இலங்கை செல்ல அனுமதி வழங்கக் கோரி சாந்தன் இந்தியப் பிரதமருக்குக் கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தன், தமக்கு இலங்கைக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

சிறையில் இருந்து விடுதலையாகி தற்போது ஒரு அறையில் கைதி போல அடைக்கப்பட்டிருப்பதாகவும், தன்னுடைய சொந்த நாடான இலங்கைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி சாந்தன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த முகாமில் ரத்த உறவுகளை மட்டுமே சந்திக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தம்மை போன்ற வெளிநாட்டு பிரஜைகளுக்கு இந்தியாவில் எவ்வாறு ரத்த உறவுகள் இருக்க முடியும் எனவும் சாந்தன் தமது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

முதலில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அதனை அடுத்து, சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயகுமார், ரொபர்ட் பயஸ் மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களில் இலங்கையை சேர்ந்த, முருகன், சாந்தன், ஜெயக்குமார் மற்றும் ரோபர்ட் பயஸ் ஆகிய நால்வரும்

விடுதலை செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் அழுத்தத்தால் விரைவில் மாகாண சபைத் தேர்தல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான விஜயத்தை அடுத்து மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆகவே தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதை கண்டு மனதை தளரவிடாமல் தேர்தலுக்கு தயாராகுமாறு பொதுஜன பெரமுனவின் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமை மற்றும் மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருப்பது ஜனநாயத்திற்கு விரோதமானது என்றும் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆகவே பொருளாதாரத்திற்கு பாதிப்பு என குறிப்பிட்டுக்கொண்டு தேர்தலை தாமதப்படுத்தும் நடவடிக்கைக்கு அவர்கள் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.

33 வருடங்களாக இலங்கை இராணுவத்தால் அபகரிக்கப்பட்டிருந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளன

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மீள கையளிக்கப்படவுள்ளது.

கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக J/ 233 கிராம சேவையாளர் பகுதியில் உள்ள மாங்கொல்லை வைரவர் ஆலயமும் அதனை சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

மிக விரைவில் , அவை மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

காணாமல்போனோர் அலுவலகத்தின் உண்மையை தேடிக்கண்டறியும் பணி தொடரும் – மகேஷ் கட்டுலந்த

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கத்தின் விளைவாக தமது அலுவலகத்தின் பணிகள் ஒருபோதும் மழுங்கடிக்கப்படமாட்டாது என்றும், காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை தேடிக் கண்டறியும் தமது பணி தொடரும் என்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.

உண்மையை கண்டறிதல், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல், இழப்பீட்டை வழங்கல், மீள்நிகழாமையை உறுதிப்படுத்தல் ஆகிய நிலைமாறுகால நீதிப் பொறிமுறையின் ஓரங்கமாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதை முன்னிறுத்திய பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் செயலிழக்கும் என்றும், இவையனைத்தும் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் நோக்கிலான நடவடிக்கைகள் மாத்திரமே என்றும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில், இதுகுறித்து கருத்து வெளியிட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கத்தை தொடர்ந்து தமது அலுவலகத்தின் செயற்பாடுகள் வலுவிழக்கும் என தான் கருதவில்லை எனவும், ஏனெனில், இவ்விரண்டு கட்டமைப்புக்களினதும் பணிகள் வெவ்வேறானவை எனவும் சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கத்தின் பின்னரும், காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என்பதை கண்டறியும் தமது அலுவலகத்தின் பணிகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று தற்போதைய சூழ்நிலையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அவசியம் என்று தெரிவித்த மகேஷ் கட்டுலந்த, அக்கட்டமைப்பின் உருவாக்கத்தைத் தாம் வரவேற்பதாக குறிப்பிட்டார்.

மாகாணசபைக்கான ஆலோசனைக்குழு அமைக்கும் ஏற்பாடு மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டும் எனும் கோரிக்கையை நலிவுறச் செய்யும் – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டு அல்லது முன்வைக்கப்பட்டிருக்கும் மாகாண சபைக்கான ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்கும் ஏற்பாடானது, ஏற்கனவே நாங்கள் கோரிக்கை வைத்திருக்கும், மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பதாக அமைகிறது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

அரசியல் யாப்பிலே ஏற்கனவே இருக்கின்ற அதிகாரங்களை பகிர்ந்து, மாகாண சபை தேர்தல் சட்டத்தில் அதற்கான திருத்தங்களை மேற்கொண்டு பாராளுமன்ற அனுமதியை பெற்று மாகாண சபை தேர்தலை நடாத்துமாறு எமது கோரிக்கை அமைந்திருந்தது. அதை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டு, அந்த மாகாண சபையில் பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள நிலை நிறுத்துவதற்கான சட்ட வரைபுகளை தான் ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அந்த சட்ட வரைபுகளோடு தேர்தல் திருத்த சட்டத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது அனுமதி பெற்று மாகாண சபைகளில் பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள நிறுத்தி, மாகாண சபை தேர்தலை நடாத்தலாம் என உறுதிமொழி வழங்கியிருந்தார். ஆனால் இதுவரைக்கும் அந்த விடயங்கள் தொடர்பான தெளிவான கருத்துக்கள் எதுவும் ஜனாதிபதியால் கூறப்படவில்லை.

இந்த நிலையிலே ஆலோசனைக்குழு ஒன்றை அமைத்து மாகாண சபையை வழி நடத்துவதற்காக ஜனாதிபதி எடுக்கின்ற முயற்சியும், அதை எமது தமிழர் தரப்பினரே அரசியல் கோரிக்கையாக முன்வைத்திருப்பதும் கவலையளிக்கிறது.

ஜனாதிபதியுடைய மாகாண சபை வழிநடத்தல் குழு என்பது அவரால் அமைக்கப்பட வேண்டிய ஒன்று, அதனை நாங்கள் வலிந்து கேட்பது அவசியமற்றது. அது ஏற்கனவே ஒரு நிர்வாகம் சம்பந்தப்பட விடயம். நாங்கள் கேட்பது அரசியல் நிலைப்பாடு. அதாவது மாகாண சபை தேர்தல்களை நடாத்த வேண்டும், பறிக்கப்பட்ட அதிகாரங்களோடு ஏற்கனவே இருக்கின்ற அதிகாரங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது ஒரு அரசியல் கோரிக்கை.

ஆகவே, நாங்கள் இந்த அரசியல் கோரிக்கைக்கு புறம்பான ஒரு நிர்வாக ரீதியான ஆலோசனை சபையை அமைக்கும் விடயத்தை கோரிக்கையாக, அதாவது அரசியல் கோரிக்கையாக முன்வைப்பது அபத்தமானது ஆகும். அது ஜனாதிபதி அவருடைய தேவை கருதி எடுக்க வேண்டிய நடவடிக்கை. ஆகவே நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டில் இருக்க இருக்க வேண்டியதில் அனைத்து தமிழ் தரப்பும் உறுதியாக இருக்க வேண்டும்.

மாறாக தனித்து செயற்பட முற்படுகின்றபோது, எமது பிரதான கோரிக்கையான அதிகாரப் பகிர்வு, மாகாண சபை தேர்தலை விரைந்து நடாத்துதல் என்ற விடயங்களுக்கு இவை குந்தகம் விளைவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி, தேர்தல்களைப் பிற்போடுவதற்கு இதைப் பயன்படுத்துகின்ற அபாய சூழ்நிலை இப்போது எழுந்திருக்கிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அரசியல் தரப்பினர் பொறுப்பு கூற வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

300 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஆணையாளர் நாயகம் 300 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி வௌியிட்டுள்ளார்.

இலத்திரனியல் உபகரணங்கள், உடற்சுகாதார பொருட்கள், உணவுப்பொருட்கள், நிர்மாண பணிகளுக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்ட 300 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளே இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ளன.

நேற்று (09) முதல் அமுலாகும் வகையில், இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டொலர் பெறுமதி அதிகரிப்பு காரணமாக கடந்த காலங்களில் இறக்குமதிகள் தொடர்பான தடைகள் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது

தமிழ் மக்களின் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்காமல் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பின் ஊடாக அரசியல் தீர்வை காண முனைந்தால் அதற்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு தமிழர்களின் தீர்வுக்கான கலந்துரையாடலை முன்னெடுத்தால் அந்தக் கலந்துரையாடல் தோல்வியிலேயே நிறைவடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

தீர்வு என்ற பெயரில் தமிழ்க் கட்சிகளை இனிமேல் ஏமாற்ற முடியாது என்றும் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாக உள்ளார்கள் என்றும் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.

கடன் மறுசீரமைப்புக்கான அடுத்தகட்ட சமிக்ஞை எதனையும் இதுவரையில் சீனா வெளியிடவில்லை

இந்தியா, ஜப்பான் மற்றும் இறையாண்மைக் கடனாளர்களின் பாரிஸ் கிளப் ஆகியவற்றின் நிதித் தலைவர்கள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பின் கலந்துரையாடலுக்காக கூட்டு மாநாட்டை நடத்தியுள்ளனர்.

இந்த மாநாட்டின் ஊடாக இலங்கையின் கடன் பிரச்சினைகளை எவ்வாறு சிறந்த முறையில் கையாள்வது என்பது தொடர்பில் சீனாவிற்கும் ஏனைய கடன் வழங்குநர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

அத்துடன், பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கையின் கடன் பேச்சுக்களில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் இதில் சீனா பங்கேற்றிருக்கவில்லை.

‘இலங்கை இன்னும் ஆழமான கடன் நெருக்கடியில் உள்ளது.அதன் நெருக்கடியில் இருந்து இலங்கை விரைவாக வெளிவருவதற்கு விரைவான கடன் மறுசீரமைப்பு விரைவாக தேவைப்படுகிறது’ என்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி நிர்வாக இயக்குனர் கென்ஜி ஒகாமுரா கூறினார்.

‘அனைத்து உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களும் பங்கேற்கும் பேச்சுவார்த்தைகள் விரைவாக முன்னேற்றம் காணும் என்று நாங்கள் நம்புகிறோம்.’ என்றும் அவர் தமது எதிர்பார்ப்பினை வெளியிட்டார்.

சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் முதல் இலங்கைக்கு கடன் வழங்கப்பட்டுள்ள நிலையில் முதல் கொடுப்பனவுக்கான மதிப்பாய்வின் மூலம் இரண்டாவது தவணைக்கு முன்னதாக கடன் மறுசீரமைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஒகாமுரா மேலும் கூறினார்.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு கடன் நிவாரணம் வழங்குவதற்கான பரந்த வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியால் நடத்தப்பட்ட வட்டமேசைக் கலந்துரையாடலின்போது சீனாவும் முக்கிய கோரிக்கைகளில் சிலவற்றை மென்மையாக்க ஒப்புக்கொண்ட பின்னரே இந்த மாநாடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மறுசீரமைப்பு விவாதங்களில் சீனா பங்கேற்க விரும்புவதாக இலங்கையின் முக்கியஸ்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் சீனா எந்தவொரு இடத்தலும் பகிரங்கமான கலந்துரையாடலுக்கு தயாரான கருத்தினை வெளியிடவில்லை.

கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மெதுவான முன்னேற்றம் காரணமாக அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கை மற்றும் சாம்பியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய பேச்சுவார்த்தைகளில் சீனாவின் வகிபாகம் பற்றிய கவலைகள் பொதுவாக நீடித்துக்கொண்டே இருக்கின்றன.

இவ்வாறான நிலையில் இலங்கை சீனாவுடன் ஒரு தனியான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் பற்றிய பேச்சுக்களை முன்னெடுப்பது பொருத்தமான நகர்வதாக அமையாது என்றும் இந்தச் செயற்பாடு ஏனைய கடன்வழங்குநர்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக இருப்பதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி தெரிவித்தார்.

‘வொஷிங்டனில் நடந்த சந்திப்புகளில், இலங்கையின் கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தாங்கள் இன்னும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்’ என்று கொழும்பில் உள்ள சீன தூதரகம் டுவிட்டர் பதிவுகள் மூலம் தெரிவித்ததது.

ஆனாலும், அதற்காக அடுத்தகட்ட நகர்வுகளை சீனா எவ்விதாக முன்னெடுக்கப்போகின்றது என்பது சம்பந்தமாக எந்தவொரு சமிக்ஞையையும் சீனா வெளியிடவில்லை.

இவ்வாறான பின்னணியில் இலங்கைக்கு அண்மையில் சீனாவின் யுனான் மாகாண ஆளுநர் வென்க் யூபோ, பிறீமியர் சூகோ போன்ற உயர்மட்டக்குழுவினர்கள் சொற்ப இடைவெளியில் விஜயம் செய்துள்ளனர்.

ஆனால், குறித்த விஜயங்களின்போது ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அதேபோன்று இலங்கையின் கரையோர மாவட்டங்களில் உள்ள வறுமைக்கு உட்பட்வர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டன.

ஆனால், குறித்த குழுவினர்கள் கடன் மறுசீரமைப்பு குறித்து எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. மாறாக, பொதுப்படையில், இலங்கையின் மேம்பாட்டிற்கு உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலைமையானது, சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை தற்போது வரையில் அறிந்து கொள்ள முடியாத சூழலையே ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில், அதன் மொத்த வெளிநாட்டுக்கடனில் 12சதவீதத்தினை சீனாவுக்கே செலுத்த வேண்டிய நிலைமையில் உள்ளது.

குறிப்பாக, சீனாவிடமிருந்து கடன்களைப் பெற்று நிறுவப்பட்ட மத்தல விமான நிலையம், தாமரைக்கோபுரம் போன்றன எவ்விதமான வருமானங்களையும் பெற்றுக்கொடுக்காத நிலையில் வெள்ளையானைகளாக உருவெடுத்துள்ளன.

இவ்வாறான நிலையில் சீனாவின் கடனை மீளச் செலுத்துவதற்கு இலங்கைக்கு தற்போதைய நெருக்கடியான நிலையில் வழிகளில் எதுவும் இல்லாத சூழலே நீடிக்கின்றது.

முன்னாள் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு

58 வயதான பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காலத்தில் பிரிட்டனில் கொரோனா சட்டங்களை மீறி ஒரு விருந்து உபசார நிகழ்வை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அது குறித்து நாடாளுமன்ற குழு விசாரணை இடம்பெறுகின்றது.

இந்நிலையில் எம்.பி பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதாக நாடாளுமன்ற விசாரணைக் குழுவிடம் இருந்து கடிதம் வந்ததாகமுன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதம் தனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளதாகவும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை எதிர்கொள்ள பொதுஜன பெரமுன தயார் – மஹிந்த ராஜபக்‌ஷ

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தமது கட்சி தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஜனாதிபதி தேர்தலுக்கு கூட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை மற்றும் ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலம் குறித்தும் இதன்போது ஊடகவியாளர்களினால் அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

குறித்த சட்டமூலத்தை தான் இதுவரை பார்க்கவில்லை என்றும் தற்போது நாட்டில் சுதந்திரமான ஊடகம் இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.