் எமது மக்கள் எப்போதும் நியாயபூர்வமான சர்வதேச தலையீட்டை எதிர்பார்க்கின்றனர்.

இன்றும் குருந்தூர் மலையில் எமது வழிபாட்டு உரிமை கூட மறுக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுளளது.

யுத்தத்தின் போதும் பின்பாகவும் எமது  மக்கள் அரச அனுசரனையுடன் வழிகாட்டுதல்களுடன்தான் அரச படைகளினால் சித்திரவதை செய்யப்பட்டார்கள், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள். படுகொலை செய்யப்பட்டார்கள். இவ்வாறாக இலங்கையில் இடம்பெற்ற இடம்பெற்றுவரும்  வெளிப்படையான உண்மைகளை கருத்தில் கொண்டு இலங்கையுடனான அரசியல், பொருளாதார, கலாச்சார சமூக ரீதியிலான தொடர்புகளில் சர்வதேசம் பொருத்தமான தலையீடுகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இலங்கை தனது அபிவிருத்தி இலக்குகளை அடைய வேண்டுமாயின் நல்லிணக்கம் மிக அவசியம் அலி சப்றி

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சகல பிரிவினருக்கும் உண்மையைக் கண்டறிய வாய்ப்பு கிடைக்குமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டும் எனவும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மாத்திரமே அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்த அமைச்சர், சட்டம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் ஆணைக்குழுவிற்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் பணிகளை நிறைவேற்றுவதற்காக சர்வதேச மட்டத்தில் பல விரிவுரைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இடைக்கால செயலகம் அமைக்க ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாக ஆணைக்குழுவின் பணிகளை விரைவில் தொடங்குவதற்கான அடித்தளத்தைத் தயார்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை தெளிவுபடுத்துவதற்காக புதன்கிழமை (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பொறுப்புக்கூறல் செயற்பாட்டின் அவசியத்தையும் அதனை ஸ்தாபிப்பதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் விளக்கிய அமைச்சர், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களையும் மேற்கொள்வதாகவும் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, மூன்று தசாப்த கால யுத்தத்தினால் இன, மத வேறுபாடின்றி அனைவரும் பாரிய சேதங்களை சந்திக்க நேரிட்டது என்று தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவை நாட்டிற்குள்ளும் சர்வதேச ரீதியிலும் எழுந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அதற்காக ஸ்தாபிக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்கள் முன்வைத்த யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

“தென்னாபிரிக்கா போன்ற நாடுகளின் பொறிமுறைகளை ஆராய்ந்து இலங்கைக்குப் பொருத்தமான பொறிமுறையை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாவிட்டால் நாடு மீண்டும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படும். எனவே சமூகத்தை தெளிவுபடுத்தி இதனைச் செயற்படுத்துவதற்கான ஆதரவைப் பெற வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

சுதந்திரம் பெற்று 20 வருடங்கள் நிறைவடையும் போது நல்லிணக்கத்தின் ஊடாக சிங்கப்பூர் அபிவிருத்தியடைந்த நாடாக மாறியுள்ளதாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அசங்க குணவன்ச தெரிவித்தார்.

இலங்கை தனது அபிவிருத்தி இலக்குகளை அடைய வேண்டுமாயின் நல்லிணக்கம் மிகஅவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் துரதிர்ஷ்டவசமான யுகம் மீண்டும் ஏற்படாத சூழலை உருவாக்க முடியும் என சுட்டிக்காட்டிய அசங்க குணவன்ச, உள்நாட்டில் வெற்றிகரமான மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பொறிமுறையை உருவாக்கத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காகவே இடைக்கால செயலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சட்டம் ,கொள்கைப் பிரிவு மற்றும் மக்கள் தொடர்பாடல் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் உரையாற்றிய வண.தம்பர அமில தேரர், கடந்த தேர்தலில் மதவாதமும், இனவாதமும் பாரியளவில் தலைதூக்கியதால், அந்த அனுபவத்தை மக்கள் மறக்க முன் இந்த செயற்பாட்டை மேற்கொள்ளுமாறு கோரிக்கைவிடுத்தார்.

ஜனாதிபதி தற்போது துணிச்சலான தீர்மானங்களை மேற்கொண்டு வருவதாகவும், அவ்வாறே மீண்டும் இவ்வாறான சம்பவம் இடம்பெறாதிருக்க தேவையான கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் தம்பர அமில தேரர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சந்திப்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணங்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு வழங்கப்படல் வேண்டும் – ஜனா எம்.பி

வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்கங்களுக்கு சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே எமது தீர்வாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தென்னிலங்கையில் சரத் வீரசேகர, உதயகம்பன்பில, விமல் வீரவன்ச போன்ற இனவாதிகள் 13வது திருத்தத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை,

மாகாணசபை முறைமையினை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறிவரும் அதே கருத்தினை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கஜேந்திரகுமார் அணியினரும் கூறுவது வேடிக்கையானது.

வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்கங்களுக்கு சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே எமது தீர்வாகவுள்ளபோதிலும் தற்போதைய நிலையில் 13ஆவது திருத்தினை முழுமையான அமுல்படுத்தி அதனை ஒரு முதல்படியாக கொண்டு தீர்வு நோக்கிய செயற்பாட்டினை முன்கொண்டு செல்ல முடியும்.

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் நாளை வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக நாங்களும் செயற்படுவோம்.

அவர்களின் குரல்களுக்கு நாங்களும் மதிப்பளித்து வடக்கு கிழக்கு தமிழர்கள் ஹர்த்தாலை அனுஸ்டிப்போம்.
இலங்கையில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதை நாங்கள் விரும்புகின்றோம் என்ற வகையில் இந்திய பிரதமர் தனது பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தியுள்ளார்.

அந்த வகையில் அனைத்து கட்சியினரையும் அழைத்து ஜனாதிபதி மகாநாடு ஒன்றை நடாத்தியுள்ளார். அதன் ஊடாக அமைச்சரவை உபகுழுவினை நியமித்துள்ளார்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

13ஆம் திருத்தச் சட்டத்தின் அதிகார பகிர்வு அனைத்து மாகாணங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை – விக்டர் ஐவன்

13 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரப் பகிர்வு ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை என சிரேஷ்ட ஊடவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“13இன் மூலம் அதிகாரத்தினை பகிரும் போது நாம் இந்தியாவினை பின்பற்ற வேண்டும். ஏனெனில் இந்தியாவானது அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான அதிகாரங்களை வழங்கவில்லை.

சில இடங்களுக்கு அதிகமான அதிகாரங்களை வழங்கியுள்ளது. சில மாநிலங்களுக்கு குறைவான அதிகாரங்களே வழங்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் அதிகாரப் பகிர்வு ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை என்பது புலனாகின்றது.

வேண்டுமெனின் வடக்கிற்கு சில வருடங்கள் அதிகாரத்தை பகிர்ந்தளித்து அதனை அவர்கள் எவ்வாறு நிர்வகிக்கின்றனர் என்பதை அவதானிக்கலாம்.

சரியான முறையில் நிர்வாகம் நடைபெறுமெனின், தேவையான மற்றவர்களுக்கும் அவ்வாறே அதிகாரத்தினை பகிர்ந்தளிக்க முடியும்.

சில சந்தர்ப்பங்களில் எமது பக்கத்திலும் தளர்வு கொள்கையினை பின்பற்ற வேண்டும். நாம் இதனை புதிய கோணத்தில் பார்க்க வேண்டும்.

தற்போதுள்ள சூழ்நிலையினை அடிப்படையாகக் கொண்டு அதனை நாம் புதிய கோணத்தில் நோக்க வேண்டும்.

அவ்வாறு நோக்குவதால் நாட்டுக்கு நன்மை ஏற்படுமெனின், சிறுபான்மையினருக்கு நன்மை ஏற்படுமெனின் இந்தியா உட்பட ஏனைய நாடுகள் எமது நாட்டுக்குள் தலையிடாது.

அதிகாரப் பகிர்வு என்பது நாட்டினை பிரிப்பதல்ல. அது பொய்யான கூற்றாகும். ஏதேனுமொரு விடயத்தினை மாற்ற முற்படும் போது அது தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு இடையில் மாத்திரம் கலந்துரையாடி எவ்வித பலனுமில்லை.

அதில் பொதுமக்களை குறித்த விடயம் குறித்து அறிவுறுத்துவது மிக முக்கியமான விடயமாகும். அதற்கு சிறந்த உதாரணமாக இந்தியாவும், தென்னாபிரிக்காவும் திகழ்கின்றது.

இது அரசாங்கம் மாத்திரம் முகங்கொடுக்க வேண்டிய பிரச்சினையல்ல. ஏனைய அனைத்து கட்சிகளும் இந்த பிரச்சினை தொடர்பில் தமது பங்களிப்பினை செலுத்த வேண்டியிருந்தது. இதனை தவறவிட்டிருக்க கூடாது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

13ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கே உள்ளது – ஐக்கிய மக்கள் சக்தி

நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கே உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரன்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கே உள்ளது. தவிர எதிர்க்கட்சிகளுக்கு கிடையாது.

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஜனாதிபதிக்கு எந்தவொரு சிக்கலும் இல்லை.

ஏனெனில், 13 பிளஸ் தருவதாக அன்று உறுதியளித்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களே இன்று ஜனாதிபதிக்கும் ஆதரவினை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மாகாணசபைத் தேர்தல் 6 வருடங்களாக இடம்பெறவில்லை. இந்தத் தேர்தலை பழைய முறையில் நடத்துமாறு நாம் நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளோம். இதற்கான பிரேரணைக் கொண்டுவரப்பட்டால் நாம் ஆதரவு வழங்கத் தயாராகவே உள்ளோம்.

ஜனாதிபதி, உண்மையிலுமே அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றா அல்லது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சில பிரதேசங்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்றா நினைக்கிறார் என்பது புரியவில்லை.

13 ஆவது திருத்தச்சட்டம் என்பது ஏற்கனவே பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள ஒன்றாகும்.

எனவே, இதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு தான் உள்ளதே ஒழிய, எதிர்க்கட்சிகளுக்கு கிடையாது.

முதலில், ஜனாதிபதி அரசாங்கத்தின் யோசனைகளை முன்வைக்க வேண்டும். அதைவிடுத்து, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கக்கூடாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச்சட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முதலில் அறிவிக்க வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக ஜனாதிபதி, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முதலில் அறிவிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

சர்வகட்சி மாநாடு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக ஜனாதிபதி, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முதலில் அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

அரசாங்கத்தின் யோசனை என்ன என்பதை முதலில் எமக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
அந்த யோசனைகள் வெளிவந்தவுடன், நாம் இதுதொடர்பாக ஆராய முடியும்.

இதுதொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு, எமது யோசனைகளையும் இதில் முன்வைத்து அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல முடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் ஈழதமிழ் வம்சாவளி பெண் எழுத்தாளருக்கு அதியுயர் விருது

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவரும் சட்டத்தரணியுமான சங்கரி சந்திரன் என்பவர் அவுஸ்திரேலியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் அதியுயர் விருதான மைல்ஸ் பிராங்க்ளின் (Miles Franklin) விருதை வென்றுள்ளார்.

‘சாய் டைம் அட் சினமன் கார்டன்ஸ்’ (‘Chai Time at Cinnamon Gardens’) என்ற நாவலுக்காகவே அவருக்கு இவ் விருதானது வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு யுத்தத்திலிருந்து தப்பிப்பதற்காக 80களில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையைச் சேர்ந்த ஒருவரால் நடத்தப்படும் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் வசிப்பவர்களின் வாழ்க்கையை இந்த நாவல் எடுத்துக்காட்டுவதோடு, போர், இனப்படுகொலை, இனவெறி, குடும்பம், காதல் மற்றும் நட்பு போன்ற கருப்பொருள்களை இந்த நாவல் ஆராய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் “அவுஸ்திரேலிய எழுத்தாளர்களிடையே அங்கீகாரம் பெறுவது அசாதாரணமானது. ‘மைல்ஸ் பிராங்க்ளின் இலக்கிய விருதை வென்றது மிகவும் பெருமையாக இருக்கிறது” என சங்கரி குறிப்பிட்டுள்ளார்.

வைத்திய தம்பதிகளான சங்கரியின் பெற்றோர் 80களில் உள்நாட்டு யுத்தம் காரணமாக இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்று பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடியேறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கனேடிய பிரதமரின் அறிக்கையை ஈழத் தமிழர்கள் வரவேற்கின்றோம் – சபா குகதாஸ்

கனேடியப் பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ அவர்கள் கறுப்பு யூலை 40 ஆண்டு நினைவேந்தலில் வெளியிட்ட அறிக்கையை ஈழத் தமிழர்கள் வரவேற்கின்றனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,
இலங்கை அரசாங்கம் மனிதவுரிமை மீறல்கள் அட்டூழியங்கள் போன்றவற்றுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளதுடன் கறுப்பு யூலை படுகொலைகள் அரசியல் பேராசை காரணமாக மிகப் பெரும் மனிதப் பேரவலத்தை உருவாக்கியது எனவும் இவ்வாறான மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டு்ம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அன்று கறுப்பு யூலைப் படுகொலையை அன்றைய பாரதப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் இந்தியப் பாராளுமன்றத்தில் 1983 இல் இனப்படுகொல என அறிவித்தது போன்று கடந்த மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அந்த நாளை தமிழினப் படுகொலை நாள் என கனேடியப் பாராளுமன்றத்தில் ஏக மனதாக பிரகடனப் படுத்தினார் பிரதமர் ட்ரூடோ இதனை தமிழ் மக்களின் நீதிக்கான கதவு திறப்பிற்கான ஆரம்பமாக தமிழர்கள் பார்க்கின்றனர்.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் நியாயமான நீதிக்கு குரல் கொடுக்கும் கனேடிய பிரதமரின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன ஆறுதலை வழங்கியுள்ளது.

இலங்கையில் சிங்கள இன வாதிகளின் கனேடிய அரசாங்கம் தொடர்பான அநாகரிகமான விமர்சனங்கள் வருவதை பொருட்டாக கொள்ளாது மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறலை வலியுறுத்தி உள்ளமையை வரவேற்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

பாப்பரசரின் பிரதிநிதி முள்ளிவாய்க்காலிற்கு விஜயம்

பாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதி வணக்கத்திற்குரிய கலாநிதி பிறாயன் உடக்வே நேற்று முன்வைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

பாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதி கலாநிதி பிறாயன் உடக்வே நேற்று முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது யுத்தத்தில் உயர்நீத்த மக்களுக்காக சுடர் ஏற்றி மலர் தூவி அவர் அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அங்கு தெரிவு செய்யப்பட்ட ஊனமுற்ற குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தார்

தொடர்ந்து முல்லை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தின் மோட்டார் வாகன வரவேற்பு இவருக்கு அளிக்கப்பட்டது.

வட்டுவாகல் பாலம் தொடக்கம் முல்லைப்பட்டிணம் சுற்றுவளைவு வரை இந்த விசேட வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சுனாமி நினைவாலய தரிசிப்பிலும் புனித இராயப்பர் ஆலயத்தில் இடம்பெற்ற நற்கருணை ஆசீர்வாதத்திலும் ஈடுபட்டிருந்தார்.