தமிழ் கட்சிகளுக்கு அரசியல் நீரிழிவு! வவுனியா கரும்பும் கசக்கிறது

“கரும்பு இனிக்குமா? கசக்குமா?” என்ற விவாதம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் சூடுபிடித்துள்ளது. அரசியல், ஊடகப் பரப்புடன் தொடர்ச்சியான அவதானிப்புக் குறைந்தவர்கள், “அதென்ன கரும்புக் கதை?” என்று ஆச்சரியமாகக் கேட்கக் கூடும்.

அந்தக் கதை இதுதான்.

வடக்கில் – வவுனியா மாவட்டத்தில் – கரும்பு ஆலையை நிறுவுவதற்கு அரசாங்கத்திடம் அனுமதியைக் கேட்டிருக்கிறது வெளிநாட்டு நிறுவனமொன்று. இது நடந்தது 2018 இல். அது நல்லாட்சி அரசாங்கக் காலம். 2018 ஜூலையில் தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான்ஓசா, அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்திருந்தார். அந்த வருகையின்போது பல விடயங்கள் பேசப்பட்டன. சில உடன்படிக்கைகள் செய்யப்பட்டன. அப்படிப் பேசப்பட்டவற்றில் ஒன்றுதான் இந்தக் கரும்பு ஆலை விடயமும்.

சுமார் 500 மில்லியன் டொலரில் மிகப் பெரிய கரும்பு ஆலையை நிறுவுதற்கென தாய்லாந்து நிறுவனத்தின் பேரில் தாய்லாந்துப் பிரதமர் கேட்ட திட்டத்துக்கு, மைத்திரிபால சிறிசேனா, அன்றைய பிரதமர் ரணில் விக்கிரசிங்க, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இரா. சம்மந்தன் என அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் சம்மந்தனைச் சந்தித்த பிரயுத் சான்ஓசாவிடம் வடக்கில் முதலீடு செய்வதைப்போல கிழக்கிலும் தாய்லாந்து முதலீடுகளைச்செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார் சம்மந்தன். பின்னர் இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்புக் கூட நடந்தது. அதிலும் இந்த விடயத்தைச் சம்மந்தன் பேசினார்.

இதற்குப் பின்னர், இந்தத் திட்டம் தொடர்பாக வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்பொழுது இந்தத் திட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளித்தனர். அன்று அரசாங்கத்துக்கு ஆதரவாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் செயற்பட்டபடியால் இது விவாதப் பொருளாகவில்லை.

அதற்குப் பிறகு அன்றைய அமைச்சரவையில் இதற்கான பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் அடுத்த கட்டமாக திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பாக ஆட்சிக் குழப்பம் ஏற்பட்டது. ரணில் விக்கிரமசிங்கவை நிராகரித்து விட்டு மகிந்த ராஜபக்ஸவை பிரதமராக்கினார், மைத்திரிபால சிறிசேன. அதனால் எல்லாமே தடைப்பட்டன. அதற்குப் பிறகு உருவான அமைச்சரவையில் மீண்டும் இந்தத்திட்டத்துக்கான அமைச்சரவை அங்கீகாரம் சில திருத்தங்களுடன் மேற்கொள்ளப்பட்டது. இருந்தாலும் அதுவும் நடைமுறைப்படுத்த முடியாமல் தடைப்பட்டது. காரணம், அன்று உலகம் முழுவதையும் ஆட்கொண்டிருந்த கொவிட் 19 இன் தாக்கம்.

அது நீங்க, இலங்கையில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கோத்தபாய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தார். அவர் இந்தத் திட்டத்துக்கான அனுமதிக்கு மீண்டும் சில மாற்றங்களைச் செய்து அமைச்சரவை அங்கீகாரத்துக்குச் சமர்ப்பித்தார். அதற்கும் அங்கீகாரம் கிடைத்தது. அதை நடைமுறைப்படுத்துவதற்கிடையில் கோத்தபாய ஆட்சியிலிருந்து விரட்டப்பட்டார்.

இப்படி இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் கழிந்து விட்டன.

இப்பொழுது ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்துக்கு வந்த பின், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பரிகாரம் காணும் வகையில் என்னென்ன திட்டங்கள் கிடப்பில் உள்ளன? என்னென்ன திட்டங்கள் தேக்கத்தில் உள்ளன. என்று ஆராய்திருக்கிறார். அப்படியான சூழலில் அடையாளம் கண்டு, மீண்டும் மேசைக்கு வந்ததே இந்தத் திட்டம்.

இதனை ஆராய்ந்த ஜனாதிபதி, பூர்வாங்க வேலைகள் எல்லாமே முடிந்த நிலையில் இருந்த இந்தத் திட்டத்தை சில மெருகுபடுத்தலுடன் மீண்டும் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தார்.

அப்பொழுதுதான் இது விவகாரமாக மாறியது.

விவகாரமாகிய கதை

முன்னர் சம்மதித்த தமிழ்த் தரப்புகள் இப்பொழுது இரண்டு, மூன்றாக உடைந்து விட்டன. முன்னரைப்போல ஆட்சியிலும் தமிழ்த்தரப்புகள் பங்கேற்கவில்லை. தவிர, இந்தத் திட்டத்துக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ரெலோ மட்டும்தான் நேரடியாக ஆதரவைத் தெரிவித்துள்ளது. புளொட் வழமையைப் போல நிலைமையைப் பார்த்து முடிவெடுப்போம் என்று மதிலின் மேலே குந்தியிருக்கிறது. ஈ.பி.ஆர்.எல்.எவ் இன்னும் வாயைத் திறக்கவே இல்லை. புதிய கூட்டமைப்பில் பங்காளிகள் அல்லவா!

பதிலாக தமிழரசுக் கட்சி பகிரங்கமாகவே தனது எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. இதற்குக் காரணம், இந்த அணிக்கு தமிழரசுக் கட்சி எதிராக நிற்பதாகும்.

“எந்த வகையிலும் இந்தத் திட்டத்தை அனுமதிக்க முடியாது. அப்படி அனுமதித்தால் அது சிங்களக் குடியேற்றத்தை வவுனியா வடக்கில் கொண்டு வந்து சேர்த்து விடும். கரும்புச்செய்கைக்கான நீர் விநியோகம் என்ற பேரில் மகாவலிகங்கையை நெடுங்கேணிக்குக்கொண்டு வருவார்கள். நீரோடு சேர்ந்து சிங்கள பௌத்தக் குடியேற்றம் என்ற நெருப்பும் வரும்” என்று சொல்கிறார் சுமந்திரன்.

“சுமந்திரன் இப்படிக் காட்டமாகச் சொல்வதற்குக் காரணம், உண்மையில் சிங்களக் குடியேற்றம் வந்து விடும் என்பதோ, மகாவலிகங்கை நெடுங்கேணிகுள் நுழைந்து விடும் என்பதோ அல்ல. ரெலோ இந்தத் திட்டத்தில் முன்னிலைப் பாத்திரம் ஏற்றிருப்பதேயாகும். மட்டுமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பைப் பலவீனப்படுத்தி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் ரெலோ காட்டிய அக்கறையும் அதைச் செயற்படுத்தி முடித்ததுமாகும். அத்துடன் இந்தத் திட்டத்தில் முக்கிய பாத்திரமேற்றிருக்கும் ரெலோவின் இன்றைய ஆலோசகர் சுரேன் குருசாமி இதில் பிரதான செல்வாக்கைச் செலுத்துகிறார். இவரே கூட்டமைப்பிலிருந்து ஏனைய மூன்று கட்சிகளையும் பிரித்தெடுத்து, புதிய அணியில் சேர்ப்பதற்கு காரணமானவர்களில் ஒருவர் என்று தமிழரசுக் கட்சியினர் நம்புவதாகும்” என்று ரெலோவின் தரப்பில் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக சுரேன் குருசாமியிடம் கேட்டபோது, “இந்தத் திட்டத்தை தொடக்கத்திலிருந்தே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்த அத்தனை பேரும் ஆதரித்தனர். சம்மந்தன் பொதுவெளியிலேயே இதைப்பற்றிப் பேசியிருக்கிறார். ஊடகவியலாளர் சந்திப்பைக் கூட நடத்தியிருக்கிறார். (இதோ அதற்கான ஆதாரங்கள் என்று அந்தச் செய்த வந்திருந்த பத்திரிகை நறுக்குகளைக் காண்பிக்கிறார்). அப்படியெல்லாம் செய்து விட்டு, இப்பொழுதுது ரெலோதான் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தது. இது ஒரு தேவையில்லாப் பிரச்சினை என்று சொல்வது அர்த்தமற்றது மட்டுமல்ல, அரசியல் லாபங்கருதியதுமாகும்” என்றார்.

மேலும் அவர் சொன்னார், “இது எமது பிரதேசத்துக்கு வந்துள்ள மிகப் பெரிய முதலீடாகும். பலரும் கருதுவதைப் போல இது சீன அரசாங்கத்தின் முதலீடல்ல. அல்லது இந்திய அரசாங்கத்துக்கு எதிரானதும் அல்ல. இது தாய்வானின் முதலீடு. இதன் மூலம் வன்னிப் பிரதேசத்தில் பலருக்கான தொழில்வாய்ப்புகளை உருவாக்க முடியும். கரும்பு ஆலையை மட்டுமே குறித்த நிறுவனம் 400 ஏக்கர் நிலத்தில் அமைத்துக் கொள்ளும். ஏனைய நிலமும் அவற்றில் பயிரிடும் உரிமையும் விவசாயிகளுக்கானது. சிலர் சொல்வதைப்போல இந்தத் திட்டத்தினால் சிங்களக் குடியேற்றம் வந்து விடும். நீர்த்தேவைக்காக மகாவலி கங்கையை வவுனியாவுக்குத் திருப்பி, அதன் வழியே சிங்களவர்களைக் கொண்டு வந்து விடுவார்கள் என்பதெல்லாம் ஏற்கக் கூடிய காரணங்களில்லை. சிங்களவர்களின் பிரசன்னத்துக்கான வழிகள் பல உண்டு. அதைத் தடுப்பது வேறு. இது வேறு. தவிர, இந்தத் திட்டத்தின் பயனாளிகளைத் தெரிவு செய்வது பிரதேச மட்டத்திலான மக்கள் பிரதிநிதிகளே. ஆகவே அதனை நாம் (தமிழ்ப்பிரதிநிதிகளே) செய்யப் போகிறோம். அப்படியிருக்கும்போது எப்படி சிங்களக் குடியேற்றத்துக்கான சந்தர்ப்பம் ஏற்படும்? இந்தப் பயனாளிகள் தெரிவில் மாற்றுத் திறனாளிகள்,முன்னாள் போராளிகள், பிரதேச ரீதியாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் முன்னணி விவசாயிகள், புதிய செய்கையாளர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். அதேவேளை ஏற்கனவே நெற்செய்கை உள்ளிட்ட ஏனைய பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு எந்த வகையான பாதிப்பும் ஏற்படாதவாறே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். எல்லாவற்றுக்கும் அப்பால் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இதில் திருத்தங்களுக்கு இடமுண்டு. அதற்குள் ஏன் இந்த அவசரமும் அநாவசியமான கதைகளும்? நாம் அரசியல் விடுதலையுடன் எமது மக்களின், எமது பிரதேசத்தின் பொருளாதார முன்னேற்றத்தைப் பற்றியும் சிந்திக்கிறோம்” என்று.

“கரும்புச் செய்கைக்கு அதிகளவு நீர் தேவைப்படுமே. அந்த நீரை செய்கை மேற்கொள்ளப்படக் கூடிய இடங்கள் என்று கூறப்படும் நெடுங்கேணி, செட்டிகுளம் போன்ற இடங்களில் பெற முடியுமா?” என்று கேட்டபோது, “இது தொடர்பான கள ஆய்வொன்று 2016, 2017 காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. வவுனியாப் பிரதேசத்தில் கிடைக்கின்ற மழை வீழ்ச்சியில் பெருமளவு பகுதி வீணடிக்கப்படுகிறது. அதை உரிய முறையில் சேமித்தால் பல திட்டங்களுக்கு அந்த நீரைப் பயன்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டது. இதற்கான கட்டுமானங்கள், வடிகாலமைப்புகளைச் செய்தால் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிட்டும். பொருளாதார வளத்தையும் பெருக்க முடியும் என்று அந்த அறிக்கை சொல்கிறது” என்கிறார் சுரேன் குருசாமி.

ஆனால், இந்தத் திட்டத்தை எதிர்க்கின்ற இன்னொரு தரப்பான தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் சூழலியலாளருமான பொ. ஐங்கரநேசன், இது தொடர்பாக வேறு விளக்கத்தை அளிக்கிறார். “இந்தத் திட்டத்தை நாம் மறுப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. ஒன்று, இந்தத் திட்டத்தை வவுனியாவில் திணிக்க முற்படுகின்ற அரசாங்கம், 1960 களிலிருந்து கந்தளாயில் மேற்கொள்ளப்பட்டு வந்த கரும்புச் செய்கையையும் சர்க்கரை உற்பத்தியையும் நிறுத்தி வைத்திருப்பது ஏன்? அங்கேயே மீளவும் அதை ஆரம்பிக்கலாமே. அதற்குரிய அத்தனை வசதிகளும் ஏற்பாடுகளும் அங்கேயே உண்டு. இரண்டாவது, இந்தத் திட்டத்தினால் நீர்ப்பிரச்சினையும் சூழலியல் கேடும் ஏற்படும். உலக அளவில் நீர்ப்பிரச்சினையையும் சூழலியல் பாதுகாப்பையும் பற்றிச் சிந்திக்கின்ற நாடுகள், தமது முதலீடுகளை இலங்கை போன்ற நாடுகளில் மேற்கொள்ளவே முயற்சிக்கின்றன. இதன் மூலம் வருவாயைத் தாம் பெற்றுக் கொள்வதோடு, தமது இயற்கை வளத்தையும் சூழலையும் பேணிக் கொள்கின்றன. மாறாக எமது வளத்தைச் சுரண்டி, எமது சூழலைக் கெடுக்கின்றன. ஆகவே இதற்கு நாம் அனுமதிக்க முடியாது. மூன்றாவது, இந்தத் திட்டத்திற்குப் பதிலாக எமக்குப் பொருத்தமான வேறு திட்டங்களைக் கொண்டு வர முடியும். உதாரணமாக ஆனையிறவு – குறிஞ்சாத்தீவு உப்பளங்களை முந்திய மாதிரி முழுமையான அளவில் இயங்க வைக்கலாம். ஆழ்கடல் மீன்பிடியை விருத்தி செய்து, வெளிநாடுகளுக்கான கடல் உணவு ஏற்றுமதியை ஆரம்பிக்கலாம். இந்த மாதிரிப் பலவற்றைச் செய்யலாம். அப்படிச் செய்யாமல் இதைத் திணிக்க முற்படுவது ஏன்?” என்று கேட்கிறார்.

இந்தத் திட்டத்தை முன்னாள் முதலமைச்சராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரனும் எதிர்க்கிறார்.

இது பற்றி விவசாயத்துறை மற்றும் மண்ணியல் ஆய்வுத் துறைசார்ந்த அறிஞர்களிடம் கேட்டபோது, “இது அரசியல் விவகாரமாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நாம் நிதானமாக, ஆழமாகப் பார்க்க வேண்டும். எந்தப் பொருளாதாரத் திட்டத்திலும் சாதக பாதக அம்சங்கள் இருக்கும். அதை எப்படிக் கையாளப் போகிறோம் என்பதைப் பொறுத்தே அவற்றின் நன்மை தீமைகளும் வெற்றி தோல்விகளும் உள்ளன. எங்களுடைய விவசாயிகளில் பலரும் சோம்பல் பயிற்செய்கையிலேயே அதிகமாக நாட்டம் கொண்டிருக்கின்றனர். அதற்காகவே அவர்கள் நெல் விவசாயத்தை அதிகமாகச் செய்ய விரும்புகிறார்கள். ஆனால், செய்கை பண்ணப்படும் நெல்லை சந்தைப்படுத்த முடியாமல் அவதிப்படுவதைப்பற்றிச் சிந்திப்பதில்லை. திரும்பத்திரும்ப இந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். இதற்குப் பதிலாக மாற்றுப் பயிர்ச்செய்கையைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. நாமும் மாற்றுப் பயிர்ச்செய்கையைப் பற்றி அக்கறைப்படும்படி தொடர்ந்து வலியுறுத்துகிறோம். விவசாயிகள் அதில் ஈடுபடுவதற்குத் தயங்குகிறார்கள். இதனால் உழுந்து, பயறு, கௌபி, கடலை, பருப்பு வகை, பருத்தி, மஞ்சள், மிளகு, பழங்கள் எனப் பலவற்றையும் இறக்குமதி செய்து கொண்டிருக்க வேண்டியுள்ளது. இதைக்குறித்து எங்களுடைய அரசியல் தலைவர்களுக்கும் அக்கறையில்லை. ஏதாவது அபிவிருத்தித் திட்டங்கள் வந்தால் அதை உடனடியாக எதிர்க்க முயற்சிப்பார்கள். இப்படித்தான் வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் வவுனியாவுக்கு வந்தபோதும் எதிர்த்தார்கள். ஒரே தரப்புக்குள்ளேயே முரண்பட்டு மாங்குளத்தில் கட்டவேண்டும் என்று ஒரு தரப்பும் ஓமந்தையில் கட்ட வேணும் என்று இன்னொரு தரப்பும் சண்டையிட்டன. இந்த மாதிரியான விடயங்களில் கலந்தாய்வை மேற்கொள்ளக் கூடியவாறு துறைசார் நிபுணத்துவக் குழு எதுவும் நம்மிடமில்லை. அப்படி ஒரு குழு இருந்தாலும் அதற்கொரு அரசியற் சாயத்தைப் பூசி விடுவார்கள். இதனால் பாதிக்கப்படுவது மக்களே. ஏனென்றால், முதலீட்டாளர்களுக்கு சிரமங்கள் அதிகம் இருப்பதை அவர்கள் விரும்புவதில்லை. ஒரு முதலீட்டாளர் படுகின்ற சிரமத்தைப் பார்க்கின்ற ஏனைய முதலீட்டாளர்கள் இந்தப் பக்கமாகத் தலை வைத்தும் படுக்க மாட்டார்கள். இதை எம்மவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்று நாடும் நம்முடைய மக்களும் இருக்கின்ற நிலைமையைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் பிழைப்புத் தேடி வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். பிறப்பு வீதம் குறைந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் எல்லாம் குறைவடையப் போகிறது. சனத்தொகை குறைந்தால் நமக்கான நிதி ஒதுக்கீடுகளும் வள ஒதுக்கீடுகளும் குறைவடையும். அதைத் தடுப்பதற்கு நாம் பல வழிகளிலும் முயற்சிக்க வேண்டும்” என்கின்றனர்.

இந்த நியாயத்தை நாம் மறுக்க முடியாது.

முதலில் இந்தத் திட்டத்தை அரசியல் பகைமை, அரசியல் லாபநட்டக் கணக்குகளுக்கு அப்பால் பார்க்க வேண்டும். ஏனென்றால் இந்தத் திட்டம் வடக்கில் கைவிடப்பட்டால், அதை தென்பகுதிக்குக் கொண்டு செல்வதற்கு அங்கே தயாராக உள்ளனர். விகாரைகள் கட்டப்படுவதை எதிர்க்கலாம். அதில் நியாயமுண்டு. இப்படியான தொழில்வாண்மைக்கான முயற்சிகளைத் தடுக்க முடியுமா? என்று அபிவிருத்திக் கண்ணோட்டமுடைய சிலர் கேட்கின்றனர்.

அவர்களுடைய நியாயம் என்னவென்றால், “கரும்பு உற்பத்தியை பிரேசில், இந்தியா, இந்தோனேசியா, சீனா, கியூபா என உலகில் 120 நாடுகள் மேற்கொள்கின்றன. முன்னணி வகித்த பிரேசிலைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இந்தியா முதலிடத்துக்கு வந்துள்ளது. இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே கரும்புச் செய்கையும் அதன் பயன்பாடும் இருந்துள்ளது. இப்பொழுது இந்தியாவில் 03 வீதமான நிலப்பரப்பில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது. 4.5 கோடி விவசாயிகள் கரும்புச்செய்கையில் ஈடுபடுகின்றனர். இதில் தமிழகம் 50 வீதமான உற்பத்தியைச் செய்கிறது. 2.5 லட்சம் ஏக்கரில் கரும்பு உற்பத்தி நடக்கிறது. இந்தியா முழுவதும் 500 க்கு மேற்பட்ட சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில் 41 ஆலைகள் தமிழகத்தில் மட்டும் உண்டு. ஆலைகளை விட கரும்பு ஆராய்ச்சி மையங்கள், உற்பத்திப் பிரிவுகள் எனப் பலவும் செயற்படுகின்றன. கரும்பு தின்னக் கைக்கூலி எதற்கு என்று தமிழில் பழமொழி கூட உள்ளது. தமிழ்ப் பண்பாட்டில் கரும்புக்கு முக்கியமான இடமுண்டு. பொங்கல், பண்டிகைகளில் கரும்பு முன்னிலைப்படுத்தப்படுகிறது. அந்தளவுக்குத் தமிழோடும் தமிழர் வாழ்வோடும் கரும்பு பின்னிப் பிணைந்திருக்கிறது. அப்படியான கரும்பு கசக்கிறது என்கிறார்கள்” இந்தப் புத்திஜீவிகள்.

உலகில் 80 வீதத்துக்கு மேலான சீனி மற்றும் சர்க்கரையை கரும்பிலிருந்தே உற்பத்தி செய்கிறார்கள். மீதியையே பீற்றூட்டிலிருந்து எடுக்கிறார்கள். கியூபாவின் பொருளாதாரத்தில் பாதியை கரும்பே நிறைவு செய்கிறது. உலகப் பெரும் புரட்சியாளர்கள் ஃபிடல் காஸ்ரோவும் சேகுவேராவும் கரும்பு வெட்டும் தொழிலைச் செய்திருக்கிறார்கள். அதையே தமது அடையாளமாகவும் கொண்டிருந்தனர். நம்முடைய அரசியல் தலைவர்களுக்கோ கரும்பு கசக்கிறது!

கரும்புச்செய்கையை மேற்கொள்வதாயின் அதற்கான நிலம், நீர் போன்றன உண்டா என்று வவுனியா மாவட்டச் செயலகத்துடன் தொடர்பு கொண்டபோது, “ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இதைப்பற்றிப் பேசப்பட்டது. பின்னர் அமைச்சரவை, ஜனாதிபதி ஆகிய தரப்புகள் தொடர்பு கொண்டு பேச்சுகளை நடத்தின. இதன்போது தேவையான நீரைப் பெற்றுக் கொள்ள முடியும் என நீர்ப்பாசனத் திணைக்களமும் தேவையான காணிகளை வழங்க முடியும் என வனப் பிரவினரும் காணி அமைச்சும் சொல்லியுள்ளன. ஆனால், திட்டத்தை இன்னும் இறுதி செய்யவில்லை என்று அறிகிறோம்” என்று சொல்லப்பட்டது.

கரும்பு கசக்குமா? இனிக்குமா? என்று சரியாகத் தீர்மானிக்க முடியவில்லை. அதைத் தீர்மானிக்க வேண்டியது மக்களே. அப்படித்தான் இந்தத் திட்டத்தை முன்மொழிந்த ரெலோவும் சொல்கிறது.

 

– கருணாகரன்

ஆர்மேனியருக்கு மதாக்; யூதர்களுக்கு மனா; தமிழர்க்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி – நவீனன்

ஓர் இனத்தைச் சேர்ந்த மக்களை கொத்துக் கொத்தாகக் கொன்று குவிப்பதுடன், அடுத்த தலைமுறை உருவாக விடாமல் தடுத்து இனப்படுகொலை செய்வது மாத்தரமின்றி – அந்த மக்களை பட்டினி போட்டு கொல்வதும் கொடுமையிலும் கொடுமையான இனப் படுகொலையகும்.

ஓர் இனத்தை அது இருந்த சுவடே தெரியாமல் அழிப்பதாகவும், ஓர் இனத்தின் அல்லது அந்தக் குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது, குழு உறுப்பினர்களுக்கு உடல் மற்றும் உள ரீதியாக மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதே இனப் படுகொலையாகக் சர்வதேச சட்டப்படி கருதப்படுகிறது.

இக்கோர இனப்படுகொலைகளை எதிர் கொண்ட மக்கள், எப்படி வாழ்வின் இறுதிக்கணங்களில் போராடியிருப்பார்கள் என்பதை எழுத்தில் வடிக்க முடியாது. கட்டாய பட்டினியால் மக்கள் எவ்வாறு போர்க்கால உணவை பெற்றார்கள் என்பதை அலசும் சிறிய ஆவணம் இது.

ஆர்மேனிய இனப்படுகொலையும் மதாக் Madagh உணவும்:

இருபதாம் நூற்றாண்டின் முதலாவது பெரும் இனப்படுகொலையாக துருக்கியில் ஒட்டோமான் ஆட்சியில் ஆர்மேனியர்கள் மீது படுகொலை செய்யப்பட்டமை தான் வரலாற்றில் பதியப்பட்ட கோர நிகழ்வாகும்.

இந்த கொடூர சம்பவத்தை உலகமே இனப்படுகொலை என்று கூறியபோது, துருக்கி அதனை கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆர்மேனிய இனப்படுகொலை இந்த நூற்றாண்டின் மிக கோரமான கொடூரங்களில் ஒன்றாகும். ஒரு நூற்றாண்டு கடந்தும் அட்டூழியங்களால் ஏற்பட்ட வடுக்கள் அழுத்தமாக பதியப்படுத்தப்பட்டுள்ளது.

20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய படுகொலையாகக் கருதப்படும் ஆர்மேனிய படுகொலையில் “மதாக்” (Madagh)என்ற ஒருவகை உணவு தான் அவர்களை உயிரோட்டமாக வைத்திருந்தது.

ஆர்மேனிய மக்கள் தங்களின் பண்பாட்டு உணவாகவும் இனப்படுகொலையின் அவலம் நிறைந்த உணவாகவும் ‘Madagh’யை தாங்கள் புலம்பெயர்ந்த பகுதிகளில் அதன் வலிகளை உணர்ந்து அடுத்தடுத்த தலைமுறையினருக்கு உணர்த்தி வருகின்றனர்.

ஆர்மேனிய இனஅழிப்பைப் பின்னோக்கிப் பார்க்கின்றபோது, 1915ஆம் ஆண்டில் மொத்தமாக 15 இலட்சம் ஆர்மேனிய மக்களைக் கொன்று குவித்த, இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையாக நடந்தேறிய ஓர் வரலாற்று கொடூரமாகும்.

தற்போது ஆர்மேனிய இனப்படுகொலையை ஏப்ரல் 24 அன்று உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ஆர்மேனியர்கள் இறந்த தங்கள் மூதாதையர்களின் இழப்பை நினைவு கூர்ந்து மதிக்கிறார்கள்.
ஒட்டோமான் படைகளால், திட்டமிட்ட வகையில், 15 லட்சம் ஆர்மேனியர்கள் கொல்லப்பட்டதாக ஆர்மீனிய வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

யூதப் படுகொலை – ஹாலோகோஸ்ட் :

இரண்டாம் உலகப் போரில் 1941 இலிருந்து 1945 வரை, யூதர்கள் ஒரு இனப்படுகொலை மூலம் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர். நாஸி கட்சியின் உயர் தலைமையின் வழிகாட்டல்கள் உடன், ஜேர்மனி அரசின் அதிகார மையத்தின் ஒவ்வொரு பகுதியும் ஜேர்மனி ஆக்கிரமித்த ஐரோப்பா முழுவதும் பெரும் படுகொலைகளை நடத்துவதில் ஏற்பாடுகள் செய்வதில் ஈடுபட்டு வந்தது.

இப் பெரும் இன அழிப்பு இரண்டாம் உலகப் போரில் , 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் ஹாலோகோஸ்ட் (Holocaust) என்று குறிப்பிடுவர்.

ஜேர்மனியில் ஆட்சியில் இருந்த, அடொல்ஃப் ஹிட்லரின்
நாஸி இன அழிப்புக் கொள்கையின் படி பல அறிஞர்கள் பெருமளவில் இந்த இன அழிப்பில் கொல்லப்பட்டனர்.

ஜேர்மன் அரசு இதனை “யூதர் பிரச்சினைக்கான இறுதித் தீர்வு” என வர்ணித்தது. நாஸி ஜேர்மனியில் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எல்லாப் பிரிவினரதும் மொத்தத் தொகை 9 தொடக்கம் 11 மில்லியன் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

யூதர்களின் பட்டினி தீர்த்த ‘மனா’ :

வரலாற்று ரீதியாக இஸ்ரேலியர்களின் எகிப்திய அடக்குமுறையின் கசப்பைக் குறிக்கும் அடையாள உணவான “மனா” (Manna) எனும் உணவை நாஸி வதைமுகாம்களில் உண்டதாகவும் சான்றுகள் உள்ளன.

மனா என்பது பைபிளின் படி, இஸ்ரேலிய யூதர்கள் நீண்ட இடப்பெயர்வில், பாலைவனத்தில் பயணம் செய்தபோது கடவுள் அவர்களுக்கு வழங்கிய ஒரு உண்ணக் கூடிய பொருள் என்றும் பொருள்படும்.

யூதர்களின் நீண்ட இடப்பெயர்வு (எக்ஸோடஸ் ) வரலாற்று புத்தகத்தில், மனா தரையில் வீழ்ந்த உறைபனி போன்ற நல்ல, செதில் போன்ற பொருள் என்று விவரிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் பனியுடன் வந்து சேருவதாகவும், இது சூரியனின் வெப்பத்தால் உருகுவதற்கு முன் சேகரிக்கப்பட வேண்டும் என்றும்,ஒரு கொத்தமல்லி விதை போன்று, வெள்ளை நிறத்தில் இருந்தது என்றும் எக்ஸோடஸ் நூல் மேலும் கூறுகிறது.

முள்ளிவாய்க்காலும் இனவழிப்பும் :

2009 மே இறுதிப் போரின், இறுதிநாட்களில் மக்களுக்கு உணவு, மருத்துவ தேவைகளை முற்றுமுதலாக தடுத்து நிறுத்தப்பட்டப் போது களமுனைப் போராளிகளுக்காக சேமித்து வைத்திருந்த அரிசிகளைக் கொண்டு பட்டினியால் தவித்துக் கொண்டிருந்த மக்களுக்கு
தண்ணிரும் அரிசியும் கொண்ட கஞ்சியை சமைத்துக் கொடுக்கப்பட்டது.

நந்திக்கடலின் இருபுறமும் பெருந்திரளாக நோக்கிவந்த மக்களை கொத்துக்கொத்தாய் கொல்லப்பட்ட துயரம் ஒருபுறமும் மிச்சமிருக்கும் உயிரைக் காக்க மறுபுறமும் இடையில் பட்டினியால் தகித்துக் கொண்டிருந்த மக்களுக்கு தேவாமிர்தமாக இறுதிநாட்களில் இருந்தது தான் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி.

முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது ஒரு தமிழர்களின் குறியீட்டு உணவு. அதன் அடையாள வழி, எங்கள் மீது நிகழ்ந்தப்பட்ட கொடூர இனவழிப்பு நிகழ்வை, இனிவரும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உணர்த்த வேண்டும்.

ஈழத்தில் “மே 18” என்கிற உணர்வு விசேட உணவாக இருக்க வேண்டும். ஆண்டுக்கொரு முறை செய்யப்படுகிற அருமருந்தாக அது இருத்தல் வேண்டும். எல்லோரும் கூடுகிற இடங்கள் என்றில்லாமல், எங்கும்,எவரும், அந் நாளில் அதைச் செய்து உண்ண வேண்டும். அந்த நாளின் அடையாளமாக அது அன்றைய நாளின் வீட்டுணவாகவும் இருக்க வேண்டும்.

மே 18 – முள்ளிவாய்க்கால் கஞ்சி :

மிகக்குறைந்தளவிலான அரிசி, நெல், தண்ணீர் என்கிற இந்த மூன்று பொருட்களாலானதே முள்ளிவாய்க்கால் கஞ்சியாக போர்க்களத்தில் தயாரிக்கப்பட்டது.
முக்கியமாக உப்பு, பால் என்பவை அறவே அற்றவையானதாகவே முள்ளிவாய்க்கால் கஞ்சி இருக்க வேண்டும். அப்படித் தான் அது அன்றைய நாளில் இருந்தது. சுவையற்ற நீருணவு அது. ஒரு லீற்றர் தண்ணீரில் அதிகமாக நூறு கிராம் அரிசியைக் கொண்டதாக அது இருந்திருக்கலாம். அப்படித் தான் அது தயாரிக்கப்பட்டது.

உணவு என்பதற்கு மேலாக, அந்த நாளின் பெறுமதியும், அதன் நோக்கமும் புரியும் வகையில் அதை நாம் தயாரித்துப் பரிமாற வேண்டும்.
இதன் மூலமே ”முள்ளிவாய்க்கால் கஞ்சி” என்கிற வரலாற்று அடையாளத்தை நாம் பேணலாம்.

சோழர்களின் கூழ்வார்க்கும் விழா:

இந்தியாவில் காலனித்துவ ஆட்சியில் உருவாக்கப்பட்ட பட்டினிச் சாவுகள் எண்ணிலடங்காதவை. ஆங்கிலேயர்களும் உணவை ஓர் ஆயுதமாகவே பயன்படுத்தியதற்கும் சான்றுகள் பல உண்டு.

ஆங்கிலேய ஆட்சியின்போது திட்டமிட்டு உருவாக்கப்பட்டப் பெரும்பஞ்சத்திற்கு சோழமண்டல பகுதிகளில் பட்டினிச்சாவு தலைவிரித்தாடியது. அப்போது கம்பு-கேப்பை போன்ற தானியங்களை பயன்படுத்தி கூழாக மக்களுக்கு வழங்கப்பட்ட துயரத்தின் நீட்சியை பண்பாட்டு வழிநின்று ஆடிமாதங்களில் “கூழ்வார்க்கும் விழா” பல பகுதிகளில் நடந்துவருகிறது.

வரலாற்றில் மனித இனம் தோன்றியதிலிருந்து ஒரு இனம் மற்றொரு இனத்தை அழித்து, தனது தேவைகளுக்காக அவர்களின் சொத்துக்களை கவர்ந்து, அவர்களின் இடத்தை ஆக்கிரமித்து வாழ்ந்து வருவதானது இன்று வரையில் ஏதாவது ஒரு வடிவத்தில் தொடர்ந்து வருகிறது.

காலனித்துவ வரலாற்றின் கொடுமைகள் இன்னமும் ஏதோ ஓர் வகையில் தொடர்கிறது. இவையெல்லாம் மானுட தர்மம் நீதியற்று போயுள்ளதையே வரலாற்றின் துயரமாக பார்க்கலாம்.

கஞ்சியும் எதிர்கால தலைமுறையும்:

வரலாற்றின் வழி நின்று, இனப்படுகொலை நினைவேந்தல் நாட்களில் தமிழ்ச்சமூகம் நிச்சயமாக “முள்ளிவாய்க்கால் கஞ்சியை” தங்கள் வீடுகளில் செய்து நாம் நம் அடுத்த தலைமுறைகளுக்கு துயரம்தோய்ந்த நாட்களை நினைவுப்படுத்துவதோடு நின்றுவிடாமல் அந்த வலியையும் உணர்ந்துக் கொள்வதற்கும் உணவு பண்பாடு மூலம் இனவழிப்பின் குறியீடாகவும் இதனை செய்யவேண்டும்.

தாயக மண்ணில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் செயற்படுகின்றது.

தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை எமது உறவுகளுடன் பரிமாறி எமது இனம் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும் வலிகளையும் எமது இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை முன்னெடுப்பதே இதன் நோக்கமாக கருதப்படுகிறது.

போர்க்கால வாழ்வை மீள் நினைவுபடுத்தும் வகையில் எமது உறவுகளின் உயிர்காத்த அரிசியும், தண்ணீரும், உப்பும் கலந்தாக்கிய முள்ளிவாய்க்கால் கஞ்சியை 18 மே அன்று வீடுகளில் காய்ச்சிப் பருகுவதன் மூலம் அந்த நாட்களின் நினைவுகளை அடுத்த சந்ததியும் இந்த அழியாத நினைவுகளை மறவாதிருக்க வேண்டும்.

அரசின் திட்டமிட்ட உணவுத்தடை:

இறுதிப் போரில் சிங்கள அரசின் திட்டமிட்ட உணவுத்தடையும், பல மாத காலத் தொடர் யுத்தத்தினாலும் மக்கள் உணவின்றித் தவித்தனர். பலருக்கு ஒரு நேர உணவுகூட கிடைக்காமல் பட்டினிகிடந்தார்கள். குழந்தைகளுக்கான உலர் உணவிற்கு அலைந்தார்கள்.

அக் காலகட்டத்தில் போராளிகளிற்காக ஒதுக்கப்பட்ட உணவுப்பொருட்களை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மக்களுக்கு வழங்கியது. அக்காலகட்டத்திலேயே கஞ்சி வழங்கும் பணியும் தொடங்கப்பட்டது. இறுதிக் காலகட்டத்தில் சிறிய தொகை அரசியே இருந்தபடியால் அரிசியும் தவிடும் கலந்து உப்புமிட்டு முள்ளிவாய்க்கால்க் கஞ்சியாகக் கொடுக்கப்பட்டது.

அக்கஞ்சியைத் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பல இடங்களில் செய்து மக்களின் பசியை ஆற்றினார்கள். யுத்தம் முடிவுற்றுப் பல ஆண்டுகள் உருண்டோடிப் போனாலும் யுத்தம் தந்த வடுக்களை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது. இவ் யுத்தகால நினைவுகளில் மறக்கமுடியாதவற்றுள் ஒன்றாக விளங்குவது தான் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி.

பல இலட்சம் மக்கள் கஞ்சிக்காகக் காத்திருந்து தமது பசிப்பிணி போக்கிய வரலாறுகளும் உண்டு. இக் கஞ்சி உணவு அன்றைய நாட்களில் எமது மக்களின் வாழ்வோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்ததாகவே காணப்பட்டது. முள்ளிவாய்க்காலில் உணவுக்காகப் பட்ட அவலத்தையும், கஞ்சி உணவே எமது உறவுகளின் உயிரை தக்க வைத்தது என்பதையும் வெளிப்படுத்தும் முகமாகவும் அவற்றை எதிர்கால சந்ததியினருக்கும், இளைய தலைமுறையினருக்கும் தெரியப்படுத்தும் முகமாகவும் நினைவேந்தல் நாட்களில் கஞ்சி உணவை வழங்குவது வழமையாகும். மே 18 இன அழிப்பு நாளை நினைவு கூரும் போது முள்ளிவாய்க்கால் நிலத்தில் விடுதலைக்குப் போராடிய ஈழத்தமிழினம் பட்ட துன்பத்தையும் உலகத்தமிழினம் நினைவு கூருவது சாலத் தகுந்தது.

முள்ளிவாய்கால் கஞ்சியின் உணவு அடையாளம் என்பது, தாயக மண்ணின் வலிகளையும் வரலாறு சந்ததி மறவா சரித்திரமாக வேண்டும்.
இக்கஞ்சி உணவானது முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது எமது உறவுகள் உணவிற்காக பட்ட துன்பத்தை நாம் மட்டுமல்லாது எதிர்கால சந்ததியும், முழு உலகமும் அறிய வேண்டும்.

– நவீனன்

பதினாலாவது மே பதினெட்டு – நிலாந்தன்

எதற்காக தமிழ் மக்கள் உயிர்களை, உறுப்புகளை, சொத்துக்களை கல்வியை இன்னபிறவற்றைத் தியாகம் செய்தார்களோ,எதற்காக லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்களோ,காணாமல் ஆக்கப்பட்டார்களோ,அதற்குரிய நீதி தமிழ்மக்களுக்கு கிடைக்க வேண்டும்.எந்தப் போராட்டத்தின் பெயரால் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டார்களோ, அந்தப் போராட்டத்தின் பலன் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும்.எனவே நினைவுகூர்தல் எனப்படுவது தமிழ்மக்கள் போராடியதன் பலனை பெறுவதற்கான ஓர் அரசியல் செயற்பாடுதான். நீதிக்கான தமிழ்மக்களின் போராட்டத்தில் அதுவும் ஒரு பகுதிதான்.

நவீன தமிழ் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்,ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள், அதிக தொகை மக்கள் கொல்லப்பட்ட ஒரு காலகட்டத்தை நினைவு கூர்வதே முள்ளிவாய்க்கால் நினைவுகூர்தல் ஆகும். எனவே முழுத் தமிழ் வரலாற்றிலும் நவீன காலத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய படுகொலை என்ற அடிப்படையில் அந்த உணர்ச்சிப் புள்ளியில் முதலாவதாக, ஈழத்தமிழர்களை ஒரு தேசமாக திரட்டலாம்.இரண்டாவதாக,உலகெங்கிலும் பரந்துவாழும் தமிழர்களை இன அடிப்படையில் திரட்டலாம். அவ்வாறு திரட்டி அந்த கூட்டுத் துக்கத்தை, கூட்டுக் கோபத்தை, கூட்டு அரசியல் ஆக்க சக்தியாக மாற்றினால் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெறுவதற்கான உந்துவிசையாக அது அமையும். எனவே நினைவுகூர்தல் எனப்படுவது நீதிக்கான போராட்டத்தின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதி.

அதை அவ்வாறு வடிவமைக்க வேண்டும்.இப்பொழுது நடைமுறையில் உள்ள பொதுக் ஏற்பாட்டுக் குழுவானது ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒரு குறிப்பிட்ட நாளில் நிர்வகிக்கும் ஒரு கட்டமைப்பே தவிர அது மேற்சொன்ன அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு பொதுக் கட்டமைப்பு அல்ல.

கடந்த 14 ஆண்டுகளாக பொருத்தமான ஒரு பொறிமுறையை,பொருத்தமான ஒரு பொதுக் கட்டமைப்பை தமிழ் மக்கள் உருவாக்கவில்லை.காலம் ஆற்றாத துக்கம் என்று எதுவுமில்லை.கூட்டுத் துக்கத்தை உரிய பொறிமுறைக்கூடாக கூட்டு ஆக்கசக்தியாக மாற்றவில்லை என்றால் அது வெறும் துக்கமாகச் சுருங்கிவிடும்.எனவே ஒரு கூட்டுத் துக்கத்தை கூட்டு ஆக்கசக்தியாக மாற்றி,அதை நீதிக்கான போராட்டத்தின் ஊக்க சக்தியாக மாற்ற வேண்டும்.அதற்கு வேண்டிய பொறி முறையும் கட்டமைப்பும் உருவாக்கப்பட வேண்டும். இது முதலாவது.

இரண்டாவது, முள்ளிவாய்க்காலை நினைவு கூர்வது என்பது ஒரு யுத்த களத்தின் இறுதிக் கட்டத்தை நினைவு கூர்வதுதான். அந்த யுத்தகளத்தில் தமிழ் மக்களுக்கு தாமாக முன்வந்து தம் உயிர்களைக் கொடுத்தவர்கள்,உறுப்புகளை இழந்தவர்கள்,கல்வியை இன்னபிறவற்றை இழந்தவர்கள்,என்று ஆயிரக்கணக்கானவர்கள் உண்டு.போரில் நேரடியாக சம்பந்தப்படாமலேயே கொல்லப்பட்டவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களும் உண்டு. அவர்களனைவர்க்கும் உதவி தேவை.நிவாரணம் தேவை.ஆறுதல் தேவை.ஆனால் கடந்த 14 ஆண்டுகளில் எத்தனை பேருக்கு அவ்வாறான உதவிகள் கிடைத்திருக்கின்றன?

புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் குறிப்பிடத்தக்க அளவிற்கு உதவிகளை செய்கின்றது.ஆனால் அது ஒரு மையத்திலிருந்து திட்டமிடப்பட்ட,ஒரு மையத்தில் இருந்து வழங்கப்படுகின்ற உதவி அல்ல.கடந்த 14 ஆண்டுகளில் போரால் பாதிக்கப்பட்ட பலர் கைவிடப்பட்டிருக்கிறார்கள்.போரில் ஈடுபட்ட பலர் கைவிடப்பட்டிருக்கிறார்கள்,அல்லது அவமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இறுதிக்கட்டப் போரில் தமது குடும்பத்தின் உழைக்கும் நபரை அல்லது நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவரை அல்லது வருமான வழியை இழந்த பல குடும்பங்கள் உண்டு.அக்குடும்பங்கள் யாவும் கடந்த 14 ஆண்டுகளில் தேறி எழுந்து விட்டனவா இல்லையா என்று பார்க்க வேண்டும்.போரால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் வீட்டில் அல்லது ஒரு தியாகியின் வீட்டில் அல்லது காணாமல் ஆக்கப்பட்டவரின் வீட்டில் அடுப்பு எரியவில்லை என்றால்,முள்ளிவாய்க்காலில் ஏற்றப்படும் சுடர்களின் மகிமை குறைந்து விடும். எனவே போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு ஒரு பொருத்தமான பொறிமுறையும் அதற்கு வேண்டிய கட்டமைப்பும் தேவை.

புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடம் போதியளவு பணம் உண்டு.உதவுவதற்கு விருப்பமும் உண்டு.ஆனால் பொருத்தமான ஒரு பொறிமுறையை, பொருத்தமான ஒரு கட்டமைப்பை யார் உருவாக்குவது?கடந்த 14 ஆண்டுகளாக அவ்வாறான கட்டமைப்புகளை ஏன் உருவாக்க முடியவில்லை?

குறிப்பாக,முன்னாள் இயக்கத்தவர்களின் கதி என்னவென்று பார்க்க வேண்டும். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள். அல்லது நாட்டில் ஏதோ ஒரு விதத்தில் “செற்றில்ட்” ஆகிவிட்டார்கள்.ஆனால் இப்பொழுதும் செற்றில்ட் ஆகாத பல குடும்பங்கள் உண்டு.2009க்குப் பின் முன்னாள் இயக்கத்தவர்கள் மத்தியில் குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன.பிள்ளைகள் கைவிடப்பட்டுள்ளன.பெற்றோர் அனாதைகள் ஆகியிருக்கிறார்கள்.போரில் பட்ட காயத்தின் விளைவாக ஏற்பட்ட நோய்க்கு மருத்துவம் செய்யக் காசு இல்லாமல் தத்தளிக்கும் பலர் உண்டு.என்ன நோய் என்று தெரியாமலேயே இறந்து போன பலர் உண்டு. இவர்களுக்கெல்லாம் உதவ ஏதாவது கட்டமைப்பு இருக்கிறதா?இல்லையென்றால் யார் பொறுப்பு?

இலங்கைத் தீவிலேயே போரால் பாதிக்கப்பட்ட தரப்புக்களில் இப்பொழுதும் அதிகம் ஆபத்துக்கு உள்ளாகக்கூடிய ஒரு வகுப்பினராக(most vulnerable) காணப்படுவது முன்னாள் இயக்கத்தவர்கள்தான்.நாட்டின் சட்ட அமைப்பின்படி புனர்வாழ்வு ஒரு தண்டனை அல்ல என்பதனை கடந்த 14 ஆண்டு காலம் நிரூபித்திருக்கிறது.இந்நிலையில் மீண்டும் மீண்டும் ஒரே குற்றத்துக்காகத் தண்டிக்கப்படக்கூடிய ஒரு தரப்பாக முன்னாள் இயக்கத்தவர்கள் காணப்படுகிறார்கள்.அது தொடர்பாக நமது சட்டத்தரணிகள் என்ன செய்திருக்கிறார்கள்?தனிப்பட்ட வழக்குகளில் தோன்றி குறிப்பிட்ட முன்னாள் இயக்கத்தவரை விடுதலை செய்திருக்கிறார்கள் என்பது உண்மை.ஆனால் அதை ஒர் அரசியல் விவகாரமாக மாற்றி அதற்கு வேண்டிய சட்ட ஏற்பாடுகளைக் கொண்டு வர ஏன் ஒருவரும் முயற்சிக்கவில்லை?

அது மட்டுமல்ல,முன்னாள் இயக்கத்தவர்கள் புனர்வாழ்வின் பின் ஜனநாயக அரசியல் இறங்கினார்கள்.அவ்வாறு இறங்கியவர்கள் கூட்டமைப்ப,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதமிழ் மக்கள் தேசியக்கூட்டணி போன்றவற்றில் இணைந்து தேர்தல் கேட்டார்கள். துயரம் என்னவென்றால் ஒருவருமே தேர்தலில் பெறுமதியான வெற்றிகளைப் பெறவில்லை.துயிலுமில்லங்களில் தமிழ்மக்கள் விட்ட கண்ணீர் யாவும் எங்கே போய் சேருகின்றது? அதை யார் வாக்குகளாக மாற்றுகிறார்கள்?

“உன்னுடைய சமூகத்திற்காக நீ கல்வியைத் துறந்தாய், உறுப்புகளை இழந்தாய், உயிரைக் கொடுக்கச் சித்தமாக இருந்தாய், ஆனால் உனக்காக இந்தச் சனம் குறைந்தது உள்ளூராட்சி சபையில் ஒரு வட்டாரத்துக்கு தேவையான ஆயிரம் வாக்குகளைக் கூடத் தரவில்லையே? அப்படியென்றால் உன்னுடைய இறந்த காலத்துக்குப் பொருள் என்ன? ” என்று ஒரு முன்னாள் இயக்கத்தவரின் பிள்ளை கேட்டால், அதற்கு அந்த தகப்பன் அல்லது தாய் என்ன பதில் சொல்ல முடியும்? அதே கேள்விக்கு தமிழ் மக்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

முன்னாள் இயக்கத்தவர்கள் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் அவர்களை தடுப்பில் வைத்திருந்த தரப்பு அவர்களோடு உறவுகளைப் பேணும்.அது ஒரு யதார்த்தம்.அவ்வாறு பேணுவதன்மூலம் அரசாங்கம் இரண்டு விடயங்களைச் சாதிக்கலாம்,ஒன்று,அவர்களைக் கண்காணிக்கலாம்,இரண்டு,அவர்களோடு தொடர்ந்து தொடர்புகளைப் பேணினால்,அவர்களுடைய சொந்த மக்களே முன்னாள் இயக்கத்தவர்களை சந்தேகிப்பார்கள்.எதிரியின் ஆட்கள் என்று முத்திரை குத்துவார்கள்.எந்த சமூகத்துக்காக அவர்கள் போராடினார்களோ,அந்தச் சமூகமே அவர்களைப் புறமொதுக்கி,அவமதித்து விலகிச் செல்லும் ஒரு நிலையை ஏற்படுத்தலாம்.

கடந்த 14 ஆண்டுகளில் தமிழ்க் கட்சிகளே அவ்வாறு முன்னாள் இயக்கத்தவர்களைக் குற்றம்சாட்டி வருகின்றன.முன்னாள் இயக்கத்தவர்களில் ஒரு பகுதியினர் அவ்வாறு அரசு புலனாய்வுத் துறையோடு சேர்ந்து செயல்படக்கூடும்.ஆனால் அதற்காக எல்லாரும் அப்படியல்ல.கடந்த 14 ஆண்டுகளில் தேர்தலில் இறங்கிய முன்னாள் இயக்கத்தவர்களில் யாருமே பொருத்தமான வெற்றிகளை பெறாததற்கு என்ன காரணம் ?இந்த விடயத்தில் முன்னாள் இயக்கத்தவர்களின் கட்சியை அரச புலனாய்வுத் துறையின் ஆட்கள் என்று விமர்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் நின்று தேர்தல் கேட்டவர்களும் இதுவரை வெற்றி பெறவில்லை என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

எனவே இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது அவர்கள் கொல்லப்பட்ட யுத்த களத்தை நினைவு கூர்வதுதான்.அந்த யுத்த களத்தில் தமது சமூகத்துக்காகப் போராடியவர்களை அவர்களுடைய நோக்கு நிலையில் இருந்து புரிந்து கொள்ள முயற்சிப்பதும்தான். இது இரண்டாவது.

மூன்றாவது,இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது,அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நினைவுகளைக் கடத்துவது.நீதிக்கான தமிழ்மக்களின் போராட்டம் மேலும் நீண்ட காலத்துக்கு இழுபடலாம் அதுமட்டுமல்ல கடந்த 14 ஆண்டுகளில் தொழில்நுட்பப் பெருக்கம் காரணமாகவும்,தலைமைத்துவ வெற்றிடம் காரணமாகவும்,புதிதாக எழுந்து வரும் ஒரு தலைமுறை பெருமளவுக்கு அரசியல் நீக்கம் செய்யப்பட்டதாகவோ,அல்லது இலட்சிய நீக்கம் செய்யப்பட்டதாகவோ மாறிவருகின்றது.அந்தத் தலைமுறைக்கும், உலகெங்கிலும் புலம்பெயர்ந்து சிதறி வாழும் ஈழத்தமிழர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நினைவுகளைக் கடத்த வேண்டியிருக்கிறது. நினைவுகளின் தொடர்ச்சிக்குள் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. அதற்கு நினைவு கூர்தல் அவசியம். இது மூன்றாவது.

நாலாவதாக,நினைவு கூர்தல் எனப்படுவது,ஒரு கூட்டுச் சிகிச்சை போன்றது. துக்கத்தை கொட்டித் தீர்க்கும் நாளும், இடமும் அது.வெளிவழிய விடப்படாத துக்கம் உள்ளுக்குள் கிடந்து குமைந்து அடங்காத கோபமாக மாறிவிடும். அல்லது நோயாக மாறிவிடும்.எனவே உளவியல் அர்த்தத்திலும் பண்பாட்டு அர்த்தத்திலும் துக்கத்தை வெளிவழிய விடவேண்டும்.அந்த அடிப்படையில் நினைவு கூர்தல் என்பது ஒரு குணமாக்கல் செய்முறை.ஒரு பண்பாட்டுச் செய்முறை.

மேற்கண்ட நான்கு முக்கிய காரணங்களையும் முன்வைத்து நினைவு கூர்தலை ஒழுங்குபடுத்த வேண்டும்.ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக நினைவு கூர்தல் அவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றதா?அவ்வாறு ஒழுங்குபடுத்தப்படவில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பு?

இந்தக் கேள்வியை மறுவளமாகக் கேட்டால் தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு? என்றுதான் கேட்க வேண்டும்.ஏனென்றால் கடந்த 14 ஆண்டுகளாக தமிழ் மக்களின் அரசியல் எனப்படுவது கட்சி அரசியலாகத்தான் காணப்படுகின்றது. கொழும்பு அல்லது வெளித்தரப்புகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு பதில்வினை ஆற்றும் அரசியலாக தறுக்கணித்துப் போய்விட்டது.அது தேசத்தை கட்டியெழுப்பும் ஓர் அரசியல் அல்ல.

சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும், காணிப் பறிப்புக்கு எதிராகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டும் தமிழ்மக்கள் போராடுகிறார்கள்தான்.ஆனால் அவற்றில் பெரும்பாலானவை,எனது கடந்த வாரக் கட்டுரையில் கூறியது போல,பதில் வினையாற்றும்(reactive)நிகழ்வு மைய அரசியல்தான்(event oriented). அவை ஒரு தேசநிர்மாணத்துக்குரிய கட்டியெழுப்பும் (proactive) அரசியல் அல்ல.

ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியலில்தான் நினைவு கூர்தல், அதற்குரிய மகிமையோடும் அரசியல் அடர்த்தியோடும் அனுஷ்டிக்கப்படும்.அதற்குரிய பல்வகைமையோடு அனுஷ்டிக்கப்படும்.இல்லையென்றால் கட்சிகளாக பிரிந்திருக்கும் மக்கள் நினைவுகூர்தலை அதற்குரிய பெறுமதியுணர்ந்து அனுஷ்டிக்கப் போவதில்லை.மாறாக,அது ஒரு துக்க நிகழ்வாக,அல்லது செயலுக்குப் போகாத பிரகடனங்களை வாசிக்கும் ஒரு நிகழ்வாக,ஒரு சடங்காகச் சுருங்கிப் போய்விடும்.

இம்முறை,பல்கலைக்கழக மாணவர்கள் சமூகப்பங்களிப்போடு கஞ்சி காய்ச்சுவது ஒரு நல்ல முன்னுதாரணம்.அதேசமயம் கட்சிகளுக்கு எதிராக கருத்துக்களைக் கூறாமல் விட்டால் அதுவும் ஒரு நல்ல முன்னுதாரணம்.முள்ளிவாய்க்காலில் தாமாகத் திரளக்கூடிய மக்களை,கட்சிகளும் பொதுக்கட்டமைப்புகளும் மாணவர்களும் பிரிக்காமல் விட்டாலே போதும். இறந்தவர்களின் ஆத்மா இந்த ஒரு விடயத்திலாவது சாந்தி அடையும். ஏனெனில் மனநல மருத்துவ நிபுணர் சிவதாஸ் கூறுவதுபோல “நினைவுகூர்தல் எனப்படுவது காயங்களைக் குணப்படுத்துவது,காயங்களைக் கிளறுவது அல்ல”.

நிலாந்தன்

கையாலாகாத தமிழ்க் கட்சிகள்? – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எந்த இடத்தில் தவறிழைக்கின்றது? நிலாந்தன்

விசாக பௌர்ணமியன்று தையிட்டி விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் குறைவானவர்களே பங்குபற்றியிருக்கிறார்கள்.

அவர்களிலும் நான்கு பேர் காணி உரிமையாளர்கள். ஏனையவர்கள் அரசியல்வாதிகளும் கட்சித் தொண்டர்களும்.

அதே நாளில் இரவு யாழ்ப்பாணம் அரியகுளம் சந்தியில் அமைந்துள்ள நாக விகாரையில் இடம்பெற்ற வெசாக் அலங்காரங்களைப் பார்ப்பதற்கு தொகையாக வந்த தமிழ் மக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதே இரவு குடாநாட்டின் மற்றொரு தொங்கலில் வல்வெட்டித் துறையில் நடந்த இந்திர விழாவில் பங்குபற்ற ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டிருந்தார்கள். அங்கே இசை நிகழ்ச்சிகளும் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

வெசாக் தினத்திலன்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த இந்த மூன்று நிகழ்ச்சிகளையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது என்ன தெரியவருகிறது? சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகத் திரண்ட மக்களை விட சிங்கள பௌத்த விழா ஒன்றில் பெருந்திரளான தமிழ்மக்கள் பங்கு பற்றியிருக்கிறார்கள்.

அதைவிடப் பெருந்தொகையானவர்கள் ஒரு ஊரின் இந்திர விழாவில் பங்கு பற்றியிருக்கிறார்கள். அந்த ஊர் எதுவென்று பார்த்தால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிறந்த ஊரும், ஆயுதப் போராட்டத்தில் அதிக தொகை தியாகிகளைக் கொடுத்த ஊரும் ஆகும். இதுதான் யாழ்ப்பாணத்தின் ஆகப்பிந்திய மூன்று காட்சிகள்.

தையிட்டி விகாரைக்கு எதிராக குறைந்தளவு மக்களே திரண்டமைக்கு என்ன காரணம்? அந்த போராட்டத்திற்கான அழைப்பை தமிழ்த் தேசிய பேரவை என்ற ஒரு அமைப்பு விடுத்திருந்தது.

அதை ஒரு பொதுக் கட்டமைப்பு என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைக்கின்றது. அந்தப் பெயரை முன்னணி ஏற்கனவே பயன்படுத்தியுமிருக்கிறது. தமிழ் மக்கள் பேரவையிடமிருந்து அந்த அமைப்பை வித்தியாசப்படுத்துவதற்காக பெயரில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அந்தக் கட்டமைப்பின் அழைப்பை ஏற்று பொதுமக்கள் அங்கே திரண்டு வரவில்லை. அதற்கு யார் பொறுப்பு? அழைத்த கட்சி பொறுப்பா? அல்லது வராத மக்கள் பொறுப்பா?

கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் இடம் பெற்ற மக்கள் எழுச்சிகளை தொகுத்துப் பார்த்தால், ஒரு விடயம் தெளிவாகத் தெரியும். ஒரு கட்சி அழைத்த ஆர்ப்பாட்டங்களை விடவும், சிவில் சமூகங்களின் தலைமையில் பல கட்சிகள் அழைக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகளவு சனம் திரள்கிறது.

பொங்கு தமிழ், எழுக தமிழ், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணி என்று உதாரணங்களைக் கூறலாம்.

ஒரு கட்சி அழைக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு தொகையான மக்கள் வருவது என்றால், அந்தக் கட்சிக்கு கிராம மட்டத்தில் பரவலான கட்டமைப்புகள் இருக்க வேண்டும். முன்னணியிடம் மட்டுமல்ல வேறு யாரிடமும் அப்படிப்பட்ட கட்டமைப்புகள் இல்லை.

மிகக் குறுகிய கால அழைப்புக்குள் அவ்வளவு தொகை மக்களைத் திரட்ட முடியாது. அப்படித் திரட்டுவதென்றால் அந்தப் போராட்டத்திற்கான காரணம் மக்கள் மத்தியில் அதிகம் நொதிக்க வேண்டும். முன்னணி விவகாரத்தை பொலிஸாரோடு ஒரு மோதலாக மாற்றியது.

எனினும் மக்கள் மத்தியில் நொதிப்பு எதுவும் நிகழவில்லை. அதனால் மக்களும் அங்கே பெரியளவில் போகவில்லை. போராட்டத்தைத் தொடங்கிய அன்றிரவு முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சட்டத்தரணி ஒருவரும் மற்றொருவருமாக குறைந்த தொகையினர்தான் அங்கே காணப்பட்டார்கள். அடுத்த நாளும் வேறு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் உட்பட குறைந்தளவு எண்ணிக்கையானவர்களே அங்கே காணப்பட்டார்கள்.

அண்மை வாரங்களில் தமிழ்ப் பகுதிகளில் நடந்து வரும் சிங்கள பௌத்த மயமாக்களுக்கு எதிரான பெரும்பாலான போராட்டங்களில் குறைந்தளவு மக்கள்தான் கலந்து கொள்கிறார்கள்.

இதில் வவுனியாவில் நடந்த ஊர்வலத்தில் ஒப்பீட்டளவில் கூடுதலான தொகையினர் காணப்பட்டார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுங்குபடுத்திய வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியிலும் பெரிய அளவில் மக்கள் பங்களிக்கவில்லை.

அந்தப் பேரணியின் பின்னணியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான அமைப்பே காணப்பட்டது. அண்மை வாரங்களாக நடந்து வரும் பெரும்பாலான போராட்டங்கள் குறியீட்டு வகைப்பட்ட சிறு திரள் போராட்டங்கள்தான். அல்லது ஒரு நாள் கடையடைப்புகள்தான்.

அரசாங்கத்துக்கு நோகக்கூடிய போராட்டங்கள் அவையல்ல. உலக சமூகத்தை தம்மை நோக்கி ஈர்க்கத்தக்க சக்தி அவற்றுக்கு குறைவு. தமிழ் மக்கள் எதிர்க்கிறார்கள் என்ற ஒரு விடயத்தை  வெளிக் கொண்டு வந்தது மட்டும்தான் அவற்றுக்குள்ள முக்கியத்துவம்.

தையிட்டியிலும் அதே நிலைமைதான். தையிட்டி விகாரை விவகாரமானது முன்னணி தலையிட்ட பின் சூடு பிடித்தது. ஆனாலும் அதை அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் செல்ல முன்னணியால் முடியவில்லை. அது ஏறக்குறைய ஒரு கட்சிப் போராட்டம்தான்.

போராட்டம் தொடங்கிய மறு நாள் ஏனைய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அங்கே காணப்பட்டார்கள். ஆனால் அது “பிரசன்ற் மார்க்” பண்ணும் வேலை தான். அது ஒரு முழுமையான பங்களிப்பு அல்ல. அதன் பின் நடந்த போராட்டங்களில் ஏனைய கட்சிகள் முழுமனதோடு ஒத்துழைக்கவில்லை.

அவ்வாறு ஒத்துழைப்பு நல்கத்தக்க நல்லுறவை முன்னணி ஏனைய கட்சிகளோடு பேணவும் இல்லை. தன்னை ஒரு தூய தேசியவாத கட்சியாகக் காட்டிக் கொள்ளும் முன்னணி, ஏனைய கட்சிகளை ஒட்டுக்குழுக்கள், துரோகிகள், வெளிநாடுகளின் கைக்கூலிகள், ஏஜென்ட்கள் போன்ற வார்த்தைகளின் மூலம் விமர்சித்து வருகிறது.

அதனால் ஏனைய கட்சிகளோடு இணைந்து ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதில் அக்கட்சிக்கு நடைமுறையில் வரையறைகள் உண்டு.

அதற்காக ஏனைய கட்சிகள் பரிசுத்தம் என்றில்லை. கடந்த வாரத்துக்கு முதல் வாரம் நடந்த கடையடைப்பில் ஏனைய ஏழு கட்சிகள் ஒன்றாகத் திரண்டன.

ஆனால் அந்தத் திரட்சி விசுவாசமானது அல்ல. ஏனென்றால் தமிழரசுக் கட்சி தனது முன்னாள் பங்காளிக் கட்சிகளை ஒட்டுக்குழுக்கள் என்றும், போதைப்பொருள் வித்தவர்கள் என்றும், ராணுவச் சோதனைச் சாவடிகளில் முகமூடி அணிந்து தலையாட்டியவர்கள் என்றும்,கா ட்டிக் கொடுத்தவர்கள் என்றும் குற்றம் சாட்டியிருந்தது. எனினும் தேவை என்று வந்த பொழுது அந்தக் கட்சிகளும் தமிழரசுக் கட்சியும் ஒன்றாக திரண்டு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தன.

ஆனால் முன்னணி அவ்வாறான உறவுகளுக்குத் தயாரில்லை. எனவே ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அல்லது எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பது என்றால் ஏனைய கட்சிகளை நம்பி முன்னணி அதில் களமிறங்க முடியாது.

தமிழ் சிவில் சமூக மையத்தைத் தவிர ஏனைய, குடிமக்கள் சமூகங்கள் மத்தியிலும் முன்னணிக்கு பெரிய வரவேற்பு இல்லை. குறிப்பாக பொதுக் கட்டமைப்புகளைக் குறித்து அண்மையில் ஓர் ஊடகத்துக்கு கஜேந்திரகுமார் வழங்கிய பேட்டியில் அவர் பெரும்பாலான பொதுக் கட்டமைப்புகளை நிராகரித்திருந்தார்.

அவற்றை புலம்பெயர்ந்த தமிழர்கள் இயக்குகிறார்கள், வெளிநாட்டு உளவு அமைப்புகள் இயக்குகின்றன என்ற பொருள் தரும் விதத்தில் அவருடைய பேட்டி அமைந்திருந்தது.

அதன்படி பொதுக்கட்டமைப்புகளையும் முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அதனால்தான் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்னரும், அன்னை பூபதியின் நினைவிடத்திலும் பொதுக்கட்டமைப்போடு முன்னணி முரண்பட்டது. இந்த மோதல்கள் வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலிலும் இடம்பெற வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் ஏற்கனவே ஒரு பொதுக் கட்டமைப்பு அந்த நினைவு கூர்தல் தொடர்பாக அறிக்கை விட்டிருக்கிறது.

இவ்வாறு நடைமுறையில் உள்ள பொதுக் கட்டமைப்புகளோடு முரண்படும் முன்னணியானது, எதிர்காலத்தில் பொதுக் கட்டமைப்புகளோடு இணைந்து மக்களை அணி திரட்டும் வாய்ப்புகளும் மங்கலாகவே தெரிகின்றன.

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் மக்களைத் திரட்ட முடியாமல் போனமை என்பது தனிய முன்னணியின் தோல்வி மட்டுமல்ல. அந்த விகாரை விடயத்தில் தொடக்கத்தில் இருந்தே மெத்தனமாக இருந்த, அல்லது வேறு உள்நோக்கங்களோடு அதை கண்டும்காணாமலும் விட்ட பிரதேச சபைத் தவிசாளர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்.

அப்பொழுது கூட்டமைப்பு இப்பொழுது தமிழரசுக் கட்சி. இதில் தமிழரசு கட்சிக்கும் குற்றப் பொறுப்பு உண்டு. கடந்த சில ஆண்டுகளாக விகாரை கட்டப்பட்டு வருவது எல்லாருக்குமே தெரியும். இந்த விடயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறிய பிரதேச சபை தவிசாளர் சுமந்திரனுக்கு நெருக்கமானவர் என்பது மேலதிக தகவல்.

விகாரை படிப்படியாக கட்டப்பட்டு 100 அடிவரை உயர்ந்த பின்தான் எல்லாருடைய கண்களுக்கும் தெரிந்தது என்பதே தமிழரசிகளின் கையலாகாத்தனம் தான்.

முன்னணி அதைத் தன் கையில் எடுத்து போராட்டத்தை மக்கள் மயப்படுத்த முடியாமல் போனதும் அக்கட்சியின் பலவீனம்தான். தையிட்டி விகாரை தனியார் காணியில் கட்டப்பட்டுள்ளது என்பது மட்டுமல்ல, தமிழ்க் கட்சிகளின் கையாலாகத்தனத்தின் மீதுந்தான் கட்டப்பட்டிருக்கிறது.

வசந்த முதலிகேயின் யாழ் விஜயம் – நிலாந்தன்.

கொழும்பு, புகையிரத நிலைய கழிப்பறையில் விடப்பட்ட குழந்தை, காலிமுகத்திடல் போராட்டத்தின் கூடாரங்களுக்குள் நடந்த ஒன்றின் விளைவு என கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் மஹிந்த கஹதகம கூறியுள்ளார்.

போராட்டத்தின்போது இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன என்றும்,போராட்டம் நடந்த பகுதியில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

அவர் அவ்வாறு கூறுவது தென்னிலங்கையில் இடம்பெற்ற தன்னெழுச்சிப் போராட்டங்களை பரிகசிப்பதற்காகத்தான். ஆனால் அவர் ஒரு பெரிய உண்மையை விழுங்கிவிட்டு கீழ்த்தரமான இந்த விமர்சனத்தை முன்வைக்கிறார்.

அப்பெரிய உண்மை என்னவென்றால், இலங்கைத்தீவின் இப்போதிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னெழுச்சிப் போராட்டங்களின் குழந்தைதான் என்பது. போராட்டங்கள் இல்லையென்றால் ரணிலுக்கு இந்தப் பதவி கிடைத்திருக்காது.

தன்னெழுச்சிப் போராட்டங்களின் விளைவாக ஏற்பட்ட தலைமைத்துவ வெற்றிடத்தில் ரணில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.ஆனால் அவர்தான் தன்னெழுச்சி போராட்டங்களை நசுக்கினார். அதாவது அரசியல் அர்த்தத்தில் அவர் ஒரு தாயைத் தின்னி.

அவர் அவ்வாறு தன்னெழுச்சிப் போராட்டங்கள் நசுக்கப்பட்டபோது வசந்த முதலிகே-அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதானி- பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பல மாதங்களின் பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.தன்னெழுச்சிப் போராட்டங்களின் பிரதானிகளில் ஒருவராக அவர் பார்க்கப்படுகிறார். தன்னெழுச்சிப் போராட்டங்களுக்காக ஒப்பீட்ளவில் அதிகம் தண்டிக்கப்பட்டவர்களில் ஒருவராகவும் அவர் காணப்படுகிறார்.

அண்மையில் அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார்.பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து தமது போராட்டத்திற்கு ஆதரவைக் கேட்பதே அவருடைய வருகையின் நோக்கம்.

சந்திப்பின்போது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உரையாடியிருக்கிறார்கள். ஆனால் வசந்த முதலிகே குழுவினர் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக யாழ் பல்கலைக்கழகத்தை எப்படி தங்களோடு இணைத்துக் கொள்ளலாம் என்பதில்தான் அதிகம் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.

இலங்கை முழுவதிலும் உள்ள 100 நகரங்களில் தாங்கள் போராட இருப்பதாகவும், அப் போராட்டங்களில் தமிழ் மாணவர்களும் இணைய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

தமிழ் மாணவர்கள் முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளை அவர்களே தென்னிலங்கைக்கு வந்து மக்களுக்கு கூற வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்கள். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை தாங்கள் செய்து தருவதாகவும் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் சில நாட்களுக்கு முன் வசந்த முதலிகே பிபிசிக்கு வழங்கிய போட்டியில் யாழ்.பல்கலைக்கழகம் அவ்வாறு பத்து அம்சக் கோரிக்கையைக் கையளிக்கவில்லை என்று கூறயிருக்கிறார்.

பிபிசி இதுதொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடம் கேட்டிருக்கின்றது. வசந்த முதலிகே அணியிடம் தாங்கள் முன்வைத்த 10அம்ச கோரிக்கைகளை மாணவ அமைப்பின் கடிதத் தலைப்பில் எழுதிக் கொடுக்கவில்லை என்ற போதிலும் அவற்றை முன்வைத்தே தாங்கள் உரையாடியதாக யாழ். பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் கூறுகிறார்கள்.

சந்திப்பின்போது தாங்கள் எதைக் கதைத்தார்களோ அதையே கதைக்கவில்லை என்று கூறுபவர்களோடு எப்படிச் சேர்ந்து போராடுவது ? என்ற சந்தேகம் தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உண்டு.

தென்னிலங்கையில் நடந்த தென்னெழுச்சி போராட்டங்கள் அதாவது இலங்கைத்தீவில் நடந்த நான்காவது பெரிய போராட்டம் ஒன்று நசுக்கப்பட்ட பின் தென்னிலங்கையில் இருந்து வடக்கை நோக்கி வந்த ஆகப் பிந்திய அழைப்பு அது.

அரசாங்கத்துக்கு எதிராகப் போராட வருமாறு தெற்கு வடக்கை அழைக்கின்றது. அந்த அழைப்புக்கு தமிழ் மாணவர்கள் கொடுத்த பதிலை மேலே கண்டோம்.

தமிழ் மக்கள் அப்படித்தான் பதில் கூற முடியும் என்பதைத்தான் வசந்த முதலிகே யாழ்ப்பாணம் வந்து போன சில நாட்களின் பின் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார தெரிவித்த கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாகத் தீர்வை வழங்க முடியாது என்று அநுரகுமார கூறியிருக்கிறார்.

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு 13ஆவது திருத்தத்தின் ஊடாக – மாகாண சபைகளின் ஊடாக தீர்வைப் பெற முடியும் என நீங்கள் நம்புகிறீர்களா என்ற கேள்விக்கு பதலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசமைப்பின் ஊடாகவே தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அனுரகுமார கூறுவதின்படி 13ஆவது திருத்தம் ஒரு தீர்வு இல்லை என்றால் அதைவிடப் பெரிய தீர்வை அவர் மனதில் வைத்திருக்கிறாரா? என்று கேள்வி எழும்.

நிச்சயமாக இல்லை.அவர்கள் 13ஐ எதிர்ப்பது ஏனென்றால் மாகாண சபைகளை தமிழ் மக்களுக்குக் கொடுக்கக் கூடாது என்பதற்காகத்தான்.

ஏற்கனவே வடக்கு-கிழக்கு இணைப்பை ஒரு நீதிமன்றத் தீர்ப்பின்மூலம் இல்லாமல் செய்த கட்சி ஜேவிபி என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

ஜேவிபி 13 எதிர்ப்பதற்கு மேற்கண்ட காரணத்தை விட மற்றொரு காரணமும் உண்டு அது என்னவெனில், 13ஆவது திருத்தம் இந்தியா பெற்றெடுத்த குழந்தை என்பதால்தான். அதாவது இந்திய எதிர்ப்பு.

ஜேவிபி தமிழ் மக்களின் சுயநிர்ணைய உரிமையை ஏற்றுக் கொள்ளவில்லை. சமஸ்ரியை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு தீர்வாக ஏற்றுக் கொள்ளவும் தயாரில்லை.ஜேவிபி மட்டுமல்ல தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததாக நம்பப்படும் முன்னிலை சோசியலிசக் கட்சியின் பிரதானியான குமார் குணரட்னமும் அப்படித்தான் கூறுகிறார்.

தமிழ் மக்களுக்கு சமஸ்டியை ஒரு தீர்வாக முன்வைக்க அவர்கள் தயாரில்லை. அவ்வாறு சமஸ்டியை ஒரு தீர்வாக முன் வைப்பதன் மூலம் சிங்கள பௌத்த வாக்குகளை இழப்பதற்கு அவர்கள் தயாரில்லை. இதுதான் பிரச்சினை.

இலங்கைத் தீவில் நிகழ்ந்த, உலகின் கவனத்தை மிகக் குறுகிய காலத்துக்குள் ஈர்த்த, படைப்புத்திறன் பொருந்திய ஓர் அறவழிப் போராட்டம் நசுக்கப்பட்ட பின்னரும், தென்னிலங்கையின் நிலைப்பாடு அப்படித்தான் காணப்படுகிறது.

தமிழ்ப் பகுதிகளில் ஒருபுறம் நிலப்பறிப்பு தொடர்கிறது.இன்னொரு புறம் பௌத்தமயமாக்கல் தொடர்கிறது.மட்டக்களப்பில் மைலத்தனை மேய்ச்சல் தரைகள் தொடர்ந்தும் அபகரிக்கப்படுகின்றன.

நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அங்கே ஆக்கிரமிப்பு நடக்கின்றது.தமிழ்மக்களின் கால்நடைகள் இரவில் இனம் தெரியாத நபர்களால் கொல்லப்படுகின்றன.இன்னொருபுறம் திருகோணமலையில் கன்னியா வெந்நீர் ஊற்று, குருந்தூர் மலை, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை போன்றவற்றில் பௌத்தமயமாக்கல் தொடர்கிறது. குருந்தூர் மலையில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போதே நாட்டின் தளபதி சவீந்திர டி சில்வா 100பிக்குகளோடு நாவற்குளிக்கு வந்திருக்கிறார். அங்கே கட்டப்பட்டிருக்கும் விகாரைக்கு கலசத்தை வைப்பது அவர்களுடைய நோக்கம் என்று கூறப்படுகிறது.

ஆனையிறவில், கண்டி வீதியில், தட்டுவன் கொட்டிச் சந்தியில், கரைச்சி பிரதேச சபை இலங்கைத்தீவின் மிக உயரமான நடராஜர் சிலையை கட்டியெழுப்பிய பின் தளபதி சவேந்திர டி சில்வா நாவற்குழிக்கு வருகை தந்திருக்கிறார்.

அதாவது அரசின் அனுசரணையோடு ராணுவ மயப்பட்ட ஒரு மரபுரிமை ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில் தமிழ்மக்கள் அதற்கு எதிராகப் போராடும்போது அவர்களோடு வசந்த முதலிகே வந்து நிற்பாரா? ஜேவிபி வந்து நிக்குமா? சஜித் வந்து நிற்பாரா? அல்லது குறைந்தபட்சம் யாழ்ப்பாணத்தில் தன்னெழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவாக சுலோக அட்டைகளைத் தாங்கியபடி சந்திகளில் நிற்கின்ற இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த மிகச் சிறிய கட்சிகள் வந்து நிற்குமா?

இல்லை. அவர்கள் வர மாட்டார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டம் அவர்களைத் தீண்டியதால் அவர்கள் தமிழ் மக்களை நோக்கி வருகிறார்கள். ஆனால் பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் இனப்பிரச்சினைதான் என்பதனை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இனப் பிரச்சினையை தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே தமிழ்மக்கள் அவர்களோடு எந்த அடிப்படையில் இணைந்து போராடுவது?

அதே சமயம் வசந்த முதலிகேயின் யாழ் விஜயம் வெற்றி பெறவில்லை என்பது ரணிலுக்கு ஆறுதலானது. தனக்கு எதிராகத் தமிழ் மக்களை எதிர்க்கட்சிகளால் அணி திரட்ட முடியாது என்பது அவருக்கு ஒரு விதத்தில் ஆறுதலான விடயம். தங்களுக்கிடையே ஒற்றுமைப்பட முடியாதிருக்கும் எதிர்க்கட்சிகள் தமிழ் மக்களையும் இணைக்கமுடியாமல் இருப்பது என்பது அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஆறுதலான ஒரு விடயம்தான்.

மேலும் வசந்த முதலிகே யாழ்ப்பாணம் வந்து போன காலத்தையொட்டி கிண்ணியா வெந்நீரூற்று விவகாரம் மீண்டும் சூடாகி இருக்கிறது. நெடுந்தீவு வெடியரசன் கோட்டை விவகாரமும் ஊடகங்களில் சூடான செய்தியாக இருக்கிறது.

இவை தற்செயலானவைகளா? அல்லது வேண்டுமென்று திட்டமிட்டு செய்யப்படுகின்றவையா?என்று ஒரு நண்பர் கேட்டார். ஏனெனில் இது போன்ற தொல்லியல் ஆக்கிரமிப்புக்களை இப்பொழுது ஏன் தீவிரப் படுத்தவேண்டும்? அதுவும் ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னணியில், அதைவிடக் குறிப்பாக வசந்த முதலிகே யாழ்ப்பாணத்துக்கு வந்துபோன ஒரு பின்னணியில், அரசாங்கம் அவ்வாறு நடந்து கொள்வதன் பின்னணி என்னவாக இருக்கும்? என்று மேற்சொன்ன நண்பர் கேட்டார்.அவருடைய கேள்வி நியாயமானது.

தமிழ் மக்களை எதிர்நிலைக்கு தள்ளிவிட்டால்,அவர்கள் வசந்த முதலிகேயோடு இணைய மாட்டார்கள். தங்களோடு சேர்ந்து போராட வா என்று கேட்பார்கள். அதை வசந்த முதலிகே செய்ய மாட்டர். ஜேவிபி செய்யாது.

எனவே ஒருபுறம் தமிழ் மக்களின் கவனத்தைப் புதிய பிரச்சினைகளின் மீது திசை திருப்பி விடலாம். இன்னொருபுறம் தென்னிலங்கையின் தன்னெழுச்சிப் போராட்டங்கள் வடக்குடன் இணைவதைத் தடுக்கலாம்.

அதாவது தொகுத்துக்கூறின் தனக்கு எதிரான சக்திகள் ஒன்று திரள்வதை ரணில் கெட்டித்தனமாகத் தடுத்துவருகிறார்.

அவ்வாறு அரசாங்கத்துக்கு எதிரான ஒரு பலமான கூட்டு ஜனவசியம் மிக்க தலைமையின் கீழ் உருவாகவில்லையென்றால் அரசாங்கம் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பொருட்படுத்தாது.

பொருளாதாரத்தை ஒப்பீட்டளவில் சரி செய்யும்வரை அரசாங்கம் உள்ளூராட்சிசபைத் தேர்தலை ஒத்திவைத்துக் கொண்டேயிருக்கும்.

ஆனையிறவில் ஆடும் சிவன் – நிலாந்தன்.

யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் ஆனையிறவுக்கு அருகே,கண்டி வீதியில் தட்டுவன்கொட்டிச் சந்தியில் ஒரு நடராஜர் சிலை நிறு வப்பட்டிருக்கிறது. கரைசிப்பிரதேச சபையின் ஒழுங்கமைப்பில் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியோடு 27 அடி உயரமான அந்தச் சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.இலங்கைத்தீவில் உள்ள மிக உயரமான நடராஜர் சிலை அதுவென்று கூறலாம்.

2009க்கு பின் ஆனையிறவுப் பிரதேசம் யுத்த வெற்றிவாதத்தின் உல்லாசத் தலங்களில் ஒன்றாக மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் பண்பாட்டு தலைநகரமாகிய கவர்ச்சிமிகு யாழ்ப்பாணத்துக்குள் நுழையும் எவரும் முதலில் ஆனையிறவில் அமைக்கப்பட்டிருக்கும் இரண்டு யுத்த வெற்றி வளாகங்களைக் கடந்துதான் உள்ளேவர வேண்டும்.அதாவது யுத்த வெற்றி உங்களை வரவேற்கிறது என்று பொருள்.இது எங்களால் வெற்றி கொள்ளப்பட்ட நிலம் என்று பொருள்.

யாழ்ப்பாணத்துக்குள் நுழையும் பொழுது குடாநாட்டின் கழுத்துப் பகுதியில் முதலில் தென்படுவது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தோல்வியுற்ற படை நடவடிக்கை ஒன்றின்போது பயன்படுத்தப்பட்ட உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஒரு கவச வாகனம். அதற்கருகில் அந்தக் கவச வாகனத்தை தடுத்து நிறுத்திய படை வீரர் ஒருவரின் நினைவுச் சின்னம்.அதோடு சேர்த்து ஒரு விருந்தகம்.அதைச் சற்றுத் தாண்டிச் சென்றால் வலது பக்கத்தில் கடலேரியின் பின்னணியில் பிரம்மாண்டமான ஒரு யுத்த வெற்றிச்சின்னம் உண்டு.இலங்கைத்தீவை இரண்டு கைகள் ஏந்தியிருப்பது போன்ற அந்த யுத்த வெற்றிச் சின்னந்தான் யாழ்ப்பாணத்துக்குள் நுழையும் வெளியாட்களை வரவேற்கின்றது. அதாவது யுத்த வெற்றி உங்களை வரவேற்கிறது என்று பொருள்.

இவ்வாறு கடலேரியின் உப்புக் காற்றில் எப்பொழுதும் யுத்த வெற்றி வாடை வீசும் ஒரு பிரதேசத்தில்,தமிழ் மக்களின் வழிபாட்டுருக்களில் ஒன்றாகிய நடராஜர் சிலையை நிறுவியமை என்பது அரசியல் அர்த்தத்தில் கவனிக்கப்பட வேண்டியது.

அச்சிலையின் அழகியல் அம்சங்களைக் குறித்தும் அது பார்த்த உடனேயே கையெடுத்துக் கும்பிடக்கூடிய ஒரு சிலையாக இருக்கிறதா இல்லையா என்பதைக் குறித்தும் பின்னர் தனியாக ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறேன்.இன்று இக்கட்டுரையில் நான் கூறவருவது அச் சிலைக்குப் பின்னால் இருக்கும் பிரதேச,பிராந்திய மற்றும் கட்சி அரசியலைப் பற்றி.

நாவற்குழிச் சந்தியை போலவே ஆனையிறவிலும் அதாவது யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் தமிழ் மக்களை அடையாளப்படுத்தும் கட்டுமானங்கள் அவசியம்.அரசாங்கம் அதைத் திட்டமிட்டு யுத்தவெற்றி வாசலாகக் கட்டியெழுப்பி வைத்திருக்கிறது.தமிழ்மக்கள் அதனை ஒரு மரபுரிமை வாசலாக மாற்ற வேண்டும்.அந்த அடிப்படையில் சிந்தித்து கரைச்சி பிரதேச சபை முடிவெடுத்திருந்திருந்தால் அது வரவேற்கத்தக்கதே.

நாவற்குழியில் ஒரு புத்த விகாரை கட்டியெழுப்பப்பட்டுவரும் ஒரு நிலக்காட்சியில்,சிவபூமி அறக்கட்டளையின் அருங்காட்சியகமும் திருவாசக அரண்மனையும் கட்டப்பட்டிருப்பதுபோல,ஆனையிறவிலும் யுத்தவெற்றி வாசலை எதிர்நோக்கி ஒரு மரபுரிமை வாசலை சிருஷ்டிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு.

ஆனால் அந்த மரபுரிமைக் கட்டமைப்பானது எப்படி அமைய வேண்டும்?அது சிங்கள பௌத்த சின்னங்களுக்கு எதிராக சைவச் சின்னங்களை முன் நிறுத்தும் ஒன்றாக அமைய வேண்டுமா? அல்லது தமிழ்த் தேசியத்தின் மதப்பல்வகைமையை பிரதிபலிக்கும் ஒன்றாக அமைய வேண்டுமா?

சிவபூமி அறக்கட்டளை ஒரு சமய நிறுவனம்.அது தான் போற்றும் ஒரு சமயத்தை முன்னிறுத்தும்.ஆனால் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் அப்படிச் சிந்திக்கத் தேவையில்லை.மேலும் பொதுவெளிச் சிற்பம் வேறு,மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் விக்கிரகம் வேறு.இரண்டையும் ஒன்றாகக் கண்டு மயங்கும் பொதுப்புத்தியை அரசியல்வாதிகள் இலகுவாகக் கையாள்வார்கள்.

பிரயோக தேசியவாதமும் நடைமுறையில் பொதுப்புத்தியின் மீதே கட்டியெழுப்பப்படுகிறது. ஆனால்,தேசியவாதத்தின் உள்ளடக்கம் ஜனநாயகமாக இருக்க வேண்டும் என்று மேற்கத்திய அறிஞர்கள் கூறுவார்கள்.அதாவது ஜனநாயக அடிச்சட்டத்தின் மீதுதான் ஒரு மக்களைத் திரளாகக் கூட்டிக் கட்டவேண்டும்.இதை இன்னும் ஆழமாக சொன்னால், ஒருவர் மற்றவருக்கு சமம் என்ற அடிப்படையில் மக்களைத் திரட்டவேண்டும்.இதை இன்னும் நடைமுறை வார்த்தைகளில் சொன்னால், ஒரு மதம் இன்னொரு மதத்திற்கு சமம்; ஒரு பிரதேசம் இன்னொரு பிரதேசத்துக்கு சமம் யாரும் பிரதேச ரீதியாகவோ சாதி ரீதியாகவோ மத ரீதியாகவோ ஒருவர் மற்றவருக்கு மேலானவரும் அல்ல கீழானவரும் அல்ல என்ற அடித்தளத்தின் மீதுதான் ஒரு மக்களைத் திரளாகக் கூட்டிக்கட்ட வேண்டும்.எனவே தேசியவாதம் எனப்படுவது மதப்பல்வகைமையின் மீதே கட்டியெழுப்பப்பட வேண்டும்.மத மேலாண்மையின் மீது அல்ல.இந்த அடிப்படையில் சிந்தித்து தமிழ்மக்கள் தமது மரபுரிமைச் சின்னங்களை பாதுகாக்கவும் முன்நிறுத்தவும் வேண்டும்.

ஒவ்வொரு மதப்பிரிவும் அதனதன் மதச்சின்னங்களை முன்னிறுத்துவதில் தவறில்லை.அது அந்த மதத்தின் கூட்டுரிமை. ஆனால் ஒரு மதம் இன்னொரு மதத்தை அவமதிக்கும்போது அல்லது அந்த மதச் சின்னங்களை அழிக்கும்போது அல்லது ஒரு மதத்தின் மேலாண்மையை நிறுவ முற்படும் போதுதான் பிரச்சினை வருகிறது.அதாவது மதப்பல்வகைமை வேறு ;மத மேலாண்மை வேறு.

அண்மை ஆண்டுகளாக தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பிலும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் இந்திய மத்திய அரசை அணுகுவதற்கு மதத்தை ஒரு வாகனமாக பயன்படுத்த முயற்சிப்பது தெரிகிறது.இதில் சில தமிழ் அரசியல்வாதிகளும் அடங்குவர்.இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மதசார்பு நிலைப்பாட்டைப் பின்பற்றி அதன்மூலம் இந்திய மத்திய அரசாங்கத்தை அணுக முடியுமா என்று மேற்படி தரப்புக்கள் சிந்திக்கின்றன.பாரதிய ஜனதா அரசாங்கமானது இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று.எனவே ஈழத் தமிழர்கள் அந்த அரசாங்கத்தைத்தான் அணுக வேண்டும்.ஆனால் அதன் பொருள் இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் பாரதிய ஜனதா பின்பற்றும் அதே நிகழ்ச்சி நிரலை ஈழத் தமிழர்களும் பின்பற்ற வேண்டும் என்றில்லை.
இப்பிராந்தியம் இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துட் காணப்படுகிறது.இந்தியாவை மீறி எந்த ஒரு வெளிச்சக்தியும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு தீர்வைத் தரமுடியாது.இப்பிராந்திய யதார்த்தத்துக்கூடாக சிந்திக்கும்போது ஈழத்தமிழர்கள் பாரதிய ஜனதா அரசாங்கத்தைத்தான் அணுகவேண்டும்.ஆனால் அதன் பொருள் தமிழ் தேசியத்தின் மதப்பல்வமையை பலியிட வேண்டும் என்பதல்ல.

ஈழத்தமிழர்களின் நவீன அரசியல் எனப்படுவது மதப்பல்வகமையின் மீதே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.பெருமளவு இந்துக்களைக் கொண்ட ஈழத் தமிழ்ச் சமூகத்தில் முதலில் தோன்றிய இளையோர் அமைப்பாகிய யாழ்ப்பாண வாலிபர் முன்னணியை உருவாக்கியது(1924) ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவராகிய கன்டி பேரின்பநாயகந்தான்.

தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்டபோது, அதன் கால்கோல் விழா 1949ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி மாவட்டபுரம் கந்தசாமி கோவில் முன்றலில் சீலஸ்ரீ துரைசாமிக் குருக்களின் ஆசியுடன் இடம் பெற்றது.இதுதொடர்பான தகவல்களை தமிழரசுக் கட்சியின் வெள்ளி விழா மலரில் காணலாம்.அக்கட்சியின் தலைவராகிய செல்வநாயகம் ஒரு புரட்டஸ்தாந்துக் கிறிஸ்தவர்.செல்வநாயகத்தை ஈழத்தமிழர்கள் தந்தை என்றும் ஈழத்துக் காந்தி என்றும் அழைத்தார்கள். தந்தை செல்வா இறந்தபோது அவருடைய உடல் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்படவில்லை. இந்து முறைப்படி வேட்டி அணிவிக்கப்பட்டு,தகனம் செய்யப்பட்டது.தன்னைத் தலைவராக தெரிந்தெடுத்து,தந்தை என்று அழைத்த பெரும்பான்மை இந்து வாக்காளர்களை கௌரவிப்பதற்காக செல்வநாயகம் அவ்வாறு கேட்டுக் கொண்டதாக கருதப்படுகிறது.

எனவே ஈழத்தமிழர்களின் நவீன அரசியலானது மதப் பல்வகமையின் மீதுதான் கட்டியெழுப்பப்பட்டது.அதை இப்பொழுது ஒரு மதத்துக்கு மட்டும் உரியதாக குறுக்கக் கூடாது.குறிப்பாக நவீன யாழ்ப்பாணம் எனப்படுவது திருச்சபைகளுக்கும் ஆறுமுகநாவலர் போன்ற மதப் பெரியார்கள் மற்றும் இந்துபோர்ட் போன்ற இந்து அறக்கட்டளைகளுக்கும் இடையிலான போட்டியின் திரண்ட விளைவுதான்.ஆனால் அந்தப் போட்டியானது மத விரோதமாக,மோதலாக மாறவில்லை.

ஆனால்,2009க்குப் பின் எந்த ஒரு மதத் தலைவரும் துணிந்து கதையாத ஒரு வெற்றிடத்தில், ஒற்றைக் குரலாக ஒலித்த, முன்னாள் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களுடைய அதே மறை மாவட்டத்தில் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையிலான முரண்பாடு தூக்கலாகத் தெரிவது தமிழ்த் தேசியத் திரட்சிக்குப் பாதகமானது. தமிழ்த் தேசியத்தை மதப்பல்வகைமையின் மீது கட்டியெழுப்ப விரும்பும் எல்லாச் சக்திகளும் அந்த முரண்பாட்டைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.

அவ்வாறு அகமுரண்பாடுகளைத் தீர்க்கும் சக்திமிக்க சிவில் அமைப்புகளோ கட்சிகளோ இல்லாத அரசியல் மற்றும் ஆன்மீக வெற்றிடத்தில்,இன்னொருபுறம்,சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் “எல்லைக் கற்களாக” புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வருமோர் ராணுவஅரசியற் சூழலில்,தமிழ் மக்கள் மத்தியிலும் இரவோடிரவாகச் சிலைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன.இவ்வாறான சிலை அரசியலின் பின்னணியில்,ஆனையிறவில் நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

சிவ நடனத்துக்கு ஆன்மீக வியாக்கியானம் மட்டுமல்ல,பௌதீகவியல் வியாக்கியானமும் உண்டு.அது ஒரு பிரபஞ்ச நடனம் என்று வர்ணிக்கப்படுகிறது(cosmic dance).ஆனையிறவுச் சிவனுக்கு மேலதிகமாக ஓர் அரசியல் பரிமாணமும் உண்டு.உப்புக் காற்றில் யுத்த வெற்றிச் சின்னங்களின் மத்தியில்,சிவனார் யாருடைய பஜனைக்கு ஆடப்போகிறார்?

பேரரசுகள் தேடிவரும் ஒரு நாட்டைவிட்டு, மூளைசாலிகளின் வெளியேறம் தொடர்கிறது! நிலாந்தன்!

இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.மேலும்,நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன கூறியுள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் மின்சார சபையின் 72 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர்களில் 22 பேர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை வழமையாக நடத்துவதற்கு 123 பொறியியலாளர்கள் பணியாற்ற வேண்டும், ஆனால் இன்று 100 பேரே பணிபுரிவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், இந்த பொறியியலாளர்கள் பற்றாக்குறையால், வருங்காலத்தில் ஆலையை நிறுத்த வேண்டிய நிலைகூட ஏற்படலாம் என்றும், அப்படி நடந்தால், மின் நெருக்கடி கடுமையாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க பின்வருமாறு கூறியுள்ளார்…..“இந்த மாதத்தில் மாத்திரம் 50 முதல் 60 வரையிலான அரச வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். குறிப்பாக, சில வைத்தியர்கள் விடுமுறை பெறாமல் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இருப்பினும், நாட்டை விட்டு வெளியேறியுள்ள மருத்துவ நிபுணர்களின் பெயர் விபரங்களும் எண்ணிக்கையும் சுகாதார அமைச்சினால் இதுவரையில் வெளியிடப்படவில்லை.எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவலுக்கு அமைவாக மொத்தமாக 1,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன”…

“அதேவேளை, கிராம மட்ட அரச வைத்தியசாலைகள் மற்றும் நகர்ப்புற வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் வெளியேற்றத்தால் வைத்தியசாலை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.எனினும்,கொழும்பு தேசிய வைத்தியசாலை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை போன்றன இதுவரை மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்படவில்லை….மேலும், அங்கு விசேட வைத்திய நிபுணர்கள் வைத்தியசாலையில் காணப்பட்ட போதிலும், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தொழில் நிமித்தம் சென்றுள்ளனர்.அதேவேளை,அதிகளவிலான வைத்திய ஆலோசகர்களும் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்” என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க கூறுகிறார்.

மேற்கண்ட இரண்டு செய்திகளும் நமக்கு எதை உணர்த்துகின்றன? படித்தவர்கள்,மூளைசாலிகள்,உள்நாட்டில் நன்றாக உழைக்கக் கூடியவர்கள் நாட்டை விட்டு வெளியேறத்தொடங்கி விட்டார்கள்.ஏனென்றால் முன்னரைப் போல அவர்களுக்கு உழைப்பு இல்லை. இது ஒரு காரணம்.பொருளாதார நெருக்கடியின் விளைவு இது.அதைவிட மேலதிகமான ஒரு காரணம், அதிகரித்த வரி.அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட தொகைக்குமேல் உழைப்பவர்களிடம் அதிகரித்த வரியை அளவிடத் தொடங்கியுள்ளது.

அதனால் நாட்டை விட்டு மூளைசாலிகள் வெளியேறத் தொடங்கி விட்டார்கள். ஏற்கனவே தமிழர்கள் புலம்பெயர்ந்து வருகிறார்கள்.முதலில் போர் ஒரு காரணம். இப்பொழுது பொருளாதார நெருக்கடி ஒரு காரணம். அதோடு சேர்த்து ஏற்கனவே புலம்பெயர்ந்தவர்கள் பொருளாதார ரீதியாக வெற்றி பெற்று விட்டார்கள் என்ற ஒரு முன்னுதாரணம் அவர்கள் முன் நிற்கிறது.அதுவும் 2009க்கு பின்னரான புலப்பெயர்ச்சிக்கு ஒரு காரணம்.

அரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு நாட்டை விட்டு வெளியேறுபவர்களை வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.ஆனால் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கான அவருடைய நடவடிக்கைகள், வெளியேறும் சிங்கள மக்களைத் தடுக்குமளவுக்கு இல்லை. மாறாக வெளியேற்றத்தை அது ஊக்குவிக்கிறது என்றும் சொல்லலாம்.

ஒற்றை யானையாக ராஜபக்சக்களின் நாடாளுமன்றத்துக்குள் வந்தபோது, தனது முதலாவது உரையிலேயே அவர் சொன்னார், பன்னாட்டு நாணய நிதியத்திடம் போங்கள் என்று.அன்றிலிருந்து இன்று வரையிலும் அதைத்தான் சொல்கிறார்.ஐ.எம்.எப்பின் உதவி கிடைத்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்ற ஒரு மாயையை அவர் கட்டியெழுப்புகின்றார்.அவர் மேற்கத்திய பாரம்பரியத்தில் வந்த ஒரு தலைவர். எனவே பன்நாட்டு நாணய நிதியத்திடம் போனால் அது ஒரு சர்வரோக நிவாரணமாக அமையும் என்று அவர் நம்புகிறாரோ இல்லையோ மக்களை நம்ப வைக்க முற்படுகிறார். அண்மையில் கண்டியில் அவர் ஆற்றிய உரையில் அதைக் காணலாம். பன்னாட்டு நாணய நிதியத்தின் 15 நிபந்தனைகளை நிறைவேற்றியது பற்றி அந்த உரையில் அவர் கூறுகிறார்.

பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் அரசாங்கம் வரிகளை அதிகரித்தல் ,மானியங்களை வெட்டுதல்,அல்லது இல்லாமல் செய்தல்,,தனியார் மயப்படுத்தல் ,அதாவது,.நட்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்றல்,அரசுத்துறையில் ஆட்குறைப்புச் செய்தல்….போன்ற நிபந்தனைகளுக்கு உடன்படவேண்டும். கடந்த சில மாதங்களாக ரணில் விக்கிரமசிங்க அதைத்தான் செய்து வருகிறார்

அதன் விளைவாக படித்த நடுத்தர வர்க்கம் நாட்டை விட்டுக் கிளம்பத் தொடங்கிவிட்டது.ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியை என்னிடம் கேட்டார்… “இந்த மருத்துவர்களும் பொறியியலாளர்களும் சற் ஸ்கோரில் முன்னிலையில் நின்றபடியால் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றார்கள். அதாவது இலவசக் கல்வியின் வரப்பிரசாதங்களை அனுபவித்து அதில் வெற்றி பெற்ற பின் இப்பொழுது நாட்டை விட்டு செல்கிறார்கள்.ஆனால் இவர்களோடு போட்டியிட்டு நிராகரிக்கப்பட்டவர்கள் நாட்டிலேயே நிற்கிறார்கள்” என்று. நான் அவரிடம் சொன்னேன் அதற்கு அவர்கள் முழுப் பொறுப்பு அல்ல. நமது கல்வி முறைதான் பொறுப்பு. இலவசக் கல்வி என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் நடைமுறையில் தேசியமட்டப் பரீட்சைகளை பொறுத்தவரை, அது முதலாவதாக போட்டிக்கல்வியாகவே காணப்படுகிறது.போட்டிப் பரீட்சைகளில் சித்தி பெறுவதற்காக பிள்ளைகள் தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கி செல்கிறார்கள்.போட்டிக்கல்வியானது இலவசக் கல்வியின் மகத்துவங்களை பெருமளவுக்கு தோற்கடித்து விட்டது.

பரிட்சையில்,போட்டியில் வெல்ல வேண்டும்,அதிகளவு சற் ஸ்கோரைப் பெற வேண்டுமென்றால், இலவசக் கல்வியில் மட்டும் தங்கியிருக்க முடியாது. எனவே போட்டிப் பரீட்சையானது மாணவர்களை பந்தயக்குதிரைகளாக மாற்றுகிறது. பந்தயத்தில் முந்தியோடும் குதிரை சித்தி பெறுகின்றது.எனவே பந்தயக் குதிரையின் மனோநிலையை பாடசாலை பிள்ளைகள் மத்தியில் உருவாக்கி விட்டு,இலவசக் கல்வியின் மகத்துவங்களை பற்றி பேசிக்கொண்டிருக்க முடியாது.பந்தயத்தில் முந்திய பிள்ளை மருத்துவராகவும் பொறியாளராகவும் வருகிறது.

போட்டி மனப்பான்மையானது உழைப்பையும் போட்டி ஆக்குகின்றது. போட்டி போட்டுக் கொண்டு உழைப்பவர்கள் அதிக வரி கட்ட வேண்டி வரும் போது நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.அல்லது நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கும் பொழுது அதிக வருமானத்தை வேண்டி நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.அவர்கள் பெற்ற கல்வியும் அவர்களுடைய சமூக அந்தஸ்தும் அவர்கள் இலகுவாக புலம்பெயர்வதற்குரிய தகமைகளாகக் காணப்படுகின்றன.எனவே இங்கு பிரச்சனை போட்டிக்கல்வி உருவாக்கிய பந்திய குதிரை மனோநிலை தான்.

இவ்வாறு படித்தவர்கள் பட்டம் பெற்றவர்கள் ஒருபுறம் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.ஏற்கனவே தமிழ்மக்கள் மத்தியில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியினர் வெளியேறிவிட்டார்கள்.இப்பொழுது சிங்கள மக்கள் மத்தியில் வெளியேற்றம் அதிகரித்திருக்கிறது.

ஆனால் இவ்வாறு படித்த நடுத்தர வர்க்கம் வெளியேறிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில்தான் நாட்டை நோக்கி அமெரிக்க போர் விமானங்கள் வருகை தந்தன.அதில் வந்தது யார்? ஏன் வந்தார்கள் போன்ற விவரங்கள் பெருமளவுக்கு ரகசியங்களாக பேணப்படுகின்றன.அமெரிக்கர்கள் மட்டும் வரவில்லை, சில மாதங்களுக்கு முன்பு இந்திய உளவுத்துறை பொறுப்பாளரும் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகரும் ரகசியமாக வந்து போனதாக செய்திகள் வெளி வந்தன. படித்த நடுத்தர வர்க்கம் வெளியேறிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டை நோக்கி பேரரசுகள் வருகின்றன.ஏற்கனவே சீனா வந்துவிட்டது. அம்பாந்தோட்டையில் இருந்து சீனாவை அகற்ற 90 ஆண்டுகளுக்கு குறையாமல் காத்திருக்க வேண்டும். கொழும்பு துறைமுகத்துக்கு அருகே சீனா கட்டிய பட்டணமும் நிரந்தரமானது.

அதாவது பேரரசுகள் இந்த நாட்டின் கேந்திர முக்கியத்துவம் கருதி இச்சிறிய நாட்டில் எங்கோ ஓரிடத்தில் தமது கால்களை ஊன்றிக்கொள்ள விளைகின்றன.ஆனால் பரிதாபத்துக்குரிய இந்த நாட்டிலிருந்து படித்தவர்களும் மூளை உழைப்பாளிகளுக்கு எப்படி வெளியேறுவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்;கடவுச்சீட்டு அலுவலகத்தின் முன் வரிசைகளில் காத்து நிற்கிறார்கள்.

கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டுமென்பது ஒட்டுமொத்த தமிழினத்தின் கோரிக்கை – சுரேந்திரன்

தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் சர்வதேச நீதிப்பொறிமுறை மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் ஒற்றுமை மிக அவசியமாகிறது. அது தான் நம்முடைய அரசியல் பலமாகவும் இருக்க முடியும். பிராந்திய வல்லரசாக இருக்கட்டும். சர்வதேச நாடுகளாக இருக்கட்டும் அனைவரும் தமிழ் தேசிய பரப்பில் இருக்கும் அனைவரும் ஒன்று பட்டே இருக்க வேண்டும் என்றே கோருகின்றார்கள். அது நியாயமான கோரிக்கையும் கூட என தெரிவித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளரானா குருசாமி சுரேந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த வழியில் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு பலமான தேசிய இயக்கமாக பலப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். ஞாயிறு தினக்குரலுக்கு  (19.02.2023)வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கேள்வி-1.
உள்ளுராட்சி தேர்தலில் தமிழரசு கட்சி தனித்து போட்டியிட தீர்மானித்த நிலையில் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளான ரோலோ மற்றும் புளோட் திடீரென மற்றும் கட்சிகளையும் கூட்டமைத்து தேர்தலில் எவ்வாறு விரைவாக போட்டியிட முடிந்ததன் பின்னணியென்ன?

பதில்
கடந்த காலங்களில் தமிழ்த் தேசியப் பரப்பில் செயலாற்றும் அனைத்து கட்சிகளும் ஒருமித்து செயலாற்றி வந்தோம். அப்படியான அனைவரையும் உள்வாங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பலமான கட்டமைப்பாக வரையறுத்து பொது சின்னத்தின் கீழ் பதிய வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாக அமைந்திருந்தது. இது எங்களுடைய கோரிக்கை மாத்திரமல்ல, ஒட்டுமொத்த தமிழினத்தின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் ஒரு கட்சி உள்ளூராட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக முடிவெடுத்தபொழுது, எம்மோடு ஒருமித்து செயலாற்றும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாக பயணிக்க முடிந்தது. தொடர்ச்சியாக கடந்த இரண்டு வருடமாக ஒருமித்து செயலாற்றியதன் பின்னணியே தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்திக் கொண்டு செல்வதற்கு காரணமாக அமைந்தது.

கேள்வி-2
தமிழ் கட்சிகளின் ஐக்கியமின்மை தமிழர்களுக்கு பாதகமென விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது குறித்து உங்கள் கருத்தென?

பதில்
நமது அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் இந்த ஒற்றுமையின்மை என்பது பெரிய தாக்கத்தை செலுத்துகிறது. தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் சர்வதேச நீதிப் பொறிமுறை மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் ஒற்றுமை மிக அவசியமாகிறது. அதுதான் நம்முடைய அரசியல் பலமாகவும் இருக்க முடியும். பிராந்திய வல்லரசாக இருக்கட்டும், சர்வதேச நாடுகளாக இருக்கட்டும், ஐக்கிய நாடுகள் சபையாக இருக்கட்டும், நமது மக்களாக இருக்கட்டும் அனைவரும் தமிழ் தேசிய பரப்பில் இருக்கும் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே கோருகிறார்கள். அது நியாயமான கோரிக்கையும் கூட. குறிப்பாக தென்னிலங்கை தரப்புக்கள் தமிழ் தரப்புகளை ஒன்றாக இணைந்து வருமாறு நையாண்டித்தனமான கோரிக்கையை கடந்த காலங்களில் முன் வைத்தனர். இது நீடிக்குமானால் தமிழ் மக்களின் அரசியல் இலக்குகளை அடைவது சிரமமானதாகிவிடும்.

கேள்வி- 3
உங்களது கூட்டமைப்பு மக்கள் மத்தியில் எவ்வாறான நிலைப்பாட்டுடன் செல்லப் போகின்றது?

பதில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பானது எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த வழியில் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு பலமான தேசிய இயக்கமாக பலப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் கூறி வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களையும் மக்கள் நடத்தி வந்துள்ளனர். அதற்கு செவி சாய்த்து நாங்கள் தொடர்ந்து கூட்டமைப்பை பலமான கட்டமைப்பாக முன்னெடுத்துச் செல்கிறோம். தேர்தல் நோக்கங்களை தாண்டி இது தமிழ் மக்களினுடைய பொது தேசிய இயக்கமாக பரிமாணம் அடைய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இந்த நோக்கத்தை மக்களிடம் எடுத்துச் செல்வோம். அதை மக்கள் நிச்சயம் அங்கீகரிப்பார்கள்.

கேள்வி-4
அண்மையில் யாழ் வந்த இந்திய இணையமைச்சரிடம் உங்கள் கூட்டிலுள்ள கட்சி தலைவர்கள் இந்திய பிரதமரை சந்திக்க வாய்ப்பு கேட்டமைக்கு காரணம் என்ன?

பதில்
கடந்த காலங்களில் இந்திய அரசினால் உத்தியோபூர்வமாக முன்வைக்கப்பட்ட அழைப்புக்கள் தமிழ்த் தரப்பால் சரியான முறையில் கையாளப் பட்டு இருக்கவில்லை. இந்திய அரசு தமிழ் மக்களுடன் கொண்டிருக்கும் அரசியல் உறவில் சில எதிர்மறையான அதிர்வலைகளை இது ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தமிழ் மக்கள் இனப் பிரச்சினையில் இந்திய பங்களிப்பு மிக அவசியமானது. நமது மக்களின் அரசியல் தீர்வுக்கான ஒரு பொறிமுறையை நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். அதில் இந்தியாவினுடைய தலைமையை வலியுறுத்தியுள்ளோம். இது எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தான் இந்த கோரிக்கையை நாங்கள் முன் வைத்தோம்.

கேள்வி-5
அரசாங்கம் வலி.வடக்கில் காணி விடுவித்துள்ளதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்
கடந்த ஜனாதிபதி தேர்தலிலே அனைத்து ஜனாதிபதி வேட்பாளரிடமும் நாம் பல கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம். ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியான பின்னர் அவரை நேரடியாக சந்தித்தும் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அரசியல் தீர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி சகல கட்சிகளையும் அழைத்த பொழுதும் நாம் அதில் சில கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம். அதற்கு பிரதானமானது காணி விடுவிப்பு கோரிக்கை. அதை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி முன் வந்துள்ளார். ஆனால் விடுவிக்கப்பட்ட காணிகள் மிகக்குறைவானவை. இன்னும் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் விடுவிக்கப்பட இருக்கின்றன. இது மாத்திரம் போதாது. மற்ற காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

கேள்வி-6
தற்போது வெளிநாட்டு தூதுவர்களை உங்கள் அணியினர் சந்தித்து எவ்வாறான விடங்களை பேசுகின்றீர்கள்?

பதில்
நமது தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ள சர்வதேச நீதிப் பொறிமுறை, அரசியல் தீர்வு மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பவற்றிற்கான சர்வதேசத்தின் உறுதியான ஆதரவை பெற்றுக் கொள்ளவே அவர்களோடு நாங்கள் பேசுகிறோம். மாறிவரும் அரசியல் பொருளாதார சூழ்நிலைகளில் தொடர்ந்தும் சர்வதேச ஆதரவு தமிழ் மக்கள் பக்கம் அல்லது நமது மக்களின் நியாயமான கோரிக்கைகளின் பக்கம் இருக்க வேண்டும் என்பதே எங்கள் பேச்சுப் பொருளாக அமைகிறது.

13 இலிருந்து கீழிறங்கும் ரணில்-அகிலன்

அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாக ஜனாதிபதி ரணில் அறிவித்திருக்கும் பின்னணியில் தென்னிலங்கை மீண்டும் போராட்ட களமாகியிருக்கின்றது. பிரதான அரசியல் கட்சிகள் எதுவும் இப்போது இந்தப் போராட்டத்தில் இறங்கவில்லை. பிக்குகளின் அமைப்புக்களே இப்போது வீதிக்கு இறங்கியிருக்கின்றன. பின்னணியில் பிரதான கட்சிகள், குறிப்பாக அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் இருக்கலாம்.

கடந்த வருடத்தில் முழுமையாக நாட்டை முடக்கிவைத்த பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படையான காரணிகளில் ஒன்று இனநெருக்கடி. இது உணா்த்தப்பட்டிருக்கும் நிலையில்தான் அதற்கு நிரந்தரமான ஒரு தீா்வு காணப்பட வேண்டும் என சா்வதேசம் அழுத்தம் கொடுத்தது. இந்தியாவையும் இவ்விடயத்தில் திருப்திப்படுத்த வேண்டிய தேவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருந்தது.

இந்தப் பின்னணியில்தான் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்ற முடிவை ரணில் எடுத்திருந்தாா். ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதுதான் தவறு. ஆனால் இங்கு நடைமுறைப்படுத்த முற்படுவதற்கு எதிரான போராட்டங்களை காணமுடிகின்றது.

சுதந்திர தினத்துக்கு முன்னதாக தீா்வு காணப்படும் என டிசெம்பா் மாதத்தில் ஜனாதிபதி அறிவித்திருந்தாா். பின்னா் சுதந்திரதினத்துக்கு முன்னதாக தீா்வு குறித்து அறிவிப்பதாகத் தெரிவித்தாா். இப்போது, புதன்கிழமை பாராளுமன்றத்தில் அவா் நிகழ்த்திய உரையில் தன்னுடைய பாதை எவ்வாறானதாக இருக்கப்போகின்றது என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றாா். ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வை வழங்கி இனப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று இதன்போது தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ் அதிகாரம் பகிரப்படாது என்றும் கூறியுள்ளார்.

ஆக, பிக்குகளும், இனவாதிகளும் கொடுத்த மிரட்டலுக்கு அஞ்சி தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து ரணில் கீழிறங்குவதற்குத் தயாராகிவிட்டாா் என்பதன் அறிகுறிதான் பொலிஸ் அதிகாரம் குறித்த அவரது அறிவிப்பு. பிக்குகளின் போராட்டம் தொடா்ந்தால் ஏனையவற்றிலிருந்தும் அவா் கீழிறங்கலாம்!

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பொலிஸ், காணி அதிகாரங்கள்தான் முக்கியமானவை. திட்டமிட்ட வகையிலான காணி அபகரிப்புத்தான் தமிழ் மக்கள் எதிா்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. தமிழ் மக்களுடைய பாரம்பரிய பிரதேசங்கள் இதனால் பறிபோவதுடன், இவை சிங்கள மயமாவதற்கும் காணி அதிகாரங்கள் எம்மிடம் இல்லாமலிருப்பதுதான் காரணம். அதனால்தான், காணி அதிகாரம் மாகாண சபைகளுக்குத் தேவை என்பதற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

அதேபோல, தமிழ்ப் பகுதிகளில் பணிபுரியும் பொலிஸ் அதிகாரிகள் அனைவருமே சிங்களத்தில்தான் கதைப்பாா்க்கள். போக்குவரத்துப் பொலிஸாா்கூட, தமிழ் மக்களுடன் சிங்களத்தில் பேசுவதையும், தமிழ் மக்களை இரண்டாம்தரப் பிரஜைகள் போல நடத்துவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைவிட, வடக்கு கிழக்கில் இடம்பெற்ற பல்வேறு குழப்பங்களுக்கும் சிங்களப் பொலிஸாரின் அத்துமீறல்கள்தான் காரணமாக இருந்திருக்கின்றது. பொலிஸ் அதிகாரம் எம்மிடம் இருக்க வேண்டும் என தமிழ்த் தரப்பினா் வலியுறுத்துவதற்கு இவைதான் காரணம்.

ஆனால், பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கையை மீட்பதற்கு முற்பட்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, சிங்களவா்களின் சீற்றத்துக்கு உள்ளாகாமல், தமிழ் மக்களையும் சமாளிப்பதற்கு முற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. அதனால்தான், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என தமிழ்த் தரப்புக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கும் வாக்களித்த ஜனாதிபதி இப்போது பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதற்கு பின்னடிக்கின்றாா்.

13 குறித்து ஜனாதிபதி அறிவித்தமைக்கு சில காரணங்கள் இருந்தன. தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆறு இணைந்து இந்தியப் பிரதமருக்கு கடந்த வருடத்தில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தன. அதில் முக்கியமாக 13 முழுமையாக நடைமுறைப்படுததப்பட வேண்டும் எனவும், அதற்கான அழுத்தங்களை இந்தியா கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்தியாவும் இது தொடா்பான அழுத்தங்களை ரணிலுக்குக் கொடுத்திருந்தது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்குத் தேவையான உதவிகளை வழங்கிய இந்தியாவிடமிருந்து தொடா்ந்தும் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு, இந்தியாவைத் திருப்திப்படுத்த வேண்டிய தேவை ரணிலுக்கு இருந்தது. 13 தொடா்பாக ரணில் வெளியிட்ட அறிவிப்புக்களுக்கு இவைதான் காரணம்.

கோட்டா கோ ஹோம் போராட்டத்துக்குப் பின்னா் வீடுகளுக்குள் தலைமறைவாக இருந்த விமல் வீரவன்ச, உதய கம்பன்பில, சரத் வீரசேகர போன்ற சிங்கள மக்களின் மீட்பா்களாக தம்மைக் காட்டிக்கொள்பவா்கள் மீண்டும் களத்தில் இறங்குவதற்கு ரணிலின் 13 குறித்த அறிவிப்பை பயன்படுத்திக்கொள்கின்றாா்கள். அறிக்கைகளை வெளியிடுவதற்கு மேலாக வீதிகளில் இறங்குவதற்கு இன்னும் அவா்கள் துணியவில்லை என்பதையும் அவதானிக்க முடிகின்றது.

அதேவேளையில் பிரதான அரசியல் கட்சிகள் எதுவும் ரணிலின் இந்த 13 குறித்த நகா்வுக்கு எதிராக போா்க்கொடி துாக்குவதற்குத் தயாராகவில்லை. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 13 க்கு உட்பட்டதாக தீா்வொன்றைக் கொண்டுவருவதற்கு தாம் தயாராகவில்லை என்ற நிலைப்பாட்டைத்தான் வெளிப்படுத்தியிருந்தாா்கள். அதேபோல பாராளுமன்றத்தில் பலம்வாய்ந்த கட்சியாக இருக்கும் பொதுஜன பெரமுன இதற்கு எதிராகச் செயற்படப்போவதில்லை என ஏற்கனவே உறுதியளித்திருக்கின்றது. அதன் தலைவா் மகிந்த ராஜபக்ஷ இதனை ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தாா்.

இதனைவிட மற்றொரு திருப்பமாக, இவ்வளவு காலமும் மாகாண சபை முறையையும், 13 ஆவது திருத்தத்தையும் எதிா்த்துவந்த ஜே.வி.பி. மாகாண சபைகளுக்கான அதிகாரப் பரவலாக்கலை தாம் எதிா்க்கப்போவதில்லை என்பதை பகிரங்கமாகவே அறிவித்திருக்கின்றது. தமிழ் மக்கள் இதன்மூலமாக தமது பிரச்சினைகளுக்குத் தீா்வு கிடைக்கும் எனக் கருதுவதால் அதனை தாம் எதிா்க்கப்போவதில்லை என அதன் தலைவா் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருக்கின்றாா்.

ஆக, 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் எதிா்ப்புக்கள் இருக்கப்போவதில்லை என்பதை கட்சிகளின் இந்த நிலைப்பாடு உணா்த்துகின்றது.

உதிரிகளாகவுள்ள சிங்கள அரசியல்வாதிகள் சிலரும், பிக்குகளும்தான் இப்போது 13 க்கு எதிராக போா்க்கொடி துாக்கியிருக்கின்றாா்கள். ஆனால், இவ்விடயத்திலும் பிக்குகள் மத்தியில் பிளவுகள் காணப்படுகின்றது. கடந்த வாரம் யாழ்ப்பாணம் வந்திருந்த பிக்குகளின் குழு ஒன்று, அங்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும், சா்வ மதங்களின் தலைவா்களையும் சந்தித்தாா்கள். இதன்போதும் 13 குறித்துதான் முக்கியமாகப் பேசப்பட்டது. அதிகபட்சமான அதிகாரப்பரவலாக்கல் மூலமாக இனநெருக்கடிக்குத் தீா்வு காணப்பட வேண்டும் என்ற கருத்தை அவா்கள் இந்த சந்திப்புக்களின் பின்னா் ஊடகங்களுக்குத் தெரிவித்தாா்கள்.

இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், குறிப்பிட்ட பிக்குகள் 13 பிளஸ் என்பதை யாழ்ப்பாணத்தில் வந்து சொல்கின்றாா்களே தவிர, அதனை கண்டிக்குச் சென்று மகாநாயக்கா்களிடம் சொல்வதற்குத் துணிவதாகத் தெரியவில்லை. அதேபோல தென்னிலங்கையிலும் இதற்கான போராட்டம் ஒன்றை நடத்துவதற்கும் அஞ்சும் நிலையில்தான் அவா்கள் இருக்கின்றாா்கள். யாழ்ப்பாணத்தில் அவா்கள் மேற்கொண்ட சந்திப்புக்கள், அதன்பின்னா் அவா்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு தமிழ்ப் பத்திரிகைகள்தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளனவே தவிர, சிங்கள ஆங்கில ஊடகங்கள் அவை தொடா்பாக அலட்டிக்கொள்ளவே இல்லை.

பிரதான அரசியல் கட்சிகள் மௌனமாக இருந்தாலும் பிக்குகள் மூலமாக 13 க்கு எதிரான உணா்வுகள் சிங்களவா்கள் மத்தியில் பரப்பப்படுவதை உணர முடிகின்றது. 1987 இல் இலங்கை – இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோதும், இது போன்ற போராட்டங்கள் பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டது. ஜே.ஆா்.ஜெயவா்த்தன அதனை இராணுவத்தைப் பயன்படுத்தி அடக்கினாா். அதன்மூலமாகவே பின்னா் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

பண்டா – செல்வா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோதுகூட இதேபோன்ற போராட்டங்கள் பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டது. பிக்குகள் அரசியலில் செல்வாக்குச் செலுத்தக்கூடியவா்களாக மாற்றமடைந்தது அதன்போதுதான். இந்த எதிா்ப்புக்களுக்கு முகங்கொடுக்க முடியாத பண்டாரநாயக்க பின்னா் அந்த உடன்படிக்கையை கிளித்தெறிந்தாா் என்பது வரலாறு. ஆனால், அதேகாரணத்துக்காக பின்னா் பண்டாரநாயக்க, பௌத்த பிக்கு ஒருவரால் பின்னா் சுட்டுக்கொல்லப்பட்டாா்.

பண்டா – செல்வா உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இனநெருக்கடிக்கான தீா்வு அப்போதே காணப்பட்டிருக்கும். பாரிய உயிரிழப்புக்களுக்கும், பொருளாதாரச் சீரழிவுகளுக்கும் காரணமாக இருந்த போரும் இடம்பெற்றிருக்காது. சிங்களத் தலைவா்கள் பிக்குகளின் இனவாதப்போராட்டங்களுக்கு அடிபணிந்ததன் விளைகளை நாடு அனுபவித்துவிட்டது. இதே வரலாறு மீண்டும் திரும்பப்போகின்றதா? என்பதுதான் தற்போது நடைபெறும் நிகழ்வுகளைப் பாா்க்கும் போது எமக்கு எழும்கேள்வி!

யாழ் கலாச்சார மையம் யாருடைய பொறுப்பில்? நிலாந்தன்.

கொழும்பில் ஆயிரக்கணக்கான பிக்குகள் திரண்டு 13வது திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். அத்திருத்தத்தின் பிரதியை நெருப்பில் கொளுத்தியிருக்கிறார்கள். 13 ஆவது திருத்தம் தொடர்பான ரணில் விக்கிரமசிங்காவின் நிலைப்பாட்டை வெளிப்படையாக முன்வைக்குமாறு கூறி அவருக்கு இரண்டு கிழமைகள் அவகாசம் கொடுத்திருக்கிறார்கள்.

ரணில் விக்கிரமசிங்க 13ஐ முழுமையாக அமல்படுத்த போவதில்லை. கடந்த புதன் கிழமை நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய கொள்கை விளக்க உரையில் அது தெரிகிறது. குறிப்பாக போலீஸ் அதிகாரம் தொடர்பில் அவர் தெளிவற்ற வார்த்தைகளில் கதைக்கிறார். இப்பொழுதுள்ள போலீஸ் நிர்வாக கட்டமைப்பின்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு டிஐஜி உண்டு. அதை மாற்றி ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு டிஐஜி என்று நியமிக்கப்போவதாக அவர் கூறியிருக்கிறார். இதுதொடர்பில் ஏற்கனவே செய்திகளில் தெரிவிக்கப்பட்டபடி, கொழும்பு மாநகரத்துக்கு ஒரு டிஐஜியும் 9 மாகாணங்களுக்கு ஒன்பது டிஐஜிக்களுமாக மொத்தம் பத்து டிஐஜிக்கள் நியமிக்கப்படுவார்கள்.ஆனால் இதைச்சொன்ன ரணில் அதன்பின் சொன்ன வார்த்தைகள்தான் இங்கே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. போலீஸ் அதிகாரத்தில் மாற்றம் இராது என்று அவர் கூறுகிறார். அதாவது இப்போது இருப்பதைப் போலவே போலீஸ் நிர்வாகம் மத்திய அரசுக்குக் கீட்பட்டதாகவே இருக்கும் என்று பொருளா?அப்படியெஎன்றால் மாகாணங்களுக்கு போலீஸ் அதிகாரம் கிடையாது. அதாவது ரணில் விக்ரமசிங்க கதைப்பது 13 மைனஸ் என்று எடுத்துக் கொள்ளலாமா?

அண்மையில் கொழும்புக்கு வந்து போன இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியபடி 13 ஆவது திருத்தம் தொடக்கத்தில் எப்படி இருந்ததோ அதை முழுமையாக அமல்படுத்தும் நோக்கம் ரணிலிடம் இல்லை என்று தெரிகிறது. பிக்குக்களின் ஆர்ப்பாட்டம் அவருக்கு ஒரு சாட்டு. அதைக் காட்டியே அவர் 13ஐ முழுமையாக அமுல்படுத்த முடியாது என்று கையை விரிக்கலாம். அவர் அப்படிக் கையை விரித்தால் இந்தியா என்ன செய்யும்? 13 ஆவது திருத்தத்துக்கூடாகத்தான் இலங்கை தீவின் இனப் பிரச்சினையில் தான் தலையிட முடியும் என்று இந்தியா கூறிவருகிறது. அங்குதான் தனக்கு சட்டப்படியான உரித்து உண்டு என்றும் இந்தியா வலியுறுத்துகின்றது. ஏனெனில் இந்திய உடன்படிக்கையின் பிரகாரம்தான் இந்தியா இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையில் தலையிடலாம் என்றும் இந்தியா கூறி வருகிறது. அப்படியென்றால், 13ஐ ரணில் முழுமையாக அமுல்படுத்த மாட்டார் என்றால் அவருக்கு எதிராக இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்குமா?

இல்லை. கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலான அனுபவங்களைத் தொகுத்துப் பார்த்தால் அவ்வாறு இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்கும் ஒரு ராஜதந்திரச் சூழல் இருப்பதாகத் தெரியவில்லை. 13ஆவது திருத்தம் என்பது இந்தியாவும் இலங்கையும் பெற்றெடுத்த குழந்தை.அது இந்திய-இலங்கை உடன்படிக்கையின் விளைவு.இந்திய-இலங்கை உடன்படிக்கையில் தமிழ் மக்கள் கையெழுத்திடவில்லை. எனவே 13ஐ முழுமையாக அமல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்க வேண்டியது அதன் பெற்றோரில் ஒருவராகிய இந்தியாதான்.ஆனால் கடந்த 35 ஆண்டுகளாக இந்தியா அதைச் செய்யவில்லை. 2009 க்கு முன்புவரை அவ்வாறு செய்வதற்கு யுத்தம் ஒரு தடை என்று கூறலாம். ஆனால் கடந்த 13 ஆண்டுகளாக அதை அமுல்படுத்தாமைக்கு இலங்கை மட்டுமல்ல,இந்தியாவும் பொறுப்புத்தான்.இதில் இந்தியா தனது கூட்டுப்பொறுப்பை நிறைவேற்றதே தவறியிருக்கிறது.அதன் விளைவாக 13ஆவது திருத்தம் எனப்படுவது இலங்கையில் இரண்டு இனங்களினாலும் கைவிடப்பட்ட ஓர் அனாதையாகும் நிலைதான் காணப்படுகிறது.

இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில், 13ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியா இலங்கை மீது நிர்ப்பந்தங்களை பிரயோகித்தால் தவிர கொழும்பு அதைச் செய்யாது. இலங்கை இப்பொழுது இந்தியாவிடம் கடன் பெற்றிருக்கிறது. ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடனான உறவைச் சுமூகமாக்க வேண்டியிருக்கிறது.எனவே இந்தியா,இந்த விடயத்தில் ரணில் விக்ரமசிங்கவின் மீது தனது செல்வாக்கைப் பிரயோகிக்க முடியும்.

ஆனால் நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த யாழ். கலாச்சார மையத்தைக் கையளிக்கும் நிகழ்வைத் தொகுத்துப் பார்த்தால் இந்தியா அவ்வாறு கொழும்பின் மீது நெருக்குதல்களைப் பிரயோகிக்கும் ஒரு நிலைமை உண்டா.என்ற கேள்வி வலிமையாக மேலெழுகிறது.

கலாச்சார மையத்தை கையளிக்கும் நிகழ்விற்கு பாரதிய ஜனதா கட்சியின் துணை அமைச்சர் ஒருவரும் கட்சியின் தமிழகத்திற்கான அமைப்பாளரும் யாழ்ப்பாணம் வருகை தந்திருக்கிறார்கள். கலாச்சார மையம் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் பல மாதங்களாக திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு இந்திய வெளி விவகார அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பில் வந்திருந்தபோது அந்த மையம் சம்பிரதாயபூர்வமாக மெய்நிகர் வெளியில் திறந்து வைக்கப்பட்டது. அதை ஒரு “மென் திறப்பு” என்று இந்திய தூதரகம் அழைத்தது.

இப்பொழுது கலாச்சார மையத்தை கையளிக்கும் நிகழ்விற்கு பாரதிய ஜனதாவின் இரண்டு தமிழ் முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணம் வந்தார்கள். அந்த கலாச்சார மையத்தை இலங்கை மத்திய அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்புகிறது. அதை யாழ் மாநகர சபையிடம் கையளிப்பதற்கு அவர்கள் தயாரில்லை. அது தமிழ் மக்களுக்கு இந்தியாவின் பரிசு என்ற அடிப்படையில் அதைத் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மாநகர சபைதான் நிர்வகிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகின்றது. அவ்வாறு நிர்வகிக்கத் தேவையான நிதி உதவியை 5 ஆண்டுகளுக்கு வழங்குவதற்கும் இந்தியா தயாராக காணப்படுகிறது. ஆனால் கொழும்பு அதற்கு வெவ்வேறு தடைகளை ஏற்படுத்தி வருவதாக அவதானிக்கப்படுகிறது. அதனால்தான் கலாச்சார மையத்தை கையளிப்பதில் தொடர்ந்து இழுபறி நிலவியது. இப்பொழுதும் அதற்கு வேண்டிய நிர்வாகக் கட்டமைப்புகள் உருவாக்கப்படாமலேயே கலாச்சார மையம் திறக்கப்பட்டிருக்கிறது.

கலாச்சார மையத்தை திறப்பதற்கு முதலில் பிரதமர் மோடி வருவார் என்று கூறப்பட்டது. பின்னர் ஜனாதிபதி வருவார் என்று கூறப்பட்டது. அதன்பின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் இறுதியிலும் இறுதியாக வந்தது யார் என்றால் ஒரு துணை அமைச்சரும் பாஜகவின் தமிழக அமைப்பாளரும்தான். அதில் இந்தியா ராஜதந்திர பரிபாஷையில் ஒரு செய்தியை உணர்த்துகின்றது. யாழ்ப்பாணம் வந்த இருவரும் தமிழர்கள் என்பதும் விசேஷம். அதன் மூலமும் இந்தியா இலங்கைக்கு ஒரு செய்தியைக் கூற விரும்புகிறது. ஆனால் அந்த இருவரும் வந்திருந்த அதே காலப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இலங்கையின் கடற் தொழில் அமைச்சு ஒரு காரியத்தை செய்தது. அது என்னவெனில், எல்லை மீறி இலங்கை கடல் எல்லைக்குள் வந்த காரணத்தால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளில் ஒரு பகுதி தமிழ் மீனவர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு எதையாவது உணர்த்த விரும்பியதா?

கலாச்சார மையத்தைக் கையளிப்பதற்காக வந்திருக்கும் துணை அமைச்சர் மீன்வளத் துறைக்குரிய துணை அமைச்சரும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அவர்கள் வடக்கின் வெவ்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்து மீனவ சமூகங்களோடு உரையாடிக் கொண்டிருந்த ஒரு காலப்பகுதியில்தான் இலங்கையின் கடல் தொழில் அமைச்சு மேற்கண்டவாறு இந்திய மீனவர்களின் படகுகளை தானமாக கொடுத்திருக்கிறது.இதன் மூலம் இலங்கை இந்தியாவுக்கு ஒரு செய்தியை கூற விரும்புகிறது.வடக்குக்கும் தமிழகத்துக்கும் இடையிலான இணைப்பு திட்டங்களை பொறுத்தவரை, இந்தியாவுக்குள்ள வரையறைகளை உணர்த்துவதே அச்செய்தி ஆகும்.

வடக்குக்கும் தமிழகத்துக்கும் இடையிலான பிணைப்புகளை பலப்படுத்தும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்ட திட்டங்களை இலங்கை இழுத்தடித்தே அமுல்படுத்தி வருகிறது. பலாலி விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு பல மாதங்கள் எடுத்தன.எனினும் ஓடுபாதை போதாது என்ற காரணத்தால் சிறிய ரக விமானங்களைத்தான் இறக்கக் கூடியதாக உள்ளது. அதனால் 27 கிலோகிராமுக்கு அதிகமான ஏடையுள்ள பொதிகளை பயணிகள் காவ முடியாது.

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கும் இடையிலான படகுப் போக்குவரத்து இதோ தொடக்கப்படும் என்று கூறுகிறார்கள்.ஆனால் அது திறக்கப்பட்ட பின்னர்தான் நம்பலாம். இது போன்ற “கனெக்டிவிட்டி” திட்டங்களில் கொழும்பு வேண்டுமென்றே இழுத்தடிப்புகளைச் செய்து வருகிறது. இந்தப் பின்னணிக்குள் வைத்து பார்க்கும்போது பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் விடயத்திலும் இலங்கை இந்தியாவின் சொற் கேட்டு நடக்குமா? இந்தியாவும் அதற்காக இலங்கை மீது அழுத்தத்தை பிரயோகிக்கும் நிலையில் உள்ளதா?

எனவே கூட்டிக் கழித்து பார்த்தால் தென்னிலங்கையில் நடந்த தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னரும் அங்கே சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் சிந்தனைகளில் அதிகம் மாற்றம் நிகழவில்லை. 13ஐ அவர்கள் எதிர்ப்பது என்பது கஜேந்திரகுமார் கூறுவது போல இந்திய எதிர்ப்பின் ஒரு பகுதிதான்.அவர்கள் இந்தியாவை எதிர்த்துக் கொண்டே இருப்பார்கள்.ஆனால் இந்தியா சிங்களவர்களையும் தமிழர்களையும் சம தூரத்தில் வைத்து கையாளலாம் என்று நம்பிக் கொண்டே இருக்கப் போகிறதா ?