வவுனியா மாநகரசபையில் ரெலோ ஆட்சி அமைக்கும் – வினோ எம்.பி நம்பிக்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் வவுனியா மாநகரசபையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ மேயரை நியமித்து ஆட்சி அமைக்கும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது மற்றும் வட்டாரங்களில் வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பங்காளி கட்சிகளுக்கிடையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது வவுனியா மாநகரசபை மற்றும் 3 பிரதேச சபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி போட்டியிடுகின்றது.

இதன்போது வவுனியா மாநகரசபையில் குறித்த கூட்டணி வெற்றிபெறும் பட்சத்தில் மாநகர மேயரை நியமித்து ஆட்சி அமைக்கும் பொறுப்பு தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோவும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் ஈ. பி. ஆர். எல். எப் கட்சியும் செட்டிகுளம் பிரதேச சபையில் புளொட்டும் வவுனியா வடக்கு பிரதேச சபையில் ஜனநாயக போராளிகள் கட்சியும் ஆட்சி அமைக்கும் பெறுப்பை குறித்த கூட்டணி பகிர்ந்துள்ளது.

இந் நிலையில் குறித்த உள்ளூராட்சி மன்றங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பிலும் பங்காளி கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு எட்டியுள்ளதாகவும் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை உயர் ஸ்தானிகர் இடையே சந்திப்பு

இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளின் பரஸ்பர உறவை பேணுதல், மீட்டெடுத்தல் மற்றும் ஒத்துழைப்பு வழங்குதல் குறித்து இந்த கலந்துரையாடப்பட்டது.

இது இந்தியா- இலங்கை இடையே நடைபெறும் வழக்கமான உரையாடலின் ஒரு பகுதி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வார இறுதியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கு முன்னதாகவே இந்த சந்திப்பு நடந்துள்ளது.

எனினும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் பயணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

13ஐ முழுமையாக அமுல்படுத்தினால் நாடு பிளவுபடும்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் நாடு குறுகிய காலத்திற்குள் பிளவுபடும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதால் வடக்கின் பிரிவினைவாத, சாதி அடிப்படையிலான அரசியல் தலைவர்களின் நோக்கம் நிறைவேறுமா தவிர தமிழ் மக்களின் உண்மை பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பிரிவினைவாத அரசியல் கட்சிகள் அடையாளப்படுத்தும் இன அடிப்படையிலான பிரச்சினை, நாங்கள் அடையாளப்படுத்தும் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் மனங்களை வெல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது உண்மை எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் அடிப்படையில் சர்வக்கட்சி தலைவர் கூட்டம் அண்மையில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் பிரிவினைவாத அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்த்தல், ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றுக்காக விசேட நிதியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் முழுமையாக விடுதலை செய்ய வேண்டும்.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இராணுவத்தினர் மீது தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட சிவில் அமைப்புகளால் கொழும்பில் இன்று (16) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. கொள்ளுப்பிட்டி பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக இவ்வாறு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இன்றைய தினம் (16) காலி வீதி , கொள்ளுபிட்டியிலிருந்து பம்பலப்பிட்டி வரையான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இதன் போது பொலிஸாரினால் பிரதான வீதி மறிக்கப்பட்டிருந்தமையால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மெரைன் டிரைவ் வீதியில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

150 நாட்களுக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை விடுவிக்குமாறும் பயங்கரவாத தடைச்சட்டத்தை செல்லுபடியற்றதாக்குமாறும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யூனியன் ப்ளேஸ் ஊடாக காலி முகத்திடலுக்குள் பிரவேசிப்பதற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

02 மில்லியன் குடும்பங்களுக்கு 02 மாதங்களுக்கு 10 கிலோ அரிசி வழங்க அங்கீகாரம்

சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம்  பெறும் 02 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை 02 மாத காலத்திற்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக 40,000 மெற்றிக்தொன் அரிசி தேவைப்பதோடு, அதற்கு அரசாங்கம் 61,600  மெற்றிக்தொன் நெல்லைக் கொள்வனவு செய்ய வேண்டும்.

சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களின் ஆதரவுடன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் கீழ் தற்பொழுது காணப்படும் முறையை பயன்படுத்தி அடையாளம் காணப்பட்ட சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி பகிர்ந்தளிக்கப்பட உள்ளதோடு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார  மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக இது தொடர்பில் மாவட்ட செயலாளர்களின் ஒருங்கிணைப்புடன் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன.

நெல் கொள்வனவுக்கு 6,200 மில்லியன் ரூபாய், நெல் உலர்த்துவதற்கு 290 மில்லியன் ரூபாய், கதிரடிக்கு வாடகைக்கு 590 மில்லியன் ரூபாய், பொதிச் செலவுக்கு 200 மில்லியன் ரூபாய், நெல் ஆலை உரிமையாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக 160 மில்லியன் ரூபாய், அரிசி போக்குவரத்துச் செலவுக்கு 600 மில்லியன் ரூபாய் என்ற வகையில் 8,040 மில்லியன் ரூபாய் இதற்காக மதிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், சந்தை விலைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து இத்திட்டத்திற்கு மதிப்பிடப்பட்ட செலவு மாறுபடும்.தேவை ஏற்பட்டால், சுமார் 10,000 ரூபாய் வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு இதற்குப் பயன்படுத்தப்படும்.

கமத்தொழில் திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2022/2023 பெரும்போகத்தில் நெல் பயிரிடப்பட்ட பரப்பளவு சுமார் 732,201 ஹெக்டெயராக இருந்ததோடு, மற்றும் எதிர்பார்க்கப்படும் நெல் விளைச்சல் 3.3 மில்லியன் மெ.தொன்களாகும்.

இதன் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய அரிசியின் அளவு சுமார் 2.2 மில்லியன் மெ.தொன்களாகும்.  நாட்டின் மாதாந்த அரிசித் தேவையான சுமார் 210,000 மெற்றிக் தொன்களைக்  கருத்திற்கொண்டால், எதிர்வரும் பெரும்போகத்தில் அரிசி மேலதிக கையிருப்பு கிடைக்கலாம்    என அவதானிக்கப்படுகின்றது.

அதன்படி, நெல் விவசாயி மற்றும் நுகர்வோர் இருவரையும் பாதுகாக்கும் வகையில், 2020/23 பெரும்போகத்தில் குறிப்பிட்ட அளவு நெல் கொள்முதல் செய்வதில் அரசாங்கம் தலையிடுவது அவசியம் ஆகும்.

மேலும், நாட்டில் நிலவும்  கடினமான பொருளாதார நிலைமை காரணமாக, சமூகத்தின் குறைந்த வருமானம் பெறும்  குழுக்களின்  போசாக்கு  மட்டத்தைப் பேணுவதற்கு ஆதரவளித்து   இந்த நெருக்கடியின் பாதகமான விளைவுகளிலிருந்து அவர்களை  பாதுகாக்க வேண்டும்.   சமுர்த்தி பயனாளர்கள் உட்பட  சுமார் 2 மில்லியன் குடும்பங்களாக இருக்கும் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2023 வரை  இவர்களுக்காக அரசாங்கம்   மேலதிக நிதியை  வழங்கியிருந்தாலும், இந்த குறைந்த வருமானம் பெறுபவர்களை சில காலம் கவனித்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

2022/2023  பெரும் போகத்தில்  நெல் அறுவடை முந்தைய பருவத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அடையாளம் காணப்பட்ட குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை  பராமரிப்பதற்கு மேலதிக ஒத்துழைப்பை வழங்குவதற்காக  குறிப்பிட்ட அளவு நெல்லைப் பயன்படுத்துவது பொருத்தமானது.

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டுவோர் பயனடைவார்கள்.

திறைசேரி செயலாளர், ஜனாதிபதி செயலக அதிகாரிகள், விவசாய அமைச்சின் செயலாளர், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்களின் செயலாளர், பெண்கள், சிறுவர்  விவகார   மற்றும் சமூக வலுவூட்டல்  அமைச்சின் செயலாளர் மற்றும் சகவ  மாவட்டச் செயலாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம்  மற்றும்  ஏனைய தொடர்புடைய நிறுவனங்கள் என்பன உத்தேச திட்டத்தை செயல்படுத்தும் முறை குறித்து  ஆராயப்படும்.

உத்தேச அரிசி விநியோகப் பொறிமுறை தொடர்பில் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, விவசாயிகள் வாங்கும் நெல் வகைகளின் உற்பத்திச்  செலவு, அரிசி கொள்வனவு செய்யும்  உத்தரவாத விலை, நெல் ஆலை  உரிமையாளர்களின் பங்களிப்பு, போக்குவரத்து முறை, கதிரடி வாடகை  ஆகியவை குறித்து விரிவாக ஆராயப்படும்.

2019ஆம் ஆண்டு இணக்கம் தெரிவிக்கப்பட்ட காணிகளையே விடுவிக்க நடவடிக்கை

கடந்த 2019ஆம் ஆண்டு விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட 110ஏக்கர் காணியினையே தற்போது விடுவிக்க பாதுகாப்பு தரப்பு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அக்காலப் பகுதியில் காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் , ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காணி விடுவிப்பு கைவிடப்பட்டது.

அதன் பின்னர் ஜனாதிபதியாக கோட்டாபய பதவியேற்றதை தொடர்ந்து காணி விடுவிப்புக்கள் நடவடிக்கைகள் அனைத்தும் முற்றாக கைவிடப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி தலைமையில், பாதுகாப்பு அமைச்சின் செயலர், முப்படைகளின்தளபதிகள், படைகளின் பிரதானி பங்குபற்றுதலுடன் யாழ் மாவட்ட செயலகத்தில் காணிவிடுவிப்பு தொடர்பில் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்த நிலையில், கீரிமலை, காங்கேசன் துறை , மயிலிட்டி , பலாலி வடக்கு ஆகிய பகுதிகளில் முப்படையினரின் வசம் இருக்கும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக படைத்தரப்பு ஜனாதிபதியின் முன் உறுதி அளித்தது.

குறித்த காணிகளில் 30 ஏக்கர் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலும் மிகுதி ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

இக்காணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு காலப் பகுதியில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட காணிகளே எனவும், புதிதாக காணிகள் எதனையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என தெரிவிக்கப்படுகிறது.

புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணபட்டியல்

புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை வழங்குவதற்கும் செலுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நாளை(செவ்வாய்கிழமை) இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் பியால் பத்மநாத தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நீர் கட்டணத்திற்கான கொடுப்பனவு பட்டியலை வழங்கும் இயந்திரம் மூலம் மாதாந்த கொடுப்பனவு தொகையை வழங்குவதுடன், வங்கி அட்டைகள் மூலம் கொடுப்பனவுகளை செலுத்தும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டம் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

10கோடி நட்டஈடு செலுத்தும் அளவிற்கான பணம் இல்லை – மைத்திரி

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில், 10 கோடி ரூபா நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ள போதிலும், அதனை செலுத்தும் அளவிற்கான சொத்து தம்மிடம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெயாங்கொடை பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது, தாம் சிங்கப்பூரில் இருந்ததாக தெரிவித்தார்.

இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு போதியளவு புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தும், அதனை தம்மிடம் எவரும் வெளிப்படுத்தியிருக்கவில்லை. இதனையே நான் சாட்சியமாகவும் வழங்கியிருக்கின்றேன்.

88 பக்கங்களை கொண்ட தீர்ப்பு அறிக்கையின் எந்தவொரு இடத்திலும், அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்கள் ஜனாதிபதி தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை.
அவ்வாறெனில் தமக்கு ஏன், உயர் நீதிமன்றில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என மக்கள் நினைக்கலாம்.

குறித்த தீர்ப்பில், ஜனாதிபதியினால் தெரிவு செய்யப்படும் அதிகாரிகள் தவறிழைக்கு சந்தர்ப்பத்தில், அதற்கு ஜனாதிபதியே பொறுப்பானவராவார்.

அதனடிப்படையில் காவல்துறை மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்குரியதாகும்.

அவர்கள் தமது பொறுப்பை சரிவர நிறைவேற்றாமை காரணமாகவே தமக்கு குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதற்காக விதிக்கப்பட்ட 10 கோடி ரூபா அபராதத்தை செலுத்தும் அளவிற்கான சொத்து தம்மிடம் இல்லை.அதனை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றேன்.

தமக்கு எவ்வாறான தடங்கல் ஏற்படினும் எனது சேவையை முன்னெடுப்பதற்கு தயராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஓரிரு வருட காலத்தில் “13′ கட்டம் கட்டமாக முழுமையாக அமுல் ; நல்லூரில் ஜனாதிபதி ரணில் அறிவிப்பு

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த உத்தேசித்திருக்கிறோம். அதனை எதிர்வரும் ஓரிரு வருடங்களில் கட்டம் கட்டமாக முன்னெடுப்போம். காணமல் போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிய வேண்டும். அதே போன்று உண்மையை கண்டறியும் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவொன்றை உருவாக்க வேண்டும். இந்த ஆணைக்குழுவை அமைப்பது குறித்து மூன்று வாரங்களுக்கு முன்னர் இராணுவத்தின் கருத்தை வினவியிருந்தேன். உண்மையை கண்டறிவதை நாமும் விரும்புகிறோம், அதன் மூலம் தம் மீதான குற்றச்சாட்டுகளும் நீங்கும் என அவர்கள் தெரிவித்தார்கள். எனவே உண்மையை கண்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை உருவாக்க எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அனைத்து மக்களும் ஒன்றாக வாழும் நாட்டிற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்று உருவாக்கப் படும். – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க யாழ்ப்பாணம் நல்லூரில் நேற்றுத் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூர் துர்கா மணி மண்டபத்தில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற தேசிய தைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் கலாசார முறைப்படி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட ஜனாதிபதிக்கு சம்பிரதாயபூர்வமாக வரவேற்பு அளிக்கப் பட்டது. வண்ணமயமான தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகளும் இதன் போது அரங்கேற்றப்பட்டன.

கட்சித் தலைவர்களின் கூட்டம் அடுத்த வாரத்தில்

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில் – சகல இன மக்களும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்பி, பொருளாதார சுபீட்சத்தை அடைந்த நாடொன்றை உருவாக்கும் நோக்குடன் 75 வருடங்களுக்கு முன்னர் டி.எஸ்.சேனாநாயக்க ஏற்படுத்திய இலங்கை எனும் தனித்துவத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை குறித்த அறிக்கையை பெப்ரவரி மாதம் நாட்டுக்கு வெளியிடவுள்ளோம். இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அடுத்த வாரம் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும். காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உண்மையைக் கண்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகள் துரிதப்படுத்தப்படும். அனைவருக்கும் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். குறிப்பாக தைப்பொங்கல் என்பது தேசிய விழாவாகும். முற்காலத்தில் விவசாய நாடாக எமது நாடு இருந்தது. நெல் அறுவடை கிடைத்த போது அதனைக் கடவுளுக்குப் படைத்தோம்.

கலை நிகழ்வுகளுக்கு பாராட்டுகள்

இன்றைய தைப்பொங்கல் நிகழ்வில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய இராமநாதன் அழகியற் கலைப் பீட மாணவர்களை பாராட்டுகிறேன். உயர் தரத்திலான கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது. நாதஸ்வர கச்சேரியும் பாரம்பரிய அடிப்படையில் சிறப்பாக அமைந்தது. அனைவருக்கும் பாராட்டை தெரிவிக்கிறேன். இந்த குழுக்கள் உலக மட்டத்திலான போட்டிகளில் பங்கேற்க முடியும். அது தொடர்பில் இலங்கையர்களாக நாம் பெருமை அடைகிறோம். காலியில் நடத்தப்படுவதைப் போன்று யாழ்ப்பாணத்திலும் கலை விழாவொன்றை நடத்த தீர்மானித்துள்ளோம். நாமும் இந்தியாவை விட மாற்றமாக புதிய தமிழ் கலாச்சாரமொன்றை உருவாக்கியுள்ளோம். அதனை உலக அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும். நல்லிணக்கத்தை வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் நிறைவு செய்யப்பட்டன.

ஒன்றுபடுவோம்

எமது நாட்டுக்கு நல்லிணக்கம் அவசிய மானது. 30 – 40 வருடங்களுக்கு மேலாக யுத்தம், மோதல்கள்.குழப்பங்கள் மற்றும் பிரிவினைவாத, இனவாத வங்குரோத்து அரசியல்களினால் நாடு பிரிந்திருந்தது. நாம் ஒரே நாட்டில் வாழ வேண்டும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டும். அதற்காக 75 வருடங்க ளுக்கு முன்னர் டி.எஸ்.சேனாநாயக்க உருவாக்கிய தனித்துவமான இலங்கையை நோக்கி பயணிக்க வேண்டும். தைப்பொங்கல் விழா மேடையில் பொங்கல் தயார் செய்வதை கண்டேன். நெருப்பின் மேல் பானையை வைத்து தண்ணீர் மற்றும் பால் என்பவற்றை ஊற்றி அரிசி,கருப்பட்டி என்பற்றை இட்டு பொங்கல் தயாரிக்கப்படுகிறது. இந்த நெருக்கடியான நிலையில் நாம் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பேகர் என அனைவரையும் இட்டு அதன் ஊடாக இலங்கையர் என்ற தனித்துவத்தை உருவாக்குவோம்.

பெப்ரவரியில் தீர்வு

வடக்கில் தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்து இந்த விழாவின் பின்னர் ஆராய இருக்கிறோம். நாடாளுமன்றத்தில் இருக்கும் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன். நாம் மீண்டும் நாட்டை ஒன்றிணைக்கவும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் வேண்டும் என்று அவர்களிடம் கோரினேன். நாடாளுமன்றத்தில் உள்ள தமிழ் கட்சி எம்.பிகளுடன் பேசினேன். அடுத்த வாரம் கட்சித் தலைவர்களை மீண்டும் சந்திக்க இருக்கிறேன். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை பற்றி பெப்ரவரி மாதம் வெளியிட வேண்டும். அந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கிறேன். அடுத்த வாரம் கட்சித் தலைவர்களை சந்திக்க இருக்கிறேன். இந்தப் பிரச்சினைகளை ஒதுக்கியோ காலங்கடத்தியோ தீர்க்க முடியாது. தீர்வு என்ன என்பதை நாடாளுமன்றத்திற்கும் நாட்டிற்கும் வெளியிட வேண்டும்.

காணமல் போனோர் விடயம்

உண்மையைக் கண்டறிய வேண்டும் பல பிரச்சினைகள் குறித்து ஏற்கெனவே ஆராய்ந்துள்ளோம். காணமல் போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் பேசியுள்ளோம். என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிய வேண்டும். அதே போன்று உண்மையை கண்டறியும் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவொன்றை உருவாக்க வேண்டும்.

இந்த ஆணைக்குழுவை அமைப்பது குறித்து மூன்று வாரங்களுக்கு முன்னர் இராணுவத்தின் கருத்தை வினவியிருந்தேன். உண்மையை கண்டறிவதை நாமும் விரும்புகிறோம், அதன் மூலம் தம் மீதான குற்றச்சாட்டுகளும் நீங்கும் என அவர்கள் தெரிவித்தார்கள். எனவே உண்மையை கண்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவொன்றை உருவாக்க எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அதே போன்று பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை கொண்டு வர இருக்கிறோம். வடக்கிற்கு எதிராக பயன்படுத்துவதற்காக இந்த சட்டத்தை கொண்டு வர தயாராவதாக சிலர் கூறுகின்றனர். நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவே இதனை அறிமுகம் செய்ய இருக்கிறோம். கடந்த வருடம் இதனை தெற்கிற்கு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.

காணி விடுவிப்பு

அடுத்து காணிப் பிரச்சினை காணப்படுகிறது. வன்னியில் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் தொடர்புள்ள காணிப் பிரச்சினை குறித்து ஆராய இருக்கிறோம். அத்தோடு யாழ்ப்பாணத்தில் மீள காணிகளை கையளிப்பது குறித்தும் ஆராயப்படும். யுத்த காலத்தில் இந்தப் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக படையினர் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். தற்பொழுது 3000 ஏக்கர் தான் எஞ்சியுள்ளது. அதிலும் மற்றொரு பகுதியை மீள வழங்க இராணுவம் விருப்பம் தெரிவித்துள்ளது. அது குறித்தும் ஆராயப்படும்.

யாழ் ஆயர் அவர்கள் கோரியது போன்று கத்தோலிக்க மற்றும் இந்து ஆலயங்களை மீள நிர்மாணிக்க இருக்கிறோம். 100 வருடங்களுக்கு மேலாக பூஜை வழிபாடுகள் நடைபெற்ற ஆலயங் கள் உள்ளன. புதிதாக ஆரம்பித்தவைக ளும் உள்ளன.

அடுத்து 13 ஆவது திருத்தத்தை முழு மையாக அமுல்படுத்த உத்தேசித்திருக்கிறோம். அது வடக்குடன் மட்டும் தொடர்புள்ள பிரச்சினையல்ல. தெற்கில் உள்ள முதலமைச்சர்களும் இதனை அமுல்படுத்துமாறு கோருகின்றனர். இதனை கலந்துரையாடி செயற்படுத்த இருக்கிறோம். இவற்றை எதிர்வரும் ஓரிரு வருடங்களில் கட்டம் கட்டமாக முன்னெடுப்போம். வறுமை, பட்டினி, தொழிலின்மை என் பன தமிழ், சிங்கள மக்களுக்கு மட்டுப்படவில்லை. அனைவரும் கஷ்டப்படுகின்றனர். அனைவரும் இணைந்து தான் கரைசேர வேண்டும்.

மலையக மக்களின் பிரச்சினை

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் மட்டுமன்றி மேலும் பல பிரச்சினைகள் குறித்தும் ஆராய வேண்டி இருக்கின்றன. மலையக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பிகளையும் நாடாளுமன்ற கட்சித் தலைவர்களையும் அழைத்து இரண்டாம் கட்ட பேச்சு நடத்த இருக்கிறோம். மலையக தமிழ் மக்களை எமது சமூகத்துக்குள் உள்வாங்கி ஏனைய மக்கள் அனுபவிக்கும் வசதி வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

நாட்டுக்கு அந்நியச் செலாவணியை பெற்றுத் தரும் அவர்களை ஒதுக்க முடியாது.

அதன் பின்னர் முஸ்லிம் எம்.பிகள் மற்றும் கட்சித் தலைவர்களை அழைத்து பேச இருக்கிறோம். முஸ்லிம் மக்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவர்களையும் அழைத்து பேச வேண்டியுள்ளது.

தமிழ் ,முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமன்றி சிங்கள மக்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. ஓரங்கட்டப்பட்ட கிராமங்கள் உள்ள்ன. அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. குலபேதம், வறுமை காரணமாக ஒதுக்கப்படும் நிலை உள்ளது. கிறிஸ்தவ மக்களுக்கு தமது பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் உள்ளது. அவை குறித்து ஆராய சமூக நீதிக்கான ஆணைக்குழு ஒன்றை உருவாக்க இருக் கிறோம். இந்தப் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து இலங்கையர் என்ற தனித்துவத்தை உறுதிப்படுத்துவோம். இவை அனைத்தையும் முன்னெடுக்க அனைவரும் ஒன்றுபடுவோம். – என்றார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், பாதூகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், குலசிங்கம் திலீபன், பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியு மான சாகல ரத்னாயக்க, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா, பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு படைகளின் பணிக்குழாம் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பு பிரதானிகள், ஜனாதிபதியின் வட மாகாணத்திற்கான மேலதிகச் செயலாளர் இளங்கோவன் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வடக்கில் மூன்று இடங்களில் நிலவிடுவிப்புக்கு ஜனாதிபதி பணிப்புரை

வலி. வடக்கில் 110 ஏக்கரும்,வடமராட்சி கிழக்கில் 4,360 ஏக்கரும், குறுந்தூர்மலையில் 354 ஏக்கரும் நிலத்தை உடன் விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றைய தினம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற வடக்கு மாகாணத்தில் உள்ள நிலம் தொடர்பான பிரச்சினைகள் பற்றிய கலந் துரையாடலின்போதே இவற்றை தெரிவித்தார். யாழ்ப்பாணம் வலி. வடக்கில் பலாலி வீதிக்கு கிழக்கேயும், மயிலிட்டி நிலம் தொடர்பிலும், வலி.வடக்கில் படையினர் நிலை கொண்டுள்ள நிலத்தில் விடுவிக்க சாத்தியமானவை என இனங்கண்ட இடங்களை விடுவிக்க வேண்டும் என கோரியபோது, 5 இடங்களில் 110 ஏக்கரை இந்த மாத இறுதிக்குள் விடுவிப்பார்கள் என படையினர் உத்தரவாதம் தெரிவித்தனர்.

அதில் பலாலி வடக்கில் 13 ஏக்கர், மயிலிட்டி வடக்கில் 18 ஏக்கர், கே.கே.எஸ. பிரிவில் 28 ஏக்கர், கீரிமலையில் 30 ஏக்கர், காங்கேசன்துறையில் 21 ஏக்கர் என 5 இடங்களிலுமாக 110 ஏக்கரை இம் மாத இறுதியில் விடுவிக்க இணக்கம் தெரி விக்கப்பட்டது. இதேநேரம் பலாலி வீதிக்கு கிழக்கே உள்ள 641 ஏக்கரையும் விடுவித்தால் அங்கே கட்டடங்கள் எழுந்தால் விமானங் கள் தரை இறக்க முடியாத நிலை ஏற்படும் என மறுப்புத் தெரிவித்தபோது, அவ்வாறானால் அங்கே உள்ள தோட்ட நிலங்களை உடன் விடுவியுங்கள், மக்கள் பொருளாதார நெருக்கடியில் தோட்டச் செய்கையை மேற்கொள்வர் என கோரினார். இதற்கான ஏற்பாட்டை மேற்கொள்வதாகப் பதிலளிக்கப்பட்டது.

வடமராட்சி கிழக்கு

இதேநேரம் வடமராட்சி கிழக்கில், நாகர் கோவில் கிழக்கில் வன ஜீவராசிகள் திணைக்களம் பிடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்ட 19 ஆயிரத்து 368 ஏக்கரில், 4 ஆயிரத்து 360 ஏக்கருக்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற நடவடிக்கை வேண்டும், அது மக்களின் உறுதிக் காணிகள், யுத்த காலத்தில் அப் பகுதியில் படையினருக்கும் புலிகளிற்கும் இடையில் நீண்ட காலம் போர் இடம் பெற்றபோது மக்கள் அங்கே செல்லாத காரணத்தால் பற்றைகள் வளர, அதனைக் காடு எனக் கருதி, வன ஜீவராசிகள் திணைக்களம் தனக்குரியது என வர்த்தமானி அறிவித்தல் பிரசுரித்துள்ளது என சுட்டிக் காட்டப்பட்டது. இதற்கு பதிலளித்த வன ஜீவராசிகள் அமைச்சின் செயலாளர் அவ்வாறானால் அதனைப் பரிசீலிக்கலாம் எனக் கூறிய போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு, அந்த இடம் எனக்குத் தெரியும், அப் பகுதியில் எந்தக் காடும் இருக்கவில்லை, அதனால் அப் பகுதியை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பணிப்புரை விடுத்தார்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் குறூந்தூர்மலை பகுதியில் உள்ள 341 ஏக்கரில் 6 ஏக்கர் தவிர்ந்த ஏனைய வற்றை மக்களிடம் வழங்க (ஜனாதிபதி ) நீங்கள் கூறியும் அதிகாரிகள் இதுவரை வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. அந்த நிலங்களில் தொல்லியல் திணைக்களம் நாட்டிய எல்லைக் கல்லை அகற்றி விட்டுத்தரவில்லை என மாவட்ட அரச அதிபர் பதிலளித்தபோது, அந்த இடத்தை மாவட்ட அரச அதிபரே உடன் விடுவிக்க வேண்டும், தொல்லியல்த் திணைக்களத்திற்கு ஏதும் பிரச்சினை என்றால் என்னுடன் பேசுமாறு தொல்லியல் திணைக்களத்திற்குப் பதிலளியுங்கள் என ஜனாதிபதி உத்தரவிட்டார் என அறிய வந்தது.