மலையக மக்களின் உயர்கல்வி வளர்ச்சிக்கு இந்தியா உதவ வேண்டும் – மனோ எம்.பி கோரிக்கை

மலையகத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, தாதியர் கல்லூரி, பல்கலைக்கழக கல்லூரி அமைய இந்தியா உதவிட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று (14) விடுத்துள்ள அறிக்கையில்,

“கொழும்பு அவிசாவளை முதல் நுவரெலியா வரை நாடெங்கும் பரந்து வாழும், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக தமிழரின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி ஆகியவை தொடர்பில், இந்திய மத்திய அரசு, உதவிட உத்தரவாதம் தர வேண்டும்.

மலையகம் – 200 நினைவுறுத்தல் தொடர்பில் இந்தியாவின் பங்களிப்பு இந்த அடிப்படைகளில் அமைய வேண்டும். இவ்வருட ஆரம்பத்திலேயே நாம் இந்திய தூதுவர் கோபால் பாகலேயிடம், மலையகம் – 200 நினைவுறுத்தல் நிகழ்வுகள் உரையாடி தொடர்பில் எழுத்து மூல கோரிக்கை விடுத்துள்ளோம். இலங்கை வந்து சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடமும் உரையாடியுள்ளோம். இந்நிலையில், அடுத்தவாரம், இந்தியா செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், இவை தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நல்லெண்ண உத்தரவாதங்கள் அளிப்பார் என நாம் நம்புகின்றோம்.

கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பில், இந்திய மத்திய அரசை நாம் நம்பி உள்ளோம். குறிப்பாக, நாடெங்கும் பரந்து வாழும், இந்திய வம்சாவளி மலையக தமிழர் பிள்ளைகளின் பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை.

இந்தப் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களை பயிற்றுவிக்க, விசேட வேலைத்திட்டம் தேவை. அதேபோல், தேயிலை, இறப்பர் மலைகளில் அல்லலுறும் எங்கள் பெண்களின் வெளிநாட்டு, உள்நாட்டு வேலை வாய்ப்ப்புகளை உறுதிப்படுத்த தாதியர் பயிற்சி கல்லூரி அவசியம். உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வியை அடிப்படையாகக்  கொண்டு ஒரு முதற்கட்ட பல்கலைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இவை அனைத்தும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கான விசேட சமூக அபிவிருத்தி திட்டங்களாக முன்னேடுக்கப்பட வேண்டும். மத்திய, மேல், சப்ரகமுவா, ஊவா, தென் மாகாணங்களில் வாழும்  நமது மக்கள்  தொடர்பில் தமக்குள்ள தார்மீகக் கடப்பாட்டை இந்திய மத்திய அரசு நிறைவேற்றும் என நாம் நம்புகின்றோம்.

அதேவேளை, இலங்கையில் மலையக தமிழரது தேசிய அரசியல் அபிலாஷை கோரிக்கைகள் தொடர்பில் நாம் உள்நாட்டில் இலங்கை அரசுடன் பேசுவோம். அதிகாரபூர்வ அரசு தரப்பு பேச்சு குழுவை முறைப்படி அமைத்து, அத்தகைய பேச்சுகளை விரைவில் ஆரம்பிக்க இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் உறுதி அளித்துள்ளார். அந்த உறுதிமொழியை அவர் நிறைவேற்றுவார் என நாம் நம்புகின்றோம்.” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சினோபெக் இலங்கை முதலீட்டுச் சபை இடையே ஒப்பந்தம் கைச்சாத்து

சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனமும், இலங்கை முதலீட்டுச் சபையும் இன்று உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளன.

இலங்கையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களை இயக்குதல் மற்றும் எரிபொருள் விநியோகத்திற்காக இந்த உடன்படிக்கை கையொப்பமாகியுள்ளது.

இறக்குமதி, களஞ்சியப்படுத்தல் மற்றும் எரிபொருள் விற்பனை என்பனவற்றுக்காக, இரு தரப்பினரால், 100 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, தற்போதுள்ள 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களையும், புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களையும், இந்த உடன்படிக்கையின் கீழ், சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனத்துடன், இயக்க உள்ளதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது.

கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு போதியளவு ஊட்டச்சத்து கிடைப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் – மன்னிப்புச் சபை

நாட்டின் அனைத்து கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, போதியளவு ஊட்டச்சத்து கிடைப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபை இந்த விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், நாட்டில் வீழ்ச்சியடைந்த வருமானம், வாழ்வாதார இழப்பு மற்றும் பணவீக்கம் என்பன, பெண்களின் கொள்வனவு திறனைக் குறைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்வழி ஊட்டச்சத்தை அதிகரிப்பதை நோக்கமாக கொண்ட, அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட திட்டங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தீவிரம் காரணமாக, சுகாதாரம் மற்றும் போஷாக்கு என்பன பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே, கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

எனவே, அனைத்து கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, போதியளவு ஊட்டச்சத்து கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் குறித்த சபை மேலும் வலியுறுத்தியுள்ளது.

குருந்தூர் மலை ஆதிசிவன் ஆலய கற்பூரத்தீயை சப்பாத்துக் காலால் மிதித்து அணைத்து பொலிஸாரும், சிங்கள இனவாதிகளும் அடாவடி

முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டுக்கு சென்ற தமிழ் மக்கள் பெரும் களேபரத்தின் மத்தியில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மலையிலிருந்து மக்களை கீழே இறக்குவதற்கு பொலிசார் பலப்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பொலிசாரால் தாக்கப்பட்டதாகவும், தள்ளிவிழுத்தப்பட்டதாகவும் பலர் குற்றம்சுமத்தினர்.

குருந்தூர் மலையில் பொலிசார், விசேட அதிரப்படையினரின் பாதுகாப்பின் மத்தியில் சிங்கள இனவாதிகளும், பிக்குகளும் ஆடிய சன்னத்தினால் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவும் கணக்கிலெடுக்கப்படவில்லை.

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

பொங்கல் விழாவுக்கு அனுமதி கோரி ஏற்பாட்டாளர்கள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்திருந்தது.

இன்று காலையில் பொங்கல் விழாவுக்காக தமிழ் மக்கள் சென்றபோது, அங்கு சிங்கள கடும்போக்காளர்கள் பலர் அழைத்து வரப்பட்டிருந்தனர். பௌத்த பிக்குகளும் குவிந்திருந்தனர். வெளியிடங்களில் இருந்து 2 பேருந்துகள் மற்றும் வாகனங்களில் அவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட மக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள். க.சிவனேசன், பா.கஜதீபன், து.ரவிகரன் உள்ளிட்டவர்களும் அங்கு சென்றிருந்தனர்.

பொங்கலுக்கான ஆயத்தங்கள் மேற்கொண்ட போது, அங்கு தீமூட்டி பொங்கல் செய்ய முடியாது என சிங்கள இனவாத தரப்பினர் மிரட்டல் விடுத்தனர். பிக்குகளும் சன்னதமாடினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இரு தரப்பும் மோதுவதை போன்ற சூழல் ஏற்பட்டது.

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் அனுமதியுடனேயே பொங்கல் வழிபாட்டுக்கு வந்துள்ளதாக தமிழ் மக்கள் தெரிவித்த போதும், அதை சிங்கள இனவாத தரப்பினர் கிஞ்சித்தும் கணக்கிலெடுக்கவில்லை.

தொல்பொருள் திணைக்கள பிரதிநிதியொருவர் பிரசன்னமாகியிருந்தார். அவரும் பொங்கல் மேற்கொள்ள முடியாது என்றார்.

இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று, நீதிமன்ற அனுமதியுடனேயே பொங்கலுக்கு வந்துள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவனேசன் சுட்டிக்காட்டினார். அத்துடன், பொங்க முடியாது என்றால் அதை எழுத்துமூலம் தருமாறு கேட்டார்.

இதையடுத்து சுருதியை மாற்றிய தொல்பொருள் திணைக்கள பிரதிநிதி, கட்டுப்பாடுகளுடன் பொங்கல் செய்யலாம் என்றார்.

நிலத்தில் தீ மூட்டாமல், நிலத்தில் கல் வைத்து அதன் மேல் தகரம் வைத்து, அதன்மேல் கல் வைத்து தீமூட்டுமாறு கூறினார்.

தொல்பொருள் திணைக்களத்தினரின் அறிவுறுத்தலின்படி, தகரத்தின் மீது பொங்கல் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. தீமூட்ட தயாரான போது, மீண்டும் சிங்கள இனவாத தரப்பினரும், பிக்குகளும் ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.

அப்போது முல்லைத்தீவு பொலிசார் அடாத்தாக செயற்பட்டு, பொங்கலுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகளை சிதைத்தனர். பொலிஸ் அதிகாரியொருவர் சப்பாத்து காலால் கற்பூர தீயை மிதித்து அணைத்தார்.

மலைக்கு கீழே பொங்கி, பொங்கலை எடுத்து வந்து மேலே படையல் செய்யலாம் என பொலிசார் கடுமையான நிபந்தனை விதித்தனர். எனினும், தமிழ் மக்கள் அதை ஏற்கவில்லை. குருந்தூர் தலையில் தமக்குள்ள வழிபாட்டு உரிமையை சுட்டிக்காட்டினர்.

எனினும், பொலிசார் பொங்கலுக்கு அனுமதியளிக்கவில்லை.

பொலிசார், விசேட அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

பின்னர் பொங்கலுக்கு சென்ற தமிழ் தரப்பினர் அனைவரையும் மலையிலிருந்து கீழே இறங்கி செல்லுமாறு பொலிசார் கட்டளையிட்டனர். அதே சமயத்தில், இன்று குழப்பத்தில் ஈடுபட்ட சிங்கள தரப்பினர், சட்டவிரோத விகாரை பகுதியில் பொலிசாரின் பாதுகாப்பில் தங்கியிருந்தனர்.

தமிழர்களுக்கு ஒரு சட்டம், சிங்களவர்களுக்கு ஒரு சட்டமா என கேள்வியெழுப்பிய தமிழ் தரப்பினர்,அங்கு கூடி, சிறிய மத அனுட்டானத்தில் ஈடுபட்டனர்.

சிங்களவர்களையும் மலையிலிருந்து இறக்கினாலே நாமும் இறங்குவோம் என பொங்கலுக்கு சென்ற தமிழ் தரப்பினர் குறிப்பிட்டனர். இதையடுத்து, பொலிசார் பலப்பிரயோகத்தை மேற்கொண்டு, தமிழ் தரப்பினரை மலையிலிருந்து கீழே இறக்கினர்.

இதன்போது, பலரை பொலிசாரால் பலவந்தமாக தள்ளினர். சிலர் தாக்கப்பட்டனர். அண்மையில் முல்லைத்தீவில் முஸ்லிம் காங்கிரசின் தராசு சின்னத்தில் இணைந்து உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பீற்றர் இளஞ்செழியன் என்ற இளைஞன் தாக்கப்பட்டு, இரத்தம் வழிந்த நிலையலிருந்தார்.

வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபனும், து.ரவிகரனும் தள்ளிவிழுத்தப்பட்டனர். இதனால் தமது காலில் உபாதையேற்பட்டுள்ளதாக கஜதீபன் குறிப்பிட்டார்.

5 இலட்சம் வரிக் கோப்புக்கள் இருந்தாலும் 31,000 பேரே வரி செலுத்துகின்றனர்

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு சிறிலங்கா சுங்கத் திணைக்களம், மது வரித் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் என்பனவற்றுடன் தமது குழு தொடர்ந்தும் கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதுடன் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான வசதிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் கடன் வழங்கும் போது, நாட்டின் பணவீக்கம், கையிருப்பின் அளவு மற்றும் அரசாங்க வருமானம் ஆகியனவற்றில் மேம்படுத்தப்பட்ட நிலையில் இருப்பது முக்கியமாகும்.

எதிர்வரும் டிசெம்பர் மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் கடன்வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐந்து இலட்சம் தனிநபர் வருமான வரிக்கோப்புகள் நாட்டில் காணப்படுகின்ற போதிலும் அவற்றில் 31 ஆயிரம் பேரே வரி செலுத்துகிறார்கள். வரையறுக்கப்பட்ட ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் 328 நிறுவனங்களிலிருந்தே வரி வருமானம் கிடைக்கப்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு செலுத்தவேண்டிய நிலுவைத் தொகையான 904 பில்லியன் ரூபாய் தொகையை உரிய தரப்பினரிடம் அறவிடுவது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை தோண்டும் பணிகளை நிறுத்த நீதிமன்றம் உத்தரவு

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தோண்டும் பணியை தற்காலிகமாக நிறுத்துமாறு முல்லைத்தீவு நீதிமன்றில் இருந்து கடந்த 12ஆம் திகதி உத்தரவு கிடைக்கப்பெற்றிருந்தது.

சர்வதேச தரம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு சுரங்கம் தோண்டுவதற்கு ஏற்ற சூழல் உருவாகும் வரை இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுகள் முறையான நியமங்கள் மற்றும் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இல்லை எனவும், அவ்வாறான மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பல தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
அகழ்வுப் பணிகளைத் தொடருமாறு அண்மையில் புதைகுழிக்கு அருகில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த இடத்தில் மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் 16 மனித எலும்புகள், பல புலி சீருடைகள், ஆயுதங்கள், சில வெடிகுண்டுகள் மற்றும் பிற இராணுவ உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

குறித்த பொருட்கள் தற்போது முல்லைத்தீவு நீதிமன்றில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதுடன் கொக்கிளாய் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையங்கள் மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு திணைக்களம் இணைந்து கொக்குத்தொடுவாய் பாரிய புதைகுழியை அகழ்வு செய்து வருகின்றனர்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான உத்தரவாதம் என்ன? – பொது அமைப்புக்கள் கேள்வி

இலங்கையின் கடந்தகால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் எவையும் தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், புதிதாக ஸ்தாபிக்கப்படக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கான உத்தரவாதம் என்ன? வெளிப்படையாக பேசும் பாதிக்கப்பட்ட தரப்பினர் பலதரப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிவரும் பின்னணியில், அவர்களை மீண்டுமொரு முறை ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு கோருவது நியாயமானதா என்று சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரசாங்கம் ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டிருக்கும் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினருக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (11) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பற்றிய தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் வகையிலான கூட்டறிக்கையொன்றை பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு, மனித உரிமைகள் அபிவிருத்திக்கான நிலையம், சட்டம் மற்றும் மனித உரிமைகள் நிலையம், முஸ்லிம் பெண்கள் அபிவிருத்திப் பேரவை, சமத்துவத்துக்கான யாழ். சிவில் சமூகம் உள்ளிட்ட 15 சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து வெளிவிவகார அமைச்சரிடம் கையளித்தன.

அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவு தொடர்பில் நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம்.

சமூகங்கள், குறிப்பாக உள்நாட்டுப் போரினால் வெகுவாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் சமூகங்கள் எதிர்கொண்ட மீறல்கள் மற்றும் துயரங்களை தீர்ப்பதில் உண்மை கண்டறிதல் முக்கிய பங்கு வகிக்கின்றது என நாம் நம்புகின்றோம்.

இருப்பினும், இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்படும் எந்தவொரு ஆணைக்குழு அல்லது நியாய சபையிலும் பாதிக்கப்பட்ட சமூகம் நம்பிக்கையற்றதாக காணப்படுகிறது.

இவ்விடயத்தில் கடந்தகால அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையும் உண்மையை கண்டறியும் செயன்முறை மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் இழைத்தோரை பொறுப்புக்கூறச் செய்யும் செயன்முறை ஆகியவற்றை இழுத்தடிக்கும் நோக்கம் கொண்டதாகவே அமைந்திருந்தது.

வெவ்வேறு அரசாங்கங்களினால் கடந்த 30 வருடகாலமாக உருவாக்கப்பட்டுவரும் ஆணைக்குழுக்களின் வரிசையில் இப்போது புதிதாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் இணைந்திருக்கின்றது. கடந்தகால ஆணைக்குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளில் பெரும்பாலானவை இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை.

அவ்வாறிருக்கையில், புதிதாக ஸ்தாபிக்கப்படக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கான உத்தரவாதம் என்ன? வெளிப்படையாக பேசும் பாதிக்கப்பட்ட தரப்பினர் பலதரப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிவரும் பின்னணியில், அவர்களை மீண்டுமொரு முறை ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு கோருவது ஏற்புடையதா?

பாரிய மனிதப் புதைகுழிகள் கண்டறியப்படுவது இலங்கையில் வருடாந்தம் இடம்பெறும் நிகழ்வாக மாறிவிட்டது. இதுகுறித்து நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைகளை மேற்கொள்வதற்கான முனைப்பு எதுவும் அரசாங்கத்திடம் இல்லை.

இதுகுறித்த விசாரணைகளுக்கு அவசியமான நிபுணர் குழுவொன்றை அமைத்து, அவசியமான நிதியை ஒதுக்கீடு செய்து, விசாரணை செயன்முறைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்குப் பதிலாக, அவற்றுக்கு இடையூறு விளைவிப்பதே அரசாங்கத்தின் வழமையான செயற்பாடாகக் காணப்படுகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் பொதுமக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதில் அரசாங்கம் அக்கறை செலுத்துமேயானால், முன்னைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மீளாய்வு செய்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டமொன்றை தயாரித்தல், பாதிக்கப்பட்ட தரப்பினர் மீண்டும் வாக்குமூலம் வழங்குவதை தவிர்க்கும் வகையில் முன்னைய ஆணைக்குழுக்களிடம் வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை தொகுத்தல், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை விடுவித்தல், வடக்கில் நிலவும் மிதமிஞ்சிய இராணுவப் பிரசன்னத்தைக் குறைத்தல், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை மீளாய்வு செய்தல், இதன்போது ஆலோசனை செயலணி முன்வைத்த பரிந்துரைகளை கவனத்திற்கொள்ளல், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் பாரிய மனிதப்புதைகுழிகள் தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறுபட்ட விரிவான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்.

இவற்றை நடைமுறைப்படுத்தாமல் அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்குமேயானால், அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம். பாதிக்கப்பட்ட தரப்பினர் நீண்டகாலமாக போராடி பெற்றுக்கொண்ட சர்வதேச பொறுப்புக்கூறல் செயன்முறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முயற்சிகளுக்கு தென்னாபிரிக்கா ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான விசா கோரிக்கையை நிராகரித்தது இலங்கை அரசாங்கம்

கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஆனந்தசங்கரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசாவை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

ஹரிஆனந்தசங்கரி தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு ஏற்றதாக காணப்படும்போதே கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது.

கொடும்பாவிகளை எரிப்பது இலங்கையின் அரசாங்கங்களின் தவறுகளை சரிசெய்யாது.

கவலையளிக்கும் விதத்தில் இலங்கை எனக்கு விசா வழங்க மறுத்துவிட்டது.நாங்கள் முன்னெடுத்துள்ள வேலைதிட்டத்திற்காக பழிவாங்கும் நடவடிக்கை இது எங்களை மௌனமாக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலவாரங்களிற்கு முன்னர் சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்கள் வவுனியாவில் கனடா பிரதமர் மற்றும் ஹரி ஆனந்தசங்கரியின் கொடும்பாவிகளை எரித்தமை குறிப்பிடத்தக்கது.

கனடாவின் தமிழர் இனப்படுகொலை நினைவுதினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலேயே இந்த கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.

இதேவேளை தமிழர்கள் உரிமைக்கான கனடாவின் ஆதரவிற்கு பதில் நடவடிக்கையாகவே ஹரி ஆனந்தசங்கரிக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது என சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

பசில் ஜனாதிபதியாகும் நோக்கிலேயே பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்தார் – கம்மன்பில

பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக வேண்டும் என்ற நோக்கத்துடன் பஷில் ராஜபக்ஷ பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தினார். பிரச்சினைக்கு தீர்வு காண முன்வைத்த திட்டங்களுக்கு அவர் பாரிய தடையாக இருந்தார்.

நிதி வங்குரோத்து தொடர்பில் ஆராய சாகர காரியவசம் தலைமையிலான குழு பயனற்றது என்பதை சபாநாயகர் அறியாவிட்டாலும் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொலிஸ்மா அதிபர் சேவையில் இருந்து ஓய்வுபெற்ற சி.டி.விக்கிரமரத்னவுக்கு மூன்று மாதகாலம் சேவை நீடிக்கப்பட்டுள்ளமை சட்டத்துக்கு முரணானதாகும். அரசியலமைப்பின் 41 (எ) 1 பிரிவின் பிரகாரம், அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் அரச உயர்பதவிகளின் நியமனம் இடம்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

கடந்த பெப்ரவரி மாதம் சேவையில் இருந்து ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு மார்ச் மாதம் 28ஆம் திகதி மூன்று மாதகால சேவை நீடிப்பு வழங்கப்பட்டது. இதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கவில்லை. ஏப்ரல் 01ஆம் திகதி அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியது.

அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் தான் அரச உயர்பதவிகளுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தற்போது நியமனம் வழங்கப்பட்டதன் பின்னர் அரசியலமைப்பு பேரவையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படுகிறது. பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலம் நீடிப்பு சட்ட விரோதமானது. சட்டத்துக்கு அமைய பொலிஸ்மா அதிபர் நியமனம் இல்லாமல் நாடு இயங்குகிறது.

பொருளாதாரப் பாதிப்பு தொடர்பில் ஆராய பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு பயனற்றது என்பதை சபாநாயகர் அறியாவிட்டாலும் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தை பலவீனப்படுத்தி பாராளுமன்றத்தின் ஊடாக பொதுஜன பெரமுனவின் பலத்துடன் ஜனாதிபதியாகும் நோக்கத்தோடு பஷில் ராஜபக்ஷ பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தினார். பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண அமைச்சரவையில் பல யோசனை முன்வைக்கப்பட்டபோது பஷில் ராஜபக்ஷ அதற்கு தடையாக செயற்பட்டார்.

பஷில் ராஜபக்ஷ வகுத்த திட்டம் ஒன்று, நடந்தது பிறிதொன்று. கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கும் அளவுக்கு பொருளாதாரப் பாதிப்பு தீவிரமடைந்தது.

பொருளாதாரப் பாதிப்புக்கு பஷில் ராஜபக்ஷ பொறுப்புக்கூற வேண்டும் என்பதை அனைவரும் அறிந்துள்ள நிலையில் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தலைமையில் நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கபுடா குழுவில் அங்கம் வகிக்க முடியாது என எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் விலகியுள்ளார்கள் என்றார்.

Posted in Uncategorized

புதுப்பிக்கப்பட்ட வடக்கு ரயில் பாதை திறக்கப்பட்டது: புதிய வேகம் மணிக்கு 100 கி.மீ

அநுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான புனரமைக்கப்பட்ட ரயில் பாதையிலான  சோதனை ஓட்டம் இன்று (13)  உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது.

இந்த சோதனை ஓட்டத்துக்காக M 11 என்ஜின் மற்றும் குளிரூட்டப்பட்ட சொகுசு நவீன பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது.

இந்த ரயில் சேவையை போக்குவரத்துத்துறை  அமைச்சர் பந்துல குணவர்தன அநுராதபுரத்தில் இன்று ஆரம்பித்து வைத்தார்.