இலங்கையில் தனது முதலீடுகள் தொடர்பில் கௌதம் அதானி ஆராய்வு

இலங்கையில் தனது முதலீடுகளின் தற்போதைய நிலை குறித்து கௌதம் அதானி ஆராய்ந்துள்ளார்.

இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட குஜராத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கௌதம் அதானியை சந்தித்துள்ளார்.

அஹமதாபாத் சாந்திகிராமில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை தூதுவரை சந்தித்த அதானி அதன் பின்னர் இலங்கையில் தனது முதலீடுகள் குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் துறைமுக துறையில் அவரது குழுமம் ஏற்கனவே முதலீடு செய்துள்ளது இது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

13 ஐ முழுமையாக அமுல்படுத்தி தேர்தலை நடாத்துவது முக்கியமானது – இந்திய வெளிவிவகார அமைச்சர்

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதும், மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதும் அரசியல் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு மிகவும் முக்கியமானது என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து, இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் இணைந்து அவர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தியிருந்தார்.

இந்தியாவுடனான கூட்டாண்மை, நாட்டின் பொருளாதார மீட்சியை எவ்வாறு எளிதாக்குவது என்பது குறித்து கலந்துரையாட ஜனாதிபதி விக்ரமசிங்கவை விரைவில் இந்தியாவிற்கு வருமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கடிதத்தை கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் சமூகத்தின் தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா, இலங்கையின் நம்பகமான அண்டை நாடு, நம்பகமான பங்காளி மற்றும் இலங்கைக்கு தேவை ஏற்படும்போது, எந்த தொலைவுக்கு செல்ல தயாராக உள்ள ஒரு நாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது இலங்கைப் பயணம், பிரதமர் மோடியின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அறிக்கை என வலியுறுத்திய ஜெய்சங்கர், தேவைப்படும் நேரத்தில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், திருகோணமலையை ஒரு வலுசக்தி மையமாக மேம்படுத்தும் திறன் இலங்கைக்கு உள்ளது. அத்தகைய முயற்சிகளுக்கு நம்பகமான பங்காளியாக, இந்தியா தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒத்துழைப்பை முன்னோக்கி கொண்டு செல்லும், புதுப்பிக்கத்தக்க சக்தி கட்டமைப்புக்கு, கொள்கை அடிப்படையில் இன்று இணக்கம் எட்டப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும் – இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் இணைந்துகொண்ட இந்த சந்திப்பின் போது, இந்தியாவுடனான கூட்டாண்மை, நாட்டை பொருளாதார மீட்சியை எவ்வாறு எளிதாக்குவது என்பது குறித்து கலந்துரையாட ஜனாதிபதி விக்ரமசிங்கவை விரைவில் இந்தியாவிற்கு வருமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கடிதத்தை ஜெய்சங்கர் கையளித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் சமூகத்தின் தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

“இந்தியா (இலங்கையின்) நம்பகமான அண்டை நாடு, நம்பகமான பங்காளி மற்றும் இலங்கைக்கு தேவை ஏற்படும்போது, எந்த தொலைவுக்கு செல்ல தயாராக உள்ள ஒரு நாடு” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தனது இலங்கைப் பயணம், பிரதமர் மோடியின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கைக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அறிக்கை என்று வலியுறுத்திய ஜெய்சங்கர், இந்த தேவைப்படும் நேரத்தில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என்றார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் – இ.தொ.கா சந்திப்பு

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக நிர்மாணிக்க இருக்கும் பத்தாயிரம் இந்திய வீட்டுத்திட்டத்தை விரைவுப்படுத்த மாற்று பொறிமுறை ஒன்று முன்னெடுக்க வேண்டும் என தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

மேலும், தற்போதைய சூழ்நிலையில் தோட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்ததோடு, இதனால் மலையக மக்கள் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் வேலைக்காக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மலையகத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான புதிய திட்டங்களை இந்தியா அறிமுகப்படுத்த வேண்டும் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார். இவ்விரண்டு கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்,பொதுச்செயலாளரும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன்,இ.தொ.காவின சட்ட பிரிவு பொறுப்பாளர் மாரிமுத்து,இ.தொ.காவின் ஆலோசகர் மதியுகராஜா, சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இக்கலந்துறையாடலில் இலங்கையின் பொருளாதார விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்த தருணத்தில் இந்தியா வழங்கிய உதவிகளுக்கு இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் – இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சி துரிதப்படுத்துவதற்காக முதலீடுகளை அதிகரிப்பதற்கான எங்களின் அர்ப்பணிப்பை வெளியிட்டேன் என ஜெய்சங்கர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்தித்தார்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று வியாழக்கிழமை (19) மாலை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன், பிரதித்தலைவர்களான பி. திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன். எம்.பிக்களான எம். உதயகுமார், வேலுக்குமார் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் நன்றிகளை தெரிவித்ததுடன் பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

இந்த சந்திப்பு தொடர்பில் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்ததாவது;

இந்திய வெளிவிவகார அமைச்சரை நாம் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை ந டத்தினோம். இதன்போது மலையகத்துக்கு இந்திய வம்சாவளித்தமிழர்கள் வந்து 200ஆவது ஆண்டு நிறைவு பெறுவது தொடர்பில் எடுத்துரைத்தோம்.

இந்த நிறைவை முன்னிட்டு மலையகத்தில் பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரிய பயிற்சி கலாசாலை, தாதியர் பயிற்சி கல்லூரி என்பவற்றை இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்திய அரசாங்கம் நிறுவவேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தோம்.

அத்துடன் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், என்பவற்றை பயில்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டுமென்றும் அதற்காக இந்தியாவிலிருந்து பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் வரவழைக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் நாம் வலியுறுத்தினோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் மலையக கட்சிகளுடன் பேசுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமை தொடர்பிலும் நாம் எடுத்துக்கூறினோம்.

ஜனாதிபதியை சந்திக்கும் போது இந்த விடயத்தை வலியுறுத்துமாறும் நாம் எடுத்துக்கூறியுள்ளோம். 200ஆவது வருட நிறைவை முன்னிட்டு மலையகத்தில் மேற்கொள்ளவேண்டிய திட்டங்கள் தொடர்பில் தமிழக அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளமை தொடர்பிலும் நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். எனத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் இலங்கை சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்- ஐநா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கை சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் பாதிக்கப்பட்டவர்களிற்கு இழப்பீட்டை வழங்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மையை நிலைநாட்டவேண்டும் நீதியை நிலைநாட்டவேண்டும் பாதிக்கப்பட்டவர்களிற்கு முழுமையான இழப்பீட்டை வழங்கவேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் அவர்களின் குடும்பத்தவர்களின் துயரத்தினை எவ்வளவு பெரிய இழப்பீட்டினாலும் ஈடுசெய்ய முடியாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் பேச்சாளர் ஜெரெமி லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நீதி இழப்பீட்டிற்கான உரிமைகளை அங்கீகரிப்பதற்காக பாதிக்கப்பட்டவர்களின் போராட்டத்தின் முன்னோக்கிய ஒரு படியை குறிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினரின் செயற்பாடின்மை மற்றும் கண்காணிப்பின்மை குறித்து நீதிமன்றம் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள லோரன்ஸ் தாக்குதல் எவ்வேளையும் தாக்குதல் இடம்பெறலாம் என புலனாய்வு பிரிவினர் தகவல் வழங்கியபோதிலும் முன்னாள் ஜனாதிபதியும் பாதுகாப்பு அதிகாரிகளும் தாக்குதலை தடுக்க தவறிவிட்டனர் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் உரிய இழப்பீட்டினை பெறுவதை இலங்கை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் நிதிகளை வழங்கும்போது பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் பிரதிநிதிகளை கலந்தாலோசனை செய்யவேண்டும் எனவும் ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை அதிகாரிகளிற்கான மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் பரிந்துரைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ள லோரன்ஸ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளின் முடிவுகளை இலங்கை அரசாங்கம் வெளியிடவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவியுடன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளின் ஆதரவுடன் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் குற்றவாளிகளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தலாய் லாமா இலங்கை விஜயம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை

திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர் இலங்கைக்கு பயணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று திபெத்திய அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தெ பெடரல் செய்தித்தளம் இந்த செய்தியை பிரசுரித்துள்ளது.

கடந்த மாதம் பீகாரின் புத்தகாயாவில் நடைபெற்ற பௌத்த துறவிகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை தூதுக்குழுவினரால் தலாய் லாமாவை கொழும்புக்கு வருமாறு வலியுறுத்தப்பட்டதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.

திபெத்தின் புனிதரை இலங்கை தூதுக்குழுவினர் அழைத்தனர், எனினும் அவர் தற்போது இலங்கைக்கு பயணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் ஆட்சேபனையை அடுத்து தலாய் லாமா இலங்கை செல்வது நல்லதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள திபெத்தின் அதிகாரி, இந்த கேள்வியை இலங்கை மக்களிடமே கேட்க வேண்டும் என்று பதிலளித்தார்.

தலாய் லாமா 1959இல் தனது தாயகத்தை விட்டு வெளியேறியதிலிருந்து இந்தியாவில் வசித்து வருகிறார். இந்தியாவில் சுமார் ஒரு இலட்சம் திபெத்திய நாடுகடத்தப்பட்டவர்களும் வசித்து வருகின்றனர்.

அவர் இந்தியாவில் உள்ள தர்மசாலாவை தளமாகக் கொண்ட நாடுகடத்தப்பட்ட அரசாங்கத்தின் தலைவர் பதவியில் இருந்தாலும், அவரை ‘பிரிவினைவாதி’ என்று சீனா அழைக்கிறது. அத்துடன் அவரை ஆதரிக்கும் நாடுகளை எதிர்க்கிறது.

புலிகளை பிரிக்கவே பிரேமதாஸ புலிகளுக்கு உதவி செய்தார் – சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தந்தையின் ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு காசோலைகள் எழுதப்பட்டதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அமைச்சருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் இவ்வாறு உரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க – கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, அவர் பல வருடங்களாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றார். இது போன்ற மசோதாவில் யார் வேண்டுமானாலும் திருத்தங்கள் கொண்டு வரலாம். நீங்கள் அதை கொண்டு வர விரும்பினால், நீங்கள் கொண்டு வாருங்கள். அதற்கு உதவலாமா வேண்டாமா என்பதை நாங்கள் முடிவு செய்வோம். உங்கள் தந்தையின் காலத்தில் திறைசேரியில் இருந்து புலிகளுக்கு காசோலைகள் எழுதப்பட்டன. திருமதி சந்திரிகாவின் காலத்தில் அதுபற்றி ஒரு ஆணைக்குழுவை நியமித்து தகவல்களைக் கண்டறிந்தார்கள். அந்த உண்மைகளை அது உறுதிப்படுத்தியது. இன்று உங்களுக்கு புலிகளால் பணம் கொடுக்கப்படுகிறது என்ற கருத்து மக்களிடம் உள்ளது. நான் அதை உண்மை என்று சொல்லவில்லை. மக்கள் சொல்வதை நான் சொல்கிறேன். இப்படி ஒரு மசோதா கொண்டு வருவது நல்லது. நீங்கள் திருத்தம் கொண்டு வாருங்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச – கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் கூட்டாளிகளுக்கும் ஆயுதங்கள் வழங்கப்பட்டன. முசோலினிக்கு நெருக்கமாக இருந்தவர்களுக்கும் பணம் வழங்கப்பட்டது. வேறு எதனாலும் அல்ல. எதிரி அணியில் பிளவுகளை உருவாக்க. எனது தந்தையின் காலத்தில் பிரபாகரனிடம் இருந்து விலகியிருந்த மாத்தயாவையும் யோகியையும் வலுப்படுத்த விடுதலைப் புலிகளை பிளவுபடுத்த பல்வேறு உத்திகளை செயற்படுத்தினார்கள்.

ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க – நீங்கள் வாலை மிதிக்காதீர்கள். அதாவது உங்களுக்கு பணம் எப்படி வருகிறது என்பது பற்றி மக்கள் சொல்லும் கதைகள். அப்படி ஒரு மசோதா கொண்டு வருவது உங்களுக்கு நல்லது.

இலங்கை ஐ.எம்.எப் கடனுதவி பெற முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயார்: அமெரிக்க தூதர் ஜுலி சங்

இலங்கையின் கடன்மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளமையை வரவேற்றுள்ள இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், அனைத்துக் கடன்வழங்குனர்களும் இதற்கு இணங்கும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதில் இலங்கைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கத்தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மேற்கொள்கின்ற கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக இந்தியா சர்வதேச நாணய நிதியத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அதனை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அமெரிக்கத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாகவும், ‘பாரிஸ் கிளப்’ நாடுகளுடன் ஒருங்கிணைந்து உரியவாறானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தததுமான கடன் சலுகைகளை வழங்குவதாகவும் இந்தியா அறிவித்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. அனைத்துக் கடன்வழங்குனர்களும் நியாயமானதும், பக்கச்சார்பற்றதுமான இணக்கப்பாட்டுக்குவரும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க அமெரிக்கா தயாராக இருக்கின்றது’ என்று அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்தியாவின் அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தாம் சர்வதேச நாணய நிதியத்தின் நீடித்தகால நிதியுதவி செயற்திட்டத்தை அண்மித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துக் கடன்வழங்குனர்களும் இணங்கினால் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயார் – அமெரிக்கத்தூதுவர்அதேவேளை இந்த உதவியின் ஊடாக மாத்திரம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணமுடியாது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இருப்பினும் நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவசியமான மறுசீரமைப்புக்கள் மற்றும் நம்பிக்கையை வலுவூட்டல் என்பவற்றுக்கான ‘செயற்திறன் ஊக்கியாக’ இந்த உதவி அமையும் என்று தெரிவித்துள்ளார்.