இனப்பிரச்சினைக்கு தீர்வு காண கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – மனோ கணேசன்

மாகாணசபை முறைமை நாட்டின் சட்டத்தில் உள்வாங்கப்பட்டிருக்கிறது. அதனால் அதனை இனிமேல் இல்லாமலாக்க முடியாது. அத்துடன் இனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய விசேட உரை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் அரசியலமைப்பில் ஓர் அங்கமாகவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் அமைந்துள்ளது. அதனால் மாகாண சபைமுறையை இனிமேல் இல்லாமலாக்க முடியாது. ஆனால் இதிலுள்ள அதிகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ளலாம்.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ இப்போதும் 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார் என்று ஆளும் கட்சி பிரதம கொரடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார். புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தத் தேவையில்லை. இருக்கும் பிரச்சினைகள் போதும்.

2009இல் யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த போது யுத்தத்தை நிறைவு செய்தது போன்று அதிகார பகிர்வை மேற்கொண்டு பிரச்சினைகளை முழுமையாக தீர்க்குமாறு கோரினேன். ஆனால் அதனை அவர் செய்யவில்லை. இப்போதும் சந்தர்ப்பம் வந்துள்ளது. அதனை பயன்படுத்திக்கொள்வோம். ஜனாதிபதி முன்னெடுக்கும் இந்த விடயத்தில் நாங்கள் காலை பிடித்து இழுக்கப் போவதில்லை.

சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்து தொடர்பில் நான் பெருமைப்படுகிறேன். இனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள் வேண்டும். நீங்கள் செய்யுங்கள். பிரச்சினைகளுக்கு தீர்வே முக்கியம் என்றார்.

இதன்போது அதற்கு பதிலளித்த ஜனாதிபதி கூறுகையில், மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் என்னிடம் கேட்கின்றனர். இவ்விடத்திற்கு நான் அமைச்சரவைக்கு மட்டும் அறிவித்தே வந்துள்ளேன்.

ராஜபக்ஷவினருக்கு அடிபணிந்து செயற்பட வேண்டாம் என்று கூறுகின்றனர். அவ்வாறு செய்யும் போது அவர்களுக்கு அடிபணிந்துவிட்டார் என்றும் கூறுகின்றனர். உண்மையான ராஜபக்‌ஷவாதிகள் அந்த பக்கமே இருக்கின்றனர். அதனால் 13 தொடர்பில் பொதுஜன பெரமுனவின் இரண்டு பக்கத்தில் இருப்பவர்களும் மஹிந்த ராஜபக்ஷ்வுடன் பேசி தீர்மானத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.

வடக்கு, கிழக்கில் மாத்திரமாவது மாகாண சபைத் தேர்தல் நடாத்த வேண்டும்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்திய தூதுவர் கோபால் பாக்லேயுடனான சந்திப்பின்போது வட கிழக்கில் மாத்திரமாவது மாகாணசபை தேர்தலை நடத்த வலியுறுத்தி கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் காலத்தில் நாடாளுமன்ற தேர்தலையும் முடக்கி விடுவார் என்றும் தான் ஒரு போதும் யாழ்ப்பாணத்தில் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மலையக மக்களின் உயர்கல்வி வளர்ச்சிக்கு இந்தியா உதவ வேண்டும் – மனோ எம்.பி கோரிக்கை

மலையகத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, தாதியர் கல்லூரி, பல்கலைக்கழக கல்லூரி அமைய இந்தியா உதவிட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று (14) விடுத்துள்ள அறிக்கையில்,

“கொழும்பு அவிசாவளை முதல் நுவரெலியா வரை நாடெங்கும் பரந்து வாழும், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக தமிழரின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி ஆகியவை தொடர்பில், இந்திய மத்திய அரசு, உதவிட உத்தரவாதம் தர வேண்டும்.

மலையகம் – 200 நினைவுறுத்தல் தொடர்பில் இந்தியாவின் பங்களிப்பு இந்த அடிப்படைகளில் அமைய வேண்டும். இவ்வருட ஆரம்பத்திலேயே நாம் இந்திய தூதுவர் கோபால் பாகலேயிடம், மலையகம் – 200 நினைவுறுத்தல் நிகழ்வுகள் உரையாடி தொடர்பில் எழுத்து மூல கோரிக்கை விடுத்துள்ளோம். இலங்கை வந்து சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடமும் உரையாடியுள்ளோம். இந்நிலையில், அடுத்தவாரம், இந்தியா செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், இவை தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நல்லெண்ண உத்தரவாதங்கள் அளிப்பார் என நாம் நம்புகின்றோம்.

கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பில், இந்திய மத்திய அரசை நாம் நம்பி உள்ளோம். குறிப்பாக, நாடெங்கும் பரந்து வாழும், இந்திய வம்சாவளி மலையக தமிழர் பிள்ளைகளின் பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை.

இந்தப் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களை பயிற்றுவிக்க, விசேட வேலைத்திட்டம் தேவை. அதேபோல், தேயிலை, இறப்பர் மலைகளில் அல்லலுறும் எங்கள் பெண்களின் வெளிநாட்டு, உள்நாட்டு வேலை வாய்ப்ப்புகளை உறுதிப்படுத்த தாதியர் பயிற்சி கல்லூரி அவசியம். உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வியை அடிப்படையாகக்  கொண்டு ஒரு முதற்கட்ட பல்கலைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இவை அனைத்தும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கான விசேட சமூக அபிவிருத்தி திட்டங்களாக முன்னேடுக்கப்பட வேண்டும். மத்திய, மேல், சப்ரகமுவா, ஊவா, தென் மாகாணங்களில் வாழும்  நமது மக்கள்  தொடர்பில் தமக்குள்ள தார்மீகக் கடப்பாட்டை இந்திய மத்திய அரசு நிறைவேற்றும் என நாம் நம்புகின்றோம்.

அதேவேளை, இலங்கையில் மலையக தமிழரது தேசிய அரசியல் அபிலாஷை கோரிக்கைகள் தொடர்பில் நாம் உள்நாட்டில் இலங்கை அரசுடன் பேசுவோம். அதிகாரபூர்வ அரசு தரப்பு பேச்சு குழுவை முறைப்படி அமைத்து, அத்தகைய பேச்சுகளை விரைவில் ஆரம்பிக்க இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் உறுதி அளித்துள்ளார். அந்த உறுதிமொழியை அவர் நிறைவேற்றுவார் என நாம் நம்புகின்றோம்.” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

13ஐ அமுல்படுத்த இலங்கையை வலியுறுத்துமாறு கனேடிய தெற்காசிய விவகார பணிப்பாளரிடம் தமிழ்த் தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தல்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறையவே பேசுகின்றார். குறைவாகவே செய்கின்றார். அரசமைப்பு சட்டத்தில் உள்ள 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்து முதலில் தமது நேர்மையை பறை சாற்றும்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கனடா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளடங்கிய சர்வதேச சமூகம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும். இதற்கு கனடா முன்முயற்சி எடுக்க வேண்டும். நாட்டை வெளியேறிய தமிழர் பெருந்தொகையினருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடு என்ற வகையில் கனடாவுக்கு இதற்கு உரிமை உள்ளது.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., தமிழீழ விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. ஆகியோர், கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகார பணிப்பாளர் நாயகம் மரியா லூயிஸ் ஹனானிடம் நேரில் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

“13 ஆவது திருத்தம் தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு அல்ல. இது எமக்குத் தெரியும். ஆனால், புதிய சட்டங்களை உருவாக்க முன், அரசமைப்பு சட்டத்தில் இன்று இருக்கும் 13 ஆவது திருத்த அதிகாரப் பகிர்வு சட்டதையும், 16 ஆவது திருத்த மொழியுரிமை சட்டதையும் அமுல் செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காட்டட்டும். அதை சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். இன்று நாம் இலங்கை அரசுடன் பேசி சலித்துப் போய் விட்டோம். அதேபோல் சர்வதேச சமூகத்திடமும் மீண்டும் இவற்றையே பேசி சலித்துப் போய் கொண்டிருக்கின்றோம்” – என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள கனேடியத் தூதுவரின் இல்லத்தில் இன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வெல்ஷ், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதி சின்னையா இரத்தின வடிவேல், கனேடியத் தூதரக அரசியல் அதிகாரி கோபிநாத் பொன்னுத்துரை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இது தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. விடுத்துள்ள ருவீட்டர் பதிவில்,

“பன்மைத்தன்மையை கொண்டாடுவது, அதிகாரப் பகிர்வு, 13ம் திருத்தம், மொழியுரிமை மற்றும் சமத்துவம், ஆகியவை பற்றி கனேடியத் தரப்புடன் பயன்தரும் விதத்தில் பேசப்பட்டன” – என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நாட்டில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி பிரதிநிதிகள், கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரப் பணிப்பாளர் நாயகத்திடமும், இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடமும், இந்த நாட்டை சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு எனத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், இத்தகையை கொள்கையை முன்னெடுக்கும் எந்தவொரு கொழும்பு அரசையும் தாம் எதிர்த்துப் போராடுவோம் எனவும் கூறினர்.

தமது அபிலாஷைகள் தொடர்பில் அரசுடன் பேச்சு நடத்துவதைப் போன்று, சர்வதேச சமூகத்திடம் எடுத்துக் கூறுவதிலும் சலிப்படைந்து வருகின்றார்கள் என்று தமிழ்த் தலைவர்கள் இன்று கூறியதைத் தாம் புரிந்துகொள்வதாகவும், அது தமக்கு ஒரு செய்தி என்றும் கனேடியத் தரப்பினர் தம்மைச் சந்தித்த கட்சித் தலைவர்களிடம் தெரிவித்தனர்.

முதன்முறையாக இலங்கையின் தலைவர் பெளத்த வரலாற்றை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார் – மனோ கணேசன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நான் பாராட்டுகிறேன். முதன்முறையாக நாட்டின் தலைவர் இலங்கை தீவின்“தமிழ் பெளத்த வரலாற்றை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இலங்கையின் வரலாற்றில் தமிழ் பெளத்த வரலாற்றுக்கு உரிய இடத்தை ஏற்றால், அது இன்று நாம் எதிர்கொள்ளும் அநேக பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் சாவியாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

தமிழரசு கட்சியினருடனான கலந்துரையாடலின் போது தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில பணிப்புரைகளை விடுத்துள்ளார். அதன்போது இலங்கை தீவின் “தமிழ் பெளத்த வரலாற்றை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு, ரணில் விக்கிரமசிங்க கருத்து கூறியுள்ளார்.

இப்படி ஒரு தமிழ் பெளத்த வரலாறு இருப்பதை சிங்கள தீவிரர்கள் எப்போதும் மறைக்க விரும்புகிறார்கள். அந்த விஜயன் வந்த இறங்கிய கதை பொய்யென்று என்னை தேடி வந்து வண. பிக்கு ஞானசாரர் சொன்னது போன்றும், இளவரசன் விஜயன் வரவை நினைவுகூர்ந்து, இலங்கை அஞ்சல் திணைக்களம் முத்திரை வெளியிட்டு, பின்னர் அதை இரண்டு வருடங்களில் வாபஸ் பெற்றதை போன்றும், வெறும் கைகளால் சூரியனை மறைப்பதை போன்றும், வரலாற்றில் தமிழர்களுக்கு உரிய இடத்தை இவர்கள் எப்போதும் மறைக்க முயன்று வருகிறார்கள்.

தமிழ் பெளத்த வரலாறு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், இன்று நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் என்ற பூட்டுக்கு அது சாவியாக அமையும் என நான் நம்புகிறேன். இந்நோக்கில், 2018ம் வருடம் நான் அமைச்சராக இருந்த போது ஒரு காரியம் செய்தேன்.

பிரபல சிங்கள வரலாற்றாசிரியர், சினிமா எழுத்தாளர் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன, இலங்கையின் தமிழ் பெளத்த வரலாற்றை பற்றி சான்றுகளுடன் எழுதிய, “தமிழ் பெளத்தன்” (தமிழ பெளத்தயா) சிங்கள நூல் நாட்டில் பாவனையில் இல்லாமல் இருந்தது. அந்த நூலை தேடி பிடித்து, பேசி, பேராசிரியரின் அனுமதியை பெற்று அதை எனது அமைச்சின் செலவில் மறுபிரசுரம் செய்து, நாட்டின் சிங்கள பாடசாலைகளுக்கும், விகாரைகளுக்கும் இலவசமாக அனுப்பி வைத்தேன்.

அதன்பின் பேராசிரியர் ஆரியரத்னவை அழைத்து சில வண. பிக்குகள் கண்டித்துள்ளார்கள், என அறிந்தேன். என்னுடன் முரண்பட எவரும் வரவில்லை. இப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை போட்டு கிழிப்பார்களோ தெரியவில்லை. அவரை அந்த கெளதம புத்தனும், கதிர்காம கந்தனும் காப்பாற்றட்டும்.

Posted in Uncategorized

தமிழ் திரைப்படங்களே சிறுவர்களிடத்தில் வன்முறையை தூண்டுகின்றன – டயானா கமகே

தமிழ் திரைப்படங்கள் சிறுவர்கள் மத்தியில் வன்முறைகளை தூண்டுவதாக பாராளுமன்றத்தில் வெகுஜென ஊடக அமைச்சின் ஆலோசனை செயற்குழு கூட்டத்தின் போது இராஜங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்த கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார்.

அத்துடன் டயானா கமகே தனது கூற்றை மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவத்தினரின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த சம்பவம் நடந்தது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், செய்தி பிரிவின் பிரதானிகள், அமைச்சின் அதிகாரிகள், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

ஊடகங்கள் பின்பற்றும் நடைமுறைகள் மற்றும் அதனால் ஏற்படும் சமூக பாதிப்புகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இங்கு கருத்து வெளியிட்ட சுற்றுலா இராஜாங்க அமைச்சர் பயாணா கமகே,

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் தமிழ் திரைப்படங்கள் வன்முறைகளை தூண்டுவதாக அமைவதால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சிங்கள தொலைக்காட்சிகளில் தமிழ் படங்களை டப் செய்து ஒளிபரப்புவதாகவும், தமிழ் படங்களில் வன்முறை, களியாட்டம் அதிகம் என்றார்.

குறிப்பாக கொலை செய்தல், வெட்டுக் குத்து காயங்கள் வெளிப்படையாக வழங்கப்படும். தண்டனைகள் ஆகிய சிறுவர்கள் மத்தியில் மாறுபட்ட சிந்தனையை தூண்டுவதாக அமர் கூறினார்.

இதன்போது குறிப்பிட்ட மனோ கணேசன் எம்பி, டயானாவின் கருத்தை முற்றாக நிராகரிப்பதாகவும், தமிழ் தமிழ் என கத்த வேண்டாம் என்றும், அது இங்கு வேறு அர்த்தம் தருவதாகவும், பொதுவாக இந்திய திரைப்படங்கள் என பயன்படுத்த வேண்டுமே தவிர தமிழ் திரைப்படங்கள் என இன ரீதியாக பார்க்க கூடாது என தெரிவித்தார்.

இதனால் இதுவருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஏற்பட்டது. வன்முறை காட்சிகள் அனைத்து மொழி திரைப்படங்களிலும் இடம் பெறுகின்றன. தமிழ் திரைப்படங்களினாலே மக்கள் உள ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என மனோ கணேசன் தெரிவித்தார்.

கூட்டத்துக்கு தலைமை தாங்கி அமைச்சர் பந்துல நிலைமையை சுமுகமாக்க முயன்றார்.

இதன் பின்னர், அனைத்து மொழி திரைப்படங்களிலும் அவ்வாறான காட்சிகள் இடம்பெறுகின்றன என்று வைத்துக் கொள்வோம்.

இந்த விடயத்தில் விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டு ஒழுங்குமுறை நடைமுறைப்படுத்த வேண்டுமென டயானா குறிப்பிட்டார்.

மஹிந்த பிரதமராவதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது – மனோ கணேசன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்றத்தை கலைத்து விரைவில் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை கோருவதாக நாட்டில் பெரும் பரபரப்பு நிலவுகிற நிலையில் அவரை பிரதமராக நியமிப்பதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது என கூறியுள்ளார்.

ஆனால் உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துங்கள் என்றும் அதற்கான அரசாங்கத்தை அமைக்க தாம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் மூலமே மக்களின் ஆணை யாருக்கு உள்ளது என்பதை கண்டறிய முடியும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான பிரேரணை முன்வைக்க உள்ளதான செய்தி பொய்யான செய்தி – மனோ கணேசன்

ஏப்ரல் 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையை நான் கூட்டாக முன்வைக்க உள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (19.04.2023) மனோ கணேசன் அலுவலம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது திரித்துக் கூறப்படும் பொய்யான செய்தி. இச்செய்தி, ஆளுந்தரப்பில் இருந்து எதிரணிக்கு வந்ததாகும். அத்துடன், இச்செய்தி ஒரு முன்னாள் அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமான இணைய தளத்திலேயே முதலில் வந்தது.

மற்றும், ஐக்கிய மக்கள் கூட்டணி சக்தியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சியாகவே தற்போது தமிழ் முற்போக்குக் கூட்டணி இருக்கின்றது.

தேசிய அல்லது எந்தவொரு அரசாங்கத்திலும் அங்கம் வகிப்பது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூடிப்பேசவும் இல்லை. எந்தவித முடிவும் எடுக்கவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ள ஏற்பாடுகள் பயங்கரமானவை – மனோ கணேசன்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஜனாதிபதிக்குக் கடுமையான மற்றும் கொடுமையான அதிகாரங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது என மனோ கணேசன் தெரிவித்தார்.

ஆகவே இதனை ஒருபோதும் ஏற்க முடியாது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும், இந்த புதிய சட்டத்தில் உள்ள ஏற்பாடுகள் பயங்கரமானவை என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்தப் புதிய சட்டமூலம் பலருக்கும் பாதகமாக அமையும் என சுட்டிக்காட்டிய மனோ கணேசன், மக்களுக்கு போராட்டம் நடத்த முடியாத சூழலை உருவாக்கும் என்றும் என்றும் எச்சரித்தார்.

மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் பேசாத ரணிலின் சர்வகட்சி மாநாட்டை மலையகக் கூட்டணி புறக்கணிப்பு

ரணில் விக்கிரமசிங்கவின் சர்வ கட்சி மாநாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துக்கொள்ளாது என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உங்கள் அறிவிக்கப்பட்ட செயற்பாட்டில், இந்திய வம்சாவளி மலையக தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடனும், எமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் பேசுங்கள்” என நாம் திரும்ப, திரும்ப ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் கோரினோம்.

“எமது பிரச்சினைகள் பற்றி பேச உங்கள் தலைமையில் விசேட அதிகாரம் கொண்ட குழுவை நியமியுங்கள்” எனவும் கோரியுள்ளோம்.ஆனால், பகிரங்க மேடைகளில் இருந்து கூறப்பட்ட சில கருத்துகளை தவிர, இது தொடர்பில் இதுவரை ஜனாதிபதி விக்கிரமசிங்க அதிகாரபூர்வமாக எதுவும் செய்யவில்லை.

ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, பொறுப்பு கூறல் தொடர்புகளில் வடகிழக்கு கட்சிகளுடன் நடத்தப்படும் பேச்சுகளை நாம் முழு மனதுடன் வரவேற்கிறோம்.ஆனால், மலையக தமிழரின்  அரசியல் அபிலாஷைகள் இன்று “தோட்ட வரம்புகளுக்கு” வெளியே வளர்ந்து விட்டன என்பதை அனைத்து தரப்பினரும் அறிய வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினை என்பது இன்று வடக்கு கிழக்கை மட்டும் மையம் கொண்டதல்ல, அது தேசியமயமானது என்பதை அரசு புரிந்துக்கொள்ள வேண்டும்.தமிழ் முற்போக்கு கூட்டணி, ஒரு எதிரணி கட்சியாக இருந்தாலும்கூட, “தேசிய இன பிரச்சினை தொடர்பில் பேச்சுகளை நடத்த ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இருக்கிறதா” என நாம் கேள்வி எழுப்பவில்லை.

இந்நாட்டின் பிரதான பிரச்சினை தேசிய இன பிரச்சினை ஆகும். இந்நாட்டின் எந்தவொரு அரசு தலைவருக்கும் இதற்காக விசேட மக்களாணை அவசியமில்லை என்பது எமது நிலைப்பாடு.இந்த கருத்தை நாம் நமது வடகிழக்கு நட்பு கட்சிகளுடனும் பரிமாற்றி கொண்டுள்ளோம்.

ஆகவே, இன்று ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் இது தொடர்பான நடத்தையில் நாம் அதிருப்தியடைந்துள்ளோம்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.