உள்நாட்டுப் பிரச்சினைகளைக் கவனிக்காது உலகம் சுற்றும் வாலிபனாக ரணில் : மக்கள் போராட்டம் மீண்டும் வெடிக்கும் – ஜனா எம். பி

உள்நாட்டிலேயே பல இருக்கும்போது இத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தரமான தீர்வை காண வேண்டிய ஜனாதிபதி தற்போது நாட்டை விட்டு பல நாடுகளுக்கும் செல்வது மாத்திரமல்லாமல் எந்த பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் ஒரு ஆணைக்குழு அமைப்பதாக காட்டி காலத்தை கடத்துகின்றார் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)  தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

11ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு கூடியிருக்கின்றது. 2016 ஆம் ஆண்டு இலங்கை அனுசரணை கொடுத்து இலங்கையில் நடைபெற்ற அநீதிகளுக்கு பொறுப்பு கூறுவது தொடர்பாக பிரேரணை அங்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தையும், சர்வதேசத்தையும் தொடர்ச்சியாக ஏமாற்றிக் கொண்டே வருகின்றது.

அந்த வகையில், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் பிரதி உயரஸ்தானிகர் ஒரு எழுத்து மூலமாக அறிக்கையை கொடுத்திருக்கின்றார்.

அந்த அறிக்கையில், இலங்கையிலே நம்பிக்கையை கட்டி எழுப்ப வேண்டும். அந்த வகையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஒரு நியாயமான விசாரணை வேண்டும். இலங்கையில் ஜனநாயகம் மறுக்கப்பட்டு இருக்கின்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள், மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும், வடகிழக்கிலே நடைபெற்றுக் கொண்டிருக்கும் நில அபகரிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் அதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒரு சர்வதேச அங்கீகரிக்க கூடிய சட்ட திட்டத்தை கொண்டு வரும் வரை இடைநிறுத்தி வைக்க வேண்டும் என்பதற்கு மாறாக இந்தியாவின் வதிவிட பிரதிநிதி இலங்கையில் தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடியவாறு இங்கு ஒரு நிரந்தரமான தீர்வை முன்வைக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி இருக்கின்றார்.

பாராளுமன்றத்தில் எதிர்வரும் 21ஆம் 22 ஆம் திகதிகளில் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பந்தமாக விவாதம் வர இருக்கின்றது. இவ்வாறான பிரச்சனைகள் அனைத்தும் இந்த நாட்டில் இருக்கும்போது அதை விடுத்து பொருளாதார ரீதியான பிரச்சினைகள் இருக்கின்றது, உள்ளூர் கடன் மறுசீரமைப்பு திட்டம் இருக்கின்றது, வெளிநாட்டு கடன் மறு சீரமைப்பு திட்டம் இருக்கின்றது, பல பிரச்சனைகள் இந்த நாட்டிலே இருக்கின்றது. எதிர்க்கட்சிகள் அனைத்துமே உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பந்தமாக சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகம் சுற்றும் வாலிபனாக ஒவ்வொரு நாடாக ஏறி இறங்கி கொண்டிருக்கின்றார்.

பிரித்தானியா செல்கின்றார்,பிரான்ஸ் செல்கின்றார்,ஜப்பான் செல்கின்றார், சிங்கப்பூர் செல்கின்றார் தற்போது கியூபா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்ல இருக்கின்றார். உண்மையில் உள்நாட்டிலேயே இத்தனை பிரச்சனைகள் இருக்கும் போது இத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தரமான தீர்வை காண வேண்டிய ஜனாதிபதி தற்போது நாட்டை விட்டு பல நாடுகளுக்கும் செல்வது மாத்திரமல்லாமல் எந்த பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் ஒரு ஆணைக்குழு அமைப்பதுமாக காலத்தை கடத்துகின்றார்.

தற்போதைய உயிர்த்த ஞாயிறு பிரச்சனை தொடர்பாக மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து இது விடயமாக விசாரித்து அந்த அறிக்கையை பாராளுமன்றத்திலே சமர்ப்பிப்பதாக இருக்கின்றார். ஆனால் பாராளுமன்றத்திலே இன்று இருக்கும் பொதுஜன பெரமுன கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளுமே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறி நிற்கும் போது ஜனாதிபதி மாத்திரம் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமான சேனல் 4 வெளியிட்ட வீடியோ சம்பந்தமாக விசாரித்து ஒரு அறிக்கையை தயாரிப்பது என்பது இந்த நாட்டு மக்களை மாத்திரம் அல்ல சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயலாக தன்னுடைய வழமையான பாணியிலேயே ஏமாற்றும் செயலாகவே இவர் செய்து கொண்டிருக்கின்றார்.

தென்னிலங்கையில் இருந்து விமல் வீரவன்ச குழுவினரும் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தமிழ் மக்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் குற்றம் சாட்டுவது என்பது உண்மையிலேயே நகைப்புக்குரிய ஒரு விடயம். விமல் வீரவன்சவை பொருத்தமட்டில் அவருடைய உடம்பிலே ஓடும் இரத்தம் இன வெறியுடன் சம்பந்தப்பட்ட இரத்தம் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த இன துவேசத்தை இன வெறியை வைத்துக் கொண்டுதான் தன்னுடைய அரசியலை அவர் தக்கவைத்துக் கொள்கின்றார். எதிர்வரும் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும் இந்த நிலையில் அந்த தேர்தலில் கூட தானோ அல்லது தான் சார்ந்தவர்களோ வெல்ல வேண்டுமாக இருந்தால் இப்படியான இன துவேச இன வெறி கொண்ட கருத்துக்களை விதைப்பது சர்வசாதாரண விடயம்.

அந்த வகையில் அவர் இந்த கருத்துக்களை சொல்லியிருப்பது மாத்திரமல்ல வடக்கு கிழக்கிலே இருக்கும் சில தமிழ் பிரதிநிதிகள் தமிழ் கட்சிகள் கூட இந்த பிரச்சினையை ஒரு அரசியல் ரீதியாக அணுகப் பார்க்கின்றார்கள். உண்மையில் இந்த விடயத்தை உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் என்பது 250 க்கு மேற்பட்ட உயிர்களை காவு கொண்ட ஒரு சம்பவம் மாத்திரமல்ல நூற்றுக்கணக்கான மக்கள் காயப்பட்ட ஒரு சம்பவம் அது மாத்திரமல்ல இலங்கையின் நிலைப்பாட்டை வெளி உலகத்திற்கு உணர்த்திய சம்பவம்.

ஏனென்றால் கிட்டத்தட்ட 40 வெளிநாட்டவர்கள் உயிர்களை பறிகொடுத்திருக்கின்றார்கள். அந்த வகையிலே இந்த சம்பவத்தை அரசியலுடனோ, தமிழ் தேசியத்துடனோ, தமிழ் மக்களுடனோ இணைத்து பார்ப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம்.

புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தம் செய்ததன் காரணமாக இன்று இரண்டு அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்பட்டு இருக்கின்றது. அதில் ஒருவர் பல்கலைக்கழக மாணவன். இந்த நாட்டின் பொருளாதார சூழ்நிலை மாத்திரமல்ல நாட்டில் உள்ள நிர்வாக சீர்கேடு அது மாத்திரமல்லாமல் அமைச்சுகளில் உள்ள ஊழல்கள் சம்பந்தமாக நிர்வாகத்தை ஒழுங்காக கொண்டு நடத்த முடியாமல் இன்று பலரும் பல விடயங்களை முன்வைத்து வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் என்கின்ற ஒரு பெரிய பிரளயமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இந்த நாட்டில்.

அந்த வகையில் நேற்றைக்கு முதல் நாள் மதியம் இருந்து புகையிரத சாரதிகள் வேலைநிறுத்தத்திலே ஈடுபட்டிருக்கின்றார்கள.; இதன் காரணமாக புகையிரதத்திலே நெருசல் மாத்திரம் அல்ல இருப்பதற்கு இடமில்லாமல் புகையிரதத்துக்கு மேல் இருந்து பயணம் செய்த ஒரு பல்கலைக்கழக மாணவன் தலை துண்டிக்கப்பட்டு இறந்த ஒரு சம்பவம் என்பது இந்த நாட்டின் ஒரு சோகமான நிர்வாக கேட்டுன் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாக இருக்கின்றது.

அந்த வகையில் அரச திணைக்கள ஊழியர்கள் அமைச்சையும் அமைச்சின் மேலதிகாரிகளையும் குற்றம் சாட்டுவதுடன் அமைச்சர்கள் ஊழியர்களை குற்றம் சாட்டும் ஒரு நிலை மாறி மாறி குற்றச்சாட்டு அளவுக்கு நிலை இருக்கின்றது. எப்படி இருந்தாலும் இந்த மரணத்திற்கு போக்குவரத்து அமைச்சு முழு பொறுப்பையும் எடுத்து உரிய விசாரணையை முன்னெடுத்து இந்த உயிர் இழப்பிற்கு ஒரு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று மிகவும் ஆக்ரோசத்துடன் இந்த அமைச்சை கேட்டுக் கொள்கின்றேன்.

அரசாங்கம் குற்றம் சாட்டுவது அரசாங்கத்தை மாற்றுவதற்காக எதிரணிகள் எதிர்க்கட்சிகள் பின்புலத்தில் இருந்து இயக்கிக் கொண்டு இங்கே போராட்டங்கள் நடைபெறுவதாக அரசாங்கம் குற்றச்சாட்டுகின்றது இதே போன்று தான் 2021 ஆம் ஆண்டுக்கு பின்பு இந்த பொருளாதார நெருக்கடி வந்ததன் பின்பு அரகல என்னும் போராட்டமும் நடைபெற்று இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

ஆனால் பொதுமக்கள் தாங்கள் பாதிக்கப்படும் போது போராட்டங்களை செய்ய எத்தனிக்கும்போது அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் தலைமையில் இதனை திணிப்பது என்பது ஒரு புதிய விடயம் அல்ல.

அந்த வகையில் மக்கள் போராட்டத்தை அரசாங்கம் கடந்த வருடம் அரகலயின் மூலமாக அறிந்திருக்கின்றது தொடர்ச்சியாக இந்த அடக்குமுறை நீடித்தால் இது ஒரு பெரியதொரு போராட்டமாக வெடிக்கும் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை எனவும் தெரிவித்தார்.

அறகலய போராட்டக்காரர்களை ஏமாற்றவே இனவாத, மதவாதம் தூண்டப்படுகிறது – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

ஆட்சியாளர்களுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை ஏமாற்றவே தற்போது நாட்டில் இனவாத, மதவாத சக்திகள் முளைவிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அறகலய போராட்டக் காரர்களை ஏமாற்றவே இனவாத மதவாத சக்திகள் முனைகின்றன.

இனவாத மதவாத சக்திகள் போராட்டக்காரர்களுக்கு வழங்கிய உறுதிமொழியிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்களா?

இதை ஆட்சி மாற்றத்திற்காக போராடியவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

அறகலய போராட்டக்காரர்களுக்கு முறைமை மாற்றம் ஒன்றை செய்வோம் என்று உறுதிமொழி வழங்கியவர்கள் இன்று இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுவதன் மூலம் தங்கள் உறுதிமொழிகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறார்களா?

இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி ஆட்சி பீடம் ஏறியவர்களை நாட்டு மக்களே தவறை உணர்ந்து கொண்டு அறகலயப் போராட்டத்தை முன்னெடுத்து துரத்தினார்கள். போராட்டக்காரர்கள் முன்வைத்த முறைமை மாற்றம் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஆறு மாத காலத்திற்குள் அதை செய்து முடிப்பதாக உறுதிமொழி வழங்கிவிட்டு இன்னும் அது பற்றி எதுவுமே செய்யாது உள்ளனர்.

மாறாக மீண்டும் இனவாத மதவாத கோஷங்களை எழுப்பிக் கொண்டு தாங்கள் போராட்டக்காரருக்கு வழங்கிய உறுதிமொழிகளை மடைமாற்றம் செய்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். இதை ஆட்சி மாற்றத்திற்காக போராடியவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக சரத் வீரசேகர, உதய கம்மாம்பிள்ள, விமல் வீரவன்ச மற்றும் அரசியலில் ஈடுபட்டுள்ள புத்த பிக்குகள் உட்பட பலர் அறகலய போராட்ட காலத்திலும் பின்னரும் தலைமறைவாக அஞ்சி வாழ்ந்தனர். போராட்டக் காரர்களிடம் இருந்து தப்பிக்க அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டனர். இன, மத பேதங்களை கட்டவிழ்த்து ஆட்சியாளர்கள் சிங்கள மக்களை ஏமாற்றி நாட்டைக் கொள்ளையடித்தனர் என்பதே போராட்டக் கார்கள் முன்வைத்த வாதம். அதற்கு பரிகாரமாக முறைமை மாற்றத்தை கோரினர். புதிய அரசியல் யாப்பினை உருவாக்கி அக்கோரிக்கையை நிறைவேற்ற உறுதிமொழி வழங்கி மூச்சு விட்டவர்கள் அதை நிறைவேற்றாமல் இனவாத மதவாத கருத்துக்களை எழுச்சி பெற வைத்து நாட்டு மக்களை மீண்டும் ஏமாற்ற முயலுகிறார்கள்.

பொருளாதார சிக்கல்களில் இருந்து நாடு சுமுகநிலையை அடைந்து மீள முயற்சித்துக் கொண்டிருந்தாலும் முறைமை மாற்றம் சம்பந்தமாக எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் இதுவரை கைக் கொள்ளவில்லை. இந்த காலக்கெடு முடிந்து போராட்டக்காரர்கள் மீண்டும் தலையெடுத்து விடக் கூடாது என்பதற்காக தமிழ் மக்கள் மீது இனவாதத்தையும் மதவாதத்தையும் கட்டவிழ்த்துவிட்டு தங்கள் உறுதி மொழிகளில் இருந்து தப்பிப்பதற்கும் போராட்டக்காரர்களை ஏமாற்றுவதற்கும் முயற்சி செய்கிறார்களா என்ற சந்தேகம் உறுதியாகி வருகிறது.

சிங்கள மக்கள் குறிப்பாக போராட்டக் காரர்களை இதை கவனத்தில் கொள்ள வேண்டும். இனவாத மதவாத சக்திகள் மீண்டும் ஆட்சி பீடம் ஏற இடமளிக்கக் கூடாது. இது ஒட்டு மொத்த நாட்டிற்கும் கேடு விளைவிக்கும்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராயர் ஏதாவது அரசியல் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றாரா? – ஜனா எம்.பி கேள்வி

பேராயார் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மத ரீதியாக மக்களுக்கு சேவை செய்கின்றாரா ? அல்லது அரசியல் ரீதியாக ஒரு இனரீதியாக ஒரு இனவாதியாக செயற்படுகின்றாரா? அல்லது எந்த நிகழ்சி நிரலிலே இருக்கின்றார் என்பதை தெரியப்படுத்த வேண்மென பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

பேராயர் வடக்கு, கிழக்கு தமிழருக்கும் இந்தியாவுக்கும் எதிரான நிலைப்பாட்டில் இருக்கின்றாரா ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே மதரீதியாக சேவை செய்பவர் ஒரு சாராருக்காக வாயைத் திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கோவிந்தன் கருணாகரன் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளார் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்டிலே தற்போது மீண்டும் ஒரு இனக்கலவரம் தோன்றிவிடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் உருவெடுத்திருந்தாலும் இந்திய உளவுப் பிரிவு தங்களது அறிக்கை மூலமாக இலங்கையில் ஒரு இனக்கலவரம் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இது வழமையாக ஒவ்வொரு தேர்தல் வரும் போது இனவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் செய்வது இந்த நாட்டிலே வழமையாகி விட்டது.

2019 ஜனாதிபதித் தேர்தலின் போதும் நாட்டில் தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களை சாதகமாக பயன்படுத்தி தேசிய பாதுகாப்புடன் சம்மந்தப்பட்ட ஒருவர் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற ஒரு பிரளயத்தை கிளப்பி ஜனாதிபதி தேர்தலை வென்றார்கள்.

இதனை மையமாக வைத்து ஒரு சில சிங்கள இனவாதிகள் தமிழ் நா.உறுப்பினர்களின் வீடுகளை சுற்றி வழைக்க வேண்டும். வடக்கு கிழக்கில் பௌத்தத்திற்கு எதிராக தமிழர்கள் செயற்படுகின்றார்கள் என இன துவேசத்தை கிளப்பி விடுவது மாத்திரமல்லாது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டிற்கு முன்பு இரு நாட்கள் உதயகம்பன்பிலவும் புத்தபிக்குகளும் ஆர்ப்பாட்டம் செய்தனர் இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

அரசியல் அமைப்பின்படி அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடந்தே ஆகவேண்டும் என்பதுடன் மாகாணசபை தேர்தல் நடக்கக் கூடும். எனவே அடுத்த வருடம் ஒரு தேர்தல் ஆண்டாக இருக்கப் போகின்றது.

இந்த நிலையில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் கொழும்பில் சிங்களவரின் தலைநகரில் தமிழருக்கு எனவேலை என உதயகம்மன்பில கேட்கின்றார்? அவர் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் வடக்கு கிழக்கிலே சிங்களவர்கள் அடாத்தாக வந்து குடியேறியவர்கள் நாங்கள் தமிழர்கள் கொழும்பிலும் ஏனைய தென்பகுதியில் அடாத்தாக வந்து குடியேறவில்லை.

கொழும்பு சிங்கள தலைநகரம் வடக்கு கிழக்கு தமிழர்கள் தாயகம் என்று தெரிவிக்கும் நீங்கள், நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணையை கொண்டு வந்து வடக்கு, கிழக்கை பிரித்து எங்களை ஒரு தனிநாடாக பிரகடனப்படுத்தவும்.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வரவுள்ளார். அதேவேளை சீன ஆய்வு கப்பல் வரவுள்ளது. இவ்வாறு மாறிமாறி பூகோள ரீதியாகவும் உள்ளூர் அரசியல் ரீதியாகவும் இலங்கை சிக்கித் தவிக்கின்றது. ஏன் என்றால் இலங்கைக்கு ஒரு உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கையும் இல்லாத அரசாங்கம் ஜனாதிபதியும் செயற்படுகின்றனரா? நடைபெற்றுவரும் இனரீதியான முறுகலை ஜனாதிபதி மௌனமாக பார்த்துக் கொண்டிருப்பது இந்த நாட்டிற்கு சுபீட்சமாக இருக்காது.

பேராயர் மல்கம் ரஞ்சித் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பாலம் அமைக்க இருப்பதாகவும் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தவேண்டும் என்கின்ற இந்த ஆண்டகை அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு கொடுக்கும் போதும் இலங்கை வரைபடத்தையே மாற்றி கோல் சிற்றி அமைக்க கடலை மண்போட்டு நிரப்பி சீனாவுக்கு தாரைவார்க்கும் போது வாய்திறக்க வில்லை

அதேபோன்று கடந்த காலங்களில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு நவாலி தேவாலயம் உட்பட தேவாலயங்கள் மீது குண்டுத் தாக்குதல் மற்றும் 2009 முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்த்து 50 ஆயரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது மற்றும் வடக்கு கிழக்கில் பல கிறிஸ்தவ வணபிதாக்கள் படுகொலை செய்யப்பட்டபோது பேராயர் வாய்திறக்கவில்லை.

ஆனால் 2019 இல் தேவாலய குண்டுதாக்குலுக்கு நீதி கோருகின்றார். அதற்கு நாங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும். ஆனால் வடக்கு கிழக்கில் இருக்கின்ற ஆயர்களான மன்னார் ஆண்டகையாக இருந்த இராயப்பு ஜோசப் , முள்ளி வாய்க்காலில் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக சாட்சியளித்தார். அவ்வாறே மட்டு திருகோணமலை ஆண்டகையாக இருந்த கிங்ஸ்லி சுவாம்பிள்ளை 1990 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்களுக்கு குரல் கொடுத்தவர். அதேபோன்று தற்போதுள்ள மட்டு ஆயர் பொன்னையா ஆண்டகை அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றார்.

ஆனால் இவர்களுக்கு மேலாக இருக்கின்ற பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை சரத்வீரசேகர, உதயகம்பன்பல, விமல் வீரவன்ச போன்று ஒரு குறிப்பிட்ட சாராருக்கு சார்பாகவா அல்லது எந்த நிகழ்சி நிரலிலே இருக்கின்றார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றார்.

சிங்களவர் வந்தேறு குடிகள் என்பதை நிரூபிக்க மகாவம்சமே போதும் – சபா குகதாஸ் தெரிவிப்பு!

ஈழத் தமிழர்களைப் பார்த்து வந்தேறு குடிகள் என பித்தலாட்டு உருட்டுகளை முன் வைக்கும் சிங்கள இனவாதிகள் உங்கள் மகாவம்ச நூலை நன்றாக வாசித்துப் பாருங்கள் அதில் பல உருட்டுகள் இருந்தாலும் ஆறாம் அத்தியாயம் சொல்கிறது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

விஐயனுடைய வருகை தொடர்பாக விஐயன் வரும் போது இயக்கர் நாகர் எனும் பூர்வீக குடிகள் வாழ்ந்து கொண்டிருந்ததாகவும் மகாவம்சம் கூறும் குவேனி கல்வெட்டுகளில் கவினி என்ற பெயரில் அழைக்கப்பட்ட பேரழகு வாய்ந்த தமிழ்ப் பெண்ணை திருமணம் முடித்து ஈழத்தில் குடியேறியதாக கூறுகின்றது எனவே இந்த உண்மையை மறைத்து தமிழர்களைப் பார்த்து வந்தேறு குடிகள் என அழைத்து சிங்கள மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்த சிங்கள இனவாதிகள் எண்ணியுள்ளனர்.

2009 முன் பெட்டிப் பாம்பாக இருந்த இனவாதிகள் சிலர் பூனையில்லா வீட்டில் சுண்டெலிக்கு கொண்டாட்டம் என்பது போல் கூத்தடிக்கின்றனர் விஐயன் வருகைக்கு முன் தமிழர்கள் தான் பூர்வீக குடிகள் என்பதற்கு பலாங்கொடை , இரணைமடு , பொம்பரிப்பு , செங்கடகல ,பொலநறுவை,அனுராதபுரம், ஆனைக்கோட்டை போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்கள் தமிழர்கள் தொடர்பான போதிய சான்றுகளை தமிழர்களை பூர்வீக குடிகள் என உறுதி செய்கின்றன.

மேலும், விஐயன் வருவதற்கு முன்னர் சைவமதமும் தமிழ் மன்னர்களும் தான் இருந்தனர் என்பதை மகாவம்சமே மிகப் பெரிய ஆதாரம் ஆனால் 1948 ஆண்டின் பின்னர் சிங்கள பேரினவாதம் தமிழர்களின் தொன்மைகளை மாற்றி பௌத்த சிங்கள மயப்படுத்தும் மோசமான தமிழ் இனப்படுகொலையை அரங்கேற்றி வருகிறது அதன் தொடர்ச்சியே தமிழர்களை வந்தேறு குடிகள் என கூறும் பித்தலாட்டம்.

தமிழ்த் தேசிய எழுச்சிக்காய் தன்னை அர்ப்பணித்தவர் குமாரசாமி அவர்கள் – அஞ்சலி உரையில் நிரோஷ்

தனது ஆற்றலை உத்தியோகத்துடன் மட்டும் மட்டுப் படுத்திவிடாது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கு அர்ப்பணித்து சேவையாற்றிய மதிப்பிற்குரிய ஒருவராக அமரத்துவமடைந்த சங்கீதபூசணம் செல்லத்துரை குமாரசாமி அவர்கள் மதிக்கப்படுகின்றார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும்  வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது மற்றும் போரம்மா உள்ளிட்ட பல தாயக எழுச்சிப் பாடல்களை இசைத்தவரும் ஓய்வுபெற்ற கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி அதிபருமான செ.குமாரசாமி அவர்களுக்கான இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (20.08.2023) கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முன்னாள் அதிபர் வே.கா. கணபதிப்பிள்ளை தலைமையில் உடுப்பிட்டியில் நடைபெற்றது.

இதில் அஞ்சலியுரை ஆற்றுகையிலேயே வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தின் நியாயங்களையும் உணர்வுகளையும் பகிர்வதற்கு எழுச்சிப் பாடல்கள் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளன. ஒரு இனத்தின் அரசியல், விடுதலை, பொருளாதாரம், இனத்தின் அடையாளம், கலாசாரம், பண்பாடு என எதுவாக இருப்பினும் எதிர்காலத் தலைமுறைக்கு ஊடுகடத்துவதற்கு இசை முக்கிய மூலமாக அமைகின்றது.

இந் நிலையில் யதார்த்த பூர்வமாக தமிழ் மக்களின் விடுதலை உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் தேசிய பற்றுறுதியினை கட்டிக்காப்பதிலும் அமரர் குமாரசாமி அவர்களுடைய பங்களிப்பு அளவிடமுடியாதது. அவர் ஓர் அரச கல்விச் சேவையாளராக ஆசிரியர் கலாசாலையின் பிரதி அதிபராக பதவி வகித்ததுடன் மட்டும் பணியை மட்டுப்படுத்தி விடாது தயாக உணர்வாளனாகவும் எங்களது சமயத்தினையும் மொழியினையும் வளப்படுத்தும் நல்ல ஓர் கலைஞனாகவும் தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார்.

இன்று அவர் மீளாத்துயில் கொள்கின்ற நிலையிலும் அவர் எமது மக்களுக்காக ஆற்றிய சேவைகள் என்றும் நினைவில் கொள்ளப்பட்ட வண்ணமே உள்ளன என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இவ் இறுதி அஞ்சலி நிகழ்வில் முன்னாள் கல்வி அதிகாரி நடராஜா அனந்தராஜ், கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளர்கள், அரச அதிகாரிகள், முன்னாள் போராளிகள், இசைத்துறை கலைஞர்கள், சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் எனப் பலரும் இறுதி அஞ்சலியுரையமை குறிப்பிடத்தக்கது

எங்கள் எல்லை கிராமங்களை காப்பவர்கள் மலையக மக்களே! – ரெலோ தலைவர் செல்வம் எம். பி

மலையகத்திலிருந்து வாழவேண்டும் என வந்த உறவுகள் எல்லைக் கிராமங்களை பாதுகாக்கும் உணர்வோடு செயற்படுகின்றார்கள், இடங்கள் தான் வேறு உணர்வுகளும் மொழியும் ஒன்று என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மலையகம் என்பதை நாம் பிரித்து பார்க்க முடியாது காரணம் என்னவென்றால் எங்களுடைய இனத்தின் போராட்டத்திலே பல இயக்கங்கள் உருவாகினாலும் அந்த விடுதலை வேட்கையோடு எங்களுடைய மலையக இளைஞர்கள் அதிலே இணைந்து கொண்டார்கள்.

தங்களுடைய இருப்பிடம் வேறாக இருந்தாலும் உணர்வென்ற அடிப்படையிலே எமது இனம் விடுதலை பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த இளைஞர்கள் ஆயுத போராட்டத்திலே இணைந்து கொண்டதை நாம் இங்கே நினைவுகூர வேண்டும்.

அது மட்டுமல்ல வன்னியிலே சிங்கள எல்லை கிராமங்களை தமிழர்கள் தக்கவைத்துக் கொண்டு இருக்கின்றார்கள், என்றால் இந்த மலையக தேசத்திலிருந்து இடம்பெயர்ந்து எங்களுடைய வன்னி மாவட்டத்திலே வடக்கிலே குடியிருக்கும் மலையக உறவுகளின் தியாகம் தான் அந்தந்த குடியேற்றங்களை பாதுகாத்திருக்கின்றது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

விடுதலை வேட்கை என்பது எப்படி உருவானது என பாருங்கள், இளைஞர்கள் ஆயுத போராட்டத்திற்கு சென்றார்கள். ஆனால் மலையகத்திலிருந்து வாழ வேண்டும் என வந்த உறவுகள் எல்லைக்கிராமங்களை பாதுகாக்கும் உணர்வோடு செயற்படுகின்றார்கள். இடங்கள் தான் வேறு உணர்வுகளும் மொழியும் ஒன்று என்பதை பல சந்தர்ப்பத்திலே உணர்த்தியிருக்கின்றார்கள்.

மலையகம் என்பது மலை சார்ந்த இடம் அந்த மக்கள் ஒரு தேசிய இனம் அந்த தேசிய இனத்திற்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளை தட்டிக்கேட்கின்ற பொறுப்பும் கடமையும் எங்களுக்கு இருக்கின்றது.

ஏனென்றால் அவர்களுடைய செயற்பாடு, அனைத்து விடயங்கள் அனைத்தும் எம்மோடு ஒன்றிணைத்து போகின்ற சூழல் மலையகத்தில் குளிர் பிரதேசத்தில் வாழ்ந்தாலும் எமது இனம் ஒன்று என காட்டுகின்ற அந்த நிலையிலையே அந்த மக்களுக்கு விடுதலையினை பெற்றுக்கொடுக்கின்ற கடமையும் பொறுப்பும் எங்களிடம் இருக்கின்றது.

இம்மலையக மக்கள் எங்கள் நாட்டிலே வாழ அவர்களுக்கு எல்லா உரித்தும் இருக்கின்றது. அவர்களிடம் இன்று நிலம் இல்லை ஆனால் வேறு யாரிடையோ நிலத்தை காப்பாற்ற போராடுகின்றார்கள். அவர்களுக்கு நல்ல சம்பளம் இல்லை அதனை பெற்றுக்கொடுக்க அரசியற் தலைமைகள் முனைந்தாலும் கூட இந்த அரசாங்கம் இடம்கொடுப்பதில்லை.

கொழுந்துகளை எடுத்து இந்த நாட்டின் வருமானத்தினை உயர்த்துகின்ற பொறுப்பு இம்மக்களுக்கு இல்லை என்பதை நாம் நிரூபித்து காட்டவேண்டும்.

மலையக புத்தக ஆசிரியர் கூறினார், எங்கள் மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய பிரச்சினையாக இருப்பதனால் அது தீர்க்கப்பட வேண்டும். அவர்களின் அடிப்படை பிரச்சினைகள், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், வரலாற்று புத்தகத்தில் வரலாறாக வரவேண்டும் என்பதை அழகாக சொன்னார் அதனை நான் வரவேற்கின்றேன்.

எங்கள் மலையக மக்களின் தியாகம் அவர்களின் வாழ்க்கை எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறியான நிலை இருந்தாலும் கூட இன்றைக்கும் அந்த மண்ணினுடைய விடுதலை என்பது நாங்கள் எல்லோரும் இணைந்து அவர்களுக்காக குரல் கொடுப்பதும், அவர்களுக்காக உழைப்பதும், அவர்களுக்கான பிரச்சினையினை தீர்ப்பதற்கும் அனைத்து வழிகளிலும் நாம் ஒன்றிணைந்து செயற்படுவது தான் இந்த வரலாற்றை பார்க்கும் செய்யும் கடமையாக இருக்கும் என்பது வடக்கு கிழக்கில் வாழுகின்ற அத்தனை தமிழ்பேசும் மக்களுக்கு கடமை உரித்து இருக்கின்றது.

மலையகத்தில் வாழும் எம் உறவுகளை தூக்கிவிடுவதும் அவர்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒன்றாக இணைந்து வெல்ல வைப்பதும் எமது கடமை என தெரிவித்தார்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் சர்வதேச சமூகம், இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் இலங்கையில் அச்சமின்றி வாழ்வதற்கு அவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்பது தொடர்பில் விளக்கும் அளிக்கும் வகையில் சர்வதேச சமூகம் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நடைபெற்ற பொழுது தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வழங்குவதற்கு தயாராக இருந்தவர்கள் யுத்தம் முடிந்த பிறகு எதனையுமே கொடுக்கக்கூடாது என்ற நிலைக்கு வருவதாக இருந்தால், அவ்வாறானவர்களுடன் பேசுவதில் அர்த்தம் இல்லை என தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை அரசியல் தலைமைகளிடையே உள்ள முரண்பாடான நிலைமைகளை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் வடக்கிற்கு பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்களை கொடுத்தால் நாடே பிளவுபடும் எனும் பிழையான இனவாத கருத்துகள் மீண்டும் மீண்டும் திணிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், நாட்டில் நிரந்தரமான ஒரு பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமாயின், தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்பதை சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டுமென ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

மாகாண அதிகாரங்களைப் பரவலாக்க நிபுணர் குழு என்பது சர்வதேசத்தை ஏமாற்றும் ஜனாதிபதியின் தந்திரம்: ஜனா எம்.பி

மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுணர் குழுவை ஜனாதிபதி நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்தியாவையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் மாத்திரமல்ல உலகத் தமிழர்கள் மத்தியிலும் இன்று பேசுபொருளாக மாறியிருக்கின்ற விடயம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாகக் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டம். இந்தப் 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு 36 ஆண்டுகள் கடந்திருந்தாலும் இலங்கை அரசியலமைப்பிலிருக்கும் இந்தச் சட்டம் இன்னும் முழுமையாக அமுல்ப்படுத்தப்படாமல் இருக்கின்றது. அந்த வகையில் இந்த நாட்டில் மாறி மாறி அரசாங்கத்தைக் கைப்பற்றி ஆண்டு கொண்டிருக்கும் கட்சிகளும், தலைவர்களும் இலங்கையின் அரசியலமைப்பையே மீறிக் கொண்டிருக்கின்ற சட்டவிரோதமான நடவடிக்கையைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில் இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 13வது திருத்தச் சட்டத்தைப் பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்து பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்று கூறுகின்றார். உண்மையிலேயே அன்று 1987ல் 6 இல் 5 பெரும்பான்மையைக் கொண்ட பாராளுமன்றத்திலே தான் இந்த 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அது மாத்திரமல்ல அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் உட்பட அக்கட்சியின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்காத நிலையில் ஒட்டுமொத்த சிங்கப் பிரதிநிதிகளை மாத்திரம் வைத்தே 6 இல் 5 பெரும்பான்மையாக நிறைவேற்றப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை மீண்டும் ஒரு தடவை பாராளுமன்றத்திற்குக் கொண்டுபோக வேண்டிய தேவை இருக்காது.

ஆனால் 13வது திருத்தச் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து சிங்கள மக்கள் மத்தியில் இன்று செல்லாக் காசுகளாக இருக்கும் அரசியல்வாதிகளைத் தட்டியெழுப்பி இனங்களுக்கடையிலே மேதலை, முறுகலை ஏற்படுத்தி மீண்டும் ஒரு இனக்கலவரத்தை உருவாக்;கும் சூழ்நிலைக்கு ஜனாதிபதி கொண்டு வந்திருக்கின்றார் என்றே எண்ணத் தோணுகின்றது.

அதுமாத்திரமல்லாமல் தற்போது 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும் என்றும் சிங்கள இனவாதிகள் கூறுகின்றார்கள். இந்தப் 13வது திருத்தச் சட்டத்தையும் அதனூடாக ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமையையும் இல்லாதொழிப்பதற்கான சட்டம் அவர்களால் பாராளுமன்றத்திலே கொண்டுவரட்டும் அதற்குப் பின்னர் இந்த நாடு எந்த நிலைமைக்குச் செல்கின்றது என்பதை அவர்களே உணர்ந்து கொள்வார்கள்.

இந்தப் 13வது திருத்தச்சட்டத்தினூடாகக் கொண்டுவரப்பட்ட மாகாணசபைத் தேர்தலை நடத்தாது ஜனாதிபதி அவர்கள் நீண்ட காலமாக இழுத்தடிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் ஒரு ஜனநாயக நாட்டிலே மக்கள் தங்களை ஆளக்கூடிய பிரதிநிதிகளைத் தெரிய வேண்டும். ஆனால் இன்று மாகாணசபைத் தேர்தலை நடத்தாது மாகாணசபைகளுக்கு நிபுணர் குழுவை அமைப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் முயற்சிக்கின்றார். அதற்கு முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உட்பட சில கட்சிகள் அதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன.

மாகாணசபைகளுக்கு நிபுனர் குழுவை அமைப்பதென்பது மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கான தந்தரமே ஒழிய இதன் மூலம் வேறு எதுவுமே சாதிக்க முடியாது. மாகாணத்திற்கும், மத்திக்கும் இடையிலான அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்த மாகாண நிபுனர் குழு அமைப்பதாகக் கூறுகின்றார்கள். ஆனால் அதிகாரங்கள் எவ்வாறு பகிரப்பட வேண்டும் என்பது 13வது திருத்தச் சட்டத்திலே விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரம் தொடர்பிலும் அதில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாகாணப் பொலிஸ் ஆணைக்குழுவில் மாகாண முதலமைச்சரின் பிரதிநிதி, மத்திய பொலிஸ் ஆணைக்குழுவின் பிரதிநிதி, அரசாங்கத்தினால் நியமிக்கப்படுகின்ற பிரதிநிதி என மூவர் இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இங்கு சிலருக்கு வரலாறு தெரியாது.

1988ம் ஆண்டு இறுதியிலே வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையிலே பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆனந்தராசா அவர்களை அப்போதைய ஜனாதிபதியாக இருந்த பிறேமதாசா அவர்கள் நியமித்திருந்தார்கள். அவரின் கீழே 3000 மாகாண பொலிசார்களை நியமிப்பதற்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு 13வது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்டிருக்கின்றது என்பது தான் உண்மை.

அந்த வகையில் மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுணர் குழுவை ஜனாதிபதி நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்தியாவையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இன்றும் குருந்தூர் மலையிலே பெரிய களேபரம் நடக்க இருக்கின்றது. தொல்பொருள் திணைக்களம் அங்கிருக்கின்ற இந்துக் கோவிலில் பூசை செய்ய விடாமல் தடுக்கின்றார்கள். ஆனால் அங்கிருக்கின்ற இந்துக்கள் இன்று அந்தக் கோவிலில் பொங்கல் வழிபாடு செய்ய இருக்கின்றார்கள். அதனைத் தடுப்பதற்காக பௌத்தர்கள் செல்கிறார்கள். உதய கம்மன்பில போன்ற இனவாத அரசியல்வாதிகளும் செல்கின்றார்கள். இவர்களையெல்லாம் ஜனாதிபதி அவர்கள் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாகவே நாங்கள் எண்ணுகின்றோம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்து கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது மாத்திரமல்லாமல், புறையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் கண்டு இந்த நாடுஇஸ்திரமான நாடாக இருப்பதற்குமான வழியினை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

சனசமூக நிலையம் இனத்தினை ஒருங்கிணைக்கும் தளம்; அச்சுவேலி மத்திய சனசமூக நிலைய அடிக்கல்லிடும் நிகழ்வில் நிரோஷ் 

கிராமங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் புலம்பெயர்ந்தவர்களும் தாயகத்தில் வாழ்பவர்களும் ஒன்றிணைந்து பயணிப்பது இனத்தின் நலன்களை மையப்படுத்திய உத்தியாகும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

அச்சுவேலி மத்திய சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று வெள்ளிக்கிழமை (18) காலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள்

எமது மண்ணில் நல்ல பல மாற்றங்களுக்கு அடிப்படையாக கிராம அமைப்பினை வலுப்படுத்தவேண்டிய தேவையுள்ளது.

எமது கிராம கட்டுமானங்களின் வளர்ச்சியினை ஏற்படுத்துவதற்காக நிலத்திலும் புலத்திலும் வாழும் உறவுகள் கைகோர்த்து கிராமம் என்ற வகையில் அபிவிருத்திகளை முன்னெடுப்பது அவசியமாகவுள்ளது.

ஒரு கிராமத்தின் ஒருங்கிணைவு சனசமூக நிலையங்களிலேயே தங்கியுள்ளது. சனசமூக நிலையத்தின் ஒருங்கிணைவு இனத்தின் ஒருங்கிணைவாக அமைகின்றது.

 

போரின் தாக்கம் காரணமாக எம்மில் இலட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்துவிட்டனர். இது உள்நாட்டில் எமது ஜனநாயக பலத்தினைப் பாதித்துள்ளது.

இந்நிலையில் மேலுமொரு கோணத்தில் புலர்பெயர்ந்தோரின் வளத்தினை எவ்வாறாக எமது அரசியல் பொருளாதார, கலாச்சார, சமூக இருப்பிற்காக தகவமைக்க முடியும் என்பதை இனம் சார்ந்த அக்கறையுடன் சிந்தித்து செயற்படுத்த வேண்டும்.

அவ்வாறான அறிவார்த்தமான முயற்சிகளில் ஒன்றே இன்று இந்த அச்சுவேலி மண்ணில் நிறைவேறியுள்ளது.

ஒரு சனசமூக நிலையம் கிராமத்தின் கட்டமைப்பினை தகவமைக்கும் நிலையம் என்ற அடிப்படையில் கல்வி, பொருளாதாரம் என சகல அம்சங்களிலும் முன்னிலையில் உள்ள இக் கிராமத்தில் தொடந்து மேம்பாட்டை தக்கவைப்பதற்கு இந் நிலையம் அடிப்படையாக அமையும்.

பொதுவாக புத்திஜீவிகள் பொதுப்பணிக்கு வருவதில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு. இச் சூழ்நிலையில் இங்கு எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருண் செல்லப்பா போசகராக சனசமூக நிலையத்தினை நிலத்திலும் புலத்திலுமாக ஒருங்கிணைக்கின்றார்.

அதுபோன்று இந்த ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி வேலுப்பிள்ளை பாலசுப்பிரமணியம் தலைமைதாங்குகின்றார்.

செயலாளராக நடேசு இரவீந்திரன், பொருளாளராக யாழ்ப்பாண பல்கலைக்கழக விலங்கியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சிவகுமார் பிரதீபா என ஓர் கல்விப்புலம் பொதுப்பணி களத்தில் நிற்கின்றமை மகிழ்ச்சிக்குரியது.

இந் நிலையத்தின் ஏனைய செயற்பாட்டாளர்களும் பல் துறைசார்ந்தவர்களாக இருக்கின்றனர். கல்வியாளர்கள் சமூக செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கும் துர்ப்பாக்கிய நிலையில் இவ்விடயம் ஏனைய படித்தவர்களுக்கு முன்னுதாரணமாக அமையவேண்டும் என இங்கு கோடிட்டுக்காட்டுகின்றேன் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

சர்வதேச ரீதியில் பேசப்படுகின்ற ஒரு விடயம் என்றால் அது குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயமே – முன்னாள் தவிசாளர் க.விஜிந்தன்

சர்வதேச ரீதியில் பேசப்பட்டு வருகின்ற ஒரு விடயம் என்றால் அது குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய விவகாரமே என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான க.விஜிந்தன் தெரிவித்தார்.

குருந்தூர் மலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வு தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு பகுதியிலே பேசும் பொருளாக காணப்படுகின்ற குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தின் விவகாரம் சர்வதேச ரீதியில் பேசப்பட்டு வருகின்றது. அவ் ஆலயத்தின் வரலாறு அதாவது எம் தமிழ் இந்துக்கள் இவ் ஆலயத்தினை எவ்வாறு வழிபாட்டார்கள் என்ற வரலாறு மிகப்பெரியது பழமையானது.

இருந்தும் அண்மைக்காலமாக சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையிலே அங்கு சென்று பொங்கல் வைத்து வழிபட முடியாத நிலை இந் நாட்டிலே உருவாக்கப்பட்டிருக்கின்றது. இருந்தும் பக்தர்கள் மத வேறுபாடுன்றி அங்கு சென்று பல்வேறுபட்ட வழக்குகளையும் தொடர்ந்திருக்கின்றார்கள் .

அந்தவகையில் அண்மையில் இடம்பெற்ற வழக்கிலே முல்லைத்தீவு நீதிமன்றம் மிகத்தெளிவாக கூறியிருக்கின்றது குருந்தூர் மலை ஐயனை நாம் எந்த தடையுமின்றி வழிபடவும், கலாசாரத்தை பேணவும் சகல உரிமை உண்டு என நீதிமன்றம் அறிவித்திருக்கின்றது.

எனவே நிர்மூலப்பட்ட எமது பாரம்பரியமான பொங்கல் நிகழ்வை தொடர்ந்து செய்ய எமது ஆலயத்தின் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் வருகின்ற 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சரியாக 9 மணியளவில் மிக பிரமாண்டமான முறையிலே பொங்கல் நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள் எனவே இப்பிரதேசத்தில் இருக்கும் மக்கள் அன்றைய நாளை முழுமையாக எங்கள் வரலாற்றை, பண்பாட்டையும், குருந்தூரானுடைய வழிபாட்டு தன்மைகளை பேணுவதற்காக சகலரும் ஒத்துழைப்பு வழங்குவதோடு அதுமட்டுமல்லாது இம் மாவட்டத்திலே இருக்கும் சகோதர மதத்தவர்களும் எமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி எமது வழிபாட்டை நாம் தொடர்ந்து கொண்டு செல்ல வழிசமைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.