விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிரூட்ட பாகிஸ்தான் முயற்சி – இந்திய ஊடகம்

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயுர் அளிக்கும் நடவடிக்கைகளில் பாக்கிஸ்தானின் புலனாய்வு பிரிவான ஐஎஸ்ஐ ஈடுபட்டுள்ளது என இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயுர் அளிக்கும் நடவடிக்கைகளில் பாக்கிஸ்தானின் புலனாய்வு பிரிவு ஈடுபட்டுள்ளது என ரிப்பப்ளிக் வேர்ல்ட் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளிற்கு புத்துயுர் அளிக்க முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்தியாவின் தேசிய விசாரணை முகவர் அமைப்பு 9 பேரை கைதுசெய்துள்ள நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த குணசேகரன் புஸ்பராஜா என்ற இருவர் பாக்கிஸ்தானை சேர்ந்த ஆயுத போதைப்பொருள் விற்பனையாளர் ஹாஜி சலீம் என்பவருடன் இணைந்து செயற்பட்டனர் என இந்தியாவின் தேசிய விசாரணை முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இவர்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் செயற்பட்டுள்ளனர் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்காக போதைப்பொருள் ஆயுதங்களை கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என ரிப்பப்ளிக் வேர்ல்ட் தெரிவித்துள்ளது.

இந்திய அமைப்பு இவர்களை கைதுசெய்துள்ள அதேவேளை பிராந்தியத்தில் அமைதி பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக பாக்கிஸ்தான் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயுர் அளிக்க முயல்கின்றது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து 39 பில்லியன் ரூபா மின் கட்டணம் அறவிடப்படாமலுள்ளது – சோபித தேரர்

அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்களிடமிருந்து இதுவரையில் 39 பில்லியன் ரூபா மின் கட்டணம் அறவிடப்படாமலுள்ளது. அந்த கட்டணத்தை அறவிடுவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமல் மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிப்பது நியாயமற்றது என குறிப்பிட்டார்.

மாறாக மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டால், அதற்கெதிராக சட்ட ரீதியாக குரல் கொடுப்பதற்கு மக்கள் சார்பாக செயற்படும் சட்டத்தரணிகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஓமல்பே சோபித தேரர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் பேரவையினால் திங்கட்கிழமை (டிச. 26) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மின்சார சபைக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதற்கு அமைச்சரிடம் காணப்படும் ஒரேயொரு மாற்று வழி கட்டணத்தை அதிகரிப்பது மாத்திரமேயாகும். இதன் மூலம் மக்கள் மீது மேலும் மேலும் சுமைகளை சுமத்துவதே இவர்களின் நோக்கமாகும்.

அண்மையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையை தாங்கிக் கொள்ள முடியாத மக்கள் தற்போது 10 சதவீதம் மின்சார பாவனையை குறைத்துக் கொண்டு;ள்ளனர். அது மாத்திரமின்றி 16 சதவீதமான தொழிற்துறைகள் இதன் காரணமாக கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் எதனைப் பற்றியும் கவனத்தில் கொள்ளாத அமைச்சர் மக்கள் மீது சுமைகளை சுமத்தியேனும் மின்சார சபையின் நஷ்டத்தை ஈடுசெய்யவே முயற்சிக்கின்றார்.

இதுவரையில் 39 பில்லியன் ரூபா மின் கட்டணம் அறவிடப்படாமலுள்ளது என்பதை அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம். இவ்வாறு கட்டணத்தை செலுத்தாமலிருப்பது வறுமையிலுள்ள மக்கள் அல்ல. முன்னாள் அமைச்சர்கள் , தற்போதைய அமைச்சர்கள் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களாவர்.

அதே போன்று அரசாங்கத்தின் சகாக்களின் நிறுவனங்களும் , அரச நிறுவனங்களும் இதில் உள்ளடங்குகின்றன. இவ்வாறு 39 பில்லியன் ரூபா மின் கட்டணத்தை அறவிடுவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காது, மக்களின் சுமைகளை மேலும் அதிகரிக்கும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு எடுத்துள்ள தீர்மானம் நியாயமானதா?

மீள் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி குறித்த வேலைத்திட்டங்கள் எவற்றைப் பற்றியேனும் அமைச்சர் சிந்தித்திருக்கின்றாறா? எரிபொருள் மற்றும் நிலக்கரி என்பவற்றைப் பயன்படுத்தி மாத்திரம் மின் உற்பத்தியில் ஈடுபட எதிர்பார்த்துள்ளமையின் நோக்கம் , தமக்கு கிடைக்கப் பெறும் தரகுப்பணம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியும் பரிந்துரையும் இன்றி அமைச்சரின் தன்னிச்சையான விருப்பத்திற்கு அவ்வாறு மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இடமளிக்க முடியாது. மாறாக அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டால் மக்கள் சார்பாக செயற்படும் சட்டத்தரணிகளை இதற்கு எதிராக குரல் கொடுக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

நாட்டை விட்டு வெளியேறிய கோத்தபாய ராஜபக்‌ஷ

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது உறவினர்கள்திங்கட்கிழமை (டிச. 26) அதிகாலை 2.55 மணிக்கு எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாய் நோக்கி சென்றதாகவும் அவர்கள் டுபாயிலிருந்து அமரிக்கா செல்ல உள்ளதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவர்களோடு மகன் தமிந்த மனோஜ் ராஜபக்ஷ, மருமகள் எஸ்.டி.ராஜபக்ஷ, பேரப் பிள்ளையான டி.எச்.ராஜபக்ஷ ஆகியோரும் பயணித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை பிற்போட தேர்தல் ஆணைக்குழுவிடம் மன்றாடும் ரணில் அரசாங்கம் – கிரியெல்ல

2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் அரச செலவுகளுக்காக 7,900 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாவை ஏன் செலவு செய்ய முடியாது.

தேர்தலை பிற்போட அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்றாடுகிறது உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஊடாக ரணில் – ராஜபக்ஷர்களின் முடிவு ஆரம்பமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கண்டியில் திங்கட்கிழமை (டிச. 26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இரண்டு ரிட் மனுக்கல் எதிர்வரும் மாதம் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நீதிமன்றத்தின் மீது முழுமையான நம்பிக்கை எமக்கு உள்ளது. வாக்குரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று ஆகவே தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் 2017 மற்றும் 2028ஆம் ஆண்டு காலப்பகுதியில் தீர்ப்பளித்துள்ளது.

நகர மற்றும் பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி நடத்துவது கட்டாயமாகும். தேர்தலை பிற்போடுவதற்கான உரிய காரணம் ஏதும் அரசாங்கத்திடம் கிடையாது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இம்மாத (டிசெம்பர்) இறுதியில் அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கடந்த மாதம் தெரிவித்தார்.

ஆனால் தற்போது அடுத்த மாதம் முதல் வாரத்தில் வேட்புமனு தாக்கல் தொடர்பான உத்தியோகப்பூர்வமான தீர்மானம் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இம்மாத இறுதி பகுதி,அடுத்தமாதம் முதல் வாரம் வரை பிற்போடப்பட்டுள்ளமைக்கான காரணத்தை இதுவரை ஆணைக்குழு அறிவிக்கவில்லை என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்லர் – உதய கம்மன்பில

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியலமைப்பு பேரவை ஊடாக அதிகார பகிர்வை அணுகுவார்கள் என்பதனால் கூட்டமைப்பினரது பெயர் பரிந்துரையை எதிர்த்தோம்.

கூட்டமைப்பினர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரு மாதங்கள் நிறைவுப் பெற்றுள்ள நிலையில் அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் இன்றும் இழுபறி நிலையில் உள்ளது.உறுப்பினர் நியமனத்தில் அரசியல் கட்சிகளுக்கிடையில் கருத்தொற்றுமை கிடையாது.

பெரும்பான்மையினவாதத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், சிறுபான்மையினத்தவர்களுக்கு இடமளிக்க கூடாது என்பதற்காகவும் அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் பெயர் பரிந்துரையை பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் எதிர்தரப்பினர் எதிர்த்ததாக கூட்டமைப்பினர் குறிப்பிடுவது அடிப்படையற்றது.

அரசியலமைப்பு பேரவைக்கு சுயாதீன தரப்பினர் ஒருவரின் பெயரை பரிந்துரைக்க நாங்கள் ஆரம்பத்தில் தீர்மானிக்கவில்லை.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாட்டு மக்களுக்கு எவ்வித நிவாரணத்தையும் வழங்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வரவு செலவுத் திட்ட மீதான விவாதத்தில் சுட்டிக்காட்டி,அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளை விமர்சித்தார்கள்.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் அரசியல் தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டதை தொடர்ந்து கூட்டமைப்பினர் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை.

தமது நோக்கங்களுக்காக மாத்திரம் செயற்படும் கூட்டமைப்பினரை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்களாக நியமிப்பது சாத்தியமற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியலமைப்பு பேரவை ஊடாக அதிகார பகிர்வை அணுகுவார்கள் என்ற காரணத்தால் அவர்களின் பெயர் பரிந்துரையை நாங்கள் எதிர்த்தோம்.

இது தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடு அல்ல,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களுக்கு உண்மையான அபிவிருத்திகளை வழங்க வேண்டும் என பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். அதிகார பகிர்வு அபிவிருத்திக்கான வழியாக அமையாது என்றார்.

என்னை விமர்சித்தவர்கள் ஐ.தே.க வுடன் இணைந்து அனைத்தையும் இழந்துள்ளனர் – மைத்திரிபால

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்த போது என் மீது கடுமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அவ்வாறு என்னை விமர்சித்தவர்களே இன்று ஐ.தே.க. தலைவருடன் இணைந்து அனைத்தையும் இழந்து நிற்கின்றனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் திங்கட்கிழமை (டிச. 26) நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மக்கள் எதிர்நோக்கியுள்ள துயரம் தொடர்பில் அரசாங்கமும் அறிந்திருக்கிறது. எனவே விரைவில் மக்களுக்கான ஏதேனுமொரு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

சுதந்திரத்தின் பின்னர் 1977 வரை நாடு இவ்வாறானதொரு நிலைமைக்கு தள்ளப்படும் என்று நான் ஒருபோதும் எண்ணவில்லை.

இதில் தாக்கம் செலுத்தும் 3 பிரதான காரணிகளில் முதலாவது 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பாகும். பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்களில் அரசியல்வாதிகள் தன்னிச்சையாக செயற்படுவதற்கு இதுவே வழியமைத்தது.

தற்போது அமைச்சரவை நியமனமும் இதில் தாக்கம் செலுத்துகிறது. எனவே விஞ்ஞானபூர்வமாக அமைச்சரவை நியமிக்கப்பட்டால் அது நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இவ்வாறான சூழல் மாற்றமடைய வேண்டுமெனில் தற்போதுள்ள முறைமையில் மாற்றம் அவசியமாகும். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் உண்மையானவையாகும். எனினும் இறுதியில் அவர்களின் நற்பெயரை சீரழித்துக் கொண்டனர்.

தலைவரொருவர் இன்றி 3 நாட்கள் நாடு காணப்பட்டது. அந்த 3 நாட்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை தலைவராக தெரிவு செய்திருக்க வேண்டும். எனினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களே அதனை தவறாக வழிநடத்திவிட்டனர்.

நான் ஜனாதிபதியானதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட போது, கட்சியை காட்டிக் கொடுத்துவிட்டதாக தற்போது பொதுஜன பெரமுனவிலுள்ளோர் என்னை விமர்சித்தனர்

. எவ்வாறிருப்பினும் நான் அன்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டேன். ஆனால் பொதுஜன பெரமுன ஜனாதிபதி , பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளையும் இழந்து நிற்கிறது.

அன்று பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் மிகக் குறுகிய காலத்திற்குள் இவ்வாறானதொரு கட்சி ஸ்தாபிக்கப்பட்டு, இத்தகைய வெற்றிகளைப் பெற்றதில்லை என்று அதன் தலைவர் பெருமை பேசிக் கொண்டிருந்தார். ஆனால் இறுதியில் எதுவும் இல்லாமல் போயுள்ளது என்றார்.

ஜே.வி.பி யினரிடம் நாட்டை முன்னேற்றும் கொள்ளை எதுவும் இல்லை – மஹிந்தானந்த

மக்கள் விடுதலை முன்னணியினருக்கு வாக்களிக்கும் அளவிற்கு நாட்டு மக்கள் மூடர்கள் அல்ல,  ராஜபக்ஷர்களையும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும்  விமர்சிப்பதை தவிர மக்கள் விடுதலை முன்னணியினரிடம்  நாட்டை முன்னேற்றும் கொள்கை திட்டங்கள் எதுவும் கிடையாது  என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நாவலபிடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 25) இரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

பல்வேறு காரணிகளினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. எமது அரசாங்கம்  சிறந்த நோக்கத்துடன் எடுத்த ஒருசில தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது. நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்துள்ளோம்.

பொருளாதார நெருக்கடிக்கு தம்மால் தீர்வு காண முடியும் என தற்போது வீர வசனம் பேசும் மக்கள் விடுதலை முன்னணியில் தலைவர் நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கத்தை ஏற்கவில்லை.இக்கட்டான சூழ்நிலையில்  சவால்களை ஏற்பது தான் சிறந்த தலைமைத்துவம்.

ஒரு கூட்டத்தை மக்கள் விடுதலை முன்னிணியினர் நடத்தினால் அதில் ஒரு பகுதி ராஜபக்ஷர்களை விமர்சிப்பதும்,பிறிதொரு மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட ஏனைய அரசியல் கட்சிகளை விமர்சிப்பதும் பிரதானமாக காணப்படும் .விமர்சனங்களை தவிர பொருளாதாரத்தை முன்னேற்றும் எவ்வித கொள்கை திட்டம் மக்கள் விடுதலை முன்னணியினரிடம் கிடையாது.

விமர்சனங்களினால் மாத்திரம் நாட்டை முன்னேற்ற முடியாது. மக்கள் விடுதலை முன்னணியினருக்கு வாக்களிக்கும் அளவுக்கு நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல, எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் ஆட்சியை நாங்கள் நிச்சயம் கைப்பற்றுவோம். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை கண்டு அஞ்ச வேண்டிய தேவை எமக்கு இல்லை கூட்டணியாக தேர்தலில் போட்டியிடுவோம் என்றார்.

தீர்வு விடயங்களில் கருத்தாட சொல்ஹெய்முக்கு அருகதை இல்லை – தமிழ் மக்களே அதைப் பற்றித் தீர்மானிப்பார்கள் – ரெலோ

தீர்வு விடயங்களில் கருத்தாட சொல்ஹெய்முக்கு அருகதை இல்லை தமிழ் மக்களே அதைப் பற்றித் தீர்மானிப்பார்கள்

இனப் பிரச்சனைக்கான தீர்வு விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள். அது பற்றி முடிவுகளை அறிவிக்க சொல்ஹெய்முக்கு எந்த அருகதையும் இல்லை. அவர் ஒரு நாட்டினுடைய பிரதிநிதியோ அல்லது ஒரு ராஜதந்திரியோ அல்ல. அவருக்கு இட்ட பணியை அவர் செய்வதே சாலச் சிறந்ததாகும். அதை விடுத்து தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வு சம்பந்தமான விடையங்களில் அழையா விருந்தாளியாக கருத்துச் சொல்வது அவசியம் அற்றது.

இன்றைய அரசியல் சூழலையில் எரிக் சொல்ஹெய்மினுடைய தகுதி என்ன? எந்த நாட்டினுடைய பிரதிநிதியாக அவர் செயல்படுகிறார்? யாருடைய தூண்டுதலில் தமிழ் மக்களின் அரசியல் விடயங்கள் பற்றி கருத்து கூற முற்படுகிறார்? அல்லது யாரைத் திருப்திப்படுத்த முனைகிறார்? என்ற கேள்விகளுக்கு பதிலளிப்பாரா?

மேலும் அவருடைய ஆலோசனையோ தலையீட்டையோ கருத்துக்களையோ தமிழ்த் தலைவர்கள் யாரும் கோரவில்லை. யுத்தம் முடிவடைந்த பின் இவ்வளவு காலமும் தமிழ் மக்கள் நீதி, மனித உரிமை, நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்கதையாகி பல சிரமங்களை எதிர்கொண்ட பொழுது இப்போது கருத்துச் சொல்பவர்கள் எங்கு சென்றார்கள்?

ஒருமித்த நிலையில் தமிழ் தலைவர்கள் பயணிக்காமல் தனித்தோட முயற்சி செய்வதாலேயே இப்படியான கருத்துக்களை சிலர் சொல்வதும் தமிழ் மக்களை நட்டாற்றில் தள்ளி விடுவதுமாக வரலாறு கடந்திருக்கிறது.

காலம் காலமாக புரையோடிப் போன தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எப்படியாக முன் நகர்த்த வேண்டும் என்பதில் தமிழ் தலைவர்கள் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டியுள்ளனர். ஆகவே எரிக் சொல்ஹம் அவர்கள் தன்னுடைய உத்தியோபூர்வமான பணி எதுவோ அதைச் செவ்வனே செய்யுமாறு கோருகிறோம்.

கு. சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த்தேசியக் கட்சிகளுடன் ஜனவரி ஆரம்பத்தில் சந்திப்பு – மாவை சேனாதிராஜா

தமிழ்த்தேசிய பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை ஜனவரி இரண்டாம் வாரம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக தமிழ்த்தேசியக் கட்சிகள் எத்தகைய விடையத்தை கலந்துரையாடவுள்ளோம் என்பதை கொழும்பில் ஆராயவுள்ளோம் என இலங்கை தமிழரச்சுக் கட்சி தலைவர் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.

ஐனாதிபதி மற்றும் தமிழ்தேசிய கட்சிகளுடனான சந்திப்பு  தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாங்கள் பிளவு பட்டு தனித் தனியா கட்சிகள் போட்டியிடுவதன் மூலம் எங்களின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாங்கள் ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்காக அரசாங்கத்துடன் போச்சு வார்த்தை ஆரம்பித்திருக்கின்ற நேரத்தில் தேர்தல் எவ்வாறு எத்தகைய முறையில் நடைபெறப்போகின்றது என்பது தெரியாத நிலையில் நாங்கள் விவாதத்திற்கு அனுமதிப்பது ஒட்டு மொத்த தமிழ் மக்கள் மத்தியில் பிளவை, குழப்பத்தை ,பலவீனத்தை ஏற்படுத்திவிடும்.

மேலும், ஜனாதிபதியுடன் ஜனவரி மாதம் 10 ,11, 12 ஆம் திகதிகளில் அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்துவது தொடர்பில் திகதிகள் குறிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக தமிழ்த்தேசியம் தொடர்பில் செயற்பட்டுவருகின்ற கட்சிகள் ஒன்றிணைந்து குறித்த விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடிவருகின்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக ஜனவரி 7, 8 ஆம் திகதிகளில் கொழும்பி கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆராயவுள்ளோம் என்றார்.

இலங்கையில் 11 மாதங்களில் 3,596 ஆட்கடத்தல் சம்பவங்கள்!

பல்வேறு காரணங்களுக்காக இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் 3,596 ஆட்கடத்தல் சம்பவங்கள்  இடம்பெற்றுள்ளமையை  பொலிஸ் அறிக்கைகள் உறுதிப்படுத்துவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

2021ம் ஆண்டு 835 சம்பவங்களே இடம்பெற்றன ஆனால் இந்த வருடத்தின்முதல் 11 மாதங்களில் 3596 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன- கடத்தல் சம்பவங்கள் அச்சம் தரும் விதத்தில் பெருமளவு அதிகரித்துள்ளதை  இது வெளிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized