தமிழ் மக்களுக்கான சமஷ்டித்தீர்வை வலியுறுத்தி திருமலையில் ஆர்ப்பாட்டம்

தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி, இன்று திருகோணமலையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தமிழ்பேசும் மக்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வான சமஷ்டியை வலியுறுத்தி இன்றையதினம் திருகோணமலை மக்ஹெய்சர் மைதானத்திற்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய செயல்முனைவின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு இன்றைய தினம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இந்த ஜனநாயக போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்தவகையில் திருகோணமலையிலும் வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு முன்வைத்த சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினரால் முன்வைக்கப்பட்ட 100 நாள் செயல்முனைவின் ஒரு வருட பூர்த்தியைக் குறிக்கும் வகையில் குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய உயர்ஸ்தானிகர் – கூட்டமைப்பிற்கு இடையில் நாளை முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

அதன்படி நாளை செவ்வாக்கிழமை காலை 10.30 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

இந்தச் சந்திப்பில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பிரதமர் மோடி வெளியிட்ட கருத்துக்கள், சர்வகட்சிக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசியல் அமைப்பையே தீயிட்டு எரிக்கும் நிலை ஏற்படலாம் – சிவாஜிலிங்கம்

இலங்கை அரசியல் அமைப்பையே தீயிட்டு எரிக்கும் நிலை ஏற்படலாம்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”தமிழ் மக்கள் விரும்பும் தீர்வினை நாங்கள் வழங்க முடியாது” என்று  அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கை அரசியல் அமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தை வழங்குவதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள எவரது அங்கீகாரமும் தேவையில்லை. ஆனால் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பில் நாடாளுமன்றத்தைக் கேற்க வேண்டுமெ ஒரு பித்தலாட்டத்தை நடத்தி வருகின்றார்.

தமிழ் மக்களிடம் நாம் கூறவிரும்புவது என்ன வென்றால் எமது சுதந்திரத்துக்கான பொதுசனவாக்கெடுப்பை கோரும் செயற்பாடானது ஒரு சில கட்சிகள்  மாத்திரமே முன்னெடுத்து வருகின்றன. ஆனால் அனைவரும் இது குறித்து பேசுமிடத்து இவ்விடயத்தில் சர்வதேசம் தலையிட்டு ஒரு பொதுசனவாக்கெடுப்பை நடத்தி தமிழ் மக்கள் கேட்கும்  சுதந்திரத்தைப்   பெறமுடியும்.

13 ஆவது திருத்தத்தை சிங்கள இனவாதிகள் எரித்தார்கள். இதே போன்றதொரு நிலைமீண்டும் ஏற்பட்டால்  இலங்கையின் அரசியல் அமைப்பையே தீயிட்டு எரித்து விட்டு சர்வதேச சமூகத்தை நோக்கி செல்லுகின்ற நிலை ஏற்படும் . ஆகவே இலங்கை அரசு தொடர்ந்து ஏமாற்றுகின்றது என்றால்  அதற்கு ஏமாறுபவர்களும்  பொறுப்பாளிகள் ஆகின்றனர்”  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு காணி அபகரிப்புக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று மாலை 4 மணியளவில் ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அக்கரைவெளியில் 1500 ஏக்கர் காணியை சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கடன் நிவாரண முயற்சிகளுக்கு சீனா ஆதரவளிக்க வேண்டும் – இந்திய நிதி அமைச்சர்

இலங்கையின் கடன் நிவாரண முயற்சிகளில் சீனாவும் இணைந்துகொள்ளவேண்டும் என  இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு அதிகளவு கடனை வழங்கிய நாடு என்ற அடிப்படையில் இலங்கையை கடன் நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக இந்தியா ஜப்பான் பிரான்ஸ் ஆகியநாடுகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளில் சீனாவும் இணைந்துகொள்வதை வரவேற்பதாக அவர்தெரிவித்துள்ளார்.கடன் நெருக்கடியில் சிக்குண்டுள்ள நாடுகளிற்கான நிவாரண நடவடிக்கைகளை உலகவங்கியும் சர்வதேச நாணயநிதியமும் துரிதப்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் திறன் உள்ளது – கனடா தூதுவர்

கனடாவில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கைக்கான கனடா தூதுவர் கனடா சுதேசிய மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றது இலங்கைக்கும் இதற்கான திறன் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையாலும் கனடாவை போல அதிகளவு சாதிக்க முடியும்,கனடா தன்னை இருமொழி நாடாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்னிறுத்தியுள்ளது என எரிக்வோல்ஸ் தெரிவித்துள்ளார்.

கனடாவின் வாழ்க்கை பெருமளவிற்கு ஆங்கில பிரென்ஞ் ஆகியவற்றை கொண்டதாக காணப்படுகின்றது தமிழ் மொழியும் பயன்படுத்தப்படுகின்றது கனடா தன்னை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தன்னை இவ்வாறே முன்னிறுத்துகின்றது இலங்கை உடனான உறவுகளிலும் இது குறித்தே கவனம் செலுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடா சுதேசிய மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றது கனடாவில் இனப்படுகொலை இடம்பெற்றதை ஏற்றுக்கொண்டுள்ளோம் இது மிகவும் நீண்டகால கடினமான நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையும் இதனை சாதகமான அம்சங்கள் சாதகதன்மைகளுடன் முன்னெடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடா ஒரு சிறந்ததேசமாக விளங்குவதற்கு இலங்கை தமிழர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பை அவர் பாராட்டியுள்ளார்.

தீர்வில்லையேல் இந்தியாவின் ஒரு பகுதியாக வடக்கு கிழக்கினை இணைக்க நேரிடும் – செல்வம் எம்.பி.எச்சரிக்கை

தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்றால் வடக்கு கிழக்கினை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும் என கோர வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அதன் மூலமே தமிழர்களின் இறையாண்மையினை பாதுகாக்க முடியும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

சிங்ளவர்கள் தமிழர்களின் இரத்ததினை குடிக்கும் நோக்குடன் மட்டுமே செயற்படுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நாட்டை வலுப்பெறச்செய்ய வேண்டும் என்பதை சிந்திக்காது, தமிழர்களை எவ்வாறு முடக்குவது என்றுதான் அரச தலைவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள் என குறிப்பிட்டார்.

பல வேற்றுமைகள் இருந்தாலும் எமது மக்களுக்காக நாம் ஒற்றுமைப் பட வேண்டும் என்றும் இந்த ஒற்றுமை புலம்பெயர் தேசத்து கட்டமைப்புகளும் ஒன்றுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உதட்டளவில் தேசியம் பேசாமல் அனைவரையும் ஒன்றிணைக்கின்ற செயற்பாட்டை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் செய்யும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்னவை நியமித்து வர்த்தமானி வெளியீடு

பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் எதிர்வரும் ஜுலை மாதம் 9ஆம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்தை அடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் – ஜீவன் தொண்டமான் இடையே சந்திப்பு

மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவர்களை கௌரவிக்கும் முகமாக மலையகம் – 200 விழா, மீனவர் பிரச்சினை, மலையக கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஜீவன் தொண்டமான் பேச்சு நடத்தியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் மரியாதை நிமித்தம் இன்று (29) காலை நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக தமிழக அரசின் பங்களிப்பும் அவசியம் என்ற கோரிக்கையை அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வைத்தார்.

இச்சந்தர்ப்பத்தில், கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியின் போது தமிழக  அரசாங்கம் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் பாரிய அரிசி தொகையினை நன்கொடையாக வழங்கியிருந்தது. இதற்கு இலங்கை மக்கள் சார்பாக தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்த சந்திப்பின் போது, சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தின் துணைத் தூதுவர் வெங்கடேஸ்வரன் மற்றும் அரச உயர் அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்டால் நல்லிணக்கம் இல்லாமல் போகும் – உதய கம்மன்பில

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் தற்போதுள்ள தேசிய நல்லிணக்கமும் இல்லாமல் போகும் என நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

13 ஆவது திருத்தம் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்றும் அதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என என்றும் குறிப்பிட்டார்.

தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

ஆனால் பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் ஆகியவற்றை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என உதய கம்மன்பில தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் காணி தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அதற்கான விசேட பொறிமுறை ஒன்று வகுக்கலாமே தவிர காணி அதிகாரங்களை வழங்க கூடாது என்றும் கூறினார்.

இதேவேளை மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.