நீதி அமைச்சர், சட்டமா அதிபர் உடன் பதவி விலக வேண்டும் செல்வம் எம்.பி. வலியுறுத்து

‘‘தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பைச் சொல்லுகின்ற நிலையில் இருக்கக்கூடாது, அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகின்ற அல்லது வேறு யாரும் சொல்கின்ற தீர்ப்பைத்தான் வாசிக்க வேண்டும் என்ற நிலை இப்போது வெளிப்படையாகக் தெரிகின்றது.” – இவ்வாறு ரெலோவின் தலை வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘‘உண்மையிலேயே இந்த நாட்டில் நீதித்துறை நேர்மையான முறையில் இருக்கின்றதா என்ற கேள்வி எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா தன்னுடைய பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

அவரின் கருத்துக்களைப் பார்க்கின்றபோது சட்டமா அதிபர் கூட இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றார் என்ற செய்தி அறியக்கூடியதாக உள்ளது. நீதித்துறை எங்கே செல்கின்றது?

பதவி விலகிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தமிழ்ப் பிரதேசத்தில் இருந்தவர். நியாயமான தீர்ப்பை அவர் வழங்கியதால் தென்னிலங்கையிலே அவர் ஓர் இனவாதியாகவும், ஒரு தமிழராகவும் பார்க்கப்பட்டது. இதன் காரணமாகவே அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

நீதித்துறை என்பது நியாயமான வகையில் செயற்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது. மக்கள் நீதித்துறையை நம்பித் தான் இன்றைக்கு நீதிமன்றத்துக்குச் செல்கின்றார்கள்.

ஆனால், இப்போது இருக்கின்ற நிலையைப் பார்க்கும்போது தமிழ் நீதிபதிகள் நியாயமாகச் செயற்படுகின்ற வாய்ப்பைத் தடுக்கின்ற – அவர்களை அச்சுறுத்துகின்ற செயற்பாடுகள் அரங்கேறுகின்றன. முல்லைத்தீவு நீதிபதியின் இராஜிநாமா செய்தி இதனை உணர்த்துகின்றது.

ஆகவே, தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பைச் சொல்கின்ற நிலையில் இருக்கக் கூடாது, அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகின்ற அல்லது வேறு யாரும் சொல்கின்ற தீர்ப்பைத்தான் வாசிக்க வேண்டும் என்ற நிலை இப்போது வெளிப்படையாகத் தெரிகின்றது. ஆகவே, நீதித் துறைக்கு விட்ட சவாலாக இது அமைந்துள்ளது.

நீதி அமைச்சர் இந்த விடயத்தை ஆராய வேண்டும். முல்லைத்தீவு நீதிபதியின் இராஜிநாமாவில் அழுத்தம், உயிர் அச்சுறுத்தல் இருக்குமாக இருந்தால் நீதி அமைச்சர் இராஜிநாமா செய்ய வேண்டும்.

ஏனென்றால் அவர் அமைச்சராக இருக்கும்போது நீதிக்கே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே, இந்தச் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இதை நாடாளுமன்றத்தில் ஒரு பிரச்சினையாக எடுத்துக்கொள்ள இருக்கின்றோம்.

எதிர்க்கட்சியில் இருக்கும் தமிழ் பேசுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இதில் உள்ளடக்கி என்ன செய்யலாம் என்று நாங்கள் ஆராய்ந்து நிச்சயமாக நீதித்துறைக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற இந்தச் சவாலை முறியடிக்க வேண்டும்.

ஏனென்றால் நீதி நடுநிலையானது. அது யாருக்கும் தலைசாய்வதில்லை. அந்தவகையில் எங்களுடைய நீதிபதி சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார். அவரின் குருந்தூர்மலை தீர்ப்பு அவருக்குப் பல அழுத்தங்களையும், அச்சுறுத்தல்களையும் கொடுத்துள்ளது. இதில் புத்த பிக்குகளின் கூட்டமும் அடங்குகின்றது என எண்ணுகின்றேன். இந்த நாட்டை ஆட்சி செய்பவர்கள் புத்த பிக்குகளா? என்ற சந்தேகம் எழுகின்றது.

எனவே, இந்த விடயத்தில் அனைத்து நீதிபதிகளையும் காப்பாற்றுகின்ற பொறுப்பு எங்களுக்கும், எங்களுடைய மக்களுக்கும் இருக்கின்றது. ஆகவே, தீர்ப்பு நியாயமாக வழங்கப்பட வேண்டுமென்றால் நீதித்துறைக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளவர்கள் தமது பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும்.

சட்டமா அதிபரின் அழுத்தம் உள்ளது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். எனவே, அவரும் இராஜிநாமா செய்வது சிறந்தது எனக் கருதுகின்றேன். நாங்கள் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதன் ஊடாகவே நீதித்துறையை நடுநிலைமைக்குக் கொண்டு வர முடியும். முல்லைத்தீவு நீதிபதி தனது பதவியை இராஜிநாமா செய்கின்ற அளவுக்கு மிக மோசமான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய நீதி அமைச்சரும், சட்டமா அதிபரும் இராஜிநாமா செய்ய வேண்டும்.” – என்றார்.

தமிழர் தரப்பில் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ! நாடாளுமன்றில் தனித்து இயங்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்

அடுத்த ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை தமிழர் தரப்பு சார்பில் நிறுத்துவது என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் பங்காளிக் கட்சியான ஈ. பி. ஆர். எல். எவ்வின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரனின் இல்லத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தலைவர் த. சித்தார்த்தன், ஈ. பி. ஆர். எல். எவ். தலைவர் சுரேஷ் பிறேமசந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என். சிறீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் வேந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்திலேயே ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்றும் இது தொடர்பில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் பேச்சு நடத்துவது எனவும் முடிவு எட்டப்பட்டது. அத்துடன், இந்த உத்தியை கொண்டு சிங்கள தரப்புகளிடம் பேச்சு நடத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசுக் கட்சி விலகிய போதிலும் அந்தக் கட்சியின் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம். பியே இப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கொரடவாக உள்ளார். இதனால், பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரத்தில் தமக்கு போதுமான நேரம் ஒதுக்கப்படுவதில்லை என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், பாராளுமன்றத்தில் தனித்து செயல்படவும் அந்தக் கட்சியின் எம். பிக்கள் முடிவு செய்துள்ளனர்.

இதே நேரம், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது தொடர்பாக அனைத்து தமிழ் கட்சிகளுடனும் மீண்டும் பேசி இந்திய தூதுவரை சந்தித்து இது தொடர்பில் பேசுவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாகவும் அறிய வருகின்றது.

மனித புதைகுழிகளை மறைப்பதற்காகவே அவ்விடங்களில் விகாரைகள்? ரெலோ தலைவர் செல்வம் எம்.பி சந்தேகம்

மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே பௌத்த விகாரைகளை அமைத்தும் இராணுவம் நிலங்களை கையகப்படுத்தியும் வருகின்றார்கள் என்ற சந்தேகம் எழுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொக்குதொடுவாயில் மனித புதைக்குழிகளில் இருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என தென்னிலங்கை தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் கிடப்பிலே உள்ளது எனவும் ஒவ்வொரு இடத்திலும் மனித எச்சங்களை கண்டு பிடித்து கிடப்பில் போடும் நிலையே இலங்கையில் காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, இந்த விடயத்தில் சர்வதேசம் சரியான கவனத்தை எடுக்க வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன சுட்டிக்காட்டியுள்ளார்.

குருந்தூர்மலை தமிழரின் காணிகள் விடுவிக்கப்பட உடனடி வாய்ப்பில்லை – செல்வம் அடைக்கலநாதன் எம். பி.

தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் உடனடியாக விடுவிக்கப்படும் ஒரு சூழல் இல்லாதிருக்கின்றது என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தண்ணிமுறிப்பு – குருந்தூர்மலையில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் தொல்பொருள் திணைக்களத்தால் சுவீகரிக்கப்பட்ட நிலையில் குறித்த காணிகளை விடுவிப்பது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் அங்கு சென்று நிலைமைகளை அவதானித்தனர்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

குருந்தூர்மலை பிரதேசத்திலே வனவளத் திணைக்களம், தொல்லியல் போன்ற ஆளுகைக்குட்பட்ட காணிகளை விடுவிப்பது சம்பந்தமாக கள நிலவரத்தை அவதானித்தோம்.

இதன் அடிப்படையில், உடனடியாக இந்த நிலங்கள் விடுவிக்கப்படும் சூழல் இல்லாதிருக்கின்றது. மீண்டும் ஜனாதிபதியோடு பேசுகின்ற வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று வந்திருக்கின்ற உயர் அதிகாரிகள் இந்த விடயம் சம்பந்தமாக கூறியிருக்கிறார்கள்.

நாங்கள் மக்கள் இருந்த பூர்வீக காணிகள் என்று உறுதிபட கூறியிருக்கின்றோம். அதனை ஜனாதிபதியிடமும் எடுத்து கூறி விடுவிப்பதற்கான முயற்சியை மேற்கொள்வோம். என்னைப் பொறுத்தமட்டிலே இது உடனடியாக நடக்குமா என்று சந்தேகம் இருக்கிறது – என்றார்.

இடைக்கால ஏற்பாடாக 13ஐ செயல்படுத்த கோரும் உங்கள் நகர்வே சரியானது – தமிழ் கட்சிகளை பாராட்டினார் அமெரிக்க தூதுவர்

“நீங்கள் எதிர்பார்க்கும் புதிய அரசமைப்பு இப்போதைக்கு வரும் சாத்தியமில்லாத நிலையில், 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரும் உங்களது நகர்வு சரியானது” – இவ்வாறு நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் தன்னை சந்தித்த தமிழ் கட்சிகளின் தலைவர்களிடம் நேரில் தெரிவித்தார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்.

கொக்குவிலில் விருந்தினர் விடுதியில் இந்த சந்திப்பு நடந்தது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவர் த. சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

சுமார் ஒரு வருடத்தின் பின்னர் யாழ்ப்பாணம் வந்துள்ள அமெரிக்க தூதுவர் வடக்கை மையப்படுத்திய அரசியல் விவகாரங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார் என்றும், ஜனாதிபதி தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் அவர் கட்சிகளின் கருத்துகளை கேட்டறிந்தார் எனவும் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். வடக்கின் காணி அபகரிப்பு, பௌத்த மத ஆக்கிரமிப்பு பற்றியும் கேட்டறிந்தார். குருந்தூர்மலையில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவின் செயல்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

வடக்கில் பௌத்தர்கள் இருக்கிறார்களா என்று சந்திப்பில் அமெரிக்க தூதர் கேட்டார்.

அப்படி யாரும் இல்லையென்பதையும் தற்போது இராணுவத்திடம் சம்பளம் பெறும் ஒருவர், நிவாரணம் வழங்குவதாக ஏழை மக்களை ஏமாற்றி தமிழர்களுக்கு எதிராக பல்வேறு கூத்தாடினாலும் அதை சமூகம் கண்டுகொள்ளவில்லை என்றும் இதன்போது தமிழ் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு விவகாரங்களின் தற்போதைய நிலை பற்றியும் கேட்டறிந்தார். அத்துடன், இந்த சந்திப்பில், மாகாண சபை தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. தமிழ் இளைஞர்கள் பெருந்தொகையாக நாட்டை விட்டு வெளியேறுவது பற்றியும் கேட்டறிந்தார். இதனால் ஏற்படும் சாதக, பாதகங்கள் பற்றியும் விரிவாக கேட்டறிந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது

Posted in Uncategorized

எங்கள் எல்லை கிராமங்களை காப்பவர்கள் மலையக மக்களே! – ரெலோ தலைவர் செல்வம் எம். பி

மலையகத்திலிருந்து வாழவேண்டும் என வந்த உறவுகள் எல்லைக் கிராமங்களை பாதுகாக்கும் உணர்வோடு செயற்படுகின்றார்கள், இடங்கள் தான் வேறு உணர்வுகளும் மொழியும் ஒன்று என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மலையகம் என்பதை நாம் பிரித்து பார்க்க முடியாது காரணம் என்னவென்றால் எங்களுடைய இனத்தின் போராட்டத்திலே பல இயக்கங்கள் உருவாகினாலும் அந்த விடுதலை வேட்கையோடு எங்களுடைய மலையக இளைஞர்கள் அதிலே இணைந்து கொண்டார்கள்.

தங்களுடைய இருப்பிடம் வேறாக இருந்தாலும் உணர்வென்ற அடிப்படையிலே எமது இனம் விடுதலை பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த இளைஞர்கள் ஆயுத போராட்டத்திலே இணைந்து கொண்டதை நாம் இங்கே நினைவுகூர வேண்டும்.

அது மட்டுமல்ல வன்னியிலே சிங்கள எல்லை கிராமங்களை தமிழர்கள் தக்கவைத்துக் கொண்டு இருக்கின்றார்கள், என்றால் இந்த மலையக தேசத்திலிருந்து இடம்பெயர்ந்து எங்களுடைய வன்னி மாவட்டத்திலே வடக்கிலே குடியிருக்கும் மலையக உறவுகளின் தியாகம் தான் அந்தந்த குடியேற்றங்களை பாதுகாத்திருக்கின்றது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

விடுதலை வேட்கை என்பது எப்படி உருவானது என பாருங்கள், இளைஞர்கள் ஆயுத போராட்டத்திற்கு சென்றார்கள். ஆனால் மலையகத்திலிருந்து வாழ வேண்டும் என வந்த உறவுகள் எல்லைக்கிராமங்களை பாதுகாக்கும் உணர்வோடு செயற்படுகின்றார்கள். இடங்கள் தான் வேறு உணர்வுகளும் மொழியும் ஒன்று என்பதை பல சந்தர்ப்பத்திலே உணர்த்தியிருக்கின்றார்கள்.

மலையகம் என்பது மலை சார்ந்த இடம் அந்த மக்கள் ஒரு தேசிய இனம் அந்த தேசிய இனத்திற்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளை தட்டிக்கேட்கின்ற பொறுப்பும் கடமையும் எங்களுக்கு இருக்கின்றது.

ஏனென்றால் அவர்களுடைய செயற்பாடு, அனைத்து விடயங்கள் அனைத்தும் எம்மோடு ஒன்றிணைத்து போகின்ற சூழல் மலையகத்தில் குளிர் பிரதேசத்தில் வாழ்ந்தாலும் எமது இனம் ஒன்று என காட்டுகின்ற அந்த நிலையிலையே அந்த மக்களுக்கு விடுதலையினை பெற்றுக்கொடுக்கின்ற கடமையும் பொறுப்பும் எங்களிடம் இருக்கின்றது.

இம்மலையக மக்கள் எங்கள் நாட்டிலே வாழ அவர்களுக்கு எல்லா உரித்தும் இருக்கின்றது. அவர்களிடம் இன்று நிலம் இல்லை ஆனால் வேறு யாரிடையோ நிலத்தை காப்பாற்ற போராடுகின்றார்கள். அவர்களுக்கு நல்ல சம்பளம் இல்லை அதனை பெற்றுக்கொடுக்க அரசியற் தலைமைகள் முனைந்தாலும் கூட இந்த அரசாங்கம் இடம்கொடுப்பதில்லை.

கொழுந்துகளை எடுத்து இந்த நாட்டின் வருமானத்தினை உயர்த்துகின்ற பொறுப்பு இம்மக்களுக்கு இல்லை என்பதை நாம் நிரூபித்து காட்டவேண்டும்.

மலையக புத்தக ஆசிரியர் கூறினார், எங்கள் மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய பிரச்சினையாக இருப்பதனால் அது தீர்க்கப்பட வேண்டும். அவர்களின் அடிப்படை பிரச்சினைகள், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், வரலாற்று புத்தகத்தில் வரலாறாக வரவேண்டும் என்பதை அழகாக சொன்னார் அதனை நான் வரவேற்கின்றேன்.

எங்கள் மலையக மக்களின் தியாகம் அவர்களின் வாழ்க்கை எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறியான நிலை இருந்தாலும் கூட இன்றைக்கும் அந்த மண்ணினுடைய விடுதலை என்பது நாங்கள் எல்லோரும் இணைந்து அவர்களுக்காக குரல் கொடுப்பதும், அவர்களுக்காக உழைப்பதும், அவர்களுக்கான பிரச்சினையினை தீர்ப்பதற்கும் அனைத்து வழிகளிலும் நாம் ஒன்றிணைந்து செயற்படுவது தான் இந்த வரலாற்றை பார்க்கும் செய்யும் கடமையாக இருக்கும் என்பது வடக்கு கிழக்கில் வாழுகின்ற அத்தனை தமிழ்பேசும் மக்களுக்கு கடமை உரித்து இருக்கின்றது.

மலையகத்தில் வாழும் எம் உறவுகளை தூக்கிவிடுவதும் அவர்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒன்றாக இணைந்து வெல்ல வைப்பதும் எமது கடமை என தெரிவித்தார்.

அபிவிருத்திக்குழு கூட்டங்களில் மக்கள் சார்ந்த விடயங்களிற்கு உடனடியாக முடிவெடுக்கப்படுவதில்லை- செல்வம் எம்.பி குற்றச்சாட்டு

அபிவிருத்திக்குழு கூட்டங்களில் மக்கள் சார்ந்த விடயங்களிற்கு உடனடியாக முடிவெடுக்கப்படுவதில்லை. அதிகாரிகளும் சமூகமளிப்பதில்லை இது தொடர்பில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் கவனமெடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மின்சார கட்டண விடயத்தில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் நியாயமாக நடந்துள்ளதுடன் அவரது கடைமையை சரியாக செய்துள்ளார். அரசாங்கம் மின்சார கட்டணத்தை அதிகரித்ததுடன், அது தொடர்பாக சரியான வழிமுறைகளை கையாளாத சூழ்நிலையில் அவர் தனது எதிர்ப்பை தெரிவித்தார். அந்த வகையில் அவரின் எதிர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவது தொடர்பான மசோதா வருகின்ற போது தமிழ் தேசிய கூட்டமைப்பும். ஏனைய தமிழ் கட்சிகளும் இணைந்து இந்த விடயம் தொடர்பாக ஒரு முடிவெடுப்போம்.

விலைவாசி அதிகரிப்பின் போது அவர் மக்கள் சார்பாக நின்றவர். எனவே பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவருக்கு ஆதரவழிக்கும் சூழல் உருவாகும். எனவே நாம் கூடி இறுதி முடிவெடுத்து அவருக்கு ஆதரவாக செயற்படுவதே சாலச்சிறந்தது.

அத்துடன் வவுனியா பிரதேச அபிவிருத்திக்கூட்டங்களில் நாம் கலந்துகொள்வதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. உண்மையில் பிரதேசஅபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெறும் நேரங்களில் கொழும்பில் முக்கிய சந்திப்புக்கள், இடம்பெறும் போது அதில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்படுகின்றது.

எம்மிடம் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதுடன் வினோநோகராதலிங்கம் பெரும்பாலான கூட்டங்களில் தனது பங்களிப்பை செய்துள்ளார். அத்துடன் முழுமையாக நாங்கள் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை தவிர்ப்பதில்லை. இனிவரும் கூட்டங்களில் நாங்கள் கலந்து கொள்வோம்.

அத்துடன் அபிவிருத்தி குழு என்ற போர்வையில் ஒரு விடயம் முடிவாக எடுக்கப்படாமல், காலம் தாழ்த்தப்படுகின்றது.முதலில் தீர்மானமாக எடுப்போம், பின்னர் ஜனாதிபதிக்கு கொடுப்போம் என்றவாறே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றது.

மாறாக மக்கள்நலன் சார்ந்த விடயங்களிற்கு உடனடியாக முடிவெடுக்கப்படுவதில்லை. அத்துடன் இக்கூட்டங்களிற்கு திணைக்கள அதிகாரிகள் கூட கலந்து கொள்வதில்லை.

எனவே கூட்டங்களின் போது முடிவெடிக்க வேண்டிய விடயங்களிற்கு அன்றையதினமே முடிவெடுத்தாக வேண்டும். அதற்காக நாங்கள் நிச்சயமாக குரல் கொடுப்போம். வெறும் கூட்டமாக இல்லாமல், அதிகாரிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை அபிவிருத்திக்குழு தலைவர் ஏற்படுத்த வேண்டும்.

அதிகாரிகள் வராவிடில் அவ்விடயம் முடிவு எட்டமுடியாத நிலை ஏற்படும். எனவே அபிவிருத்திக்குழு தலைவர் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். என்றார்.

மகிந்த குடும்பத்தின் ஊழல்களை உடனடியாக விசாரிக்கவேண்டும்! செல்வம் எம்.பி. வலியுறுத்து

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஊழல்கள் உடனடியாக விசாரிக்கப்படவேண்டும் என்பதுடன் ஊழல் பணம் அனைத்தும் மக்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்தப்படவேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நேற்று ரெலோ இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-
நாணய நிதியம் பணம் கொடுப்பது சம்பந்தமாக சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளில் ஊழல்கள் விசாரிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் காரணமாகத்தான் இந்த நாடு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆகவே இந்த ஊழலை விசாரிக்காத பட்சத்தில் நாடு மிகவும் மோசமான சூழலில் அதாவது பின் தங்கிய நிலையில் தொடர்ந்து செல்லும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆகவே மகிந்த ராஜபக்ஷ குடும்பம் இந்த ஊழல் செயற்பாடுகள் மூலம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சியை கொண்டு வந்து இன்றும் நடமாடிக்கொண்டிருக்கும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசாரணை செய்யப்படவேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் கோரிக்கையாக முன் வைக்கிறோம். அப்படி இல்லை என்றால் இங்கு முதலீடு செய்யப்பட்ட வங்கிகளின் பணங்கள் எல்லாம் இந்த கடனுக்காக எடுக்கப்பட்டு மிக மோசமான ஒரு சூழல் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆகவே ஊழலை விசாரிப்பதன் ஊடாகத்தான் இந்த நாட்டில் முன்னேற்றகரமான செயற்பாடுகளைச் செய்ய முடியும். ஜனாதிபதி இனப்பிரச்னைக்கு இவ் வருடத்துக்குள் தீர்வு என மீண்டும் அறிவிக்கத் தொடங்கி இருக்கிறார்.

எங்களை பொறுத்தவரை தீர்வு என்பது எப்படி கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. அந்தக் கேள்வியை ஜனாதிபதியிடமே நாங்கள் கேட்கின்றோம்.

வடக்கு-கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுகின்ற வேலை தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது. அது புத்தசாசன அமைச்சாக இருக்கலாம், வனவள திணைக்களமாக இருக்கலாம், வன ஜீவராசிகள் திணைக்கள மாக இருக்கலாம். இப்படி திணைக்களங்களிடம் அதிகாரங்களைக் கொடுத்து விட்டு இனப்பிரச்னைக்கு தீர்வு என்பது எப்படி சாத்தியாகும்? – என்றார்.

வடக்கை மட்டும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

வடக்கின் அதிகாரப் பரவலாக்கம், நிர்வாகம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் போது கிழக்கு மாகாணத்தையும் ஒன்றிணைத்து நடத்துவது சிறந்ததாக உள்ளது. எனவே இவ் விடயத்தில் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் 11 ,12,13 ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து பேச உள்ளதாகவும் அதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது வடக்கின் அபிவிருத்தி மற்றும் அதிகார பரவலாக்கம் தொடர்பாகவும் வடக்கில் இடம் பெறுகின்ற பிரச்சினைகள் மற்றும் அதற்கு தீர்வு எடுப்பதற்கான விடயங்கள் குறித்து ஆராயப்படும் கூட்டமாக அமைந்துள்ளது.

எங்களைப்பொருத்தவகையில் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது, வடக்கு கிழக்கு எமது தாயக பூமி.

எங்களுடைய தமிழ் மக்கள் ஒரு இனப்பிரச்சினை சார்ந்து நாங்கள் வடக்கு கிழக்கு சார்ந்து இந்த மண்ணை காப்பதற்காகவே எத்தனையோ போராளிகளும் பொது மக்களும் மரணித்தார்கள்.

எனவே வடக்கில் மட்டும் அபிவிருத்தி மற்றும் அதிகார பரவலாக்கம் தொடர்பாகவும் வடக்கில் இடம் பெறுகின்ற பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வு எடுப்பதற்கான விடையங்கள் குறித்து எடுக்கப்படுகின்ற முயற்சிகள் காலத்தை கடத்துகின்ற ஏமாற்றுகின்ற செயல்பாட்டை கையால் வதாகவும் அமைந்துள்ளது.

ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன் வைக்கின்றோம்.

வடக்கு கிழக்கு சார்ந்த அபிவிருத்தி, அதிகார பரவலாக்கல், வடக்கு கிழக்கில் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைக்கின்றோம்.

கோரிக்கை நிறைவேற்றப்படாது விட்டால் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதா? இல்லையா? என்பதை நாங்கள் முடிவெடுக்க கூடும்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு இவ் விடையம் குறித்து ஆராய உள்ளது.

எனவே வடக்கு கிழக்கு இணைந்த அபிவிருத்தி, அதிகார பரவலாக்கல் தொடர்பாக, பேச்சுவார்த்தை இடம் பெற வேண்டும்.என்பது எமது கோரிக்கை.எனவே கிழக்கை விடுத்து எவ்வித நல்லெண்ண முயற்சிகள் எடுத்தாலும்இஅந்த முயற்சி தோல்வியடையும்.

எங்களைப் பொறுத்த மட்டில் வடக்கு, கிழக்கு பிரதான மூச்சாக உள்ளது. எனவே கிழக்கை விடுத்து வடக்கை மட்டும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.இவ்விடயம் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன்.

வடக்கு கிழக்கு இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடலை நடத்த வேண்டும்.

அதன் அடிப்படையில் உரிய காலத்திற்கு முன் தனது கருத்தை மாற்ற வேண்டும். இல்லை என்றால் எதிர்வரும் 11,12,13 ஆகிய திகதிகளில் இடம்பெற உள்ள கூட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியாத துர்பாக்கிய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரமுயர்த்தும் வர்த்தமானியை வெளியிடுமாறு பிரதமருக்கு ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.அவசர கடிதம்

மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு இன்று (03) திங்கட்கிழமை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் அமைச்சரவையில் இருந்து அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

எனினும், இன்னும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படவில்லை என்பதனை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

எனவே, விரைவில் மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது்ளது.