அபிவிருத்திக்குழு கூட்டங்களில் மக்கள் சார்ந்த விடயங்களிற்கு உடனடியாக முடிவெடுக்கப்படுவதில்லை- செல்வம் எம்.பி குற்றச்சாட்டு

அபிவிருத்திக்குழு கூட்டங்களில் மக்கள் சார்ந்த விடயங்களிற்கு உடனடியாக முடிவெடுக்கப்படுவதில்லை. அதிகாரிகளும் சமூகமளிப்பதில்லை இது தொடர்பில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் கவனமெடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மின்சார கட்டண விடயத்தில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் நியாயமாக நடந்துள்ளதுடன் அவரது கடைமையை சரியாக செய்துள்ளார். அரசாங்கம் மின்சார கட்டணத்தை அதிகரித்ததுடன், அது தொடர்பாக சரியான வழிமுறைகளை கையாளாத சூழ்நிலையில் அவர் தனது எதிர்ப்பை தெரிவித்தார். அந்த வகையில் அவரின் எதிர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவது தொடர்பான மசோதா வருகின்ற போது தமிழ் தேசிய கூட்டமைப்பும். ஏனைய தமிழ் கட்சிகளும் இணைந்து இந்த விடயம் தொடர்பாக ஒரு முடிவெடுப்போம்.

விலைவாசி அதிகரிப்பின் போது அவர் மக்கள் சார்பாக நின்றவர். எனவே பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவருக்கு ஆதரவழிக்கும் சூழல் உருவாகும். எனவே நாம் கூடி இறுதி முடிவெடுத்து அவருக்கு ஆதரவாக செயற்படுவதே சாலச்சிறந்தது.

அத்துடன் வவுனியா பிரதேச அபிவிருத்திக்கூட்டங்களில் நாம் கலந்துகொள்வதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. உண்மையில் பிரதேசஅபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெறும் நேரங்களில் கொழும்பில் முக்கிய சந்திப்புக்கள், இடம்பெறும் போது அதில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்படுகின்றது.

எம்மிடம் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதுடன் வினோநோகராதலிங்கம் பெரும்பாலான கூட்டங்களில் தனது பங்களிப்பை செய்துள்ளார். அத்துடன் முழுமையாக நாங்கள் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை தவிர்ப்பதில்லை. இனிவரும் கூட்டங்களில் நாங்கள் கலந்து கொள்வோம்.

அத்துடன் அபிவிருத்தி குழு என்ற போர்வையில் ஒரு விடயம் முடிவாக எடுக்கப்படாமல், காலம் தாழ்த்தப்படுகின்றது.முதலில் தீர்மானமாக எடுப்போம், பின்னர் ஜனாதிபதிக்கு கொடுப்போம் என்றவாறே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றது.

மாறாக மக்கள்நலன் சார்ந்த விடயங்களிற்கு உடனடியாக முடிவெடுக்கப்படுவதில்லை. அத்துடன் இக்கூட்டங்களிற்கு திணைக்கள அதிகாரிகள் கூட கலந்து கொள்வதில்லை.

எனவே கூட்டங்களின் போது முடிவெடிக்க வேண்டிய விடயங்களிற்கு அன்றையதினமே முடிவெடுத்தாக வேண்டும். அதற்காக நாங்கள் நிச்சயமாக குரல் கொடுப்போம். வெறும் கூட்டமாக இல்லாமல், அதிகாரிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை அபிவிருத்திக்குழு தலைவர் ஏற்படுத்த வேண்டும்.

அதிகாரிகள் வராவிடில் அவ்விடயம் முடிவு எட்டமுடியாத நிலை ஏற்படும். எனவே அபிவிருத்திக்குழு தலைவர் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். என்றார்.

மகிந்த குடும்பத்தின் ஊழல்களை உடனடியாக விசாரிக்கவேண்டும்! செல்வம் எம்.பி. வலியுறுத்து

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஊழல்கள் உடனடியாக விசாரிக்கப்படவேண்டும் என்பதுடன் ஊழல் பணம் அனைத்தும் மக்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்தப்படவேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நேற்று ரெலோ இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-
நாணய நிதியம் பணம் கொடுப்பது சம்பந்தமாக சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளில் ஊழல்கள் விசாரிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் காரணமாகத்தான் இந்த நாடு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆகவே இந்த ஊழலை விசாரிக்காத பட்சத்தில் நாடு மிகவும் மோசமான சூழலில் அதாவது பின் தங்கிய நிலையில் தொடர்ந்து செல்லும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆகவே மகிந்த ராஜபக்ஷ குடும்பம் இந்த ஊழல் செயற்பாடுகள் மூலம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சியை கொண்டு வந்து இன்றும் நடமாடிக்கொண்டிருக்கும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசாரணை செய்யப்படவேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் கோரிக்கையாக முன் வைக்கிறோம். அப்படி இல்லை என்றால் இங்கு முதலீடு செய்யப்பட்ட வங்கிகளின் பணங்கள் எல்லாம் இந்த கடனுக்காக எடுக்கப்பட்டு மிக மோசமான ஒரு சூழல் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆகவே ஊழலை விசாரிப்பதன் ஊடாகத்தான் இந்த நாட்டில் முன்னேற்றகரமான செயற்பாடுகளைச் செய்ய முடியும். ஜனாதிபதி இனப்பிரச்னைக்கு இவ் வருடத்துக்குள் தீர்வு என மீண்டும் அறிவிக்கத் தொடங்கி இருக்கிறார்.

எங்களை பொறுத்தவரை தீர்வு என்பது எப்படி கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. அந்தக் கேள்வியை ஜனாதிபதியிடமே நாங்கள் கேட்கின்றோம்.

வடக்கு-கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுகின்ற வேலை தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது. அது புத்தசாசன அமைச்சாக இருக்கலாம், வனவள திணைக்களமாக இருக்கலாம், வன ஜீவராசிகள் திணைக்கள மாக இருக்கலாம். இப்படி திணைக்களங்களிடம் அதிகாரங்களைக் கொடுத்து விட்டு இனப்பிரச்னைக்கு தீர்வு என்பது எப்படி சாத்தியாகும்? – என்றார்.

வடக்கை மட்டும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

வடக்கின் அதிகாரப் பரவலாக்கம், நிர்வாகம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் போது கிழக்கு மாகாணத்தையும் ஒன்றிணைத்து நடத்துவது சிறந்ததாக உள்ளது. எனவே இவ் விடயத்தில் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் 11 ,12,13 ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து பேச உள்ளதாகவும் அதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது வடக்கின் அபிவிருத்தி மற்றும் அதிகார பரவலாக்கம் தொடர்பாகவும் வடக்கில் இடம் பெறுகின்ற பிரச்சினைகள் மற்றும் அதற்கு தீர்வு எடுப்பதற்கான விடயங்கள் குறித்து ஆராயப்படும் கூட்டமாக அமைந்துள்ளது.

எங்களைப்பொருத்தவகையில் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது, வடக்கு கிழக்கு எமது தாயக பூமி.

எங்களுடைய தமிழ் மக்கள் ஒரு இனப்பிரச்சினை சார்ந்து நாங்கள் வடக்கு கிழக்கு சார்ந்து இந்த மண்ணை காப்பதற்காகவே எத்தனையோ போராளிகளும் பொது மக்களும் மரணித்தார்கள்.

எனவே வடக்கில் மட்டும் அபிவிருத்தி மற்றும் அதிகார பரவலாக்கம் தொடர்பாகவும் வடக்கில் இடம் பெறுகின்ற பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வு எடுப்பதற்கான விடையங்கள் குறித்து எடுக்கப்படுகின்ற முயற்சிகள் காலத்தை கடத்துகின்ற ஏமாற்றுகின்ற செயல்பாட்டை கையால் வதாகவும் அமைந்துள்ளது.

ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன் வைக்கின்றோம்.

வடக்கு கிழக்கு சார்ந்த அபிவிருத்தி, அதிகார பரவலாக்கல், வடக்கு கிழக்கில் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைக்கின்றோம்.

கோரிக்கை நிறைவேற்றப்படாது விட்டால் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதா? இல்லையா? என்பதை நாங்கள் முடிவெடுக்க கூடும்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு இவ் விடையம் குறித்து ஆராய உள்ளது.

எனவே வடக்கு கிழக்கு இணைந்த அபிவிருத்தி, அதிகார பரவலாக்கல் தொடர்பாக, பேச்சுவார்த்தை இடம் பெற வேண்டும்.என்பது எமது கோரிக்கை.எனவே கிழக்கை விடுத்து எவ்வித நல்லெண்ண முயற்சிகள் எடுத்தாலும்இஅந்த முயற்சி தோல்வியடையும்.

எங்களைப் பொறுத்த மட்டில் வடக்கு, கிழக்கு பிரதான மூச்சாக உள்ளது. எனவே கிழக்கை விடுத்து வடக்கை மட்டும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.இவ்விடயம் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன்.

வடக்கு கிழக்கு இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடலை நடத்த வேண்டும்.

அதன் அடிப்படையில் உரிய காலத்திற்கு முன் தனது கருத்தை மாற்ற வேண்டும். இல்லை என்றால் எதிர்வரும் 11,12,13 ஆகிய திகதிகளில் இடம்பெற உள்ள கூட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியாத துர்பாக்கிய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரமுயர்த்தும் வர்த்தமானியை வெளியிடுமாறு பிரதமருக்கு ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.அவசர கடிதம்

மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு இன்று (03) திங்கட்கிழமை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் அமைச்சரவையில் இருந்து அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

எனினும், இன்னும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படவில்லை என்பதனை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

எனவே, விரைவில் மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) பிரித்தானியக் கிளைக்கூட்டம் இன்று இடம்பெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பிரித்தானியக் கிளையின் கூட்டம் சனிக்கிழமை மாலை கரோவில் தலைவர் திருவாளர் சாம் தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக கட்சியின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கெளரவ. கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்கள் கலந்து கொண்டு சமகால அரசியல் நிலைப்பாடுகள் பற்றிய கலந்துரையாடல்களுடன் எதிர்காலத்தில் வெளிநாட்டு கிளைகளின் பங்களிப்புகள், புலம்பெயர் அமைப்புக்களையும் இணைத்து பயணித்தல் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது.


இன்றைய கூட்டத்தில் இணைந்து கொண்டு சிறப்பித்த மூத்த உறுப்பினர்கள் மற்றும் சக கிளைத்தோழர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

இனப்பிரச்சினை தீர்வுக்கான நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் முன்வைக்க வேண்டும் – செல்வம் எம்.பி

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் நாட்டில் நீண்ட காலம் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் நாடாளுமன்றத்தில்தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

சர்வதேச நாணய நிதியம் நாட்டுக்கு கடன் உதவியை வழங்குவதாக அதிபர் தெரிவித்துள்ளார். இந்த நிதி எமது ஏழை மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும் நடவடிக்கைகளுக்கும் அத்துடன் வைத்தியசாலைகள், பாடசாலைகளின் தேவைகளுக்காக பயன்படுத்தப்படவும் வேண்டும்.

அதேவேளை, நாட்டில் நீண்ட காலமாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்ச்சியாக ஏமாற்றமாகவே காணப்படுகிறது. அதன் முக்கியத்துவம் உணரப்பட்டு சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளில் அதுவும் ஒரு அம்சமாக அமைய வேண்டியது அவசியம்.இந்த எமது கோரிக்கையையும் அதில் உள்ளடக்குமாறு நாம் சர்வதேச நாணய நிதியத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளை, ஊழல் மோசடிகளை தடுப்பது தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. ஆட்சியாளர்கள் ஊழல்களுக்கு முக்கியம் கொடுத்து செயற்பட்டமையே நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டமைக்கான காரணமாகும். ஊழல்களைத் தடுப்பதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த விடயத்தில் நீதியாக நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் அதிபரைக் கேட்டுக்கொள்கின்றோம். ஊழலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து நாடு செழிப்புள்ளதாக மாறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாகாண சபைக்கான அதிகாரங்களை பெற்றுத் தருகின்ற கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது – செல்வம் எம்.பி

மாகாணசபை முறைமையை எதிர்க்கும் தமிழ் காங்கிரஸ் கட்சி மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவார்களா. அல்லது எதிர்த்து நிற்பார்களா  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்  கேள்வி எழுப்பியுள்ளார்.

வவுனியாவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”தேர்தல் என்ற ஒன்று இல்லை என்ற ஜனாதிபதியின் கூற்று எந்தளவிற்கு சரியானதாக இருக்கும் என்று சொல்லத்தெரியவில்லை.

ஏனெனில்  தேர்தலிற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும்போது ஐக்கியதேசியக்கட்சியை சேர்ந்தவர்களும்  பல இடங்களில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருந்தார்கள்.

தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டார்கள், அப்படியிருக்கும் போது ஜனாதிபதியின் கூற்று வேடிக்கையானதாகவே இருக்கின்றது.

தேர்தலை நடாத்துவதில் நிதிப்பிரச்சனை இருக்குமானால் அதனை முன்னமே அறிவித்திருக்க வேண்டும்.இன்னும் சொற்ப நாட்களே இருக்கும் போது அவர் இவ்வாறு தெரிவிப்பதில் நியாயம் இருக்குமா என்று தெரியவில்லை.எனவே தேர்தலை நிறுத்துவது ஜனநாயக விரோதமானது என்பதே எனது கருத்து. உண்மையில் மாகாணசபை தேர்தலே முதலில் நடாத்தப்பட்டிருக்க வேண்டும்.

தென்னிலங்கை கட்சிகள் அதனை முதன்மையானதாக கருதவில்லை. எமது நிலங்களை பாதுகாப்பதற்கான அதிகாரம் 13 வது திருத்ததில் இருக்கின்றது. மாகாணசபை முறைமை கட்டாயம் வேண்டும் அதற்கான தேர்தல் நடாத்தப்படவேண்டும்.

அதன் அதிகாரங்கள் அதிகரிக்கப்படவேண்டும். தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்கும் போது முதலில் எதிர்ப்பவர்கள் பௌத்த பிக்குகளாகவே இருக்கின்றனர். இது ஒரு அர்த்தமில்லாத செயற்பாடு.

வடகிழக்கில் ஒரு நீதியான தீர்வை வழங்கமுடியாது என்ற செய்தியை பிக்குகள் தொடர்ச்சியாக வெளிப்படுத்தியுள்ளனர். 13 வது திருத்தம் அமுல்படுத்தப்பட்டாலும்பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாது என்று ஜனாதிபதி சொல்கிறார். அவரும் பௌத்த பிக்குகளின் சிந்தனையில் செயற்ப்படுவதுபோல தெரிகின்றது. எனினும் சிங்கள மக்கள் அதனை எதிர்க்கின்றார்கள் என்று அர்த்தமில்லை.

தமிழ்த்தரப்பிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி அதனை  எதிர்க்கின்றது. பௌத்தபிக்குகளுடன் இணைந்து அவர்கள் இதனை எதிர்ப்பது வேடிக்கையானதாக இருக்கின்றது. சமஸ்டியே வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள் ஆனால் அதனை பெறுவதற்கான செயற்பாட்டை முன்வைக்கவில்லை. அதனை வென்றெடுப்பதற்கான திட்டம் எதனையும் முன்வைக்கவில்லை.

நான் அவர்களிடம் கேட்கின்றேன் மாகாணசபை முறைமையை எதிர்க்கும் நீங்கள் மாகாணசபை தேர்தல் வந்தால் போட்டியிடுவீர்களா. அல்லது எதிர்த்து நிற்பீர்களா. இந்த கேள்விக்கு பதில் வழங்க வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுநிற்கின்றேன்.

13 வது திருத்ததின் ஊடாக மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட்டு அதற்கான அதிகாரங்களை வழங்குவதற்கான கடப்பாடு இந்தியாவிற்கு இருக்கின்றது. இது அரசியல் சாசனத்தில் ஒரு அங்கமாக இருக்கிறது. அதனை நடைமுறைப்படுத்துமாறே நாம் கேட்கின்றோம். எனவே இந்தவிடயத்தில் இந்தியா தலையிட வேண்டும். அவர்கள் அதை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம். என்றார்.

Posted in Uncategorized

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பதவியை ரெலோ தலைவர் செல்வம் எம்.பி நிராகரித்தார்

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை ஏற்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை நோக்கிய செயன்முறையில், நம்பிக்கை கொள்ளத்தக்க எந்தவிதமான உடனடி நடவடிக்கைகளையும் காண முடியவில்லை. காணி சுவீகரிப்பு, அரசியல் கைதிகள் விவகாரம், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம, மக்களின் வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என எதையும் அரசாங்கம் செய்யாத சூழலில், அரசை காப்பாற்றும் விதமான எந்த முடிவுகளையும் எடுக்க மாட்டோம் என செல்வம் அடைக்கலநாதன் நேரடியாக குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கைதிகள் விடுதலைக்கு யாருடைய ஒப்புதலும் அவசியமில்லை; நீதி அமைச்சருக்கு கூட்டமைப்பு கண்டனம்

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு யாருடைய ஒப்புதலும் அவசியமில்லை . அமைச்சர் கதை அளப்பதை நிறுத்தி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வந்த பிரதிநிதி ஒருவருக்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ அவர்கள் நன்றாக கதை அளந்து இருக்கிறார். நேற்றைய அரச ஊடகப் பத்திரிகையில் இதை கண்ணுற்றது வேடிக்கையாக இருந்தது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தடையாக ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் இருப்பதாகவும் அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமையால் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாமல் இருப்பதாக கூறியிருப்பது விஷமத்தனமானதும் சிறுபிள்ளைத்தனமானதுமாகும்.

நாட்டின் நீதி அமைச்சராக இருக்கும் ஒருவர் அரசியல் கைதிகள் விடுதலை பற்றிய நீதிப்பொறிமுறைகளை அறியாதவராக இருக்கின்றாரா என்ற கேள்வி எழுகிறது. ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட முடியும் என்பதை பட்டியலிட்டு ஆதாரத்தோடு ஜனாதிபதியிடம் கடந்த ஆவணி மாத சந்திப்பிலே நாங்கள் கையளித்திருந்தோம். அதன் பிரகாரம் 13 அரசியல் கைதிகள் வெளிவந்திருப்பது வரவேற்கத்தக்கது. அதன் அடிப்படையில் மற்ற அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட முடியும் என்பதை அரசியல் யாப்பு தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது. வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் மாத்திரம் வழக்கை மீள பெற்ற பின்னர் விடுதலை செய்யப்பட முடியும் என்பதையும் சட்டம் சொல்கிறது.

இது இப்படி இருக்க சிறுபிள்ளைத்தனமான ஒரு புதுக் கதையை நீதி அமைச்சர் அளந்து இருப்பதானது அரசியல் கைதிகள் விடுதலையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் பற்றிய சட்ட விவகாரங்களை அவர் அறிந்திருக்கவில்லையோ என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. இதுவரை காலமும் விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகள் யாருடைய ஒப்புதலின் பேரில் அதுவும் எந்த தமிழ் அரசியல்வாதிகளின் ஒப்புதல் பேரில் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பதை அவர் விளக்குவாரா? அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கைக்கு நாட்டின் நீதி அமைச்சர் என்ற முறையிலே விஜயதாச ராஜபக்க்ஷ அவர்கள் வழங்கிய பதில் அந்தக் கோரிக்கையை எள்ளி நகையாடி இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

நீதி அமைச்சராக தன்னுடைய கடமையை சரியான முறையில் அவர் செயல்படுத்த வேண்டுமே தவிர சிறுபிள்ளைத்தனமான சாட்டுப்போக்குகளைச் சொல்லி தனது கடமைகளை தவிர்த்துக் கொள்வதை அல்லது சட்டத்திலே இருக்கக்கூடிய ஏற்பாடுகளை மூடி மறைப்பதை நாங்கள் கவலையோடு உற்று நோக்குகிறோம்.
அவருடைய இந்த கருத்தானது ஒட்டுமொத்த நாட்டினுடைய நீதிப் பொறிமுறையின் செயல்பாடு எந்த அளவிற்கு சிறுமைப் படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி உள்ளது.

‘சுதந்திர தினம் தமிழருக்கு இல்லை’ பெப்ரவரி 4 மக்கள் எழுச்சி போராட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு – செல்வம் எம்.பி

நான்காம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தின நிகழ்விற்கெதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தமிழரசு கட்சியினுடைய கூட்டம் இடம்பெற்றது. அந்த கூட்டத்திலே பிரிந்து சென்று வரும் தேர்தலிலே பங்கு பற்றலாம் என முடிவெடுக்கின்றார்கள். மட்டக்களப்பில் வடக்கு கிழக்கிலே தேசிய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என மக்கள் போராடுகின்றனர் அதே வேளை முல்லைதீவில் நான்கு நாட்களாக விடுதலைப்புலி போராளி மாதவன் வேலுப்பிள்ளை அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என சாகும் வரை உண்ணாவிரதத்தினை மேற்கொள்கின்றார். இந்த இரண்டு போராட்டங்களும் தமிழரசு கட்சியினுடைய காதுகளில் எடுபடவில்லை.

நாங்கள் அந்த போராளியை சென்று பார்வையிட போது சில கோரிக்கைகளினை எழுதி அதை நடைமுறைபடுத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவேன் எனக்கூறியிருந்தார். குறிப்பாக எல்லா கட்சிகளும் இணைந்து செயற்படவேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதில் நாங்கள் கையெழுத்திட்டோம்.விக்கினேஸ்வரன் ஐயாவும் கையொப்பமிட்டு உண்ணா நோம்பினை முடிவுக்கு கொண்டு வந்தார்.

எமக்கு வழிகாட்டியாக இருந்த தமிழரசு கட்சி ஒரு சிறிய தேர்தலிலே பிரிந்து செல்வதாக முடிவெடுப்பது சுமந்திரன் போன்றோரின் உள்நுழைவு தான் காரணம். இதனாலே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் விலகிச்சென்றார்கள். அதனை தொடர்ந்து பிரேமசந்திரனின் கட்சியும் விலகி சென்றது. ஆமை புகுந்த வீடு விளங்காது.

இவ்வாறாக அவர் வந்த பின்னர் வாக்காளர்களும், நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் குறைந்தது. இன்று 10 ஆக இருக்கின்றோம். 3 கட்சிகள். முன்னர் 6 காட்சிகள் இருந்தன. அதன் பின்னர் வெளியில் நாங்கள் 6 காட்சிகளாக இயங்கினோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகியவர்களை உள்ளெடுக்க விரும்பவில்லை. மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனால் சம்மந்தன் ஐயா ஏற்றுக்கொண்டார். சுமந்திரன் மறுத்தார். அந்த கூட்டத்தில் நாங்களும் இருந்தோம். எமக்கும் சில காட்சிகள் மேல் கோபமுள்ளது. அதனை உடனடியாக தீர்க்க முடியாது என்று சொன்னார்கள்.

அவ்வாறிருந்தும் நங்கள் இறுதியாக ஜனாதிபதி பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்த காலத்திலிருந்து தொடர்ச்சியாக இவ் 6 கட்சிகளும் ஒன்றிணைந்து கலந்தாலொசித்தது தான் சென்றோம். மக்களுடைய தேவைக்காக ஒற்றுமையாக செயற்பட்ட நாங்கள் இந்த தேர்தலுக்காக பிரிந்து செல்ல வேண்டும் என்ற நோக்கம் எவரால் கொண்டுவரப்பட்டது?

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிக்கு மனமார்ந்து சேவையாற்ற வழங்கியதற்கு வணங்குகின்றேன். விடுதலையின் கட்சியாகவே இனி திகழும். விடுதலை தலைவனின் அங்கீகாரம் ஊடாகவே இது ஆரம்பிக்கப்பட்டது. ஆகவே, இந்த கட்சிகளின் பெயர்கள் உச்சரிக்கப்படாது.

தேர்தலின் பின்னர் இணைவோம் என பொய் பிரசாரம் செய்கின்றனர். அவ்வறை இணைவதாயின் எம்

குத்து விளக்கு சின்னத்தில் தான் தேர்தல் கேட்க வேண்டும் . பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து கொள்ளலாம் என அறைகூவல் விடுகின்றோம்.

ஒவ்வொரு நிலமும் திணைக்களத்தாலும், முப்படையாலும் அபகரிக்கபடுகின்றது. ஜனாதியிடம் கேட்டால் கட்டளை இடுகின்றார். அதனை ஏற்க அவர்கள் தயாராக இல்லை.

பேச்சு வார்த்தை என்பது இப்பொழுது தம் சுயநலத்திற்காக அழைத்து பேசிய பின்னர் பேசிவிட்டோம் என்று சொல்லும் நிலையிலே உள்ளது. அதனால் நாம் ஒன்றாக சர்வகட்சி மாநாட்டிற்கு செல்வதில்லை என முடிவெடுத்துள்ளோம். காரணம் நிலத்தை அபகரிக்கின்ற,நிலத்தை விடுகின்ற சூழலை கேட்டோம் அத்தோடு அரசியல் கைதிகளை விடுவிக்கவில்லை, காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நியாயம் கிடைக்கவில்லை.

தென்னிலங்கையில் எம் நிலங்களை பறிக்கின்ற நிலை மாறும் ஒற்றுமையின் சக்தியாக செயற்படக்கூடிய

வாய்ப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கும். வரும் 4 ஆம் திகதி சுதந்திரதின விழாவிலே அந்த சுத்தந்திரம் எமக்கில்லை என சொல்லுகின்ற போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள பல்கலைக்கழக மாணவர்களிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உங்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி உங்களுடன் பயணிப்போம் என்பதை செய்தியாக கூறுகின்றோம்.

ஆகவே எமது போராட்டம் எதுவானாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில் நிற்கும். எமது வீர மறவர்களின் கரங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தியுள்ளது. மண்ணினதும் மக்களினதும் விடுதலையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிச்சயமாக அணிதிரண்டு மக்களாக செயற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.