அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் தாமதம் – விஜயதாஸ கவலை

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனத்தை துரிதப்படுத்துமாறு சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

ஒவ்வோர் அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட நிலைப்பாட்டினால் பேரவைக்கான உறுப்பினர் நியமனம் தாமதப்படுத்தப்பட்டுள்ளது என நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் நியமனம் தொடர்பில் வினவியபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகரினால் சான்றுரைப்படுத்தியதன் பின்னர் நீதிச் சேவை ஆணைக்குழுவை தவிர ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய நியமனம் இடம்பெறும் வரை ஆணைக்குழுக்களின் தற்போதைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதில் தலைவராகவும் உறுப்பினராகவும் பதவி வகிக்க முடியும்.

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளதை பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்கள். சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரிடம் உறுப்பினர் நியமனத்தின் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனத்தை துரிதப்படுத்துமாறு இவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன். அரசியல் கட்சிகள் தனிப்பட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி, தமது கட்சியின் பரிந்துரைகளை முன்வைக்காமல் இருக்கின்றன.

21ஆவது திருத்தம் முழுமையாக செயற்படுத்தப்பட வேண்டுமாயின், அரசியலமைப்பு பேரவை விரைவாக ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்றார்.

மாகாண கல்வி அமைச்சு, திணைக்கத்தினால் போலியான விசாரணைகள் முன்னெடுப்பு – ஆசியர் சங்கம் குற்றச்சாட்டு

இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாடுகளை போலியான கோணத்தில் விசாரணை செய்து முடிக்க வட மாகாண கல்வி அமைச்சும் வட மாகாண கல்வி திணைக்களமும் முயற்சிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இலங்கை ஆசிரியர் சங்க உபதலைவர் தீபன் திலீசன் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மோசடிக் கும்பல்களை வைத்துக்கொண்டு வட மாகாண கல்வியை முன்னேற்ற முடியாது. பெற்றோர், பிள்ளைகளின் கையொப்பத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாட்டுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அரச பாடசாலைகளில் வசதிகள் சேவைக்கட்டணம் தவிர வேறெந்த நிதியோ அன்பளிப்போ பாடசாலையால் வசூலிக்க முடியாதென சுற்றுநிரூபம் இருக்கும்போது அதையும் மீறி நிதி வசூலிக்கப்படும்போது அதை ஆதாரபூர்வமாக நிரூபித்தபோதும் எந்த நடவடிக்கையும் இல்லை.

வட மாகாண கல்வித்துறையில் உள்ள சீர்கேடுகள் தொடர்பில் 2021 டிசம்பர் மாதம் வட மாகாண ஆளுநர் ஊடகங்கள் வாயிலாக கேட்டுக்கொண்டதற்கிணங்க 100 பக்க முறைப்பாடொன்றை வழங்கியிருந்தோம்.

அதற்கு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தனர். ஆனால், ஒரு வருடமாகியும் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பதில் தாமத நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் வட மாகாண கல்வியமைச்சில் காணப்படும் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் நிர்வாக ஆளுமையற்ற தன்மைகளை சுட்டிக்காட்டி, வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக நாம் போராட்டத்தை முன்னெடுத்தோம்.

அதன் பின்னராகவே விசாரணைகளை போலியான வகையில் முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதிய புலமைப் பரிசில் விண்ணப்பங்களுக்கான கால எல்லை நீடிப்பு

உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து புலமைப்பரிசில்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரத்துக்கு தோற்ற தகுதி பெற்றுள்ள பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திடமிருந்து புலமைப்பரிசில் வழங்குவதற்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி ஏற்கனவே 2022-12-23 என அறிவிக்கப்பட்டிருந்தாலும் பெற்றோரும் மாணவர்களும் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோள்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதன் பின்னர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதியை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புலமைப்பரிசிலுக்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பங்களை முறையாகப் பூர்த்தி செய்து 2022-12-30 ஆம் திகதிக்கு முன்னர் தாம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலையின் அதிபரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது.

மேலும் 2022-12-23 ஆம் திகதி தொடக்கம் 2023-01-02 ஆம் திகதி வரையான காலப்பகுதி பாடசாலை விடுமுறை ஆகையால் இதற்காக பாடசாலை அலுவலகங்களை திறந்து வைக்கும்படியும் மாணவர்களால் கொண்டுவரப்படும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி நிதியம் கல்வியமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளது.

மேலும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி 2022-12-30 வரை நீடிக்கப்பட்டுள்ளதே தவிர, விண்ணப்பதாரிகளை தெரிவு செய்யும் செயன்முறைக்காக நியமிக்கப்பட்ட கால வரையறையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது என்றும் ஜனாதிபதி நிதியம் தெரிவித்துள்ளது.

பதில் கிடைக்காவிடின் தூதரகங்களுக்கும், ஜனாதிபதிக்கும் மகஜர் அளிப்போம்

யாழ். மாவட்டத்தில் கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் எதற்கு இருக்கிறது என கேள்வியெழுப்பிய யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அ.அன்னராசா, சட்டவிரோத கடலட்டை பண்ணை தொடர்பாக திணைக்களத்துக்கு நாங்கள் கடிதம் எழுதியபோது, அதற்கு எவ்வித பதிலையும் இதுவரை அளிக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.

அத்தோடு, நாங்கள் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரானவர்கள் அல்லர். யாழ்ப்பாணத்தில் உள்ள 118 கடற்றொழில் சங்கங்களின் கருத்தை நாம் பிரதிபலிக்க வேண்டும் என்றார்.

சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அ.அன்னராசா இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடற்றொழிலாளர்களுக்கு கடலட்டை பண்ணை தொடர்பான சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்த நிலையில், அதை பற்றிய முறைப்பாடுகளும் சம்மேளனத்துக்கு கிடைத்தது.

அதன் அடிப்படையிலேயே கடலட்டை பண்ணைகளை மட்டுப்படுத்தி, சிறு தொழிலாளர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மீன் உற்பத்தியாகும் பிரதேசங்களில் கடலட்டை பண்ணை அமைக்கக் கூடாது என்றும் கோரினோம்.

அனுமதி பெற்று கடலட்டை பண்ணையை முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டால், அதில் எமக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

கடலில் சீட் போட்டு கடலட்டை பண்ணைக்கு கொட்டில் அமைப்பதற்கு எந்த அதிகாரமும் யாருக்கும் இல்லை. இவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்?

குறிப்பாக, கொழும்புத்துறை பகுதியில் ஹோட்டல் போன்று கடலட்டை பண்ணைக்கு கொட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

2023 ஜனவரிக்கு முன்னர் யாழ். மாவட்டத்தில் கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் நாங்கள் அனுப்பிய கடிதத்துக்கு பதில் அனுப்பாவிட்டால், ஜனாதிபதி உட்பட சகல வெளிநாட்டு தூதரகங்களுக்கும் இது தொடர்பாக மகஜர் கொடுப்போம்.

மக்களுக்கு சேவை செய்வதாக கூறிக்கொண்டு அந்த திணைக்களம் எதற்கு இருக்கின்றது என தெரியவில்லை.

5000 ஏக்கரில் கடலட்டை அமைக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் கூறுகிறார்.

கரையோர சூழலை பாதுகாக்க வேண்டிய குறித்த திணைக்களம் இவ்விடயத்தில் மௌனமாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

ஊழல், பாலியல் இலஞ்சத்துக்கெதிரான சட்ட மூலங்கள் ஜனவரியில் சமர்ப்பிக்கப்படும் – நீதி அமைச்சர்

ஊழல் ஒழிப்பு சட்டமூலம் எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும். பாலியல் இலஞ்சம் கோருவதற்கு எதிரான விதிவிதானங்கள் ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன்.

பாலியல் இலஞ்சம் கோரலினால் பாதிக்கப்பட்ட தரப்பினரது இரகசியத்தன்மையை பாதுகாக்கும் வகையில் புதிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதியமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு வங்குரோத்து நிலை அடைவதற்கு அரச சேவை மாத்திரமல்ல தனியார் சேவையும் பாரிய பங்களிப்பு வழங்கியுள்ளது. யுத்த காலத்தில் நாடு வங்குரோத்து நிலை அடையவில்லை.யுத்த காலத்தில் வெளிநாட்டு கையிருப்பு 7 பில்லியன் டொலர் வரை திறைசேரியில் சேமிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வெளிநாட்டு கையிருப்பு முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டு நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளமைக்கு மத்திய வங்கி பொறுப்புக் கூற வேண்டும். உண்டியல் மற்றும் அலாவா முறைமை ஊடான பண அனுப்பல்களுக்கு மத்திய வங்கி அனுமதி வழங்கியமை தற்போது பொருளாதார நெருக்கடிக்கு ஒரு காரணியாக உள்ளது.

நாட்டின் பொருளாதாரத்திற்கு தனியார் தரப்பினரது பங்களிப்பு இன்றியமையாததாகும்.கடந்த 11 வருட காலமாக இலங்கைக்கு முறையாக செலுத்த வேண்டிய 54 பில்லியன் டொலர்களை பிரதான நிலை ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளார்கள்.இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.

ஊழல் மோசடி இலங்கை வங்குரோத்து நிலை அடைவதற்கு பிரதான காரணம் என சர்வதேசம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.நடைமுறையில் உள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பதிலாக புதிய இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு சட்டத்தின் ஊடாக உருவாக்கவுள்ளோம்.

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்த விபரங்களை வெளியிடுவதற்காக 1975 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.தற்போதைய சூழலில் இந்த சட்டம் செயற்பாடற்றதாக உள்ளது. ஆகவே இந்த சட்டத்தை நீக்கி சொத்து விபரங்களை ஒன்லைன் ஊடாக பதிவு செய்யக்கூடிய வகையில் புதிய தொழில்நுட்பத்திற்கு அமைய ஊழல் ஒழிப்பு சட்டத்தில் புதிய சரத்துக்களை உள்ளடக்கவுள்ளோம்.

ஜனாதிபதி, ஆணைக்குழுக்களின் தலைவர்கள், ஆளுநர்கள், மாகாண சபை முதலமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பழைய சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.ஆனால் புதிய சட்டத்தில் இவர்கள் அனைவரையும் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது இலங்கைக்கு மிக முக்கியமானதொரு சட்டமாகும்.

பாலியல் இலஞ்சம் கோருவது பாரதூரமான குற்றமாகும்.அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பாலியல் இலஞ்சம் கோரல் நெருக்கடிக்கு உள்ளாகும் பெண்கள் பெரும்பாலும் அவற்றை பகிரங்கப்படுத்துவது இல்லை.தமக்கு நேர்ந்த அநீதியை வெளியில் குறிப்பிட்டால் தமக்கும்,தம்மை சார்ந்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்ற நிலையில் இருந்துக் கொண்டு அவர்கள் அந்த கொடுமைகளை பகிரங்கப்படுத்துவதில்லை.

சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலத்தில் பாலியல் இலஞ்சம் கோரலினால் பாதிக்கப்பட்ட தரப்பினரது இரகசியத்தன்மையை பாதுகாக்கவும்,பாலியல் இலஞ்சம் கோரியவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் விசேட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.இந்த சட்டமூலம் எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

வசந்த முதலிகே உயிருக்கு ஆபத்து ! – பூசாவிற்கு மாற்ற முயற்சி

தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர் தலைவர் வசந்த முதலிகேவின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பாகவும் அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறும் அனைத்து அரசியல் கைதிகள் மற்றும் பயங்கரவாத தடைச்சட்ட கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் சிறைச்சாலை ஆணையாளரிடம் கடிதம் ஒன்றை மக்கள் பேரவைக்கான இயக்கம்  கையளித்துள்ளது.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தற்போது அரசியல் காரணங்களிற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்  கொழும்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்.

இந்த தடுப்பு நடவடிக்கைக்கு முன்னதாக அவர் 90 நாட்கள் மிக மோசமான சூழலில் தடுப்பு முகாமில் தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டார்.

எனினும் நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையி;ல் வைக்கப்பட்டுள்ள உண்மைகளின் படி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்ககூடிய அளவிற்கு எந்த குற்றங்களும் வெளிப்படுத்தப்படவில்லை.

உண்மை இவ்வாறிருக்கும் போது சில அரசியல் அதிகாரிகளும் மற்றும் சில உயர் பொலிஸ் அதிகாரிகளும் வசந்த முதலிகேயின் தனி மனித உரிமையை மீறும் அவரை பூசா தடுப்பு முகாமிற்கு மாற்றுவதற்கு முயற்சித்துள்ளனர் என அறிய முடிகின்றது.

பூசா தடுப்பு முகாமானது போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதளஉலக செயற்பாடுகள் போன்ற பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர்களை தடுத்துவைக்கும் சிறைச்சாலை ஆகும்.

இவ்வாறு மாற்றுவதன் மூலம் வசந்த முதலிகேயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதே சம்மந்தப்பட்ட தரப்பினரின் நோக்கம் என தெரியவந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கமைய வசந்த முதலிகெ  சிறைச்சாலையின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவர் எங்கு தடுத்துவைக்கப்படவேண்டும் என்பதை தீர்மானம் படைத்த அதிகாரிகள் என்ற வகையில் நீங்கள் இவ்வாறான அநீதியான தீர்மனங்களிற்கு இடமளிக்க கூடாது.

மேலும் வசந்த முதலிகேயின் உயிரை பாதுகாக்கும் முகமாக கொழும்பு சிறைச்சாலையிலேயே உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் எமக்கு தெரிந்தளவில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மேலும் பல நபர்கள் உங்கள் அதிகாரத்தின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்இஅவர்களில் சிலருக்கு இதுவரை குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை. இவ்வாறான அநீதியான தடுத்துவைத்தல் தொடர்பாக நீதிமன்றங்களிற்கு அதிகாரமுடைய அமைப்புகளிற்கு தெரியப்படுத்தவேண்டும் இந்த நாட்டின் சாதாரண குடிமக்களாக அவர்களிற்கு உள்ள உரிமைகளை அனுபவிப்பதற்கான சுதந்திரத்தை பெற்றுதரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

நாய் மீதான துஷ்பிரயோகம் – விசாரணையை கோரும் பீட்டா (PETA) அமைப்பு

ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவர் நாயை பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்தமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச விலங்குகள் உரிமை அமைப்பான பீட்டாPeople for the Ethical Treatment of Animals (PETA) வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசகருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசாங்கம் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம், அவ்வாறான விடயம் இடம்பெற்றது உண்மை என்றால் இலங்கையின் சட்டங்களின் கீழ் தண்டனை வழங்கவேண்டு;ம் என பீட்டாவின் ஈவிரக்கமற்ற செயல் குறித்த விசாரணை பிரிவின் சிரேஸ்ட துணை தலைவர் டப்னா நச்சிவினோமிச்  தெரிவித்துள்ளார்.

விலங்குகளை பாலியல் ரீதியில் துன்புறுத்துபவர்கள் பின்னர் மனிதர்களிற்கு எதிராக அவ்வாறான செயல்களில் ஈடுபடுவது அனேகமாக இடம்பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசகர் நாயை துன்புறுத்தும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியது.

இந்த வீடியோ வெளியான சில மணிநேரத்தில்  ஜனாதிபதியின் ஆலோசகர் அசு மாரசிங்க தனிப்பட்ட காரணங்களிற்காக தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இந்த விடயங்களை செய்தியாளர் மாநாட்டில் அம்பலப்படுத்திய ஹிருணிகா பிரேமசந்திர ஆதர்ச கரந்தனா என்ற பெண்ணிண் செல்லப்பிராணிக்கே இந்த நிலை ஏற்பட்டது என தெரிவித்தார்.

செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அந்த பெண் முகநூல் ஊடாக சந்தித்த பின்னர் மாரசிங்கவின் காதலியாக மாறி அவருடன் இரண்டு வருடம் ஒரே வீட்டில் வாழ்ந்ததாக தெரிவித்தார்.

நாயின் செயற்பாடுகளில் மாற்றத்தை அவதானித்த பின்னர் இரகசியமாக இந்த விடயத்தை பதிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.

ஜனவரி 31 இனுள் பயங்கரவாதச் சட்டம் இரத்து – விஜயதாஸ ராஜபக்‌ஷ

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்து தேசிய பாதுகாப்பு சட்ட மூலத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

தென்கொரியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாதிரிக்கு அமைய உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் சட்டமூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நீதி அமைச்சில் வெள்ளிக்கிழமை (டிச. 23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தம் செய்வது காலம் காலமாக காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்காது என்பதால் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து அதற்கு பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டத்தை இயற்ற ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சட்டமாதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நெரின் புள்ளே,ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்திர திஸ்ஸ ஆகியோரின் இணை தலைமைத்துவத்தில் தேசிய பாதுகாப்பு சட்டமூல உருவாக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பு சட்டமூலத்தை எதிர்வரும் 31ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க  எதிர்பார்த்துள்ளேன்.

நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை ஸ்தாபிக்கும் வகையில் உண்மையை கண்டறியும் நடைமுறைப்படுத்தப்பட்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை போன்று ஒரு விசேட ஆணைக்குழுவை உருவாக்க ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கைக்கான தென்கொரிய உயர்ஸ்தானிகர்,ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் உறுதியளித்துள்ளார்கள்.ஐக்கிய நாடுகள் சபையின் கோட்பாடுகளுக்கு அமைய நாட்டில் நல்லிணக்கம் ஸ்தாபிக்கப்படும் என்றார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்யுமாறு நாடளாவிய ரீதியில் எதிர்ப்புக்கள் நாளாந்தம் வலுப்பெற்ற நிலையில் உள்ளது என்றார்.

ஆணைக்குழு தேர்தல் திகதியை உறுதிப்படுத்தாவிடின் நீதிமன்றத்தை நாடுவோம் – பவ்ரல்

ஜனவரி முதல் வாரத்துக்குள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தெளிவானதொரு அறிவிப்பை விடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருப்பது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தவேண்டிய தேவை சட்ட ரீதியில் வெளிப்பட்டு இருக்கின்றது. என்றாலும் இந்த தேர்தலை பிற்போடுவதற்காக பல்வேறு திட்டங்கள், நடவடிக்கைகள் தற்போதுவரைக்கும் கையாளப்பட்டு வருகின்றன. எந்த நிலைமையிலும் சரி தேர்தலை நடத்தியாகவேண்டி இருக்கின்றது. இது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு நேரடி தீர்வாக இல்லாவிட்டாலும் ஜனநாயக வரைப்புக்குள் உரிய காலத்துக்கு சட்ட ரீதியில் தேர்தலை நடத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது.

அத்துடன் சட்டத்தின் பிரகாரம் 2023 மார்ச் 19ஆம் திகதி ஆகும்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு, நியமிக்கப்படவேண்டும். அதனால் அடுத்த வருடம் ஜனவரி முதல் வாரத்துக்குள் உள்ளூராட்சிமன்ற தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தெளிவானதொரு அறிவிப்பை விடுக்காவிட்டால் அறிவிக்கப்படாவிட்டால் நீதிமன்றம் செல்லவேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

இதேவேளை, தெரிவத்தாட்சி அதிகாரி மற்றும் உதவி தெரிவத்தாட்சி அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டிருக்கின்றது. அத்துடன் உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பாக கலந்துரையாட அனைத்து மாவட்ட செயலாளர்களையும் நேற்று கொழும்புக்கு அழைத்திருப்பதாக தெரியவருகின்றது.

இலங்கையைச் சேர்ந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் ருமேனியாவில் கைது

இலங்கையர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த 27 சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் ஹங்கேரிக்குள் இரகசியமாக நுழைய முயன்ற டிரக்கொன்றை கைப்பற்றியுள்ளதாக ருமேனியாவின் எல்லை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

துணிகள் மற்றும் இரும்பு கம்பிகள் ஏற்றப்பட்ட டிரக்குகளில் மறைந்திருந்தவாறு ஹங்கேரிக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நட்லாக் எல்லைபகுதியில் எல்லையை கடக்க முயன்ற டிரக்கை ருமேனிய அதிகாரிகள் சோதனையிட்டவேளை உள்ளே 16 சட்டவிரோத குடியேற்றவாசிகள் காணப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட டிரக் ஆடைகளை கொண்டு செல்கின்றது என ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்ததுஎன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

16 வெளிநாட்டவர்கள் மறைக்கப்பட்டிருந்த பெட்டியொன்றிற்குள் காணப்பட்டனர் சோதனைகளிற்கு பின்னர் அவர்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் – அவர்கள் பங்களாதேஸ் எரித்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த 21 முதல் 67 வயதுடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நட்லாக் எல்லையில் ருமேனிய பிரஜையொருவர் செலுத்திய வாகனத்தை சோதனையிட்டவேளை இலங்கை பாக்கிஸ்தானை சேர்ந்த 21 வயது முதல் 42 வயதுடைய 11குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டுள்ளனர்.