தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி இறக்குமதி தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று காலை 9 மணியளவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கினார். இதையடுத்து ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

முன்னதாக, தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலத்தை வழங்குவதற்காகவே கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றைய தினம் (1) குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமுகமளித்திருக்கவில்லை.

இந்நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை (2) காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் நேற்றையதினம் (1) உத்தரவிட்ட நிலையில், அவர் இன்று காலை ஆஜராகினார்.

இவ்வாறு இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி கெஹலிய ரம்புக்வெல்ல வாக்கு மூலம் அளித்திருந்த நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரை கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்தும் மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தைப் போன்ற சட்ட மூலத்தை அமெரிக்காவும் அமுல்படுத்த உள்ளது – பாலித ரங்கே பண்டார

தற்கொலைக்களுக்கு காரணம் சமூகவலைத்தள செய்திகளாகும். அதனால் அமெரிக்காவும் நாங்கள் கொண்டுவந்திருக்கும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தை கொண்டுவர தீர்மானித்திருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.

சமூகவலைத்தளத்தில் இடம்பெற்றும் செய்திகளால் பெண்கள், சிறுவர்கள் என பலர் தற்கொலை செய்துவருகின்றனர். இதனை தடுப்பதற்கே நிகழ்நிலை காப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் அநுராதபும் மாவட்ட சம்மேளனம் வியாழக்கிழமை (01) அனுராதபுரம் இளைஞர் சேவை மன்றத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து, ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் தலை தூக்கும் என யாரும் நினைக்கவில்லை.

என்றாலும் 2001இல் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு சென்ற ரணில் விக்ரமசிங்க ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு நாட்டின் பிரதமரானார்.

அதன் பின்னர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இன்று நாட்டின் பிரதான பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு முழு உலகுக்கும் தெரியும் வகையில் நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்துவருகிறார். ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் செயற்பட்டு வருகிறார்.

அதனால் ஐக்கிய தேசிய கட்சி ஒரு ஆசனத்துடன் பாராளுமன்றத்துக்கு அனுப்பி, அவரை பிரதமராக்கி, ஜனாதிபதியாக்கியது போன்று அடுத்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை நூறு இலட்சம் வாக்குகளை பெற்று மீண்டும் ஜனாதிபதியாக நியமித்தே தீருவோம். அதுதொடர்பில் சந்தேகம் கொள்ளவேண்டாம்.

ஏனெனில் விழ்ச்சியடைந்திருந்த நாட்டை மீட்டெடுப்பதற்கு யாரும் முன்வராத நிலையில் ரணில் விக்ரமசிங் மாத்திரமே முன்வந்து, நாட்டை ஓரளவு ஸ்திர நிலைக்கு கொண்டுவந்தார். அதனால் எங்களையும் நாட்டையும் மீட்பதற்கு ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாரும் இல்லை.

அத்துடன் நாட்டை மீட்கும் இந்த பயணத்தை ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்கும்போது ராஜபக்ஷ்வினரை பாதுகாக்க செயற்படுவதாக எங்களை விமர்சிக்கின்றனர். ராஜபக்ஷ்வினரை மாத்திரமல்ல, அனைவரையும் இணைத்துக்கொண்டு முழு நாட்டு மக்களையும் பாதுகாக்கவே ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருகிறார்.

என்றாலும் திருடர்களை பாதுகாக்க ரணில் விக்ரமசிங்கவோ ஐக்கிய தேசிய கட்சியோ தயாரில்லை. திருடர்களுடன் பாராளுமன்றத்தில் இருப்பதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் பிரசாரம் செய்துவருகிறார். ஆனால் ரணில் விக்ரமசிங்க திருட்டை ஒழிக்க தேவையான சக்திவாய்ந்த சட்ட திடடங்களை கொண்டுவந்திருக்கிறார்.

அதேபோன்று நிகழ்நிலை காப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் தெரிவித்து வருகின்றன.

ஆனால் சமூகவலைத்தளத்தில் இடம்பெற்றும் செய்திகளால் பெண்கள், சிறுவர்கள் என பலர் தற்கொலை செய்துவருகின்றனர். இதனை தடுப்பதற்கே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

மாறாக யாருடைய உரிமையையும் மீறவில்லை. அமெரிக்காவில் இன்று அதிகரித்துவரும் கொலை, தற்கொலைக்களுக்கு காரணம் சமூகவலைத்தள செய்திகளாகும். அதனால் அமெரிக்காவும் நாங்கள் கொண்டுவந்திருக்கும் சட்டத்தை கொண்டுவர தீர்மானித்திருக்கிறது.

எனவே ஆளுமையும் அனுபவமும் உள்ள ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே இந்த நாட்டையும் மக்களையும் மீள கட்டியெழுப்ப முடியும்.

அதனை கடந்த ஒன்றரை வருட காலத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார். அதனால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை நூறு இலட்சம் வாக்குகளினால் வெற்றிபெறச் செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

இல்லாத புலிகள் அமைப்புக்கு எப்படி நிதி திரட்ட முடியும்? தேர்தல் நேரத்தில் அச்சுறுத்தும் முயற்சி – சீமான் குற்றச்சாட்டு

தேர்தல் நேரத்தில் அச்சுறுத்தும் முயற்சியாக என்ஐஏ சோதனை நடைபெறுகிறது என சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை நடத்துவதை எதிர்த்து நீதிமன்றில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. பிற்பகலில் விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அறிவித்துள்ளார்.

இந்நிலைலையில் இது குறித்து சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்; தேர்தல் நேரத்தில் இதெல்லாம் நடக்கும் என்று ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான். தேர்தல் நேரத்தில் அச்சுறுத்தும் முயற்சியாக என்ஐஏ சோதனை நடைபெறுகிறது. நியாயப்படி என்ஐஏ அதிகாரிகள் என்னிடம் தான் விசாரணை நடத்தி இருக்க வேண்டும். ‘

அச்சுறுத்தலுக்கு அஞ்சும் நபர்கள் நாங்கள் இல்லை. சிறிய யூடியூப் சேனல் நடத்தி விடுதலைப் புலிகளுக்கு எப்படி நிதி திரட்ட முடியும்?. விடுதலைப் புலிகள் அமைப்பு எங்கிருக்கிறது? அதற்கு எப்படி பணம் திரட்ட முடியும்?.

தேர்தல் சமயத்தில் என்னையும் கட்சியையும் முடக்க பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க.வின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நான் தடையாக இருப்பதால் என்.ஐ.ஏ. சோதனை நடைபெறுகிறது. நாட்டை கொள்ளையடித்தவர்கள் அச்சமின்றி இருக்கும்போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும். சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். என்ஐஏ சோதனையின் மூலம் எனக்கு ஒன்று தெரிகிறது; நான் சரியான பாதையில் செல்கிறேன். பிப்.5ம் தேதி நிர்வாகிகளுடன் சேர்ந்து நானும் ஆஜராகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புலிகளிடம் பணம் பெற்ற குற்றச்சாட்டு – இந்திய தேசிய புலனாய்வு முகமை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை

சென்னை திருச்சி கோவை சிவகங்கை தென்காசி உள்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை ( என்ஐஏ) இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தடைசெய்யப்பட்ட அமைப்பிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனையில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீடு மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள் வீட்டில் நடைபெற்ற என்ஐஏ சோதனை நிறைவடைந்துள்ளது. இன்று அதிகாலை தேசிய புலனாய்வு முகமை ஆய்வாளர் செந்தில் தலைமையில் கோவை வந்த அதிகாரிகள் ஆலந்துறையில் உள்ள நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி ரஞ்சித்தின் வீடு மற்றும் காளப்பட்டியில் உள்ள முருகன் வீடு என இரண்டு இடங்களில் சோதனை நடத்தினர்.

4 மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையில் இருவரது வங்கி கணக்குகள் மற்றும் இணையதளங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இருவரது செல்போனையும் கைப்பற்றிய என்ஐஏ அதிகாரிகள் விசாரணை முடித்து கிளம்பினர்.

இதே போல் திருச்சியில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகளின் சோதனையும் நிறைவடைந்தது. சாட்டை துரைமுருகனுக்கு என்ஐஏ அதிகாரிகள் சம்மன் வழங்கி உள்ளனர். திருச்சி சண்முக நகர் 7-வது குறுக்குத் தெருவில் வசித்து வரும் சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலையில் 2 மணி நேரம் சோதனை நடத்தினர். சாட்டை துரை முருகனிடமும் அவரது மனைவியிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

2022 ஆம் ஆண்டு பதியப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான வழக்கு குறித்தும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்கம் செய்ய நிதி சேர்ப்பதாக கூறி விசாரணை நடத்தியதாக என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சில ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். விசாரணைக்கு ஆஜராகும்படி சாட்டை துரைமுருகனுக்கு என்ஐஏ அதிகாரிகள் சம்மன் கொடுத்து விட்டு சென்றுள்ளனர்.

இதைபோல நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பவனம் கார்த்தி என்பவருக்கு இன்று காலை சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராக வாட்ஸ் அப் மூலம் என்ஐஏ அதிகாரிகள் அழைத்துள்ளனர். இடும்பவனம் கார்த்தி வெளியூரில் இருப்பதால் 5ம் தேதி ஆஜராக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

யாழில் பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளான இளைஞர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

அச்சுவேலி பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞரொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பாதிக்கப்பட்ட நபரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து அவரது வாக்குமூலம் நேற்று வியாழக்கிழமை (01) எம்மால் பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

இதேவேளை சுன்னாகம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நபரொருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்ற கட்டளையின் பேரில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபரது வாக்குமூலம் எம்மால் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று பதிவுசெய்யப்பட்டதுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கல்வெட்டை இடித்து சேதப்படுத்திய குற்றச்சாட்டு-ஹென்றி மகேந்திரனுக்கு தண்டப்பணம் மற்றும் நஷ்டஈடு வழங்க உத்தரவு

அம்பாறை கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி என பெயரிடப்பட்ட நினைவுப்படிகத்தை இடித்து தரை மட்டமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கில் பிரதிவாதியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இயக்கத்தின் பிரதித் தலைவரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமாகிய ஹென்றி மகேந்திரனுக்கு 1500 ரூபா தண்டபணமும் 55000 ரூபா நஷ்டஈடும் விதித்து கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 ஆண்டு அம்பாறை கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி என பெயரிடப்பட்ட நினைவுப்படிகம் ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் என்பவரால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டிருந்தது.இதன் பின்னர் சட்ட விரோதமாக கூட்டம் கூடியமை மற்றும் மாநகர சபைக்கு சொந்தமான உடைமையை சேதப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கல்முனை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 09 வருடங்களாக இவ்வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை(30) அன்று குறித்த வழக்கு விசாரணை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பாதிக்கபட்ட தரப்பினர் உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்களை ஆராய்ந்த நீதிவான் எம்.எஸ். காரியப்பர் வீதிப் பெயர் பலகை உடைத்த ஹென்றி மகேந்திரனை குற்றவாளியாக இனங்கண்ட மன்று 1 500 ரூபா தண்டபணமும் 55 000 ரூபா நஷ்டஈடும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

பிரதி வாதி சார்பாக சட்டத்தரணி என்.சிவரஞ்சித் இசட்டத்தரணி என் மதிவதனன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திப் பின்னணி

வீதிப் பெயர் பலகையை இடித்துச் சேதப்படுத்திய ஹென்றி மகேந்திரன் கைது- பிணையில் செல்ல அனுமதி

கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் இருந்து சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் பாதைக்கு கல்முனை மாநகர சபையினால் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் பெயர் சூட்டப்பட்டு, கடந்த 2015.08.09ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் அப்போதைய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதினால் இவ்வீதியை திறந்து வைப்பதற்காக மாநகர சபையினால் அப்பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று நிறுவப்பட்டிருந்தது.

அதேவேளை இப்பெயர் சூட்டலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்றைய தினம் பிரதமரின் வருகைக்கு முன்னதாக ஹென்றி மகேந்திரன் தலைமையில் பேரணியாக சம்பவ இடத்திற்கு வந்த சிலர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஹென்றி மகேந்திரன் பெரும் சுத்தியல் ஒன்றினால் குறித்த கல்வெட்டை அடித்து நொறுக்கி விட்டு சென்றிருந்தார்.

அதன் பின்னர் அப்போதைய கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக்கினால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹென்றி மகேந்திரன் கைது செய்யப்பட்டு, 75000 ரூபாவுடன் இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட வழக்கின் தொடர்ச்சியாகவே இன்றைய தினம் விசாரணை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை

பாகிஸ்தானின் கடற்படைக் கப்பலான சைஃப் (SAIF) இன்று செவ்வாய்க்கிழமை (30) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

துறைமுகத்தை வந்தடைந்த பாகிஸ்தான் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

சைஃப் 123 மீற்றர் நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும், இந்த போர்க்கப்பல் கேப்டன் முஹம்மது அலியின் தலைமையில் 276 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகின்றது.

கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலங்களில் அதன் பணியாளர்கள் நாட்டின் சில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வார்கள்.

இந்த விஜயத்தை முடித்துக் கொண்டு பாகிஸ்தானின் சைஃப் கப்பலானது எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி இலங்கையை விட்டு வெளியேறி, இலங்கை கடற்படையின் கப்பலுடன் கொழும்பு கடற்பகுதியில் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளது.

பெப்ரவரி 04 – மாபெரும் பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர்கள் அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிப்பதுடன், அன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள மாபெரும் கண்டனப் போரணியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

பிரித்தானிய காலனித்துவத்தின் பிடியிலிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் தமிழ்த் தேசிய இனம் திறந்தவெளி சிறையில் இடப்பட்ட நாள். ஒட்டுமொத்த நாட்டினுடைய இறைமை, ஆட்சியதிகாரம் அனைத்தும் தனித்தே சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கைகளிலே ஒப்படைக்கப்பட்டமை என்பது தமிழினம் மீதான தொடர்ச்சியான இன ஒடுக்குமுறைகளிற்கே வழிகோலியது என்பதோடு, 2009 ஆண்டு இனப்படுகொலை எனும் கோரமுகமாய் வெளிப்பட்டதென்பது யாவரும் அறிந்ததொன்றே.

இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னர் இருந்தே தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பென்பது சிங்கள குடியேற்றத்திட்டங்கள், இராணுவமயமாக்கம் முதற்கொண்டு தொடங்கிய இனவழிப்புச் செயன்முறை, 2009 ஆண்டு ஈழப்போர் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழர் தாயகத்தை சூறையாடுவதில் மேலும் தீவிரநிலை கொண்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழலில் பெப்ரவரி 04ம் திகதியை கறுப்புநாளாக பிரகடனப்படுத்தி, பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து கறுப்புதினப் பேரணியினை முன்னெடுக்க அழைப்பு விடுக்கின்றோம்.

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோடு, தமிழர் தாயகத்தின் மீதான திட்டமிட்ட சிங்கள பௌத்த குடியேற்றங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புக்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு தமிழர் தாயகத்தின் நில ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக தற்போது கையறு நிலையில் உள்ள கிழக்கு மாகாணம் மீதான ஆக்கிரமிப்புக்கள் தாமதமேதுமின்றி முடிவுக்கு கொண்டு வரப்படவும் வேண்டும்.

ஈழத்தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆள்வதற்கும் வழிநடத்துவதற்கும் சுயநிர்ணய உரிமை உடையவர்களாவர் என்பதை ஏற்று ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். தமிழ் மக்களிற்கான அரசியல்தீர்வு தொடர்பான முயற்சிகள் யாவும் திம்புக் கோட்பாட்டினை அடியொற்றியே முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குட்பட்ட பதின்மூன்றாம் திருத்தத்தினை முற்றாக நிராகரிக்கின்றோம்.

தமிழர் தாயகத்தில் முடிவற்றுத் தொடரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், இராணுவப் பிரசன்னம், சிங்கள பௌத்தமயமாக்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி, தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை போன்றவற்றிற்கான உரிய தீர்வுகள் தாமதமேதுமின்றி வழங்கப்பட வேண்டும் என்பதோடு, ஆக்கிரமிப்புக்களை முன்னின்று

நடாத்தும் அரச இயந்திரத்தையும் அதன் நிறுவனங்களையும் கண்டிக்கின்றோம். தமிழர் தேசத்தின் மீது நூற்றாண்டு கடந்தும் சூழ்ந்துள்ள பேரினவாதத்தீயிலிருந்து தமிழர் தாயகத்தை காத்திடவும், தலைமுறைகள் தாண்டிய இனத்தின் இருப்பிற்காகவும் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி, கிளிநொச்சி இரணைமடு சந்தியிலிருந்து டிப்போச் சந்திவரை நடைபெறும் கரிநாள் பேரணியில் பங்குகொள்ள உணர்வுடனும் உரிமையுடனும் அழைத்து நிற்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

புதிய இராஜாங்க அமைச்சராக சஷீந்திர ராஜபக்ஷ நியமனம்

நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சஷீந்திர ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இதேவேளை விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்த நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக பதவிவகித்திருந்த நிலையிலேயே தற்போது அந்த இராஜாங்க அமைச்சுப் பதவியை ஷசீந்திர ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“ரணிலுக்கும் மஹிந்தவுக்கும் முதுகெலும்பு இருந்தால் தேர்தலில் மக்கள் முன் வாருங்கள்” – சஜித் சவால்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முதுகெலும்பு இருந்தால் தேர்தலை நடத்தி மக்கள் முன் வருமாறு சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (30) கொழும்பில் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்ததன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது;

“இன்று ஒரு வரலாற்று தருணம். இந்த நாட்டை அழித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அகற்றிய மாபெரும் ஜனநாயகப் புரட்சியை ஆரம்பித்தவர்கள் நாங்கள். இப்போது நாட்டை ஆளும் ரணில் ராஜபக்ச அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்க முடியாது. இந்த அரசாங்கம் மக்களைக் கொல்லாமல் மக்களைக் கொன்று மிக மனிதாபிமானமற்ற அழுத்தத்தை மக்கள் மீது செலுத்தி நாட்டில் உள்ள இருநூற்றி இருபது இலட்சம் பேரை பட்டினியில் இடும் கேவலமான அரசாகும்.

உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் வாக்களித்து மக்கள் முன் வாருங்கள் – ஜனாதிபதி ரணிலுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் ‘மாற்றத்தை ஏற்படுத்தும் ஓர் ஆண்டு’. அத்துடன் நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு பயப்படவில்லை என்று கூறுகிறோம். இது வெறும் ஆரம்பம் தான். எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம், எங்களுக்கு தேர்தல் வேண்டும். நாங்கள் மக்களின் ஆசியுடன் ஆட்சிக்கு வருகிறோம், தலைகளை மாற்றும் விளையாட்டினாலோ அல்லது முரட்டு ராஜபக்சவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அல்ல. மக்களின் ஆசியால் ஆட்சிக்கு வருகிறோம். இன்று இந்த அரசாங்கம் மக்களை கண்டு அஞ்சுகிறது. இது வெறும் ஆரம்பம் தான். இன்று காலை இந்த அரசாங்கத்தின் குண்டர்கள் சென்று தடை உத்தரவு பிறப்பித்தனர். ஆனால் நாங்கள் சட்டத்தை மீறவில்லை. இன்று இந்த இடத்திற்கு வந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் அடிப்படை உரிமைகளை இந்த அரசாங்கம் அப்பட்டமாக மீறியது.

நான் ரணிலுக்கும் மகிந்தவுக்கும் சொல்கிறேன் உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் முன்வாருங்கள். இந்த நாட்டை வங்குரோத்து செய்தவர்கள் எமது அரசாங்கத்தில் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கூறுகின்றோம். மக்களுக்கு நீதி வழங்குவோம். நாட்டை திவாலாக்கியது யார் என்பதை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரச அதிகாரம் பெறுவதற்கு முன்னரே அந்த முடிவை எடுத்தோம். அந்த முடிவின் மூலம் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களிடமிருந்து இழப்பீடு பெறுவதற்கு தேவையான சட்ட ஆதரவை வழங்கி எங்கள் கடமையை நிறைவேற்றுவோம்.

இன்றைய தாக்குதல் சட்டவிரோதமானது என்று பொலிஸாரிடம் கூறுகின்றோம். இன்று இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியவர்கள் தயாராக இருக்க வேண்டும். நாங்கள் நிச்சயமாக உங்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வோம் நாங்கள் அரசியல் அயோக்கியர்கள் அல்ல. எமது வலது பாதத்தை முன் வைத்து மக்கள் சக்தியால் ஒவ்வொரு கிராமத்தையும் பலப்படுத்தி இந்த சட்டவிரோத அரசை வீட்டுக்கு அனுப்புவோம். இன்று ரணிலை நினைத்து வெட்கப்படுகிறோம். தடை உத்தரவு போடுவது நமக்கு வெட்கமாக இல்லையா? இன்று நான் சொல்கிறேன், நமது அரசாங்கத்தின் கீழ், இந்த மாளிகைகள் அனைத்தும் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும்”. என மேலும் தெரிவித்தார்.