வாகனங்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களுக்கான இறக்குமதித் தடை விரைவில் நீக்கம்

வாகனங்கள் தவிர மற்ற அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளையும் செப்டம்பர் முதல் வாரத்தில் அரசாங்கம் நீக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதியமைச்சு அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சின் போதே ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை 286 பொருட்களுக்கான இறக்குமதித் தடை நீக்கப்பட்டுள்ளதுடன் வாகனங்கள் உட்பட மேலும் 930 பொருட்களின் இறக்குமதித் தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இதேநேரம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட 500 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 250 பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

ஏற்கனவே தடை செய்யப்பட்ட பொருட்களை இரண்டு கட்டங்களாக செப்டம்பர் முதல் வாரத்திற்குள் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார ரீதியாக இந்தியா இலங்கைக்கு தொடர்ந்தும் உதவியளிக்கும் – இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கையை பொருளாதார ரீதியாகவும், பௌதீக ரீதியாகவும் அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்தின் மற்றும் வர்த்தக சமூகத்தினரின் ஆதரவு தொடர்ந்தும் வழங்கப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று நடைபெற்ற இந்திய வர்த்தகர்களுடனான விசேட சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் நீண்ட காலமாக இலங்கையில் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்த வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவுப் பாலத்தை உருவாக்க முடிந்துள்ளது.

அது இலங்கை மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன். இலங்கை மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் அந்த மக்களுடன் இந்தியா இருந்தது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் போது இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு இந்திய அரசாங்கம் உட்பட வர்த்தக சமூகம் உதவிகளை வழங்கியது.

இலங்கை, தற்போது நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது என்றே கூற வேண்டும்.

நிதி நெருக்கடியின் போதும், இந்திய வர்த்தகர்கள் இலங்கையில் வியாபாரங்களை ஆரம்பித்து இலங்கையின் நிதி நிலைமை நன்றாக உள்ளது என்ற செய்தியை உலகுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்தார்கள்.

இலங்கையில் வர்த்தகம் செய்யும் இந்திய வர்த்தகர்களுக்கு கடந்த 40 ஆண்டுகளாக இலங்கையில் உள்ள அரசாங்கங்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவ்வாறே ஆதரவளித்துள்ளார்.

இலங்கையை பொருளாதார ரீதியாகவும், பௌதீக ரீதியாகவும் அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்தின் மற்றும் வர்த்தக சமூகத்தினரின் ஆதரவு வழங்கப்படும் என்பதை இங்கு நினைவுகூர்கிறேன்.

இது இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வழங்கப்படும் வாக்குறுதி என்றே கூற வேண்டும்.- என்றார்.

கடற்றொழில் அமைச்சர் பினாமிகளை வைத்து அட்டை பண்ணைகளை அமைக்கிறார் என குற்றச்சாட்டு

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்களிடம் சலுகையைப் பெற்றும், பினாமிகளை வைத்து அட்டை பண்ணைகளை அமைத்தும் வருவதாக அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (13) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய நாட்டிலே மீனவர்கள் பல கோணங்களிலும் பல இன்னல்கள் சந்தித்து கொண்டு வருகின்ற இந்த நேரத்திலே, மீண்டும் மீண்டும் அவர்களுக்கு செயற்கையான துன்பங்களையும் துயரங்களையும் கொடுத்துக் கொண்டுவரும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றது.

நாம் எமது கடற்தொழில் சம்பந்தமான விடயங்களையும் அதன் அபிவிருத்தி தொடர்பான விடயங்களையும் அரசிடம் இருந்து கேட்டுப் பெறுவதுமே வழக்கம். அந்த வகையிலே இதற்கென நியமிக்கப்பட்டுள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் சில விடயங்களை முன்வைத்த போதும் எந்தப் பலனும் கிட்டவில்லை.

இந்தியாவில் இருந்து வருகின்ற இழுவை மடி தொழிலாளர்கள் எங்களுக்கு செய்கின்ற அடாவடித்தனங்கள், அத்துமீறல்கள் என்பவற்றை கண்டித்து போராட்டம் நடத்தினால் அங்கே கடத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வந்து அந்தப் போராட்டத்தை நிறுத்தி அதனை முறியடிக்கின்றார்.

உள்ளூர் இழுவை மாடி தொழில் செய்யக்கூடாது என்ற சட்டம் அரச வர்த்தமானி அறிவித்தலில் இருந்த போதும் கூட, உள்ளூர் இழுவை மடித்தொழிலைச் செய்து நமது எஞ்சிய வளங்களையும், வாழ்வாதாரத்தையும் உள்ளூர் இழுவைமடி தொழிலாளர்கள் சீரழித்து வருகின்றார்கள். இதற்கு எதிராக போராட்டம் நடத்தினால் அங்கேயும் வந்து குறுக்கே விழுந்து அந்தப் போராட்டத்தை தடுப்பதும் இல்லாமல் அந்த இழுவை மடி தொழிலாளர்களுக்கு தானும் ஊக்கம் கொடுத்து ஏதோ சலுகையைப் பெற்று, அந்தத் தொழிலை மீண்டும் மீண்டும் சட்டத்திற்கு முரணாக செய்வித்துக் கொண்டு வருகின்றார் கடற்தொழில் அமைச்சர்.

அட்டைப் பண்ணைகளால் தமக்கு ஏற்படுகின்ற இடையூறுகளை நாங்கள் தெளிவுபடுத்தி பல முறைப்பாடுகளை செய்தாலும் அதனை முறியடித்து அட்டைப் பண்ணைகளுக்கு அனுமதி கொடுப்பது மட்டுமில்லாமல் அதில் தானும் பினாமிகளை வைத்து, தனக்கு சொந்தமான அட்டைப் பண்ணைகளையும் போட்டு அங்கே மீனவர்களுடைய வாழ்வாதாரத்தையும் சுரண்டிக் கொண்டு வருகின்றார்.

எங்களுடைய பிரச்சனைகளை சொல்லக் கூடிய ஒருவராக மீன்பிடி அமைச்சர் இருக்க வேண்டிய நிலையில், நாங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக, எங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் குழி தோண்டி புதைக்கின்ற, எங்களை அழிவு பாதையில் இட்டுச் செல்கின்ற ஒரு வழியை வகுக்கின்ற இக்கட்டானவராகவே எமது மீன்பிடி அமைச்சர் காணப்படுகின்றார்.

என்று டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீன்பிடி அமைச்சராக பதவியேற்றதிலிருந்து வடபகுதியிலே என்னென்ன அபிவிருத்தியை செய்திருக்கின்றார் என நாங்கள் கோடிட்டு பார்க்க வேண்டும். வடபுலத்தில் எங்கேயாவது ஒரு மீன்பிடித் துறைமுகம் வந்திருக்கின்றதா?,

அல்லது நங்கூரம் இடும் மையம் வந்திருக்கின்றதா?, அல்லது மீனவர்களுக்கு வசதியாக எரிபொருள் நிலையங்களை ஏற்பாடு செய்து கொடுக்கின்றாரா?, அல்லது அவர்களுக்கு குளிரூட்டி பெட்டிகள் ஏதாவது ஏற்பாடு செய்து கொடுத்திருக்கின்றாரா?, இது தவிர போரினால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் பல்லாயிரம் பேருள்ள நிலையில் இன்று வரை அவர்களுக்கான வாழ்வாதாரமாக ஏதாவது அரசிடமிருந்து தொழில் உபகரணங்களை பெற்றுக் கொடுத்திருக்கின்றாரா? எதுவுமேயில்லை.

இப்படியாக எங்களுக்கு ஒரு முட்டுக்கட்டையாக எங்கள் அபிவிருத்தியை வளர விடாமல் தடுக்கின்ற ஒருவராக தங்களது மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவாவனந்தா செயற்பட்டு கொண்டு வருகின்றார். அந்த வகையிலே அவரிடம் முறைப்பாடு செய்து எந்தவொரு செயல்பாடுகளையும் செய்ய முடியாது. ஆகையால் ஜனாதிபதியை சந்தித்து அவரிடம் சில முறைப்பாடுகளை செய்யலாம் என நினைத்திருக்கின்றோம் – என்றார்.

மடியில் கனம் இருப்பதால் பிதற்றுகிறார் கமால் குணரட்ன – சபா குகதாஸ்

மடியில் கனம் இருப்பதால்  கமால் குணரட்ன பிதற்றுகிறார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

தற்போதைய பாதுகாப்பு செயலரும் இறுதிப் போரின் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய ஓய்வு நிலை இராணுவத் தளபதியும் ஆன கமால் குணரட்ன ஊடக அறிக்கையில் எதற்கு எடுத்தாலும் தமிழ் அரசியல்வாதிகள் சிறுபிள்ளைத் தனமாக சர்வதேச விசாரணை வேண்டும் என கேட்கிறார்கள் என பிதட்டியுள்ளார்.

கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு சர்வதேச நிபுணர்கள் முன்னிலையில் நடந்தால் இறுதிப் போரில் முக்கிய தளபதியாக வன்னிப் போர்க்களத்தில் நின்ற கமால் குணரட்ன மாட்டிக் கொள்ள வேண்டி வரும் என்ற பயத்தினால் உளற ஆரம்பித்துள்ளார்

தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக அரச படைகளினாலும் ஆட்சியாளர்களினாலும் மேற் கொள்ளப்பட்ட மேற் கொள்ளப்படுகின்ற அநீதிக்கு ஆட்சியாளர்களினால் நீதி கிடைத்த வரலாறு இருக்கிறதா? நீதிமன்றங்கள் கொடுத்த தீர்ப்பை மதித்து நடந்த சந்தர்ப்பம் உண்டா? உண்மையை கண்டறியும் ஆணைக்குழுக்களின் மூலம் நீதி கிடைத்ததா ? இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உள் நாட்டில் நீதி கிடைக்கும் என நம்ப தயார் இல்லை முழுமையான நம்பிக்கையை இழந்த பின்னர் சர்வதேச நீதியை கோரி உள்ளனர்.

இறுதிப் போரில் அரச படைகள் மேற் கொண்ட யுத்தக் குற்றங்கள் இனப்படுகொலைகள் யாவற்றுக்கும் பக்கச் சார்ப்ற்ற விசாரணை நடப்பதாக இருந்தால் கமால் குணரட்ன உற்பட்ட குழுவினர் போர்க்குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்படலாம் என்ற அச்சம் உள்ளதால் பிதட்டுகிறார் பாதுகாப்பு செயலாளர்.

ஏப்பிரல் 21 படுகொலைக்கு கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை ஏன் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையின் கதவினை தட்டினார் என்பதை குறுகிய காலத்தில் கமால் மறந்து விட்டாரா? கர்தினால் உள் நாட்டில் நீதி கிடைக்காமையால் தான் சர்வதேசத்தின் கதவுகளை திறந்து நீதியை பெற்றுத் தருமாறு கேட்டார் என்பதை உலகமே அறியும் கமாலின் கருத்தை பார்த்தால் கர்தினாலும் சிறுபிள்ளைத் தனமாகவா நடக்கிறார்? இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

மலையக மக்களின் உயர்கல்வி வளர்ச்சிக்கு இந்தியா உதவ வேண்டும் – மனோ எம்.பி கோரிக்கை

மலையகத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, தாதியர் கல்லூரி, பல்கலைக்கழக கல்லூரி அமைய இந்தியா உதவிட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று (14) விடுத்துள்ள அறிக்கையில்,

“கொழும்பு அவிசாவளை முதல் நுவரெலியா வரை நாடெங்கும் பரந்து வாழும், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக தமிழரின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி ஆகியவை தொடர்பில், இந்திய மத்திய அரசு, உதவிட உத்தரவாதம் தர வேண்டும்.

மலையகம் – 200 நினைவுறுத்தல் தொடர்பில் இந்தியாவின் பங்களிப்பு இந்த அடிப்படைகளில் அமைய வேண்டும். இவ்வருட ஆரம்பத்திலேயே நாம் இந்திய தூதுவர் கோபால் பாகலேயிடம், மலையகம் – 200 நினைவுறுத்தல் நிகழ்வுகள் உரையாடி தொடர்பில் எழுத்து மூல கோரிக்கை விடுத்துள்ளோம். இலங்கை வந்து சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடமும் உரையாடியுள்ளோம். இந்நிலையில், அடுத்தவாரம், இந்தியா செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், இவை தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நல்லெண்ண உத்தரவாதங்கள் அளிப்பார் என நாம் நம்புகின்றோம்.

கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பில், இந்திய மத்திய அரசை நாம் நம்பி உள்ளோம். குறிப்பாக, நாடெங்கும் பரந்து வாழும், இந்திய வம்சாவளி மலையக தமிழர் பிள்ளைகளின் பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை.

இந்தப் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களை பயிற்றுவிக்க, விசேட வேலைத்திட்டம் தேவை. அதேபோல், தேயிலை, இறப்பர் மலைகளில் அல்லலுறும் எங்கள் பெண்களின் வெளிநாட்டு, உள்நாட்டு வேலை வாய்ப்ப்புகளை உறுதிப்படுத்த தாதியர் பயிற்சி கல்லூரி அவசியம். உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வியை அடிப்படையாகக்  கொண்டு ஒரு முதற்கட்ட பல்கலைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இவை அனைத்தும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கான விசேட சமூக அபிவிருத்தி திட்டங்களாக முன்னேடுக்கப்பட வேண்டும். மத்திய, மேல், சப்ரகமுவா, ஊவா, தென் மாகாணங்களில் வாழும்  நமது மக்கள்  தொடர்பில் தமக்குள்ள தார்மீகக் கடப்பாட்டை இந்திய மத்திய அரசு நிறைவேற்றும் என நாம் நம்புகின்றோம்.

அதேவேளை, இலங்கையில் மலையக தமிழரது தேசிய அரசியல் அபிலாஷை கோரிக்கைகள் தொடர்பில் நாம் உள்நாட்டில் இலங்கை அரசுடன் பேசுவோம். அதிகாரபூர்வ அரசு தரப்பு பேச்சு குழுவை முறைப்படி அமைத்து, அத்தகைய பேச்சுகளை விரைவில் ஆரம்பிக்க இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் உறுதி அளித்துள்ளார். அந்த உறுதிமொழியை அவர் நிறைவேற்றுவார் என நாம் நம்புகின்றோம்.” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சினோபெக் இலங்கை முதலீட்டுச் சபை இடையே ஒப்பந்தம் கைச்சாத்து

சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனமும், இலங்கை முதலீட்டுச் சபையும் இன்று உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளன.

இலங்கையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களை இயக்குதல் மற்றும் எரிபொருள் விநியோகத்திற்காக இந்த உடன்படிக்கை கையொப்பமாகியுள்ளது.

இறக்குமதி, களஞ்சியப்படுத்தல் மற்றும் எரிபொருள் விற்பனை என்பனவற்றுக்காக, இரு தரப்பினரால், 100 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, தற்போதுள்ள 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களையும், புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களையும், இந்த உடன்படிக்கையின் கீழ், சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனத்துடன், இயக்க உள்ளதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது.

கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு போதியளவு ஊட்டச்சத்து கிடைப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் – மன்னிப்புச் சபை

நாட்டின் அனைத்து கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, போதியளவு ஊட்டச்சத்து கிடைப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபை இந்த விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், நாட்டில் வீழ்ச்சியடைந்த வருமானம், வாழ்வாதார இழப்பு மற்றும் பணவீக்கம் என்பன, பெண்களின் கொள்வனவு திறனைக் குறைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்வழி ஊட்டச்சத்தை அதிகரிப்பதை நோக்கமாக கொண்ட, அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட திட்டங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தீவிரம் காரணமாக, சுகாதாரம் மற்றும் போஷாக்கு என்பன பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே, கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

எனவே, அனைத்து கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, போதியளவு ஊட்டச்சத்து கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் குறித்த சபை மேலும் வலியுறுத்தியுள்ளது.

குருந்தூர் மலை ஆதிசிவன் ஆலய கற்பூரத்தீயை சப்பாத்துக் காலால் மிதித்து அணைத்து பொலிஸாரும், சிங்கள இனவாதிகளும் அடாவடி

முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டுக்கு சென்ற தமிழ் மக்கள் பெரும் களேபரத்தின் மத்தியில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மலையிலிருந்து மக்களை கீழே இறக்குவதற்கு பொலிசார் பலப்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பொலிசாரால் தாக்கப்பட்டதாகவும், தள்ளிவிழுத்தப்பட்டதாகவும் பலர் குற்றம்சுமத்தினர்.

குருந்தூர் மலையில் பொலிசார், விசேட அதிரப்படையினரின் பாதுகாப்பின் மத்தியில் சிங்கள இனவாதிகளும், பிக்குகளும் ஆடிய சன்னத்தினால் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவும் கணக்கிலெடுக்கப்படவில்லை.

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

பொங்கல் விழாவுக்கு அனுமதி கோரி ஏற்பாட்டாளர்கள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்திருந்தது.

இன்று காலையில் பொங்கல் விழாவுக்காக தமிழ் மக்கள் சென்றபோது, அங்கு சிங்கள கடும்போக்காளர்கள் பலர் அழைத்து வரப்பட்டிருந்தனர். பௌத்த பிக்குகளும் குவிந்திருந்தனர். வெளியிடங்களில் இருந்து 2 பேருந்துகள் மற்றும் வாகனங்களில் அவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட மக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள். க.சிவனேசன், பா.கஜதீபன், து.ரவிகரன் உள்ளிட்டவர்களும் அங்கு சென்றிருந்தனர்.

பொங்கலுக்கான ஆயத்தங்கள் மேற்கொண்ட போது, அங்கு தீமூட்டி பொங்கல் செய்ய முடியாது என சிங்கள இனவாத தரப்பினர் மிரட்டல் விடுத்தனர். பிக்குகளும் சன்னதமாடினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இரு தரப்பும் மோதுவதை போன்ற சூழல் ஏற்பட்டது.

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் அனுமதியுடனேயே பொங்கல் வழிபாட்டுக்கு வந்துள்ளதாக தமிழ் மக்கள் தெரிவித்த போதும், அதை சிங்கள இனவாத தரப்பினர் கிஞ்சித்தும் கணக்கிலெடுக்கவில்லை.

தொல்பொருள் திணைக்கள பிரதிநிதியொருவர் பிரசன்னமாகியிருந்தார். அவரும் பொங்கல் மேற்கொள்ள முடியாது என்றார்.

இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று, நீதிமன்ற அனுமதியுடனேயே பொங்கலுக்கு வந்துள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவனேசன் சுட்டிக்காட்டினார். அத்துடன், பொங்க முடியாது என்றால் அதை எழுத்துமூலம் தருமாறு கேட்டார்.

இதையடுத்து சுருதியை மாற்றிய தொல்பொருள் திணைக்கள பிரதிநிதி, கட்டுப்பாடுகளுடன் பொங்கல் செய்யலாம் என்றார்.

நிலத்தில் தீ மூட்டாமல், நிலத்தில் கல் வைத்து அதன் மேல் தகரம் வைத்து, அதன்மேல் கல் வைத்து தீமூட்டுமாறு கூறினார்.

தொல்பொருள் திணைக்களத்தினரின் அறிவுறுத்தலின்படி, தகரத்தின் மீது பொங்கல் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. தீமூட்ட தயாரான போது, மீண்டும் சிங்கள இனவாத தரப்பினரும், பிக்குகளும் ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.

அப்போது முல்லைத்தீவு பொலிசார் அடாத்தாக செயற்பட்டு, பொங்கலுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகளை சிதைத்தனர். பொலிஸ் அதிகாரியொருவர் சப்பாத்து காலால் கற்பூர தீயை மிதித்து அணைத்தார்.

மலைக்கு கீழே பொங்கி, பொங்கலை எடுத்து வந்து மேலே படையல் செய்யலாம் என பொலிசார் கடுமையான நிபந்தனை விதித்தனர். எனினும், தமிழ் மக்கள் அதை ஏற்கவில்லை. குருந்தூர் தலையில் தமக்குள்ள வழிபாட்டு உரிமையை சுட்டிக்காட்டினர்.

எனினும், பொலிசார் பொங்கலுக்கு அனுமதியளிக்கவில்லை.

பொலிசார், விசேட அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

பின்னர் பொங்கலுக்கு சென்ற தமிழ் தரப்பினர் அனைவரையும் மலையிலிருந்து கீழே இறங்கி செல்லுமாறு பொலிசார் கட்டளையிட்டனர். அதே சமயத்தில், இன்று குழப்பத்தில் ஈடுபட்ட சிங்கள தரப்பினர், சட்டவிரோத விகாரை பகுதியில் பொலிசாரின் பாதுகாப்பில் தங்கியிருந்தனர்.

தமிழர்களுக்கு ஒரு சட்டம், சிங்களவர்களுக்கு ஒரு சட்டமா என கேள்வியெழுப்பிய தமிழ் தரப்பினர்,அங்கு கூடி, சிறிய மத அனுட்டானத்தில் ஈடுபட்டனர்.

சிங்களவர்களையும் மலையிலிருந்து இறக்கினாலே நாமும் இறங்குவோம் என பொங்கலுக்கு சென்ற தமிழ் தரப்பினர் குறிப்பிட்டனர். இதையடுத்து, பொலிசார் பலப்பிரயோகத்தை மேற்கொண்டு, தமிழ் தரப்பினரை மலையிலிருந்து கீழே இறக்கினர்.

இதன்போது, பலரை பொலிசாரால் பலவந்தமாக தள்ளினர். சிலர் தாக்கப்பட்டனர். அண்மையில் முல்லைத்தீவில் முஸ்லிம் காங்கிரசின் தராசு சின்னத்தில் இணைந்து உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பீற்றர் இளஞ்செழியன் என்ற இளைஞன் தாக்கப்பட்டு, இரத்தம் வழிந்த நிலையலிருந்தார்.

வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபனும், து.ரவிகரனும் தள்ளிவிழுத்தப்பட்டனர். இதனால் தமது காலில் உபாதையேற்பட்டுள்ளதாக கஜதீபன் குறிப்பிட்டார்.

5 இலட்சம் வரிக் கோப்புக்கள் இருந்தாலும் 31,000 பேரே வரி செலுத்துகின்றனர்

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு சிறிலங்கா சுங்கத் திணைக்களம், மது வரித் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் என்பனவற்றுடன் தமது குழு தொடர்ந்தும் கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதுடன் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான வசதிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் கடன் வழங்கும் போது, நாட்டின் பணவீக்கம், கையிருப்பின் அளவு மற்றும் அரசாங்க வருமானம் ஆகியனவற்றில் மேம்படுத்தப்பட்ட நிலையில் இருப்பது முக்கியமாகும்.

எதிர்வரும் டிசெம்பர் மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் கடன்வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐந்து இலட்சம் தனிநபர் வருமான வரிக்கோப்புகள் நாட்டில் காணப்படுகின்ற போதிலும் அவற்றில் 31 ஆயிரம் பேரே வரி செலுத்துகிறார்கள். வரையறுக்கப்பட்ட ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் 328 நிறுவனங்களிலிருந்தே வரி வருமானம் கிடைக்கப்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு செலுத்தவேண்டிய நிலுவைத் தொகையான 904 பில்லியன் ரூபாய் தொகையை உரிய தரப்பினரிடம் அறவிடுவது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை தோண்டும் பணிகளை நிறுத்த நீதிமன்றம் உத்தரவு

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தோண்டும் பணியை தற்காலிகமாக நிறுத்துமாறு முல்லைத்தீவு நீதிமன்றில் இருந்து கடந்த 12ஆம் திகதி உத்தரவு கிடைக்கப்பெற்றிருந்தது.

சர்வதேச தரம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு சுரங்கம் தோண்டுவதற்கு ஏற்ற சூழல் உருவாகும் வரை இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுகள் முறையான நியமங்கள் மற்றும் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இல்லை எனவும், அவ்வாறான மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பல தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
அகழ்வுப் பணிகளைத் தொடருமாறு அண்மையில் புதைகுழிக்கு அருகில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த இடத்தில் மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் 16 மனித எலும்புகள், பல புலி சீருடைகள், ஆயுதங்கள், சில வெடிகுண்டுகள் மற்றும் பிற இராணுவ உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

குறித்த பொருட்கள் தற்போது முல்லைத்தீவு நீதிமன்றில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதுடன் கொக்கிளாய் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையங்கள் மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு திணைக்களம் இணைந்து கொக்குத்தொடுவாய் பாரிய புதைகுழியை அகழ்வு செய்து வருகின்றனர்.