நாடு திரும்பிய ஹனா சிங்கர் ஜனாதிபதியை சந்தித்தார்

ஐ.நா. வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர், தனது சேவையை முடித்துக்கொண்டு நேற்று (19) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

ஹனா சிங்கருடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி, இலங்கைக்காக அவர் ஆற்றிய சேவைகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், அவரது எதிர்கால பணிகளுக்காக வாழ்த்தும் தெரிவித்தார்.

2018 செப்டம்பர் 07 ஆம் திகதி முதல் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளராக ஹனா சிங்கர் செயற்பட்டார்

காணாமல் போனோர் அவலுலக விசாரணை : எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவில் மக்கள் போராட்டம் !

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

244 குடும்பங்களை விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு வருமாறு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் அழைப்பு விடுத்திருந்தது.

அவர்கள் மேற்கொள்ளும் விசாரணைக்கு எதிராக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போதை ஒழிப்பிற்கு கிராமம் தோறும் விழிப்புக் குழுக்கள் அவசியம் – ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

போதை ஒழிப்பிற்கு கிராமம் தோறும் விழிப்புக் குழுக்கள் அவசியம் என  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதப் போதைப் பொருட்கள் விநியோகம் மற்றும் பாவனை அதிகரிப்பை கட்டுப்படுத்த உறுதியான இறுதியான வழி கிராமங்கள் தோறும் சட்டவிரோத போதை ஒழிப்பு விழிப்புக் குழுக்களை அமைப்பதே ஆகும்.

வடக்கு மாகாணத்தில் இளையோரை குறி வைத்து ஐஸ் போதை மற்றும் ஹெரோயின் போன்ற சட்டவிரோத போதைப் பொருட்கள் ஆரம்பத்தில் இலவசமாகவும் பின்னர் பணத்திற்கும் விற்பனை செய்யப்படுகின்றது இதனால் பல இளையோர் பாதிக்கப்பட்டு சீரழிந்து வருகின்றனர் என்பதை வெளிவரும் செய்திகளும் வெளிவராத புள்ளி விபரங்களும் ஆதாரப்படுத்துகின்றன.

இவ்வாறான போதைப் பொருட் பாவனையை தடுப்பதற்கு முழுமையான செயல் நடவடிக்கைகளை அதிகாரத் தரப்பான காவல் துறை கட்டுப்படுத்த தவறுகின்றமையே சட்டவிரோத போதைப் பாவனை தீவிரம் பெறுவதற்கு காரணமாகின்றது.

சில கிராமங்கள் தாங்களாக உணர்ந்து சில விழிப்புக் குழுக்களை தங்கள் கிராமத்திற்கு உருவாக்கி கட்டுப்படுத்தி வருகின்றனர் ஆனால் பெரும்பான்மையான கிராமங்களுக்கு இவ்வாறான குழுக்கள் அமைக்கப்படவில்லை.

எனவே மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கு கீழ் உள்ள பிரதேச செயலாளர்களுக்கு தீர்மானம் ஒன்றை அனுப்ப வேண்டும். ஒவ்வொரு கிராமங்களுக்கும் கிராம உத்தியோகத்தர்கள் மூலம் கிராம மட்ட அமைப்புக்களை உள்ளடக்கி சட்டவிரோத போதை ஒழிப்பு விழிப்புக் குழுக்களை அமைப்பதன் மூலமே சட்டவிரோத போதைப் பாவனையை கட்டுப்படுத்த முடியும்.

மாவட்டச் செயலாளர்கள் விரைவாக இவ்வாறான விழிப்புக் குழுக்களை அமைப்பதை நடைமுறை செய்ய வேண்டும். இதுவே யுத்தத்தால் அழிந்து போன எம் தேசத்தை போதையால் மீண்டும் அழிந்து போக விடாமல் பாதுகாக்கலாம்.

மன்னாரில் இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய வறிய குடும்பங்களைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு செல்வம் எம்.பி நிதி உதவி வழங்கி வைப்பு

மன்னார் மாவட்டத்தில் இருந்து இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று திங்கட்கிழமை (19) மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து நிதி உதவி வழங்கி வைத்தார்.

நோர்வே நாட்டில் உள்ள நடேசு அறக்கட்டளை ஊடாக 10 மாணவர்களுக்கும்,ஜேர்மனியைச் சேர்ந்த நாகரெட்ணம் ஜெயதீபன் மற்றும் புலேந்திரன் ஆகியோர் 10 மாணவர்களுக்கும் நிதி உதவி வழங்கி உள்ளனர்.

-மாணவர் ஒருவருக்கு இன்றைய தினம் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.குறித்த மாணவர்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாய் 2 வருடங்களுக்கு வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வறுமை மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு தடையாக அமையக்கூடாது என்ற நோக்குடன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் லுஸ்ரின் மோகன்ராஜ் ஆகியோர் இணைந்து குறித்த உதவிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் முதல் வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்கு எவரையும் அனுப்பமாட்டோம் – மனுஷ நாணயக்கார

அடுத்த வருடம் மார்ச் மாத்தத்துக்கு பின்னர் வீட்டுப் பணிப்பெண் தொழிலுக்கு இலங்கையில் இருந்து யாரையும் அனுப்பவித்தில்லை.

சிறந்த பயிற்சி பெற்றவர்களையே வெளிநாட்டு தொழிலுக்கு  அனுப்புவோம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு  அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

சர்வதேச புலம்பெயர்தோர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை  (டிச. 18) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வீட்டுப்பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அங்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர் முறையான பயிற்சி இல்லாமல் இவ்வாறு தொழில்வாய்ப்புகளுக்கு செல்வதே இதற்கு காரணமாகும்.

அதேபோன்று போலி முகவர்களின் பொய் வாக்குறுதிகளை நம்பி செல்பவர்களும் இவ்வாறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேருடுகின்றனர்.

அதனால் வெளிநாட்டு தொழிலுக்கு செல்பவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்து செல்லுமாறே நாங்கள் தெரிவிக்கின்றோம். அவ்வாறு பதிவு செய்து செல்பவர்கள், அங்கு ஏதாவது பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டால் அதுதொடர்பில் எமக்கு தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியும்.

அத்துடன்  5வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் இருக்கும் தாய்மார்களுக்கு வெளிநாட்டு தொழிலுக்கு செல்ல முடியாது என்ற ஒரு சட்டம் இருந்தது.  என்றாலும் வாழ்க்கைச்செலவு காரணமாக இவ்வாறான தாய்மார்கள் சட்ட விரோதமான முறையில் செல்கின்றனர்.

அதனால் இந்த சட்டத்தை தற்போது இலகுவாக்கி, 2வயதுக்கு குறைந்த பிள்ளைகள் இருக்கும் தாய்மார்களுக்கு வெளிநாட்டு தொழிலவதற்கு  தடைவித்திருக்கின்றோம்.

அதேநேரம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் இலங்கையில் இருந்து வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்கு அனுப்பாமல் இருப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம். அவ்வாறு அனுப்புவதாக இருந்தால், அவர்கள் அது தொடர்பில் சிறந்த பயிற்சி பெற்றவராக இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை பெற்றுச்செல்பவர்கள் அங்கு சிறந்த தொழில் வாய்ப்புக்களுடன் கூடிய சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடியுமான தொழில் பயிற்சி வழங்கியே அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். எதிர்காலத்தில் பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் மாத்திரமே வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்பப்படுவார்கள்.

அத்துடன் பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக குற்றச்சாட்டும் கடந்த காலங்களில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.

என்றாலும் தற்போது பெண்களுக்கு நிகராக ஆண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக செல்கின்றனர். நாட்டில் தற்போது நூற்றுக்கு 24வீதமான பெண்களே வெளிநாட்டு தொழிலுக்கு சென்றிருக்கின்றனர்.

மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு கட்டமைப்பை முழுமையாக டிஜிடல் மயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதன் மூலம் இந்த துறையில் ஏற்படுகின்ற மோசடிகளை குறைத்துக்கொள்ள முடியும் என்றார்.

ஜனவரி முதல் நிதி கட்டுப்பாடுகளில் தளர்வு – பிரதமர்

மக்கள் நலன் கருதி எதிர்வரும் மாதங்களில் சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும். அதற்கமைய நிதி தொடர்பான கட்டுப்பாடுகளில் ஜனவரி முதல் தளர்வுகள் ஏற்படும் என நம்புவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

தெஹிவளை – கல்கிஸை மாநகரசபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

எத்தனை சிரமங்கள் இருந்தாலும் சமூக பாதுகாப்புடன் தொடர்புடைய வசதிகளை குறைக்காமல் பராமரிப்பதற்கு வரவு – செலவு திட்டத்தில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த காலங்களில் பொதுவான அம்சமாகக் காணப்பட்டது வருமானம் ஈட்டும் வழிமுறைகள் குறைவடைந்தமையாகும்.

தொழில்கள் இழக்கப்பட்டமை, முதலீட்டுக்காக திட்டமிடப்பட்டிருந்தவற்றை செயற்படுத்த இயலாமை , அதில் ஆர்வமின்மை , கட்டுமானத்துறையின் வளர்ச்சியில் ஏற்பட்ட பாதிப்புக்கள் என்பன இதில் தாக்கம் செலுத்தின.

கடந்த சில மாதங்களில் நாம் எதிர்கொண்ட நிதி மற்றும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக , உள்ளூராட்சி மன்றங்கள் மாத்திரமின்றி , முழு நாட்டையும் பொதுவான முடிவிற்கு மாற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்தது.

அதற்கமை நிதி முதலீடுகள் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன. இதனால் நிறுவனங்கள் வருமானம் பெறும் வழிகள் வீழ்ச்சியடைந்தன. இவை அரசாங்கத்திற்கு உரித்தான திணைக்களங்கள் , கூட்டுத்தாபனங்கள் என்பவற்றிலும் தாக்கம் செலுத்தின.

ஜனவரி மாதத்திலிருந்து இந்த நிலைமையை ஓரளவுக்கு தளர்த்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் இது தொடர்பில் ஏற்கனவே பல தீர்மானங்களை எடுத்துள்ளது. உள்ளுராட்சி நிறுவனங்களும் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உள்ள தடைகளை நீக்க முடியும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

சீன எக்சிம் வங்கியுடன் இணக்கப்பாட்டை எட்டினால் மாத்திரமே முன்னேற்றம் – ஹர்ஷ டி சில்வா

நாட்டின் மொத்த வெளிநாட்டு கடன் தொகையில் 50 சதவீதம் சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும். அவற்றில் பெருமளவான தொகையை சீன எக்சிம் வங்கிக்கு செலுத்த வேண்டியுள்ளது.

எனவே கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன எக்சிம் வங்கியுடன் இணக்கப்பாட்டை எட்டினால் மாத்திரமே ,  அடுத்தகட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

எதிர்வரும் 4 மாதங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பணிப்பாளர் மட்ட இணக்கப்பாட்டினை எட்ட முடியாத நிலைமை ஏற்பட்டால் என்னவாகும்? மக்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை வழங்கக் கூடிய இயலுமை எமக்கிருக்கின்றதா? என்ற கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் பதிலை எதிர்பார்ப்பதாகவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உலகின் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி குறித்த கலந்துரையாடல்களில் கலந்துகொள்ள சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக ,சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ள விடயம் இன்று பேசுபொருளாகியுள்ளது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கு காணப்படுகின்ற பிரதான சவால் சீனாவாகும். சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கான தெளிவானதொரு வேலைத்திட்டம் தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை. எமது மொத்த வெளிநாட்டு கடனில் 50 சதவீதம் சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.

அதிக அதிக தொகையை சீன எக்சிம் வங்கிக்கு செலுத்த வேண்டியுள்ளது. அதற்கமைய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாம் உண்மையில் கலந்துரையாட வேண்டிய ஒரேயொரு வங்கி சீன எக்சிம் வங்கி மாத்திரமேயாகும். எக்சிம் வங்கியுடன் ஏதேனுமொரு இணக்கப்பாட்டை எட்டினால் மாத்திரமே , எம்மால் அடுத்தகட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.

உலக நாடுகள் இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் வருமானம் குறைந்த நாடுகள் ஜீ.20 பொது கட்டமைப்பின் கீழ் எவ்வாறு கடன் மறுசீரமைப்பினை மேற்கொள்வது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளன. எனினும் இலங்கை போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் இதில் உள்ளடக்கப்படவில்லை. எனவே இவ்வாறான நாடுகள் எவ்வாறு கடன் மறுசீரமைப்பினை மேற்கொள்ளப் போகின்றன என்பதற்கான புதிய வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பணிப்பாளர் மட்ட இணக்கப்பாட்டை எட்டுவது தொடர்பில் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.

நாடு எந்த பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது என்பது தொடர்பில் அரசாங்கத்திடம் தெளிவான பதில் இல்லை. வருடாந்தம் ரூபாவின் பெறுமதியை தக்க வைத்துக் கொள்வது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு , மத்திய வங்கியினால் வழிகாட்டல் வரைபடம் தயாரிக்கப்படும். எனினும் 2023 ஆம் ஆண்டுக்கான வரை படம் வழங்கப்படவில்லை. எனவே அடுத்த ஆண்டு நாம் பயணிக்கவுள்ளோம் என்பது கேள்விக்குரியாகும்.

எதிர்வரும் 4 மாதங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பணிப்பாளர் மட்ட இணக்கப்பாட்டினை எட்ட முடியாத நிலைமை ஏற்பட்டால் என்னவாகும்? மக்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை வழங்கக் கூடிய இயலுமை எமக்கிருக்கின்றதா? இதற்கான பதிலையே அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கின்றோம். வழிகாட்டல் வரைபடமொன்று 2023 இல் எங்கு செல்கின்றோம் என்பது தெரியாமலேயே பயணிக்கவுள்ளோம்.

சர்வதேசம் எதிர்பார்க்கும் வேலைத்திட்டமொன்றை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் , ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் முடியாமல் போயுள்ளது. இதற்கான ஒரேயொரு மாற்று வழி புதிய அரசாங்கமொன்றாகும். புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் வேலைத்திட்டத்தை சர்வதேசமும் நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவர்களால் நாட்டைக் கொண்டு செல்ல முடியாது. சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடு தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்க முடியாத அரசாங்கத்தால் , எவ்வாறு நாட்டை நிர்வகித்துச் செல்ல முடியும்?

மக்களுக்கு மேலும் மேலும் சுமையை சுமத்தாமல் , அவர்கள் விரும்பும் ஆட்சியை அமைப்பதற்கு வாய்ப்பினை வழங்குமாறு வலியுறுத்துகின்றோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவி காலம் காணப்படுகிறது. எனினும் மார்ச் மாதத்தின் பின்னர் பொதுத் தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் அவருக்கு காணப்படுகிறது. அரசியலமைப்பின் படி அதற்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டு;க் கொள்கின்றோம் என்றார்.

காரைக்கால் – காங்கோன்துறை கப்பல் சேவை பெப்ரவரி ஆரம்பம் – யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேயரம்

காரைக்கால் – காங்கோன்துறை கப்பல், சேவை அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் ஆரம்பிக்குமென யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேயரம் தெரிவித்துள்ளார்.

யாழ். வணிகர் கழகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி தைப்பொங்கலின் பின்னர் பெப்ரவரி ஆரம்பத்திற்குள் காரைக்கால் காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பிக்குமென எதிர்பார்ப்பதோடு இரண்டு நிறுவனங்கள் இதனை ஆரம்பிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறிய கப்பல்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் அதேவேளை அவை 1000 மெட்ரிக் தொன்னிற்கும் குறைவாக கொள்ளளவுடையவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனவரி முதல் பலகட்ட பேச்சுக்கள் முன்னெடுக்கப்படும் – அலி சப்ரி

இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு குறித்து அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் பலகட்டப்பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தயாராகியுள்ளது என்று வெளிவிவகர அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பேச்சுவார்த்தை விடயத்தில் அர்ப்பணிப்புடனேயே செயற்பட்ட வருகின்றது என்று தெரிவித்த அவர், அனைத்து இனக்குழுமங்களின் அரசியல் தரப்புக்களிலும் ‘பிச்சைக்காரன் புண்போன்று’ இந்த விடயம் நீடிக்க வேண்டும் எனக் கருதும் வன்போக்கு நிலைப்பாடுகளை உடையவர்கள் உள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

சர்வகட்சி மாநாட்டின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனங்களுக்கிடையிலான தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் நீண்டகாலமான கரிசனை கொண்டவராக இருக்கின்றார்.

இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு பல தசாப்தங்களாகவே இருந்து வருகின்றது.

இவ்வாறான நிலையில், தற்போது சர்வகட்சிகளின் பங்கேற்புடன், பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகளை எதிர்மறையாகப் பார்ப்பவர்களும் உள்ளார்கள்.

குறிப்பாக, ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு தேடுவதற்கான முன்னெடுக்கப்படுவதாகவும் கூறுகின்றார்கள். சர்வதேச நாயணநிதியத்தின் உதவிகளைப்பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் செயற்படாகவும் பிரசாரம் செய்யப்படுகின்றது.

உண்மையிலேயே சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களுக்கும் இனப்பிரச்சினை உள்ளிட்ட இதர பிரச்சினைகள் குறித்த பேச்சுக்களுக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை.

நாணயநிதியத்துடனான பேச்சுக்கள் தொடர்பாக பிரத்தியோகமான சந்திப்புக்களும் பேச்சுக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தப் பேச்சுவார்த்தைக்கும் இனப்பிரச்சினைக்கான  தீர்வு குறித்த பேச்சுக்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை. தமிழ், முஸ்லிம், சிங்க, மலையக தரப்புக்களில் இனப்பிரச்சினையாது தீர்க்கப்பட்டு விடாது ‘பிரச்சைக்காரன் புண்’ போல நீண்டுகொண்டிருக்க வேண்டும் என்று கருதுகின்ற தரப்பினர் இருக்கின்றார்கள்.

இது துரதிஷ்டவசமானது. அத்துடன், அவர்களை வெற்றிகொள்வதும் சவால்கள் நிறைந்தது. ஆனால், அவ்விதமான விடயங்களை எல்லாம் கடந்து தான் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அதற்கு தயாராகவே உள்ளது.

குறிப்பாக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பல்வேறு கட்டப்பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதில் எவ்விதமான தயகத்தினையும் அரசாங்கத்தரப்பு காண்பிக்கப்போவதில்லை.

மேலும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஸ்தாபித்தல், கைதிகளின் விடுதலை உள்ளிட்டவற்றுக்கான அடிப்படைச் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு விட்டன. காணமாலாக்கப்பட்டவர்களின் உறவிர்கள் பற்றியும் கவனத்தில் கொண்டு இழப்பீடு உள்ளிட்ட நடவடிக்கைகளை வழங்குவதற்கு தயராகவே உள்ளோம் என்றார்.

இலங்கையின் மறுசீரமைப்புக்கு இதை விட சிறந்த சந்தர்ப்பம் எதிர்காலத்தில் அமையாது

இலங்கையின் மறுசீரமைப்புக்கு இதை விட சிறந்த சந்தர்ப்பம் எதிர்காலத்தில் அமையாது என்று அரசியல் ஆய்வாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

மறுசீரமைப்பின் மக்கள் இயக்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘இலங்கையின் மறுசீரமைப்புக்கான அம்ச கோரிக்கைகள்’ அடங்கிய ஆவணத்தை அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்கு கையளித்து விளக்கமளிக்கும் செயற்பாடுகள் கடந்த வாரம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, 43ஆவது படையணி, தமிழர் விடுதலை கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைமைகளுடன் சந்திப்புக்களும் நடைபெற்றன.

இந்த சந்திப்புக்களில் மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் அதன் அழைப்பாளர் குழு உறுப்பினர்களான விக்டர் ஐவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த செயற்பாடு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையானது வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் பொருளாதார ரீதியாக அதள பாதாளத்தில் விழுந்துள்ளது. அதேநேரம் பொருளாதார ரீதியாக மாத்திரமல்லாமல், சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் இலங்கை பின்னடைந்தே காணப்படுகின்றது.

இந்த எல்லா விடயங்களிலும் மறுசீரமைப்பு செய்துகொள்ள வேண்டிய அவசியம் நிலவுகின்றது.

இலங்கை இப்போது இருக்கும் நிலைமையில் இதற்கு முன்னர் எப்போதும் இருந்ததில்லை. இந்த சமகாலத்து பிரஜைகளான இலங்கையர்கள் அனைவருக்குமே பாரியதொரு பொறுப்பும் கடமையும் இருக்கிறது. அது நாட்டில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பாகும்.

இலங்கைச் சமூகம் இன்னும் பழமைவாத எண்ணக்கருக்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவில்லை.

இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள வர்த்தக நிலுவை, சென்மதி நிலுவையை சரிசெய்துவிடுவதனால் மாத்திரமே இந்த பழமைவாத சிந்தனைகளை சீர்செய்துவிட முடியாது.

இதற்கு திறந்த கலந்துரையாடலும் உறுதியான தீர்வு முன்வைப்புகளும் வேண்டும்.

அத்தகைய உரையாடல் புள்ளிகள் தொடங்கப்பட வேண்டிய 13 அம்ச முன்மொழிவுகள் அடங்கிய ஆவணமொன்றை தயாரித்து, நாங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் பேசி வருகிறோம்.

நாம் சந்தித்த அனைத்துக் கட்சிகளும் மறுசீரமைப்பு சார்ந்து நாங்கள் முன்வைக்கும் யோசனைகளை பரிசீலிக்க தயாராகவே உள்ளன. எனவே, இதுதான் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு சிறந்த தருணமாக நான் பார்க்கிறேன் என்றார்.

இதேவேளை எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோருடன் சந்திப்புக்களை நடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.