மட்டக்களப்பு தேரரை ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள் – மனோ எம்.பி

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்”  என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கதறுகிறார். இவரை ஒன்றில் ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அல்லது பிடித்துக்கொண்டு போய் அங்கொடையில் அடைக்க வேண்டும்.

ஜனாதிபதியை தூற்றிய ராஜாங்கன தேரரை, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை, நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரியவை, ICCPR சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் அரசு கைது செய்தது. இன்று தமிழ் மக்களை கொல்லுவேன்,வெட்டுவேன் என்று பகிரங்கமாக கொலைவெறி கூச்சல் எழுப்பும் இவரை ஜனாதிபதியின் அரசு கைது செய்யாதா என கேட்க விரும்புகிறேன்.

எல்லாவற்றையும் கடந்து செல்வதைப்போல் ஜனாதிபதி ரணில் இதையும் கடந்து போக முயற்சிக்க கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தனது முகநூல், டுவிட்டர் எனும் எக்ஸ் சமூக ஊடகங்களிலும் கருத்து கூறியுள்ள மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

அம்பிட்டிய சுமனரத்தின தேரருக்கு தனது தாயின் கல்லறை தொடர்பில்,  மட்டக்களப்பு மாவட்ட எம்பிக்களுடன் அல்லது மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருடன் ஏதும் பிரச்சினை இருக்குமாயின், அவை பற்றி அவர் பொலிசில் புகார் செய்ய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இதை கலந்து பேசும்படி மட்டக்களப்பு மாவட்ட செயலாளரை கடிதம் மூலம் கோர வேண்டும்.  அடுத்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்ட நிகழ்ச்சி நிரலில் இதை இடம்பெற செய்து, பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் சட்டப்படியான நாகரீக நடைமுறை.

இதைவிடுத்து சண்டியன் மாதிரியும். மனநோயாளி மாதிரியும் நடுதெருவுக்கு வந்து, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன், தெற்கில் வாழும் தமிழரை கொல்லுவேன்” என்றி ஹிஸ்டீரியாகாரனாக கத்துவது எந்த வகையில் நியாயம்?

ICCPR சட்டத்தின் கீழ் ஜனாதிபதி தன்னை தூற்றிய ராஜாங்கன தேரரை கைது செய்தார்.

இன்று தமிழ் மக்களை கொல்லுவேன்,வெட்டுவேன் என்று பகிரங்கமாக கூறும் இவரை கைது செய்ய மாட்டாரா என கேட்க விரும்புகிறேன். தமிழ் ஊடகங்களை அழைத்து, தமிழில் மொழிமாற்றி சொல்லுங்கள் என்றே ஆணவத்திமிருடன் கூறும் இவரை கைது செய்ய மாட்டாரா என கேட்க விரும்புகிறேன். அல்லது இவர் ஒரு மனநோயாளி என அங்கொடையில் அடைத்து விடுங்கள்.

சில காலம் முன் ஜெரோம் பெர்னாண்டோ என்ற ஒரு போதகரையும், நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய ஆகியோரை கைது செய்ய முடியுமானால், ஏன் இவரை கைது செய்ய முடியாது? பார்க்கப்போனால், ஜெரோம் பெர்னாண்டோ, நடாஷா எதிரிசூரிய ஆகியோர் பேசிய பேச்சுகளை விட இவரது பேச்சு ஆயிரம் மடங்கு மோசமானது.

இன்று இந்த அம்பிட்டிய சுமனரத்தின தேரரின் மட்டக்களப்பு விகாரையை நடத்த இலங்கை ராணுவம் உதவுகிறது. நாட்டின் இராணுவம் இவருக்கு சோறாக்கி சாப்பாடு போடுகிறது. இவை பற்றிய தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளன. மக்களின் வரிப்பணத்தில் சாப்பிடும் இவர் பல ஆண்டுகளாகவே இப்படி துவேசமாக பேசி வருகிறார். பொலிஸ் அதிகாரிகளின் கன்னத்தில் அடிக்கிறார். பொலிஸ் அதிகாரிகளின் சட்டையை பிடிக்கிறார். பொலிஸ் அதிகாரிகளின் தொப்பியை தட்டி விடுகிறார். மாற்று மத போதகர்களின் கன்னத்தில் அடிக்கிறார். அரச அதிகாரிகளை கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார். அப்படியானால், இவர் யார்?

கொழும்பில் சீனாவின் ஆய்வுக் கப்பல்; விமானங்கள், ட்ரோன்கள் மூலம் மிகத் தீவிரக் கண்காணிப்பில் இந்தியா

இந்திய, அமெரிக்கா எதிர்ப்பையும் மீறி கொழும்புத் துறைமுகத்துக்கு சீன ஆய்வுக் கப்பல் ‘ஷியான் -6’ (Shiyan 6) புதன்கிழமை வந்திருக்கும் நிலையில், இந்தியக் கடற்படை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. கண்காணிப்பு விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.

சீன நாட்டின் கடற்படை கப்பல்களும் போர்க்கப்பல்களும் போர்ப் பயிற்சிக்காகப் பாகிஸ்தான் நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இந்தியாவின் P-8I கண்காணிப்பு விமானங்கள் மற்றும் MQ-9B கண்காணிப்பு டிரோன்களும் கடற்பரப்பில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவுக்குச் சொந்தமான கடற்பரப்புகள் மற்றும் இலங்கை வந்திருக்கும் சீன ஆய்வுக் கப்பலையும் இந்தியக் கடற்படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானில் நடைபெறும் கடற்படை பயிற்சியில் பங்கேற்கும் வகையில், சீன கடற்படையின் 3 போர்க் கப்பல்கள் பாகிஸ்தான் எல்லையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

ஆனால், பாகிஸ்தான் மற்றும் சீனப் போர்க்கப்பல்கள், பெரிசியன் வளைகுடாப்பகுதிக்கு நெருக்கமாக வந்து, இஸ்ரேல் – ஹமாஸ் போருக்குப் பிறகு, குவிக்கப்பட்டிருக்கும் அமெரிக்கப் படைகளை நோட்டமிடலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. எனவே, இந்தியக் கடற்படை, கடல்பரப்பில் தீவிர கண்காணிப்புப் பணியை முடுக்கிவிட்டிருக்கிறது.

முன்னதாக சீன ஆய்வுக் கப்பலுக்கு இலங்கைக்குள் அனுமதி அளிக்கப்பட்டமை குறித்த தகவலை அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். கடந்த வாரம் சீனாவுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயணம் மேற்கொண்டமையைத் தொடர்ந்து, இந்தக் கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது.

ஆய்வு மற்றும் கண்காணிப்பு கப்பல்களை இலங்கைக்கு சீனா தொடர்ந்து அனுப்பி வருகிறது. இது தொடர்பாக இலங்கையிடம் இந்தியா தனது கவலையைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையுடன் (N.A.R.A.) இணைந்து கடல்சார்ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட சீன ஆய்வுக்கப்பல் ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தர உள்ளதாக அந்நாட்டு அரசு கடந்த ஓகஸ்ட் மாதம் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, இந்தக் கப்பலின் இலங்கைப் பயணம் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்திருந்தது.

சீன இராணுவத்தின் கடற்படை கப்பலான ‘ஹை யாங் 24 ஹாவோ’ (HAI YANG 24) கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கை வந்தது. இதேபோன்று, கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு சீன கப்பலான ‘யுவான் வாங் 5” (Yuan Wang 5) இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது

முடிந்தால் பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களியுங்கள் நாமலுக்கு சஜித் சவால்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விமர்சிக்கும் நாமல் ராஜபக்ஷ முடிந்தால் வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்து காட்டட்டும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நாட்டை அழித்து வங்குரோத்து நிலைக்கு அழைத்துசென்ற ராஜபக்ச குடும்பத்தினர், தமது பாதுகாப்புக்காக ஜனாதிபதி ஒருவரை நியமித்துக் கொண்டனர். அந்த ஜனாதிபதி மீது அந்த குடும்பத்தின் அரச குமாரர் (நாமல் ராஜபக்ச) கோபத்தில் உள்ளாராம். அமைச்சரவை மறுசீரமைப்பால்தான் அவர் கடுப்பில் உள்ளாராம். இவ்வாறு கோபப்படும் அரச குடும்பம், சுகாதார அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது கூட, நாடு குறித்து சிந்திக்காமல் தம்மைப் பற்றி சிந்தித்தே செயற்பட்டது.

எனவே, இவர்களின் நாடகத்தை இனியும் நம்புவதற்கு நாட்டு மக்கள் தயாரில்லை. இவர்கள் எவ்வாறு நாட்டை அதலபாதாளத்திற்கு இட்டுச் சென்றார்கள் என்பது முழு நாட்டிற்கும் தெரியும் , ஜனாதிபதியை விமர்சிப்பது போல் நடித்தாலும் பாதீட்டை ஆதரித்தே வாக்களிப்பார்கள். முடியுமானால் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துக் காட்டுமாறு சவால் விடுக்கின்றேன். ” – என்றார் சஜித்.

இலங்கையின் தீவுகளில் சுற்றுலா முதலீட்டு வாய்ப்புக்களை வழங்க அரசாங்கம் தீர்மானம்

இலங்கையிலுள்ள முக்கிய தீவுகளில் சுற்றலாத்துறை மேம்பாட்டுக்கான தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் பல அழகிய தீவுகள் மீன் பிடி நடடிக்கைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில தீவுகளில் பருவ காலங்களில் மாத்திரமே மீன்பிடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே அவ்வாறான தீவுகள் ஊடாக வருமானத்தை பெறுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய அவற்றை விற்காமல் குத்தகைக்கு வழங்கல் போன்றவற்றுக்கு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இவற்றில் தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையைப் போன்று தீவுகள் அபிவிருத்தி அதிகாரசபையொன்றை நிறுவி இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் பாரியளவு செலவின்றி அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமைய கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையிடம் இந்த பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றின் ஊடாக முதலீட்டு வாய்ப்புக்கள் வழங்கப்படக் கூடிய தீவுகள் தெரிவு செய்யப்படும் என்றார்.

புதிய அரசியலமைப்பு மூலமே சிஸ்டம் சேஞ் சாத்தியமாகும் – ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

புதிய அரசியலமைப்பு மூலமே சிஸ்டம் சேஞ் உருவாக முடியும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப புதிய சட்டங்கள் மூலமாக சிஸ்டம் சேஞ் மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். உண்மையில் அரகல போராட்டத் தரப்பு புதிய அரசியல் அமைப்பின் மூலம் சிஸ்டம் சேஞ் ஒன்றை கொண்டு வரவேண்டும் என்றே தங்களது பிரதான கோரிக்கையை முன் வைத்தார்களே தவிர இருக்கின்ற அரசியலமைப்பில் புதிய சட்டங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் மாற்றங்களை விரும்பவில்லை.

அரகல போராட்டத் தரப்பிற்கு முன்பாக, நீண்டகாலமாக ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கையாக இருப்பதே அதிகாரப் பகிர்வுடன் கூடிய சகல மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் அமைப்பே ஆகும். இதனையே அரகல போராட்ட மக்களும் கோரியுள்ளனர்.

ஒற்றையாட்சி அரசியலமைப்பும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையுமே, இலங்கைத் தீவில் இனப்பிரச்சினை பெருந்தீயாக எரிவதற்கும், கோரமான யுத்தம் பாரிய அழிவுகளை ஏற்படுத்துவதற்கும் அதன் அறுவடையாக நாடு மிகப் பெரும் பொருளாதார பின்னடைவை சந்திப்பதற்கும் காரணமானது என்ற கசப்பான உண்மையை மக்கள் உணர்ந்தாலும் இதற்கு காரணமான அதிகார தரப்பு ஏற்றுக் கொள்ளதயாராக இல்லை என்பதே அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கருத்து.

தற்போது நடைமுறையில் உள்ள இரண்டாம் குடியரசு யாப்பு நாட்டிற்கு புற்றுநோய் போன்றது அதில் உள்ள சட்டமேலாண்மை குறிக்கப்பட்ட நபர்களின் அதிகாரங்களையும் சுகபோகங்களையும் பாதுகாப்பதாகவே உள்ளது அத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அதிகாரத் தரப்பின் அதிகாரத் துஸ்பிரையோகங்களே மிகப் பெரும் தடையாகவே உள்ளன.

பெயரளவிலான சுயாதீன ஆணைக்குழுக்கள் நியாயத்தை வெளிக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி என்கின்ற தனி நபருக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்கள் பெரும் தடையாக உள்ளதை கடந்தகால சம்பவங்கள் ஆதாரமாக காட்டுகின்றன.

இவ்வாறான நிலையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல நிலையான அபிவிருத்திக்கும் இனங்களிடையே நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த பொருத்தமான வழி சிஸ்டம் சேஞ்ஒன்று தான். இதனை புதிய அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வினைக் கொண்ட அரசியலமைப்பு மூலமே நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதன் மூலமே நாட்டின் இனப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து பொருளாதாத்தை மீட்டெடு்க்கமுடியும் இதற்கு ஆட்சியாளர் தயார் இல்லை என்பதே மனுஷவின் அறிக்கை எனவும் தெரிவித்தார்.

மன்னாரில் மேய்ச்சல் தரையை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்

நானாட்டான் – முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினால் கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் மேய்ச்சல் தரை காணியை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் வியாழன் (26) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பல்வேறு அதிகாரிகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும் எழுத்து மூலமும் நேரடியாகவும் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் பயனற்று போனதன் காரணத்தால் குறித்த போராட்டம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் முன் னெடுக்கப்பட்டிருந்த குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் எம். பி, நானாட்டான் – முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், மத தலைவர்கள் என பலரும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு வருடமும் மாந்தை மேற்கு, இலுப்பை கடவை பகுதிக்கு தமது கால்நடைகளை கொண்டு சென்று பல்வேறு விதமான துன்ப துயரங்களையும் கால்நடை இழப்புக்களையும், மனித இழப்புக்களையும் சந்திக்க நேருவதுடன் பாரிய பொருளாதார இழப்புக்களையும் சந்திப்பதாகவும், அப்பகுதியில் உள்ளவர்களுடன் எமக்கு முரண்பாடுகளும் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

ஆகவே எமது கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் பகுதியை மேய்ச்சல் நிலமாக பிரகடனப்படுத்த வேண்டும் என பலவருடமாக கோரிக்கை விடுத்ததன் பிரகாரம் பலமுறை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்ட போதும் நடை முறைச் சாத்தியமாக்கவில்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த 12-10-2023 அன்று வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் இதுவரை நடை முறைப்படுத்தவில்லை என்பதே வேதனைக்குரிய விடயம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவித்தனர்.

மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்குவது தொடர்பான விடயத்தில் அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கின்றார்கள் என்பதை வெளிப்படையாகவே புலனாகின்றது.

எனவே உடனடியாக எமக்குரிய மேச்சல் நிலத்தை விடுவித்து தருமாறு கோரிக்கை விடுத்ததோடு,மன்னார் மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளரிடம் மகஜர் வாசித்து கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

திவுலப்பொத்தானை சிங்கள மக்களை பாதுகாக்குமாறு மனித உரிமை ஆணைக்குழுவுக்கு கடிதம்

மட்டக்களப்பின் திவுலுப்பொத்தானையிலிருந்து மக்களை வெளியேற்ற முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அந்த மக்களை பாதுகாப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாக தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவிடம் சமர்பித்துள்ள நான்குபக்க கடிதத்தில் அவர் இந்த  வேண்டுகோளை விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பது தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் எட்டப்பட்டுள்ள உடன்படிக்கை காரணமாக விக்கிரமசிங்க ராஜபக்ச அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பு திவுலுபொத்தானையிலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் உள்ள மக்களை அச்சுறுத்துவதற்கு அனுமதித்துள்ளது என அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அரசியல் தலைமைத்துவத்தின் சார்பில் மகாவலிஅதிகாரிகளும்  பொலிஸாரும் கிழக்கு மாகாணத்திலிருந்து சிங்களவர்களை வெளியேற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் ஏனையவர்களுக்கும்  ஒத்துழைப்பு வழங்குகின்றனர் எனவும் மனித உரிமை குழுவிற்கான கடிதத்தில் தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கிழக்கு மாகாண ஆளுநரும் முக்கியமானவர்கள் என தேரர் தெரிவித்துள்ளார்.

ஏனைய சமூகங்களிற்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை சிங்கள சமூகத்தினரிடமிருந்து பறிப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்..

திவுலுப்பொத்தானையில் சிங்களவர்கள் நீண்டகாலமாக வசிக்கின்றனர் அங்கு 80 தொல்பொருள் இடங்கள் காணப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ள அவர் சிங்கள முஸ்லீம்களைஅங்கிருந்து விரட்டுவதற்காக  தமிழீழ விடுதலைப்புலிகள் படுகொலைகளில் ஈடுபட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தை அரசாங்கம் 2009 இல் வெற்றிகரமாக முடிவிற்கு கொண்டுவரும் வரை அங்கிருந்து அகற்றப்பட்ட மக்களால் தங்கள் பகுதிகளிற்கு மீண்டும் திரும்பிவரமுடியவில்லை எனவும் தெரிவித்துள்ள அவர் மங்களராமய  அந்த மக்களின் சார்பில் தலையிட்டு 25 வீடுகளை அமைத்துக்கொடுத்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் தமிழ்முஸ்லீம் நாடாளுமன்ற அரசியல்வாதிகளின் அழுத்தங்களிற்கு அடிபணிந்து 2016 அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றி அந்த பகுதியை கால்நடைமேய்ச்சலிற்கு வழங்கியது எனவும் தேரர் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதிலும் நல்லாட்சி அரசாங்கம் அதனை புறக்கணித்தது 2019 நவம்பரில் ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்னரேதிவுலுப்பொத்தானைக்கு மக்கள் மீண்டும் திரும்ப முயன்றது எனவும் மனித உரிமை குழுவிற்கான கடிதத்தில் தேரர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டது முதல் அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அழுத்தங்களிற்கு அடிபணிந்துள்ளது சிங்கள மக்களை அங்கிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது எனவும்  தேரர் தெரிவித்துள்ளார்.

யாழ். காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமை கோரும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் ….! அச்சத்தில் காணி உரிமையாளர்கள்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தனியார் காணி பெற்றோலிய கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான காணி என அதிகாரிகள் உரிமை கோரி வந்தமையால் , காணி உரிமையாளர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 33 வருட காலத்திற்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த மாங்கொல்லை பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியதை அடுத்து, அப்பகுதி மக்கள் தமது காணிகளை அடையாளப்படுத்தி எல்லைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.

அந்நிலையில், இன்றைய தினம் (26.10.2023) வியாழக்கிழமை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் அப்பகுதிக்கு வந்து, இந்த காணிகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உரியது, நாம் கடந்த 40 வருட காலத்திற்கு முன்பே காணி உரிமையாளர்களிடம் இருந்து காணிகளை கொள்வனவு செய்து கொண்டு விட்டோம் என கூறி தனியாரின் காணிகளை தமது காணிகள் என கூறியுள்ளனர்.

பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள்

காணியை நாம் யாருக்கும் விற்கவில்லை இது எங்களின் காணிகள். பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணி தமது காணிகளில் இருந்து சற்று தொலைவில் உள்ள காணிகளே என காணி உரிமையாளர்கள் கூறி இருந்தனர். அதனை ஏற்க மறுத்த அதிகாரிகள்.

இந்த காணிகளையும் தமது நிறுவனம் கொள்வனவு செய்து விட்டதாக கூறி, இது உங்கள் காணி தான் என்பதற்கு எங்களுக்கு உறுதியை காண்பித்து, உறுதிப்படுத்துங்கள் என கூறியுள்ளனர்.

அதற்கு காணி உரிமையாளர்கள் நாங்கள் எதற்கு உங்களுக்கு உறுதி காட்ட வேண்டும்? உங்களின் உறுதிகளை பரிசீலித்து உங்கள் காணி எங்கே இருக்கிறது என்பதனை உறுதிப்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு என கூறினர்.

அதனை அடுத்து, இந்த காணிகளையும் கொள்வனவு செய்து விட்டோம். அதற்கான உறுதிகள் எங்களிடம் உள்ளது. அதன் ஆதாரங்களுடன் வருகிறோம் என அங்கிருந்து சென்றனர்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை ஊழியர் தங்குமிடம் இருந்த பகுதிக்கு அருகில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணி இருந்தது. அந்த காணி எமது காணிகளில் இருந்து சற்று தொலைவில் உள்ளது.

காணி உரிமையாளர்கள்

ஆனால் நாங்கள் தற்போது துப்பரவு செய்து அறிக்கைப்படுத்தும் காணிகள் எமது சொந்த காணிகளே, அந்த காணிகளை நாம் எந்த காலத்திலும் எவருக்கும் விற்கவில்லை.

அதிகாரிகள் காணி இடத்தினை மாறி விளங்கிக்கொண்டு வந்து எம்முடன் கதைத்தார்களா? அல்லது 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் எமது காணி அகப்பட்டு இருந்த கால பகுதியில் எமது காணிகளை மோசடியாக அபகரித்து விட்டார்களா எனும் சந்தேகம் எமக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

தாம் காணிகளை கொள்வனவு செய்த ஆதாரத்துடன் வருகிறோம் என அதிகாரிகள் கூறி சென்றுள்ளனர். இனி அவர்கள் வந்தாலே எமக்கு உண்மை நிலை தெரிய வரும் என அக்காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

பிரித்தானியாவில் நீதிபதி சரவணராஜாவுக்கு ஆதாரவாக புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ சரவணராஜாவிற்கு நீதி வேண்டி தாயகத்திலும் அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம் பெயர்நாடுகளிலும் வாழும் செயற்பாட்டாளர்களினால் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் Freedom Hunters அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட போராட்டம் ஒன்று நேற்றையதினம் (25.10.2023) பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் முன் நடைபெற்றது.

சர்வதேசம் தலையிட வேண்டும்

இப் போராட்டத்தில் பெரியோர், இளையோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டோர், ‘நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி பெற்றுக்கொடுக்க வேண்டும்’, ‘குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்’, ‘சர்வதேசம் தலையிட வேண்டும்’ போன்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.

ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்போவதில்லை : பொதுஜன பெரமுன தீர்மானம்!

2024 ஆம் ஆண்டுவரை மட்டும்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் அரசாங்கத்தை அமைத்திருந்தாலும், இது தற்காலிக அரசாங்கமொன்று தான். 2024 ஆம் ஆண்டுவரை மட்டும்தான் இந்த அரசாங்கம் இருக்கும்.

இதன் பின்னர் இவரைக் கொண்டுவருவோம்- அவரைக் கொண்டுவருவோம் என நாம் எந்த இடத்திலும் கூறவில்லை.

ஆனால், இந்த அரசாங்கத்தை நடுவில் உடைத்து, முட்டாள் தனமான வேலையை செய்யவும் நாம் தயாரில்லை.

ஜனாதிபதிக்கோ அமைச்சரவைக்கோ நாட்டை வழிநடத்த முடியாவிட்டால், உடனடியாக தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும்.

அல்லாவிட்டால் நாட்டில் காட்டுச் சட்டம் வந்துவிடும். மக்கள் தான் அரசாங்கத்தை தீர்மானிக்க வேண்டும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மனதில் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தான் உள்ளார்.

அரசாங்கமானது, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக நாட்டு மக்களை துன்பத்திற்குள் தள்ளியுள்ளது.

மக்கள் மரணித்த பின்னர், ஐ.எம்.எப்.இன் கடனுதவி கிடைத்தும் பலனில்லாமல் போய்விடும்.

எனவே, அரசாங்கம் இதுதொடர்பாகவும் சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized