வடக்கு, கிழக்கில் 30ஆம் திகதி போராட்டத்துக்கு முழு ஆதரவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு

வடக்கு-கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு ஜனநாயக கூட்டமைப்பினர் முழு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரத்தின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் உலகெங்கும் நினைவு கூரப்படவுள்ளது. இந்நிலையில் வடக்கில் மன்னாரிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் எதிர்வரும் 30 ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நீதிகோரி பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே இந்த போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஆதரவையும் வழங்குவது மாத்திரமல்லாது எமது உறவுகளுக்கான நீதியை பெற்றிட தேசியத்தின்பால் ஈர்ந்துள்ள அனைவரும் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொள்ள வேண்டும்- என்றார்.

இவ்ஊடகவியலாளர் சந்திப்பில் புளொட் அமைப்பின் இணைப்பாளர் கேசவன், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம், ரெலோ அமைப்பின் பிரசன்னா இந்திரகுமார், ஜனநாயப் போராளிகள் கட்சி இணைப்பாளர் நகுலேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குருந்தூர்மலை தமிழரின் காணிகள் விடுவிக்கப்பட உடனடி வாய்ப்பில்லை – செல்வம் அடைக்கலநாதன் எம். பி.

தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் உடனடியாக விடுவிக்கப்படும் ஒரு சூழல் இல்லாதிருக்கின்றது என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தண்ணிமுறிப்பு – குருந்தூர்மலையில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் தொல்பொருள் திணைக்களத்தால் சுவீகரிக்கப்பட்ட நிலையில் குறித்த காணிகளை விடுவிப்பது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் அங்கு சென்று நிலைமைகளை அவதானித்தனர்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

குருந்தூர்மலை பிரதேசத்திலே வனவளத் திணைக்களம், தொல்லியல் போன்ற ஆளுகைக்குட்பட்ட காணிகளை விடுவிப்பது சம்பந்தமாக கள நிலவரத்தை அவதானித்தோம்.

இதன் அடிப்படையில், உடனடியாக இந்த நிலங்கள் விடுவிக்கப்படும் சூழல் இல்லாதிருக்கின்றது. மீண்டும் ஜனாதிபதியோடு பேசுகின்ற வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று வந்திருக்கின்ற உயர் அதிகாரிகள் இந்த விடயம் சம்பந்தமாக கூறியிருக்கிறார்கள்.

நாங்கள் மக்கள் இருந்த பூர்வீக காணிகள் என்று உறுதிபட கூறியிருக்கின்றோம். அதனை ஜனாதிபதியிடமும் எடுத்து கூறி விடுவிப்பதற்கான முயற்சியை மேற்கொள்வோம். என்னைப் பொறுத்தமட்டிலே இது உடனடியாக நடக்குமா என்று சந்தேகம் இருக்கிறது – என்றார்.

விகாரை கட்ட அனுமதி மறுப்பு – திருமலை மாவட்ட செயலகத்தில் பிக்குகள் முற்றுகை போராட்டம்

திருகோணமலை மாவட்ட செயலகத்தை பிக்குகள் நேற்று முற்றுகையிட்டு போராடினர். அத்துடன், ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்த மண்டபத்துக்குள்ளும் புகுந்து களேபரத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் நிலாவெளி – பெரியகுளத்தில் இடை நிறுத்தப்பட்ட விகாரையின் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கக் கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

விகாரை நிர்மாணத்துக்கு அனுமதி வழங்குமாறு கோரி திருகோணமலை மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு பிக்குகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விகாரை நிர்மாணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் பிக்குகளை அழைத்து விளக்கம் வழங்கினார். ஆனால், அவர்கள் அதனை ஏற்கவில்லை.

இந்நிலையில், ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்ற மண்டபத்துக்குள் புகுந்த பிக்குகள் அங்கு குழப்பத்தை ஏற்படுத்தினர். இவர்கள் ஏற்படுத்திய குழப்பத்தால் கூட்டம் தடைப்பட்டது.

இதன்போது, “திருகோணமலை அனைத்து இன மக்களும் வாழும் ஒரு பிரதேசம். பிக்குகளின் செயற்பாடுகள் போல் ஏனைய இனத்தவரும் இவ்வாறான செயல்பாடுகளை முன்னெடுப்பார்களானால், அதற்கு நீங்களே முன்னுதாரணமாக இருப்பீர்கள் என்று ஆளுநர் கூறினார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஆளுநர், பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றாலும், பிரதேச சபையின் அனுமதியின்றி எந்த ஒரு கட்டுமானப் பணிகளும் முன்னெடுக்க முடியாது – என்றார்

சீன ஆய்வுக்கப்பல் இலங்கை வர அனுமதி!

சீன ஆய்வுக் கப்பலான ‘சி யான் 06’ இலங்கை வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு மற்றும் நாரா நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பலின் வருகை தொடர்பில் சீனத் தூதரகமும் வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

சீன ஆய்வுக் கப்பலுடன் இணைந்து நாரா நிறுவனம் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும், கப்பல் இலங்கைக்கு வரும் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் 06’ ஒக்டோபர் முதல் நவம்பர் வரை கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களில் நிறுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக சமீபத்தில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த கப்பல் தென் இந்திய பெருங்கடல் பகுதி உட்பட பரந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் பிரமிட் திட்டத்தில் பணத்தை சுருட்டிய சீனக்கும்பல்

பொரளை லேக் டிரைவ் வீதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்குள் சிலர் புகுந்து, தம்மை கட்டி வைத்து கொள்ளையடித்ததாக சீன பிரஜை ஒருவரின் முறைப்பாடு போலியானது என கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறிய 38 வயதான சீன வர்த்தகர், பிரமிட் மோசடிகள் மூலம் 40 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையிட்டுள்ளார்.

முறைப்பாட்டாளர், அவரது நண்பர் என சீன இரண்டு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சீன பிரஜை, ஏனைய சீன பிரஜைகள் குழுவுடன் இணைந்து இந்த நாட்டில் பிரமிட் திட்டத்தை மேற்கொண்டு வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கசினோ சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்ததை மறைப்பதற்காக இந்த சீன நபரே திட்டமிட்டு கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

20ஆம் திகதி அவர் பொலிசில் முறையிட்டிருந்தார். தனது 40 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை கொள்ளையடித்துள்ளனர் என அதில் குறிப்பிட்டனர்.

கடந்த 19ஆம் திகதி வியாபார நிமித்தம் சென்று விட்டு நள்ளிரவில் வீடு திரும்பியதாக இந்த சீன பிரஜை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். புகாரின்படி, அவர் தனது மொழிபெயர்ப்பாளருடன் ஊதா நிற கேடிஹெச் வாகனத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். வாகனத்தின் உரிமையாளரே தனது மொழிபெயர்ப்பாளர் மற்றும் சாரதி என சீன நபர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

மொழிபெயர்ப்பாளருடன் வீட்டிற்குள் நுழைந்த போது, வீட்டிற்குள் இருந்த முகமூடி அணிந்த மூன்று நபர்கள் தம்மைத் தாக்கி, கழுத்தில் வாளை வைத்து, கைகளைக் கட்டியதாக சீன வர்த்தகர் பொலிஸாரிடம் தெரிவித்தார். தான் துப்பாக்கி முனையில் கட்டப்பட்டதாக மொழி பெயர்ப்பாளர் போலீசாரிடம் தெரிவித்தார்.

அப்போது ஒருவர் தனது மொபைல் போனை எடுத்து சோதனை செய்ததாக சீன தொழிலதிபர், பொலிசாரிடம் கூறினார். தொலைபேசி பூட்டப்பட்டிருந்ததால் கொள்ளையர்கள் தம்மை அச்சுறுத்தியதாகவும், அதனைத் திறக்கும் போது, தனது நண்பர் ஒருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பி, தான் சிக்கலில் இருப்பதாகவும் தெரிவித்ததாக சீன பிரஜை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

செய்தி அனுப்பிய சிறிது நேரத்திலேயே வீட்டின் மணி அடித்ததையடுத்து வீட்டில் தங்கியிருந்த கொள்ளையர்கள் பீதியடைந்து வீட்டை விட்டு ஓடிவிட்டதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். மூன்று கொள்ளையர்களும் வீட்டின் முன்பக்கக் கதவைத் திறந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அதே நேரத்தில் சீனப் பிரஜையின் நண்பர்களும் வீட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது வழக்கத்திற்கு மாறான சம்பவம் என்பதால் இது குறித்து முதல் சந்தேகம் எழுந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இரண்டு நண்பர்கள் வீட்டிற்கு வந்ததாகவும், அவர்கள் தனது மற்றும் மொழிபெயர்ப்பாளரின் கைகளை அவிழ்த்ததாகவும் சீன நாட்டவர் பொலிஸாரிடம் கூறினார். வீட்டைச் சோதனையிட்டபோது, கொள்ளையர்கள் தமது வாகனத்தில் தப்பிச் சென்றதையும், சமையல்காரர் கை, வாய் கட்டப்பட்டு வீட்டின் உள்பக்கமாக அடைக்கப்பட்டிருந்ததையும் கண்டதாக கூறியுள்ளார்.

23.8 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான அமெரிக்க டொலர்கள், யுவான், தாய்லாந்து நாணயம், ஹொங்கொங் டொலர்கள், திர்ஹாம்கள் மற்றும் இலங்கை ரூபா என்பவற்றையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக சீன பிரஜை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதுமட்டுமின்றி 11 கையடக்கத் தொலைபேசிகள், 7 மடிக்கணினிகள், ஐந்து வெளிநாட்டு மதுபான போத்தல்கள், அர்மானி கைக்கடிகாரம், பெறுமதியான இடுப்புப் பட்டை மற்றும் வாகனங்கள் என்பன கொள்ளையிடப்பட்ட ஏனைய பொருட்களில் அடங்கும். அந்த சொத்துக்களின் மதிப்பு 17.7 மில்லியன் ரூபாய்.

கமரா அமைப்பு இருந்தாலும், பாதுகாப்பு கமரா காட்சிகளை சேமித்து வைத்திருக்கும் டி.வி.ஆரும் கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளதாக சீன நாட்டவர் புகார் அளித்துள்ளார்.

இந்த சீன பிரஜைகள் தங்கியிருந்த வீடு 70 மில்லியன் ரூபாய்க்கு வாடகைக்கு விடப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வீட்டில் இருந்தே இந்த மோசடி நடந்துள்ளது. பொலிசார் அந்த வீட்டை சோதனையிட்ட போது, பிரமிட் திட்டத்தில் ஈடுபட்ட சீன பிரஜைகள் கும்பல் தப்பிச் சென்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சீன பிரஜைகள் ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த நாட்டில் தங்கியிருந்து இந்த சர்வதேச பிரமிட் திட்டத்தை ஒன்லைனில் நடத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதற்காக பயன்படுத்தப்பட்ட பல மடிக்கணினிகளையும் பொலிசார் கண்டுபிடித்தனர். சோதனையின் போது, அங்கு தங்கியிருந்த சுமார் 15 சீன பிரஜைகள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த மோசடியில் பயன்படுத்தப்பட்ட சுமார் 40 மடிக்கணினிகளை அவர்கள் எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணையில், வாகன சாரதியகவும் மொழிபெயர்ப்பாளராகவும் செயற்பட்ட நபருக்கு திட்டத்தை செயல்படுத்த ரூ.1.5 மில்லியன் வழங்கப்பட்டது தெரிய வந்தது..

இந்த நபர் கொழும்பு துறைமுக நகரத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சீன பிரஜையுடன் பிரமிட் திட்டத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சீனப் பிரஜைகள் இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் சிகரெட் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து முப்பதாயிரம் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கொழும்பில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏழு வீடுகளையும் இந்த கொள்ளையர்கள் வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிங்களவர் வந்தேறு குடிகள் என்பதை நிரூபிக்க மகாவம்சமே போதும் – சபா குகதாஸ் தெரிவிப்பு!

ஈழத் தமிழர்களைப் பார்த்து வந்தேறு குடிகள் என பித்தலாட்டு உருட்டுகளை முன் வைக்கும் சிங்கள இனவாதிகள் உங்கள் மகாவம்ச நூலை நன்றாக வாசித்துப் பாருங்கள் அதில் பல உருட்டுகள் இருந்தாலும் ஆறாம் அத்தியாயம் சொல்கிறது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

விஐயனுடைய வருகை தொடர்பாக விஐயன் வரும் போது இயக்கர் நாகர் எனும் பூர்வீக குடிகள் வாழ்ந்து கொண்டிருந்ததாகவும் மகாவம்சம் கூறும் குவேனி கல்வெட்டுகளில் கவினி என்ற பெயரில் அழைக்கப்பட்ட பேரழகு வாய்ந்த தமிழ்ப் பெண்ணை திருமணம் முடித்து ஈழத்தில் குடியேறியதாக கூறுகின்றது எனவே இந்த உண்மையை மறைத்து தமிழர்களைப் பார்த்து வந்தேறு குடிகள் என அழைத்து சிங்கள மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்த சிங்கள இனவாதிகள் எண்ணியுள்ளனர்.

2009 முன் பெட்டிப் பாம்பாக இருந்த இனவாதிகள் சிலர் பூனையில்லா வீட்டில் சுண்டெலிக்கு கொண்டாட்டம் என்பது போல் கூத்தடிக்கின்றனர் விஐயன் வருகைக்கு முன் தமிழர்கள் தான் பூர்வீக குடிகள் என்பதற்கு பலாங்கொடை , இரணைமடு , பொம்பரிப்பு , செங்கடகல ,பொலநறுவை,அனுராதபுரம், ஆனைக்கோட்டை போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்கள் தமிழர்கள் தொடர்பான போதிய சான்றுகளை தமிழர்களை பூர்வீக குடிகள் என உறுதி செய்கின்றன.

மேலும், விஐயன் வருவதற்கு முன்னர் சைவமதமும் தமிழ் மன்னர்களும் தான் இருந்தனர் என்பதை மகாவம்சமே மிகப் பெரிய ஆதாரம் ஆனால் 1948 ஆண்டின் பின்னர் சிங்கள பேரினவாதம் தமிழர்களின் தொன்மைகளை மாற்றி பௌத்த சிங்கள மயப்படுத்தும் மோசமான தமிழ் இனப்படுகொலையை அரங்கேற்றி வருகிறது அதன் தொடர்ச்சியே தமிழர்களை வந்தேறு குடிகள் என கூறும் பித்தலாட்டம்.

இந்தியாவுக்கு பாலம் கட்டுவதெனில் சர்வசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – கர்தினால்

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமானால் சர்வசன வாக்கெடுப்பு நடத்தி மக்களின் விருப்பத்தை பெற வேண்டும் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ராகம பிரதேசத்தில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கர்தினால், வரலாற்று காலம் தொடக்கம் நாட்டின் ஆட்சியாளர்கள் இந்த நாட்டை அந்நியர்களுக்கு காட்டிக்கொடுத்து வருகின்றனர் என்பதை வலியுறுத்தினர்.

மேலும் கருத்து தெரிவித்த கர்தினால்,

“”நாங்கள் எங்கள் நாட்டின் துண்டுகளை வெவ்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்கிறோம்.

ஒரு சக்திக்கு அடிபணிந்து பல்வேறு முட்டாள்தனமான முடிவுகளை எடுத்து இந்த நாட்டை அழிவை நோக்கி இட்டுச் செல்லும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆட்கள் இந்தியாவிற்கு பாலம் கட்டுகிறார்கள். இப்போது இந்தியாவில் இருந்து நமக்கு என்ன பிரச்சனைகள்? ஒருமுறை பருப்பு கொண்டு வந்தது நினைவிருக்கிறதா.

இலங்கைக்கு இராணுவம் அனுப்பப்பட்டது. அவர்களின் கருத்தின் அடிப்படையில் சில விஷயங்களைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறது.

அவர்களை எங்கள் தோளில் ஏற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்னொரு பாலம் கட்டினால் நன்றாக இருக்கும். இந்த முட்டாள்தனமான கதைகளை யார் சொல்வது?

நமது நாடு எப்போதும் சுதந்திர நாடாகவே இருந்து வருகிறது. நாங்கள் எந்த நாட்டிற்கும் அடிமையாக இருந்ததில்லை. வேறொரு நாட்டிலிருந்து பிரிந்து செல்லவில்லை. அன்று முதல் இலங்கை தனி நாடாக இருந்தது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒப்பந்தங்களை இந்நாட்டு மன்னர்கள் கையாண்டார்கள், ஆனால் நாம் யாரையும் அடிமைப்படுத்தவில்லை.

நம் நாட்டை அந்நிய தேசம் கைப்பற்றியிருந்தால், அன்பு சகோதர சகோதரிகளே, நமது தலைவர்களின் துரோகத்தாலேயே அது நடந்நதது. நாளையும் இதே நிலை ஏற்படலாம். இந்த பாலம் கட்டும் யோசனைக்கு பொதுமக்கள் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டும். பொதுமக்கள் கருத்து இல்லாமல் இவற்றைச் செய்வது தவறு.

இன்று நம் நாட்டை நினைத்து வருந்துகிறோம். விடுதலைக்குப் பின், நாம் இப்போது சுதந்திரத்தை இழக்க வேண்டும். அனைத்து நாடுகளுக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வழங்குவோம். துண்டு துண்டாக உடைப்போம். அப்போது நமக்கு எதுவும் மிச்சம் இருக்காது. இது ஒரு நோய்.” என்றார்.

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக சந்தோஷ் ஜா?

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக இராஜதந்திர சேவையில் உள்ள சந்தோஷ் ஜா இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளார்.

2020ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை காலமும் கொழும்பில் உயர்ஸ்தானிகராக இருக்கும் கோபால் பாக்லே அவுஸ்திரேலியாவில் இந்தியாவின் இராஜதந்திர பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.

2020ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக நியமனம் பெற்ற சந்தோஷ் ஜா, 2019 முதல் ஜூலை 2020 வரை உஸ்பெகிஸ்தானில் இந்தியத் தூதராக பணியாற்றியுள்ளார்.

மேலும், 2017 – 2019 ஆண்டுகளில் வொஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதுவராக கடமையாற்றியுள்ளார்.

அத்துடன், 2015 – 2017 வரையிலான ஆண்டுகளில் இந்திய வெளிவிவகார அமைச்சின் கொள்கை திட்டமிடல் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இந்த காலப்பகுதியில், இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய ஈடுபாடுகளுக்கும் சவால்களுக்கும் பதிலளிக்கும் திறன் கொண்ட இராஜதந்திர பிரிவை உருவாக்க பங்களிப்பு செய்திருந்தார்.

குறிப்பாக, முக்கிய இந்திய வெளியுறவுக் கொள்கை முன்முயற்சிகளை உருவாக்குவதிலும், பல மூலோபாய உரையாடல் மன்றங்களை நிறுவுவதிலும் நெருக்கமாக செயற்பட்டவராகவே இராஜதந்திரி சந்தோஷ் ஜா காணப்படுகிறார்.

அதே போன்று பூகோள அரசியல் மற்றும் பொருளாதாரத்தை மையப்படுத்தி உலகளவில் புகழ்பெற்ற ரெய்சினா கலந்துரையாடல்களிலும் முக்கிய பங்கை வகித்துள்ளார்.

அத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களையும் கையாண்டுள்ளார்.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற 2007 தொடக்கம் 2010 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பில் உள்ள இந்தியா உயர்ஸ்தானிகராலயத்தில் முதன்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

குறிப்பாக, இலங்கையில் இறுதிப்போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார மற்றும் கட்டுமான துறைகளை மேம்படுத்தும் இந்திய திட்டங்களிலும் முக்கிய பங்கை வகித்திருந்தார்.

எனவே, இலங்கையின் உள்ளக அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பரந்துபட்ட அனுபவத்தை கொண்ட மூத்த இராஜதந்திரியான சந்தோஷ் ஜாவை கொழும்பில் அடுத்த உயர்ஸ்தானிகராக கடமைகளை பொறுப்பேற்க டெல்லி அனுப்புகிறது.

இலங்கையை மையப்படுத்திய சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்து இந்தியாவின் மூலோபாய கவலைகள் அதிகமாக காணப்படுகின்ற சூழலில் இந்த நியமனம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இனவாதத்தினால் தமிழரை ஒரு போதும் அழிக்க முடியாது – மனோ

“இனவாத சூறாவளி சுழன்றடித்தாலும், சுற்றி சுற்றி அடித்தாலும், சுனாமியாக அடித்தாலும் சரி தமிழர்களை ஒழிக்கவோ, அழிக்கவோ முடியாது.”

இவ்வாறு கனடா – டொரென்டோவில் நடைபெற்ற தமிழர் தெருத் திருவிழாவில் உரையாற்றிய தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:-

“இலங்கையில் வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும், மலையகத்திலும், நாடு முழுக்கவும் யுத்தம் இல்லை. ஆனால், இனவாதம் இருக்கின்றது.

இனவாதத்தை அழித்து, வீழ்த்தி நியாயமான தீர்வைப் பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

தமிழக தாயகம், இலங்கை தாயகம் ஆகியவற்றுக்கு வெளியே இங்கே கனடாவில் வாழ்கின்ற தமிழர்கள்தான் அதிக துடிப்புடன் இருக்கின்றீர்கள். இந்நோக்குக்காக நீங்கள் அதிக பங்களிக்க வேண்டும்.” – என்றார்.

மன்னார் மடு ஆலயம் மத நல்லிணக்கத்தின் அடையாளம் – அமெரிக்க தூதுவர்

மன்னார் ஆயர் மற்றும் பிடெலிஸ் பெர்னாண்டோ ஆகியோர் சமய நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் மதத் தலைவர்கள் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜூலி சங் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,வரலாற்று சிறப்புமிக்க மடு மாதா ஆலயத்திற்கு சென்றேன். இந்த புனித இடத்திற்கு என்னை வரவேற்றதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

மேலும் மன்னாரில் மதங்களுக்கிடையிலான ஒற்றுமையின் சக்தி வாய்ந்த சின்னம் என்று மடு மாதா ஆலயத்தை குறிப்பிட்டுள்ளார்.