வடக்கு கிழக்கில் தைப்பொங்கலின் போது காணி விடுவிப்பதற்கு சாத்தியம் !

வடக்கு கிழக்கு காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்வரும் 15ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அந்தக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இங்கு அரசியல் கைதிகளின் நீதி விவகாரங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை வழங்குமாறு கலந்துரையாடலில் கலந்து கொண்ட நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மனுஷ நாணயக்காரவிற்கு எதிராக சபாநாயகரிடம் முறையிட தீர்மானம்

தொழிலாளர் மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கு எதிராக சபாநாயகரிடம் முறைப்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மனுஷ நாணயக்கார கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கணக்காய்வாளர் நாயகத்தின் கடமைகளையும் COPE குழுவின் அதிகாரங்களையும் ஆட்சேபனைக்கு உட்படுத்தி, விமர்சனங்களை முன்வைத்ததாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நேற்று நடைபெற்ற COPE குழு கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டதுடன், பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கருத்தானது தவறான முன்னுதாரணம் எனவும், இதனூடாக COPE குழுவை இழிவுபடுத்துவது தெளிவாகியுள்ளதால், அது குறித்து கடும் அதிருப்தியை COPE குழு வெளியிட்டுள்ளதுடன், கணக்காய்வாளர் நாயகமும் தனது கவலையை தெரிவித்துள்ளா

கர்நாடகா மங்களூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இலங்கையர்கள்

கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 38 பேர் இன்று தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு 2021 – 06 – 10 ஆம் திகதி கர்நாடகாவின் மங்களுரில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களை விடுதலை செய்த நீதிமன்றம் அவர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

அதற்கான ஏற்பாட்டினைச் செய்வதற்காக 15 நாள்கள் அவகாசம் நீதிமன்றினால் வழங்கப்பட்ட போதிலும் தம்மை அனுப்பிவைப்பதற்கான ஏற்பாட்டினை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தே அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாரிடம் தொடர்புகொள்வது என்பது தெரியாது என்று பரிதவிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு விடுதியில் தாம் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் உணவு, மருத்துவ வசதிகள் இல்லாம் இருப்பதாகவும் சிலர் கடும் நோய்த்தாக்கத்துக்கு உட்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்டவர்கள் தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு

யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் நிறைவேற்றப்பட முடியாத சூழல் ஏற்பட்ட போது, முதல்வர் வி.மணிவண்ணன் பதவியை துறந்தார்.இதையடுத்து, குழப்பமாக சூழல் ஏற்பட்டது.

முன்னதாக உள்ளூராட்சி விதிகளின் அடிப்படையில் மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் அறிவித்தார். யாழ். மாநகர சபையின் எதிர்காலம் குறித்து சட்டமா அதிபரிடம் வினவவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

எனினும், மீண்டும் முதல்வர் தெரிவு நடத்தப்படலாமென்றும் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.இந்த நிலையில், மீண்டும் முதல்வர் தெரிவு நடைபெறவுள்ளதாக வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

அது குறித்த வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது.

ஐ.எம்.எவ், பாரிஸ் கிளப் கலந்துரையாடல்களில் அவுஸ்திரேலியா இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களிலும் பாரிஸ் கிளப் கூட்டங்களிலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்திரேலியா உறுதியளித்துள்ளது.

மேலும் கடல்சார் பாதுகாப்பு, போதைப்பொருள், மனித கடத்தலை தடுத்தல், மீன்பிடி மற்றும் கல்வித் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த அவுஸ்திரேலியாவுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கிடையில் நேற்று வியாழக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இலங்கைக்கு வழங்கிய உதவிக்கு அவுஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன , தகவல் தொடர்பு வலையமைப்பை வலுப்படுத்த மீன்பிடி படகுகளுக்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை வழங்க உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மாணவர்களை மட்டுமின்றி, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்தும் மாணவர்களை ஈர்க்கும் வகையில் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் இலங்கையில் இணைந்த வளாகங்களை நிறுவ முடியும் என்றும் பிரதமர் இதன் போது தெரிவித்துள்ளார்.

மீன்பிடி, விவசாயம், தகவல் தொழில்நுட்பம், மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவளம், இலத்திரனியல் மற்றும் சுற்றுலா போன்ற புதிய துறைகளிலும் முதலீட்டாளர்கள் வருகை தர வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள, குறிப்பாக சுமார் 75 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியான மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு வழங்கியமைக்காக பிரதமர் அவுஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவித்தார்.

அத்தோடு சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களிலும் பாரிஸ் கிளப் கூட்டங்களிலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உயர் ஸ்தானிகர் ஸ்டீபன்ஸ் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை விஜயம் செய்யவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்

இரு தரப்பு பேச்சுவார்த்தைகளிற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இது தொடர்பான இறுதி ஏற்பாடுகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை.

ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல்தடவையாக ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

புதுவருடத்தில் இந்தியாவின் உயர்மட்ட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமையவுள்ளது.

புற்றுநோய் மருந்துகளிற்கு பெரும் தட்டுப்பாடு

15 முக்கிய புற்றுநோய் மருந்துகளிற்கான தட்டுப்பாடு காரணமாக 10,000 புற்றுநோயாளர்களின் உயிருக்கு ஆபத்து  ஏறபட்டுள்ளது என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்  தெரிவித்துள்ளது.

புற்றுநோயாளிகளிற்கு 15 பிரதான மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்கின்றன 90 வீதமான மருந்துகளிற்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.

நாங்கள் சுகாதார அமைச்சிற்கு இது குறித்து அறிவித்துள்ளோம்,இதனுடன் தொடர்புபட்ட வேறு தரப்பினரும் இது குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்,எனினும் ஆபத்தில் சிக்குண்டுள்ள மக்களை காப்பாற்ற  சுகாதார அமைச்சு எதனையும் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடித்தால் புற்றுநோயை குணப்படுத்தலாம்,கிகிச்சை தாமதமானால் அது பரவும் மருத்துவர்களால் எதனையும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர்தனியாரிடமிருந்து மருந்துகளை பெறுமாறு எங்களால் எங்கள் நோயாளிகளை கேட்கமுடியும்,ஆனால் எங்கள் நோயாளிகளில் 90 வீதமானவர்களால் அது முடியாது மருந்துகளின் விலை 50,000 ரூபாய்க்கும் அதிகம் எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.

இலங்கை மூன்று நாடுகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது

இந்தியா சீனா தாய்லாந்துடன் இலங்கை வர்த்தக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது.

தனது பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்காக உலக நாடுகளுடன் பொருளாதார உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுபட்டுள்ள நிலையிலேயே இலங்கை இந்த மூன்று நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது.

2018 இல் இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்காக தாய்லாந்து அதிகாரிகள் திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளனர் எனசுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து இலங்கையின் சார்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் முக்கிய அதிகாரி கே.ஜே வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளான இந்தியா சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் பெப்ரவரி மார்ச்சில் ஆரம்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பது முதலீட்டை கவர்வது குறித்தே கவனம் செலுத்தப்படுவதாக தெரிவித்துள்ள அவர் இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2023 அல்லது 2024 ஆரம்பத்திற்குள் இந்த பேச்சுவார்த்தைகளை முடிவிற்கு கொண்டுவருவதே எனது நோக்கம் என கே.ஜே வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் காரணமாக இந்த பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்பட்டன நாங்கள் பேச்சுவார்த்தைகளிற்காக சென்றுகொண்டிருக்கின்றோம் என தாய்லாந்து  அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் சாதகமான பிரதிபலிப்பைச் செய்யாவிடில் பேச்சை தொடர்வதில் பயனில்லை

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல் உள்ளிட்ட உடனடியான பிரச்சினைகள் தொடர்பில் அடுத்து வரும் நாட்களில் சாதகமான சமிக்ஞைகள் கிடைக்காது விட்டால் பேச்சுவார்த்தைகளை தொடர்வதில் எவ்விதமான பயன்களும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத் தரப்பிடம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எதிர்வரும் பத்தாம் திகதி முதல் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக அரசாங்கத்திடமிருந்து சாதகமான சமிக்ஞைகள் வெளிப்பட வேண்டும் என்று காலக்கெடுவை விதித்துள்ளதோடு, தற்போதைய அரசியலமைப்பில் உள்ள அதிகாரப்பகிர்வு விடயங்களை முன்னெடுப்பது தொடர்பான திட்ட முன்மொழிவொன்றையும், நிரந்தரமான அரசியல் தீர்வு விடயத்தில் அதிகாரங்கள் பகிரப்படுவதற்கான திட்ட முன்மொழிவொன்றையும் தனித்தனியாக கையளிப்பதற்கும் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தரப்பினருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று ஏற்கனவே எட்டப்பட்டிருந்த இணக்கப்பாட்டுக்கு அமைவாக நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் மாலை ஐந்து மணிமுதல் ஆறுமணி வரையில் இடம்பெற்றிருந்தது.

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எதிர்வரும் பத்தாம் திகதி தொடர்ச்சியான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தையில் ஆளும் தரப்பில் பிரதமர் தினேஸ் குணவர்த்தன, அமைச்சர்களான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பங்கேற்றிருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில், குறித்த பேச்சுவார்த்தை தொடர்பில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தாவது,

கடந்த, மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினரை நானும் சம்பந்தனும் சந்தித்தபோது, தமிழ் அரசியல் கைதிகளில் ஐவரை உடனடியாக விடுதலை செய்ய முடியும் என்றும், அபகரிக்கப்பட்ட நிலங்களில் ஒருபகுதிகயை உடனடியாக விடுவிக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், அதுதொடர்பில் எவ்விதமான குறைந்த பட்ச செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதை நாம் அவர்களிடத்தில் தெரிவித்திருந்தோம். அவ்விதமான நிலையில் அடுத்தகட்டம் நோக்கி எவ்வாறு நம்பிக்கையுடன் நகர்வது என்பது தொடர்பிலும் நாம் கேள்விகளைத் தொடுத்திருந்தோம்.

எம்மைப்பொறுத்தவரையில் முன்னெடுக்கப்படும் பேச்சுக்கள் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டுமானால் அரசாங்கத்திடமிருந்து எமது மக்கள் சார்ந்த உனடியான பிரச்சினைகளில் சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு வெளிப்படுத்தப்படாது பேச்சுக்களை முன்னெடுப்பதில் எவ்விதமான பயன்களும் இல்லை என்பதையும் அரசாங்கத்திடம் நேரடியாகவே தெரிவித்துள்ளோம்.

இவ்வாறான நிலையில் அடுத்த பத்தாம் திகதி தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தப்பேச்சுவார்த்தை வெற்றிகரமான நகர வேண்டுமாயின் அரசாங்கம் சாதகமான பிரதிபலிப்பைச் செய்ய வேண்டியுள்ளது. அதுவரையில் அரசாங்கத்திற்கு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

இதேநேரம், தேசிய இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு முன்னதாக எம்மால் இரு திட்ட முன்மொழிவுகள் ஜனாதிபதியிடத்தில் கையளிக்கப்படவுள்ளன. அதில் முதலாவது, தற்போதைய அரசியலமைப்பில் உள்ள அதிகாரப்பகிர்வு விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலானதாகும். அடுத்த திட்ட முன்மொழிவானது, இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான முன்னெடுப்புக்களின்போது, நிரந்தரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய அதிகாரப்பகிர்வினை மையப்படுத்தியதாகும்.

இந்த இரு முன்மொழிவுகளும் விரைவில் எம்மால் அனுப்பி வைக்கப்படவுள்ளன. ஏற்கனவே 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் தடையாக காணப்படுகின்ற அரசியலமைப்பு சட்ட ஏற்பாடுகள் பற்றிய ஆவணம் ஜனாதிபதியிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது என்றார்.

தீர்வுக்கான பேச்சுக்களில் முஸ்லிம் தரப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும் : ஹக்கீம் கோரிக்கை

இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்கின்ற விவகாரத்தில் சகல தரப்புகளும் இணங்குகின்ற நல்லதொரு தீர்வை மிக விரைவில் பெற்றுத்தறுவதற்கான முயற்சியை ஜனாதிபதி உளப்பூர்வமாக எடுப்பாரானால் அதில்  முஸ்லிம் தரப்பையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.

அத்துடன் இந்த பேச்சுவார்த்தை சம்பந்தமாக விசமத்தனமான பிரசாரங்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவது கவலைக்குரிய விடயமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகவும் நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு தொடர்பாகவும் ஜனாதிபதி  தமிழ் கட்சிகளுடனும் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.

இது சம்பந்தமாக விசமத்தனமான பிரசாரங்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவது கவலைக்குரிய விடயம்.  இனப்பிரச்சினைக்கு தீர்வு குறித்து, தமிழ் மக்களின் அபிலாசைகள் என்பது சில சமயங்களில் முஸ்லிம்களின் அபிலாசைகளுடன் முரண்பட்ட விடயங்களாக இருக்கின்றபோது, தேவையற்ற சந்தேகங்களை குழப்பி ஒட்டுமொத்த  இனப்பிச்சினைக்கான தீர்வு வருகின்ற சாத்தியப்பாட்டை குறைக்க முயற்சிக்கப்படுகின்ற விடயமாக உணர்கிறேன்.

அதனடிப்பையில் ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு பிரதேசத்தையும் ஒரு அரசியல் அலகாக ஆக்கித்தர வேண்டும் என்ற கோரிக்கை தமிழர் தரப்பிலே நீண்டகாலமாக தெரிவிக்கப்பட்ட விடயமாக இருந்தபோதிலும் அதிலே முஸ்லிம் தரப்பு சற்று மாற்றமான கருத்தை கொண்டிருக்கின்றது என்ற யதார்த்தத்தை தமிழ் தரப்பு புரிந்துகொண்டிருக்கும் என நாங்கள் முழுமையாக உணர்ந்திருக்கின்றோம்

அந்த அடிப்படையிலே இந்த விவகாரத்திலே தேவையற்ற விஷமத்தனமான பிரசாரங்களை மேற்கொள்ளாமல், அரசாங்கமோ தமிழ் தரப்போ இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுக்கின்றபோது இந்த விவகாரத்தில் கரிசனை உடைய ஏனைய தரப்பினரையும் இணைத்துக்கொண்டு இதற்கான தீர்வுகளை காண்பார்கள் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.

அதனால் பிரச்சினைக்கான தீர்வு வருகின்றபோது அதனை இவ்வாறான விஷமத்தனமான பிரசாரங்கள் மூலம் குழப்பியடிக்க முனையாமல் இணக்கப்பாட்டுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் நம்பிக்கையுன் இருக்கின்றன.

எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விவகாரத்தில் சகல தரப்புகளும் இணங்குகின்ற நல்லதொரு தீர்வை மிக விரைவில் பெற்றுத்தறுவதற்கான முயற்சியை ஜனாதிபதி உளப்பூர்வமாக எடுப்பாரானால்  முஸ்லிம் தரப்பையும் இதில் இணைத்துக்கொண்டு இந்த விவகாரத்தில் இறுதித் தீர்வை காண்பார் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம் என்றார்.

Posted in Uncategorized