ஜி7 நாடுகள் ராஜபக்க்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் – கனடா வெளியுறவு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் மீது தாம் விதித்ததை போன்று ஜி7 நாடுகளும் பொருளாதார தடைகளை விதிக்க ஆதரவு தரும் வகையில் கனடா செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜொலி, இந்த தடையை ஜி7 நாடுகளும் பின்பற்றவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “கனடா எப்போதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகச் செயல்படுகிறது என்ற அடிப்படையிலேயே, ராஜபக்ஷ சகோதரர்கள் மற்றும் மற்றவர்கள் மீது கடுமையான தடைகளை விதிக்க முடிவு செய்தது

இதனையடுத்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜி7 நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கிய ராச்சியம், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை வலியுறுத்துவதே தமது நோக்கம்.’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இலங்கைப் பிரதிநிதிகள் இருவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதிகள் இருவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மிலிந்த ஹெட்டியாராய்ச்சி மற்றும் இந்திரஜித் ஹெட்டியாராய்ச்சி ஆகிய இருவருக்கு எதிராகவே இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பை மாசுபடுத்தியமை உள்ளிட்ட 08 குற்றச்சாட்டுகளின் கீழ், கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் உள்ளூர் முகவர் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளிட்ட பிரதிவாதிகள் 08 பேருக்கு எதிராக கடல்சார் சூழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு இன்று (சனிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்தநிலையில், இவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த பிடியாணை பிறப்பித்துள்ளார்.

கடந்த வருடத்தின் மத்திய பகுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன்களுடன் சரக்குகளை ஏற்றிச்சென்ற போது தீப்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதம் 09 இல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி வியாழக்கிழமை நடத்த தேசிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வது சனிக்கிழமை பிற்பகல் 12 மணியுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து தேர்தலை நடத்தும் திகதியை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 4 ஆம் திகதி புதன்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.

இதற்கமைய கடந்த 5 ஆம் திகதி முதல் நேற்று வெள்ளிக்கிழமை வரை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்,சுயாதீன குழுக்கள் நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்ட செயலகங்களில் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தின.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பம் கடந்த மாதம் 5 ஆம் திகதி முதல் கோரப்பட்டன.விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் இன்றுடன் நிறைவு பெறும்.

கடந்த 18ஆம் திகதி (புதன்கிழமை) முதல் இன்று 21 ஆம் திகதி வரை வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உட்பட பெரும்பாலான சுயாதீனக் குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி அடிப்படையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியும்,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் ஒருசில மாவட்டங்களில் கூட்டணியாக போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இதுவரை பொதுச் சின்னம் தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை.

யாழ்.மாநகர முதல்வராக ஆர்னோல்ட் மீண்டும் பதவியேற்பு

யாழ். மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் மீண்டும் புதிய முதல்வராக இன்று (21) சனிக்கிழமை பதவியேற்றார்.

யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் அதன் முதலாவது சமர்ப்பிப்பின்போது தோற்கடிக்கப்பட்டது.

இதனையடுத்து முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்ததனால் வெற்றிடமாக இருந்த முதல்வர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரை தெரிவுசெய்வதற்கான கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போது 24 உறுப்பினர்கள் கூட்ட மண்டபத்தில் கூடியிருந்தனர். கூட்டத்துக்குத் தேவையான நிறைவெண் இருப்பதனால் கூட்டத்தை தொடர்ந்து நடத்துவதாக உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் அறிவித்ததோடு, முதல்வருக்கான முன்மொழிவுகளை கோரினார்.

தமிழரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட்டின் பெயர் முன்மொழியப்பட்டது.

இதனையடுத்து முன்மொழிவை ஆட்சேபிப்பதாக தெரிவித்து ஈ.பி.டி.பி கட்சியை சேர்ந்த எம்.ரெமீடியஸ் சபையிலிருந்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் சபையை விட்டு வெளியேறினர்.

இதனால் தெரிவை கொண்டு நடத்துவதற்குத் தேவையான கோரம் இல்லாத காரணத்தினால் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், தெரிவுக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு நியாயமற்றது என கூட்டத்தில் கலந்துகொண்ட 20 உறுப்பினர்கள் தமது எழுத்து மூல ஆட்சேபனையை உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

இது தொடர்பில் ஆளுநர் தலைமையில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் முன்னாள் உள்ளூராட்சி ஆணையாளர்களில் ஒருவரும் கூடி ஆராய்ந்ததாகவும், அதன் பின் யாழ். மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இ. ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்பட உத்தரவிட்டுள்ளதாகவும் ஆளுநர் செயலக வட்டாரங்களில் இருந்து அறிய முடிந்தது.

2012 ஆம் ஆண்டு 22ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 66(எ) பிரிவின் கீழ், கடந்த வியாழக்கிழமையன்று நடத்தப்பட்ட தெரிவின் மூலம் முன்மொழியப்பட்டபடி, இ. ஆர்னோல்ட் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக பிரகடனப்படுத்தப்படுவதற்கான விசேட வர்த்தமானி வெளியானது. அதனையடுத்து இன்றைய தினம் ஆர்னோல்ட் முதல்வர் பதவியை பொறுப்பேற்றார்.

அபிவிருத்திப் பணிகளுக்கு பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு அவசியம் – ஜனாதிபதி

நூறாவது சுதந்திர தினத்தின்போது இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு பல்கலைக்கழக சமூகம் உள்ளிட்ட இளைஞர், யுவதிகளின் ஆகக்கூடிய பங்களிப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அபிவிருத்திப் பணிகளின்போது பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு மிக அவசியம் என்றும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு இணையாக தேசிய இளைஞர் தளத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

2048 ஆம் ஆண்டாகும்போது சுபீட்சமானதும் பலம் மிக்கதுமான இலங்கையை கட்டியெழுப்பும் வேலைதிட்டத்தில் பங்குதார்களாவதற்கு இலங்கையின் இளைஞர் யுவதிகளுக்கு வாய்ப்பளித்தல் மற்றும் 25 வருட கால அபிவிருத்தி வேலைதிட்டத்துக்கு இளைஞர் சமூகத்தை பொறுப்பு மிக்க பங்காளர்களாக இணைத்துக் கொள்ளுதல் என்பன தேசிய இளைஞர் தளத்தின் நோக்கங்களாகும்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களை இணைத்துக்கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய நகரங்களை சுற்றுலா நகரங்களாக மேம்படுத்தும் வேலைத்திட்டமொன்றும் இதன் கீழ் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அது தொடர்பான முன்மொழிவுகளும் இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

அதற்கமைய, யாழ்.மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களும் அநுராதபுரம் மாவட்டம் தொடர்பான சுற்றுலா திட்டங்களை களனி மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகங்களும் கையளித்தன.

ருஹுனு பல்கலைக்கழகம், சப்ரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து காலி மாவட்டத்தை மையமாகக் கொண்ட சுற்றுலா மேம்பாட்டு வேலைத் திட்டங்களையும் கொழும்பு பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், நுண்கலை பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து கொழும்பு மாவட்டத்திற்கான வேலைத் திட்டங்களையும் சமர்ப்பித்துள்ளன.

பேராதனை, வடமேற்கு மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்கள் இணைந்து கண்டி மாவட்டம் தொடர்பான திட்டங்களையும், கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சுற்றலா மேம்பாட்டு திட்டங்களையும் முன்மொழிந்துள்ளன.

முன்மொழியப்பட்டுள்ள அனைத்து சுற்றுலாத் திட்டங்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன் அவற்றை நடைமுறைப்படுத்தும்போது தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் குறித்தும் இங்கு சுட்டிக்காட்டினார்.

நாட்டின் அபிவிருத்திக்குப் பல்கலைக்கழக சமூகம் பங்களிப்பது மிகவும் நல்லதொரு விடயம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், இந்த தேசிய இளைஞர் தள வேலைத்திட்டத்திற்கு பல்கலைக்கழக கட்டமைப்பு வழங்கும் ஒத்துழைப்புக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

யுஎஸ்எஸ் ஏங்கரேஜ் போர் கப்பலின் இலங்கை வருகை முக்கியமானது – அமெரிக்க பிரதி தூதுவர் டொக்ளஸ் இ.சோனெக்

இலங்கை – அமெரிக்க பாதுகாப்பு கூட்டாண்மையில் இரு நாட்டு படைகளுக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி திட்டமானது 2023 ஆம் ஆண்டில் முக்கியமானதாகவே கருதப்பட வேண்டும். ஏனெனில் இரு நாடுகளுக்கு இடையிலான 75 வருட கால இராஜதந்திர உறவினை நினைவுக்கூறும் இத்தருணத்தில் இருதரப்பு பல்துறைசார் உறவுகள் மற்றும் பேரிடரின் போது மனிதாபிமான ஒத்துழைப்புகள் போன்ற துறைகளை வலுப்படுத்தும் வகையில் ஆர்வத்துடன் இந்த கூட்டுப்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பிரதி தூதுவர் டொக்ளஸ் இ. சோனெக் தெரிவித்தார்.

இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள கூட்டு பயிற்சிகளில் பங்கேற்க வருகை தந்துள்ள அமெரிக்க கடற்படையின் 7 ஆவது படைப்பிரிவை சேர்ந்த யுஎஸ்எஸ் ஏங்கரேஜ் போர் கப்பல் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே பிரதி தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமெரிக்க கடற்படையின் 7 ஆவது படைப்பிரிவை சேர்ந்த யுஎஸ்எஸ் ஏங்கரேஜ் போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைகளுடன் ஒருவாரக்கால கூட்டுப்பயிற்சிகளை முன்னெடுக்கும் வகையில் இந்த கப்பல் கொழும்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மற்றும் முள்ளிக்குளம் ஆகிய கடற்பகுதிகளிலும் இந்த போர் கப்பல் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுப்பட உள்ளது.

CARAT/MAREX என்பது கொழும்பு, திருகோணமலை மற்றும் முள்ளிக்குளம் ஆகிய கடற்படை தளங்களில் முன்னெடுக்க கூடிய இருதரப்பு கடல்சார் பயிற்சியாகும். விசேடமாக இம்முறை ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை மற்றும் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையினரும் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மற்றும் கூட்டாண்மையின் 75 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் இந்த கூட்டுப்பயிற்சி திட்டங்களுக்கு அப்பால் கலை, கலாசார நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையின் யோசனைகள் மற்றும் தந்திரோபாயங்களை பரிமாறிக்கொள்ளும் வகையிலும் நவீன உத்திகளில் போர் மூலோபாயங்களை பயிலும் வகையில் இந்த பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளதாக யுஎஸ்எஸ் ஏங்கரேஜ் போர் கப்பலின் துணை கட்டளையதிகரி கெப்டன் சீன் லூயிஸ் தெரிவித்தார்.

யுஎஸ்எஸ் ஏங்கரேஜ் போர் கப்பலானது கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுப்பட கூடியதாகவும் அதனுடன் தொடர்புப்பட்ட பயிற்சி நடவடிக்கைகளை ஈடுப்பட கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. போர் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் உட்பட போர் வாகனங்களை தாங்கி செல்ல கூடிய வல்லமை இந்த கப்பலுக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் மற்றும் வான் பாதுகாப்பு, சிறிய படகு செயல்பாடுகள் மற்றும் கடல் பாதுகாப்பு அணுகுமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த ஒருவார கால பயிற்சி திட்டம் அமையும் எனவும் கூறினார்.

ஒவ்வொரு பயிற்சிகளும் படைகளுக்கு இடையிலான சிறந்த ஒத்துழைப்பை மிகச்சரியாக பிரதிபலிக்கிறது என்றும், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துதல், அறிவு, திறன் மற்றும் இலக்குகள், கலாச்சாரங்கள் மற்றும் இலட்சியங்கள் பற்றிய புரிதலை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் இருதரப்பு பங்காளித்துவத்தை வலியுறுத்தும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

13ஐ ஏற்றுக்கொள்வதால் தமிழ்த் தேசிய கட்சிகளின் இலக்குகள், கோரிக்கைகள் அத்துடன் மட்டுப்படுத்தப்பட்டு விடாது – இந்திய வெளிவிவகார அமைச்சர்

இலங்கையின் அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வு விடயங்களை உள்ளடக்கியதாக காணப்படும் 13ஆவது திருத்தச்சட்டத்தினையே உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்குரிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன என்று இந்திய வெளிவியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு இந்தியா தொடர்ச்சியாக அழுத்தங்களை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி.ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான ஒருமித்த சந்திப்பு இன்றையதினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றிருந்தது.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஷ்பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா ஆகியோரும் தமிழரசுக்கட்சியின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை.சோ.சேனதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பங்கேற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்புக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அழைக்கப்பட்டிருந்தபோதும், தேர்தல் பணிகள் காரணமாக அவர் சந்திப்பில் கலந்துகொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகரகத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையிலையில் சந்திப்பு ஆரம்பமானதும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த் தலைவர்கள் அனைவரையும் ஒருமித்துச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து சம்பந்தன், முதலில் கருத்துக்களை வெளியிட்டார். அவர், “இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சரித்திரீதியாக காணப்படுகின்ற உறவுகள் பற்றிக் சுட்டிக்காட்டியதுடன் தமிழ் மக்கள் இலங்கையின் பாகத்தில் சரித்திரபூர்வமாக வாழ்ந்து வருகின்றனர். ஆகவே அந்த மக்கள் உள்ளக சுயநிர்ணய உரித்துக்கு சொந்தமுறையவர்கள். இது ஐக்கிய நாடுகள் சாசனத்திலும் காணப்படுகின்றது உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டினார்.

இச்சமயத்தில் குறுக்கீடு செய்த அமைச்சர் ஜெய்சங்கர், நாடு தற்போது முக்கியமானதொரு காட்டத்தில் உள்ளது. பொருளாதார நிலைமகள் மிகவும் சீர்குலைந்துள்ள. இவ்வாறான நிலையில் அடுத்தகட்டம் நோக்கி உங்களது நிலைப்பாடுகள் எவ்வாறு உள்ளன என்று கோரியுள்ளார்.

அதன்போது, அதிகாரங்கள் பகிரந்தளிக்கப்பட்டு தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும். அதன் ஊடாகவே அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வினைக் காண முடியும் என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் இந்தியா கரிசனை கொண்டுள்ளது. அதற்கமைவாகவே 1987ஆம் ஆண்டு இலங்கை –  இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்ட அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச்சட்டம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அது இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றார்.

இதனையடுத்து, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தனது நிலைப்பாடு ஏனையவர்களின் நிலைப்பாடுகளுடன் மாறுபட்டுக் காணப்படுவதாக குறிப்பிட்டதோடு, ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதானது தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான அதிகாரங்களை பகிர்வதாக அமையாது. ஓற்றையாட்சிக்குள் அதிகாரங்கள் பகிரப்பட்டால் அவை மீண்டும் இலகுவாக மத்திய அரசாங்கத்திடம் மீளச் சென்றுவிடும்.

இதற்கு உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் உதாரணங்களாகக் காணப்படுகின்றன. ஆகவே, ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தச் சட்டத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு முழுமையான சமஷ்டி அடிப்படையில் தான் தமிழர்களுக்கான தீர்வு அமைய முடியும். அதன் மூலம் அந்த மக்களின் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார்.

இதன்போது, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சமஷ்டிக் கோரிக்கையை நான் நிராகரிக்கவில்லை. ஆனால் இலங்கையின் அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச்சட்டமே காணப்படுகின்றது. அதனைக்கூட இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இழுபறியான நிலைமைகள் காணப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தான் உடனடியாகச் சாத்தியமாகவுள்ளது.

ஆகவே, 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தங்களை வழங்குவோம். மேலும் 13ஆவது திருத்தச்சட்டத்தினை தற்போது ஏற்றுக்கொள்வதால் உங்களுடைய இலக்குகள் கோரிக்கைகள் அத்துடன் மட்டுப்படுத்தப்பட்டு விடாது. அத்துடன் 13ஆவது திருத்தசட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தவதற்கே தயக்கங்கள் அரசாங்கத்திடத்தில் காணப்படுகின்றபோது சமஷ்டி விடயங்கள் நீண்டகால அடிப்படையிலானது. அதற்குள் ஏனைய விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்துவிடும். ஆகவே சாத்தியமான விடயத்தினை முதலில் அணுகவேண்டும் என்றார்.

இதனைத்தொடர்ந்து, சுமந்திரன், கஜேந்திரகுமாரின் கருத்தினை நான் முழுமையாக ஏற்றுக்கொள்வதோடு எமது நிலைப்பாடும் அதுவாகவே உள்ளது. எனினும்  நாம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். அதில் எமக்கு முழுமையான நம்பிக்கைகள் இல்லை. இருப்பினும், நாம் கிடைத்த வாய்ப்பினை கைவிட்டவர்கள் என்ற குற்றச்சாட்டு ஏற்படக்கூடாது என்பதற்காக பேச்சுக்களில் பங்கேற்றோம். அதன் பின்னர் அரசாங்கத்திற்கு காலக்கெடுவொன்றை வழங்கியுள்ளோம்.

அதற்குள் உடனடிப் பிரச்சினைகள் மற்றும் அரசியலமைப்பில் உள்ள அதிகாரப்பகிர்வு விடயங்கள் ஆகியவற்றை முன்னெடுக்குமாறு கோரியுள்ளோம். இந்த நிலையில் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு மூன்று வருடங்களை கோரியிருக்கின்றார். அத்துடன் 2018இல் இணங்கிய காணிகளையே தற்போது விடுவிப்பதாக அறிவித்துள்ளார். ஏனைய அபகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் எவ்விதமான அறிவிப்புக்களும் இடம்பெறவில்லை என்றார்.

இதனையடுத்து, சித்தார்த்தன், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு, நாம் ஆறு கட்சிகளின் தலைவர்கள் கூட்டிணைந்து அனுப்பிய கடித்தில் அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13ஆவது திருத்தசட்டத்தினையே முதலில் முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளோம் என்பதை தாங்கள் அறிவீர்கள். அந்த விடயத்தில் இந்தியாவின் அழுத்தம் தொடர வேண்டும் என்றார்.

தொடர்ந்து, சுரேஷ்பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா உள்ளிட்டவர்கள், நாடு பொருளாதார நெருக்கடிக்குள் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதனை அடிப்படையாக வைத்து மாகாண சபைகளுக்கான தேர்தல் நான்கு வருடங்களாக முன்னெடுக்கப்படவில்லை. அதற்கான அதிகாரங்கள் முழுமையாக அமுலாக்கப்படவில்லை.

வடக்கு, கிழக்கில் அரசியல் பொருளாதார ஸ்திரமடையச் செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்திற்கும் குறித்த மாகாணங்கள் கணிசமான பங்களிப்பினைச் செய்ய முடியும்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல் பகுதிபகுதியாக நடத்தப்பட்டிருந்தது. ஆகவே தற்போது வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தலை அரசாங்கம் நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தும் முகமாக முன்னெடுக்க முடியும்.

அதேநேரம், இந்தியாவின் மாநிலங்களுக்கு வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வருவதற்கான அதிகாரங்கள் காணப்படுகின்றன. ஆனால் இலங்கையின் மாகாணங்களுக்கு அவ்விதமான அதிகாரங்கள் இல்லை. ஆகவே சிறப்பு ஏற்பாடாக அவ்விதமான அதிகாரத்தினை வழங்குவதற்கு மத்திய அரசாங்கம் அனுமதிகளை அளித்தால் இந்தியா மற்றும் புலம்பெயர் தரப்பு ஆகியவற்றின் ஊடாக முதலீடுகளை உட்கொண்டு வருவதற்கு முயற்சிக்கலாம்.

அதேநேரம், வடக்கில் ஐயாயிரம் கடலட்டைப் பண்ணைகள் ஸ்தாபிக்கப்படும் நிலையில் அதற்கான மூலங்களை சீன நிறுவனமே வழங்குகின்றது. இவ்விதமான சீனாவின் பிரசன்னங்களையும் கட்டுப்படுத்த முடியும். அத்துடன் பலாலி விமானநிலையத்தின் விமான ஓடுபாதையை விஸ்தரிப்பதன் ஊடாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகளின் விமானங்கள் வருகை தருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அதன் ஊடாக அந்நியச் செலாவணியை பெருமளவில் ஈட்டிக்கொள்ள முடியும் என்றனர்.

இதனையடுத்து, மீண்டும் கஜேந்திரகுமார் சமஷ்டித் தீர்வு சம்பந்தமான கருத்துக்களை முன்வைத்தார். சம்பந்தன், வடக்கு, கிழக்கில் இந்தியாவின் முதலீடுகளை வலுவாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தார்.

ஈற்றில், வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா திருகோணமலை எண்ணெய் குதங்கள் மற்றும் பொருளாதார வலயம் தொடர்பில் கரிசனைகளைச் செலுத்தியுள்ளதோடு, வடக்கிலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்று குறிப்பிட்டதோடு, சமஷ்டி விடயம் சம்பந்தமாக தான் ஏற்கனவே கூறிய கூற்றினை மீள நினைவுபடுத்தியதுடன் சந்திப்பு நிறைவுக்கு வந்தது.

சமஷ்டி அரசியலமைப்புக்கு ஆதரவளியுங்கள் – இந்தியாவிடம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கோரிக்கை

தமிழர் தேசத்தை அங்கீகரித்து அதனைப் பாதுகாக்கும் வகையில் இலங்கையில் சமஷ்டி அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு இந்தியா முழுமையான ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்றையதினம் தமிழ்த் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின்போது பங்கேற்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த எழுத்துமூலமான கோரிக்கையை அவரிடத்தில் கையளித்துள்ளார்.

குறித்த கோரிக்கை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள் வருமாறு,

பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு கட்டத்தில் உள்ளது. கடந்த 75 வருடங்களாக பின்பற்றப்பட்ட கொள்கைகளும் தீர்க்கப்படாத இனப்பிரச்சினையும் இலங்கையை தற்போதைய நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளது.

இலங்கையில் சமீபகால ஏற்பட்ட மக்களின் எழுச்சிகள் ஒரு முழுமையான ‘முறைமை மாற்றத்திற்கு’ தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளமையானது கடந்த காலநிலைமைகள் தொடர்ந்தும் நீடிப்பதற்கு விரும்பவில்லை என்பதை உணர்த்துகிறது.

இலங்கையில் இனப்பிரச்சினை நீடிப்பதற்கான முக்கிய காரணங்களில் மிக முக்கியமானதொன்று ஒற்றையாட்சி அமைப்பாகும்.

இந்நிலையில், இலங்கை அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டதில் இருந்து தமிழர்கள் அதை நிராகரித்து வருகின்றனர். மத்திய அரசாங்கத்தின் கட்டமைப்பு ஒற்றையாட்சியாக இருக்கும் வரை, மாநிலத்தில் அர்த்தமுள்ள சுயாட்சியை அடைய முடியாது.

13ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டு 36 வருடங்களின் பின்னர், அது அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தினை விடவும் நிலைமை மிகவும் மோசமாக உள்ளன. உயர் நீதிமன்றங்களின் 30க்கும் மேற்பட்ட நீதித்துறை தீர்ப்புகள் அதிகாரப்பகிர்வு எதிராகவே உள்ளனரூபவ் மத்திய அரசாங்கம் அனைத்து அதிகாரங்களின் களஞ்சியமாக இருக்கும் என்றே அத்தீர்ப்புக்கள் பொருள்கோடல் செய்கின்றன.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுக்கான அடிப்படையான 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்க வேண்டும் என்று இந்தியா கோரிவருகிறது. ஆனால் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பல்வேறு விதிகளை நடைமுறைப்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றங்களை அணுகிய போதெல்லாம் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் அதிகாரப்பகிர்வுக்குச் சார்பாக அமையவில்லை.

அந்த வகையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் பேச்சுவார்த்தைக்கான ஆரம்பப் புள்ளியாகக் கருதுவதில் கூட கூடுதலான அரசியல் ஆபத்து உள்ளது. ஒற்றையாட்சிக் கட்டமைப்பிற்கு அப்பால் சென்று கூட்டாட்சிக் கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு, அதனடிப்படையில் அரசியலமைப்புச் சட்டத்தை முன்வைப்பதன் மூலமே நியாயமான தீர்வை எட்ட முடியும் என்பதை சிங்கள தேசம் மக்களுக்குச் சொல்ல வேண்டும். நாட்டின் ஒற்றுமையை உறுதி செய்ய வேண்டும்.

அத்துடன்,  ஐக்கிய இலங்கைக்குள் வடரூபவ்கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் மற்றும் மலையக தமிழ் மக்களின் அபிலாஷைகள் உள்ளடக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நாம் முன்வைத்துள்ளோம்.

இலங்கைக்கான அரசியலமைப்பு தமிழ் தேசத்தை அங்கீகரித்து பாதுகாக்கும் மற்றும் தமிழ் மக்களின் பிரிக்க முடியாத சுயநிர்ணய உரிமையை நனவாக்க அனுமதிக்க வேண்டும்.

நிறைவாக, பிராந்தியத்தில் பொதுவாகவும் குறிப்பாக தமிழ் தேசத்திலும் இந்தியாவின் சட்டபூர்வமான தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு எங்கள் அமைப்புகளின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றோம் என்றுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (ஜன 20) இடம்பெற்றது.

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காக இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை நல்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்டுக் கொண்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் நட்புறவின் பேணலை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்,இது நாளுக்கு நாள் வலுப்பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணி விடுவிப்பு தொடர்பில் யாழ் மாவட்ட செயலர் இராணுவ தளபதியுடன் பேச்சு

யாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை, யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற குறித்த சந்திப்பில், யாழ்ப்பாண மாவட்டத்தில் விடுவிக்கப்படாத காணிகளின் விபரங்கள் தொடர்பாகவும், முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களை மீளக்குடியேற்றுதல் தொடர்பாகவும், விவசாயம் சார் உற்பத்திகளை ஊக்குவித்தல் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் அண்மைக்கால நிலைப்பாட்டின் மேம்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடினாா்.

இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக செயலர் ம.பிரதீபன் , மாவட்ட மேலதிக செயலர் (காணி) எஸ்.முரளிதரன் ஆகியோா் கலந்து கொண்டனர்

யாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை, யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.