எதிர்க்கட்சியினர் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க வேண்டும் – நாமல் ராஜபக்ச

சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்கட்சியினர் வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்க தெரிந்துக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்களால் வரவு செலவு திட்டத்தில் இருக்கும் பிழைகளை மாத்திரமே சுட்டிக்காட்ட முடியும்.

அதனை தோற்கடிப்பதற்கான உரிமை எதிர்கட்சியினருக்கே இருக்கின்றது என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின் போது உரம் தொடர்பான விடயத்தில் வாயை மூடிக்கொண்டு இருந்ததால் இறுதியில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

இதேவேளை வரவு செலவு திட்டத்தில் இருக்கும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

புலம்பெயர் இலங்கையர்கள் இலங்கையில் புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும்

புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புலம்பெயர் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் மொழி அறிவை சிங்களம், தமிழ் மொழிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது.

2030ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் பல்கலைக்கழகளிலும் அறிமுகப்படுத்தப்படும்.

தமிழ், சிங்கள புலம்பெயர் இலங்கையர்கள் இந்நாட்டு பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிருப்தியளிக்கும் கோப் தலைவரின் செயற்பாடுகள்; பதில் தலைவரை நியமிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

கோப் குழுவின் தலைவர் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை. ஆகவே கிரிக்கெட் தொடர்பான விசாரணைகள் கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தலைமையில் முன்னெடுக்கப்படுமாயின் கோப் குழுவில் நாங்கள் பங்குப்பற்ற போவதில்லை. ஆகவே உரிய தீர்மானத்தை எடுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

கோப் குழுவின் தலைவரின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன. ஆகவே கிரிக்கெட் சபை தொடர்பான விசாரணைகளை அவர் தலைமையில் முன்னெடுப்பது முறையற்றது. பதில் தலைவரை நியமியுங்கள் என எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்கள். முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உரிய தீர்மானம் எடுப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற அமர்வின் போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் செயற்பாடுகளை சுட்டிக்காட்டி அவருக்கு எதிரான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார உரையாற்றுகையில், பாராளுமன்ற குழுக்களில் கோப் குழு கௌரவமானது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழுவுக்கு ஒருமுறை நான் முன்னறிவிப்பு இல்லாமல் சென்றதால் அவர் என்னை குழுவில் கலந்துக் கொள்ள அனுமதிக்கவில்லை. அனுமதி பெற்றுக்கொண்டதன் பின்னர் குழு நடவடிக்கையில் கலந்துக்கொள்ளுமாறு உறுதியாக அறிவித்தார்.ஆனால் தற்போது பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையிலான கோப் குழுவுக்கு வருபவர்கள் யார் என்று தெரியவில்லை.

கோப் குழுவின் நடவடிக்கைகளில் கலந்துக் கொள்ள ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் கோப் குழுவின் தலைவரின் ஊடக செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.கோப் குழுவின் கௌரவத்தை பாதுகாப்பதை விடுத்து பேராசிரியர் ரஞ்சித் பண்டார கோப் குழுவின் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு நிறுவனங்களுடன் மோசடி செய்கிறார். ஆகவே இவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கோப் குழுவின் தலைவரது செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிடுகிறோம்.கிரிக்கெட் விவகாரம் தொடர்பில் கோப் குழுவில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தலைமையில் முன்னெடுப்பதை நிறுத்தி மாற்று தீர்மானங்களை முன்னெடுங்கள் என்பதை வலியுறுத்துகிறேன் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோப் குழுவின் தலைவர் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை.ஆகவே கிரிக்கெட் தொடர்பான விசாரணைகளை கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தலைமையில் முன்னெடுக்கப்படுமாயின் கோப் குழுவில் நாங்கள் பங்குப்பற்ற போவதில்லை.ஆகவே உரிய தீர்மானத்தை எடுங்கள் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல இவ்வாறான பிரச்சினைகள் தோற்றம் பெறும் என்பதால் தான் கோப் மற்றும் கோபா உள்ளிட்ட முக்கிய குழுக்களின் தலைமைத்துவ பதிவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குங்கள் என்று வலியுறுத்தினேன். மக்கள் போராட்டத்துக்கு பயந்து நீங்கள் ( சபாநாயகரை நோக்கி) அப்போது அதற்கு இணக்கம் தெரிவித்தீர்கள். போராட்டம் முடிவடைந்ததன் பின்னர் வழங்கிய வாக்குறுதியை மறந்து விட்டீர்கள். இதுவே உண்மை என்றார்.

கோப் குழு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு உரிய தீர்மானத்தை அறிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

வடக்கில் 7 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வியை தொடராது விலகியுள்ளனர் – வடமாகாண பிரதம செயலர்

வடக்கில் 7ஆயிரம் மாணவர்கள் க. பொ.த உயர்தர பரீட்சையின் பின்னர் தமது உயர் கல்வியை தொடராது கல்வி நடவடிக்கையை இடைநிறுத்தியுள்ளனர் என வடமாகாண பிரதம செயலர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் வடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் மனைப்பொருளியல் மற்றும் ஆடை வடிவமைப்பு கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் 7000 இற்கும் மேற்பட்டோர் உயர்தர பரீட்சையுடன் கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்.

அவ்வாறு உங்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தாது, சாதாரண தர சித்தி, உயர்தர சித்தி பெற்று பல்கலைக்கழகம் போக முடியாவிட்டாலும் அந்த கனவினை நீங்கள் தேசிய தொழில் தகைமை சான்றிதழ் ஊடாக பெற்று கொள்ளலாம்.

தேசிய தொழில் தகைமை சான்றிதழ் கற்கை நெறியை தொடர ரூபாய் 25000 வழங்கப்படும். இது குறித்த வடமாகாண பிரதம செயலகத்தின் இணையத்தளத்தினூடாக மேலதிக தரவுகளை பெற்று கொள்ளலாம்.

தேசிய தொழில் தகைமையினை அதன் நான்காம் தரத்துடன் (NVQ level – 4) நிறுத்திவிடாது அதன் ஏழாம் தரம் (NVQ level – 7) வரை செல்வதுடன் ஊடாக நீங்கள் பட்டம் ஒன்றினை பெற்று கொள்ளலாம் .

அவ்வாறு தேசிய தொழில் தகைமையின் 7 ஆம் தரத்தினை பெற்றால் நீங்கள் அரசாங்கத்தின் உயர் பதவிகளை வகிக்கலாம்.

உண்மையிலேயே எத்தனையோ பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இன்றி இருக்கின்றார்கள் .அவர்களுக்கு கல்வி தகைமை இருக்கின்றது. ஆனால் தொழில் தகைமை இருப்பதில்லை.ஆனால் உங்களுக்கு இப்பொழுது உங்களுக்கு சான்றிதழுடன் தொழில் தகைமையும் உள்ளது என தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்கும் அதிகாரம் வழங்கும் முன்மொழிவு பாரதூரமானது – சரத் வீரசேகர

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்கும் அதிகாரம் வழங்கும் முன்மொழிவு பாரதூரமானது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்தை பகிர்ந்தளித்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மூளைச்சலவை செய்யும் பல்கலைக்கழகங்கள் தோற்றம் பெறும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஒருசில முன்மொழிவுகள் வரவேற்கத்தக்கவை.

கொழும்பு மாவட்டத்தில் தொடர் மாடிv குடியிறுப்புகளில் வசிப்பவர்களுக்கு நிவாரணம் வழங்கும் யோசனை வரவேற்கத்தக்கது.

விவசாயிகளுக்கு காணி உரிமை வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தாலும் அதில் மாறுப்பட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.

பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகள் காணி உரிமையை முழுமையாக மக்களுக்கு உரித்தாக்குவதில்லை.

ஏனெனில் காணி விவகாரம் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்புடையது.ஆகவே காணி உரிமையை முழுமையாக வழங்காமல் நிபந்தனை அடிப்படையில் தற்காலிக உரிமத்தை மாத்திரம் வழங்குவது பொறுத்தமானதாக அமையும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை உருவாக்கும் அனுமதி வழங்கப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிடுவது பாரதூரமானது. 13 ஆவது திருத்தத்தில் கல்வி கட்டமைப்பில் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்ந்தளித்தால் கிழக்கு மாகாணத்தில் வாஹப் கொள்கையுடைய சரியா பல்கலைக்கழகம் கிழக்கு மாகாணத்திலும்,மூளைச்சலவை செய்யும் பல்கலைக்கழகம் வடக்கு மாகாணத்திலும் ஆரம்பிக்கப்படும்.

அரசியல்வாதிகள்,மாகாண ஆளுநர்கள் தமக்கு ஏற்றாட் போல் பல்கலைக்கழகங்களை உருவாக்க முயற்சிப்பாளர்கள். ஆகவே மாகாணங்களுக்கு பல்கலைக்கழக அனுமதி என்ற யோசனை முறையற்றது என்பதை வெளிப்படையாக குறிப்பிடுவோம் என்றார்.

அடை மழை காரணமாக யாழில் 850 குடும்பங்கள் பாதிப்பு

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை யாழ்ப்பாணத்தில் 850 குடும்பங்களைச் சேர்ந்த 2910 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 234 குடும்பங்களைச் சேர்ந்த 766 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 279 குடும்பங்களைச் சேர்ந்த 950பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 9பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 27பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 191பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 180 குடும்பங்களைச் சேர்ந்த 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் எதிர்கட்சித் தலைவரும் சந்திப்பு

பொருளாதாரத்தை மீட்டமையை போன்று கிரிக்கட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியும் – ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில்

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இன்று(14) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

2024 ஆம் ஆண்டுக்கான தற்போதைய ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.
கடந்த வருட வரவு செலவுத் திட்ட முன்மொழிவை உரிய முறையில் பூர்த்தி செய்ய முடியாத நிலையிலேயே இவ்வருட வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் தரப்பில் இருந்து நோக்கும் போது இது பாதகமான வரவு செலவுத் திட்டம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தலை தொடர்ச்சியாக ஒத்திவைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை மீட்டமையை போன்று கிரிக்கட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியும் – ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில்

இந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டுவர விரும்புவதாகவும், வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியுமாக இருந்தால் கிரிக்கெட் விளையாட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14) பிற்பகல் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்காக இந்தக் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆசிரியர்கள் மற்றும் செய்திப் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,

இவ்வருட வரவு செலவுத் திட்டம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியலை மாற்றியமைக்கும் வரவு செலவுத் திட்டமாகும்.வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் இலக்கை ஏற்கனவே தான் நெருங்கிவிட்டதாகவும், அரசியல் நோக்கின்றி அந்த இலக்கை அடைய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகள் தேர்தலை இலக்கு வைத்து செயற்பட்டாலும் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதே தனது முதல் கடமையாகும் எனவும் அதன் பின்னர் ஏனைய விடயங்களில் கவனம் செலுத்த முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க ஆகியோர் 2024 வரவு செலவுத் திட்டம் மற்றும் அதன் அடிப்படை குறித்து இங்கு நீண்ட விளக்கமளித்தனர்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது:

ஒரு நாடாக முன்னோக்கிச் செல்லும்போது அரசாங்கச் செலவுகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும். அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பல தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

மேலும், மத்திய வங்கியின் சட்டத்தின்படி இப்போது எமக்கு பணத்தை அச்சிடவோ வங்கிகளிடம் கடன் பெறவோ முடியாது. மேலும், அரசாங்கத்திற்கு பெறக்கூடிய கடன்களும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது நாம் பெருமளவு தொகை கடன்கள் செலுத்தவேண்டியுள்ளது.

குறிப்பாக, பௌத்த பொருளாதார தத்துவத்தின்படி அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இப்போது வருவாயை உருவாக்கி முன்னோக்கிச் செல்ல வேண்டும். இதுவரை நம் நாட்டில் இருந்த பொருளாதார முறைமை வெற்றிபெறவில்லை. 1972 இல் முழுமையான சோசலிசப் பொருளாதாரம் பின்பற்றப்பட்டதோடு 1977 இல் பொருளாதாரத்தின் ஒரு பகுதி திறந்து விடப்பட்டது.பொருளாதாரத்தை திறந்து அரச நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் இதை அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் முன்னெடுத்துச் செல்ல முடியாது.

இன்று சிங்கப்பூர், மலேசியா போன்ற முன்னேறிய நாடுகளின் பொருளாதாரம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டு விட்டது. இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் இலங்கையில் மிகப்பெரிய தனியார்மயத்தை மேற்கொண்டு வருகின்றோம். அதாவது காணி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்திய விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு முழு உரிமையை வழங்க வேண்டும். மேலும் குறிப்பாக அரச அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கும் அந்த உரிமை வழங்கப்படும்.

நாட்டின் பொருளாதாரத்திற்காக 500 பில்லியன் முதல் 1 டிரில்லியன் ரூபாய் வரை சொத்துக்களை உள்ளடக்கியுள்ளோம். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸினை விற்றாலும் இந்தச் சேவைகள் அனைத்தையும் சேர்த்தாலும் இந்தத் தொகை கிடைக்காது. இவற்றின் உற்பத்தியை இப்போது அதிகரிக்கலாம். நாங்கள் எடுத்துள்ள ஒரு பாரிய நடவடிக்கையாக நான் பார்க்கிறேன். இது இலங்கையின் மிகப்பெரிய தனியார்மயமாக்கலாகும்.

சாதாரண மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் நில உரிமையை வழங்கவில்லை. ஷங்ரில்லா ஹோட்டலுக்கு நில உரிமையை வழங்கினோம். ஆனால் இது சாதாரண மக்களுக்கு வழங்கப்படவில்லை. அந்த காணிகளை மக்களுக்கு வழங்குவதற்காகவே மகவெலி ஆரம்பிக்கப்பட்டது. சீ மற்றும் எச் வலயங்களில் உள்ள நிலம் மக்களுக்கு வழங்கப்படவில்லை. இப்போது இவை அனைத்தும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நாம் தற்போது ஆரம்பித்துள்ளோம். எங்களுக்கு மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த பொருளாதாரம் மற்றும் சந்தை தேவை என்பதால், RCEP அமைப்பைப் போன்றே இந்தியா மற்றும் பங்களாதேஷ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் எங்கள் சந்தையை விரிவுபடுத்த நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நாம் ஒரு போட்டி பொருளாதாரமாக மாற வேண்டும். போட்டியற்ற வணிகங்கள் போட்டித்தன்மையுடன் இருக்க வேண்டும். அதற்காக நாம் தனியான உதவிகளை வழங்குகிறோம்.பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் குறுகிய கால திட்டங்களாக விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை நவீனமயமாக்கல் திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். விவசாயத்தை நவீனமயமாக்கினால், நாட்டில் பாரிய விவசாயப் பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.

சுற்றுலாத்துறையின் ஊடாகக் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்கவும் நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை 05 மில்லியன்களாக அதிகரிக்கவும் எதிர்பார்த்திருப்பதோடு, டிஜிட்டல் பொருளாதார முயற்சிகளையும் அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவுடன் முன்னோக்கிச் செல்லவும் எதிர்பார்க்கிறோம். இதுவரையில் அதுபற்றி கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

அதற்கான மனித வளமும் அவசியப்படுகிறது. கல்வி முறையில் மாற்றம் செய்து அந்த தேவையை பூர்த்தி செய்துகொள்ள எதிர்பார்க்கிறோம். அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை புதிதாக ஆரம்பிப்பதற்கு அவசியமான சட்டங்கள் உருவாக்கப்படும்.

பல்கலைக்கழங்களில் கட்டணம் அறவிடப்படும் பட்சத்தில் அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு கடன் தொகையும் வழங்கப்படும். அதேபோல் தொழிற் பயிற்சித் துறையை மறுசீரமைத்து மாகாண சபைகளின் கீழ் நடத்திச் செல்ல எதிர்பார்க்கிறோம்.

மாகாண சபைகளுக்கு ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கு காணப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. புதிய தொழில் வாய்ப்புக்களும் வருமான வழிமுறைகளும் உருவாக்கப்பட வேண்டும். அந்த பணிகளை 2030க்குள் செய்து முடிக்க வேண்டும். 2024 ஆம் ஆண்டில் நாம் புதிய பொருளாதார வேலைத்திட்டங்களை ஆரம்பிப்போம்.

அதேபோல் 21 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக ஆணைக்குழுக்கள், பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றின் பல்வேறு அறிக்கைகள் எனக்கு கிடைத்துள்ளன. அதனால், நிறைவேற்று அதிகாரத்தின் செயற்பாடுகளுக்கு பாராளுமன்றத்தின் ஒத்துழைப்பும் கிடைக்கிறது.

ஊழல் ஒழிப்புக்கான சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டுள்ள அதேநேரம், தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்த்து அரசியலமைப்புச் சபையினால் அதற்கான அங்கத்தவர்கள் நியமிக்கப்படும் வரையில் காத்திருக்கிறோம்.

சர்வதேச நாணய நிதியத்துனான பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக “அரச நிர்வாக பகுப்பாய்வு” செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கை சிங்களம் – தமிழ் மொழிகளில் கிடைத்தவுடன் அதனை செயற்படுத்துமாறு அறிவிப்போம்.

அதனை மேற்பார்வை செய்வதற்கான பாராளுமன்றத்தில் மேற்பார்வைக் குழுவொன்றை நிறுவ உள்ளோம். மோசடி தொடர்பில் தேடியறிந்து அதனை கட்டுப்படுத்துவதே எமகு நோக்கமாகும்.

ஐக்கிய இராஜ்ஜியத்தில் செய்யப்பட்டதை போன்று பாராளுமன்ற தரநிலை தொடர்பான வரைபை முன்வைக்க எதிர்பார்க்கிறோம்.

அதனால், நாட்டில் காணப்படும் அரசியல் முறையை தொடர்ந்தும் முன்னெடுப்பதா அல்லது மாற்றங்கள் அவசியமா என்பதை தேடியறிவதற்கான ஆணைக்குழு ஒன்றினை நியமித்துள்ளோம்.

அரசியல் கட்சிகள் உரிய வகையில் செயற்படாவிட்டால் ஜனநாயகம் இருக்காது. எனவே அரசியல் கட்சிகளை நிர்வகிப்பது எப்படி, தேர்தல் சட்டம் மற்றும் செலவீனங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று தேடிப்பார்க்க வேண்டியது அவசியமாகும்.

அதேபோல், ஜனசபை முறைமையை ஏற்படுத்தவும் எதிர்பார்க்கிறோம். ஒரு வருடத்திற்கும் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த சூழலிலேயே தற்போதைய வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எச்.சமரதுங்க குறிப்பிட்டதாவது.

இலங்கைப் பொருளாதாரத்தின் முழுமையான தரவுகள் எம்மிடம் இல்லை. 2022 இல் நாட்டின் பொருளாதார மந்தநிலை பற்றிய தரவுகளே எங்களிடம் உள்ளன. கடந்த வருடம் நாட்டின் பொருளாதாரம் 7.3 சதவீதமாக முடங்கியது. இந்த வருடத்திலும் பொருளாதாரம் 2% ஆக முடங்கியது.

ஆனால், 2024 பொருளாதாரம் வளர்ச்சி காணும் என சர்வதேச நிதி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அந்த வகையில், 1.8% நேர் பெறுமதியிலான வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் பொருளாதார மந்தநிலையில் இருந்து மீண்டு வந்துள்ளோம் என்பதை புள்ளி விவரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.

2022 ஏப்ரல் மாதமளவில் நாட்டின் கையிருப்பு 24 மில்லியன் டொலர்களாக காணப்பட்டது. தற்போதைய அரசாங்கம் அதனை 3.5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கச் செய்துள்ளது. அடுத்த வருடம் அடிப்படைக் கணக்கில் அதிகரிப்பை காண முடியும் என எதிர்பார்க்கப்படுவதோடு. கடன் மீள் செலுத்துகையின் போது அடிப்படை கணக்கு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

வாகன இறக்குமதி தவிர்ந்த ஏனைய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு கையிருப்பும் வரையறுக்கப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட 2023 உடன்படிக்கையின் படி உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு, பேச்சுவார்த்தை மட்டத்தில் உள்ளது. இது வரையிலான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றியளித்துள்ளன.

இருதரப்பு கடன்கள் மற்றும் இறையாண்மை பத்திர கடன்கள் கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கத்தால் செலுத்தப்படவில்லை. வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடம் பெற்ற கடன்கள் தொடர்ந்து திருப்பிச் செலுத்தப்பட்டன. செலுத்தப்படாத தொகை எஞ்சியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டின் பின்னர் மேற்படி கடன் தொகையை செலுத்த முடியும்.

அடுத்த வருடம் 4127 பில்லியன் வருமானம் அரசாங்கத்திற்கு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. செலவு 6978 பில்லியன் ரூபாகவும் பட்ஜெட் இடைவெளி 8% என்ற குறைந்த அளவில் உள்ளது. பணம் அச்சிடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் போயுள்ளது. அரச வங்கிகளின் கடன் வழங்களுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கு பணத்தை தேட வேண்டிய அவசியம் ஏற்படும் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கத்துக்கமைய கடன் பெறுதலின் போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் அரசாங்கத்தின் செலவீனங்களுக்கு ஏற்றவாறு பணத்தை ஈட்டிக்கொள்ள வேண்டிய தேவை உருவாகும்.

சர்வதேச நிதியத்தின் 4 வருட வேலைத்திட்டத்திலும் வரவு செலவு திட்டத்திலும் அதற்கு அவசியமான யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. வரவும் செலவும் ஒரே அளவில் காணப்படுவதால், பெருமளவான மாற்று திட்டங்களுக்கு செல்ல முடியாது. சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டுக்கு அமைய அந்த செயற்பாடுகளை முன்னெடுக்க சர்வதேச கடன் வழங்குநர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்

அந்த வேலைத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமாயின், சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. இது சாதாரண காலத்தில் இடம்பெற்ற வேலைத்திட்டம் அல்ல. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த பின்னரே சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடுகளை எட்டினோம். எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு வெளியே அரசாங்கம் செயல்பட முடியாது. பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம், சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அது அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட ஒரு வேலைத்திட்டமாகும். சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் பணியே இடம்பெறுகின்றது. கடந்த 16 மாதங்களில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டத்தில் 85 முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன் ஊடாக பொருளாதாரத்தை துரிதப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். புதிய பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் புதிய சட்டங்களை தயாரிக்கவும் அதில் முன்மொழியப்பட்டுள்ளது. உற்பத்திச் சந்தையில் உள்ள குறைபாடுகளுக்கு, புதிய முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தொழிலாளர் சந்தையை வலுப்படுத்துவது குறித்தும் பட்ஜெட் மூலம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் சந்தைகள் மற்றும் நிலம் தொடர்பான பல்வேறு முன்மொழிவுகள் உள்ளன.

ஜனாதிபதி குறிப்பிட்டது போன்று நீண்டகாலமாக தீர்க்கப்படாத காணிகளின் உரிமையை மக்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர்கள் வாடகை செலுத்த வேண்டியதில்லை. அதற்கான கணக்கெடுப்புகளை நடத்தி வருகிறோம். அந்த இரண்டு திட்டங்களின் நிதி ப் பெறுமதி சுமார் இரண்டு டிரில்லியன் ரூபாய். அந்த சொத்துக்கள் நாட்டின் சந்தையில் இணைக்கப்படுகிறது என்றார்.

இங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஜனாதிபதி பதில் வழங்கினார்.

கேள்வி:கிரிக்கெட் அபிவிருத்திக்காக இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 1.4 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், தற்போது, விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மீதான தடையை நீக்க உங்களிடம் ஏதேனும் வேலைத்திட்டம் உள்ளதா?

பதில்: சர்வதேச கிரிக்கெட் பேரவையுடனான கலந்துரையாடலை நடத்த கிரிக்கட் தொடர்பில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாம் இழந்த போட்டிகளை எப்படியாவது பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம். இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் பாடசாலை மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் வகையில் கிரிக்கெட்டுக்காக 1.4 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் அவ்வாறான பிரச்சினைகள் இல்லை. ஏனைய பிரதேசங்களிலும் கிரிக்கெட்டை வளர்க்க வேண்டும். 2030ஆம் ஆண்டு வரை இவ்வாறு பணம் ஒதுக்க எதிர்பார்க்கிறோம். அப்போது நாம் உலகில் முதல் இடத்தை அடைய முடியும்.

காமினி திசாநாயக்க முன்னெடுத்த வேலைத்திட்டத்தின் காரணமாகவே 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றோம். அப்போது பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்காக நான் பல்வேறு செயற்பாடுகளைச் செய்தேன். கார்பீல்ட் சோபஸ் இலங்கைக்கு வருகை தந்து எங்களுக்கு உதவினார். இந்த நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமாயின் கிரிக்கெட்டையும் கட்டியெழுப்ப முடியும்.

கேள்வி:நவம்பர்-டிசம்பர் மாதத்திற்குள் சர்வதேச கடன் மறுசீரமைப்பு முடிவடையும் என்று எதிர்பார்த்தாலும், அது இன்னும் நடக்கவில்லை. அதற்கு இன்னும் எவ்வளவு காலம் செல்லும்?

பதில்:நவம்பர் மாதம் இன்னும் முடியடையவில்லை. நாம் கடன் வழங்கும் நாடுகளுடன் கலந்துரையாடியுள்ளோம். அந்த நாடுகள் ஒவ்வொன்றும் வெற்றிகரமான ஆலோசனைகளை சமர்ப்பித்துள்ளன. அது தொடர்பில் நாம் சர்வதேச நாணய நிதியத்துடனும் கலந்துரையாட வேண்டும். ஆனால் அவர்களை மீண்டும் டிசம்பர் 6ஆம் திகதி தான் நாம் சந்திப்போம். எனவே டிசம்பர் மாதம் இறுதி வரை பார்ப்போம். இந்தக் கட்டத்தை வெற்றிகரமாகக் கடந்து அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும். ஏற்கனவே வெஸ்டன் மிலன், அதானி போன்ற முதலீட்டாளர்கள் வந்து முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். தோல்வியடைந்த நாடு என்றால், இவ்வாறு முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள்.

கேள்வி:நீங்கள் முன்வைத்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பதிலளித்துள்ளதா? சில தரப்பினர் கூறுவது போன்று வரவு செலவுத் திட்டத்தில் முழுமையாக சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தான் உள்ளதா?

பதில்:இல்லை. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எனக்கு பதில் வரவில்லை. இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் நாங்கள் செயற்பட்டுள்ளோம்.

வெகுசன ஊடக மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிதி தேவையில்லை; நீதியே தேவை – காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் கடும் கண்டனம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டணம் வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச விசாரணையே எமக்கு தேவை எனவும் நிதி கோரி நாம் போராடவில்லை எனவும் நிதி எமக்கு தேவையில்லை எனவும் நீதியே வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று(14) மாலை நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்

இங்கு கருத்து தெரிவித்த அவர்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை தேடி சுமார் 14 ஆண்டுகளுக்கு மேலாக தாம் தொடர்ச்சியாக போராடி வருவதாகவும் இலங்கை அரசின் மீது நம்பிக்கை இல்லை எனவும் சர்வதேச விசாரணை ஒன்றே தேவை எனவும் கூறியே தாங்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் சர்வதேச சமூகத்தின் பார்வையில் எங்களுடைய போராட்டம் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் விதமாக நேற்றைய தினம் வெளியிடப்பட்ட பாதீட்டிலே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்ட விடயத்துக்கு கண்டணம் தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாம் தொடர்ச்சியாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காகவே போராடி வருகின்றோம்.இருப்பினும் எங்களுடைய கோரிக்கைகளை செவி சாய்க்காது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற ஓ எம் பியின் செயற்ப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு தாங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்த போதும் தங்களுடைய எதிர்ப்பை மீறியும் அதற்காக பாரிய நிதிகளை ஒதுக்கி வீணாக செலவழித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் தற்போது சர்வதேச நீதியை கோரி போராடுகின்ற எங்களுடைய போராட்டத்தை சர்வதேச சமூகம் உற்று நோக்கியுள்ள வேளையிலே எங்களுடைய போராட்டத்தை சிதைப்பதற்காக அதற்கு இழப்பீட்டை வழங்குவதாக கூறி சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக இந்த இழப்பீட்டுக்கான நிதி ஒதுக்கப்பட்டதற்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்ததோடு.

இந்த இழப்பீட்டுக்கான நிதி ஒதுக்கலின் ஊடாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இருக்கிறார்கள் என்ற விடயத்தை ஒத்துக் கொண்டமை நல்ல விடயம் எனவும் எமக்கு சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான நீதியே தேவை எனவும் நிதி தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பத்தினரே பொறுப்பு

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பெசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், திறைசேரியின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜயசுந்தர ஆகியோரே பொறுப்பேற்க வேண்டுமென உயர்நீதிமன்றம் அறிவித்தது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனை செய்தபோதே உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.