அரசுக்கு காணிகளை அன்பளிப்போர் மத்திய அரச தாபனங்களுக்கு வழங்குவதை தவிர்த்து உள்ளுராட்சி மன்றங்களுக்கு அன்பளிப்பதே இனம்சார் பாதுகாப்பானது! – நீர்வேலி தமிழ் முற்ற திறப்பு விழாவில் முன்னாள் தவிசாளர் நிரோஷ்

மக்கள் பங்கேற்பு அபிவிருத்தி என்ற எண்ணக்கருவுடன் மக்கள் பங்களிப்பு அபிவிருத்தித் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்துவதிலும் அரச தாபனங்கள் சிரத்தை எடுக்குமாயின் கிராம மட்ட உட்கட்டுமானங்களை விருத்தி செய்வது இலகுவாக அமையும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட பொறுப்பாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

நீர்வேலியில் இன்று சனிக்கிழமை (10) இடம்பெற்ற தமிழ் முற்றம் மற்றும் தபாலகக் கட்டிடத் திறப்பு விழாவில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்,

நீர்வேலி மண் தமிழ் மக்களின் பாரம்பரியத்திற்கு உரிய மண்ணாகும். இந்த மண்ணில் தமிழ் முற்றத்தினை அமைக்க வேண்டும் என நான் தவிசாளராக பதவி வகித்த காலத்தில் அவை தீர்மானம் உள்ளிட்ட  பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொண்டேன். இந்நிலையில் ஏற்கனவே நீர்வேலியில் தபாலகத்திற்கான கட்டிடத்தினை தனது கொடையாக அமைத்து வழங்குவதற்கான செயற்றிட்டத்தினை ஆரம்பித்திருந்த தொழிலதிபர் கிருபாகரன் அவர்கள் தமிழ் முற்றத்தினை அமைத்து அதில் பெரியார்களின் சிலைகளை நிறுவும் பொறுப்பினையும்  தானே முன்வந்து  ஏற்றுக் கொண்டு அதனை தற்போது அவர் முழுமையாகச் செயற்படுத்தியுள்ளார். அவரது முற்போக்கான கொடை எண்ணத்திற்கும் செயற்பாட்டுக்கும் பாராட்டுக்கள்.

இதற்காக அவருடன் உழைத்த ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் இ.குணநாதன் தலைமையில் குழுவினர்க்கு நன்றிகள். இன்றைய கால கட்டத்தில் அரசினால் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திகள் பல நிதி பற்றாக்குறை மற்றும் அவற்றை செயற்படுத்துவதில் உள்ள செலவீனங்களை ஒழுங்குபடுத்துவதிலும் அவற்றை நிர்வாக ரீதியில் சட்ட திட்டங்களுக்கு உள்ளாக அணுவதில் காணப்படும் தாமதங்கள் வாயிலாக விரைவாக ஈடேற்றுவதில் இழுபறிகள் உள்ளன.

இந் நிலையில் மக்களுக்கு வேண்டிய எமது இனத்தின் பண்பாடு கலாச்சாரம் வரலாறு போன்றவற்றினை நிலைநிறுத்தத் தக்க செயற்றிட்டங்களை கொடையாளர்களிடம் கையளித்து அவற்றை மக்கள் மயப்படுத்துவது சிறந்த உத்தியாகும். அரச நிறுவனம் மேற்கோள்ளும் அபிவிருத்தியில் பங்கேற்பு அபிவிருத்தி என்பதற்கு மேலாகச் சென்று மக்களின் பங்களிப்பாக அபிவிரு;தியை முன்கொண்டு செல்வதும் அவசியமாகவுள்ளது. அது தனவந்தர்கள் கொடையாளிகளை கிராம மட்டத்தில் இணைப்பதாக அமையும்.

இதேநேரம் இன்று பலர் அரச தாபனங்களுக்கு தமது சொத்துக்களை நன்கொடை அளிக்க முன்வருகையில், அவ்வாறான சூழ்நிலைகளில் மத்திய அரசாங்கம் சார்ந்த தாபனங்களுக்கு அன்பளிப்பது இன முரன்பாடும் பல்வேறு பட்ட ஆக்கிரமிப்பினையும் எதிர்கொள்ளும் இனம் நாம் என்ற வகையில் சரியான தீர்மானம் இல்லை. மேலும், மத்திய அரசின் தாபனங்கள் கொழும்பு மட்ட முடிவுகளுக்கு கட்டுப்பட்டு செயற்படலாம். ஆனால், உள்ளுராட்சி மன்றத்திற்கு நிலங்களை அன்பளித்தால் அதில் எமது மக்கள் பிரதிநிதிகளின் முடிவே செல்வாக்குச் செலுத்தும். மத்திய அரசு சார்ந்த தாபனங்களுக்கு காணித் தேவை காணப்படின் அவற்றை உள்ளுராட்சி மன்றங்களுக்கு கையளித்து குறித்த உள்ளுராட்சி மன்றங்கள் மத்திய அரசின் தாபனங்களுக்கு வாடகைக்கு விட முடியும். இதன் வாயிலாக எமது நிலம் சார்ந்த இன ரீதியிலான பாதுகாப்பினை நாம் உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். a

ஒருங்கியல் பட்டியலில் உள்ள அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கத் தயார் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஒருங்கியல் அதிகாரப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை அதில் அனேகமானவற்றை அல்லது தேவையானவற்றை வழங்க தயாராகவுள்ளோம் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் மாகாணசபை தேர்தல்களை நடத்துவோம் நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றியவேளை நான் தெரிவித்தது போல நாங்கள் ஒவ்வொரு மாகாணசபைக்கும் அதன் சொந்த பொருளாதாரத்தை வழங்க விரும்புகின்றோம்.

அதன்காரணமாக இந்தியா போன்று ஒவ்வொரு மாகாணமும் ஏனைய மாகாணத்தின் பொருளாதாரத்துடன் போட்டியிடும்.இதனால் நன்மையேற்படும் பொருளாதாரம் போட்டிதன்மை மிகுந்ததாக காணப்படும்.

மேலும் இந்த மாகாணங்கள் தங்களின் பொருளாதார சமூக அபிவிருத்தியை தேசிய கொள்கை கட்டமைப்பிற்குள் கையாளவேண்டும்.

இந்த அடிப்படையில் ஒருங்கியல் அதிகாரப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை அதில் அனேகமானவற்றை அல்லது தேவையானவற்றை வழங்க தயாராகவுள்ளோம்.

சில சிறுபான்மை குழுக்கள் செனெட்டிற்கான வேண்டுகோளை விடுத்துள்ளன என்னை பொறுத்தவரைக்கும் எங்களை பொறுத்தவரைக்கும் நாங்கள் அதனை எதிர்க்கமாட்டோம்.ஆனால் இதனை வெறுமனே அரசாங்கம் மாத்திரம் ஏற்றுக்கொள்ள முடியாது அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.நாடாளுமன்றத்தில் பல கட்சிகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்

நாடு திரும்பும் பஸில் – ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விரைவில் இறுதி முடிவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் களமிறங்கவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என அக் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அமெரிக்காவில் தங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்னும் ஓரிரு நாள்களில் நாடு திரும்புவார். அதன்பின்னர் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று பொதுஜன பெரமுனக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

“கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் இறுதித் தறுவாயிலேயே ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்டோம். வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான பலம் எமது கட்சியிடம் இன்னும் உள்ளது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பலர் போட்டியிடவுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஐந்தாறு மாதங்கள் உள்ளன.

எனினும்,அதுவரை காத்திருக்கமாட்டோம் எனவும் இது தொடர்பில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.a

இலங்கையின் மூன்று விமான நிலையங்களை கையகப்படுத்துவது தொடர்பில் அதானி குழுமம் ஆலோசனை

இலங்கையின் 03 விமான நிலையங்களின் நிர்வாகத்தை கையகப்படுத்துவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் அதானி குழுமம் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு இரத்மலானை விமான நிலையம் மற்றும் மத்தள ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை மேற்கோள்காட்டி த இந்து வர்த்தக இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.

அந்த விமான நிலையங்களின் வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் பயணிகளின் திறனை அதிகரிப்பதற்கும் ஒரு தனியார் பங்காளியின் ஆதரவு எதிர்பார்க்கப்படுவதுடன், அதானி குழுமம் அதற்காக இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை சர்வதேச விமான நிலையம் உட்பட இந்தியாவில் உள்ள 07 விமான நிலையங்களின் நிர்வாகத்தை தற்போது அதானி குழுமம் நிர்வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை பிரித்தானியா உன்னிப்பாகக் கவனிக்கும்

சர்வதேச இணைய வழங்குனர்கள் மற்றும் ஆர்வலர்களின் கவலைகள் எதிர்ப்புகளை மீறி,   ஜனவரி 24 அன்று நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளதானவும், இலங்கை இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றிய  இந்த சட்டத்தின் முன்னேற்றம் குறித்து  உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும்  என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

சிவில் சமூகம், எதிர்க்கட்சிகள் மற்றும் சர்வதேச இணைய வழங்குநர்கள் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் எதிர்மறையான தாக்கங்கள் குறித்து கவலை தெரிவித்த போதிலும், இலங்கை நாடாளுமன்றம் ஜனவரி 24 அன்று அதை சட்டமாக நிறைவேற்றியுள்ளது என இராஜாங்க அமைச்சர் Anne-Marie Trevelyan (வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம்) ) பிரித்தானிய   நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“ஒக்டோபரில் தான் இலங்கை ஜனாதிபதி விக்கிரமசிங்கவைச் சந்தித்தபோதும், தெற்காசியத்திற்கான இராஜாங்க அமைச்சர் லார்ட் அஹ்மட் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை ஜனவரி 25 ஆம் திகதி சந்தித்தபோதும் கூட , கருத்துச் சுதந்திரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்தச் சட்டத்தின் தாக்கம் குறித்து பிரித்தானியா தனது அதிருப்திகளை வெளிப்படுத்தியது ”என அவர் பிரித்தானியா  நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தை நாமல் ராஜபக்ஷ சந்தித்தார்

இந்தியாவின் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சந்தித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ அயோத்தி ராமர் கோவில் பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் தனிப்பட்ட பயணமாக இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம் அமைப்பது தொடர்பில் இந்திய பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் கிழக்கு ஆளுநருடன் ஆலோசனை

இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்துக்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது.

திருகோணமலை துறைமுகத்தை மேம்படுத்துவதன் ஊடாக வங்காள விரிகுடாவில் பயணிக்கும் கப்பல்களுக்கு அவசர நிலையின்போது விரைவான சேவைகளை வழங்க முடியும் என இந்திய பாதுகாப்பு அமைச்சின் குழுவினர் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

அவுஸ்திரேலியாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – இந்திய வெளிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு

அவுஸ்திரேலியாவின் தலைநகர் பேர்த்தில் வெள்ளிக்கிழமை (09) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்திய அறக்கட்டளை மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார்.

இந்த மாநாட்டை “நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப் பொருளில் இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

டெலிகொம் நிறுவனத்தின் உரிமத்தை வெளிச்சக்திகளுக்கு விற்பதன் மூலம் ஏற்படும் பாதிப்புக்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்குமா? – சஜித் கேள்வி

ஶ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் உரிமையை அரசாங்கத்திடம் இருந்து வெளி நிறுவனத்திற்கு மறுசீரமைப்பதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்புக் கூறுமா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) நிலையியற் கட்டளை 27 /2 இன் கீழ் கேள்வி நேரத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நஷ்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் புதிய முகாமைத்துவ திட்டத்தின் அடிப்படையில் தற்போது இலாபம் ஈட்டும் நிறுவனங்களின் செயற்பாட்டுச் செலவுகளைக் குறைப்பது மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டும். என்றாலும் இலாபம் ஈட்டும் நிறுவனங்களை அதிக இலாபம் ஈட்டக்கூடிய முறைமைக்குச் செல்ல வேண்டும். பொது நிறுவனங்களின் மறுசீரமைப்புக்காக அமைக்கப்பட்ட அலகு மூலம், டெலிகொம் மற்றும் காப்புறுதி நிறுவனம் உட்பட அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களை மறுசீரமைப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், குறித்த அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வதற்கான ஏலத்தை சமர்ப்பித்த நிறுவனங்கள், அவர்களின் தகுதி மற்றும் டெலிகொம் நிறுவனத்தின் சொத்துக்கள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டிருந்தால் அந்த அறிக்கையையும் சபைக்கு முன்வைக்க வேண்டும். இந்த அறிக்கையை நாட்டுக்கு வெளிப்படுத்தாது மறைத்து வைத்திருக்க வேண்டாம்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் 9.6.2023 திகதியிட்ட அறிக்கையின் பிரகாரம், டெலிகோம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவது தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், டெலிகொம் நிறுவனத்தின் உரிமையை அரசாங்கத்திடம் இருந்து வெளி நிறுவனத்திற்கு மறுசீரமைப்பதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்புக் கூறுமா என கேட்கிறேன்.

காப்புறுதி கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்கிய பிறகு கிடைத்த இலாபத்தை விட,அரசாங்க உடைமையின் போது அதிக இலாபம் ஈட்டியுள்ளமை இராஜாங்க நிதி அமைச்சின் இலாப நஷ்ட அறிக்கையிலிருந்து தெரிய வருகிறது.எனவே இதன் பின்னணியில் உள்ள காரணங்களை அரசாங்கம் இனம் கண்டுள்ளதா என கேட்கிறேன்.

மேலும், நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 8 பில்லியன் பெறுமதியான விசுபம்பாய சொத்துக்களை 4 பில்லியனுக்கு விற்க தயாராகி வருகின்றனர்.இதற்காக ஒரு பகுதியை குறைந்த விலைக்கு விற்க தனி தரகர்கள் தயாராக உள்ளனர். இவ்வாறு குறைந்த பெறுமதிக்கு விற்பனை செய்ய எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

கேரளா கைத்தொழில் அமைச்சர் ராஜீவை சந்தித்த அநுர குமார குழுவினர்

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு கலந்துகொள்கின்ற இந்திய விஜயத்தின் ஐந்தாவதும் இறுதியுமான நாள் இன்றாகும்.

இந்தியாவின் கமியூனிஸ்ட் கட்சியை (CPIM-Kerala) முதன்மையாகக்கொண்ட இடதுசாரிக் கூட்டமைப்பினால் அதிகாரம் வகிக்கப்படுகின்ற கேரளா மாநிலத்திலேயே இன்று அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்கள். மூன்று கோடியே ஐம்பது இலட்சத்திற்கு மேற்பட்ட சனத்தொகையைக் கொண்ட கேரளா மாநிலம் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் வேகமான முன்னேற்றமடைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதியுயர் இடத்தை கேரளா உரித்தாக்கிக் கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் குழு வெள்ளிக்கிழமை (09) முற்பகல்வேளையில் கேரளா தலைநகரமான திருவனந்தபுரத்தில் மாநில அரசாங்கத்தின் கைத்தொழில்கள் மற்றும் சட்டம் பற்றிய அமைச்சர் ராஜீவை சந்தித்துக் கலந்துரையாடினார்கள். அமைச்சர் ராஜீவ் இந்திய கமியூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு அங்கத்தவராக விளங்குவதோடு கட்சியின் மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவரைப்போன்றே ஒரு சட்டத்துறை பட்டதாரியுமாவார்.

அதனையடுத்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (Vikram Sarabhai Space Centre) அவதானிப்புச் சுற்றுப்பயணத்தில் பங்கேற்றனர். அந்த நிறுவனத்தின் பணிப்பாளருடன் விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டதோடு இந்திய விண்வெளி நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் பற்றியும் தகவல்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையின் பிரதானமான விண்வெளி ஆராய்ச்சி நிலையமாக அமைவதோடு அது இந்தியாவின் செய்மதி நிகழ்ச்சித்திட்டத்திற்கு அவசியமான ரொக்கெட்டுகளையும் விண்வெளிக் கலங்களையும் உற்பத்திசெய்து வருகின்றது. அதேவேளையில் தேசிய மக்கள் சக்தியின் தூதுக்குழுவினர் அதன் கட்டுப்பாட்டு நிலையத்தையும் விண்வெளி அரும்பொருட் காட்சியகத்தையும் பார்வையிடுவதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொண்டனர்.

அதன் பின்னர் மேற்படி குழுவினர் இந்தியத் தகவல் தொழில்நுட்ப துறையில் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குகின்ற முதலாவதும் மிகப்பெரியதுமான தகவல் தொழில்நுட்ப பூங்காக்களிலொன்றான திருவனந்தபுரத்தின் Technopark இலும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டனர். அதன் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தருடன் நிறுவனம் சம்பந்தமான விசேட தகவல்கள் பற்றியும் கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டனர்.

இந்த Technopark 1990 இல் கேரளா மாநில முதலமைச்சர் ஈ. கே. நாயனாரின் ஆட்சிக்காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. அது 800 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பினைக் கொண்டுள்ளதோடு கட்டிடத்தின் பரப்பளவு 10.6 மில்லியன் என குறிப்பிடப்படுகின்றது. அதற்குள் 480 கம்பெனிகள் இயங்கிவருவதோடு 70,000 பேருக்கு மேற்பட்ட தொழில்வாண்மையாளர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளார்கள். இது கேரள மாநில ஆட்சியின் கீழேயே நிருவகிக்கப்பட்டு வருகின்றது.

அடுத்ததாக இந்த பிரதிநிதிகள் குழு G Tech நிறுவனத்தின் பிரதம செயலாளரால் முன்வைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான சமர்ப்பணத்தில் பங்கேற்றதோடு கேரளா பல்கலைக்கழகத்தில் அவதானிப்புச் சுற்றுப்பயணத்திலும் இணைந்து கொண்டார்கள். அதனைத்தொடர்ந்து திருவனந்தபுரம் தலைநகரத்திற்கு தெற்கில் அமைந்துள்ள கரையோர Kovalam இன் Vellar கைப்பணிகள் கிராமத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கு உருவாகியது.

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் 10 ஆந் திகதி இலங்கை திரும்ப உள்ளனர்.