நிகழ்நிலை காப்புச்சட்டம் நிறைவேறினால் அனைவரும் சாப்பிட மட்டுமே வாய் திறக்க முடியும் – சபா குகதாஸ் எச்சரிக்கை

நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றம் கொடுத்த கட்டளையை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார் சபை முதல்வர் அதன் அடிப்படையில் உத்தேச நிகழ் நிலை காப்புச் சட்டத்தில் காணப்படும் பல சரத்துக்கள் எவ்வாறு அரசியலமைப்புக்கு அமைவாக மாற்றப்பட வேண்டும் என்றும் அத்துடன் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் முழுமையாக நிறைவேற்ற முடியும் என்றும் அவ்வாறு முடியாவிட்டால் நீதிமன்றம் குறிப்பிட்ட விடையங்களை மாற்றியமைத்து சாதாரண பெரும்பாண்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் யாவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

தற்போதைய அரசாங்கம் தமக்கு எதிரான மக்களின் கருத்துக்களை மற்றும் மக்கள் போராட்டங்களை கண்டு மிக அஞ்சுகின்றது காரணம் அடுத்து வர இருக்கும் தேர்தலை இலக்காக கொண்டு ஆட்சி தொடர்பாக சாதாரண பெரும்பாண்மை மக்களுக்கு சமூக ஊடகங்களினால் உடனுக்குடன் அரசாங்கததின் பலவீனங்கள் வெளிக் கொண்டு வரப்படுகின்றன இதனால் தமக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுவதை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதால் சமூகவலைத் தளங்களை அடக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை கொண்டுவருகின்றனர்.

இது ஊடக அடக்குமுறைக்கு அப்பால் மக்களின் ஜனநாயக குரல் வளையை நசுக்கி அரச சர்வாதிகாரத்தை மேலோங்கச் செய்யும்.

நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேறினால் நாட்டு மக்களும் சரி ஆளும் கட்சி தவிர்ந்த எதிர்க்கட்சிகள் அனைவரும் சாப்பிடுவதற்கு மட்டுமே வாயை திறக்கவும் கையை அசைக்கவும் முடியும் மாறாக அரசின் தவறுகளை விமர்சித்தால் சிறைச் தண்டனையுடன் கூடிய சொத்துக்களை பறி கொடுத்தல் மற்றும் தண்டப்பணம் சொலுத்துதல் போன்றவற்றை எதிர் கொள்ள நேரிடும்.

இலங்கைத் தீவு ஒரு ஜனநாயக சோசலிச குடியரசு என்ற பெயரில் மக்களின் கருத்து மற்றும் பேச்சுச் சுதந்திரத்தை அடக்கும் கொடூர சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றுவதை தடுக்க மக்கள் வீதிக்கு இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை.

பெரும்பான்மை சிங்கள மக்களை விட ஏனைய இனங்களுக்கு குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு பாரிய ஆபத்து காத்திருக்கின்றது தமிழர்களின் தாயகத்தில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் ஆயுதங்கள் இல்லாமல் இனத்தின் இருப்பை கபளீகரம் செய்யும் நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுக்கும் நிலையையும் இழக்கும் அபாயம் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் இடம்பெற்றது இன அழிப்பு என இலங்கை அரசு ஒப்புதல் வாக்குமூலம் – சபையில் ஜனா எம்.பி

ஹாசாவில் இஸ்ரேல் நடத்தும் மனித உரிமை மீறும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முரணான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் மேற்குலகம் எமது நாட்டின் மீது மட்டும் மனித உரிமை தொடர்பான பிரச்சினைகளை கேள்விக்குட்படுத்தும் காரணம் என்ன? என ஜனாதிபதி அண்மையில் கோரியதன் மூலம் இன்று ஹாசாவில் இஸ்ரேல் செய்துவரும் இன அழிப்பையே அன்று நாங்களும் வடகிழக்கில் செய்தோம். இன்று இஸ்ரேலை ஆதரிக்கும் மேற்குலக்கு அன்று நாம் செய்தவற்றைக் கண்டிப்பதற்கு தார்மீக உரிமை இல்லை என மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டுக்குக் கிடைத்துள்ள கடல் வளம் உலகில் எந்த நாட்டுக்கும் கிடையாதது. எமது கடற் பரப்பு கடல் வாழ் உயிரினங்கள் வளர்வதற்கேற்ற தட்ப வெப்ப சூழ்நிலை கொண்டது. எமது கடற்கரையைச் சுற்றி கடல்வாழ் உயிரினம் வாழ்வதற்கேற்ற கண்ட மேடையும் உள்ளது. கடல் சூழ்ந்த நாடுகள் அனைத்திலுமே இத்தகைய ஒரு பௌதீகச் சூழல் இருப்பதில்லை. உலகில் எந்த நாட்டுக்கும் கிடையாத நன்னீர் வளமும் எமது நாட்டுக்குக் கிடைத்திருப்பது எமக்குக் கிடைத்த பெரும் பொக்கிசமாகும். இவ் வளங்களை நாம் முறையாகப் பயன்படுத்துகின்றோமா? இவ் வளங்களின் பயன்பாடு மூலம் எமது நாடு வளம் பெறுகிறதா? என்று எம்மை நாமே வினாவினால் வருகின்ற விடை பூச்சியமே.

இந்த வளம் மாத்திரமல்ல இது போன்ற எல்லா வளமும் நிரம்பிய நாடு எமது நாடு விவசாயத்துறையை எடுத்துக் கொண்டால் நெல் உற்பத்தியில் தன்நிறைவு கண்ட நாடு. இதற்கு முதல் கால்கோளிட்டவன் குளம் தொட்டு வளம் பெருக்கிய பராக்கிரமபாகு மன்னன். ஆனால், இன்று அரிசியை இறக்குமதி செய்யவேண்டிய நிலை எமக்கு, பண்ணை விவசாயம் செய்து விலங்கு வேளாண்மையில் தன்நிறைவு காணவேண்டிய நாம் இன்று விலங்கு உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்யவேண்டிய அவலம். முட்டையைக் கூட அயல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய பரிதாபம் எமக்கு. இவை யாவற்றுக்கும் காரணம் என்ன? ஊழலும் மக்கள் நலன் கருதாத அரசுமே இதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

Fisheries and Aquatic Resources Act Ni ik 1996 சட்டம் அதற்குக் காலத்துக்குக் காலம் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் துறைசார் அமைச்சு மூலம் வெளியிடப்பட்ட வர்த்தமானி வெளியீடுகள் துறைசார் அமைச்சின் மூலம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மூலம் இதுவரை நாம் அடைந்த பயன் என்ன என்ற கேள்விக்குறியோடு இன்று இச் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தமும் ஏதேனும் பயனை எமது நாட்டுக்கும் மக்களுக்கும் தந்துவிடுமா.? அவ்வாறு அத்தகைய சட்டங்கள் மூலம் எம் மக்கள் உரிய பயன் பெறுவதற்குரிய இயலுமையை இந்த அமைச்சும் இந்த அரசாங்கமும் கொண்டிருக்கிறதா என்ற ஐயம் எனக்கு இன்னும் உள்ளது. எனது சிந்தனை எதிர்மறையாக உள்ளது என யாரும் நினைக்க வேண்டாம். எமது நாட்டின் கடந்த கால அனுபவம் என்னை அவ்வாறு நினைக்கத் தூண்டுகிறது.

அங்கு இங்கு எங்கும் போக வேண்டாம். ஆகக் குறைந்தது எமது அண்மையிலிருக்கும் மாலைதீவிலிருந்து இவ்விடயங்கள் தொடர்பாக நாம் ஏன் பாடங்களைக் கற்றுக் கொள்ளக்கூடாது. குறைந்த பட்சம் வட கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளையாவது, நன்னீர் வளங்களையாவது வட கிழக்கு மக்கள் முறையாகப் பயன்படுத்த அனுமதித்தால் கூட நாட்டின் முழுத் தேவையை இல்லாவிட்டாலும் இவ்வளங்கள் தொடர்பான முக்கால் வாசித் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய தைரியமும் மனத்திடமும் இயலுமையும் வட கிழக்கு மக்களிடமுண்டு. ஆனால் இவை தொடர்பான வட கிழக்கு வளங்கள் யாவும் தென்னிலங்கையாலும் அயல் நாடுகளாலும் கபளீகரம் செய்யப்படுகிறது. இதற்குரிய நிவாரணங்களை எம் மக்கள் எமது அரசியலமைப்பு வழங்கிய உரிமைகளுக்கமைவாக எடுத்துக்காட்டினால் அவர்கள் பயங்கரவாதிகள், அவர்கள் பிரிவினைவாதிகள் எனக் கருதுவதே எமது நாட்டின் வரலாறு. இதற்கான தண்டனைகளை அனுபவிப்பதே எமது வட கிழக்கு மக்களின் தலைவிதி.

கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. இதற்கான நல்லதொரு உதாரணம் கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாததும் மாறி மாறி வந்த ஆட்சியாளர்களினதும் மாறி மாறிப் பதவியிலிருந்த அரச உயர் அதிகாரிகளினதும் மறைமுக ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் அளவீடு செய்து வர்த்தமானி மூலம் மயிலத்தமடு – மாதவணையில் மேய்ச்சல் நிலமாக ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கு இன்று நடைபெறும் சம்பவங்கள் தகுந்த உதாரணங்களாகும்.

எமது மாவட்ட மக்கள் இந் நாட்டின் தேசிய உற்பத்திக்கு பங்களிப்பதற்கு இந்த மேய்ச்சல் தரை நிலம் முக்கியமானதாகும். பண்ணை உற்பத்தியில் பாரிய பங்களிப்பினை நல்குவதற்கும் இந்த மேய்ச்சல் தரை நிலம் முக்கியமானதாகும். தசாப்தங்களுக்கு மேலாக இம் மேய்ச்சல் தரையால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு மட்டங்களில் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண எடுத்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கா நிலையில் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் அதன் தலைவர்கள் அனைவரும் இணைந்து எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களோடு உயர் மட்டப் பேச்சுகளை அண்மையில் நடத்தினர்.

எமது ஜனாதிபதியும் இது தொடர்பாக எமது மக்களுக்குச் சாதகமான பதிலைக் கூறியதாக ஓரளவுக்கு மகிழ்ந்தோம் என்பது உண்மைதான். ஆனால், இவ்வளவும் நடந்த பின்னரும் எங்கிருந்தோ கிழக்கு மாகாணத்திற்கு ஆளுநராக வந்த முன்னாள் ஆளுநரும் மட்;டக்களப்பு அடாவடிப் பிக்குவும் புத்தர் சிலை வைத்து எம் மக்களின் வாழ்வுரிமையைக் கேள்விக்குட்படுத்தியுள்ளார்கள். இந்த விபரம் தற்போது ஏறாவூர் நீதிமன்றத்தில் உள்ளதாகவும் அறிகின்றேன்.

கடந்த மாதம் ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்புக்கு வருகை தந்தபோது மேய்ச்சல் தரைப்பிரச்சினை தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்ப்பதற்காக எமது அரசியலமைப்பின் 14ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளின் கீழ் தமது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். இது ஒன்றும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியோ, அல்லது அறகலய போன்ற ஆட்சியாளர்களை விரட்டும் போராட்டமோ அல்ல. பாதிக்கப்பட்ட மக்கள் ஜனாதிபதி அவர்கள் பயணிக்கும் போது வீதியின் இரு மருங்கிலுமிருந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த இருந்தனர். இதற்காக ஜனாதிபதி தனது பயணப்பாதையை மாற்றவேண்டிய தேவை அங்கு எழவில்லை. ஆனால், அன்று நடந்தது என்ன? ஜனாதிபதி தனது பயணப் பாதையை மாற்றினார். அரசியலமைப்பில் வழங்கப்பட்ட உரிமைகளின் அடிப்படையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்திய சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் இன்று நீதிமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வழக்கினை எதிர் நோக்கியுள்ளனர். இதில் இன்னும் ஓர் விநோதம் என்னவென்றால் அன்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாத பல தமிழ் அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கும் எதிராக இவ்விடயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கினைத் தொடுத்து தமது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பாரிய பொறுப்பை எமது பொலிஸ் படையினர் நிறைவேற்றியுள்ளனர்.

நான் மேலும் கூறுவதென்னவென்னால் வட கிழக்கில் பணியாற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு வருடத்திலும் குறிப்பிட்ட சில மாதங்கள் தெரியும். அம் மாதங்களில் குறிப்பிட்ட சில திகதிகளும் தெரியும். வட கிழக்கில் குறிப்பிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பிட்ட சில அரசியல் கட்சிப் பிரமுகர்கள், குறிப்பிட்ட சில சமூக ஆர்வலர்களது பெயர்களையும் பட்டியலோடு வைத்திருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் அந்த மாதங்களை அந்தத் திகதிகளை மறந்தாலும் எமது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்க நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணிப் பாதுகாக்கும் பொலிசார் அந்த மாதங்களை, திகதிகளை ஞாபகப்படுத்திவிடுவார்கள். இதற்காக முன்கூட்டியே கலந்து கொள்ள நினைக்காதவர்களின் பெயரிலும் கூட தடையுத்தரவினைப் பெற்றுவிடுவார்கள். எனக்குக் கூட இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது.

நீதிமன்றத் தடையுத்தரவை மீறி நினைவேந்தல் நிகழ்வொன்றில் பங்குபற்றியதாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் எனக்கு எதிராக கொக்கட்டிச்சோலைப் பொலிசாரால் வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தனைக்கும் எனக்கு எவ்வித நீதிமன்றத் தடையுத்தரவும் கிடைக்கப்பெறவில்லை. இருந்தாலும் என்மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதனை சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயாராகவேயுள்ளேன்.

ஆயுதப் போராளியாக இருந்து ஜனநாயக வழிமுறைக்கு வந்த பின்னர் எந்த ஒரு காலத்திலும், எந்த ஒரு இடத்திலும் ஏன், பாராளுமன்றத்தில் கூட எனது கருத்துக்களை, எனது முரண்பாடுகளை, எனது எதிர்ப்புக்களை சட்டரீதியாகவே வெளிப்படுத்தி வந்துள்ளேன். ஆனால், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிசார் என் மீதும் எமது மக்கள் மீதும், சட்ட முரணாகவே நடந்து கொள்கின்றனர்.

56 இனக்கலவரம், 77 இனக்கலவரம், 83 இனக்கலவரங்களின் போதெல்லாம் வெளிப்படுத்தப்படாத இன, மத முரண்பாடுகளை வெளிப்படுத்தும் விதமாக பகிரங்க வெளியில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தமிழ் மக்களை வெட்டி, வெட்டிக் கொல்வேனென்று கருத்து வெளியிட்ட போது, அவர் பொலிசாருடன் மோதும் போது, அவர்களின் சீருடையை பிடித்து அசிங்கப்படுத்தும் போது, அவர்களுடைய தொப்பியைக் கழற்றி வீசும் போது, அதனை அமைதியாக ஏற்றுக் கொண்ட பொலிசார் எமது அரசியலமைப்பின் 12ஆவது பிரிவின் முதலாம் உப பிரிவு வழங்கிய சட்டத்தின் முன் சகலரும் சமம் என்ற கோட்பாட்டை அப்பட்டமாக மீறியுள்ளனர். இப்படியொரு செயற்பாட்டை ஒரு இந்து மதகுரு, கிறிஸ்தவ மதகுரு, ஒரு இஸ்லாமிய மதகுரு செய்திருந்தால் இதே மௌனத்தை எமது பொலிசார் கடைப்பிடிப்பார்களா?

இதேவேளை, மட்டக்களப்பு சித்தாண்டியில் மேய்ச்சற்தரைப் பிரச்சனைக்காக இடம்பெறும் பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வந்து அகிம்சை ரீதியாக போராட்டமொன்றை நடத்தினார்கள். ஆனால், இந்தப் பிக்கு செய்யும் அடாவடிகளை பார்த்துக் கொண்டிருக்கும் பொலிசார் அமைதியான ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மாணவர்களை சிறைப்பிடித்து நீதிமன்றத்தின் முன்நிறுத்தி சிறையில் அடைக்கின்ற கைங்கரியத்தினையே செய்துள்ளனர். இவ்வாறாயின் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாடு இந்த நாட்டில் இருக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.

எமது நாட்டை இன்று ஆள்வது யார்? ஆளும் கட்சிக்கே தாம் தான் ஆளும்கட்சியென்று புரியாத அவல நிலை. இன்று நம் நாட்டின் ஜனாதிபதியை விரட்டுவோம், வரவு செலவுத்திட்டத்தைத் தோற்கடிப்போம் என்று எதிர்க்கட்சிகள் கோசமிட்ட காலம் போய் ஆளும் கட்சியினரே இவ்வாறு கோசமெழுப்புவது சாதாரணமாகியுள்ளது.

எமது ஜனாதிபதி அவர்கள் ஒரிரு நாட்களின் முன் மேற்குலக நாடுகளுக்கு அறைகூவல் ஒன்று விடுத்தார். ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை போன்றவற்றுக்கு மேற்குலக நாடுகள் வரும் போது பரிசுத்தமான கரங்களுடன் வரவேண்டுமென்றுரைத்தார். எமது ஜனாதிபதி அவர்களது புலமை, திறமை தொடர்பாக எனக்கு மதிப்புண்டு. ஆனால், இந்தக் கருத்தினை வெளியிடும் போது அவர் மறைமுகமாக எமது நாட்டில் நடைபெற்ற இனப் படுகொலையினையும், இனச் சுத்திகரிப்பினையும் ஏற்றுக் கொள்கின்றார் என்று கருதக் கூடியதாக இருக்கின்றது. ஹாசா யுத்தத்தில் இஸ்ரேல் நடத்தும் மனாதாபிமானமற்ற மனித உரிமை மீறும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முரணான நடவடிக்கைகளுக்கு தமது ஆதரவினை நல்கும் மேற்குலகம் எமது நாட்டின் மீது மட்டும் மனித உரிமை தொடர்பான பிரச்சினைகளை கேள்விக்குட்படுத்தும் காரணம் என்ன? எனக் கோரியதன் மூலம் இன்று ஹாசாவில் இஸ்ரேல் செய்துவரும் இன அழிப்பையே அன்று நாங்களும் வடக்கு கிழக்கில் செய்தோம். இன்று இஸ்ரேலை ஆதரிக்கும் நீங்கள் அன்று நாம் செய்த செயலை கண்டிப்பதற்கு உங்களுக்கு தார்மீக உரிமை இல்லை என குறிப்பிடுவதன் மூலம் இஸ்ரேலும் நாமும் ஒன்றையே செய்தோம் என மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார்.

எமது நாட்டில் சட்டங்கள் ஆக்கப்படுகிறது. காலத்துக்கு ஏற்ப சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. ஏற்றுக் கொள்ளக்கூடிய பாராட்டப்பட வேண்டிய விடயங்களே இவை. ஆனால், இவை மட்டும் போதாது. இயற்றப்படும், திருத்தப்படும் சட்டங்கள் இன, மத, மொழி பேதமின்றி பிரதேச வேறுபாடுகளின்றி அரசாங்கப் பிரமுகர்கள், எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் என்ற வேறுபாடுகளின்றி பௌத்த, இந்து, கிறிஸ்த்தவ, இஸ்லாமிய மதகுருக்கள் என்று வேறுபாடின்றி நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் நாட்டின் ஒற்றுமைக்கும், சமாதான, சகவாழ்வுக்கும் சவாலாக இருக்கும் அனைவர் மீதும் சட்டம் சமமாக பிரயோகிக்கப்படவேண்டும். அப்போது மட்டுமே எம் நாட்டில் சட்ட ஆட்சி நிலவும் இல்லையெனில் இன்றைய நிலைமை ஒரு தொடர்கதையாகவே முடியும். இது இன்று சமர்ப்பிக்கப்படும் கடற்றொழில் சட்டமூலத்துக்கும் பொருத்தமாகும்.

இன்றைய தேவை கருதி ஒரு முக்கிய விடயம் ஒன்றை இந்த உயரிய சபையின் கவனத்தின் பால் ஈர்க்க விளைகின்றேன். எமது நாட்டில் பொருட்களின் விலைவாசிகள் நினைக்க முடியாத அளவுக்கு உயர்வடைந்து வருகின்றது. மக்கள் வாழ முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்ணுவதே சிரமம் என்னும் நிலை இன்னும் ஓரிரு நாட்களில் ஏற்படினும் ஆச்சரியமில்லை. உயர் வருமானம் பெறும் அரச உத்தியோகத்தர்கள், நிபுணத்துவ உத்தியோகத்தர்கள், தொழில் சார் வல்லுனர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றார்கள். சாதாரண மக்கள் மின்சாரம், எரிபொருள், எரிவாயு என்பவற்றை பாவிக்க முடியாத அளவுக்கு இவற்றின் விலையேற்றம் உள்ளது.

ஓன்றிணைந்த தொழிற் சங்கங்கள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். குறைந்த பட்சம் 20 ஆயிரம் ரூபாவாவது தேவை என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது. இன்றைய வாழ்க்கைச் செலவுக்கு 20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு போதுமானதென நியாயமாகச் சிந்திக்கும் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், இதையாவது அரச ஊழியர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற முறையான நிதி நிருவாக முகாமைத்துவத்தினை ஏற்படுத்த வேண்டும். அரச உயர் மட்டத்தில் நிலவும் ஊழல்கள் முற்றாக இல்லாமலாக்கப்படவேண்டும்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் எரிபொருட்கள், எரிவாயு, அத்தியாவசியப் பொருட்கள் இருந்த விலைகளை நாம் அறிவோம் அரச ஊழியர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த சம்பளத்தையே தற்போதும் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். தற்போது விலைவாசிகள் மூன்று மடங்கு உயர்ந்திருக்கின்றது. உண்மையிலேயே அவர்கள் தங்கள் சம்பளத்தில் மூன்று மடங்கு உயர்வினைக் கேட்க வேண்டிய நிலையில் வெறுமனே இருபதாயிரம் சம்பள உயர்;வையே கேட்கின்றார்கள். எனவே எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அண்மையில் தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக அந்த இறக்குமதியாளர் நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய கூற்று எமது நாட்டில் ஊழல் இன்னமும் எந்த அளவுக்கு வேரோடி உள்ளது என்பதற்கு தக்க உதாரணமாகும். இவற்றைக் கருத்தில் கொண்டு எமது மக்களின் எதிர்கால வாழ்வின் சுபீட்சத்துக்காக சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்டம் வழி வகுக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு சீன ஆராய்ச்சிக் கப்பல் இலங்கை விஜயம் செய்ய கோரிக்கை முன்வைப்பு

சீனா மற்றுமொரு ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அனுமதியை கோரியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2024 முற்பகுதியில் மற்றுமொரு ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது.

எனினும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சீன கப்பல்களின் இலங்கை விஜயம் குறித்த இந்தியாவின் கரிசனைகளிற்கு மத்தியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் முன்னர் போல இலங்கையை சேர்ந்த சகா இல்லாமல் சீனா தனித்து ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை கோரியுள்ளது.

எங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்வது என்பதையும் சீனாவே தீர்மானிக்கவுள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க அழுத்தம் கொடுக்குமாறு சீனத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்த சிவில் சமூக பிரதிநிதிகள்

யாழ்ப்பாணத்திக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்காக சீனத்தூதுவர் இன்று(06)  மாலை தனியார் விடுதியில் யாழ்மாவட்டத்திலுள்ள சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் சார்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், சமூக பொருளாதார ஆய்வாளர் செல்வின், பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை  மற்றும் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதில் கலந்துகொண்ட சீன தூதுவர் இலங்கையில் சீனாவால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.

அதையடுத்து  சந்திப்பில் கலந்து கொண்ட சிவில் சமூக பிரதிநிதிகள் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் சீனத் தூதருக்கு எடுத்து கூறினர். இலங்கைக்கு அழுத்தம் தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

அதற்குப்  பதிலளித்த சீனத் தூதுவர், வெளிநாட்டின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாது எனத்தெரிவித்துள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி விடயங்களில் உதவிகள் செய்யத்தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என 2 மணித்தியாலங்கள் தூதுவருக்கு புத்திஜீவிகள் எடுத்துரைத்துள்ளனர்

சீன‌கடலுணவுகள் வடக்கிற்கு இறக்குமதி செய்யப்படாது – சீன‌ தூதுவர்‌உறுதி

சீன தொழிற்துறையினர் முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர் என தெரிவித்த இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங்,வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சீன தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து நெடுந்தீவு பிரதேச மக்களுக்காக 500 உலருணவுப் பொதிகளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நான் வடக்கு மாகாணத்திற்கு வந்துள்ளேன்.சீன பௌத்த மக்களால் 5000 உணவு பொதிகளை வடக்கு மாகாண மக்களுக்கு வழங்க வந்துள்ளேன்.

கடந்த முறை வடக்கில் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்கினோம். உணவுப் பொதி நெருக்கடி நிலையில் உதவியாக இருக்கும்.உணவு பொதி 7000 ரூபாய் பெறுமதியானது.

உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள உறவின் அடிப்படையில் உதவிகளை வழங்குவோம். கொரோனா நேரத்தில் நீங்களும் சினோபாம் தடுப்பூசியை பெற்றிருப்பீர்கள்.

பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையுடன் பொருளாதாரதாதை உயர்த்த முதலாவதாக சீனாவே கை கொடுத்தது.சீன எதிர்காலத்திலும் கை கைகொடுக்கும்.

15 மில்லியன் ரூபாய் பெறுமதியான உதவிகளை சீனா வழங்கவுள்ளது. 5 மில்லியன் உணவு பொருட்களாகவும் 5 மில்லியன் மீனவர்களுக்காகவும 5 மில்லியன் வீட்டு திட்டத்திற்கும் வழங்கவுள்ளது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனா சென்றபோது இலங்கைகடலுணவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.

சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது. விசேடமாக வடக்கு மாகாணத்திற்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது.

சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடு. மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. உங்களை அதற்கே வரவேற்கிறோம்.

சீன தொழிற்துறையினர் முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர். வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என்று நம்புகிறேன் – என்றார்.

பல்கலை மாணவர்களின் போராடும் உரிமை பொலிஸாரால் பறிப்பு – மாணவர் ஒன்றியம் குற்றச்சாட்டு

நீண்டகாலமாக பேசுபொருளாக காணப்படும் மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை பிரச்சினைக்கு வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்களாக அமைதியான முறையிலேயே போராட்டத்தினை முன்னெடுத்ததாகவும் தங்களால் போக்குவரத்திற்கோ பொதுச்சேவைகளுக்கோ எந்தவித இடையூறுகளும் ஏற்படுத்தாத நிலையில் எங்களை கைதுசெய்ததானது இலங்கை பொலிஸாரால் எங்களது போராடும் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்  ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சித்தாண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு சென்றுகொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேரும் நேற்று பிணையில் விடுக்கப்பட்டிருந்த நிலையிலும் பிணையாளிகளின் வதிவிட உறுதிப்படுத்தல் தாமதமாகியதால் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

விடுவிக்கப்பட்டவர்கள் இன்று பிற்பகல் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்த பின்னர் மட்டு.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடுசெய்திருந்தனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட மாணவர்கள்,யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.

இதன்போது கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ள,யாழ் பல்கலைக்கழக கலைபீட மாணவர் ஒன்றிய உறுப்பினர் சிந்துஜன் கருத்து தெரிவிக்கையில்,

மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களுக்கு குரல்கொடுக்கும் வகையில் வடகிழக்கு பல்கலைக்கழக சமூகமாக இணைந்து நாங்கள் பண்ணையாளர்களின் நிலங்களை அபகரிக்கப்படுவதற்கு எதிராக ஜனநாயக ரீதியாக குரல்கொடுக்கும் வகையில் அமைதியான முறையில் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம்.இதன்போது பொது போக்குவரத்துக்கு ஏதும் தடைகள் ஏற்படாமலும் எங்களது உரிமையினை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம் எனவும் தெரிவித்தார்.

எதிர்ப்புக்கு மத்தியில் திருகோணமலை இலுப்பைக்குளத்தில் புதிய புத்தர்சிலைகள்

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இன்று (06) காலை புத்தர்சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பொரலுகந்த ரஜமஹா விகாரைப்பகுதியில் இன்று (06) காலை பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள மக்களினால் இரண்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் ஆரம்பத்தில் புத்த விகாரை கட்டுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் அதற்கு அப்பகுதி மக்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு ஆளுநரிடம் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் பொதுமக்கள் முறையிட்டதையடுத்து கடந்த ஓகஸ்ட் மாதம் ஆளுநரினால் குறித்த கட்டுமானங்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் தடையுத்தரவையும் மீறி குறித்த பகுதியில் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு எதிராக பொதுமக்கள் 03.09.2023 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன் பின்னர் 09.09.2023 அன்று குறித்த பகுதியில் பொரலுகந்த ரஜமஹா விகாரை எனும் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை நடப்பட்டு தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் எவ்வித அனுமதி இல்லாத நிலையிலும் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு இன்றைய தினம் (06) காலை குறித்த பகுதியில் இரண்டு புத்தர்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

பௌத்த மக்களே இல்லாத, தமிழ் மக்கள் காலாகாலமாக வாழ்ந்து வருகின்ற இப்பகுதியில் இன முறுகலை ஏற்படுத்தும் விதமாகவும், இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் முகமாகவும் சிலர் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாகவும், புத்த விகாரையின் கட்டுமானங்களைத் தொடர்ந்து இப்பகுதிகளைச்சூழ சிங்கள மக்களை குடியேற்றும் திட்டம் உள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

ரணிலின் தந்திரோபாயம் தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தும்- சபா குகதாஸ் தெரிவிப்பு

ரணிலின் தந்திரோபாயம் தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை மீட்பர் என அவர் சார்ந்த வட்டாரங்கள் புகழாராம் சூடினாலும் புள்ளிவிபர ரீதியாக மாற்றம் எதுவும் நிகழவில்லை. மாறாக நாட்டின் கடன் அதிகரித்த வண்ணமே உள்ளது.

ஆனால் ஐனாதிபதியின் ஒவ்வொரு தீர்மானங்களும் தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகளை திசை திருப்புவதாகவும் அதற்கான தீர்வுகளை பலவீனப்படுத்துவதாகவும் அமைந்து வருகின்றது.

ரணிலின் எதேத்சதிகார போக்கை இராஐதந்திர ரீதியாக சமநிலைப்படுத்த தமிழர் தரப்பில் ஆளுமையான துணிச்சலான தலைமை  தமிழ் கட்சிகளில் இல்லை என்பது வேதனையான விடையம்.

அத்துடன் தமிழ் புத்திஜீவிகள் தரப்பில் பலனமான குரல் இல்லை. புலம்பெயர் தரப்பிலும் வறிதாகவே உள்ளது. இதனால் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எல்லையின்றி தமிழர்களின் அபிலாசைகளை கபளீகரம் செய்ய துணிந்துள்ளார்.

அத்துடன் தன்னை சிங்கள பௌத்த மக்களின் தலைவனாக காட்டவே முயற்சிக்கின்றார். அண்மையில் ஐேர்மன் ஊடகத்திற்கு கொடுத்த நேர்காணல் இதனை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறது.

தமிழர் தரப்பு பழைய பல்லவிப் போராட்டங்களை அறிவிப்பதும் அதன் மூலம் தமிழ் கட்சித் தலைமைகள் தங்கள் இயலாமையை வெளிப்படுத்துவதும் பலவீனப்பட்டு விரக்தி நிலையில் உள்ள மக்களின் வெறுப்பை அதிகரிப்பவர்களாகவும் மாறி உள்ளனர் இது தமிழ்த் தேசிய இருப்புக்கு சாதகமில்லை மிக ஆபத்தானது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு பதிலாக அதைவிட மேலும் மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்றார் ஐனாதிபதி.

எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் தென்னிந்திய மீனவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடும் வடக்கு மீனவர்களுக்கு தீர்வு காணப்படாமல் தென்னிந்திய மீனவர்கள் வடக்கு கடலில் மீன் பிடியில் ஈடுபட ரணில் அரசாங்கம் அனுமதி வழங்க இருப்பதாக கூறும் அறிவிப்பு மேலும் வடக்கு மீனவர்களை நெருக்கடிக்கு தள்ளும் ஏற்கனவே இருந்த பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் இரட்டி மடங்காக்கும்.

தமிழர் தரப்பு மக்கள் ஆணையில் இருந்து ஒரு படி கீழிறங்கி சமஷ்டி தீர்வுக்கு முன்பாக அரசியல் அமைப்பில் உள்ள பதின்மூன்றாம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் கோரினர்.

இதனை எதிர்பாக்காத ரணில் அதற்கும் ஒரு ஆப்பு வைத்தார். பொலிஸ் அதிகாரம் தரமுடியாது என கூறினார். உண்மையில் அரசியல் அமைப்பில் உள்ள அதிகாரத்தை பாராளுமன்ற முடிவு இல்லாமல் நினைத்தவுடன் ஐனாதிபதி தரமாட்டேன் என கூற முடியாது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க சர்வாதிகாரி போல செயற்பட்டுள்ளார்.

தமிழர் தாயகத்தில் சட்டவிரோத காணி அபகரிப்பு, விகாரைகள் அமைத்தல் , சிங்கள குடியேற்றங்கள் அமைத்தல் , மேச்சல் தரைகள் அபகரித்தல் போன்றன கடந்த காலத்தை விட தற்போது வேகமாக நடைபெறுகின்றன.

நிகழ்நிலைக் காப்பு சட்டம் என்ற போர்வையில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த கொண்டுவர உத்தேசித்துள்ள சட்டம் நாட்டு மக்களுக்கான அடக்குமுறை என பலரும் கூறினாலும் தமிழர்களுக்கு மிக ஆபத்தானது.

இதற்கு காரணம் சட்டம் நிறைவேறினால் நில அபகரிப்பு ,சட்டவிரோத விகாரை அமைப்பு போன்ற வற்றுக்கான மக்கள் போராட்டங்கள் மற்றும்  நினைவேந்தல் நிகழ்வுகள் போன்றவற்றுக்கு நிரந்தர ஆப்பாகும். மீறினால் சிறைதான்.

அத்துடன் அரச செயற்பாட்டை விமர்ச்சித்து சமூக ஊடகங்களில் பதிவு செய்தால் பொய்யான செய்தியை பதிவு செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிறையுடன் கூடிய தண்டனை.

பல்லின மக்கள் வாழும் நாட்டில் சகல மக்களின் பிரச்சினைகளையும் நியாயமான முறையில் பார்க்க வேண்டிய ஐனாதிபதி பெரும்பாண்மை சிங்கள மக்களின் தலைவராக தன்னை காண்பிக்க முயற்சிக்கும் சம நேரம் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் விரிவு படுத்தி திசை திருப்ப முயற்சிக்கின்றார். இச் செயற்பாடுகள் தொடருமாயின் தமிழ் மக்களின் அபிலாசைகள்  மேலும் பலவீனம் அடையும் அபாயம் ஏற்படும் என்றார்.

யாழ்ப்பாணம் பழைய கச்சேரிக்கு சீன தூதுவர் குழு விஜயம்

யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டிடத்தை சீனத்தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் பார்வையிட்டனர்.

இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல்வேறு சந்திப்பில் ஈடுபடவுள்ளனர்.

யாழ்ப்பாணம் பழைய கச்சேரியை சீன நாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சீனதூதுவர் பழைய கச்சேரியை பார்வையிட்டமை பாரிய சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

 

வடக்கிற்கான விஜயத்தை ஆரம்பித்தனர் சீனதூதுவர் தலைமையிலான குழு

இலங்கைக்கான சீனத்தூதுவர் குய் சென் ஹாங் தலைமையிலான குழுவினர் இன்று முதல் வடக்கிற்கான பயணத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

இன்றையதினம், காலை பத்துமணியளவில் வவுனியாவை வந்தடையவுள்ள அக்குழுவினர் வவுனியா மாவட்டத்தில் 500 பேருக்கான வாழ்வாதார பொதிகளைக் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்கவள்ளனர்.

அதன்பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணிக்கும் அக்குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவிற்கான 500 பொதிகளை மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரனிடத்தில் கையளிப்பதோடு வெலிஓயா பிரதேச செயலகத்திற்கான 250 வாழ்வாதாரப் பொதிகளை அக்குழுவினரே நேரடியான விஜயமொன்றை மேற்கொண்டு வழங்கவுள்ளனர்.

அதனையடுத்து, இன்று மாலை 5 மணிக்கு கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் அக்கழுவினர் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனிடத்தில் வாழ்வாதார பொதிகளை கையளித்த பின்பு யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கவுள்ளனர்.

யாழில் தங்கியிருக்கும் குறித்த குழுவினருடன் சீன பௌத்த அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்து நாளை 6ஆம் காலை 9 மணிக்கு யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தினைச்  சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதோடு, 10 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரனைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதோடு நெடுந்தீவு மக்களின் வாழ்வாதார உதவியாக  500 வாழ்வாதரப் பொதிகள் கையளிக்கப்படவுள்ளது.

தொடர்ந்து மாலை 2 மணிக்கு நாவற்குழி விகாரைக்குப் விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதோடு, குறித்த தினம் முன்னிரவில் சிவில் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தத்துறை சார்ந்தவர்கள் சிலரைச் சந்திப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாளை மறுதினம் 7ஆம் திகதி காலை நயினாதீவு பயணிக்கும் குறித்த குழுவினா நாகவிகாரையில் வழிபாடுகளைச் செய்யவுள்ளதோடு அங்குள்ள பொது மக்களுக்காக 250 வாழ்வாதார பொதிகளை கையளிக்கவுள்ளனர்

பின்னர் அங்கிருந்து யாழ்.திரும்பும் அவர்கள் சிறிது நேரத்தில் மன்னாரிக்குப் பயணித்து 8ஆம் திகதி மன்னார் மாவட்டச்செயலாளர் அ.ஸ்ரான்லி டிமலைச் சந்திக்கவுள்ளதோடு அங்கும் பொதுமக்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வில் பங்கெடுக்கவுள்ளதோடு அன்றையதினம் மாலையில் வடக்கிற்கான விஜயத்தினை நிறைவு செய்துகொண்டு கொழும்பு நோக்கி புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.