மகிழ்ச்சியாக கல்வி கற்கக்கூடிய பாடசாலை சூழலை உருவாக்க நடவடிக்கை – சுசில்

2023ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள பாடசாலைக் கல்வியாண்டில் ஆரம்பப் பிரிவில் முதலாம் தவணைப் பரீட்சைகளை நடத்தாமல் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு மதிப்பெண்  அடிப்படையில் மாணவர்  மதிப்பீட்டு செயல்முறை செயல்படுத்தப்படும் என்றும் மாணவர்கள் மகிழ்ச்சியாக கல்வி கற்க கூடிய பாடசாலை சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

எதிர்காலத்தில் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு அவர்களின் திறமை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவு அல்லது தொழில்நுட்பக் கல்லூரிகள் ஊடாக மேலதிக பயிற்சி,கல்வி  வாய்ப்புகளை வழங்குவதற்கு தேவையான மாற்றங்கள் செய்து வேலைத்திட்டம் தயாரிக்கப்படும். விடுமுறை நாட்களை குறைத்து அதிகளவில் வேலை செய்வதன் மூலம் அனைத்துப் பாடத்திட்டங்களும் உள்ளடக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் மீளமைக்கப்படும்.

தேவையான சீருடைகள், பாடப்புத்தகங்கள், உடற்பயிற்சி புத்தகங்கள், உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்குவது சிரமமானதாக இருந்தாலும்  குறித்த நேரத்தில் அவை மாணவர்களுக்கு  வழங்கப்படும். மேலும் மாணவர்கள் மத்தியில்  ஒழுக்கம் மிகவும் முக்கியமானது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அபிவிருத்திக்கு இந்திய ஆதரவு – உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே

லங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் பொருளாதார ஒத்துழைப்புடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் இந்தியாவின் முழு ஆதரவும் இலங்கைக்கு கிடைக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (டிச. 21) சீதாவக்க தாவரவியல் பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது சீதாவக்க தாவரவியல் பூங்காவில் மரக்கன்று ஒன்றினை இந்திய உயர்ஸ்தானிகர் நாட்டினார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டதாவது,

இலங்கை இந்திய நட்புறவு சில ஆண்டுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பல நூற்றாண்டு கால வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு காலம் காலமாக வலுப்பெற்றுள்ளது.

ஜி 20 நாடுகளின் தலைவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தின் கீழ் அயல்நாடுகள் பல்வேறு நலன்களை பெற்றுள்ளன.

உலகில் பலம் வாய்ந்த நாட்டின் உயர்ஸ்தானிகர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளமை இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

உயிர் பல்வகைமைத்தன்மை நிறைந்த இத்தகைய தாவரவியல் பூங்காக்களை பாதுகாப்பது அனைவரது பொறுப்பாகும்.

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் சீதாவக்க இராசதானி முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு இந்த தனித்துவமான சூழலின் இயற்கையும் ஒரு காரணமாக உள்ளது என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கூறுகையில்,

இலங்கையின் பசுமை அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு தொடர்ந்து கிடைக்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பொருளாதார ஒத்துழைப்புடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல.

மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் இந்தியாவின் முழு ஆதரவும் இலங்கைக்கு கிடைக்கும் என்றார்.

இயற்கை வளங்களுக்கு தீங்கு ஏற்படாத வகையில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது அவசியமாகும். இந்தியாவின் மகத்தான உறவுகளையும் வரலாற்றையும் நினைவுகூருவதற்கும் அந்த உறவுகளை வலுப்படுத்திய பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தந்தை பிலிப் குணவர்தன போன்றவர்கள் நினைவுகூர வேண்டும்.

எமது பொருளாதார கூட்டாண்மையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், காலநிலை மாற்றத்துக்கு எதிராக போராடும் சூழல், நட்பு, கொள்கைகளை இரு நாடுகளும் கூட்டு முயற்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என இதன்போது குறிப்பிடப்பட்டது.

10 மணித்தியால மின்வெட்டு உண்மைக்குப் புறம்பானது

ஜனவரி மாதம் மின் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனவரி 02ஆம் திகதி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார பிரச்சினையில் மக்களை தவறாக வழிநடத்தும் மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும் அடுத்த வருடம் 10 மணித்தியால மின்வெட்டு ஏற்படும் என பொறியியலாளர்கள் சங்கத்தின் அறிவிப்பையும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார்.

இலங்கையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என பேராசிரியர் நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான கடும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து பெருமளவு பரவல் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக சர்வதேச அளவில் பெருந்தொற்று அச்சுறுத்தல் குறித்து நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதாக நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு வைரஸ்கள் தோன்றக் கூடிய ஆபத்துள்ளது என்றும் எனவே கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தால் 2020 போன்ற சூழ்நிலை ஏற்படும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சீன பிரதித் தூதுவருடன் ரணில் சந்திப்பு

இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஹு வெய் (Hu Wei)மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது

இலங்கையின் இருதரப்பு மற்றும் பலதரப்பு கடன்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக சீன தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சீன அரசாங்கம் மற்றும் சீன வங்கிகள் இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்ததாக தூதரகம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு சபையில் ஒரு தமிழருக்கும் இடமில்லை – உச்சக்கட்ட பெரும்பான்மைவாதம் – மனோ

அரசியலமைப்பு பேரவையில் நியமிக்கப்பட உள்ள ஏழு எம்பிக்களுக்கான நியமனங்களில், ஐந்து சிங்கள எம்பிக்களும், ஒரு முஸ்லிம் எம்பியும் இப்போது பெயரிடப்பட்டுள்ளார்கள். இறுதி ஏழாவது எம்பியாக ஒரு தமிழ் எம்பி இருக்க வேண்டும் என்பது மிக, மிக நியாயமான ஒரு எதிர்பார்ப்பு.

ஆனால், இதையும்கூட தட்டி பறிக்க உதயகம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரின் “உத்தர சபை” கட்சி முயல்கிறது. அந்த நியமனம் உதய கம்மன்பில எம்பிக்கு வழங்க வேண்டும் என அந்த கட்சி பிடிவாதம் பிடிக்கிறது. இது உச்சக்கட்ட பெரும்பான்மைவாதம். திருத்த முடியாத திமிர்வாதம். இதை எதிர்த்து முறியடிப்பதில், தமிழ் தேசிய கூட்டமைப்புடன், தமிழ் முற்போக்கு கூட்டணி, இரட்டை குழல் துப்பாக்கியாக இணைந்து செயற்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அரசியலமைப்பு பேரவை நியமனங்களில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ மேலும் கூறியதாவது,

அரசியலமைப்பு பேரவையில் சட்டப்படி பத்து உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். அதில் ஏழு எம்பிக்களும், மூன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இடம் பெற வேண்டும். இந்த எம்பிகளில், நான்கு சிங்கள எம்பிகளும், தலா ஒரு எம்பியாக மூன்று எம்பீக்கள், வடகிழக்கு தமிழர், முஸ்லிம்கள், இலங்கை இந்திய தமிழர் ஆகியோரை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். இதுவே நியாயமான நடவடிக்கை. ஆனால், இது நடைபெறவில்லை.

சபாநாயகர், பிரதமர், எதிர்கட்சி தலைவர் ஆகிய மூவரும் தம் பதவிநிலை காரணமாக அரசியலமைப்பு பேரவையில் இடம் பெறுகின்றார்கள். ஜனாதிபதியும், எதிர்கட்சி தலைவரும் தம் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும். இதன்படி ரணில் விக்கிரமசிங்க, தமது பிரதிநிதியாக எம்பி நிமல் சிறிபால சில்வாவையும், சஜித் பிரேமதாச தமது பிரதிநிதியாக எம்பி கபீர் ஹசீமையும் நியமித்துள்ளனர்.

அரசாங்கம், பிரதான எதிர்கட்சி ஆகிய கட்சிகளை சாராத சிறுகட்சிகளின் பிரதிநிதியாக ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது சட்டம். அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்தனின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரேரித்துள்ளது. இப்போது இதுவே பிரச்சினையாக மாறியுள்ளது.

மொட்டு கூட்டணியில் தெரிவாகி விட்டு, அரசாங்கங்கத்தின் எல்லா தவறுகளுக்கும் காரணமாகி விட்டு, இப்போது எதிர்கட்சி பக்கத்தில் வந்து உட்கார்ந்துள்ள உதயகம்மன்பில, விமல் வீரவன்ச கும்பல், இதையும் தட்டி பறிக்க பார்க்கிறது.

உண்மையில், இந்த விவகாரத்தில் மலையக இந்திய வம்சாவளி தமிழரே முதலில், அநீதிக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம், அவர்கள் நியமிக்கும் எம்பியாக இந்திய வம்சாவளி தமிழரை பிரதிநித்துவம் செய்யும் ஒரு எம்பியை நியமிக்கும்படி, நானும், எம்பி பழனி திகாம்பரமும் கோரிக்கை விடுத்தோம்.

தான் ஏற்கனவே, எம்பி நிமல் சிறிபால சில்வாவை பெயரிட்டு விட்டதாகவும், முதலிலேயே கூறி இருந்தால், பரிசீலிக்க இடமிருந்தது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் கூறினார். தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பி ஒருவரை தமது பிரதிநிதியாக நியமிக்க முதலில் எம்மிடம் உடன்பட, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பிறகு தமது கட்சியில் இருந்து, எம்பி கபீர் ஹீசிமை நியமிக்க வேண்டிய கட்டாயம் தனக்கு உள்ளதாக கூறினார். எம்பி கபீர் ஹீசிம் சகோதர முஸ்லிம் எம்பி என்பதால் அதை நாம் புரிந்துக்கொண்டோம்.

இந்நிலையில், மூன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களில் ஒருவர், கட்டாயம் மலையக இந்திய வம்சாவளி தமிழராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும், அதற்கான பெயரையும் நாம், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக, பிரதமர், எதிர்கட்சி தலைவர்ஆகியோரிடம் சிபாரிசு செய்து வழங்கியுள்ளோம்.

இத்தகைய பின்னணியில், இறுதியான ஒரேயொரு எம்பி நியமனத்தில், எம்பி சித்தார்தனின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு சிபாரிசு செய்துள்ளது. அது சட்டப்படியும், அரசியல் நியாயப்படியும் சரியானது. ஆகவே அதை நாமும் ஆதரிக்கிறோம். இதையே இன்று பிரச்சினைக்கு உள்ளாக்கி, அதையும் தட்டிப்பறித்து, ஈழத்தமிழ், மலையக தமிழ் என்ற பேதமில்லாமல் ஒரு தமிழ் எம்பிகூட அரசியலமைப்பு பேரவையில் இடம்பெற முடியாத நிலைமையை இனவாதிகள் ஏற்படுத்த முயல்கிறார்கள்.

சம்பந்தன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் இரட்டை வேடம் அம்பலம் – ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

கடந்த 13 ஆம் திகதி சர்வகட்சித் தலைமைகளை ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா சந்தித்து கலந்துரையாடிய போது தமிழ்த் தேசியம் சார்ந்த நான்கு கட்சி தலைவர்கள் இணைந்து மூன்று கோரிக்கைகளை கொடுத்து அதனை நடைமுறைப் படுத்துவதற்கான கால எல்லையாக 2023 ஐனவரி 31 வரை வழங்கிவிட்டு அதற்கு முன்பாக மீண்டும் இன்று 21/12/2022 சம்பந்தன் ரணிலை சந்திப்பதற்கான தீர்மானத்தை தமிழரசுக் கட்சி தனித்து எடுத்திருப்பது ரணில் அரசை காப்பாற்றவா?
ஏனைய கட்சிகளுடன் இணைந்து எடுத்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யவா? தமிழர்களை பலவீனப்படுத்தி தோற்கடித்த எரிச்சொல்ஹெமின் தலைமையில் பேசவா? தமிழ் மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை பலவீனப்படுத்தவா? என வினவியுள்ளார் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ்.

ரணில் இந்தியாவை நெருங்கிச் செல்கிறாரா? – நிலாந்தன்

ணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவதை இந்தியா விரும்பவில்லை என்று கருதப்பட்டது. ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பின் பொழுது இந்தியா டளஸ் அழகப்பெரும ஆதரிக்குமாறு கூட்டமைப்பிடம் கேட்டதாக தகவல்கள் வெளிவந்தன.இலங்கைத் தீவு இப்பொழுது முப்பெரும் பேரரசுகளின் இழு விசைகளுக்குள் சிக்கியிருக்கிறது. இன்னிலையில் ஒரு பேரரசை நோக்கி அதிகம் சாயும் ஒரு தலைவர் ஒப்பீட்டளவில் பேரவலம் குறைந்த பலவீனமான ஒரு தலைவராகவே இருப்பார்.அதனால்தான் சீனாவை நோக்கி சாய்ந்த மஹிந்த உள்நாட்டில் ஜனவசியம் மிக்க ஒரு தலைவராக இருந்தார். ஆனால் நாட்டுக்கு வெளியே அவருக்கு அந்த அளவுக்கு அங்கீகாரம் இருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டுக்குள் அங்கீகாரம் இப்பொழுதும் இல்லை. ஆனால் அனைத்துலக அரங்கில் அவர் ஒப்பீட்டளவில் அதிகம் எதிர்பார்ப்போடு பார்க்கப்படும் ஒரு தலைவர்.ஏனென்றால் அவர் எல்லா பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்திருக்கக்கூடிய ஒருவர்.அப்படிப்பட்ட முதிர்ச்சியான ஒருவரை விடவும் முதிர்ச்சியும் அனுபவமும் அங்கீகாரமும் குறைந்த டளஸ் அழகப்பெரும வைக் கையாள்வது இலகுவானது என்று இந்தியா கருதியிருக்கக் கூடும்

தாமரை மொட்டுக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பொருத்தமான ஒரு முன் தடுப்பாக ரணிலே காணப்படுகிறார். அதனால் அவர் ஜனாதிபதியாக வருவதை இந்தியாவால் தடுக்க முடியவில்லை. யாராலும் தடுக்க முடியாது. ஏனென்றால் தாமரை மொட்டுக்கள் நாடாளுமன்றத்தில் இப்பொழுதும் பலமாக காணப்படுகின்றன. இவ்வாறான ஒரு பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்ததும் இந்தியா அவரை அதிகம் வரவேற்கவில்லை என்று கருதப்படுகிறது. பொதுவாக இலங்கைத்தீவின் ஆட்சித்தலைவர் பதவியேற்றதும் முதலில் செல்லும் நாடு இந்தியாதான். ஆனால் ரணில் இன்றுவரை இந்தியாவுக்குப் போகவில்லை அல்லது இந்தியா அவரை வரவேற்கவில்லை?

இந்தியாவை நெருங்கிச் செல்ல அவர் எடுத்த முயற்சிகள் எதிர்பார்த்த பலன்களைத் தரவில்லை என்றும் கருதப்படுகிறது. இவ்வாறானதொரு பின்னணியில்தான் அன்மையில் இந்திய பாதுகாப்புத் துறை ஆலோசகர் கொழும்புக்கு வந்து சென்றதாக தகவல்கள் வெளிவந்தன.இதை எந்த ஒரு தரப்பும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.ஆனால் அவருடைய வருகைக்குப்பின் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் இந்தியாவை கவரும் விதத்தில் தொடர்ச்சியாக நகர்வுகளை முன்னெடுத்து வருகிறது. அடுத்த சுதந்திர தின விழாவில் இந்திய பிரதமரை அல்லது ஜனாதிபதியை பிரதான விருந்தினராக அழைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. அவ்வாறு இந்திய தலைவர் ஒருவர் வருவதற்கு இந்தியாவை திருப்திப்படுத்தும் சில நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டி இருப்பதாக தெரிகிறது.அதன்படி அண்மை வாரங்களாக பின்வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முதலாவதாக, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை புனரமைக்கும் வேலைகள் இந்தியப் பெரு வணிக நிறுவனமான அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

இரண்டாவதாக, மூடப்பட்டிருந்த பலாலி விமான நிலையம் கடந்த வாரம் மறுபடியும் இயங்கத் தொடங்கி இருக்கிறது.

மூன்றாவதாக, காங்கேசன்துறையிலிருந்து காரைக்காலுக்கு யாத்திரிகர் பயணிகள் சேவை ஒன்று அடுத்த ஆண்டிலிருந்து தொடங்கப்படும் என்று ஊகங்கள் நிலவுகின்றன. அதற்குரிய கட்டுமான வேலைகளை செய்து முடிப்பதற்கு ஆக குறைந்தது 8 மாத காலம் எடுக்கும் என்றும் அதனால் அந்த படகுச் சேவையை உடனடியாக தொடங்க முடியாது என்றும் தகவல் உண்டு. மேலும் இது கடல் கொந்தளிக்கும் காலம் என்பதனால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்காலிகமாக அந்த சேவையை தொடங்கலாம் என்றும் ஓர் எதிர்பார்ப்பு உண்டு. இந்த சேவையைத் ஆரம்பிக்க வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்தே குரலெழுப்பி வருபவர் ஈழத்து சிவசேனை அமைப்பின் தலைவராகிய மறவன்புலவு சச்சிதானந்தம். அவர் அண்மையில் ஊடகங்களுக்கு அனுப்பிய தகவல்களின்படி இக்கப்பல்சேவையை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாலாவதாக, இந்தியாவின் நிதி உதவியோடு கட்டப்பட்ட யாழ்.கலாச்சார மையத்தை திறக்கும் வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இக் கலாச்சார மையத்தை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் விரும்பின. சீனாவால் கட்டிக் கொடுக்கப்பட்ட தாமரை மொட்டு கோபுரத்தைப் போல கலாச்சார மைய த்துக்கும் ஒரு அதிகார சபையை உருவாக்கி அதை நிர்வகிக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்பியதாக தெரிகிறது. எனினும் இக்கலாச்சார மண்டபமானது தமிழ் மக்களுக்கான தனது பரிசு என்ற அடிப்படையில் அதனை தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு கட்டமைப்பு நிர்வகிக்க வேண்டும் என்று இந்தியா விரும்பியதாக தெரிகிறது. அதன்படி யாழ் மாநகர சபை மேற்படி மண்டபத்தை நிர்வகிப்பதற்கு தேவையான நிதி உதவிகளை இந்தியா வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.இதற்கென்று பிரதான குழு ஒன்றும் உப குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளன . அடுத்த சுதந்திர தின விழாவையொட்டி இம்மண்டபம் திறக்கப்படக்கூடும். இந்திய அரசுத் தலைவர்களில் யாராவது ஒருவர் இந்த மண்டபத்தை திறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முதலில் பிரதமர் மோடி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்பொழுது இந்திய ஜனாதிபதி வரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.அடுத்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தை கலாச்சார மண்டபத் திறப்பு விழாவோடு யாழ்ப்பாணத்திலும் கொண்டாடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதில் இந்தியத் தலைவர் ஒருவரை அழைப்பதன் மூலம் அரசாங்கம் பல்வேறு இலக்குகளை ஒரே சமயத்தில் அடைய முயற்சிக்கின்றதா?

ரணில் விக்ரமசிங்கே தமிழ்க் கட்சிகளோடு பேச்சுவார்த்தைகளை தொடங்கியிருக்கும் ஒரு பின்னணியில், இந்தியாவை நோக்கி நெருங்கி செல்வது என்பது அவருக்கு சாதகமான விளைவுகளைக் கொடுக்கும். இந்தியாவுடனான உறவுகளை சீர்செய்ய முடியும்.அதேசமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவை அரசாங்கத்துக்குச் சாதகமாகக் கையாள முடியும்.அதை நோக்கி அவர் புத்திசாலித்தனமாக நகரத் தொடங்கி விட்டார்.

அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதில் இருந்து இந்தியாவை நெருங்கிச் செல்வதற்கு முயற்சித்து வருகிறார். எனினும் இந்தியா அவரை முழுமையாக நெருங்கி வரவில்லை என்று தெரிந்தது.ஆனால் அண்மை வாரங்களாக அவர் அந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருப்பதாகத் தெரிகிறது.அரசுடைய இனமாக இருப்பதில் உள்ள அனுகூலம் அதுதான். அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுகளின் மூலம் அவர்கள் இடைவெளிகளைக் கவனமாகக் கையாள முடிகிறது. ஆனால் தமிழ்த் தரப்போ அரசற்றது. இந்தியா உட்பட எல்லா பேரரசுகளும் இலங்கைதீவில் கொழும்பைக் கையாள்வதைத்தான் தமது பிரதான ராஜிய வழிமுறையாக கொண்டிருக்கின்றன. அண்மையில் இந்திய நாடாளுமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த வை.கோபால்சாமி எழுப்பிய ஒரு கேள்விக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் வழங்கிய பதிலில் அதைக் காண முடிகிறது.பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா கொழும்புக்கு வழங்கிய உதவிகள் முழு நாட்டுக்குமானவை, எல்லா இனங்களுக்குமானவை என்று அவர் கூறுகிறார் .அதாவது கொழும்பில் உள்ள அரசாங்கத்தை கையாள்வதுதான் தொடர்ந்தும் இந்தியாவின் அணுகுமுறையாக காணப்படுகிறது.

கடந்த 13 ஆண்டுகளாக இலங்கைத்தீவில் இந்தியாவின் பிடி ஒப்பீட்டளவில் பலவீனமாகவே காணப்படுகிறது. முன்னைய அரசாங்கங்கள் இந்தியாவோடு இணங்கி ஏற்றுக்கொண்ட உடன்படிக்கைகளிலிருந்து பின் வந்த அரசாங்கங்கள் பின்வாங்கின. உதாரணமாக கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம்,பலாலி விமான நிலையத் திறப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.மேலும், வடக்கில் கடலட்டைப் பண்ணைகளின் மூலம் சீனா உள் நுழைவதாக இந்தியா சந்தேகிக்கிறது.அதேசமயம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதார நெருக்கடியின்போது இலங்கைக்கு முதலில் புதிய நாடாக இந்தியா காணப்படுகிறது. அந்த உதவிகளின்மூலம் இந்தியா ஆறு உடன்படிக்கைகளைச் செய்து கொண்டது. அவற்றில் முக்கியமானது எம்.ஆர்.சி.சி என்று அழைக்கப்படும் கடல்சார் மீட்பு நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு உடன்படிக்கையாகும்.மேலும் திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்கள் தொடர்பில் ஏற்கனவே இந்தியாவும் இலங்கையும் ஒப்புக்கொண்ட உடன்படிக்கையை முன்நகர்த்தும் விடயத்தில் இந்தியாவுக்கு சாதகமான திருப்பங்கள் ஏற்பட்டன. எனினும் வடக்கிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இணைப்பு திட்டங்கள் பொறுத்து, கொழும்பு இழுத்தடிக்கும் ஒரு போக்கை கடைப்பிடித்து வந்தது. ஆனால் அன்மை வாரங்களில் ரணில் விக்கிரமசிங்க டெல்லியை நெருங்கி செல்வதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறி இருப்பதாக தெரிகிறது. அதாவது இந்தியாவுடனான உறவுகளை அவர் சீர்செய்யத் தொடங்கிவிட்டார்.இது எதிர்காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?

-நிலாந்தன்

சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு சாத்தியமற்றது – சரத் வீரசேகர

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் உண்மையான நோக்கம் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தை புறக்கணித்தமை தொடர்பில் ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதிகார பகிர்வு என்பது சாத்தியமற்றது அதனால் ஜனாதிபதி தலைமையில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

நாட்டை பிளவுபடுத்தும் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு சாத்தியமற்றது எனவும் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாட்டின் ஒருமைப்பாட்டை விட்டுக் கொடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை பிளவுபடுத்த பெரும்பான்மையான மக்கள் இணக்கம் தெரிவிக்கமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமஷ்டி அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்துவது தமிழ் மக்களின் நோக்கமல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் சிறப்பாக செயல்படுகின்றனர் – ஜனாதிபதி ரணில்

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சிறந்து விளங்கும் சூழலை உருவாக்குவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாட்டுக்கு அன்னியச் செலாவணியை ஈட்டித் தருவதில் முக்கிய பங்கேற்பாளர்களான தொழில் துறையினரை வலுவூட்டுவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற 2022 தேசிய சிறப்பு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைப் பார்த்து வருந்துவதை விடுத்து, சுபீட்சமான எதிர்காலத்தை ஏற்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் இரண்டாம் உலகப் போரினால் அழிந்த ஜப்பானும் ஜேர்மனியும் வளர்ச்சியடைந்தமையை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.