நீதிமன்ற கட்டளையை மீறி முற்றுப் பெற்றுள்ள குருந்தூர்மலை பௌத்த கட்டுமானம்

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு அமைந்துள்ள குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இங்கு மேற்கொள்ளப்படும் பௌத்த கட்டுமானங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனவும் 12/06/2022 அன்றைய நாளில் கட்டுமானம் எந்த நிலையில் காணப்பட்டதோ அதே நிலையை தொடர்ந்து பேணுமாறும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளையை ஆகியிருந்தது.

இருந்த போதிலும் இந்த கட்டளையை மீறியும் தொடர்ந்து கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அந்த கட்டளையையும் மீறி அங்கு கட்டுமான பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அது தொடர்பில் குருந்தூர்மலை ஆதி ஐயனார் ஆலயத்தினரும் அரசியல் பிரதிநிதிகளும் குருந்தூர் மலை பகுதியில் கடந்த 2022/09/20 அன்று போராட்டம் செய்திருந்தனர்.

அதன் தொடர்சியாக 21/09/2022 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு வேறு சில B அறிக்கைகள் தாக்கல் செய்யப்ட்டிருந்ததோடு ஆதி அய்யனார் ஆலயம் சார்பில் சட்டதரணிகளால் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

இந்த கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறுவது தொடர்பில் முல்லைத்தீவு பொலீசில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான கட்டளைகாக கடந்த வருடம் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி மீண்டும் ஒரு கட்டளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் வழங்கியிருந்தது.

அதாவது கடந்த 19.07.22 அன்று ஏற்கனவே வழங்கிய நீதிமன்ற கட்டளையை அவமதித்து யாராவது புதிதாக கட்டங்களை அல்லது மேம்படுத்தல்கள்களை குருந்தூர்மலையில் அமைத்தால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதமுடியும் என்றும் அவ்வாறு சம்பவங்கள் இடம்பெற்றால் அது தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளைகளை வழங்கியுள்ளது.

இந்த கட்டளை வழங்கப்படும்போது பூரணமடையாத நிலையில் காணப்பட்ட குருந்தூர்மலை விகாரை கட்டுமானம் தொடர்சியாக கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு தற்போது பூர்த்தியாக்கப்பட்டுள்ளதை இன்றையதினம் (23) குருந்தூர்மலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவநேசன் ஆகியோர் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இவர்கள் குருந்தூர்மலைக்கு சென்ற வேளை அங்கு தொடர்சியாக பௌத்த கட்டுமானம் வேலைகள் இன்று கூட இடம்பெற்றுள்ளதற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளது, இரவு நேரத்தில் இந்த கட்டுமானங்கள் தொடர்சியாக இடம்பெற்றுள்ளதை அவதானிக்கும் வகையில் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டுள்ள அடையாளங்கள் காணப்பட்டுள்ளது.

இவ்வாறான கடுமானங்கள் இடம்பெறும் நேரத்தில் 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பும் அப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.

– ஒளிப்படங்கள் – கே .குமணன்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிரபாகரனை நிறுத்த வேண்டுமென சம்பந்தன்,சுமந்திரன் கோரிக்கை- சபா.குகதாஸ்

2019 ஆம் ஆண்டு ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது சுமந்திரன் சம்பந்தன் உள்ளிட்ட தரப்புகள் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட புலிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டுமென தெரிவித்திருந்தாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென கோரிய தரப்புக்கள் இன்று தலைவர் காட்டிய சின்னம் வீடு என்று கூறுவதற்கு எந்த தகுதியும் இல்லை என்றும் சபா.குகதாஸ் குறிப்பிடுகின்றார்.

முல்லைத்தீவில் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான தமிழரசுக்கட்சிய்ன வேட்புமனுத்தாக்கல் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தராசு சின்னத்தில் தமிழரசு கட்சியின் வேட்பாளரை போட்டியிட வைப்பதற்கு சுமந்திரன் எடுத்த முயற்சி தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக கோடான கோடி விலை கொடுத்த மண்ணில் நின்று கொண்டு தலைவர் காட்டிய சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டுமென கோருவதற்கு என்ன தகுதி உண்டு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதி யுத்தம் நடக்கின்ற போது பாதுகாப்பாக வெளிநாட்டில் இருந்த பின்னர் மீண்டும் யுத்தம் நிறைவடைந்ததும் நாட்டிற்கு வந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் வேட்பாளராக இருந்த சாணக்கியன் தலைவர் காட்டிய சின்னம் என சொல்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழரசு கட்சி இவ்வளவு கீழ் நிலைக்கு சென்றுவிட்டதாக என்ற கேள்வி எழுவதாகவும் சபா.குகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

தராசு சின்னத்தில் வேட்பார்களை அறிமுகப்படுத்தியுள்ள தமிழரசு கட்சி தலைகாட்டிய சின்னம் தராசு என்று கூறியதாக அவர் குறிப்பிட்டார். தராசு சின்னம் தலைவர் காட்டிய சின்னம் என சாணக்கியன் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

ஜனாதிபதி கூறியது அப்பட்டமான பொய் – முஜிபுர் ரஹ்மான்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இன்றைய (23) பாராளுமன்ற உரை ஒரு ஜோக்காக இருந்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

தான் தொடர்பாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் கூறியது தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதலளிக்கும் விதமாகவே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாமென தனக்கு ஒருபோதும் குறுஞ்செய்தி (SMS) அனுப்பவில்லை எனவும் ஜனாதிபதி மக்கள் அவதானங்களை திசை திருப்பும் விதமாக இல்லாத விடயத்தை சோடித்து கூறுவதாகவும், உயரிய சபையில் இவ்வாறு கருத்துத் தெரிவிப்பது அநுபவமும் முதிர்ச்சியும் மிக்க அரசியல் தலைவருக்குரிய பக்குவம் வாய்ந்த நடத்தையாக அமையாது.

ஜனநாயகம், லிபரல்வாதம் பற்றி பரப்புரை நடத்தும் ஜனாதிபதியின் அரசியல் போக்கு தற்போது மாறியிருப்பதை இன்றைய பாராளுமன்ற நடத்தை நன்றாக புலனானது.

உண்மையான ஜனநாயகவாதியாக இருந்தால் மக்கள் இறையாண்மை, மக்கள் ஆணை, தேச நலனை கருத்திற் கொண்டு மக்களுக்காகவும் நாட்டுக்காகவுமே சிந்தித்து தமது அரசியல் நடந்தையை ஒழுங்கமைத்திருக்க வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க ஒருமுறை பாராளுமன்றத்தில் வைத்து என்னுடன் கதைத்தார். அதற்கு முன்னதாக அநுர குமாரவுடன் உரையாடிக் கொண்டிருந்ததை அவதானித்தேன். எனக்கு அமைச்சுப் பதவியை ஏற்குமாறு 2 முறை வேறுவேறு ஆட்களை அனுப்பி அழைப்பு விடுத்தார். எனக்கு என்ன வேண்டுமென்றும் அவரால் அனுப்பி வைக்கப்பட்ட பிரதிநிதிகள் என்னிடம் கேட்டார்கள்.

இதை தான்டிய ஒரு பேச்சோ அல்லது தகவல் பரிமாற்றமே எமக்குள் இடம் பெறவில்லை. இருந்தபோதும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாமென்று, அல்லது அவரது பிரதிநிதிகள் மூலமோ அவ்வாறான குறுச்செய்தி SMS ஒன்றை ஜனாதிபதி ரணில் எனக்கு அனுப்பவில்லை.

அவர் அப்படி ஒரு SMS எனக்கு அனுப்பியதாக கூறுவது அப்பட்டமான பொய்யாகும். எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சட்ட ரீதியாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது – தேர்தல் ஆணைக்குழு தலைவர்

அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்திற்கு அமைய சட்ட ரீதியாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினதும் இணக்கப்பாட்டுடன் தான் தேர்தல் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி வழங்கப்படாத பின்புலத்தில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (24) கூடவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் கூறியுள்ளார்.

நாட்டின் தேசிய தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும், தேர்தலை நடத்த நிதி இல்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா  இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் தேர்தல் தொடர்பான தீர்மானம் நியாயமற்றது – இலங்கை திருச்சபை அறிக்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியுதவியை நிறுத்தும் அரசாங்கத்தின் தீர்மானம் நியாயமற்றது எனவும் தன்னிச்சையானது எனவும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இலங்கை திருச்சபை அறிக்கை ஒன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளது.

சில தினங்களுக்கு  முன்னர் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொழுதுபோக்கு காரியங்களை நடத்திய அரசுக்கு தேர்தல் நிதியை நிறுத்த  எந்த தார்மீக உரிமையும் இல்லை என இலங்கை திருச்சபையின் தலைமை பேராயர் துஷாந்த ரொட்ரிகோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளின் கடன்களை மீள செலுத்த தவறிய பிறகும், தேர்தலுக்கு நிதியளிக்க முடியவில்லை என்று கூறும் எந்தவொரு அரசாங்கமும் பதவியில் நீடிக்க சட்டப்பூர்வமான அதிகாரம் இல்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசந்த முதலிகே உள்ளிட்ட 57 பேர் கைது

கல்வி அமைச்சிற்குள் நுழைந்த ஹோமாகம – பிட்டிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட 57 பேர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிட்டிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட மாணவர் செயற்பாட்டளர்கள் இன்று மதியம் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்ததுடன், சற்று நேரத்தில் கல்வி அமைச்சிற்குள் நுழைந்து எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி சிறிது நேரத்தின் பின்னரே பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் கல்வி அமைச்சிற்குள் பிரவேசித்து ஆர்ப்பாட்டக்காரர்களை வௌியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது, எதிர்ப்பில் ஈடுபட்ட பிக்கு மாணவர் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 48 பிக்கு மாணவர்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேர்தலை நடத்த நிதி இல்லை : திகதி அறிவிப்பு சட்டவிரோதமானது (ஜனாதிபதியின் பாராளுமன்ற உரை)

அரசாங்கம் தேர்தலை ஒத்திவைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திய போதிலும், தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கான உரிய திகதியை இதுவரை சட்டபூர்வமாக அறிவிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்ற விவாதத்தில் இன்று (23) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

அரசியலுக்கு அன்றி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கே தான் முன்னுரிமை வழங்குவதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாவிட்டால் நாடொன்று எஞ்சாது எனவும் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் இன்று வாக்கெடுப்பொன்றை கோரியுள்ளனர். பொதுவாக இவ்வாறு வாக்கெடுப்பு கோருவதில்லை. மின்சக்தி என்பது அத்தியாவசிய சேவை. ஏன் இதனை எதிர்க்கிறார்கள்? ஏன் இந்த சேவைகளை எதிர்க்கிறார்கள். தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதை எதிர்க்கட்சி எதிர்க்கிறதா? இதுகுறித்து விவாதம் தேவையெனில் அதனை வழங்க முடியும். ஆனால், அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் விவாதம் கோரவில்லை. தேர்தலை ஒத்திவைப்பதாகக் கூறியே விவாதம் கேட்டிருந்தனர். தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை. ஒத்திவைப்பதற்கு தேர்தல் ஒன்று இல்லை.

பொதுவாக இந்த விவாதத்தில் கலந்துகொள்வதில்லை என்று நான் அறிவித்திருந்தேன். ஏனென்றால் எனக்கு அரசியல் தேவையில்லையென்று நான் கூறியிருந்தேன்.

எனினும், தேர்தல் ஆணைக்குழுவும் இன்று நீதிமன்றத்திற்கு சென்று, தேர்தல் ஒன்றை நடத்த முடியாது என்று கூறுகிறது. எனினும், சத்தியக் கடதாசியொன்று வழங்கியிருப்பதால் இதுகுறித்து பேச நினைத்தேன். அப்படியில்லையெனில், எனக்கு கீழுள்ள நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பாரிய அநீதி ஏற்படும்.

தேர்தலை நடத்துவதற்கான நிதியை வழங்க முடியாதிருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு திறைசேரியின் செயலாளர் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உண்மையில்லை.

முதலில் இந்த நாட்டின் பொருளாதார நிலைமையையும், தேர்தல் ஒன்றை நடத்த பணம் இல்லை என்பதையும் அதேபோல் இது பொருளாதாரத்திற்கு உகந்தல்ல என்றும், உறுப்பினர் எண்ணிக்கை 5,000இற்கு குறைந்தபின்னர் தேர்தலை நடத்துமாறும் கடந்த டிசம்பர் 14ஆம் திகதி, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு நான் அறிவித்திருந்தேன். நானே அவர்களுக்கு முதலில் இதுபற்றி அறிவித்தேன். இதுகுறித்து நான் விளக்கமளித்திருந்தேன். இது சாதாரண ஆணைக்குழு அல்ல.

21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை இந்த பாராளுமன்றமே நிறைவேற்றியது. இந்த 21ஆவது திருத்தத்தைப் பார்த்தால், இடைக்கால விதிமுறைகளின் மூன்றாவது பிரிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருத்தம் நடைமுறைக்கு வரும் தினம் முதல் குறித்த ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர் பதவி வகிக்கும் அனைவரினதும் பதவிகள் இடைநிறுத்தப்படுகிறது.

இந்தத் திருத்தத்தில் நீங்கள் கையெழுத்திடப்பட்ட தினம் முதல் அந்தப் பதவிகள் உடனடியாகவே இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதாவது ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது. இது சாதாரண ஆணைக்குழு அல்ல. எவ்வாறாயினும், இந்த திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தும் திகதிக்கு முன்னர் ஏதாவது ஆணைக்குழுவின் தலைவர் அல்லது உறுப்பினர் பதவி வகிக்கும் ஒருவருக்கு, குறித்த ஆணைக்குழு, அரசியலமைப்பின் ( vii) பிரிவின்படி ஸ்தாபிக்கப்பட்டுள்ள திகதி வரை தமது குறித்த பதவிகளின் அதிகாரங்களையும், பணிகளையும் தொடர்ந்து முன்னெடுக்க முடியும்.

எனவே, தற்காலிக ஆணைக்குழுவொன்றே இருக்கிறது. இந்த தற்காலிக ஆணைக்குழு, விசேடமாக அரசியலமைப்பின்படி பாராளுமன்றத்திற்கே பொறுப்பு கூறுகிறது. வேறு யாருக்கும் பொறுப்புக்கூறத் தேவையில்லை. எனவே, உங்களுடனும் பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி , இந்த ஆணைக்குழு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதைத் தீர்மானிக்க வேண்டும். எனினும், நான் அறிந்தவரையில், அப்படி எதுவும் நடக்கவில்லை. இது முதலாவது தவறு.

ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நான் தனியாக சந்தித்தபோது, தற்போதுள்ள நிலை குறித்து நான் அவர்களுக்கு அறிவித்துள்ளேன். ஜனாதிபதி என்ற வகையில் நான் அவர்களுக்கு அறிவித்துள்ளேன். செயலாளர் மீது குற்றஞ்சுமத்தத் தேவையில்லை ஜனாதபதி என்ற வகையில் நான் தேவையானவற்றை அறிவித்தேன்.

அதன்பின்னர், ஜனவரி 5ஆம் திகதி மாலை 3 மணிக்கு, நானும், பிரதமரும், சட்டமா அதிபரும், இவர்களைச் சந்தித்தோம். தேர்தலை ஒத்திவைப்பதற்காக நாம் இவர்களைச் சந்திக்கவில்லை. அந்த சமயம் ஆணைக்குழுவில் பிளவு ஏற்பட்டிருந்தது. டிசம்பர் 23ஆம் திகதி தேர்தலை நடத்த தீர்மானித்ததாக அவர்கள் கூறினார்கள். எனினும், வேட்பு மனுவை ஏற்பதற்கான திகதியைத் தீர்மானித்திருக்கவில்லை என்று இரண்டு உறுப்பினர்கள் கூறினார்கள். திகதியைத் தீர்மானித்ததாக ஒருவர் கூறினார். ஒருவர் இரண்டு பக்கமும் கதைத்தார். ஐந்தாவது உறுப்பினர் கண்டி ஆஸ்பத்திரியில் இருந்தார். இதனால், கூட்டங்களின் அறிக்கைகளைத் தருமாறு சட்டமா அதிபர் கோரியிருந்தார். அறிக்கைகள் இல்லை என்று அவர்கள் கூறினார்கள்.

எனவே, நீங்கள் அனைவரும் ஒரு நிலைப்பாட்டிற்கு வந்தால், எவ்வாறு செயல்படுவது என்பதைக் கூற முடியும் என்று சட்டமா அதிபர் அறிவித்தார். இதுகுறித்து ஒன்றுகூடிக் கலந்துரையாடி திகதியொன்றை தீர்மானிக்குமாறு அவர் கூறினார். எனினும், அவர்கள் சாலிய பீரிஸ் சட்டத்தரணியை வைத்துக் கொண்டு பணிகளை முன்னெடுத்தனர். சாலிய பீரிஸ், அரசியலுடன் தொடர்புபட்ட சட்டத்தரணி என்றும் அவரை எவ்வாறு பயன்படுத்த முடியும் என ஆளும் தரப்பினர் என்னிடம் வினவினார்கள். அரசியலுடன் தொடர்புபடாத சட்டத்தரணியொருவரை நியமிக்குமாறு கூறினார்கள். அல்லது சட்டமா அதிபரை வழங்குமாறு கோரினார்கள்.

இந்த நிலைமையில் சட்டமா அதிபரை ஈடுபடுத்துவது சிரமம் என்று கூறியிருந்தேன். இந்தச் சூழ்நிலையில், நான் தலையிடப் போவதில்லை என்று கூறினேன். சட்டத்தரணியொருவரை பணியமர்த்துவதாயின், எந்தவொரு கட்சியுடனும் தொடர்புபடாத சட்டத்தரணியொருவரை தெரிவு செய்ய வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

எவ்வாறாயினும், இதன்பின்னர் இதுகுறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தை தயாரிக்கும்போதே தேர்தலுக்கு 10 பில்லியன் கோரி மதிப்பீட்டறிக்கையை வழங்கியிருந்தார்கள். எனினும், 9ஆம் திகதி பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்கள். 06 பில்லியன் ரூபா முற்பணம் கோரி இந்தக் கடிதம் அனுப்பப்பட்டது.

ஆரம்பத்தில் 10 பில்லியன் ரூபா தேவையெனக் கூறினார்கள். பண வீக்கம் உள்ள நிலையில் 5 பில்லியன் ரூபா தேவை என்று கேட்டுள்ளனர். எனவே, இந்த மதிப்பீட்டறிக்கையை குறித்து அமைச்சு மீண்டும் ஆராய்ந்துள்ளது. பொலிஸார் அதிகமாக கோருகின்றனர்.

10 பில்லியன் ரூபா செலவு உள்ள இடத்தில் 5 பில்லியன் ரூபாவில் தேர்தலை நடத்த முடியும் என்று ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் கூறுகிறார். எரிபொருள் விலை உள்ளிட்ட அனைத்தும் அதிகரித்துள்ளதால் ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை இன்னும் அதிகமாக தேவை என்று பொலிஸார் கூறுகின்றனர். ஏனைய திணைக்களங்கள் முழுமையான மதிப்பீட்டறிக்கையை அனுப்பவில்லை. ஏனைய திணைக்களங்களின் மதிப்பீட்டறிக்கைகள் குறித்து தாம் அறிவிக்கமாட்டோம் என்று இரண்டாவது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர். ஒவ்வொரு திணைக்களத்தில் இருந்தும் ஒவ்வொரு மதிப்பீடுகளை எங்களுக்கு அனுப்புகின்றனர். பணம் இல்லாத நிலையிலும், ஏற்கெனவே தேர்தலுக்காகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால், தேர்தல் ஆணைக்குழு இந்த அடிப்படை பிரச்சினையை சீர் செய்ய வேண்டும். இவற்றுக்கு நிதியமைச்சு பதலளிக்க வேண்டிய தேவை இல்லை. அரசியலமைப்பின் பிரகாரம் , ஆணைக்குழுவின் பணிகளும், அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவினால், ஆணைக்குழுவின் தலைவருக்கோ, ஆணைக்குழுவின் வேறொரு அதிகாரிக்கோ வழங்க முடியும். ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கமைய, அதன் கட்டுப்பாட்டின் கீழ், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அல்லது வேறொரு அதிகாரியினால் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். 104 e6 பிரிவில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஆணைக்குழுவின் கடித்தின் எந்த இடத்திலும் 104 e6 பிரிவு தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. எனினும், ஆணையாளர் தேர்தல் ஆணைக்குழுவினால் இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இந்தக் கடிதத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை . ஆனால் 09.01.2023ஆம் திகதி மற்றும் ஜனவரி 26 ஆம் திகதிகளில் தேர்தலின் முதற்கட்டப் பணிகளுக்காக, முற்பணம் வழங்குமாறு கோரியுள்ள போதிலும், அந்த முற்பணம் இதுவரை கிடைக்கவில்லை என்று தேர்தல் ஆணையாளர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். இந்த முற்பணம் வழங்கியிருந்தால், குறித்த அதிகாரிக்கு எதிராக எமக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்தக் கடிதத்தில் கணக்காளருக்கு ஆணைக்குழுவினால் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை. தனக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கடிதத்தில் கூட அவர் குறிப்பிட்டிருக்கவில்லை. இதனை வழங்கியிருந்தால், அடிப்படை உரிமையை மீறியதாக பணிப்பாளர் நாயகத்திற்கு எதிராக எவருக்கு வேண்டுமானாலும் நீதிமன்றம் சென்றிருக்க முடியும். இதன்பின்னர் அரச சேவை ஆணைக்குழு ஊடாக அவருக்கு தண்டனை வழங்கி, அவரை பணி நீக்கம் செய்திருக்க முடியும்.

இதன்பின்னர், தலைவர் பெப்ரவரி 3ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பியுள்ளார். இந்தக் கடிதத்திலும், தனக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிடவில்லை. தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் என்று எந்தவொரு கடிதத்திலும் குறிப்பிடவில்லை.

பெப்ரவரி 10ஆம் திகதி அறிவித்தவாறு தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதிராக இரண்டு அரசியல் கட்சிகளினால் SEFR 062022 SEFR 072022 ஆகிய இலக்கங்களைக் கொண்ட இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, தேர்தல் ஆணைக்குழுவினால் தற்போது உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான சட்டபூர்வமான பணிகளை முன்னெடுத்துள்ளதால், இதனை நிராகரித்து, தேர்தல் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் , அப்படியானதொரு தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கவில்லை.

“ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, 2023 ஜனவரி 18ஆம் திகதி வெளியிடப்பட்ட குறிப்பு தொடர்பில் தெரிவித்தார். அந்த குறிப்பிற்கு அமைய உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச்சட்டத்திற்கு அமைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக 01 முதல் 05 வரையான பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

அதனால் மென்டமூஸ் உத்தரவொன்று தேவையில்லை என மனுதாரர் தரப்பினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மெண்டமூஸ் உத்தரவொன்று தேவையில்லையென்றால் நீதிமன்றத்தினால் வழங்குவதற்கு தீர்ப்பெதுவும் கிடையாது.

07 ஆவது பிரதிவாதியான பிரதமரிடம் எந்த நிவாரணமும் கோரப்படவில்லை என அவர் சார்பாக ஆஜரான நெரீன் புள்ளே நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு எந்தப் பிணைப்பும் கிடையாது.

அரசாங்கத்திற்கு எதிராக தீர்ப்பொன்றை வழங்குமாறு கோரியிருக்கலாம். இதில் எதனையும் மனுதாரர்கள் கோரவில்லை. இதன்படி எந்தவொரு அதிகாரியையும் குறைகூற முடியாது. இறுதியாக தேர்தல் குறித்து பிரச்சினை இருந்தது. நாம் அறிந்த வகையில் இதுவரையில் தேர்தல் திகதியொன்று அறிவிக்கப்படவில்லை. சட்டபூர்வமான தேர்தல் திகதியொன்று அறிவிக்கப்படவில்லை. சிலர் மார்ச் 9ஆம் திகதி குறித்து பேசுகின்றனர். ஆனால் 9ஆம் திகதி குறித்து எனக்கு எதனையும் கூறமுடியாது. நான் அறிந்தவகையில் 9ஆம் திகதி தேர்தல் நடத்துவதற்கான சட்டபூர்வமான தீர்மானம் எதுவும் இல்லை.

104 ஆவது சரத்தின் பிரகாரம் ஆணைக்குழுவின் கூட்டத்திற்கு கோரத்திற்கு 3 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஜனவரி 22ஆம் திகதி சண்டே ரைம்ஸ் பத்திகையில் செய்தியொன்று வெளியாகியது. தேர்தல் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் கடந்த இரவு சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து கொண்ட கூட்டமொன்று நடந்ததாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

ஐந்தாவது உறுப்பினர் எம்.எம். மொஹமட் தேர்தல் ஆணைக்குழு அலுவலத்தில் இருந்து இந்தக் கூட்டத்தில் பங்கெடுத்துள்ளார். எனவே, ஆணைக்குழுவின் தலைவரும், உறுப்பினர் எம்.எம். மொஹமட்டும் இணைந்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர். அதன்பின்னர், இதற்கான அனுமதியை ஏனையவர்களிடம் பெற்றுக்கொண்டதாக தலைவரே கூறியுள்ளார். இவர்கள் இருவருமே தீர்மானம் எடுத்துள்ளனர். எனவே, ஏனைய மூன்று உறுப்பினர்களிடம் கேட்டால், அவர்கள் வேறொரு நிலைப்பாட்டில் உள்ளனர். இதற்கான சாட்சியங்களும் என்னிடம் இருக்கிறது.

இதன்படி, உத்தியோகபூர்வமாக தேர்தல் நடத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்படவில்லை. இதற்கு பணம் வழங்கினால், செயலாளரை பணி நீக்கம் செய்து, அவருக்கெதிராக வழக்கு தொடருமாறு பொலிஸாருக்கு கூற நேரிடும். இதே நிலைமையே அச்சக திணைக்களத் தலைவருக்கும் நடக்கும். இவர்கள் தமது தொழில்களை இழப்பார்கள். இவர்களை குறைகூற முடியாது.

இவர்கள் அரச அதிகாரிகள். உண்மையில் நாட்டில் பொருளாதார நிலைமையொன்று இருக்கிறது. உண்மையில் எங்களிடம் பணம் இல்லை. அத்துடன் தேர்தலை நிறுத்தத் தேவையும் இல்லை. அவர்களின் பணிகளை அவர்களுக்கு முன்னெடுக்க முடியும். இதுகுறித்து அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான தீர்வை காண முடியும். எனினும், தற்போது பணம் இல்லை. இது அனைவருக்கும் தெரியும். ஆனால், தற்போது தேர்தல் ஒன்றும் இல்லை. தேர்தலை நடத்த பணம் இல்லை. பணம் இருந்தாலும் தேர்தல் ஒன்றும் இல்லை.

இந்த ஆணைக்குழு பாராளுமன்றத்திற்கே பொறுப்புகூற வேண்டும். தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தத் தெரிவுக்குழுவை நியமித்து, இந்தத் தகவல்களை சேகரித்து அறிக்கையொன்றைத் தயாரித்து உயர் நீதிமன்றத்திற்கு அந்த அறிக்கையை அனுப்ப வேண்டும்.

நிதி குறித்த அதிகாரம் எங்களுக்கே இருக்கிறது. மெக்னா கார்ட்டா தொடக்கம் 1688 புரட்சி காலம் முதலே அனைத்து அதிகாரங்களும் பாராளுமன்றத்திற்கே இருக்கிறது. நான்காவது சரத்தின் கீழ், இந்த அதிகாரம் பாராளுமன்றத்திற்கே இருக்கிறது. எனவே, இதுகுறித்து பரிசீலித்து, அறிக்கை சமர்ப்பித்து உயர் நீதிமன்றத்திற்கு இதனை அனுப்பிவையுங்கள்.

வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கிய நிதி அனைத்தையும் ஒரேதடவையில் வழங்க முடியாது. குறித்த திகதியில் வழங்குமாறு எங்கும் குறிப்பிடப்படவில்லை. வருட இறுதிக்குள் அவற்றை செலவிடவேண்டும். செலவிட முடியாவிட்டால் திருப்பி அனுப்ப வேண்டும். வருமானம் வருமாக இருந்தால் செலவிடலாம்.

4 டிரில்லியன் வரவேண்டிய நிலையில் ஒரு டிரில்லியன் தான் வருமானம் கிடைப்பதாக இருந்தால் நான் ஒரு டிரில்லியன் தான் என்னால் செலவிட முடியும். மத்திய வங்கிக்கு அறிவித்து பணம் அச்சிடுவதாக இருந்தால் அது குறித்து பாராளுமன்றத்திடம் வினவ வேண்டும். ஆனால் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் பிரகாரம் பணம் அச்சிட முடியாது.

சுற்றுநிருபத்தின் மூலம் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா என்று கேட்கின்றனர். அப்படி செய்ய முடியாது. ஆனால் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டால் மட்டுமே எதையாவது செய்ய முடியும். உத்தியோகபூர்வமாக மூன்று பேர் தீர்மானிக்க வேண்டிய இடத்தில் இருவர் மட்டுமே இருந்துள்ளனர்.

எனவே, எப்படி தேர்தலை நடத்த முடியும். இந்த அதிகாரிகள் பொறுப்புகூற வேண்டும். முதலில் தேர்தலை அறிவிக்க வேண்டும். நாம் சட்டத்தின்படியே பணியாற்றியுள்ளோம். நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் அனைத்து தேர்தல்களையும் உரிய நேரத்தில் நடத்துவோம்.

கடன் குறித்து பாரிஸ் மாநாட்டுடனும் , இந்தியாவுடனும், சீனாவுடனும் பேசி இணக்கப்பாட்டிற்கு வந்து, ஐ.எம்.எப். இடமிருந்து முடிவொன்றைப் பெறும் வரையில் இந்தப் பணத்தில் கைவைப்பதில்லை என்று தீர்மானித்துள்ளோம்.

நான் பொருளாதாரத்திற்கே முன்னுரிமை வழங்குகிறேன். இதனை சீர்செய்யவில்லையெனில், நாடொன்று எஞ்சாது. நாட்டை இழந்து, அரசியலமைப்பைப் பாதுகாக்க முடியுமா என்று கேட்க விரும்புகிறேன். நாட்டைப் பாதுகாத்தால் மட்டுமே அரசியலமைப்பைப் பாதுகாக்க முடியும். ஜனாதிபதியின் முதல்கடமை நாட்டைப் பாதுகாப்பதாகும்.

பொருளாதார நெருக்கடிக்கு யார் பொறுப்புக் கூற வேண்டும் என்பது தொடர்பில் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பது தொடர்பான பிரேரணையை மார்ச் 3 ஆவது வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதமருக்கு அறிவித்துள்ளேன். ஆளும் தரப்பு அதனை ஆதரிக்கும். தேர்தல் ஆணைக்குழுவை மாற்றுமாறும் எதிரணி கோரியது. அதனை ஏற்கிறோம். அடுத்த வாரம் அதனை நிறைவேற்றுவோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மின்கட்டணம் உயர்த்தப்பட்டது பொறியியலாளர்களிற்கு போனஸ் வழங்க அல்ல!

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது பொறியியலாளர்களுக்கு போனஸ் வழங்குவதற்காக அல்ல என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்திலும் மேலதிக நேர கொடுப்பனவுகள் குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஓராண்டாக நிலவிய மின்வெட்டு நிறுத்தப்பட்டது. எங்களுக்கு கூடுதல் பணம் மானியமாக வழங்கப்படவில்லை. செலவுக்கு ஏற்ற வருமானம் கிடைக்க வேண்டும். கட்டண திருத்தத்திற்குப் பிறகு, நாங்கள் கடன் வாங்க முடிந்தது. முக்கிய வங்கிகள் தேவையான நிதியை வழங்கின. அதன்படி, கொஞ்சம் எரிபொருள் வாங்கப்பட்டது. இந்த நாட்டில் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படக்கூடாது என சிலர் விரும்புகின்றனர்.

பொறியாளர்கள் சங்கம் போனஸ் கேட்கிறது. மேலதிக நேர கொடுப்பனவுகளை கேட்கின்றனர்.அது கிடைக்காத போது வீதியில் இறங்கி விடுவதாக கூறுகின்றனர். மின் கட்டணத்தை உயர்த்தியது போனஸ் அல்லது சலுகைகள் வழங்க அல்ல. எங்கள் செலவுகளை ஈடுகட்டவே கட்டணம் உயர்த்தப்பட்டது. மின்சாரசபையின் நஷ்டத்தை மக்கள் மீது சுமத்த முடியாது என்றார்.

தல்செவன விடுதி அமைந்துள்ள திருகோண சத்திர காணியை மீட்டுத் தர சஜித்திடம் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் “தல்செவன” விடுதி அமைந்துள்ள 200 வருடங்கள் பழமை வாய்ந்த “திருகோண சத்திரம்” எனும் சிவபூமி அறக்கட்டளைக்கு சொந்தமான காணியினை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரிடம் அகில இலங்கை இந்து மா மன்றத்தின் உப தலைவரும் , சிவபூமி அறக்கட்டளை தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பின்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தான் எதிர்க்கட்சி தலைவரிடம் அவ்வாறு கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், சந்திப்பின் போது , எதிர்க்கட்சி தலைவரிடம் கீரிமலை காங்கேசன் துறை வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இருக்கின்ற கோயில்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அதை விடுவிக்கின்ற முயற்சியினை முன்னெடுக்க வேண்டும்.

அதேபோல் தல்செவன விடுதிக்கென பயன்படுத்தப்படுகின்ற 200 வருடம் பழமை வாய்ந்த திருகோணசத்திரம் என்கின்ற சிவ பூமி அறக்கட்டளைக்குரிய அந்த நிலத்தினை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

அத்துடன் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி, மற்றும் இராமநாதன் இந்து கல்லூரி ஆகிய இரண்டு பாடசாலைகளும் பேருந்து இல்லாமல் இருக்கின்றார்கள் அவர்களுக்கு பேருந்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

அதற்கு பேருந்தை வழங்க முடியும். அதனை பரிசீலித்து விரைவில் வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

மேலும் வீட்டுத்திட்டத்தை உங்களுடைய தந்தையார் பிரேமதாசா அவர்கள் ஆரம்பித்து வைத்தார். அது ஒரு நல்ல பணி இருநூறு வருடமாக மலையகத் தமிழர்கள் இன்னும் அடிமையாக வீடு வாசல் இல்லாது இருக்கின்றார்கள் அவர்களுக்கும் நன்றியோடு வீட்டு திட்டம் வழங்குகின்ற முயற்சியில் தாங்கள் ஈடுபட வேண்டும் எனவும் நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம்” என தெரிவித்தார்.

நல்லை ஆதீன குருமுதல்வர், யாழ். மறைமாவட்ட ஆயரை சந்தித்தார் சஜித்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லை ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர ஞானதேசிக பரமாச்சார்ய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

நல்லூரில் உள்ள நல்லை ஆதீனத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.

சந்திப்பின் போது செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளருமான உமாச்சந்திரா பிரகாஷ், யாழ் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அமைப்பாளர் விஜய்காந்த், யாழ் மவட்ட அமைப்பாளர் கு.மதன்ராஜ், தொகுதி அமைப்பாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

காலை 9 மணியளவில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தினை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ள நிலையில் அவர் பல்வேறு நிகழ்சிகளிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளவுள்ளார்.