பெளத்த ஆலயங்களில் விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றன – விலங்கு நல அமைப்பு கவலை

இலங்கையின் அளுத்கம கந்தே விகாரை முத்துராஜவை ( யானை) தீவிரபௌத்தனாக மாற்றுவதற்கு தன்னால் முடிந்தளவிற்கு முயற்சி செய்தது என தெரிவித்துள்ள ரார்ஸ்ரீலங்கா அமைப்பு இதன் விளைவாக கால்முறிந்தது அதன் கால்பாதங்கள் பாதிக்கப்பட்டன காயங்கள் ஏற்பட்டன நூற்றுக்கணக்கான தாக்கப்பட்ட காயங்கள் – சங்கிலிகள் போன்றவற்றால் ஏற்பட்டவை காணப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளது.

இது ஒரு சம்பவமே எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுபோன்ற 90க்கும் மேற்பட்ட யானைகள் பௌத்தஆலயங்களில் துன்பத்தில் சிக்குண்டுள்ளன,இந்த ஆலயங்களின் செல்வந்த அதிகாரம் மிக்க முதலாளிகள் அவற்றை திருவிழாக்களின்போது ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

முத்துராஜ என அழைக்கப்படும் சக்சுக்ரின் தனது கூட்டில் காணப்படுகின்றார் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதால் தனது பௌத்த இராஜதந்திரியை தாய்லாந்து மீளப்பெறுகின்றது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

யானைகளை பௌத்த ஆலய உற்சவங்களின் போது ஊர்வலமாக அழைத்துச்செல்வதை நிறுத்தவதற்கு இது ஒரு சிறந்த காரணம் இல்லையா என கேள்வி எழுப்பியுள்ள அந்த அமைப்பு தாய்லாந்து மக்களின் அழுத்தம் காரணமாகவே சக்சுக்ரின் ஆலயத்திலிருந்து அகற்றப்பட்டது ஆனால் ஏனைய ஐந்து யானைகளின் நிலைமை என்ன குறிப்பாக மியன்மாரை சேர்ந்த ஐந்து யானைகளின் நிலைமை என்னவெனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

விடுதலைப்புலிகளை மீளுருவாக்க முயற்சித்தமைக்காக இந்திய புலனாய்வு அமைப்பு 13 பேர் மீது குற்றச்சாட்டு

விடுதலைப்புலிகளை மீளஉருவாக்குவதற்காக ஆயுதங்கள் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட பத்து இலங்கையர்கள் உட்பட 13 பேருக்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பு வியாழக்கிழமை குற்றச்சாட்டுகளை பதிவுசெய்துள்ளது.

இலங்கை இந்தியாவில் விடுதலைப்புலிகளிற்கு புத்துயுர் அளிப்பதற்காக ஆயுதம் பணம் போதைப்பொருள் ஆயுதங்களை சேகரித்தல் பதுக்கிவைத்தல்போன்றவற்றிற்காக இவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டனர் என  இந்தியாவின் என்ஐஏ குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

இலங்கையை சேர்ந்த குணா என அழைக்கப்படும் குணசேகரன் பூக்குட்டி கண்ணா என அழைக்கப்படும் புஸ்பராஜாவும் பாக்கிஸ்தானை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் ஹாஜிசலீம் என்பவருடன் இணைந்துசெயற்பட்டனர் எனவும் இந்திய புலனாய்வு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

விடுதலைப்புலிகளிற்கு புத்துயுர் கொடுப்பதற்கான சதிமுயற்சிகள் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளன அவர்கள் கடந்தவருடம் திருச்சி விசேட முகாமில் கைதுசெய்யப்பட்டனர்  குற்றச்செயல்கள் மூலம் கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் எனவும் இந்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்கூட்டியே செயற்படுத்தப்பட்ட சிம்கார்ட்டுகளுடன் பல கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன பெருமளவு பணமும் தங்கப்பாளங்களும் கைப்பற்றப்பட்டன என இந்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலமே பணமும் தங்கமும் கிடைத்துள்ளது இந்த பணத்தை இவர்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பரிமாறியுள்ளனர் எனவும்அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் குறித்து இராணுவத்தினர் மீது பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் – ஐ.நா மீளாய்வுக்குழு பரிந்துரை

வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் தன்னிச்சையான தடுத்துவைப்புக்களை முடிவுக்குக்கொண்டுவருவதுடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு இலங்கைக்குப் பரிந்துரைத்திருக்கும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய காலாந்தர மதிப்பீடு தொடர்பான குழு, அனைத்து விதமான மனித உரிமை மீறல்கள் சம்பவங்கள் குறித்து இராணுவத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரிடமும் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.

அதுமாத்திரமன்றி இன, மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வுப்பேச்சு மற்றும் அடக்குமுறைகளை தடுப்பதற்கு ஏற்ற செயன்முறையொன்றை நிறுவுவதன் மூலம் தேசிய நல்லிணக்கம் தொடர்பான கொள்கையை மேலும் வலுப்படுத்துமாறும் அக்குழு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய காலாந்தர மதிப்பீடு தொடர்பான குழுவானது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்த மீளாய்வினைக் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மேற்கொண்டிருந்தது.

இம்மீளாய்வின்போது கண்டறியப்பட்ட விடயங்களையும், மனித உரிமைகள் பாதுகாப்பை முன்னிறுத்தி இலங்கை மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பரிந்துரைகளையும் உள்ளடக்கிய 24 பக்க அறிக்கை வெளியாகியுள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

‘உள்நாட்டிலும், பூகோள ரீதியிலும் மிகமோசமான சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தாலும்கூட, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான முயற்சிகளை இலங்கை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றது.

அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் இலங்கை முன்னேற்றமடைந்திருக்கின்றது. அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தமும், தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டமும் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையையும், ஜனநாயக ஆட்சி நிர்வாகத்தையும், நிதியியல் பொறுப்புக்கூறலையும் வலுப்படுத்தியதுடன் தேர்தல் செயன்முறையில் வெளிப்படைத்தன்மையை விரிவுபடுத்தியது.

ஊழல் ஒழிப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று மத்திய வங்கிச் சட்டமூலமானது அவ்வங்கியின் சுயாதீனத்தன்மையை வலுப்படுத்துவதுடன், நீண்டகால அடிப்படையில் பொருளாதாரத்தின் நிலைபேறானதன்மையினை உறுதிப்படுத்துவதை நோக்காகக் கொண்டிருக்கின்றது’ என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் இலங்கை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அதேவேளை இம்மீளாய்வின்போது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் 106 பேர் உரையாற்றியதுடன் அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், சீனா, இந்தியா, டென்மார்க், ஜேர்மனி, ஜப்பான், பிரான்ஸ், மாலைதீவு, நேபாளம், ரஷ்யா உள்ளடங்கலாக 101 நாடுகள் பரிந்துரைகளை முன்வைத்துள்ளன.

இலங்கைப் பாராளுமன்றத்தில் கடந்த 2022 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மீதான திருத்தங்கள், சர்வதேச சட்டங்களுக்கு ஏற்புடைய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை தயாரிக்கும் செயன்முறையை நோக்கிய இடைக்கால நடவடிக்கையாக அமைந்தது.

அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகம் இடைநிறுத்தப்பட்டிருப்பதுடன் இன்றியமையாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் சட்டத்தைப் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.

மேலும் வடமாகாண மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விசேட பிரிவொன்று ஜனாதிபதி செயலகத்தின்கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அப்பிரிவானது வடமாகாண அபிவிருத்தி, நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை ஊக்குவிப்பதையும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை உபகுழு ஆகியவற்றுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதையும் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.

அடுத்ததாக காணாமல்போனோர் குறித்த பெரும்பாலான முறைப்பாடுகள் தொடர்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் பூர்வாங்க விசாரணைகளை மேற்கொண்டிருப்பதுடன், அவைகுறித்த விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தயாராகிவருகின்றது.

அத்தோடு இழப்பீட்டுக்கான அலுவலகமானது இதுவரையில் 4610 சம்பவங்கள் தொடர்பில் அவர்களது குடும்பத்தினருக்கு மொத்தமாக 277.9 மில்லியன் ரூபா இழப்பீட்டை வழங்கியிருக்கின்றது. அச்சம்பவங்களில் பெரும்பான்மையானவை யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் வட, கிழக்கு மாகாணங்களில் பதிவானவையாகும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலை முன்னிறுத்தி இலங்கையால் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய 294 பரிந்துரைகளையும் இம்மீளாய்வுக்குழு அதன் அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது. அவை ஏனைய நாடுகளால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் தொகுப்பாகும். அவற்றில் முக்கிய பரிந்துரைகள் வருமாறு:

சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற ஏனைய நடத்தைகள் மற்றும் தண்டனைகளுக்கு எதிரான பிரகடனத்தின் தேர்வுக்குரிய செயன்முறையை ஏற்றுக்கொள்ளுதலும் நடைமுறைப்படுத்தலும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தின் தெரிவுக்குரிய செயன்முறையை ஏற்றுக்கொள்ளுதலும் நடைமுறைப்படுத்தலும், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பான சர்வதேச பொருத்தனைகளின் தேர்வுக்குரிய செயன்முறையை ஏற்றுக்கொள்ளுதலும் நடைமுறைப்படுத்தலும், மரணதண்டனையை இல்லாதொழிப்பதை இலக்காகக்கொண்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தின் இரண்டாவது தேர்வுக்குரிய செயன்முறையை அங்கீகரித்தல், சர்வதேச மனித உரிமைகள் பொறிமுறைகளுடனான ஒத்துழைப்புக்களைத் தொடர்ந்து பேணுதல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பொறிமுறைகளுடனான ஒத்துழைப்பைத் தொடர்ந்து பேணுதல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் ஏனைய கட்டமைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களுடனான தொடர்புகளை வலுப்படுத்தல், பொருளாதார மற்றும் நிதியியல் சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்தல், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான முயற்சிகளை மேம்படுத்தல், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை வலுப்படுத்துவதுடன் அதன் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தல், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதற்கு அவசியமான வளங்கள் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்தல், நீதித்துறை மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தக்கூடியவாறு விரிவான கலந்துரையாடல்களின் அடிப்படையிலான அரசியலமைப்பு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல், உலகளாவிய காலாந்தர மீளாய்வின் பின்னரான பரிந்துரைகளின் அமுலாக்கத்தை ஒருங்கிணைப்பதற்கான உள்ளகப்பொறிமுறை நிறுவுதல், வெறுப்புணர்வுப்பேச்சு மற்றும் அடக்குமுறைகளை தடுப்பதற்கு ஏற்ற செயன்முறையொன்றை நிறுவுவதன் மூலம் தேசிய நல்லிணக்கம் தொடர்பான கொள்கையை மேலும் வலுப்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் இன, மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வுப்பேச்சுக்களைத் தடுத்தல், சிறுபான்மையின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளைத் தண்டித்தல், இன, மத, சாதி, பால் மற்றும் வேறு எந்தவொரு அடிப்படைகளிலுமான அடக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், மரணதண்டனையை முற்றாக இல்லாதொழித்தல், அனைத்து வடிவங்களிலுமான சித்திரவதைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் தன்னிச்சையான தடுத்துவைப்புக்களை முடிவுக்குக்கொண்டுவருவதுடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல், காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு உரிய பதிலைக் கூறுவதுடன் இழப்பீட்டை வழங்கல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதுடன் அதற்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் எந்தவொரு புதிய சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவாகக் காணப்படுவதை உறுதிசெய்தல், அச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை விடுத்தல், அனைத்து மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பிலும் இராணுவத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரிடமும் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை மேற்கொள்ளல் ஆகிய பரிந்துரைகளும் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சரத் வீரசேகர இராணுவத்தில் ரொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார்? ; முடிந்தால் தமிழ் எம்.பிக்களை கைது செய்யுங்கள் – செல்வம் எம்.பி சவால்

முடிந்தால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து காட்டுங்கள். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்க சொல்வதற்கு சரத் வீரசேகரவுக்கு என்ன உரிமை இருக்கிறது? முடிந்தால் அதை செய்து பார்க்கட்டும் – இவ்வாறு சவால் விட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன். வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கடந்த காலங்களில் பல கருத்துகளைக் கூறியுள்ளார். குறிப்பாக, தமிழ் பிரதேசங்களில் நடைபெறுகின்ற அடக்கு முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார். மாகாண சபை முறைமையையும் இல்லாது ஒழிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

சரத் வீரசேகர இராணுவத்தில் ரொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார். ஏனெனில், எங்கள் மக்களின் பிரச்னை என்பது காலம்காலமாக இருந்து வரும் பிரச்னை. தங்களின் பிரச்னைகளை பேசுவதற்கே மக்கள் தமது பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்புகிறார்கள். தங்களுக்கான அநீதிகளை சுட்டிக்காட்டும் வழியிலும் தான் பாராளுமன்றம் அனுப்புகிறார்கள்.

அந்தவகையில் தங்கள் தேசத்து மக்களின் பிரச்னைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுகிறார்கள். இவர் யார்? – தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்க சொல்வதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? முடிந்தால் அதை செய்து பார்க்கட்டும். சும்மா இராணுவத்தில் இருந்து எதையெல்லாமோ செய்து போட்டு வந்து கொக்கரிக்கக் கூடாது. அவருக்கு சவால் விடுகின்றேன். மக்கள் நலன் சார்ந்து பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்யுங்கள் பார்க்கலாம். அடுத்து என்ன நடக்கும் என்று பார்ப்பீர்கள் – என்றார்.

பூகோள அரசியலை தமிழர் தரப்பு தந்திரோபாயமாக கையாளவில்லை – சபா குகதாஸ்

இலங்கைத் தீவின் அமைவு காரணமாக பூகோள அரசியல் மையங் கொண்டாலும் காலத்திற்கு காலம் அதன் வடிவங்களும் நகர்வுகளும் மாறுபட்டதாக அமைந்துள்ளது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் இன்றைய தினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

இதனை சிங்கள பிரதான கட்சிகள் கச்சிதமாக கையாள்வதால் மாறி மாறி ஆட்சிக் கதிரைகளை பிடித்துக் கொள்கின்றனர். ஆனால் தமிழர் தரப்பு பகடைக்காய்களாக பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

காரணம் சிங்களத் தரப்பின் இராஜதந்திர நகர்வு கூட தமிழர் தரப்பிடம் இருந்திருக்கவில்லை அத்துடன் தமிழர் தரப்பு மூன்றாம் தரப்பின் தேவைகளை பூர்த்தி செய்யும் தரப்பாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதே தவிர தமிழ் மக்களின் பிரதான இலக்கை வெல்லக் கூடிய செயல் முறையை தமிழர் தரப்பு கையாள தவறி விட்டது.

தற்போது மீண்டும் பூகோள அரசியல் இலங்கைத் தீவில் கொதி நிலை அடைந்துள்ளது அத்துடன் பிராந்திய சூழல் நெருக்கடியான நிலைக்குள் தள்ளப்பட்டு செல்கிறது இதனை சிங்கள ஆட்சியாளர்கள் தமக்கு சாதகமாக மாற்ற களத்தில் இறங்கியள்ளனர்.

ஆனால் தமிழர் தரப்பிற்கு மிக சாதகமாக பூகோள அரசியல் மாறி இருக்கிற சூழலில் புலம்பெயர் தமிழர் தரப்பும் தாயக அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இராஜதந்திர நகர்வை முன் நகர்த்தினால் பிரதான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

ஏற்கனவே இலங்கையில் இந்தியா, சீனா, அமெரிக்கா, காலூன்றி தமக்கான தளங்களை அமைத்துவரும் போது ரஷ்யா, யப்பான் போன்ற நாடுகளும் நகர்வுகளை ஆரம்பித்துள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் தமிழர் மீதான அடக்குமுறைகள் சர்வதேச ரீதியாக பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருகின்றது. அதற்கு மனிதவுரிமைப் பேரவை தீர்மானங்கள் மற்றும் கனடா பிரதமரின் இனப்படுகொலை தின அறிவிப்புக்கள் பிரித்தானிய அவுஸ்ரேலிய இராஜதந்திர நகர்வுகள் அமெரிக்க மற்றும் மேற்குலகின் இராஜதந்திர நகர்வுகளை திரட்சியாக ஒரே நிலைப்பாட்டில் தமிழர் தரப்பிற்கு சாதமாக மாற்ற முடியும் இதுவே தமிழர்களுக்கான அரசியல் அதிகாரங்களை வென்றெடுக்க வழி.

தேசிய சர்வதேச அரசியல் இராஜதந்திர நகர்வுகள் ஊடகவே தமிழின விடுதலையை தமிழர்கள் தமக்கு சாதகமாக மாற்ற முடியுமே தவிர வெறும் அறிக்கை அரசியல் ஊடாக மாற்றிவிட முடியாது.

ஆட்சித் தரப்பின் அதிகார மையத்தை மாற்றியமைப்பதோ அல்லது அமைச்சர்களை மாற்றுவதோ அமைச்சின் பணிப்பாளர்களை மாற்றுவதோ ஒருபோதும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகாது. மாறாக சிறிய இடைவேளையாக அல்லது இவ்வாறான மாற்றங்களை வைத்து சர்வதேச அழுத்தங்களில் இருந்து தற்காலிகமாக தப்புவதற்கு அரச தரப்புக்கு சாதகமாக அமையுமே தவிர பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பிற்கு பின்னடைவுதான்.

சர்வதேச பூகோள நாடுகளின் தந்திரோபாய இராஐதந்திர நகர்வுகளின் ஊடாக தமிழர்களுக்கான அரசியல் அதிகாரங்களை வென்றெடுப்பதற்கான விலையை தமிழரின் ஆயுத போராட்டமும் அகிம்சைப் போராட்டமும் கொடுத்திருக்கிறது இதனை தமிழர் தரப்புக்கள் ஒற்றுமையாக கையாள வேண்டும் அதுவே தமிழின விடுதலை – என குறிப்பிட்டுள்ளார்.

குருந்தூர்மலை விவகாரம்: அடையாள தூண்களை அகற்ற எவருக்கும் உரிமை இல்லை – சரத் வீரசேகர

குருந்தூர் மலையில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகள் மற்றும் அடையாளமிட நடப்பட்ட துண்களை அகற்ற எவருக்கும் உரிமை இல்லை. பேச்சு மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண தயாராக உள்ளோம். பலவந்தமான முறையில் எவருக்கும் இடமளிக்க முடியாது – என்று கூறியிருக்கிறார் சரத் வீரசேகர எம். பி.

நேற்று மஹகர பகுதியில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபோது செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதால் நாடு முழுவதும் பௌத்த சின்னங்கள் மற்றும் மரபுரிமைகள் காணப்படுகின்றன. வடக்கு – கிழக்கு மாகாணங்களை தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் தொல்பொருள் மரபுரிமைகளை அடிப்படையாக கொண்டு எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறவில்லை.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை அந்த மாகாணங்களின் அரசியல்வாதிகள் தமது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசியல்வாதிகளின் அனுசரனையுடன் தொல்பொருள் மரபுரிமைகள் அழிக்கப்படுகின்றன. குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி மற்றும் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்ட விடயம் பொய் என்பதை தொல்பொருள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுர மானதுங்க தெளிவுபடுத்தவில்லை. குருந்தூர் மலையில் தமிழர்கள் விவசாயம் செய்தனர் என்று தமிழ்த் தரப்பு குறிப்பிட்ட கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது – என்றும் கூறினார்

சென்னையிலிருந்து 100 பயணிகளுடன் நேற்று முதல் கப்பல் யாழ். வந்தது

இந்தியாவிலிருந்து சுமார் நூறு பயணிகளுடன் முதல் பயணிகள் கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு வருகை தந்தது.

இந்தியாவிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கும் பரீட்சார்த்த முயற்சியாகவே நேற்று இந்தக் கப்பல் வந்தது.

இந்தக் கப்பலை விமானசேவைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா, கடற்றொழில் அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஆகியோர் உட்பட பல அதிகாரிகள் வரவேற்றனர்.

Posted in Uncategorized

இந்தியா – யாழ். கப்பல் சேவை தற்போது சாத்தியம் இல்லை

இந்தியா – யாழ்ப்பா ணம் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை நடத்தும் சாத்தியக்கூறு இந்த ஆண்டு இறுதிவரை இல்லை என்று விமான சேவைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகளுடன் முதல் கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை வந்தது. இந்தக் கப்பலை வரவேற்ற பின்னர் துறைமுக முனையத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காங்கேசன்துறையில் 25 கோடி ரூபாய் செலவில் பயணிகள் முனையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவு மிகவும் பலமானது. இரு நாடுகளுக்கும் இடையில் கலாசார ரீதியான உறவுகள் மேலும் பலமடைய வேண்டும். இதற்கான வாய்ப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் சேவை ஆரம்பம் அமைந்துள்ளது.

எனினும், இந்தியா – காங்கேசன் துறை இடையே பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க இன்னும் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. அது இந்தஆண்டு டிசெம்பருக்கு முன்னர் பூர்த்தியாகாது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் சேவையை அடுத்த வருடத்திலாவது ஆரம்பிக்க வசதிகள் செய்யப்படும் – என்றும் கூறினார்.

மக்கள் தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத போதும் வட,கிழக்கு அரசியல்வாதிகளே மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள் – பொதுஜன பெரமுன

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத சிறந்த தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம். அரசியல் இலாபத்தைக் கருத்தில் கொண்டு தொல்பொருள் விவகாரத்தில் தீர்மானம் எடுக்க இடமளிக்க முடியாது என்று பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

குருந்தூர்மலை விகாரைக்காக காணிகள் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவிப்பு தொடர்பில் அண்மைநாட்களாக பலத்த விமர்சனங்கள் தென்னிலங்கையில் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை பெரமுன கடசியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்.

இதன்போது ஜனாதிபதிக்கு தாம் கூறியவை என்று சாகர காரியவசம் கூறிய விடயங்கள் வருமாறு, பௌத்த மதத்தை பாதுகாக்கும் பொறுப்பு அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அந்த பொறுப்பில் இருந்து எவரும் விலக முடியாது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் சின்னங்களை முன்னிலைப்படுத்தி ஒரு தரப்பினர் அரசியல் செய்கிறார்கள்.

சாதாரண மக்கள் தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத போதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள். குறுகிய அரசியல் இலாபத்தை முன்னிலைப்படுத்தி தொல்பொருள் விவகாரத்தில் தீர்மானம் எடுக்க இடமளிக்க முடியாது.

குருந்தூர் மலை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்பதை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்துகிறோம். குருந்தூர் மலை விவகாரத்தில் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு அமைய செயல்படுவது அத்தியாவசியமானது – என்றார்.

யாழ். விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய ஆராய்வு

யாழ்ப்பாணம் (பலாலி) சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக விமான சேவைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆராயப்பட்டது. விமான நிலையத்தை வடக்கு பக்கமாக விரிவாக்கம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

பெரியளவிலான விமானங்கள் வந்து இறங்க வசதியாகவே இந்த விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. அத்துடன், தற்போது சேவையில் அதிக ஆசனங்கள் கொண்ட விமானங்களை சேவையில் ஈடுபடுத்தவும், யாழ்ப்பாண மக்கள் இலகுவான முறையில் பயணத்தை மேற்கொள்வது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டன. இதேநேரம், மக்களின் காணிகளை மேலும் சுவீகரிக்காமல் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாணத்திற்கான விமான நிலைய உயர் அதிகாரிகள் எனப் பலர் பங்கேற்றனர்.