சமூக பாதுகாப்பு வரி மீள்பரிசீலனை செய்யப்படும் – செஹான் சேமசிங்க

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள 34 இலட்சம் குடும்பங்கள் அரசாங்கத்திடம் நிவாரணத்தை கோரியுள்ளன.

வரி அறவிடல் ஊடாகவே நிவாரணம் வழங்க முடியும்.சமூக பாதுகாப்பு அறவீட்டு வரி எதிர்வரும் ஓரிரு மாதங்களில் மீள்பரிசீலனை செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

வரி அறவிடல், பொருளாதார நிலைமை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் கடந்த ஆறு மாத காலத்தில் முன்னெடுத்த கடுமையான தீர்மானங்கள் சாதகமான பெறுபேற்றை அளித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை உடன் இம்மாத நடுப்பகுதியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்.

கடுமையான தீர்மானங்களினால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். கடுமையான தீர்மானங்களை எடுக்காமல் இருந்திருந்தால் நாட்டில் கடந்த வருடத்தில் ஏப்ரல், மே ஆகிய காலப்பகுதியில் இருந்த நிலை தற்போது பன்மடங்கு அதிகரித்து பாரிய விளைவை நாடு எதிர்கொண்டிருக்கும்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள 43 இலட்ச குடும்பங்கள் அரசாங்கத்திடம் நிவாரண உதவியை கோரியுள்ளார்கள்.இவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.வரி அறவிடல் ஊடாகவே நிவாரணம் வழங்க முடியும்.

பொருளாதார மட்டத்தில் உயர் நிலையில் உள்ள 10 சதவீதமானோரிடமிருந்து உதவிகளை பெற்று நடுத்தர அல்லது ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க புதிய வரிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

அரச வருமானத்தை 14 சதவீதமாக தக்கவைத்துக் கொள்ள பெறுமதி சேர் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு அறவீட்டு வரி இன்னும் ஓரிரு மாதங்களில் மீள்பரிசீலனை செய்யப்படும்.சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி பெற்றுக் கொள்ளப்பட்டவுடன் ஒருசில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

மின் கட்டணம் அதிகரிக்கப்படின் மீண்டும் மக்கள் போராட்டம் தலைதூக்கும் – உதய கம்மன்பில

மின்கட்டண அதிகரிப்பு,மின் விநியோக துண்டிப்பு ஆகிய காரணிகளினால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை பாதிக்கப்பட்டு எதிர்வரும் மார்ச் மாதமளவில் நாட்டில் மீண்டும் போராட்டம் தோற்றம் பெற அதிகம் வாய்ப்புள்ளது என பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மஹரக பகுதியில் ஜனவரி முதலாம் திகதி (01) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது. பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியை இவ்வார காலத்திற்குள் ஸ்தாபிப்போம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இனியும் பிற்போட முடியாது, அடுத்த மாதம் நிச்சயம் தேர்தலை நடத்த வேண்டும்.தேர்தலை நடத்த நிதி இல்லை என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.தேர்தலை நடத்த வரவு செலவு திட்டத்தில் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தும் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் காணப்படுகிறது.சமூக பாதுகாப்பு அறவீட்டுத் தொகை வரி மக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மின்கட்டண அதிகரிப்பை தவிர்த்து வேறு திட்டம் ஏதும் கிடையாது என மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது.

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை முழுமையாக பாதிக்கப்படும்,மக்கள் பொருளாதார ரீதியில் மேலும் பாதிக்கப்படுவார்கள்.இவ்வாறான பின்னணியில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் மீண்டும் போராட்டம் தலைதூக்கும் என்றார்.

இலங்கைக்கு ரணிலை விட சிறந்த தலைவர் கிடைக்காது – ருவன் விஜேவர்த்தன

இலங்கை எனும் கப்பலை இலக்கிற்கு வழிநடத்த ஒரு சிறந்த கேப்டன் ஒருவரும் கிடைக்க பெற்றுள்ளது

இலங்கை எனும் கப்பலை புதுப்பித்து, உயிரூட்டி இருப்பதுடன் கப்பலை அதன் பயண இலக்குக்கு வழிநடத்த ஒரு சிறந்த கெப்டன் ஒருவரும் கிடைக்க பெற்றுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

புதுவருட பிறப்பை முன்னிட்டு கம்பஹா பிரதேசத்தில் மத வழிபாடுகளில் ஈடுட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை எனும் கப்பலை புதுப்பித்து, உயிரூட்டி இருப்பதுடன் கப்பலை அதன் பயண இலக்குக்கு வழிநடத்த ஒரு சிறந்த கெப்டன் ஒருவரும் கிடைக்கப்பெற்றுள்ளது.

பொருளாதார வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை பொறுப்பேற்று முன்னெடுத்துச்செல்ல அனைவரும் பின்வாங்கிய நிலையில், மூழ்கிக்கொண்டிருந்த கப்பலை மீட்டது, ஜனாதிபதி பதவியின் கடினமான பொறுப்பை தயக்கமின்றி தோல்மீது சுமந்துகொண்ட ரணில் விக்ரமசிங்கவாகும்.

அத்துடன் ஆயிரக்கணக்கான சவால்களை எதிர்கொண்ட ஜனாதிபதி, செயற்படுத்திய வேலைத்திட்டங்கள் காரணமாகவே கப்பல் மீண்டும் புதிப்பித்து உயிரூட்டப்பட்டிருக்கின்றது.

அதனால் கடந்த வருடத்தில் பெற்றுக்கொண்ட பாரிய அனுபவங்களுடனே புது வருடத்துக்கு கால் எடுத்து வைக்கின்றோம். எனவே நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண நாங்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்றார்

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானம் – விஜயதாஸ ராஜபக்‌ஷ

தேர்தல் செலவுகளை மட்டுப்படுத்தும் வகையிலான சட்டமூலத்தை இவ்வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. ஒரு வேட்பாளர் தேர்தலுக்கு செலவு செய்யும் நிதி தொகையை தீர்மானிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பொறுப்பாக்கப்படவுள்ளது.

தேர்தலில் போட்டியிடுபவர் தேர்தல் காலத்தில் அதிக நிதியை செலவு செய்வதை மட்டுப்படுத்துவதல் மற்றும் தேர்தல் காலத்தில் அவர் வர்த்தகர்களுடன் முன்னெடுக்கும் கொடுக்கல் வாங்கல்களை கட்டுப்படுத்தும் வகையில் இந்த சட்டமூலத்தில் விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் போட்டியிடுபவர் தேர்தல் நடவடிக்கைகளுக்கு செலவு செய்யும் நிதி தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இந்த சட்டத்தின் ஊடாக வழங்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு 3 அல்லது 4 நாட்களுக்குள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயாதீன குழுக்களை ஆணைக்குழுவிற்கு அழைத்து தேர்தல் தொடர்பான செலவுகளையும்,நிதி கட்டுப்பாடுகளையும் அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

இந்த சட்டத்தின் ஊடாக அரச சொத்து, அரச நிதி அல்லது வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெறும் நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேட்பாளருக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

தேர்தல் இடம்பெற்று மூன்று வார காலத்திற்குள் உரிய வேட்பாளர் தேர்தலுக்கு தான் செலவு செய்த நிதி, அந்த நிதியை பெற்றுக்கொண்ட விதம் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சத்திய கடதாசி ஊடாக அறிவிக்க வேண்டும்.

இந்த சட்டத்திற்கு எதிராக செயற்படும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அவர்கள் வகிக்கும் அரசியல் உறுப்பாண்மை பதவிகளை இரத்து செய்யவும் புதிய விடயதானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஊழல் மோசடி தீவிரமடைந்துள்ளது – தம்மரத்ன தேரர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாட்டில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. பொதுத்தேர்தலை நடத்தினால் ஆரம்ப கட்டமைப்பில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

ஊழல் மோசடியால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. ஏனெனில் அரசியல்வாதிகள் அனுமதி பத்திரம் பெற்ற ஊழல்வாதிகள் என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தம்மரத்ன தேரர் தெரிவித்தார்.

மிகிந்தலை ரஜமஹா விகாரையில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 31) இடம்பெற்ற ஊடகவியளலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது,தேர்தலை நடத்திய உடன் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியுமா,சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைப்பு வழங்குமாறு.தேர்தலை நடத்தினால் ஊழல்வாதிகள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார்கள்.

பிரதேச சபை, மாநகர சபை, மாகாண சபை, பாராளுமன்றம் என அனைத்து அரச கட்டமைப்பு ஊழல் மோடியால் துறைபோயுள்ளது.

அரசியல்வாதிகள் அனுமதி பத்திரம் பெற்ற ஊழல்வாதிகளாக உள்ளார்கள். எவர் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் வாழ்வதற்கான போராட்டத்தை தொடர வேண்டிய நிலை தற்போது காணப்படுகிறது.

பொதுத்தேர்தலை நடத்தினால் ஆரம்ப கட்டமைப்பில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மக்கள் நிதியை மோசடி செய்ய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.அடி மட்டத்தில் இருந்து ஊழல் மோசடி தீவிரமடைந்துள்ளது.

பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை உள்ளுராட்சி மன்ற சபைகள் தோற்கடிக்கின்றன.உள்ளூராட்சி மன்றங்கள் பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படுகின்றன.உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் ஊழல் மோசடிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளோம்.அரச நிதி கொள்ளையடிக்கப்பட்டதால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.மோசடி செய்யப்பட்ட நிதியை அரசுடமையாக்க வேண்டும் என்றார்.

சந்திரசேகரனை நினைவு கூரும் கடமை அனைவருக்கும் உண்டு – வே.இராதாகிருஸ்ணன்

சந்திரசேகரனை நினைவு கூரும் கடமை இந்த நாட்டில் அனைவருக்கும் உண்டு என மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் 1994ஆம் ஆண்டு தனி ஒருவராக அரசாங்கத்தை உருவாக்கினார். வட, கிழக்கு மக்களுடன் நல்லுரவை பேணினார். மலையக மக்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வர அபிவிருத்தியை தோட்டங்களுக்கு கொண்டு வந்தார். எனவே அவரை நினைவு கூர வேண்டியது அணைவருடைய பொறுப்பாகும். அந்த செயல்பாடை மலையக மக்கள் முன்னணி கடந்த 13 வருடங்களாக தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. மலையக மக்கள் முன்னணியின் உண்மையான விசுவாசிகளே இங்கு இருக்கின்றார்கள்.

அவருடைய இறுதி சடங்கின் போது அவருடைய கொள்கையை கடடிக் காப்போம் என சத்தியம் செய்தவர்கள் கொள்கையை காட்டிக் கொடுத்து மலையக மக்கள் முன்னணிக்கு எதிராக செயற்படுகின்றார்கள். இது தான் அமரர். பெ.சந்திரசேகரனுக்கு செய்யும் நன்றிக் கடனா என வே.இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும், முன்னால் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரனின் 13ஆவது சிரார்த்த தினம், ஞாயிற்றுக்கிழமை (டிச.1 )அன்று மதியம் 2 மணிக்கு, அட்டனில் மலையக மக்கள் முன்னணியின் தலைமை காரியாலயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் விஜேசந்திரன், தேசிய அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஆர்.இராஜாராம், நிதி செயலாளர் புஷ்பா விஷ்வநாதன், பிரதி தலைவர் ஏ.லோறன்ஸ், மலையக தொழிலாளர் முன்னணியின் பொது செயலாளர் கே.சுப்பிரமணியம், மாவட்ட அமைப்பாளர்கள், தோட்ட கமிட்டி தலைவர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மேடையில் வைக்கப்பட்டிருந்த அமரர்.பெ.சந்திரசேகரனின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலியை முன்னணியின் தலைவரும், எம்.பியுமான வே.இராதாகிருஷ்ணன் செலுத்தினார். இதனையடுத்து முன்னணியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்ட பொது மக்களும் நினைவுச்சுடர்களை ஏற்றியமையும் குறிப்பிடதக்கது.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய வேலுசாமி இராதாகிருஷ்ணன்,

அமரர்.சந்திரசேகரன் இந்த நாட்டுக்கும் மலையக மக்களுக்கும் செய்த சேவையை யாராலும் மறக்க முடியாது. இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயமாக இந்த மக்களுக்கு எதிரான அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடியிருப்பார். இன்று அரசாங்கம் மக்களின் நன்மையை கருத்தில் கொள்ளாது தன்னியச்சையான முடிவுகளை மேற்கொண்டு மக்களுக்கு சுமையாக மாறியிருக்கின்றது.

தொடர்ந்தும் மின்சார கட்டணம் அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றது. அப்படி அதிகரிக்கப்பட்டால் மலையக மக்கள் இருளில் மூழ்க வேண்டிய நிலைமை ஏற்படும். மண்ணெண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. மலையக மக்களின் வருமானம் குறைவடைந்துள்ளது. வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது. எனவே எதிர்காலம் மிகவும் மோசமானதாக அமையும்.

சுகாதார அமைச்சர் தன்னிச்சயைான முடிவுகளை எடுத்து சட்டத்திற்கு புறம்பாக மருந்து பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு முயற்சி செய்வதாக தகவல்கள் வெளி வருகின்றன. இது பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இன்று அனேகமான வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுகின்றது. தனியார் மருந்தகங்களிலும் மருந்துகள் இல்லை. இந்த அரசாங்கம் என்ன செய்கின்றது என்பது யாருக்கும் புரியவில்லை.

இன்று முதல் புதிய வரி அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் இலங்கையில் இருக்கின்ற அரச, தனியார்துறை ஊழியர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கவுள்ளார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி மின் கட்டணத்தை அதிகரிக்க முயற்சி – பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு

மின்கட்டண திருத்தம் ஊடாக இந்த ஆண்டில் 777 பில்லியன் ரூபா வருமானத்தை திரட்டிக் கொள்ள மின்சார சபை எதிர்பார்த்துள்ளது.

நடுத்தர வருமானம் பெறும் 50 இலட்சம் மின்பாவனையாளர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும்.

முறையாக செயற்படாவிட்டால் முட்டைக்கு நேர்ந்துள்ள கதியே மின்சாரத்திற்கு நேரிடும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் எவ்வித பரிந்துரைகளையும் மின்சாரத்துறை அமைச்சு முன்வைக்கவில்லை.

பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் சட்டத்திறகு அப்பாற்பட்ட வகையில் மின்கட்டணத்தை அதிகரிக்கும் யோசனையை மின்சாரத்துறை அமைச்சர் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது நியாயமற்றது.

சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறைக்கான மின்கட்டணத்தை 125 சதவீதத்தாலும்,பெரு தொழிற்துறைக்கான மின்கட்டணத்தை 150 சதவீதத்தாலும். சுற்றுலாத்துறைக்கான மின்கட்டணத்தை 150 சதவீதத்தாலும் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் (2022) ஆகஸ்ட் மாதம் மின்கட்டணம் நூற்றுக்கு 75 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டதால் மின்பாவனைக்கான கேள்வி நூற்றுக்கு 15 சதவீதத்தால் குறைவடைந்தது,சிறு மாற்றும் நடுத்தர தொழிற்துறை பாதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் மின்பாவனைக்கான கேள்வி முழுமையாக குறைவடையும்.

நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆணைக்குழுவிற்கு முரணாக மின்கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

கடந்த ஆகஸட் மாதம் 31ஆம் திகதி மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டது. ‘இதனால் இலங்கை மின்சார சபை 220 பில்லியன் ரூபா இலாபம் அடைந்து. இலாபத்தை காட்டிலும் நட்டம் அதிகமாக உள்ளது என மின்சார சபை குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்து இவ்வருடம் 777 பில்லியன் வருமானத்தை பெற்றுக் கொள்ள இலங்கை மின்சார சபை உத்தேசித்துள்ளது.

இந்த இலாபத்தில் 100 பில்லியன் ரூபாவை நடுத்தர வருமானம் பெறும் 50 இலட்ச மின்பாவனையாளர்களிடமிருந்து அறவிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

குறைந்த மின் அலகுகளை பாவிக்கும் மின்பாவனையாளர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை திருத்தம் செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

முட்டை பிரச்சினை நாட்டில் பெரும் பிரச்சினையாகவுள்ளது. முட்டை விலை அதிகரிப்பை தொடர்ந்து முட்டை மாபியாக்கள் முட்டைகளை பதுக்கி அதிக விலைக்கு விற்கிறார்கள், முட்டைக்கு கட்டுப்பாட்டு விலையை கூட அரசாங்கத்தினால் நியமிக்க முடியாத நிலை காணப்படுகிறது. பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் சட்டத்திற்கு அமைய செயற்படாவிட்டால் முட்டைக்கு ஏற்பட்டுள்ள கதியே மின்சாரத்திற்கு ஏற்படும் என்றார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – சம்பந்தன்

நாட்டில் தற்போது காணப்படுகின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதாக இருந்தால், அதற்கான அடிப்படையாக இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு எட்டப்பட வேண்டும். அவ்வாறான தீர்வினை வழங்குவது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் கடப்பாடாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்தார்.

தற்போது தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக விரைவான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவை வெற்றி பெறுவதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேநேரம், எமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத அர்த்தமற்ற தீர்வை ஏற்கப்போவதில்லை என்பது உறுதியானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் உட்பட சர்வகட்சிகளுடன் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து தொடர்ச்சியாக பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ள நிலையில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட இதர விவகாரங்கள் தொடர்பில் விரைவானதொரு நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளது. இந்த முயற்சி வெற்றிபெறுமா, இல்லையா என்பது குறித்து உறுதியான, நம்பிக்கையான கருத்துக்களை வெளிப்படுத்த முடியாது.

இருப்பினும், எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்டுவதற்குரிய சந்தர்ப்பமொன்று கிட்டியுள்ளது. அவ்விதமாக கிட்டியுள்ள சந்தர்ப்பத்தினை நாங்களாக புறமொதுக்கியதாக இருக்க முடியாது. ஆகவே, தற்போதைய விரைந்த முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு எம்மால் இயலுமான ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளோம்.

அதேநேரம் தற்போது நாட்டில் காணப்படுகின்ற நெருக்கடியான நிலைமைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டுமாக இருந்தால், அவற்றுக்கு அடிப்படையாக இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்குரிய நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுத்தப்பட்டால் தான், நாட்டின் பொருளாதாரம் உட்பட அனைத்து சூழல்களிலும் மாற்றங்கள் நிகழும். சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிதி முகவரங்கள் உதவிகளை வழங்கும்.

சர்வதேச நாடுகள் கடன் மறுசீரமைப்புக்களை செய்யும். ஆகவே தான் ஆட்சியில் உள்ள அரசாங்கம் தீர்வு விடயத்தில் கரிசனை கொண்டுள்ளது.

அந்த வகையில், ஆட்சியில் உள்ள அரசாங்கம் நியாயமான தீர்வினை வழங்குவதற்கான கடப்பாட்டை கொண்டிருக்கின்றது. எமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் அந்த தீர்வு அமைய வேண்டும். மீளப்பெற முடியாத வகையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வருகின்ற வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். அக்கருமங்கள் பிரிக்க முடியாத, பிளவுபடுத்தப்படாத ஐக்கிய இலங்கைக்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

எம்மை பொறுத்தவரையில், எமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத அர்த்தமற்ற எந்தவொரு தீர்வினையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என்றார்.

ஒரு நாட்டின் உந்து சக்தி மக்களின் இறையாண்மை – சஜித் பிரேமதாச

பாரிய நெருக்கடிகளை சந்தித்தும் பல நெருக்கடிகள் இன்னும் முடிவடையாத நிலையிலும் 2023 ஆம் ஆண்டு மலர்ந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர், இருள் மறையும் வெற்றிக்கான பாதையை தெளிவுபடுத்தும் தீர்க்கமான மற்றும் வெற்றிகரமான ஆண்டாக இந்த ஆண்டு அமைய பிரார்த்திப்போம்.

ஒரு நாடாக கடந்த வருடம் முழுவதும் கேட்ட மற்றும் எதிர்கொண்ட பல செய்திகள் நல்லதை விட கெட்டவையாகவே இருந்தன. தூர நோக்கு இல்லாத ஆட்சி முறையால் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக வங்குரோத்து நிலைமைக்கு ஆளாகிய படுமோசமான ஆண்டாகவும்,இந்த நாட்டில் பொதுமக்களின் தீர்க்கமான வெற்றி எழுச்சிக்கான தனித்துவமான ஆண்டாகவும் 2022 ஆம் ஆண்டை குறிப்பிட முடியும். இந்த உன்னத எழுச்சிக்கு நாமும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

ஒரு நாடாக, நாம் பல சவால்களுடன் 2023 ஆம் ஆண்டை எதிர்கொள்கிறோம் நாட்டின் தற்போதைய ஆட்சியை மீட்சியாக மாற்றுவதற்கான முன்னணி நடவடிக்கைகள் இந்த வருடத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். தோல்வியடைந்த ஆட்சியின் துன்பத்தை இந்நாட்டு மக்கள் இனியும் அனுபவிக்க முடியாது என்பதே யதார்த்தம்.

எனவே, நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லக்கூடிய மற்றும் கொண்டு செல்ல வேண்டிய வேலைத்திட்டங்கள் பற்றி புதிதாக நாம் சிந்திக்க வேண்டும்.

ஒரு நாட்டின் உந்து சக்தி மக்களின் இறையாண்மை என்பதை மீண்டும் ஒருமுறை நினைவு கூர்ந்து அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பாதாள உலக தலைவர் கஞ்சிப்பானை இம்ரான் இந்தியாவுக்குத் தப்பி ஓட்டம்

சமீபத்தில் பிணையில் விடுதலையான பாதாள உலக தலைவரான கஞ்சிப்பானை இம்ரான் இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கு தப்பி சென்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கஞ்சிப்பானை இம்ரான் தமிழ்நாட்டிற்கு தப்பிச்சென்றுள்ள தகவல் கிடைத்ததும் மாநிலத்தின் புலனாய்வு பிரிவினர் தமிழ் நாட்டின் கரையோர பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநில பொலிஸ் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.

டிசம்பர் 25 ம் திகதி படகு மூலம் தமிழ்நாடுசென்றுள்ள இம்ரானையும் அவரது சகாவையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கொலைக் குற்ற அச்சுறுத்தல் போன்றவற்றிற்காக இலங்கை அதிகாரிகளால் தேடப்பட்டுவந்த இம்ரான், 2019 இல் துபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

சமீபத்தில் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியிருந்தது.

பிணையில் விடுதலையானதும் கஞ்சிப்பானை இம்ரான் இந்தியாவிற்குள் நுழைய திட்டமிட்டுள்ளார் என மத்திய புலனாய்வு வட்டாரங்களும் நம்பகத்தன்மை மிக்க தரப்புகளும் தமிழ்நாடு புலனாய்வு பிரிவினருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தன.

அவர் நீதிமன்றத்திலிருந்து தலைமன்னார் சென்றார் அங்கு அவரது சகாக்கள் அவர் தமிழ்நாட்டிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது