துறைமுக அபிவிருத்தி திட்டங்களுக்காக 132 மில்லியன் டொலர் ஒதுக்கீடு

துறைமுக அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசாங்கம் சுமார் 132 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளதாக இலங்கை துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

இந்தியப் பெருங்கடலில் தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து மையமாக மாற இலங்கை எதிர்பார்க்கிறது.

இதற்கமைய துறைமுக அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசாங்கம் சுமார் 132 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளது.

இந்த முதலீடுகள் துறைமுக நடவடிக்கைகளில் இருந்து கிடைக்கும் வருவாயின் மூலம் செய்யப்படும்.

கிழக்கு கொள்கலன் முனையத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஜெயா கொள்கலன் முனையத்திற்கு 32 மில்லியன் அமெரிக்க டொலர்களும் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இரண்டு முனையங்களும் அரசுக்கு சொந்தமான இலங்கை துறைமுக அதிகாரசபையின் துணை நிறுவனங்களாகும்.

மேற்கூறிய முதலீடுகளைத் தவிர, திருகோணமலை துறைமுகத்தை மொத்த சரக்கு நடவடிக்கைகளுக்காகவும், காலி துறைமுகத்தை சுற்றுலாத் துறைக்காகவும் படகு சேவையுடன் மேம்படுத்தவும், பெரிய கப்பல்களை நங்கூரமிட வசதி செய்யவும் எதிர்பார்க்கிறோம். என கூறியுள்ளார்

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்போர் முதலுதவி கருத்தரங்கில் பங்கேற்பது கட்டாயம்

சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக புதிதாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் முதலுதவி தொடர்பான அடிப்படை தௌிவூட்டலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக புதிதாக விண்ணப்பிக்கும் அனைவரும் தமது திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்படும் முதலுதவி கருத்தரங்கில் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க கூறினார்.

வாகன விபத்திற்கு முகங்கொடுக்க நேரிடும் சந்தர்ப்பத்தில் அடிப்படை முதலுதவி பற்றிய அறிவு இன்மையின் காரணமாக அனர்த்தத்தின் பாதிப்பு அதிகமாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, சாரதிகளுக்கு அடிப்படை முதலுதவி பற்றிய அறிவை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன  போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க  குறிப்பிட்டார்.

இரு வருடங்களுக்கான தவணை, வட்டியை இலங்கையிடம் குறித்தகாலப்பகுதியில் அறவிடப்போவதில்லை – சீன எக்ஸிம் வங்கி

2022 , 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கை செலுத்த வேண்டிய தவணைக் கடன் மற்றும் வட்டியை குறித்த காலப் பகுதியில் அறவிடப்போவதில்லை என சீனா அறிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதிக்கான கடன், வட்டியை மீள செலுத்துவதற்கு EXIM வங்கி எனப்படும் சீனாவின் இறக்குமதி – ஏற்றுமதி வங்கி நிவாரணக் காலத்தை வழங்கியுள்ளதாக சீன வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் Wang Wenbin நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

இதன் ஊடாக இலங்கையின் குறுகிய கால கடனை மீள செலுத்துவதற்கு நிவாரணம் கிடைக்கும் என்பதே சீனாவின் எதிர்பார்ப்பாகும்.

சீன EXIM வங்கி இலங்கையுடன் மத்தியகால, குறுகியகால கடனை மீள செலுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் சீன வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் Wang Wenbin தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகள் இலங்கையின் கடன் ஸ்திரநிலையை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏப்ரல் மாதம் வரை போதுமான மசகு எண்ணெய் கையிருப்பில் உள்ளது – பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

ஏப்ரல் மாதம் வரை போதுமான மசகு எண்ணெய் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் தற்போது நாளொன்றுக்கு 30,000 பீப்பாய் எரிபொருள் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதாக கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

800 மில்லியன் ரூபா பெறுமதியான எரிபொருள், இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

குறித்த எரிபொருள் தொகைக்கான கட்டணத்தை இலங்கை மின்சார சபை, எதிர்வரும் நாட்களில் செலுத்தவுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் கூறினார்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் நெப்டா,  டீசல் மற்றும் பல எரிபொருள் வகைகள் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படுகின்றன.

உபரியான சுத்திகரிப்பு எரிபொருள் தொகை களஞ்சியப்படுத்தப்படுவதுடன், இவ்வாறு களஞ்சியப்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தொகையானது கப்பல்கள் மூலம் திருகோணமலை எண்ணெய்த் தாங்கி வளாகத்திற்கு அனுப்பப்படுவதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.

பொருளாதார பிரச்சினை நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ளக்கூடிய விடயமல்ல – ஜனாதிபதி ரணில்

நாட்டின் அடிப்படைப் பிரச்சினை பொருளாதார பிரச்சினை எனவும் அது நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ளக்கூடிய  விடயமல்ல எனவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றல்ல எனவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், பிரதம நீதியரசர் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளும் ஒன்றாக அமர்ந்தாலும் கூட நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையை நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்தை முன்கொண்டு செல்லும் பொறுப்பு பாராளுமன்றத்திற்கே இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கண்டியில் நேற்று (22) மாலை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற கண்டி மாவட்ட வர்த்தகர்கள், சட்டத்தரணிகளுடனான  சந்திப்பின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஜனாதிபதி இதன்போது தெரிவித்த கருத்துகளை, ஊடக அறிக்கையொன்றின் மூலம் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வௌியிட்டுள்ளது.

இதேவேளை தேவைப்பட்டால், மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தியின் இரான் , ஹர்ஷ போன்றவர்களின் முன்மொழிவுகளைக் கூட சர்வதேச நாணய நிதியத்தில் சமர்ப்பிக்க முடியும் என  ஜனாதிபதி கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்காவிட்டால், மீண்டும் நெருக்கடியான நிலைமை ஏற்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக ஊடக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்க விடுவிப்பு

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்க நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக திறந்த நீதிமன்றில் தெரிவித்ததை அடுத்து அவரது வழக்கு நடவடிக்கைளை முடிவுக்கு கொண்டு வர இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு இன்று (21) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

பௌத்த மதத்தின் புனிதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 5ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சேபால் அமரசிங்க கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தேர்தலை நடத்தக் கோரி சபைக்குள் ஆர்ப்பாட்டம்; ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம்

சபாநாயகரை மறைத்துக்கொண்டு அக்கிராசனத்துக்கு முன்பாக எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், சபை நடவடிக்கைகள் யாவும் நாளை (22) காலை வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கள்ள அரசாங்கமே ! தேர்தலை நடத்து என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு, ஐக்கிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தலை மார்ச் 9 நடத்த முடியாது! உயர் நீதிமன்றுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது

பல காரணங்களால் திட்டமிட்ட வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வரும் மார்ச் 09ஆம் திகதி நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழு நேற்று திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்தது

நகர்த்தல் பத்திரம் ஊடாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. தவிர்க்க முடியாத பல தடைகள் காரணமாக மார்ச் 09ஆம் திகதி தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அந்தப் பத்திரத்தில் தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்தத் தேர்தலுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவது கடினம் என திறைசேரியின் செயலாளர் ஏற்கனவே ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 41 கோடியே 6 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் வரை வாக்குச் சீட்டுகளை அச்சிட்டு வழங்க முடியாது என அரச அச்சகம் அறிவித்துள்ளது. தேர்தல் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான பாதுகாப்பை அளிப்பதற்கும் பொலிஸ் மா அதிபர் தவறியுள்ளார். இதற்காக செலுத்த வேண்டிய கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தவிர, தேர்தலுக்கு தேவையான வாகன எரிபொருள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்குமாறு பொறுப்பான அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப் பட்டபோதிலும், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. திறைசேரியின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், அரச அச்சகம், பொலிஸ் மா அதிபர், இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோர் தேர்தலுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்றும் ஆதாரங்கள் – ஆவணங்களுடன் தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது

கல்முனை வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொதி நிலை

கல்முனை மாநகர சபையின் விசேட கூட்டம் ஒன்று பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் எதிர்வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவிருக்கின்றது.

மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில், சபை சபாமண்டபத்தில் இடம் பெறவிருக்கும் இந்த விஷேட கூட்டத்தில், கல்முனை மாநகரில் இயங்கும் பொது நூலகத்திற்கு முன்னாள் அமைச்சரும், முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சருமான மர்ஹூம் ஏ.ஆர். மன்சூரின் பெயரைச் சூட்ட வேண்டுமென முன்மொழியப்பட்டுள்ள பிரேரணை விசேடமாக ஆராயப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.

அண்மையில் நடைபெற்ற மாநகர சபையின் 59 ஆவது மாதாந்தக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் இந்த பெயரிடல் விவகாரத்தை தமது உரையின் போது பிரஸ்தாபித்தார்.

எனினும் தமிழரசுக்கட்சி உறுப்பினரும் ரெலோ அமைப்பின் பிரதித் தலைவருமான ஹென்ரி மகேந்திரன் உட்பட தமிழர் தரப்பு உறுப்பினர்கள் தற்போதய சூழ்நிலையில் இந்த விவகாரத்தைக்கைவிடுவதுடன், ஆறஅமர இரு தரப்பும் பேசி முடிவு செய்யலாமென ஆட்சேபித்ததையடுத்து, இந்த விடயத்தில் தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாது அமர்வு முடிவுறுத்தப்பட்டது.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டுமென்ற கல்முனைவாழ் தமிழ் மக்களின் உயிர் மூச்சான முயற்சிகளுக்கு, பிரதேச முஸ்லிம் அரசியல் வாதிகள் சிலர் முட்டுக்கட்டையாக செயற்பட்டு வரும் விடயத்தால் தமிழ், முஸ்லிம் உறவில் விரிசல் நீடித்துவரும் நிலையில், குறித்த பொது நூலக பெயரிடல் விவகாரம் மேலும் குழப்ப நிலையையும், தமிழ், முஸ்லிம் இன முறுகலையும் ஏற்படுத்திவிட வாய்ப்பாக அமைந்து விடலாமென அப்போது கூட்டத்தில் தமிழ் உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.

எனினும், விடாக்கண்டன் பாணியில் கல்முனை பொது நூலகத்திற்கு மர்ஹூம் மன்சூரின் பெயரை சூட்டியே ஆக வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் வரிந்து கட்டி நிற்பதாகவும், மர்ஹூம் மன்சூரின் புதல்வர் ரஹ்மத் மன்சூர் மாநகர சபையின் பிரதி மேயராக இருந்து வருவதும் விடாப்பிடி நிலைக்குக் காரணமெனவும் கூறப்படுகின்றது.

இதனிமித்தமே மாநகர சபையின் ஆயுட்காலம் முடிவடைவதற்குள் பொது நூலகத்திற்கு மர்ஹூம் மன்சூரின் பெயரைச் சூட்டும் தீர்மானத்தை நிறைவேற்றிவிட வேண்டுமெனும் நோக்கில் நடைபெறவிருக்கும் சபையின் விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதனால் கல்முனை வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொதி நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கல்முனை மாநகரசபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சாமுவேல் சந்திரசேகரம் (ராஜன்) தவிர ஏனைய சகல கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் 10 தமிழ் உறுப்பினர்கள் ஒப்பமிட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவிருக்கும் மாநகர சபையின் விசேட கூட்டத்தை இரத்துச் செய்யுமாறுகோரி கடிதம் ஒன்றை மாநகர மோயரிடம் நேரில் சமர்ப்பித்துள்ளதாகவும், இக்கடிதத்தின் பிரதிகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரும், கூட்டமைப்பு உறுப்பினருமான ஹென்ரி மகேந்திரன் தெரிவித்தார்.

வழமைக்கு மாறாக இந்த விசேட கூட்டம் நடத்தப்பட்டு உரிய தீர்மானம் நிறைவேற்றப்படுமானால் தமிழர் தரப்பினர் நீதிகோரி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் முடிவுசெய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் கல்முனை மாநகரிலுள்ள முப்பதுக்கும் மேற்ப்பட்ட இந்து கிறிஸ்துவ ஆலங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் சார்பாக இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனருக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொது அமைதிக்குப் பங்கமாகவும், கல்முனை மாநகரில் தமிழ், முஸ்லிம் இனமுறுகலுக்கு வழிவகுப்பதாகவும் அமையவுள்ள குறித்த பெயர் மாற்றத் தீர்மானத்தை அமுல் நடத்தாது தடுக்குமாறும், மூவின மக்கள் வாழும் கல்முனையிலமைந்துள்ள பொது நூலகம் அதேபொதுவான பெயரிலேயே இயங்க ஆவன செய்யுமாறும் குறித்த மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் கல்முனை மாநகரை களேபர பூமியாக மாற்றாது சுமூகமான தீர்வு எட்டப்படவேண்டுமென்பதே இன்றைய நிலையில் பலரதும் அவாவாகும்.

பொதுமக்களின் உரிமைகளை மறுக்கும் நடவடிக்கைகளில் நிறைவேற்று அதிகாரம் – தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான அமைப்பு

மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை கடுமையாக கண்டிப்பதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையகம் திறைசேரி நிறைவேற்று அதிகாரம்  அரச அச்சகர்  மற்றும் இலங்கை பொலிஸின் சிரேஸ்ட அதிகாரிகள் ஆகியோர் பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளை கண்மூடித்தனமாக மீறியதை கடுமையாக கண்டிப்பதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த அரசாங்க அதிகாரிகள் ஒவ்வொருவரினதும் நடவடிக்கைகளை ஆராய்ந்ததில் இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உள்ளூராட்சி தேர்தலை குழப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை புலனாகியுள்ளது என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.