வடக்கு கிழக்கில் இராணுவக் குறைப்புக்கு தீர்மானமில்லை – இராணுவ பேச்சாளர்

வடக்கு, கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குத் தீர்மானிக்கவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்குமான கட்டளைத் தளபதிகளின் எண்ணிகை இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது என வெளியான தகவல் தொடர்பில் கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்குறைப்பு செய்யப்படவில்லை எனவும், கட்டளைத் தளபதிகளின் எணிக்கை குறைக்கப்படவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 14 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் அதிகளவான இராணுவத்தினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பொதுமக்களின் பெருமளவான காணிகளும் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அவ்வப்போது படையினரின் தேவைக்காகக் காணிகளும் அளவீடு செய்யப்படுகின்றன.

இந்நிலையில், வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என அரசியல்வாதிகளும், பொதுமக்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், வடக்கு, கிழக்கில் அதிகளவான படையினர் நிறுத்தப்பட்டுள்ள போதிலும், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது எனச் சமூகச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே, வடக்கு, கிழக்கில் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்கப் போவதில்லை என இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ள நிலையில் இராணுவத்தினரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு-கிழக்கில் விகாரைகளை நிர்மாணிக்கக் கூடாது என எந்தச் சட்டத்தில் உள்ளது? – அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தமிழர்களுக்காக இந்து ஆலயங்கள் உள்ளன. அவர்கள் அங்கு சென்று சுதந்திரமாக வழிபடுகின்றார்கள். இந்நிலையில், 25 மாவட்டங்களிலும் சிங்களவர்களுக்காகப் பௌத்த விகாரைகள் இருப்பதில் என்ன பிரச்சினை? வடக்கு – கிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கக்கூடாது என்று எந்தச் சட்டத்தில் உள்ளது.”

– இவ்வாறு கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க.

‘திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 238 சிங்களவர்களுக்கு 23 பௌத்த விகாரைகள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன. 10 சிங்களவர்களின் வழிபாட்டுக்காகத் தலா ஒரு விகாரை வீதம் அமைக்கப்படவுள்ளது. குச்சவெளி பகுதியில் இந்தப் புதிய விகாரைகளை அமைக்கும் திட்டத்துக்கான அனுமதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது’ – என்று கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகள் இருக்கக்கூடாது – புதிதாக நிர்மாணிக்கப்படக் கூடாது என்று யார் சொன்னது? அப்படியாயின் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்களா? வடக்கு – கிழக்கில் மாத்திரம் தமிழர்களுக்கு இந்து ஆலயங்கள் அமைக்கப்படவில்லை. நாட்டின் 25 மாவட்டங்களிலும் தமிழர்களுக்காக இந்து ஆலயங்கள் உள்ளன. சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் இந்து ஆலயங்கள் பெருமளவில் உள்ளன. உதாரணத்துக்குக் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் எத்தனை இந்து ஆலயங்கள் உள்ளன? அங்கு மூலைமுடுக்கெல்லாம் பெரிய, சிறிய இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராகச் சிங்கள பௌத்தர்கள் போர்க்கொடி தூக்கினார்களா? பல இடங்களில் இந்து ஆலயங்களுக்குச் சென்று சிங்கள பௌத்தர்கள் கூட வழிபடுகின்றார்கள்.

எனவே, தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும் இனவாதத்தை – மதவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.

இன்று நாட்டு மக்களுக்கிடையில் இனவாத, மதவாதப் பிரச்சினைகள் இல்லை. தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும்தான் இப்படியான பிரச்சினைகளைத் தூண்டி விடுகின்றன.” – என்றார்.

பெளத்த மயமாக்கலை தடுத்து நிறுத்திய ஆளுநருக்கு எதிராக பிக்குகள் சிலர் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை நிலாவெளி வீதியில் இலுப்பைக்குளத்தில் தமிழ் மக்கள் வாழுமிடத்தில் பொரலுகந்த ரஜமகா விகாரை அமைப்பதை தற்காலிகமாக நிறுத்துமாறு ஆளுநர் செந்தில் தொண்டமான் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக பிக்குகள் சிலர் இன்று (12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை புல்மோட்டை வீதியின் ஒரு பாதையை மறித்து பிக்குகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பொலிஸார் பாதையின் ஒரு பகுதியின் ஊடாக போக்குவரத்தை ஒழுங்கமைத்தனர்.

விகாரை அமைக்க அத்திவாரமிடப்பட்ட பகுதிக்கு சென்ற பிக்குகள் அங்கு தற்போது புதிதாக நடப்பட்ட அரச மரக்கன்றுக்கு முன்பாக சமய அனுஷ்டானங்களை மேற்கொண்டு, பின்னர் வீதிக்கு வந்து இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.

சிங்கள தமிழ் முஸ்லிம் சகோதரத்துவத்தை குழப்புகின்ற ஆளுநரை அனுப்புவோம், புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணியை நிறுத்த சம்பந்தன் யார்? போன்ற பதாதைகளை ஏந்தியவாறு பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை குறித்த பகுதியில் எது வித விகாரையும் இருக்கவில்லை என அக்கிராமத்தில் உள்ள வயோதிப பெண்ணொருவர் உட்பட சிலர் ஊடகங்களுக்கு தமது கருத்துக்களையும் வெளியிட்டு இருந்தனர்.

இதனையஅடுத்து. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தவர்களுக்கும், பௌத்த மதகுரு ஒருவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம் பெற்ற போதிலும் பொலிஸாரினால் சமரசம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த மொரவெவ மஹா திபுல்வெவ ஸ்ரீ இந்திரராமதிபதி பொல்ஹெங்கொட உபரதன தேரர், இந்த இடத்தில் விகாரை அமைப்பதற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஆளுநர் செந்தில் தொண்டமான் மகாசங்கத்தை வீதிக்கு இழுத்தார்.இப்போது இப்படி என்றால் 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படுமாயின் பிக்குகள் தமது சமய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டும் என்றார்.

இரா.சம்பந்தனின் அறிவுறுத்தலின் பிரகாரமே ஆளுனர் இந்த உத்தரவை பிறப்பித்ததாக பிக்குகள் குமுறினர்.

வடக்கு, கிழக்கில் மாத்திரமாவது மாகாண சபைத் தேர்தல் நடாத்த வேண்டும்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்திய தூதுவர் கோபால் பாக்லேயுடனான சந்திப்பின்போது வட கிழக்கில் மாத்திரமாவது மாகாணசபை தேர்தலை நடத்த வலியுறுத்தி கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் காலத்தில் நாடாளுமன்ற தேர்தலையும் முடக்கி விடுவார் என்றும் தான் ஒரு போதும் யாழ்ப்பாணத்தில் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மாதவனை மயிலத்தமடுவில் மீளவும் முளைத்த ஆக்கிரமிப்பு புத்தர்

இலங்கையின் கிழக்கே பண்ணையாளர்களுக்கு என ஒதுக்கப்பட்ட மாதவனை மயிலத்தமடு விடயம் பலராலும் அறியப்பட்டது.

மாதவனை மயிலத்தமடு பகுதியில் அதிகமான பண்ணையாளர்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காகவும் தங்களது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காகவும் அப்பகுதி ஒதுக்கப்பட்டிருந்தமை வரலாறாகும்.

ஆனால் கடந்த சில வருடங்களாக மாதவனை மயிலத்தமடு பகுதியில் மகாவலியின் தலையீடு காரணமாக பண்ணையாளர்களும் கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளானதுடன் பல கால்நடைகளும் சுடப்பட்டும் கத்திகளால் வெட்டப்பட்டும் உயிரிழந்த சம்பவங்கள் அரங்கேறி இருந்தது.

அதே வேளையில், அங்கு சென்று வருகின்ற பண்ணையாளர்களின் உயிர்களும் உத்தரவாதம் இல்லாதா நிலையும் என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு நிலைமையும் உருவாகி இருந்தது.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் விவசாயம் செய்வதற்காகவும் பயிர் செய்வதற்காவும் கால்நடைகளின் இடமாக கருதப்படும் மாதவனை மயிலத்தமடு பகுதியில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி அவர்களை பயிர்செய்கை மற்றும் விவசாயம் போன்ற தொழில்களில் ஈடுபடுத்தி பண்ணையாளர்களுக்கும் மகாவலிக்கும் பெரும்பான்மை இன மக்களுடனும் முரண்பாடு ஏற்படுத்தும் விதத்தில் பல முன்னெடுப்புகளை முன்னெடுத்திருந்தார்.

மயிலத்தமடு மாதவணையில் மகாவலியால் 2019 இல் அகற்றப்பட்ட விகாரை இருந்த இடத்தில் 2023.07.30 ஆம் திகதி மீண்டும் துப்பரவு பணியில் ஈடுபட்டுவருவதாகவும் மாறாக பண்ணையாளர்களை மகாவலி அதிகாரிகள் கைது செய்வதற்கு முயற்சிக்கின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக வடக்கு கிழக்கில் தொல்பொருள் எனும் போர்வையில் தமிழர்களின் பாரம்பரிய காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் பௌத்த மத இனவாத அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

தற்போது கிழக்கு மாகாணத்திலும் அவர்கள் தங்களது கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளமை பண்ணையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் இருந்த கிழக்கு மாகாண ஆளுநர் கடும்போக்கு சிங்கள வாத சிந்தனையுடன் சிங்கள குடியேற்றம் இடம்பெற வேண்டும் என்றும் பண்ணையாளர்களை அடித்து துரத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கள விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா இடமாற்றப்பட்டு சென்றிருந்தார்.

ஆனால் இன்று கிழக்கு மாகாணத்தில் ஒரு புதிய ஒரு ஆளுநர் வந்திருக்கின்ற போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து இந்த கிழக்கு மாகாண பண்ணையாளர்களின் முதுகெலும்பாக இருக்கும் இந்த மாதவனை மயிலத்த மடு மேச்சல் தரை பகுதியை உடனடியாக பண்ணையாளர்களுக்கு வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தையும் கிழக்கு மாகாண மக்களுடைய பிரச்சனைக்கு உடனடியாக தீர்வையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனத் தூதரகத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

சீனத் தூதரகத்தின் நிதியுதவியில் செயல்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு களுவன்கேணி கடற்தொழிலாளர் கிராமத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.

 

கன்பூசியஸ் நிறுவனத்தை நிறுவ சீனா கிழக்கு பல்கலையுடன் ஒப்பந்தம்

கன்பூசியஸ் நிறுவனத்தை நிறுவுவதற்கு கிழக்கு பல்கலைக்கழகத்துடன் யுனான் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

அண்மையில் இந்த இரு பல்கலைக்கழகங்களும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த இரு பல்கலைக்கழகங்களுக்கும் இடையே ஆசிரியர் உறுப்பினர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள், கூட்டு ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள், கன்பூசியஸ் நிறுவனம் நிறுவுதல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் போன்றவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தவே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகள் முழுவதிலும் உள்ள பல்கலைக் கழகங்களில் சீனா கன்பூசியஸ் நிறுவனத்தை நிறுவி வருகின்றது.

இந்த நிறுவனத்தை உளவு நடவடிக்கைக்காக அந்த நாடு பயன்படுத்துகிறது என்று சர்ச்சை கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எழுவான்கரை – படுவான்கரை பாதைப்போக்குவரத்தை இலவச சேவையாக்குமாறு ஜனா எம்.பி கிழக்கு ஆளுநரிடம் கோரிக்கை

கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநராக நியமனம் பெற்ற செந்தில் தொண்டமானை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா இன்றைய தினம் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர்கள் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டிருந்தார். இன்றைய தினம் திருகோணமலை மாவட்டத்திற்கு சென்று பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஆளுநரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

அத்துடன் ஆளுநரிடம் முதற் கோரிக்கையாக அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்த எழுவான் கரையில் இருந்து படுவான் கரைக்கான பாதைப் பயணத்திற்கு பொதுமக்களிடமிருந்து பணம் அறவிடும் விடயம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

முன்னாள் ஆளுநனர் ஏற்கனவே பொருளாதர நிலையில் நலிவுற்றிருக்கும் மக்களைக் கருத்திற் கொள்ளாமல் பாதைப் போக்குவரத்துக்கு கட்டணம் அறவிடுவதற்கான உத்தரவினைப் பிறப்பித்திருந்தார்.

தற்போது புதிய ஆளுநராக வந்திருக்கும் தாங்கள் வறிய நிலை மக்களுக்குள் இருந்து அவர்களின் நன்மை தீமை அனைத்தையும் அனுபவித்து இன்று இந்நிலைக்கு உயர்ந்துள்ள ஒருவர். எனவே எமது மக்களின் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு முன்னாள் ஆளுநரால் கொண்டுவரப்பட்ட இப்பாதைப் போக்குவரத்திற்கு கட்டணம் அறவிடுகின்ற விடயத்தை நிறுத்தி முன்னர் இடம்பெற்றது போன்றே இலவச சேவையினை வழங்க வேண்டும் என்று பாரளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததற்கமைவாக இவ்விடயத்திற்குக் கொள்கை அளவில் ஆளுநரால் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயமானது வீதி அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் முன்நிறுத்தி கலந்துரையாடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

செந்தில் தொண்டமான் ஆளுநராக பொறுப்பேற்றார்

கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக தனது கடமையை இன்று (வெள்ளிக்கிழமை) காலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 16ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் பெற்றுக்கொண்ட ஆளுநர் அவர்கள் இன்று திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதில் அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், வியாழேந்திரன்,கிழக்கு மாகாண சபையின் அரச திணைக்களங்களது செயலாளர்கள், அரச திணைக்கள உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையில் புரிந்துணர்வு வேண்டும் – ஜனா எம்.பி

உண்மையில் இந்த வாரம் என்பது மே மாதம் 18ம் தேதியை ஒட்டிய வாரம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஒரு துக்கமான கரி நாட்களைக் கொண்ட வாரமாக தமிழ் மக்களினால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளார் நாயகமும் மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

தற்போது நாட்டிலேற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்வூடகச் சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் குறிப்பிட்டவை வருமாறு:-

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை அனுஸ்டித்து வரும் இந்த நிலையில் இலங்கை அரசு தன்னுடைய போர் வெற்றியினை கொண்டாடிக் கொண்டு வருகின்றது. தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் இந்த போர் வெற்றியினை பிரம்மாண்டமாக இல்லாவிட்டாலும் கொண்டாடிக் கொண்டு வருகின்றார்.

நாங்கள் 2009 மே 18 ஐ ஒட்டிய காலப்பகுதியில் கிட்டத்தட்ட 140,000 பொதுமக்களை இழந்திருந்ததாக மன்னாரில் ஆயராக இருந்த ராயப்பு யோசப் ஆண்டகை வழங்கியிருந்தார்.

இந்தப் போர் தொடங்கிய காலம் இருந்து கிட்டத்தட்ட 3 லட்சம் மக்களும், போராளிகளும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதிலே பல தலைவர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றார்கள். இருந்தாலும் இந்த முள்ளிவாய்க்கால் வாரத்தினை நாங்கள் வருடா வருடம் நினைவு கூர்ந்து வருகின்றோம். இந்த முறையும் அந்த வகையிலே நினைவுகூறல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சிங்களப் பேரினவாதிகள், இனவாதிகள் குறிப்பாக சரத் வீரசேகர போன்றவர்கள் இதற்கு எதிரான கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கின்றார்கள். நேற்றைக்கு முன் தினம் கூட நினைவு தினத்தினை ஒட்டி நடைபெற்ற ஊர்திப் பவனி, விளக்கேற்றல்கள், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடுகள் போன்றவை எவை எதற்காக என்ற கேள்வி எழுப்பி இருந்தார்.

உண்மையிலேயே எங்களது மக்கள் எங்களுக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூர ற வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது. அந்த வகையில் நாங்களும் ஒவ்வொரு வருடமும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இந்தத் தினத்தில் அவர்களை நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம்.

கடந்த இரண்டு வருடங்களாக பெரும் தொற்றுக் காரணமாக அதனை அலுவலகங்களிலும் செய்திருந்தாலும், வழமையாக கல்லடிக் கடற்கரையிலே நாங்கள் இந்த நினைவு கூறலைச் செய்வது வழமை. இந்த முறை இன்றைய தினம் கல்லடிக் கடற்கரையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியம் இந்த நினைவு கூரலை இன்று பிற்பகல் 5.00 மணிக்கு செய்வதற்காக நாங்கள் சகல ஏற்பாடுகளையும் செய்திருக்கின்றோம்.

இந்த நினைவு கூறல் நிகழ்வில் இன,மத, சமய வேறுபாடுகள் இன்றி நாங்கள் ஒரு உணர்வுபூர்வமான மனிதனாக தமிழ் பேசுபவனாக தமிழ் இனத்திற்காக, தமிழ் இனத்தின் உரிமைக்காகப் போராடிய இனமாக நாங்கள் இதனை நினைவு கூறுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நாளை பிற்பகல் ஐந்து மணிக்கு கல்லடி கடற்கரைக்கு ஒன்று கூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக உருவாகிய 13 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக மாகாண சபை முறைமை என்பது 87 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

அந்த வகையில் மாகாண சபைகளுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அந்த ஆளுநர்கள் மாறி மாறி மாகாணங்களை ஆண்டு கொண்டு இருந்தார்கள். உண்மையிலேயே வடக்கு கிழக்குக்காகத்தான் அதை முக்கியப்படுத்தி இந்த மாகாண சபை முறைமையே வந்தது.

ஆனால் நீண்ட காலமாக கிட்டத்தட்ட 18 வருடங்களாக கிழக்கு மாகாண சபை அரசியல் பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தது. வடக்கு மாகாண சபை 23 வருடங்களாக அரசியல் பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தார்கள். கிழக்கு மாகாண சபையிலே இரண்டு தடவைகள் தேர்தல் நடைபெற்றிருந்தது. வடமாகாண சபையிலே ஒரு தடவை மாத்திரமே தேர்தல் நடந்திருக்கின்றது.

ஜனாதிபதியின் நேரடியான பிரதிநிதிகளான ஆளுநர்களாலேயே இந்த மாகாணங்கள் ஆளப்பட்டு கொண்டிருந்தது. கிழக்கு மாகாணம் பல ஆளுநர்களை கண்டிருந்தாலும், தற்போது ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட உண்மையிலேயே ஆளுநர்கள் என்பது ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதிகள் என்பது தெளிவாகின்றது.

ஜனாதிபதி மாறும் போது அந்தந்த மாகாண ஆளுநர்கள் ராஜினாமா செய்வதுதான் அரசியல் ரீதியாக வழமையாக நிகழ்ந்து கொண்டிருந்தது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதுடன் இவர்கள் ராஜினாமா செய்திருக்க வேண்டும். இருந்தும் ராஜினாமா செய்யுமாறு கூறியும் அடம்பிடித்துக் கொண்டிருந்த கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் நேற்றைக்கு முன் தினம் வலுக்கட்டாயமாக பதவி நீக்கம் செய்யப்பட்டு, இன்று புதியதொரு ஆளுநர் கிழக்கு மாகாண சபைக்கு நியமிக்கப்பட இருக்கின்றார்.

நான் கூற வருவது என்னவென்றால் அனுராதா யஹம்பத் கிழக்கு மாகாணத்திலே ஆளுநராக இருந்த காலத்திலேயே கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு ஒரு இருண்ட யுகமாகவே இருந்தது. அவரது முழு நோக்கமும் சிங்கள ஏகாதிபத்தியத்துடன் சம்பந்தப்பட்டதாக இருந்தது. இரண்டு சிங்கள பிள்ளைகளுக்காக ஒரு பாடசாலையை திறப்பதும், கிழக்கு மாகாணத்தில் சிங்கள பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துவதற்காக சிங்கள மக்கள் குடியேற்றத்தை அதிகரிப்பதுமே அவருடைய முழு நோக்கமாக இருந்தது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே 6 லட்சம் மாடுகள் இருக்கும் நிலையில் பண்ணையாளர்களை மிகவும் மனம் நோகும் அளவிற்கு அந்த மாடுகளை மேய்க்க முடியாத நிலைக்கு அயல் மாவட்ட சிங்கள மக்களை இந்த மாவட்டத்திற்கு உள்ளே கொண்டு வந்து சேனைப்பயிர்ச்செய்கையை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக மயிலுத்தமடு, மாதவனை போன்ற பிரதேசங்களிலும் பட்டிப்பளை பிரதேசத்திலே கந்தமல்லிசேனை என்கின்ற பிரதேசங்களிலும் அவர்களை கொன்று குடியேற்றி எங்களுடைய தமிழ் பேசும் மக்களின் இனப்பரம்பலை குறைப்பதற்கான நடவடிக்கையை அவர் எடுத்திருந்தார். ஒட்டுமொத்தமாக சிங்கள மக்களின் ஒரு பிரதிநிதியாகவே அவர் இங்கு செயல்பட்டிருந்தார்.

அந்த வகையில் இன்றிலிருந்து கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களுக்கு அந்த இருண்ட யுகம் மாற வேண்டும். ஒரு வெளிச்சமான சந்தோஷமான எதிர்காலம் இருக்க வேண்டும்.

எதிர்வரும் காலங்களிலே இன்று பதவியேற்று, கிழக்கு மாகாண சபைக்கு வரும் ஆளுநர் கூட இந்த மாகாணத்தில் மூவின மக்களும் வாழுகின்றார்கள். சரியோ, தவறோ எப்படிப்பட்ட குடியேற்றங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்று இருந்தாலும் இந்த மாகாணத்திலே மூவின மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கும் மாகாணத்தை எந்தவித மக்களினதும் மனம் நோகாமல் எதிர்காலத்திலே பாதிக்கப்படாமல் சமமாக இந்த மாகாணத்தையும் மாகாணத்தில் வாழும் மக்களையும் புதிதாக வரும் ஆளுநர் ஒருதலைப் பட்சமாக தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி வழிநடத்தாமல் மிகவும் நிதானமாக வழி நடத்துவார் என்கின்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

நாங்கள் அறிந்த வகையில் ஒரு அரசியல்வாதியாக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட குடும்பத்திலிருந்து வருபவராக அந்த ஆளுநர் இருக்க போகின்றார் என்பதனை நாங்கள் அறிந்து கொள்கின்றோம். செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாணத்துக்கு வருவதாக நாங்கள் அறிகின்றோம்.

அந்த அரசியல் பாரம்பரிய பின்னணியை கொண்ட குடும்பத்தில் இருந்து மாத்திரமில்லாமல், ஒரு மாகாண அமைச்சராக நீண்ட காலமாக இரண்டு தடவைகளுக்கு மேல் பணியாற்றியவர். மாகாணத்தின் நிர்வாகம் மாகாண மக்களது மனோ நிலையைப் புரிந்தவராக எந்த ஒரு இன மக்களையும் பாதிக்காத வகையில் அவர் நடந்து கொள்வார், நடந்து கொள்ள வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அவரிடமும் எந்தவித மக்களும் பாதிக்கப்படாமல் ஒரு ஆட்சி நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஒரு நாள் தற்போதைய சூழ்நிலையிலே மாகாணங்களிலே உள்ள பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்வதாகவும், இன்னும் ஒரு நாள் அதிகார பகிர்வு தொடர்பாக ஆராய்வதாகவும், மூன்றாவது நாள் அந்தந்த மாகாண அபிவிருத்தி சம்பந்தமாக ஆராய்வதாகவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.

ஆனால் தமிழ்த் தேசிய கட்சிகளை பொறுத்தமட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தமட்டிலே நாங்கள் ஒரு முடிவு எடுத்திருந்தோம். யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலே அபிவிருத்தி தொடர்பாகவோ அல்லது தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாகவோ மாகாண மட்டத்திலேயே உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி பேசுவதை பற்றி எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

இருப்பினும் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக ஜனாதிபதி தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச வேண்டுமாக இருந்தால் கடந்த காலங்களிலே வடக்குக் கிழக்கை இணைத்துத்தான் நாங்கள் அரசியல் ரீதியாக எங்களது உரிமைகளைப் பெறுவதற்காக நாங்கள் அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாகப் பேசுவதாக இருந்தால் வடக்குக் கிழக்கு இரண்டு மாகாணங்களையும் சேர்ந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கூட்டி பேச வேண்டும். இல்லாவிட்டால், நாங்கள் வரமாட்டோம் என கூறி இருந்தோம்.

அந்த வகையில் அவருடைய நிகழ்ச்சி நிரலினை மாற்றி இருந்தார். அபிவிருத்தி தொடர்பாக ஒதுக்கப்பட்ட திகதி பிற்போடப்பட்டது. தற்போதைய பிரச்சனைகள் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை பேசி இருந்தோம். கடந்த வெள்ளிக்கிழமை இருந்த அதிகார பரவல் பிரச்சனைகள் நேற்றைக்கு முதல் நாள் திங்கட்கிழமை பேசியிருந்தோம். ஆனால் அந்த இரண்டு நாட்களுடைய பேச்சு வார்த்தைகளிலும் இருந்து தமிழ் மக்களுக்கான எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.

இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை கூடுதலாக பேசப்பட்டது. நிலம் தொடர்பான பிரச்சனைகள், காணி கையகப்படுத்தல், தொல்பொருள் திணைக்களம், வன இலாகா, வன ஜீவராசிகள், மகாவலி அபிவிருத்தி சபைகள் போன்றவையினால் கையகப்படுத்தப்பட்ட, கையகப்படுத்தப்பட இருக்கின்ற காணிகள் தொடர்பாகப் பேசி இருந்தோம். ஆனால் பெரிதாக ஒரு முடிவும் எட்டப்படவில்லை.

எதிர்காலத்திலே காணிகள் கையகப்படுத்தப்பட மாட்டாது என்கின்ற உறுதிமொழி தான் கொடுக்கப்பட்டது. தவிர கையகப்படுத்தப்பட்டு தற்போது அவர்களது அபிவிருத்திகள் அதாவது சில இடங்களிலே இந்து கோயில்கள் அழிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் கட்டப்படுகின்ற வெடுக்குநாரிமலை குருதூர் மலை போன்ற பிரதேசங்களில் 100% தமிழர்கள் வாழும் காங்கேசன் துறையிலே தையிட்டியிலே விகாரை கட்டப்பட்டு திறக்கப்படுகின்றது. அது போன்று எங்களது இந்துக்களின் பாரம்பரியமான கன்னியா வெந்நீர் ஊற்று பறிபோய் இருக்கின்றது. பிள்ளையார் கோயில் உடைக்கப்பட்டு விகாரை கட்டப்பட்டிருக்கின்றது. ஏன் பாடல் பெற்ற திருத்தலமான கோனேஸ்வரத்தைக் கூட, கையகப்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அவைகளுக்கான தீர்வு எதுவுமே வைக்கப்படவில்லை.

இதற்கு மாறாக மிகவும் முக்கியமான அதிகார பரவலாக்கம் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை மாலை பேசப்பட்டது. ஜனாதிபதி வடகிழக்கிலுள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் அதாவது குறிப்பாக பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி வரிசையிலே இன்று 13 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதில் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதியரசர் விக்னேஸ்வரன் கையெழுத்திட்டு இருக்கின்றார். ஒரு ஆவணத்தைக் கொண்டு வந்திருந்தார். வடகிழக்கிலே எட்டு கட்சிகள் அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.

அதாவது மாகாண சபை தேர்தல் நடைபெறும் வரைக்கும் குறைந்தது ஆறு மாதங்களுக்காவது மாகாண சபைக்கு ஒரு ஆலோசனை சபையை அமைத்து, இந்த அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகப் பேச வேண்டும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சி அதனை நிராகரித்து இருந்தோம். காரணம் என்னவென்றால் ஒரு ஆலோசனை சபையை மாகாணங்களுக்கு அமைத்தால் அதை ஒரு சாட்டாக வைத்து மாகாண சபைத் தேர்தலை பின் போடுவதற்கு நாங்கள் ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பதாக இருக்கும்.

அதிகார பகிர்வு என்பது வேறு ஆனால் தற்போதைய சூழ்நிலையிலே தமிழ் பேசும் மக்கள் என்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒருமித்து வைத்து ஜனாதிபதி பேசும்போது ஒரு உடன்பாடு வரக்கூடிய சூழ்நிலை தற்போதைய நிலையில் இல்லை.

எனவே முதல் அரசாங்கம் ஒரு திட்டத்தை கொண்டு வர வேண்டும் திட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு இலங்கை அரசியல் அமைப்பிலேயே தற்போது இருந்து கொண்டிருக்கும் இந்த 13 வது திருத்தச் சட்டம் அதனுடாக பகிர்ந்தளிக்கப்பப்பட்ட அதிகாரங்கள் உண்மையிலேயே ஏற்கனவே பகிர்ந்து அளிக்கப்பட்டு மாகாண சபை முறைமையின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்த பல அதிகாரங்கள் மத்திய அரசினால் மீளப் பெறப்பட்டிருக்கின்றது.

அதை தவிர காணி அதிகாரம் பொலீஸ் அதிகாரம் போன்றவை அமுல்படுத்தப்படாமல் இருக்கின்றது ஒட்டுமொத்தமாக மாறி மாறி இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் அரசாங்கங்கள் இந்த நாட்டின் அரசியல் அமைப்பையே மீறி கொண்டிருக்கின்றார்கள்.

நான் நினைக்கின்றேன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் மக்கள் பிரதிநிதிகளுடனும் நிச்சயமாக அரசாங்கம் பேசத்தான் வேண்டும்.

எங்களைப் பொருத்தமாட்டிலே எங்களுக்குள் தமிழ் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளுக்குள் மக்களுக்குள் ஒரு புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் அந்த அடிப்படையிலேயே வரும் ஒரு தீர்வு தான் நிரந்தரமான ஒரு தீர்வாக இருக்கும் அதற்காக நாங்கள் முன்னோக்கி நகர வேண்டும் என்றார்.