மின்கட்டணம் உயர்த்தப்பட்டது பொறியியலாளர்களிற்கு போனஸ் வழங்க அல்ல!

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது பொறியியலாளர்களுக்கு போனஸ் வழங்குவதற்காக அல்ல என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்திலும் மேலதிக நேர கொடுப்பனவுகள் குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஓராண்டாக நிலவிய மின்வெட்டு நிறுத்தப்பட்டது. எங்களுக்கு கூடுதல் பணம் மானியமாக வழங்கப்படவில்லை. செலவுக்கு ஏற்ற வருமானம் கிடைக்க வேண்டும். கட்டண திருத்தத்திற்குப் பிறகு, நாங்கள் கடன் வாங்க முடிந்தது. முக்கிய வங்கிகள் தேவையான நிதியை வழங்கின. அதன்படி, கொஞ்சம் எரிபொருள் வாங்கப்பட்டது. இந்த நாட்டில் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படக்கூடாது என சிலர் விரும்புகின்றனர்.

பொறியாளர்கள் சங்கம் போனஸ் கேட்கிறது. மேலதிக நேர கொடுப்பனவுகளை கேட்கின்றனர்.அது கிடைக்காத போது வீதியில் இறங்கி விடுவதாக கூறுகின்றனர். மின் கட்டணத்தை உயர்த்தியது போனஸ் அல்லது சலுகைகள் வழங்க அல்ல. எங்கள் செலவுகளை ஈடுகட்டவே கட்டணம் உயர்த்தப்பட்டது. மின்சாரசபையின் நஷ்டத்தை மக்கள் மீது சுமத்த முடியாது என்றார்.

தல்செவன விடுதி அமைந்துள்ள திருகோண சத்திர காணியை மீட்டுத் தர சஜித்திடம் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் “தல்செவன” விடுதி அமைந்துள்ள 200 வருடங்கள் பழமை வாய்ந்த “திருகோண சத்திரம்” எனும் சிவபூமி அறக்கட்டளைக்கு சொந்தமான காணியினை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரிடம் அகில இலங்கை இந்து மா மன்றத்தின் உப தலைவரும் , சிவபூமி அறக்கட்டளை தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பின்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தான் எதிர்க்கட்சி தலைவரிடம் அவ்வாறு கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், சந்திப்பின் போது , எதிர்க்கட்சி தலைவரிடம் கீரிமலை காங்கேசன் துறை வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இருக்கின்ற கோயில்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அதை விடுவிக்கின்ற முயற்சியினை முன்னெடுக்க வேண்டும்.

அதேபோல் தல்செவன விடுதிக்கென பயன்படுத்தப்படுகின்ற 200 வருடம் பழமை வாய்ந்த திருகோணசத்திரம் என்கின்ற சிவ பூமி அறக்கட்டளைக்குரிய அந்த நிலத்தினை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

அத்துடன் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி, மற்றும் இராமநாதன் இந்து கல்லூரி ஆகிய இரண்டு பாடசாலைகளும் பேருந்து இல்லாமல் இருக்கின்றார்கள் அவர்களுக்கு பேருந்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

அதற்கு பேருந்தை வழங்க முடியும். அதனை பரிசீலித்து விரைவில் வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

மேலும் வீட்டுத்திட்டத்தை உங்களுடைய தந்தையார் பிரேமதாசா அவர்கள் ஆரம்பித்து வைத்தார். அது ஒரு நல்ல பணி இருநூறு வருடமாக மலையகத் தமிழர்கள் இன்னும் அடிமையாக வீடு வாசல் இல்லாது இருக்கின்றார்கள் அவர்களுக்கும் நன்றியோடு வீட்டு திட்டம் வழங்குகின்ற முயற்சியில் தாங்கள் ஈடுபட வேண்டும் எனவும் நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம்” என தெரிவித்தார்.

நல்லை ஆதீன குருமுதல்வர், யாழ். மறைமாவட்ட ஆயரை சந்தித்தார் சஜித்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லை ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர ஞானதேசிக பரமாச்சார்ய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

நல்லூரில் உள்ள நல்லை ஆதீனத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.

சந்திப்பின் போது செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளருமான உமாச்சந்திரா பிரகாஷ், யாழ் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அமைப்பாளர் விஜய்காந்த், யாழ் மவட்ட அமைப்பாளர் கு.மதன்ராஜ், தொகுதி அமைப்பாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

காலை 9 மணியளவில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தினை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ள நிலையில் அவர் பல்வேறு நிகழ்சிகளிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பினால் சபையில் இருந்து வெளியேறினார் ஜனாதிபதி

தேர்தல் நடத்த முடியாது என ஜனாதிபதி தெரிவித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தலை நடத்தக்கோரி ஜனாதிபதிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சபையில் போராட்டத்தை மேற்கொண்டதால் ஜனாதிபதி சபையில் இருந்து வெளியேறிச்சென்றார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிமை இடம்பெற்ற அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான ஜனாதிபதியின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றுகையில் தேர்தலை நடத்துவதற்கு தற்போது பணம் இல்லை என பல தடவைகள் தெரிவித்து வந்தார். இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

என்றாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை தேர்தல் ஆணையாளருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியை தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும் ஜனாதிபதி அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் தேர்தலை நடத்த முடியாது என்ற கருத்தையே தெரிவித்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி,விமல், டலஸ் அணி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு எதிராக சபைக்குள் எதிர்ப்பு பதாதைகளை ஏந்திக்கொண்டிருந்தனர். இறுதியில் ஜனாதிபதி தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கு இணக்கம் தெரிவிக்காமல் செயற்பட்டுவந்ததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபை நடுவில் வந்து ஆர்ப்பாட்டம் செய்ய வந்தபோது, உடனடியாக ஜனாதிபதி சபையில் இருந்து வெளிறிச்சென்றார்.

ஜனாதிபதி சபையில் இருந்து வெளியேறிச்சென்றதும் சபை நடுவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்துவந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதியடைந்து தங்களின் ஆசனங்களுக்கு சென்றனர். அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற நடவடிக்கைகள் சுமுகமாக இடம்பெற்றன.

இறுதிப் போரில் 9 கப்பல்களை அழிக்க அமெரிக்காவே உதவியது – அலி சப்றி

தமிழ் மக்களின் சுய உரிமை பாதுகாக்கப்படுதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நாட்டில் இறுதி யுத்தத்தின் போது இலங்கைக்கு வந்த ஒன்பது கப்பல்களை எமது படையினர் வெற்றிகரமாக அழிப்பதற்கு அமெரிக்கப் புலனாய்வுத் தகவல்கள் உறுதுணையாக அமைந்தது என்பதை மறந்து விடக்கூடாது என்றும் தெரிவித்தார். நேற்று பாராளுமன்றில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழ் மக்கள் இந்த நாட்டில் ஒன்றாக வாழும் மக்கள் என்பதை உணர்ந்து கொண்டு அவர்களின் சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் அவர்களின், மொழி, கலாசாரம் உள்ளிட்டவைகளுக்கு உரிய வாய்ப்புகளை வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இன மற்றும் மத பேதங்களுக்கு அப்பால் சிந்தித்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் பல்தன்மை ஒருமைப்பாட்டுடன் இவ்வாறு ஆரம்பிக்கப்படும் பயணமே வெற்றி பெற முடியும் அதன் மூலமான பொருளாதார முன்னேற்றமே நிலையானதாக அமையும்.

நாட்டில் இறுதி யுத்தத்தின் போது இலங்கைக்கு வந்த ஒன்பது கப்பல்களை எமது படையினர் வெற்றிகரமாக அழிப்பதற்கு அமெரிக்கப் புலனாய்வுத் தகவல்கள் உறுதுணையாக அமைந்தது என்பதை மறந்து விடக்கூடாது. அந்த வகையில் சர்வதேச நாடுகளுடனான நல்லுறவுக்கு முன்னாள் வெளிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் செயல்பாடுகள் மிகவும் காத்திரமானதாக அமைந்தது என்றும் மறந்துவிடக்கூடாது – என்றார்.

மன்னார் பூநகரி காற்றாலை மின்சார திட்டம் அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து!

மன்னார், பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த இந்தியாவின் அதானி குழுமத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்தானது.

இதனிடையே, எந்த ஆய்வுகளும் அனுமதிப் பத்திரங்களும் இன்றி முதலீட்டு சபையும் இந்தியாவின் அதானி குழுமமும் நேற்று மாலை உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளன என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஒப்பந்தத்தின்படி மன்னாரில் 250 மெகா வோட்ஸ், பூநகரியில் 100 மெகா வோட்ஸ் காற்றாலை மின்சார உற்பத்தி திட்டம் 44. 2 கோடி அமெரிக்க டொலர்கள் – நம் நாட்டு மதிப்பில் சுமார் 16 ஆயிரத்து 129 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ளன. இது இரு ஆண்டுகளில் நிறைவுத்தப்படும் என்றும் அத்துடன் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மன்னார் மற்றும் பூநகரியில் இரண்டு காற்றாலை திட்டங்களில் 50 கோடி அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடு செய்வதற்கு அதானி கிறீன் எனர்ஜிக்கு அரசாங்கம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர நேற்றிரவு தெரிவித்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தியாவின் முதல்நிலை பணக்காரராகவும் உலகளவில் மூன்றாவது இடத்திலும் அதானி இருந்தார். வரி ஏய்ப்பு மற்றும் சர்ச்சைகளால் அவரின் குழுமத்தின் பங்குகள் சரியவே உலகளவில் 17ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டார். இந்த நிலையில் கடந்த டிசெம்பரில் திட்டமிடப்பட்ட இந்த ஒப்பந்தம் திட்டமிட்டவாறு கைச்சாத்தாகியுள்ளது.

இதேசமயம், இந்த மின் உற்பத்தித் திட்டத்துக்குத் தேவையான சாத்தியக் கூறு ஆய்வுகள் மற்றும் அனுமதிகள் பெறப்படவில்லை. இதனால், இது சட்டவிரோதமான ஒப்பந்தம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டுமென்பது ஒட்டுமொத்த தமிழினத்தின் கோரிக்கை – சுரேந்திரன்

தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் சர்வதேச நீதிப்பொறிமுறை மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் ஒற்றுமை மிக அவசியமாகிறது. அது தான் நம்முடைய அரசியல் பலமாகவும் இருக்க முடியும். பிராந்திய வல்லரசாக இருக்கட்டும். சர்வதேச நாடுகளாக இருக்கட்டும் அனைவரும் தமிழ் தேசிய பரப்பில் இருக்கும் அனைவரும் ஒன்று பட்டே இருக்க வேண்டும் என்றே கோருகின்றார்கள். அது நியாயமான கோரிக்கையும் கூட என தெரிவித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளரானா குருசாமி சுரேந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த வழியில் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு பலமான தேசிய இயக்கமாக பலப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். ஞாயிறு தினக்குரலுக்கு  (19.02.2023)வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கேள்வி-1.
உள்ளுராட்சி தேர்தலில் தமிழரசு கட்சி தனித்து போட்டியிட தீர்மானித்த நிலையில் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளான ரோலோ மற்றும் புளோட் திடீரென மற்றும் கட்சிகளையும் கூட்டமைத்து தேர்தலில் எவ்வாறு விரைவாக போட்டியிட முடிந்ததன் பின்னணியென்ன?

பதில்
கடந்த காலங்களில் தமிழ்த் தேசியப் பரப்பில் செயலாற்றும் அனைத்து கட்சிகளும் ஒருமித்து செயலாற்றி வந்தோம். அப்படியான அனைவரையும் உள்வாங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பலமான கட்டமைப்பாக வரையறுத்து பொது சின்னத்தின் கீழ் பதிய வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாக அமைந்திருந்தது. இது எங்களுடைய கோரிக்கை மாத்திரமல்ல, ஒட்டுமொத்த தமிழினத்தின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் ஒரு கட்சி உள்ளூராட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக முடிவெடுத்தபொழுது, எம்மோடு ஒருமித்து செயலாற்றும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாக பயணிக்க முடிந்தது. தொடர்ச்சியாக கடந்த இரண்டு வருடமாக ஒருமித்து செயலாற்றியதன் பின்னணியே தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்திக் கொண்டு செல்வதற்கு காரணமாக அமைந்தது.

கேள்வி-2
தமிழ் கட்சிகளின் ஐக்கியமின்மை தமிழர்களுக்கு பாதகமென விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது குறித்து உங்கள் கருத்தென?

பதில்
நமது அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் இந்த ஒற்றுமையின்மை என்பது பெரிய தாக்கத்தை செலுத்துகிறது. தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் சர்வதேச நீதிப் பொறிமுறை மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் ஒற்றுமை மிக அவசியமாகிறது. அதுதான் நம்முடைய அரசியல் பலமாகவும் இருக்க முடியும். பிராந்திய வல்லரசாக இருக்கட்டும், சர்வதேச நாடுகளாக இருக்கட்டும், ஐக்கிய நாடுகள் சபையாக இருக்கட்டும், நமது மக்களாக இருக்கட்டும் அனைவரும் தமிழ் தேசிய பரப்பில் இருக்கும் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே கோருகிறார்கள். அது நியாயமான கோரிக்கையும் கூட. குறிப்பாக தென்னிலங்கை தரப்புக்கள் தமிழ் தரப்புகளை ஒன்றாக இணைந்து வருமாறு நையாண்டித்தனமான கோரிக்கையை கடந்த காலங்களில் முன் வைத்தனர். இது நீடிக்குமானால் தமிழ் மக்களின் அரசியல் இலக்குகளை அடைவது சிரமமானதாகிவிடும்.

கேள்வி- 3
உங்களது கூட்டமைப்பு மக்கள் மத்தியில் எவ்வாறான நிலைப்பாட்டுடன் செல்லப் போகின்றது?

பதில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பானது எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த வழியில் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு பலமான தேசிய இயக்கமாக பலப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் கூறி வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களையும் மக்கள் நடத்தி வந்துள்ளனர். அதற்கு செவி சாய்த்து நாங்கள் தொடர்ந்து கூட்டமைப்பை பலமான கட்டமைப்பாக முன்னெடுத்துச் செல்கிறோம். தேர்தல் நோக்கங்களை தாண்டி இது தமிழ் மக்களினுடைய பொது தேசிய இயக்கமாக பரிமாணம் அடைய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இந்த நோக்கத்தை மக்களிடம் எடுத்துச் செல்வோம். அதை மக்கள் நிச்சயம் அங்கீகரிப்பார்கள்.

கேள்வி-4
அண்மையில் யாழ் வந்த இந்திய இணையமைச்சரிடம் உங்கள் கூட்டிலுள்ள கட்சி தலைவர்கள் இந்திய பிரதமரை சந்திக்க வாய்ப்பு கேட்டமைக்கு காரணம் என்ன?

பதில்
கடந்த காலங்களில் இந்திய அரசினால் உத்தியோபூர்வமாக முன்வைக்கப்பட்ட அழைப்புக்கள் தமிழ்த் தரப்பால் சரியான முறையில் கையாளப் பட்டு இருக்கவில்லை. இந்திய அரசு தமிழ் மக்களுடன் கொண்டிருக்கும் அரசியல் உறவில் சில எதிர்மறையான அதிர்வலைகளை இது ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தமிழ் மக்கள் இனப் பிரச்சினையில் இந்திய பங்களிப்பு மிக அவசியமானது. நமது மக்களின் அரசியல் தீர்வுக்கான ஒரு பொறிமுறையை நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். அதில் இந்தியாவினுடைய தலைமையை வலியுறுத்தியுள்ளோம். இது எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தான் இந்த கோரிக்கையை நாங்கள் முன் வைத்தோம்.

கேள்வி-5
அரசாங்கம் வலி.வடக்கில் காணி விடுவித்துள்ளதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்
கடந்த ஜனாதிபதி தேர்தலிலே அனைத்து ஜனாதிபதி வேட்பாளரிடமும் நாம் பல கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம். ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியான பின்னர் அவரை நேரடியாக சந்தித்தும் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அரசியல் தீர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி சகல கட்சிகளையும் அழைத்த பொழுதும் நாம் அதில் சில கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம். அதற்கு பிரதானமானது காணி விடுவிப்பு கோரிக்கை. அதை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி முன் வந்துள்ளார். ஆனால் விடுவிக்கப்பட்ட காணிகள் மிகக்குறைவானவை. இன்னும் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் விடுவிக்கப்பட இருக்கின்றன. இது மாத்திரம் போதாது. மற்ற காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

கேள்வி-6
தற்போது வெளிநாட்டு தூதுவர்களை உங்கள் அணியினர் சந்தித்து எவ்வாறான விடங்களை பேசுகின்றீர்கள்?

பதில்
நமது தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ள சர்வதேச நீதிப் பொறிமுறை, அரசியல் தீர்வு மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பவற்றிற்கான சர்வதேசத்தின் உறுதியான ஆதரவை பெற்றுக் கொள்ளவே அவர்களோடு நாங்கள் பேசுகிறோம். மாறிவரும் அரசியல் பொருளாதார சூழ்நிலைகளில் தொடர்ந்தும் சர்வதேச ஆதரவு தமிழ் மக்கள் பக்கம் அல்லது நமது மக்களின் நியாயமான கோரிக்கைகளின் பக்கம் இருக்க வேண்டும் என்பதே எங்கள் பேச்சுப் பொருளாக அமைகிறது.

பாரிஸ் கிளப் முன்வைத்த நிபந்தனைகளுக்கு உடன்பட சீனா மறுப்பு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் முன்வைத்த அதே நிபந்தனைகளுக்கு சீனா உடன்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அனைத்து கடன் வழங்குநர்களும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்தியாவின் நிபந்தனைகளுக்கு பாரிஸ் கிளப் ஒப்புக்கொண்டாலும், அதை ஏற்க மறுத்த சீனா, தனது சொந்த நிபந்தனைகளை முன்வைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாளை பெங்களூரில் நடைபெறும் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் கலந்துரையாடலில் பொருளாதார வீழ்ச்சியடைந்த நாடுகளுக்கு உதவுவது குறித்து ஆராயப்படவுள்ளது.

குறித்த சந்திப்பில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முறை குறித்து சீன நிதியமைச்சருடன் கலந்துரையாட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்காவிடின் எரிபொருள், மின்வெட்டு என பொது மக்கள் பாரிய சிரமங்களை அனுபவிக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 04 பெண்கள் உள்ளிட்ட 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வட மாகாணம் மற்றும் கொழும்பை சேர்ந்த 21 பேரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சுமத்தி, 2014 ஆம் ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட 21 பேரும் வவுனியா, கிளிநொச்சி மற்றும் பூசா முகாம் ஆகிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பல நிபந்தனைகளின் அடிப்படையில் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பிணை வழங்கப்பட்டது.

இந்நிலையில் இவர்களுக்கு எதிரான வழக்கு கொழும்பு நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி 21 பேரையும் அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்

2023 வரவு செலவுத் திட்டம் – பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கை

தற்போதைய வரிக் கொள்கையானது சாதாரண வரிக் கொள்கையன்றி மீட்பு நடவடிக்கை எனவும் இந்த செயற்பாடு சீர்குலைந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடுளை மேற்கொள்ள முடியாது நிலை மட்டுமன்றி எந்தவொரு நாட்டுடனும் கொடுக்கல் வாங்கல் செய்யும் வாய்ப்பை இலங்கை இழக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சாதாரண வரவு செலவுத் திட்டம் அல்ல எனவும், பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இன்று (21) நடைபெற்ற 2023 வரி மாநாட்டில் ஆரம்ப உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை வர்த்தக சம்மேளனம் தவிர்ந்த எந்தவொரு கட்சியோ, நபரோ அல்லது நிறுவனமோ சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்மொழிவுகளையோ மாற்று வழிகளையோ சமர்ப்பிக்கவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டவுடன் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அதனை நிறைவேற்றவோ அல்லது நிராகரிக்கவோ வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி அதனை நிராகரிப்பதாக இருந்தால் சம்பந்தப்பட்ட தரப்பினர் சர்வதேச நாணய நிதியத்திற்கு மாற்று யோசனைகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

எமது நாட்டின் பிரதான கடன் வழங்குநர்களான பாரிஸ் கிளப், இந்தியா மற்றும் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு செயற்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி , இலங்கைக்கு நிதி ஒத்துழைப்பு வழங்குவதற்கு பாரிஸ் கிளப் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும், இந்தியா தமக்கு தனித்துவமான முறையை பின்பற்றுகிறது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 23ஆம் திகதி இந்தியாவின் பெங்களூரில் நடைபெறவுள்ள ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் அவர்களின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.