காணி பிரச்சினைக்கு தீர்வு குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடல்

வன மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தக் காணிகளில் நீண்டகாலமாக வசிக்கும் அல்லது விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வரும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வருகின்றது.

இருப்பினும் இதுவரை தீர்வு கிடைக்காத நிலையில் ஜனாதிபதியின் முயற்சியின் கீழ் வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை, அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் காடுகள் அதிகம் உள்ள மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இத்திட்டம் முதலில் அமுலாவுள்ளது.

வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட மேற்படி வேலைத்திட்டத்திற்கு அமைச்சின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது

தமிழக மீனவர் குழு இலங்கை வருகை தரவுள்ளனர்

தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழுவொன்று எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது.

பலாலி விமான நிலையம் ஊடாக அந்த குழு நேரடியாக யாழ்ப்பாணத்தினை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகள் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காகவே இந்த குழுவினர் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள விசைப் படகுகளின் உரிமையாளர்களும், இராமேஸ்வரம் விசைப்படகு சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுமே யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர்.

சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் : ஜனநாயக போராளிகள் அறிவிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து சம்பந்தன் விலக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இ.கதிர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு மிகுந்த பின்னடைவை சந்தித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தனித்துவமாக தேர்தலில் போட்டியிட்டுவதற்கு தயாராகி வருகிறது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி 49 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பின்னர் தந்தை செல்வாக்கு பின்னர் அந்த கட்சி செயலிழக்கப்பட்டு ஒரு சந்தர்ப்பவாத அரசியல் போக்கோடு செயல்பட்டது.

நான் நினைக்கின்றேன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகும் வரைக்கும் தமிழரசு கட்சி ஒரு செயலிழந்த கட்சியாகவே பார்க்கப்பட்டது தமிழீழ விடுதலைப் புலிகள் அதற்கான அங்கீகாரத்தை வழங்கி வீட்டுச் சின்னத்தை ஒரு பொதுச் சின்னமாக தலைவர் அவர்கள் அங்கீகாரம் வழங்கி நாங்கள் ஒரு தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தினோம்.

இன்று தமிழரசுக் கட்சி தனித்துவமாக முடிவை எடுத்து ஒரு தொழில்நுட்பம் முறை என்றும் ராஜதந்திர முறை என்றும் கருத்துக்களை மக்கள் மத்தியில் கூறிக்கொண்டு, வீட்டுச் சின்னம் தான் தமிழ் மக்களுடைய சின்னம் என்றும், தமிழரசுக் கட்சி தான் தமிழ் மக்களுடைய தாய் கட்சி என்றும் வலியுறுத்தி ஊடகங்களிலே செய்து வெளியிட்டு வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பும் ஊடகப் பேச்சாளர் பொறுப்பும் எங்களிடமே இருக்கின்றது என்று தமிழரசு கட்சி கூறி வருகின்றது. உண்மையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐந்து கட்சிகளைக் கொண்டு தற்போதைய காலத்தின் தேவை உணர்ந்து ஒரு புதிய பரிணாம வளர்ச்சி கண்டு இங்குநிற்கின்றது.

அந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ரெலோ, பிளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி என ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக குற்றுவிளக்கு சின்னத்தில் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்றது.

இந்த சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தனித்துவமாக தமிழரசு கட்சி இல்லாமல் செயல்பட்டு வருகின்றது இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து சம்பந்தன் ஐயா விலக்கப்படுகின்றார் ,கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரன் விலக்கப்படுகின்றார்.

சம்பந்தன் ஐயா வெறுமனே திருகொணமலை மாவட்டத்தின் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும், சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்ற நிலை இங்கே உருவாகி இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் என்பது கூட்டுத் தலைமைத்துவமாக மிக விரைவில் அறிவிக்கப்படும்.

உண்மையாக தலைவர் அவர்களுடைய சிந்தனைக்கும் தலைவர் அவர்களுடைய நம்பிக்கைக்கும் மிக மோசமான ஒரு குரோதத்தனமான வேலையை செய்து இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி இருக்கின்றது.

இலங்கை அரசாங்கத்தினுடைய ஒரு நோக்கமாக இருக்கின்றது இந்த கூட்டமைப்பையும் அழித்து மிதவாத அரசியல்வாதிகளையும் தங்கள் வசப்படுத்தி தமிழ்த் தேசியத்தை சிதைக்கும் நடவடிக்கைகளுக்கு உண்மையாக தமிழரசுக் கட்சி துணைபோகி நிற்கின்றது.

இந்த நிலையில் இன்று தமிழரசு கட்சி மக்களுக்கு செய்திருக்கின்ற மிக மோசமான துரோகத்தனமான செயற்பாட்டை மக்கள் மிகத் தெளிவாக புரிந்து கொண்டு வருகின்ற தேர்தல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க வேண்டும் என்பதை நான் இந்த இடத்தில் வலியுறுத்தி கூறுகின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக கருத்துக்களை கூறுவதற்கும் மக்களுக்கு நாங்கள் பணியாற்றுவதற்கும் முழுமையான உரிமை உரித்து உடையவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள்.

அந்த வகையிலேயே இந்த கருத்தை மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்”என தெரிவித்துள்ளார்.

தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இதுவரை இல்லை – ஜனாதிபதி

தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இதுவரை இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கமைய உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரிய திகதியில் நடத்த வேண்டும் என்பதுதான் தனது விருப்பம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தங்களது கட்சி சில இடங்களில் தனித்தும், சில இடங்களில் கூட்டணியாகவும் போட்டியிடுவது தொடர்பில் விமர்சனங்கள் வெளிவருகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.

அந்த விமர்சனங்களுக்கெல்லாம் பதிலளித்து நேரத்தை வீணாக்கக்கூடாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றி தொடர்பிலேயே அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் பிரசாரங்களை உரிய வகையில் முன்னெடுக்குமாறும், வன்முறைகள் தலைதூக்கும் செயல்களுக்கு ஆதரவு வழங்காதீர்கள் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வன்முறையாளர்களைச் சமூகத்தில் இருந்து நாம் ஒதுக்கிவைக்க வேண்டும் எனவும், ஜனநாயகவாதிகளுக்கு இந்த நாட்டில் என்றும் மதிப்பு இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

யாழில் இந்தியாவை பிரதிபலித்து பறக்கவிடப்பட்ட பட்டங்கள்

இந்தியாவை பிரதிபலித்து யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் பட்டங்கள் பறக்கவிடப்பட்டன.

யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் மற்றும் 74ஆவது குடியரசு தினம் ஆகியவற்றை முன்னிட்டு ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற கருப்பொருளின் கீழ், இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்தியக் கொடியின் நிறங்களை கொண்ட அழகான பட்டங்கள் திறந்த வெளியில் பறக்கவிடப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், உள்ளிட்ட இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

13-வது சட்டத் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை பாஜக-வுக்கு இருக்கிறது – அண்ணாமலை

தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, இலங்கையில் 13-வது சட்டத் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு, இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உரிமை நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை தமிழக பா.ஜ.க-வுக்கு இருப்பதாக  தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அண்ணாமலை மேலும் தெரிவிககையில், “1987-ல் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் ஏற்பட்ட 13-வது சட்டத் திருத்தமானது, இலங்கையில் உள்ள மாகாணங்கள், சுயாட்சி மேற்கொள்ளும் வகையில், கல்வி, ஆரோக்கியம், விவசாயம், வீட்டுவசதி, நிலம், காவல்துறை போன்ற பிரிவுகளில் மாகாண நிர்வாகங்களுக்கு அதிகாரம் வழங்கியது. இலங்கைத் தமிழர்கள் உரிமை குறித்துப் பேசும் ஒரே அரசியலமைப்புச் சட்டப் பிரிவாக 13-வது சட்டத் திருத்தம் மட்டுமே இன்றுவரை இருந்துவருகிறது.

ஆனாலும், பல்வேறு கட்டுப்பாடுகளாலும் அரசியல் காரணங்களாலும், மாகாண நிர்வாகங்களால் பெரிதும் முன்னேற்றம் காண முடியவில்லை. அரசு நிலம், காவல் துறை ஆகிய அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள, இலங்கை அரசு இன்றளவும் தயங்கி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இலங்கைத் தமிழ் மக்களின் சம உரிமை, நீதி, அமைதி மற்றும் மரியாதை காப்பாற்றப்பட, 13 ஆவது சட்டத் திருத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் இலங்கை அதிபர் மற்றும் பிரதமரைச் சந்திக்கும்போதும், இந்தச் சட்டத் திருத்தத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கைத் தமிழ் மக்களுக்காக 46,000 வீடுகளைக் கட்டிக் கொடுத்ததும், தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணத்தை, இலங்கைத் தலைநகர் கொழும்புடன் இணைக்கும் ரயில் திட்டத்திற்கான உதவியும், தமிழ் மக்கள் மேல், பாரதப் பிரதமர் மோடி அவர்களின் அதீத அன்பிற்கும் அக்கறைக்கும் எடுத்துக்காட்டாகும். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தொடர்ச்சியாக இலங்கைத் தமிழர்கள் நலனுக்காகக் குரல் கொடுத்து வருகிறார். இந்த மாதம் 20-ம் தேதி அவர், இலங்கை பிரதமரைச் சந்தித்தபோது, மாகாணங்களுக்கு, அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் என்றும், பெயரளவில் மட்டுமே உள்ள 13-வது சட்டத் திருத்தத்தை, முழுவதுமாக அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். கடந்த ஆண்டு மே மாதம், நான் இலங்கைக்குச் சென்றிருந்த போது நம் தமிழ் மக்களுக்கான கல்வி, பொருளாதாரம், வீட்டு வசதி உள்ளிட்ட மேம்பாட்டுத் திட்டங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு எப்போதும் துணை நிற்கும் என்று கூறினேன்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கையான 13-வது சட்டத் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களிடம் தெரிவித்துள்ளேன். விரைவில், இலங்கையில், 13 ஆவது சட்டத் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு, மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வும், நம் தமிழ் மக்களுக்கான சம உரிமைகளும், அமைதியும், பொருளாதார முன்னேற்றமும் ஏற்படுத்த நமது மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக நமது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். 13-வது சட்டத் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உரிமை நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை தமிழக பா.ஜ.க-வுக்கு இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான செய்தி மிகவும் முக்கியமானது – சொல்ஹெய்ம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் இலங்கைக்கான செய்தி மிகவும் முக்கியமானது என எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பதிவில் அவர் இதனைகுறிப்பிட்டுள்ளார்.இலங்கையை பொறுத்தவரை இவை சவாலான விடயங்கள்.பொருளாதார நெருக்கடி இனப்பிரிவினையிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு ஆதரவு அவசியம்

இதன் காரணமாகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் செய்தி மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்

இரண்டு வருடகாலத்திற்கு கடனை மீளப்பெறுவதை ஒத்திவைக்க சீனா இணக்கம்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ள சீனா, இரண்டு வருடகாலத்திற்கு கடனை மீளப்பெறுவதை ஒத்திவைப்பதற்கு இணங்கியுள்ளது.

சீனாவின் எக்சிம் வங்கி நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதிய கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய இவை இலங்கையின் கடன்களை இரண்டு வருடங்களிற்கு ஒத்திவைக்கும் நடவடிக்கை என தெரிவித்துள்ள எக்சிம் வங்கி, இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் நீண்டகால அர்ப்பணிப்புகள் குறித்து இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் சர்வதேச நாணய நிதியம் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடர வேண்டும் எனவும் சீனாவின் எக்சிம் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல்கள் ஆணைக்குழு அரசின் தேவைக்கு ஏற்பவே செயற்படுகின்றது – அநுர

தேர்தல்கள் ஆணைக்குழு அரசின் தேவைக்கு ஏற்பவே செயற்படுகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுமா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், ரணில் தேர்தலை ஒத்திப்போடுவதற்கே முயற்சி செய்கின்றார்.

அரசமைப்பில் அதற்கு இடமில்லை. இதனால் தேர்தல் நடத்தப்படவே வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்தின் தேவைக்கு ஏற்பவே செயற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இல்லை. 2019 ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்குக் கிடைத்த 69 இலட்சம் வாக்குகளும் ரணிலுக்கு எதிரான வாக்குகள். அப்படியாயின் ரணிலால் எப்படி ஜனாதிபதியாக இருக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சோமாலிய நாட்டு கடற்கொள்ளையர்கள் கப்பலைப் பிடித்து வைத்திருப்பது போல் இங்கு திருடர்கள் இலங்கையைப் பிடித்து வைத்துள்ளார்கள். நாட்டை ஆட்சி செய்கின்றார்கள். இவர்களுக்கு மக்கள் ஆணை இல்லை.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தினால் அவர்களின் நிலை என்னவென்று தெரியவரும். அவர்கள் படுதோல்வியடைவார்கள் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் ஆணை இல்லாத இந்த அரசால் ஆட்சி செய்ய முடியாது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்த அரசு தோல்வியடைந்தால் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலைக் கேட்பார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டி வரும். அப்போது அதிலும் இந்த அரசு தோல்வியும். அப்போது ஆட்சி கலையும். ஜனாதிபதி இல்லாமல் போவார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். அதனாலேயே அரச தரப்பினர் இந்தத் தேர்தலுக்கு அஞ்சுகின்றார்கள் எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குத்துவிளக்கு சின்னத்தின் வெற்றி தமிழ் மக்களின் ஒற்றுமைக்கான கோரிக்கையின் வெற்றி – சுரேந்திரன்

அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் சமஷ்டி முறை நோக்கி செல்லுவது சாத்தியமற்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் சமஸ்டி முறை நோக்கி செல்லுவது சாத்தியமற்றது.

13 வது அரசியல் திருத்தம் எங்களுடைய தீர்வல்ல என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். ஆனால் 13 வது அரசியலமைப்பு யாப்பில் இருக்கும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தாமல் அதைத் தாண்டிய சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை நோக்கி நாங்கள் நகர்வது என்பது சாத்தியமற்ற ஒன்று என தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இரா.சம்பந்தன் தற்போது தலைவரில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சி வெளியேறியதுடன், சம்பந்தனின் பதவி வறிதாகிவிட்டது. விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவு செய்யப்படவில்லையென்றும் தெரிவித்தார்.