யானையை இலங்கைக்கு திரும்ப அனுப்பப் போவதில்லை என தாய்லாந்து தெரிவிப்பு

முத்துராஜா யானைக்கு சிறப்பு சிகிச்சைகளும் விசேட பயிற்சிகளும் தொடர்ச்சியாக அளிக்கப்படுவதாக தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், குறித்த யானையை இனிமேல் இலங்கைக்கு வழங்கப்போவதில்லை என்றும் தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து அரசாங்கத்தினால் நாட்டுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டு இருபத்தி இரண்டு வருடங்களாக நாட்டில் தங்கியிருந்த முத்துராஜா யானை, கடந்த 2 ஆம் திகதி தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த யானைக்கு கால் எலும்பில் ஏற்பட்ட காயம் உள்ளிட்ட உபாதைகளுக்கு சிகிச்சையளிக்கவே, தாய்லாந்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

இலங்கையில் முத்துராஜா யானை மிகவும் மோசமாக நடத்தப்பட்டதாக தாய்லாந்து அரசாங்கம் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், மீண்டும் இந்த யானையை இலங்கைக்கு வழங்கப்போவதில்லை என்று அந்நாட்டு சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முத்துராஜா யானையின் ஒரு கண்ணில் வெள்ளை பூ படர்ந்துள்ளமையும், பின்பக்க வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளமையும், முதுகில், நகங்கள் மற்றும் தோல்களின் பாதிப்பு ஏற்பட்டுள்ளமையும் தாய்லாந்து அரசாங்கம் மேற்கொண்ட பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது.

தற்போது தாய்லாந்தின் லம்பன் பிராந்தியத்தில் அமைந்துள்ள, யானைகள் சரணாலயத்தில், இதற்கான சிகிச்கைகளும் அளிக்கப்படுகின்றன.

அத்தோடு, முத்துராஜாவின் நடவடிக்கைகளின் சிறப்பான மாற்றம் தற்போது தெரிவதாகவும், அந்நாட்டு மொழிக்கு இணங்க செயற்படுவதாகவும் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய மேலும் இரண்டு யானைகள் தொடர்பாகவும் தாய்லாந்து அரசாங்கம் தற்போது கவனம் செலுத்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யானைகளின் உடல்நிலை குறித்து ஆராய்வதற்காக கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட விசேட குழுவொன்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் இடைநிறுத்தம்

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் இன்று முன்னெடுக்கப்பட்ட மேலதிக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

குறித்த மனிதப் புதைகுழி தொடர்பில் எதிர்வரும் 13.07.2023 (வியாழக்கிழமை) அன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அகழ்வுப்பணிகளுடன் தொடர்புடைய திணைக்களங்கள் மற்றும், அமைப்புக்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளவுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கலந்துரையாடலைத் தொடர்ந்தே அகழ்வுப் பணிகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்தவாரம் விடுதலைப்புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற ஆடைகள் மற்றும் எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வு பணிகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மேலும் பல எலும்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேநேரம் பிளாஸ்ரிக் பொருள், வயர் உள்ளிட்ட சில சான்று பொருட்களும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக அகழ்வு பணிகள் இன்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி T. பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றன.

இதன்போது இன்றையதினம் 13 எலும்புக் கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலதிக அகழ்வுப் பணிகளுக்காகத் தற்காலிகமாக அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அரசியல் கலாசாரத்தில்தான் பிரச்சினையே தவிர சட்டத்தில் அல்ல – அநுர குமார

எமது நாட்டில் மிகவும் சுதந்திரமாக இருக்கும் பொருளாதாரக் குற்றவாளிகள் தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுரகுமார திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவத்தபோதே அவர் இதனைக் குறிப்பிடடுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொருளாதாரக் குற்றவாளிகள் எமது நாட்டில் மிகவும் சுதந்திரமாக இருக்கிறார்கள். இவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்டநடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

எமது நாட்டில் சட்டம் பலமாகத்தான் உள்ளது. அதானால்தான் தேங்காய் திருடியவரும், இலஞ்சம் வாங்கிய கிராமசேவகரும், பொலிஸாரும்கூட சிறைக்குச் செல்கிறார்கள்.

ஆனால், இந்தச் சட்டத்தில் பாரிய குற்றங்களை இழைத்தவர்கள் சிக்குவதில்லை. அரசியல் பலத்தால் இதிலிருந்து இவர்கள் இலகுவாக தப்பித்துக் கொள்கிறார்கள்.

இந்த குழியிலிருந்து வெளியே வர, ஸ்தீரமான மற்றும் நேர்மையான அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

மத்திய வங்கியில் பிணைமுறி மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்தான் இன்று ஜனாதிபதியாக உள்ளார். நாட்டுக்குள் சட்டவிரோதமாக தங்கத்தை கடத்த முயன்றவர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இவ்வாறு எமது நாட்டின் அரசியல் கலாசாரத்தில்தான் பிரச்சினைக் காணப்படுகிறதே ஒழிய, சட்டத்தில் அல்ல.

குற்றவாளிகளை பாதுகாக்கும், குற்றவாளிகளுக்கு சுதந்திரம் அளிக்கும், குற்றவாளிகள் சட்டத்தை இயற்றும் ஒரு நாடாளுமன்ற சம்பிரதாயம் முதலில் மாற்றமடைய வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான சர்வதேச நேரடி விமானசேவை விரைவில் ஆரம்பம்

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான சர்வதேச நேரடி விமானசேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வருகிற 16ம் திகதி முதல் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமானமாக இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வாரத்தில் திங்கள்,செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய 4 நாட்களில் அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் இந்த விமான சேவையை முன்னெடுத்து வருகின்றது.

மேலும் அலையன்ஸ் ஏர் விமானம் தினமும் காலை 9.35 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் சென்றடையும்.

பின்னர் பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.25 மணிக்கு சென்னை வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் கட்சிகளுக்கு அரசியல் நீரிழிவு! வவுனியா கரும்பும் கசக்கிறது

“கரும்பு இனிக்குமா? கசக்குமா?” என்ற விவாதம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் சூடுபிடித்துள்ளது. அரசியல், ஊடகப் பரப்புடன் தொடர்ச்சியான அவதானிப்புக் குறைந்தவர்கள், “அதென்ன கரும்புக் கதை?” என்று ஆச்சரியமாகக் கேட்கக் கூடும்.

அந்தக் கதை இதுதான்.

வடக்கில் – வவுனியா மாவட்டத்தில் – கரும்பு ஆலையை நிறுவுவதற்கு அரசாங்கத்திடம் அனுமதியைக் கேட்டிருக்கிறது வெளிநாட்டு நிறுவனமொன்று. இது நடந்தது 2018 இல். அது நல்லாட்சி அரசாங்கக் காலம். 2018 ஜூலையில் தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான்ஓசா, அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்திருந்தார். அந்த வருகையின்போது பல விடயங்கள் பேசப்பட்டன. சில உடன்படிக்கைகள் செய்யப்பட்டன. அப்படிப் பேசப்பட்டவற்றில் ஒன்றுதான் இந்தக் கரும்பு ஆலை விடயமும்.

சுமார் 500 மில்லியன் டொலரில் மிகப் பெரிய கரும்பு ஆலையை நிறுவுதற்கென தாய்லாந்து நிறுவனத்தின் பேரில் தாய்லாந்துப் பிரதமர் கேட்ட திட்டத்துக்கு, மைத்திரிபால சிறிசேனா, அன்றைய பிரதமர் ரணில் விக்கிரசிங்க, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இரா. சம்மந்தன் என அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் சம்மந்தனைச் சந்தித்த பிரயுத் சான்ஓசாவிடம் வடக்கில் முதலீடு செய்வதைப்போல கிழக்கிலும் தாய்லாந்து முதலீடுகளைச்செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார் சம்மந்தன். பின்னர் இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்புக் கூட நடந்தது. அதிலும் இந்த விடயத்தைச் சம்மந்தன் பேசினார்.

இதற்குப் பின்னர், இந்தத் திட்டம் தொடர்பாக வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்பொழுது இந்தத் திட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளித்தனர். அன்று அரசாங்கத்துக்கு ஆதரவாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் செயற்பட்டபடியால் இது விவாதப் பொருளாகவில்லை.

அதற்குப் பிறகு அன்றைய அமைச்சரவையில் இதற்கான பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் அடுத்த கட்டமாக திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பாக ஆட்சிக் குழப்பம் ஏற்பட்டது. ரணில் விக்கிரமசிங்கவை நிராகரித்து விட்டு மகிந்த ராஜபக்ஸவை பிரதமராக்கினார், மைத்திரிபால சிறிசேன. அதனால் எல்லாமே தடைப்பட்டன. அதற்குப் பிறகு உருவான அமைச்சரவையில் மீண்டும் இந்தத்திட்டத்துக்கான அமைச்சரவை அங்கீகாரம் சில திருத்தங்களுடன் மேற்கொள்ளப்பட்டது. இருந்தாலும் அதுவும் நடைமுறைப்படுத்த முடியாமல் தடைப்பட்டது. காரணம், அன்று உலகம் முழுவதையும் ஆட்கொண்டிருந்த கொவிட் 19 இன் தாக்கம்.

அது நீங்க, இலங்கையில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கோத்தபாய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தார். அவர் இந்தத் திட்டத்துக்கான அனுமதிக்கு மீண்டும் சில மாற்றங்களைச் செய்து அமைச்சரவை அங்கீகாரத்துக்குச் சமர்ப்பித்தார். அதற்கும் அங்கீகாரம் கிடைத்தது. அதை நடைமுறைப்படுத்துவதற்கிடையில் கோத்தபாய ஆட்சியிலிருந்து விரட்டப்பட்டார்.

இப்படி இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் கழிந்து விட்டன.

இப்பொழுது ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்துக்கு வந்த பின், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பரிகாரம் காணும் வகையில் என்னென்ன திட்டங்கள் கிடப்பில் உள்ளன? என்னென்ன திட்டங்கள் தேக்கத்தில் உள்ளன. என்று ஆராய்திருக்கிறார். அப்படியான சூழலில் அடையாளம் கண்டு, மீண்டும் மேசைக்கு வந்ததே இந்தத் திட்டம்.

இதனை ஆராய்ந்த ஜனாதிபதி, பூர்வாங்க வேலைகள் எல்லாமே முடிந்த நிலையில் இருந்த இந்தத் திட்டத்தை சில மெருகுபடுத்தலுடன் மீண்டும் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தார்.

அப்பொழுதுதான் இது விவகாரமாக மாறியது.

விவகாரமாகிய கதை

முன்னர் சம்மதித்த தமிழ்த் தரப்புகள் இப்பொழுது இரண்டு, மூன்றாக உடைந்து விட்டன. முன்னரைப்போல ஆட்சியிலும் தமிழ்த்தரப்புகள் பங்கேற்கவில்லை. தவிர, இந்தத் திட்டத்துக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ரெலோ மட்டும்தான் நேரடியாக ஆதரவைத் தெரிவித்துள்ளது. புளொட் வழமையைப் போல நிலைமையைப் பார்த்து முடிவெடுப்போம் என்று மதிலின் மேலே குந்தியிருக்கிறது. ஈ.பி.ஆர்.எல்.எவ் இன்னும் வாயைத் திறக்கவே இல்லை. புதிய கூட்டமைப்பில் பங்காளிகள் அல்லவா!

பதிலாக தமிழரசுக் கட்சி பகிரங்கமாகவே தனது எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. இதற்குக் காரணம், இந்த அணிக்கு தமிழரசுக் கட்சி எதிராக நிற்பதாகும்.

“எந்த வகையிலும் இந்தத் திட்டத்தை அனுமதிக்க முடியாது. அப்படி அனுமதித்தால் அது சிங்களக் குடியேற்றத்தை வவுனியா வடக்கில் கொண்டு வந்து சேர்த்து விடும். கரும்புச்செய்கைக்கான நீர் விநியோகம் என்ற பேரில் மகாவலிகங்கையை நெடுங்கேணிக்குக்கொண்டு வருவார்கள். நீரோடு சேர்ந்து சிங்கள பௌத்தக் குடியேற்றம் என்ற நெருப்பும் வரும்” என்று சொல்கிறார் சுமந்திரன்.

“சுமந்திரன் இப்படிக் காட்டமாகச் சொல்வதற்குக் காரணம், உண்மையில் சிங்களக் குடியேற்றம் வந்து விடும் என்பதோ, மகாவலிகங்கை நெடுங்கேணிகுள் நுழைந்து விடும் என்பதோ அல்ல. ரெலோ இந்தத் திட்டத்தில் முன்னிலைப் பாத்திரம் ஏற்றிருப்பதேயாகும். மட்டுமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பைப் பலவீனப்படுத்தி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் ரெலோ காட்டிய அக்கறையும் அதைச் செயற்படுத்தி முடித்ததுமாகும். அத்துடன் இந்தத் திட்டத்தில் முக்கிய பாத்திரமேற்றிருக்கும் ரெலோவின் இன்றைய ஆலோசகர் சுரேன் குருசாமி இதில் பிரதான செல்வாக்கைச் செலுத்துகிறார். இவரே கூட்டமைப்பிலிருந்து ஏனைய மூன்று கட்சிகளையும் பிரித்தெடுத்து, புதிய அணியில் சேர்ப்பதற்கு காரணமானவர்களில் ஒருவர் என்று தமிழரசுக் கட்சியினர் நம்புவதாகும்” என்று ரெலோவின் தரப்பில் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக சுரேன் குருசாமியிடம் கேட்டபோது, “இந்தத் திட்டத்தை தொடக்கத்திலிருந்தே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்த அத்தனை பேரும் ஆதரித்தனர். சம்மந்தன் பொதுவெளியிலேயே இதைப்பற்றிப் பேசியிருக்கிறார். ஊடகவியலாளர் சந்திப்பைக் கூட நடத்தியிருக்கிறார். (இதோ அதற்கான ஆதாரங்கள் என்று அந்தச் செய்த வந்திருந்த பத்திரிகை நறுக்குகளைக் காண்பிக்கிறார்). அப்படியெல்லாம் செய்து விட்டு, இப்பொழுதுது ரெலோதான் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தது. இது ஒரு தேவையில்லாப் பிரச்சினை என்று சொல்வது அர்த்தமற்றது மட்டுமல்ல, அரசியல் லாபங்கருதியதுமாகும்” என்றார்.

மேலும் அவர் சொன்னார், “இது எமது பிரதேசத்துக்கு வந்துள்ள மிகப் பெரிய முதலீடாகும். பலரும் கருதுவதைப் போல இது சீன அரசாங்கத்தின் முதலீடல்ல. அல்லது இந்திய அரசாங்கத்துக்கு எதிரானதும் அல்ல. இது தாய்வானின் முதலீடு. இதன் மூலம் வன்னிப் பிரதேசத்தில் பலருக்கான தொழில்வாய்ப்புகளை உருவாக்க முடியும். கரும்பு ஆலையை மட்டுமே குறித்த நிறுவனம் 400 ஏக்கர் நிலத்தில் அமைத்துக் கொள்ளும். ஏனைய நிலமும் அவற்றில் பயிரிடும் உரிமையும் விவசாயிகளுக்கானது. சிலர் சொல்வதைப்போல இந்தத் திட்டத்தினால் சிங்களக் குடியேற்றம் வந்து விடும். நீர்த்தேவைக்காக மகாவலி கங்கையை வவுனியாவுக்குத் திருப்பி, அதன் வழியே சிங்களவர்களைக் கொண்டு வந்து விடுவார்கள் என்பதெல்லாம் ஏற்கக் கூடிய காரணங்களில்லை. சிங்களவர்களின் பிரசன்னத்துக்கான வழிகள் பல உண்டு. அதைத் தடுப்பது வேறு. இது வேறு. தவிர, இந்தத் திட்டத்தின் பயனாளிகளைத் தெரிவு செய்வது பிரதேச மட்டத்திலான மக்கள் பிரதிநிதிகளே. ஆகவே அதனை நாம் (தமிழ்ப்பிரதிநிதிகளே) செய்யப் போகிறோம். அப்படியிருக்கும்போது எப்படி சிங்களக் குடியேற்றத்துக்கான சந்தர்ப்பம் ஏற்படும்? இந்தப் பயனாளிகள் தெரிவில் மாற்றுத் திறனாளிகள்,முன்னாள் போராளிகள், பிரதேச ரீதியாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் முன்னணி விவசாயிகள், புதிய செய்கையாளர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். அதேவேளை ஏற்கனவே நெற்செய்கை உள்ளிட்ட ஏனைய பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு எந்த வகையான பாதிப்பும் ஏற்படாதவாறே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். எல்லாவற்றுக்கும் அப்பால் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இதில் திருத்தங்களுக்கு இடமுண்டு. அதற்குள் ஏன் இந்த அவசரமும் அநாவசியமான கதைகளும்? நாம் அரசியல் விடுதலையுடன் எமது மக்களின், எமது பிரதேசத்தின் பொருளாதார முன்னேற்றத்தைப் பற்றியும் சிந்திக்கிறோம்” என்று.

“கரும்புச் செய்கைக்கு அதிகளவு நீர் தேவைப்படுமே. அந்த நீரை செய்கை மேற்கொள்ளப்படக் கூடிய இடங்கள் என்று கூறப்படும் நெடுங்கேணி, செட்டிகுளம் போன்ற இடங்களில் பெற முடியுமா?” என்று கேட்டபோது, “இது தொடர்பான கள ஆய்வொன்று 2016, 2017 காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. வவுனியாப் பிரதேசத்தில் கிடைக்கின்ற மழை வீழ்ச்சியில் பெருமளவு பகுதி வீணடிக்கப்படுகிறது. அதை உரிய முறையில் சேமித்தால் பல திட்டங்களுக்கு அந்த நீரைப் பயன்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டது. இதற்கான கட்டுமானங்கள், வடிகாலமைப்புகளைச் செய்தால் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிட்டும். பொருளாதார வளத்தையும் பெருக்க முடியும் என்று அந்த அறிக்கை சொல்கிறது” என்கிறார் சுரேன் குருசாமி.

ஆனால், இந்தத் திட்டத்தை எதிர்க்கின்ற இன்னொரு தரப்பான தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் சூழலியலாளருமான பொ. ஐங்கரநேசன், இது தொடர்பாக வேறு விளக்கத்தை அளிக்கிறார். “இந்தத் திட்டத்தை நாம் மறுப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. ஒன்று, இந்தத் திட்டத்தை வவுனியாவில் திணிக்க முற்படுகின்ற அரசாங்கம், 1960 களிலிருந்து கந்தளாயில் மேற்கொள்ளப்பட்டு வந்த கரும்புச் செய்கையையும் சர்க்கரை உற்பத்தியையும் நிறுத்தி வைத்திருப்பது ஏன்? அங்கேயே மீளவும் அதை ஆரம்பிக்கலாமே. அதற்குரிய அத்தனை வசதிகளும் ஏற்பாடுகளும் அங்கேயே உண்டு. இரண்டாவது, இந்தத் திட்டத்தினால் நீர்ப்பிரச்சினையும் சூழலியல் கேடும் ஏற்படும். உலக அளவில் நீர்ப்பிரச்சினையையும் சூழலியல் பாதுகாப்பையும் பற்றிச் சிந்திக்கின்ற நாடுகள், தமது முதலீடுகளை இலங்கை போன்ற நாடுகளில் மேற்கொள்ளவே முயற்சிக்கின்றன. இதன் மூலம் வருவாயைத் தாம் பெற்றுக் கொள்வதோடு, தமது இயற்கை வளத்தையும் சூழலையும் பேணிக் கொள்கின்றன. மாறாக எமது வளத்தைச் சுரண்டி, எமது சூழலைக் கெடுக்கின்றன. ஆகவே இதற்கு நாம் அனுமதிக்க முடியாது. மூன்றாவது, இந்தத் திட்டத்திற்குப் பதிலாக எமக்குப் பொருத்தமான வேறு திட்டங்களைக் கொண்டு வர முடியும். உதாரணமாக ஆனையிறவு – குறிஞ்சாத்தீவு உப்பளங்களை முந்திய மாதிரி முழுமையான அளவில் இயங்க வைக்கலாம். ஆழ்கடல் மீன்பிடியை விருத்தி செய்து, வெளிநாடுகளுக்கான கடல் உணவு ஏற்றுமதியை ஆரம்பிக்கலாம். இந்த மாதிரிப் பலவற்றைச் செய்யலாம். அப்படிச் செய்யாமல் இதைத் திணிக்க முற்படுவது ஏன்?” என்று கேட்கிறார்.

இந்தத் திட்டத்தை முன்னாள் முதலமைச்சராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரனும் எதிர்க்கிறார்.

இது பற்றி விவசாயத்துறை மற்றும் மண்ணியல் ஆய்வுத் துறைசார்ந்த அறிஞர்களிடம் கேட்டபோது, “இது அரசியல் விவகாரமாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நாம் நிதானமாக, ஆழமாகப் பார்க்க வேண்டும். எந்தப் பொருளாதாரத் திட்டத்திலும் சாதக பாதக அம்சங்கள் இருக்கும். அதை எப்படிக் கையாளப் போகிறோம் என்பதைப் பொறுத்தே அவற்றின் நன்மை தீமைகளும் வெற்றி தோல்விகளும் உள்ளன. எங்களுடைய விவசாயிகளில் பலரும் சோம்பல் பயிற்செய்கையிலேயே அதிகமாக நாட்டம் கொண்டிருக்கின்றனர். அதற்காகவே அவர்கள் நெல் விவசாயத்தை அதிகமாகச் செய்ய விரும்புகிறார்கள். ஆனால், செய்கை பண்ணப்படும் நெல்லை சந்தைப்படுத்த முடியாமல் அவதிப்படுவதைப்பற்றிச் சிந்திப்பதில்லை. திரும்பத்திரும்ப இந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். இதற்குப் பதிலாக மாற்றுப் பயிர்ச்செய்கையைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. நாமும் மாற்றுப் பயிர்ச்செய்கையைப் பற்றி அக்கறைப்படும்படி தொடர்ந்து வலியுறுத்துகிறோம். விவசாயிகள் அதில் ஈடுபடுவதற்குத் தயங்குகிறார்கள். இதனால் உழுந்து, பயறு, கௌபி, கடலை, பருப்பு வகை, பருத்தி, மஞ்சள், மிளகு, பழங்கள் எனப் பலவற்றையும் இறக்குமதி செய்து கொண்டிருக்க வேண்டியுள்ளது. இதைக்குறித்து எங்களுடைய அரசியல் தலைவர்களுக்கும் அக்கறையில்லை. ஏதாவது அபிவிருத்தித் திட்டங்கள் வந்தால் அதை உடனடியாக எதிர்க்க முயற்சிப்பார்கள். இப்படித்தான் வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் வவுனியாவுக்கு வந்தபோதும் எதிர்த்தார்கள். ஒரே தரப்புக்குள்ளேயே முரண்பட்டு மாங்குளத்தில் கட்டவேண்டும் என்று ஒரு தரப்பும் ஓமந்தையில் கட்ட வேணும் என்று இன்னொரு தரப்பும் சண்டையிட்டன. இந்த மாதிரியான விடயங்களில் கலந்தாய்வை மேற்கொள்ளக் கூடியவாறு துறைசார் நிபுணத்துவக் குழு எதுவும் நம்மிடமில்லை. அப்படி ஒரு குழு இருந்தாலும் அதற்கொரு அரசியற் சாயத்தைப் பூசி விடுவார்கள். இதனால் பாதிக்கப்படுவது மக்களே. ஏனென்றால், முதலீட்டாளர்களுக்கு சிரமங்கள் அதிகம் இருப்பதை அவர்கள் விரும்புவதில்லை. ஒரு முதலீட்டாளர் படுகின்ற சிரமத்தைப் பார்க்கின்ற ஏனைய முதலீட்டாளர்கள் இந்தப் பக்கமாகத் தலை வைத்தும் படுக்க மாட்டார்கள். இதை எம்மவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்று நாடும் நம்முடைய மக்களும் இருக்கின்ற நிலைமையைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் பிழைப்புத் தேடி வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். பிறப்பு வீதம் குறைந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் எல்லாம் குறைவடையப் போகிறது. சனத்தொகை குறைந்தால் நமக்கான நிதி ஒதுக்கீடுகளும் வள ஒதுக்கீடுகளும் குறைவடையும். அதைத் தடுப்பதற்கு நாம் பல வழிகளிலும் முயற்சிக்க வேண்டும்” என்கின்றனர்.

இந்த நியாயத்தை நாம் மறுக்க முடியாது.

முதலில் இந்தத் திட்டத்தை அரசியல் பகைமை, அரசியல் லாபநட்டக் கணக்குகளுக்கு அப்பால் பார்க்க வேண்டும். ஏனென்றால் இந்தத் திட்டம் வடக்கில் கைவிடப்பட்டால், அதை தென்பகுதிக்குக் கொண்டு செல்வதற்கு அங்கே தயாராக உள்ளனர். விகாரைகள் கட்டப்படுவதை எதிர்க்கலாம். அதில் நியாயமுண்டு. இப்படியான தொழில்வாண்மைக்கான முயற்சிகளைத் தடுக்க முடியுமா? என்று அபிவிருத்திக் கண்ணோட்டமுடைய சிலர் கேட்கின்றனர்.

அவர்களுடைய நியாயம் என்னவென்றால், “கரும்பு உற்பத்தியை பிரேசில், இந்தியா, இந்தோனேசியா, சீனா, கியூபா என உலகில் 120 நாடுகள் மேற்கொள்கின்றன. முன்னணி வகித்த பிரேசிலைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இந்தியா முதலிடத்துக்கு வந்துள்ளது. இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே கரும்புச் செய்கையும் அதன் பயன்பாடும் இருந்துள்ளது. இப்பொழுது இந்தியாவில் 03 வீதமான நிலப்பரப்பில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது. 4.5 கோடி விவசாயிகள் கரும்புச்செய்கையில் ஈடுபடுகின்றனர். இதில் தமிழகம் 50 வீதமான உற்பத்தியைச் செய்கிறது. 2.5 லட்சம் ஏக்கரில் கரும்பு உற்பத்தி நடக்கிறது. இந்தியா முழுவதும் 500 க்கு மேற்பட்ட சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில் 41 ஆலைகள் தமிழகத்தில் மட்டும் உண்டு. ஆலைகளை விட கரும்பு ஆராய்ச்சி மையங்கள், உற்பத்திப் பிரிவுகள் எனப் பலவும் செயற்படுகின்றன. கரும்பு தின்னக் கைக்கூலி எதற்கு என்று தமிழில் பழமொழி கூட உள்ளது. தமிழ்ப் பண்பாட்டில் கரும்புக்கு முக்கியமான இடமுண்டு. பொங்கல், பண்டிகைகளில் கரும்பு முன்னிலைப்படுத்தப்படுகிறது. அந்தளவுக்குத் தமிழோடும் தமிழர் வாழ்வோடும் கரும்பு பின்னிப் பிணைந்திருக்கிறது. அப்படியான கரும்பு கசக்கிறது என்கிறார்கள்” இந்தப் புத்திஜீவிகள்.

உலகில் 80 வீதத்துக்கு மேலான சீனி மற்றும் சர்க்கரையை கரும்பிலிருந்தே உற்பத்தி செய்கிறார்கள். மீதியையே பீற்றூட்டிலிருந்து எடுக்கிறார்கள். கியூபாவின் பொருளாதாரத்தில் பாதியை கரும்பே நிறைவு செய்கிறது. உலகப் பெரும் புரட்சியாளர்கள் ஃபிடல் காஸ்ரோவும் சேகுவேராவும் கரும்பு வெட்டும் தொழிலைச் செய்திருக்கிறார்கள். அதையே தமது அடையாளமாகவும் கொண்டிருந்தனர். நம்முடைய அரசியல் தலைவர்களுக்கோ கரும்பு கசக்கிறது!

கரும்புச்செய்கையை மேற்கொள்வதாயின் அதற்கான நிலம், நீர் போன்றன உண்டா என்று வவுனியா மாவட்டச் செயலகத்துடன் தொடர்பு கொண்டபோது, “ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இதைப்பற்றிப் பேசப்பட்டது. பின்னர் அமைச்சரவை, ஜனாதிபதி ஆகிய தரப்புகள் தொடர்பு கொண்டு பேச்சுகளை நடத்தின. இதன்போது தேவையான நீரைப் பெற்றுக் கொள்ள முடியும் என நீர்ப்பாசனத் திணைக்களமும் தேவையான காணிகளை வழங்க முடியும் என வனப் பிரவினரும் காணி அமைச்சும் சொல்லியுள்ளன. ஆனால், திட்டத்தை இன்னும் இறுதி செய்யவில்லை என்று அறிகிறோம்” என்று சொல்லப்பட்டது.

கரும்பு கசக்குமா? இனிக்குமா? என்று சரியாகத் தீர்மானிக்க முடியவில்லை. அதைத் தீர்மானிக்க வேண்டியது மக்களே. அப்படித்தான் இந்தத் திட்டத்தை முன்மொழிந்த ரெலோவும் சொல்கிறது.

 

– கருணாகரன்

பனையை தெரியாதவர் பனை அபிவிருத்தி சபை தலைவர்; கொழும்பிலிருந்து இயங்கும் அலுவலர்கள் – சுரேஷ் க. பிரேமச்சந்திரன்

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி வரும் பனை அபிவிருத்திச் சபையின் நிர்வாகச் சீர்கேட்டையும் முறையற்ற நியமனங்களையும் நிறுத்தி, பனை அபிவிருத்தி சபையை வினைதிறன் மிக்கதாகச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விபரம் வருமாறு.

பனை அபிவிருத்திச் சபையானது 1978ஆம் ஆண்டு தென்னை அபிவிருத்திச் சட்டத்தின்கீழ், யாழ்ப்பாணத்தை தலைமை அலுவலகமாகக் கொண்டு, பனையை நம்பிவாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் பனை வளம் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் எனவும் உருவாக்கப்பட்ட ஒரு சபையாகும்.

இலங்கையின் பனை வளமானது முழுமையாக வடககு-கிழக்கையே சார்ந்துள்ளது. ஏறத்தாழ 11இலட்சம் பனை வளம் இங்கு இருப்பதாக அறியப்படுகிறது. ஆனால், இதைக் கொண்டு நடத்தும் பனை அபிவிருத்திச் சபையானது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. இதனால் சங்கங்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு பனை வளத்தினை நம்பி வாழும் குடும்ங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பனைவள அபிவிருத்தியும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றது.

பனைவள உற்பத்தி மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்தி மட்டங்கள் ஒப்பீட்டளவில் கடந்த காலங்களைவிட மிகவும் குறைவாகவே காணப்படுவதுடன், பனைவளத்தினைக் கொண்டு பல்வேறு வகையான உற்பத்திப் பொருட்கள் உற்பத்தி செய்யக்கூடியதாக இருந்தும் அவற்றின் உற்பத்தி ஊக்குவிக்கப்படுவதில்லை.

முதலாவதாக, வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் இதன் தலைமைச்செயலகம் இருந்தபோதிலும்கூட, பல இலட்ச ரூபாய் வாடகையில் கொழும்பில் இன்னொரு தலைமைச் சங்கம் இயங்கிவருகிறது. இதன் காரணமாக, மிகப்பெருமளவிலான பனை வளத்தினை வடமாகாணம் கொண்டிருந்த போதிலும்கூட, அதன் பலன் மக்களைச் சென்றடையவில்லை.

பனை மரத்தைப் பற்றியோ அதன் பயன்பாடு பற்றியோ அறியாத சிங்கள மொழிபேசும் தென்பகுதியைச் சார்ந்த ஒருவரை பனை அபிவிருத்திசபையின் தலைவராக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நியமித்தமை தவறானது. அவர் தென்பகுதியைச் சார்ந்தவராக இருப்பதால், தேவைக்கு மேலதிகமான வாடகையைக் கொடுத்து கொழும்பிலே நிர்வாகத்தை நடாத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

நாடு இன்று எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தேவையற்ற செலவானது நாட்டின் பொருளாதார சீர்கேட்டிற்கு மேலும் உரமூட்டுவதுடன், பனைத்தொழிலை நம்பி வாழும் வடக்கு-கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. வடக்கு-கிழக்கில் பனை வளத்துடன் ஈடுபாடுகொண்ட படித்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் யுவதிகள் ஆயிரக்கணக்கில் இருக்கையில் இந்தத் துறையுடன் தொடர்பில்லாத 250ற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர் யுவதிகளை பனை அபிவித்திச்சபை உள்வாங்கியிருப்பதும் இவர்களும் பெருமளவில் கொழும்பை மையமாகக் கொண்டு பணியாற்றி வருவதும் பனை அபிவிருத்திசபை கீழ்நோக்கிச் செல்வதற்குக் காரணமாக அமைகின்றது.

பனை அபிவிருத்தி சபையானது கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, பருத்தித்துறை, திக்கம் பிரதேசத்தில் ஒரு வடிசாலையை நடத்தி வந்தது. மிகவும் இலாபகரமாக இயங்கிவந்த இந்த வடிசாலையினால் 3000 தொழிலாளர்கள் பயன்பெற்று வந்தார்கள். இந்த வடிசாலையானது பல்வேறு சந்தர்ப்பங்களில் வடக்கில் பொறுப்பாக இருந்த அமைச்சர்களினால் சூரையாடப்பட்டது. இவ்வளவு கொள்ளைகளும் சூரையாடல்களும் இடம்பெற்ற பின்னரும்கூட அது தொடர்ந்தும் இலாபத்திலேயே இயங்கி வந்தது.

கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக வடிசாலை மூடப்பட்டதன் காரணத்தினால் இந்த வடிசாலைக்கு கள்ளை விநியோகித்து வந்த தொழிலாளிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரைகாலமும் திக்கம் வடிசாலையை பனை அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம் நடத்தி வந்தது. வடிசாலைக்கான உரிமம், பனம் சாராயத்தை உற்பத்தி செய்வதற்கான உரிமம், அவற்றைக் களஞ்சியப்படுத்துவதற்கும் விற்பதற்குமான உரிமம் அனைத்தும் பனை அபிவிருத்திச் சபையின் பெயரில் சமாசங்களிடமே இருந்தது. ஆனால் இப்பொழுது இருக்கின்ற பனை அபிவிருத்திச் சபையின் தலைவரான சிங்களப் பெருமகன், இந்த உரிமங்களை சிங்கள நபர் ஒருவருக்கு அளித்துள்ளதாக அறியமுடிகிறது. இதனால் பனை வளச் சங்கங்கள் சமாசங்கள், அதன் கூட்டுறவு நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்படுவதுடன் இந்த சகல வருமானங்களையும் ஒரு தனிநபருக்கு அளிக்க முற்பட்டமையானது ஒட்டுமொத்த பனை அபிவிருத்தி முயற்சியையும் சீர்குலைக்கும் செயற்பாடாகும்.

இந்த நடவடிக்கைகளின் காரணமாக, பனம்பொருள் உற்பத்தியும் அதன் ஏற்றுமதியும் மிக மோசமாகப் பாதிப்படைந்திருப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதற்கும் பங்களித்துள்ளது.

அமைச்சர்களின் அற்பத்தனமான, முன்யோசனையற்ற பதவி வழங்கல்களானது பனைவள அபிவிருத்தியை எவ்வளவுதூரம் பாதித்திருக்கிறது என்பதை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் ரீதியான முறையற்ற முகாமைத்துவமும், சீரற்ற நிர்வாக முகாமைத்துவமும் இலங்கையின் பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்திருக்கிறது என்பதை கடந்த இரண்டு வருடங்களாக நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில், பனைவள அபிவிருத்திச் சபைக்கான அதனை திறம்பட நடாத்துவதற்கான இலாபமீட்டும் ஒரு துறையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.

1. வடக்கு மாகாணத்தின் தலைமைச்செயலகத்தை வினைதிறனாக இயங்க வைப்பதுடன் பல இலட்சங்களை வாடகையாக விழுங்கி ஏப்பம்விடும் கொழும்பு செயலகம் மூடப்படுவதுடன் அங்குள்ள அனைத்து கட்டமைப்புகளும் ஏற்கனவே உள்ள அரச ஆணைகளுக்கிணங்க, யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட வேண்டும்.

2. பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக பனை வளத்தில் பரிச்சியமும் அத்துறையை அபிவிருத்தி செய்வதில் ஊக்கமும் அனுபவமும் கொண்ட சரியான நபர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.

3. பனைவள கூட்டுறவு சபைகள் பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் பனை வளத்தை அடிப்படையாகக் கொண்ட சங்கங்கள், சமாசங்கள் அதற்கென வழங்கிவரும் உதவிகள் ஒத்தாசைகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

4. திக்கம் வடிசாலைக்குரித்தான அனைத்து உரிமங்களும் வழங்கப்பட்டு முன்னர் இதனை இயக்கிவந்த சமாசங்களுக்கே இவற்றைத் தொடர்ந்தும் இயக்குவதற்கான அனுமதி அளிக்கப்படவேண்டும்.

5. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் அதிகளவு அக்கறை கொண்டுள்ளதாகக் கூறிக்கொள்ளும் ஜனாதிபதியும் அமைச்சர்களும் இதில் கூடுதல் கவனம் செலுத்தி பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு கோருகின்றோம்.

6. தனியாரை ஊக்குவித்து கூட்டுறவுத்துறையை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளைக் கைவிட்டு, கூட்டுறவுத்துறையை ஊக்குவித்து அவற்றை ஏற்கனவே இருந்ததுபோல் இலாபமீட்டும் துறையாகவும் வினைதிறன் மிக்கதாகவும் செயற்படுவதற்கு உதவுமாறு சகலரையும் கோருகிறோம்.

என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தினால் மேலும் சில நெருக்கடிகள் தோன்றக் கூடும் – ஃபிட்ச் ரேட்டிங்ஸ்

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள கடன்மறுசீரமைப்பு செயற்திட்டமானது இதுவரைகாலமும் உள்நாட்டு வங்கிக்கட்டமைப்பு தொடர்பில் நிலவிய நிலையற்ற தன்மைக்குத் தீர்வுகாண்பதற்கான மிகமுக்கிய முதற்படியாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம், இருப்பினும் வேறுசில விடயங்களில் சிக்கல்கள் தோற்றம்பெறக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

‘இலங்கையின் அபிவிருத்தி பிணையங்கள் தொடர்பில் அரசாங்கம் 3 விதமான மறுசீரமைப்புக்களை முன்மொழிந்திருக்கின்றது. இருப்பினும் பிணையங்கள் வடிவிலான அக்கடன்களை உள்நாட்டு நாணயமாக மாற்றுகின்ற தெரிவையே வங்கிகள் பெரும்பாலும் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கின்றோம்’ என சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனங்களில் ஒன்றான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, இவ்வாறு நிர்ணயிக்கப்படும் பங்களிப்பானது கடன்மறுசீரமைப்பின் விளைவாக வங்கி நிதிக்கு ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைக்கும் வகையில் அமையவேண்டியது அவசியம் என்று அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

‘தற்போது முன்மொழியப்பட்டுள்ள செயற்திட்டத்தின் பிரகாரம் மறுசீரமைப்பை மேற்கொள்ளும்போது, அது வங்கிக்கட்டமைப்பின்மீது வைப்பாளர் நம்பிக்கை இழப்பதற்கான தூண்டுதலை ஏற்படுத்தாது என்றே நாம் நம்புகின்றோம்.

இருப்பினும், நிதியீட்டல் மீதான அழுத்தங்கள் வங்கி தொடர்பான தரப்படுத்தல்களில் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும். எனவே, இந்தத் தாக்கத்தை சீர்செய்வதற்கு, கடன்மறுசீரமைப்பு நடைமுறைகள் குறித்த இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அதன்விளைவாக வங்கி நிதியில் ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பில் மதிப்பீடு செய்யவேண்டும்’ என்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ் வலியுறுத்தியுள்ளது.

மேலும், உள்ளகக் கடன்மறுசீரமைப்பு தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பானது இலங்கையின் வங்கிக்கட்டமைப்பை சூழ்ந்து காணப்பட்ட நிலையற்றதன்மைக்குத் தீர்வுகாண்பதற்கு வழிகோலியிருந்தாலும், சில அச்சுறுத்தல்கள் இன்னமும் தொடர்வதாக அந்நிறுவனம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் இலகு ரயில் திட்டத்தை மீள செயற்படுத்த அமைச்சரவை அனுமதி

ஜப்பானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் உத்தேச இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

உத்தேச இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு பொருத்தமான உடன்படிக்கையை எட்டுவதற்கு பொருத்தமான காலக்கெடுவைத் தயாரிப்பதற்காக கொழும்பில் உள்ள ஜப்பானிய இராஜதந்திர தூதரகத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்தார்.

குருந்தூர்மலை குறித்த பதில் அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

குருந்தூர்மலை வழக்கு இலக்கம் AR/673/2018 வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்கு வந்து நீதிபதி அவர்கள் குருந்தூர்மலையை நேரில் சென்று பார்வையிட்டு 2023.08.08ம் திகதி தவணை போடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குருந்தூர்மலை தொடர்பாக வழக்கிலக்கம் AR/673/18 இல் தொடரப்பட்டுள்ள வழக்கில், 12.06.2022இற்கு முன்னிருந்த நிலையை பேணுமாறும், அதற்குமேல் கட்டுமானப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு நீதிமன்றம் 19.07.2022அன்று கட்டளை பிறப்பித்திருந்தது.

எனினும், நீதிமன்றம் இவ்வாறு கட்டளை வழங்கிய பிற்பாடும், நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்தூர்மலையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக கடந்த 23.02.2023 அன்று குருந்தூர் மலைக்கு, தண்ணிமுறிப்புப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களும், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிலரும் கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த விஜயத்தின் போது இவ்வாறு நீதிமன்றத்தின் கட்டளைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவது உறுதிசெய்யப்பட்டது.

WhatsApp Image 2023 07 04 at 8.48.29 PM குருந்தூர்மலை குறித்த பதில் அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில் இவ்வாறு நீதிமன்றக் கட்டளைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெறுவது தொடர்பில் களவிஜயத்தில் ஈடுபட்டவர்களுள் ஒருவரான முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் கடந்த 23.02.2023அன்றைய தினமே முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் மேற்கொள்ளப்பட்டது.

அதேவேளை அதனைத் தொடர்ந்து 02.03.2023அன்று முல்லைத்தீவு நீதிமன்றில் AR/673/18 என்னும் வழக்கிலக்கத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டு கட்டுமானப்பணிகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் புகைப்பட ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு முறையீடு செய்யப்பட்டது.

இந் நிலையில் அவ்வாறு குருந்தூர்மலையில் மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கண்காணிப்பதற்கு 04.07.2023இன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

குறித்த களவிஜயத்தின் போது குருந்தூர்மலையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற மே்படுத்தல் லேலைகள் தொடர்பில் நீதிபதியால் ஆராயப்பட்டுள்ளது.

அதேவேளை பொலிஸார் மற்றும், தொல்லியல் திணைக்களம் இது தொடர்பிலான பதில் அறிக்கை ஒன்றினை வழங்குவதற்காக எதிர்வரும் 08.08.2023ஆம் திகதிக்கு குறித்த வழக்கினை நீதிபதி திகதியிட்டுள்ளது.

மேலும் நீதிபதி இவ்வாறு குருந்தூர்மலைக்கு களவிஜயம் மேற்கொண்டிருந்தபோது, அங்கு பாாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், தண்ணிமுனிப்பு மக்கள், குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்டவர்களும் அங்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான விமான சேவைகளை மீள ஆரம்பித்தது ஏர் சைனா

உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றுக்குப் பிறகு சீன விமான நிறுவனமான “ஏர் சைனா” மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது .

குறித்த நிறுவனத்தின் முதல் விமானமானது நேற்று திங்கட்கிழமை (03) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

கொரோனா தொற்று காரணமாக சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர், இந்த சீன விமான நிறுவனம் இலங்கைக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியது .

குறித்த விமானமானது ஏ-320 ஏர்பஸ் ரக விமானம் பயன்படுத்தப்பட்டது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீனா ஏர்லைன்ஸ் விமானம் CCA-425 ஏ-320 ஏர்பஸ் ரக விமானம் நேற்று (03) இரவு 08.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.அந்த விமானத்தில் 142 பயணிகளும் 09 விமான ஊழியர்களும் பயணித்தனர் .

குறித்த “Air China” விமான சேவையானது ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சீனாவின் செங்டுவிலிருந்து இரவு 08.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.

மீண்டும் அதே விமானம் கட்டுநாயக்காவிலிருந்து அதே நாளில் இரவு 10.15 மணிக்கு சீனாவின் செங்டுவுக்குப் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா ஏர்லைன்ஸ் விமானத்தை வரவேற்க இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் பெரும் எண்ணிக்கையான மக்கள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது .