மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம்

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதன்போது 34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் மாலை 6.30 மணியளவில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதுடன், அவை நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக உள்ள பகுதிகளில் யாழ். மாநகர சபையின் அனுமதிகளைப் பெற்று குறித்த கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் திரைநீக்கம்

மாவீரரின் பெற்றோரால் ஈகைச் சுடரேற்றப்பட்டு கல்வெட்டுக்கள் ஒரே நேரத்தில் மாவீரர்களின் பெற்றோரால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமானது.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்ட களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் கடைப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வட கிழக்கெங்கும் மாவீரர் வாரம் உணர்ச்சிபூர்வமாக ஆரம்பமானது

யாழ். பல்கலை

மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் ஆரம்பமானது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபிப் பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளதுடன் தூபியைச்சுற்றி சிவப்பு மஞ்சள் நிறத்திலான வர்ணக்கொடிகள் கட்டப்பட்டுள்ளது.

 

விசுவமடு

விசுவமடு பகுதியில் மாவீரர்களின் பெற்றோரை கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இன்றைய தினம் முல்லைத்துவு மாவட்டத்திற்குட்பட்ட விசுவமடு பகுதியில் மாவீரரின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வானது விசுவமடு தொட்டியடி பகுதியில் சிறப்பாக அமைக்கப்பட்ட அமைவிடத்தில் இடம்பெற்றது.

 

பருத்தித்துறை

பருத்தித்துறையில் நீதிமன்ற வீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மாவீரர் நினைவேந்தல் வாரத்தில் மாவீர்களுக்கு அஞ்சலி நிகழ்வு இன்று(நவ 21) காலை 9:30 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நடாத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி செயலாளர் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொது ஈகை சுடரினை இரண்டு மாவீரர்களின் பெற்றோர்கள் ஏற்றிவைத்துடன் மாவீர்களுக்கு அக வணக்கம் இடம் பெற்றதை தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்றிலிருந்து எதிர்வரும் 27 ம் திகதிவரை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவீரர் நாள் ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.

 

கஞ்சிக்குடிச்சாறு

கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லத்தில் கட்சி பேதமின்றி வழமை போன்று முன்னாள் போராளிகளின் தலைமையிலேயே மாவீரர் தின நிகழ்வு முன்னெடுக்கப்படும். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும் என முன்னாள் போராளியான நாகமணி கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தின முன்னேற்பாட்டின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாவீரர் தின ஏற்பாடுகளுக்காக மாவீரர் துயிலுமில்லம் துப்பரவுப் பணிகளை கட்சி பேதங்களின்றி அனைத்து தரப்பினரும் முன்னெடுத்து வருகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றார்கள். நாங்கள் வழமை போன்று இதனை முன்னாள் போராளிகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கவுள்ளோம் என்று தெரிவித்தார்.

மீனவர்களுக்காக சபையின் நடுவில் அமர்ந்து திலிப் வெத ஆராய்ச்சி போராட்டம்!

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெத ஆராய்ச்சி இன்று (திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின்போது, சபையின் நடுவில் அமர்ந்து இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இலங்கையில் மீன்பிடித் தொழில் அழிந்துவிட்டது என்றும் உடனடி நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றம் முடியும் வரை இவ்வாறு அமர்ந்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

எனினும் சிறிது நேரத்தின் பின்னர் அவர் சபையைவிட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பசிலை வரவேற்க விமான நிலையத்திற்கு செல்லவில்லை – பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர்

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை தான் வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லவில்லை என பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தான் அப்போது கட்டுநாயக்காவில் இருந்ததாகவும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த இடத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியவே அங்குச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதன்போதே பசில் ராஜபக்ஷவை தான் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கை வந்தடைந்தவுடன் அவருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று சபையில் கேள்வி எழுப்பியிருந்தனர்.

குறிப்பாக நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் பசில் ராஜபக்ஷவை பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திர பெர்னாண்டோ, மற்றும் பல அரசியல்வாதிகள், அரச உயர் அதிகாரிகள் வரவேற்றனர் என எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வாழ் சீனர்களுக்கு தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய கூட்ட அறிக்கைகளை வெளிப்படுத்த வேண்டும் – தகவல் அறியும் உரிமை ஆணையம்

இலங்கையில் உள்ள சீன மக்களுக்கு சீனா வழங்கிய சினோபார்ம் கோவிட்-19 தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவதற்காக நடத்தப்பட்ட கூட்டத்தின் சுருக்கத்தையும், அதன் தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கையையும் டிசம்பர் 1ஆம் தி கதிக்கு முன் வெளியிடுமாறு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (என்எம்ஆர்ஏ) தகவல் அறியும் உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையின் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (டிஐஎஸ்எல்) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.

ஆணைக்குழுவின் இந்த உத்தரவுக்கு இணங்கத் தவறினால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 39 ஆவது பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்படும் என்றும் தகவல் அறியும் உரிமை ஆணையகம் எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது, ​தகவல் அதிகாரி கோரிக்கையை அந்த நிராகரித்தார்.

இந்த நிலையில் தகவல் அதிகாரியின் பதிலில் அதிருப்தி அடைந்த, இலங்கையின் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (டிஐஎஸ்எல்), கடந்த ஆண்டு ஏப்ரல் 29 அன்று நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் மேல்முறையீடு செய்தது, ஆனால் நியமிக்கப்பட்ட அதிகாரி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் பதிலளிக்கத் தவறிவிட்டார்.

இதனையடுத்து உலகளாவிய ஊழல் எதிர்ப்பு நிறுவனம் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வ இலங்கையின் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்தது.

இலங்கையில் உள்ள சீன மக்களுக்கு சீனா வழங்கிய சினோபார்ம் கோவிட்-19 தடுப்பூசி தொடர்பில், தனியார் நிறுவனம் ஒன்றுடன் வெளிப்படுத்தப்படாத உடன்படிக்கை இருப்பதாக சந்தேகம் தெரிவித்தே, இலங்கையின் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தது.

ஜனாதிபதி மலையகம் வரும் போது போது பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் -மனோ

இப்போது வடக்கிற்கு போவதை போல், மலையகத்துக்கும், அரசியல் விஜயம் மேற்கொள்ள உள்ளேன். அங்கே வாருங்கள் சந்திப்போம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னிடம் நேரடியாக கூறினார். வடகிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களது, பிரதான தலைமை கட்சியான எங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்பீக்கள் உங்களை கட்டாயம் சந்திப்பார்கள் என்று நான் அவருக்கு பதிலளித்தேன்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகத்துக்கு வந்து அங்கே என்ன சொல்ல, செய்ய போகிறார் என்பதை தெரிந்துக்கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் தொடர்பிலும், இலங்கையிலேயே பின்தங்கிய பிரிவினராக ஐநா சபையும், உலக வங்கியும் அறிவித்துள்ள பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார நிலைமைகள் தொடர்பிலும் காத்திரமான காரியங்களை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார பிரச்சினைகளின் “தள வேறுபாடு” களை இன்று ஐக்கிய நாடுகள் சபையே புரிந்துக்கொண்டு எம்முடன் தனியாக பேசுகிறது. இதை ஜனாதிபதியும் புரிந்துக்கொண்டு எம்மிடம் பேச வேண்டும் என அவரிடம் ஏற்கனவே கூறி விட்டேன். ஆகவே வடகிழக்கு வெளியே வாழும் தமிழ் மக்கள், குறிப்பாக மலையக தமிழ் மக்கள் தொடர்பில், பிரதான தலைமை கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி நிச்சயமாக சாதகமாக நடந்துக்கொள்ளும்.

வடக்கில் ஜனாதிபதி செயலக உப காரியாலயம் ஒன்றை திறந்து வைத்துள்ளார். நல்லது. காணி, வீடமைப்பு, சுகாதாரம் தொடர்புகளில் பல்வேறு குழுக்களை அமைக்க போவதாக அறிவித்துள்ளார். இதுவும் நல்லதே. ஆனால், இவை நடைமுறையாகி நல்லது நடக்குமானால் மாத்திரமே அங்கு வாழும் அப்பாவி தமிழ் உடன்பிறப்புகள் மகிழ்ச்சியடைவார்கள். நானும் மகிழ்ச்சியடைவேன்.

மலையகத்தில் ஜனாதிபதி ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. ஏற்கனவே, ஐநா சபை பெருந்தோட்டபுறங்களில் உணவின்மை 43 விகிதம் எனவும், உலக வங்கி பெருந்தோட்டபுறங்களில் வறுமை 53 விகிதம் எனவும் கூறி உள்ளன. ஐநா விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபொகடா, பெருந்தோட்டபுறங்களில் நவீன கொத்தடிமை முறைமை இருப்பதாகவும், அதுவும் தொழிலாளர் என்ற காரணத்தை தாண்டி, சிறுபான்மை தமிழர் என்பதால் நிகழ்கிறது எனவும் அறிக்கை சமர்பித்து கூறி விட்டார்.

ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகம் வந்து, பிரச்சினைகளை தேடாமல், தீர்வுகளை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அதுதான் துன்புறும் பெருந்தோட்ட மக்களை திருப்தியடைய செய்யும். 200 வருடங்களாக உழைத்து நாட்டை உருவாக்கிய பெருந்தோட்ட மக்களின் இன்றைய நிலைமை பற்றி சர்வதேச சமூகம் சொல்லுவதை கேட்டு நம்நாட்டு ஜனாதிபதி பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்புதான் கேட்க வேண்டும். அதை செய்யாவிட்டாலும், இனி விசேட உணவு வழங்கல் மற்றும் ஒதுக்கீட்டு திட்டங்களை அவர் அறிவிக்க வேண்டும் என கோருகிறேன்.

பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகள் தொடர்பில் அரசுக்கு உதவ தாம் தயார் என ஐநா சபை என்னிடம் கூறியுள்ளது. அவரிடமும் கூறி இருப்பார்கள். ஐநா, மற்றும் இந்திய நாட்டு உதவிகளை கோரி பெற்று பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகளை முதலில் கவனியுங்கள்.

22 இலட்சம் குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவி தேவை – யுனிசெப்

இலங்கையில் உள்ள சுமார் 56,000 குழந்தைகள், கடுமையான போஷாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள 22 இலட்சம் குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும் 4.8 மில்லியன் குழந்தைகளுக்கு கல்விக்கான அணுகல் கிடைக்க வேண்டும் எனவும் யுனிசெப் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

6.2 மில்லியன் மக்கள் மிதமான உணவுப் பற்றாக்குறையாலும், 66,000 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையும் எனவும் அறிக்கை தெரிவிக்கிறது.

இலங்கையில் உள்ள ஒவ்வொரு 5 குடும்பங்களிலும் 2 குடும்பங்கள் தமது மாதாந்த சம்பளத்தில் 75 வீதத்தை தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்ய செலவிடுவதாகவும் அந்தக் குடும்பங்கள் கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக மிகக் குறைந்தளவு நிதியையே செலவிடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பணவீக்கம் காரணமாக பெரும்பாலான குடும்பங்கள் தங்களது சேமிப்பில் பெரும்பகுதியை செலவழித்துள்ளதாக சுட்டிக்காட்டும் அறிக்கை, அந்த குடும்பங்கள் தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் கடும் சிக்கலை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டுகிறது.

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 286 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

அதிகாரங்களை பிரதி முதல்வருடன் பகிர மறுக்கும் மணிவண்ணன் – பிரதி முதல்வர் ஈசன் குற்றச்சாட்டு

யாழ் மாநகரசபைக்கென இதுவரையில் ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு சதம் கூட இது வரையில் பயன்படுத்தப்படவில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட பிரதித் தலைவரும் யாழ் மாவட்ட துணை முதல்வருமான துரைராசா ஈசன் தொலைக் காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாநகர சபையில் பிரதி முதல்வருக்கு அதிகாரங்களை தற்போதை முதல்வர் மணிவண்ணன் தரவில்லை. வடகிழக்கிலுள்ள ஏனைய சபைகளில் முதல்வர்கள் அதிகாரங்களை பகிர்ந்து பிரதி முதல்வருக்கு எழுத்து மூலம் வழங்கியுள்ளார்கள். ஆனால் யாழ் மாநகரசபையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவில்லை.

யாழ் மாநகரசபையில் உள்ள நான்கு குழுக்களில் ஒரு குழுவில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளவில்லை. 22 ஆசனங்களில் 14 ஆசனங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சொந்தமானது. 50% வீதத்திற்கு மேற்பட்ட ஆசனங்களைக் கொண்ட கூட்டமைப்பின் உறுப்பினர்களை அங்கத்துவர்களாகக் கூட இணைத்து கொள்ளவில்லை. முதல்வர் திட்டமிட்ட வகையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடன் (ஈ.பி.டி.பி) இணைந்து கூட்டமைப்பை புறக்கணித்து வருகிறார்.

ஒரு வட்டாரத்துக்கு 5 மில்லியன் என 135 மில்லியன் ரூபா யாழ் மாநகரசபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு சதத்தை கூட இது வரையில் பயன்படுத்தப்படவில்லை. அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் கூட எம்முடன் இது வரையில் கலந்தாலோசிக்கப்படவில்லை. ஆனால் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) மூன்று உறுப்பினர்களை சந்தித்து முதல்வர் மணிவண்ணன் கலந்துரையாடியுள்ளார் என தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் சட்டவிரோத வீட்டுத்திட்டங்கள் அமைச்சர்களால் திறந்து வைப்பு

கடந்த (6) திகதி ஞாயிற்றுகிழமை குவைத் நாட்டின் ஸகாத் ஹவுஸின் (zakath house) நிதியுதவியுடன் ISRC நிறுவனத்தின் அனுசரணையில் எருக்கலம்பிட்டி ஸகாத் பவுண்டேசனின் (zakath foundation ) பூரண ஒத்துழைப்புடனும் மன்னார் மாவட்டத்தின் எருக்கலம்பிட்டி கிராமத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள 200 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்ட செயற்றிட்டத்திற்கு அமைய முதற்கட்டமாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள 75 வீடுகளை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட அதிதிகள் இணைந்து உத்தியோகப்பூர்வமாக பயனாளர்களுக்கு கையளித்தனர்.

எனினும், இந்த வீட்டுத்திட்டத்திற்கு உரிய அனுமதிகளோ, பிரதேச சபையின் நிர்மாண நடைமுறைகளோ பின்பற்றப்படவில்லை என்று மன்னார் பிரதேசசபை தெரிவித்துள்ளது.

பல இலட்சம் ரூபா வருமான இழப்பு

அதே நேரம் மன்னார் மாவட்டத்தில் யுத்ததினால் இடம் பெயர்ந்த முஸ்லீம் மக்களின் நலன்கருதி மத்தியகிழக்கு நாடுகளின் நிதியுதவியில் அமைக்கப்படும் வீட்டுதிட்டங்களுக்கு உரியவாறு பிரதேச சபையிடமோ சம்மந்தப்பட்ட திணைக்களங்களிடமோ அனுமதி பெறப்படுவதில்லை எனவும் மன்னார் பிரதேச சபையின் கணக்காய்வு ஆவணங்கள் ஊடாக தெரியவந்துள்ளது.

2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர்சியாக அனுமதி இன்றி மேற்கொள்ளப்படும் இவ்வீட்டு திட்டங்களால் மன்னார் பிரதேச சபைக்கு பல இலட்சம் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளமை மன்னார் பிரதேச சபையின் வருமானம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு தேடலில் தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உள்நாட்டு யுத்ததின் காரணமாக 1990 ஆண்டு முஸ்லிம் மக்கள் வடபகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தநிலையில் 2009ஆண்டு யுத்தம் நிறைவுற்ற பின்னர் அவர்கள் தங்கள் சொந்த இடங்களில் படிப்படியாக மீளக்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.

அவ்வாறு முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றப்படுவதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்திற்குமாக மத்திய கிழக்கு நாடுகளான குவைத்,கட்டார்,ஓமான்,டுபாய் போன்ற நாடுகள் பல கோடி ரூபா நிதி உதவிகளைச் செய்துவருகின்றன

ஆனாலும் அந்த நிதிகள் சில திட்டமிடப்படாத செயற்பாடுகளினால் பயன்பாடு இன்றியும் அதே நேரம் அதன்மூலம் வருமானத்தை பெற்று கொள்ள வேண்டிய உள்ளூராட்சி மன்றங்கள் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் காணப்படுகின்றதாக கூறப்படுகின்றது.

இவ்வாறிருக்கையில், குறித்த 200 வீட்டு திட்டத்திற்கென மன்னார் பிரதேச சபையிடம் எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்பதுடன் பிரதேச சபையின் வீட்டுத்திட்டங்களுக்கான நிர்மாண நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

சட்டவிரோத கட்டட நிர்மாணங்கள்

இவ்வாறு மன்னார் பிரதேச சபையிடம் உரியவாறு அனுமதி பெறபடாமையினால் மன்னார் பிரதேச சபைக்கு “குவைத் விலேஜ்” வீட்டுத்திட்டத்தினால் கிடைக்க வேண்டிய ஏழுலட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கு அதிகமான வருமானம் இல்லாமலாக்கப்பட்டுள்ளது.

2019 ஆண்டு மன்னார் பிரதேச சபையின் மாகாண கணக்காய்வு அறிக்கையின் படி மன்னார் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டட நிர்மாணங்கள், கடைகள், வீடுகளின் நிர்மாணங்கள் அதிகரித்துள்ளதாகவும் பிரதேச சபை இவ்வாறான சட்ட விரோத கட்டட நிர்மாணங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதில்லை எனவும் கணக்காய்வு அறிக்கை சுட்டி காட்டியிருந்தது

மேலும் கட்டடங்கள் அமைக்கும் போது அனுமதி பெறுதல் கட்டாயம் எனவும் உபபிரிவிடுகை, நில அளவை வரைபடம் என்பன கட்டாயம் எனவும் 2021 ஆம் ஆண்டு முன்னைய அனுமதி பெறாத திட்டங்கள் தொடர்பாக மன்னார் பிரதேச சபைக்கு உள்ளூராட்சி திணைக்களம் கடிதம் மூலம் அறிவித்திருந்த போதும் முன்னதாக அமைக்கப்பட்ட கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவதிலும் புதிதாக கட்டடங்களை அமைக்கும் போது அனுமதி வழங்குவதிலும் உள்ளூராட்சி திணைக்களத்தின் எழுத்து மூல அறிவித்தலை மன்னார் பிரதேச சபை நடைமுறைப்படுத்தாத நிலையே காணப்படுவதாக கூறப்படுகின்றது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக மன்னார் பிரதேச சபையிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு சபையின் அனுமதி பெறாமல் கடந்தகாலங்களில் முடிவுறுத்தப்பட்ட 716 வீடுகள் உள்ளடங்கிய வீட்டத்திட்டங்கள் தொடர்பில் சபைக்கு கிடைக்க வேண்டிய அனுமதிகட்டண வருமானம் தொன்னூற்று ஐந்து லட்சத்து இருபத்தென்னாயிரத்து ஐனூற்று பதினொரு ரூபா பணம் கிடைக்கப்பெறாததினால் மன்னார் பிரதேச சபைக்கு வருமானமிழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதேச சபை தகவல் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தற்போது திறக்கப்பட்டுள்ள “குவைத் விலேஜ்” வீட்டத்திட்டமும் அனுமதி பெறப்படாமையினால் ஒட்டு மொத்தமாக மன்னார் பிரதேச சபைக்கு சட்ட விரோத கட்டட நிர்மாணங்களால் ஒரு கோடியே 2 லட்சத்து முப்பத்து ஆறாயிரத்து ஐனூற்று பதினொரு ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான சட்டவிரோத வீட்டுதிட்ட நிர்மாண நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச சபை வழங்கியுள்ள ஆவணத்தில் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளின் ஊடாக கிடைத்த நிதியை பயன்படுத்தி அமைக்கப்பட்ட வீட்டு திட்டங்களே அதிகம் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக தலைமன்னார் பகுதியில் காணி சீர்திருந்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்ட றிசாட்சிற்றி 400 வீடுகளினால் பதின்னான்கு லட்சத்து பதினாறாயிரம் ரூபா கிடைக்கபெறவில்லை, மேலும் பெரிய கரிசல் பகுதியில் அரச காணியில் அமைக்கப்பட்ட 100 வீட்டு திட்டம் பெரிய கரிசல் 50 வீட்டு திட்டம் பேசாலை 25 வீட்டு திட்டம் மற்றும் சயிட் சிட்டி வீட்டு திட்டம் போன்றன உரிய அனுமதி இன்றி அமைக்கப்பட்டமையினால் பத்துலட்சத்து நாப்பத்து நாளாயிரத்து முன்னூறு ரூபா இதுவரை பிரதேச சபைக்கு கிடைக்கபெறவில்லை எனவும் கூறப்படுகின்றது.

தாழ்வுபாடு துருக்கி சிட்டி 100 வீடு குடியிருப்பு

இதே போன்று தாழ்வுபாடு துருக்கி சிட்டி 100 வீடுகளை கொண்ட குடியிருப்பும் உரிய அனுமதி இன்றி அமைக்கப்படமையினால் அனுமதி கட்டணம் ஊடாக பெறப்படவேண்டிய பாரிய நிதி பல வருடங்களாக கிடைக்க பெறாமல் உள்ளது. அதே நேரம் அனுமதி இன்றி அமைக்கப்பட்ட கட்டிடங்களுக்கான அனுமதியை பெறுவதில் குறித்த திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்களும் அவ் வீட்டு திட்டங்களில் வசிக்கும் மக்களும் அக்கறை செலுத்தவில்லை என்பது பிரதேச சபையின் ஆண்டு அறிக்கையின் ஊடாக தெளிவாக தெரியவருகின்றது.

இவ்வாறான நிலையில் கடந்த 6 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ஒரு கட்டட தொகுதியை இலங்கையின் நகரதிட்டமிடல் மற்றும் வீடமைப்பு அமைச்சர்,பிரதேச சபை தவிசாளர், மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலர் இணைந்து திறந்து வைத்துள்ளமை மேலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது

தொடர்சியாக இவ்வாறு அனுமதி இன்றி வீட்டு திட்டங்கள் அமைக்கப்படுகின்றமையினால் பாரிய அளவு பிரதேச சபைக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கப்பெறாமல் உள்ளது அது மாத்திரம் இல்லாமல் இவ்வாறான தொடர் சட்டவிரோத கட்டுமானங்கள் இடம் பெற்று வரும் போதும் அவற்றை தடுத்து நிறுத்துவதில் மன்னார் பிரதேச சபை அக்கறையீனமாக செயற்படுவதாகவும் 1978 ஆம் ஆண்டு 41 இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் கீழ் சட்டவிரோத கட்டுமாணங்களுக்கான தண்டப்பணம் பெறுவதற்கும் அல்லது 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் சட்டவிரோத கட்டடங்களை இடித்தழிப்பதற்கும் பிரதேச சபைக்கு அதிகாரம் காணப்படுக்கின்ற போது அவற்றை செய்வதில் பிரதேச சபை கவனம் செலுத்தவில்லை என பிரதேசசபையின் 2018,2019 கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.

இதே போல் மத்திய கிழக்கு நாடு ஒன்றின் நிதி உதவியுடன் மன்னார் பேசாலை பிரதான வீதியில் கரிசல் பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட வீட்டுத்திட்டமானது மன்னார் பிரதேச சபையின் உரிய அனுமதி இன்றியும் பிரதேச சபையின் ஆலோசனை எவையும் பெறப்படாமல் அமைக்கப்பட்டதுடன் அதில் தற்போது மனிதர்கள் வசிக்க முடியாத நிலை காணப்படுவதுடன் வெள்ள நீரில் அக்கிராமம் முழுவதும் நீரில் மூழ்கி காணப்படுகின்றது.

இதனால் பெரும் நிதி வீண்விரயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2019,2020 ஆண்டு காலப்பகுதியில் முன்னால் வீடமைப்பு அபிவிருத்தி மற்றும் கலாச்சார அமைச்சினால் மன்னார் மாவட்டத்தில் 3000 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பகுதி அளவிலும் அத்திவார அளவிலும் வீடுகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் பல ஆயிரக்கனக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான நிதி எப்போது விடுவிக்கப்படும் என அவர்கள் ஏக்கத்தோடு காத்திருக்கும் நிலையில் இவ்வாறு முஸ்லிம் அரச சார்பற்ற நிறுவனங்களின் பாரிய நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பிரதேச சபை மற்றும் முசலி பிரதேச சபை பகுதிகளில் அமைக்கப்பட்ட பல வீட்டு திட்டங்களும் பல வீடுகளும் மக்கள் குடியேராத நிலையில் காணப்படுவதாகவும் சிலருக்கு இரண்டு வீடுகள் காணப்படுவதாகவும் பலர் வீட்டு திட்டங்களுக்கு அருகில் அத்தியாவசிய சேவைகள் எவையும் இன்மையால் புத்தளத்தில் வசிப்பதுடன் இப் பகுதிக்கு நீண்ட விடுமுறை நாட்களில் மாத்திரமே வருவதாகவும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் பாலசிங்கம் கதிகாமநாதன் தெரிவிக்கின்றார்.

அனுமதி பெறுவதற்கான நினைவூட்டல் கடிதம்

மேலும் பிரதேச சபை தீர்மானத்தின் ஊடாக இவ்வாறான அனுமதி பெறாத வீட்டு திட்டங்களுக்கான பிரதேச சபையின் அனைத்து விதமான சேவைகளையும் நிறுத்துவதற்கான செயற்பட்டை முன்னெடுக்கவுள்ளதாகவும் அனுமதி பெறுவதற்கான நினைவூட்டல் கடிதங்களை அவ் வீடுகளின் உரிமையாளர்களுக்கு அனுப்பிவத்கற்கான ஏற்பாட்டை மேற்கொள்வதாவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பெரும்பாலும் அமைக்கப்படும் வீட்டு திட்டங்கள் தொடர்பில் மாவட்ட செயலகத்திலோ பிரதேச செயலகங்களிலோ பிரதேச சபைகளிலோ எந்த ஒரு பதிவுகளும், ஆவணங்களும் பெரும்பாலும் காணப்படுவதில்லை என்பது குறிப்பிட வேண்டிய அம்சமாகும்.

இவ்வாறான நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு எனும் நல் நோக்கத்துக்கு கிடைக்கும் இவ்வாறான உதவிகளை நாங்கள் எப்போதும் வரவேற்கின்றோம். ஆனாலும் முஸ்லிம் மக்களை காரணம் காட்டி பணத்தை பெற்று தங்களின் அரசியல் இலாபத்திற்காக மக்கள் வசிக்க முடியாத இடங்களிலும் அதே நேரம் பிரதேசபையிடம் உரிய அனுமதி பெறாமல் இவ்வாறு வீடுகளை அமைத்து அதில் சுயலாபமும் அதே நேரம் அதிகார துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்படுவதை நாங்கள் ஒரு போதும் ஏற்கபோவதில்லை என மன்னார் பிரதேச சபை உறுப்பினர் அந்தோனி தற்குரூஸ் லுஸ்ரின் தெரிவிக்கின்றார்.

மன்னார் மாவட்டத்தில் இவ்வாறு உரிய அனுமதிகள் இன்றி தொழில்நுட்ப ஆலோசனைகள் பெறாது அரச அமைச்சுக்களிலும் அரச கட்சியிலும் அங்கத்துவம் உண்டு என்ற ஒரே காரணத்தினால் அதிகாரத்தை கையில் எடுக்கும் ஒரு சில அரசியல் வாதிகளாலும் அவர்களின் உள்ளூர் நிர்வாகிகளாலும் இடைத்தரகர்களாலும் பொது மக்களின் நன்மைக்கு என நன்கொடையாக வழங்கப்படும் பல இலட்சம் ரூபா வீடுகளில் தற்போது கழுதைகளும் மாடுகளும் அடைக்கலம் புகும் நிலையே காணப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறான பின்னனியிலேயே மீளவும் பிரதேச சபையிடம் உரிய அனுமதி பெறாது மத்திய கிழக்கு முஸ்லீம் நாடான குவைத்தின் நிதியை பெற்று எருக்கலம் பிட்டி பகுதியில் யுத்தத்திற்கு பிற்பாடு மீளக்குடியேறியுள்ள மக்களுக்கென அமைக்கப்பட்ட மேற்படி “குவைத் விலேஜ்” வீட்டுத்திட்டமானது மின் இணைப்பு , நீர் இணைப்பு,வீதி,வடிகால் அமைப்பு உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் ஒழுங்கான முறையில் பூரணப்படுத்தப்படாத நிலையில் அவசர அவசரமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் உத்தியோக பூர்வமாக அங்குராட்பணம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தந்திரம் செய் – நிலாந்தன்

ரணில்+ ராஜபக்ச அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணும் நோக்கத்தோடு தமிழ்க் கட்சிகளோடு பேசப்போவதாக கடந்த வாரம் அறிவித்திருக்கிறது. பன்னாட்டு நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதற்கும் ஐநாவை சமாளிப்பதற்கும் இது போன்ற அறிவிப்புகள் தேவை. அல்லது தமிழ் மக்களின் தலையில் ஏதாவது ஒரு அரைகுறைத் தீர்வை கட்டி விடுவதற்கு இது உகந்த தருணம் என்று ரணில் சிந்திக்கிறாரா?

ஏனெனில் 2015 ஆம் ஆண்டில் ரணில்+மைத்திரி அரசாங்கம் நிலைமாறு கால நீதிச் செய்முறைகளின் கீழ் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கிய ஒரு புதிய யாப்பை உருவாக்க முற்பட்டது.அந்த யாப்புருவாக்கச் செய்முறைகள் இடைக்கால வரைபுவரை முன்னேறின.ஆனால் இடையே மைத்திரிபால சிறிசேன ஆட்சியைக் குழப்பினார்.அதனால் யாப்புருவாக்க முயற்சிகள் இடையில் நின்று போயின. அதன்பின் ஆட்சிக்கு வந்த கோத்தாபய ஒரு புதிய யாப்பை உருவாக்கப் போவதாக கூறிக்கொண்டு ஒரு நிபுணர் குழுவை உருவாக்கினார். இப்பொழுது ரணில் மீண்டும் வந்து விட்டார் அவர் 2018 இல் விட்ட இடத்திலிருந்து ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சியை தொடங்கப் போகிறாரா? அல்லது அதே பழைய முயற்சிக்கு ஒரு புதிய லேபலை ஒட்டி அதைத் தொடரப் போகிறாரா?அல்லது முற்றிலும் புதிதாக ஒரு முயற்சியை தொடங்கப் போகிறாரா? அல்லது பன்னாட்டு நாணய நிதியம் ஐநா போன்றவற்றைத் திசை திருப்புவதற்குத் தமிழ் மக்களையும் பங்காளிகளாக்கும் ஒரு தந்திரமா ? என்ற கேள்விகளை தமக்குள் எழுப்பி தமிழ்த் தரப்பு ரணிலை எதிர் கொள்ள வேண்டும்.

அவ்வாறு தமிழ்த் தரப்பு ரணிலை எதிர்கொள்வதற்காக தங்களுக்கிடையே கலந்து பேசி ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்று கூறி கடந்த வாரம் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எனைய கட்சித் தலைவர்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்.அதில் அவர் சமஸ்ரிதான் தமிழ் மக்கள் கேட்கும் தீர்வு என்ற அடிப்படையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து அந்தக் கோரிக்கையை முன்வைக்கவேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் அது தொடர்பில் அவர் தனது சொந்தக் கட்சியான தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களோடுகூட உரையாடவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. அவருடைய அழைப்பை, கூட்டமைப்பில் உள்ள பங்காளி கட்சிகள் பொருட்படுத்தவில்லை. கூட்டமைப்புக்கு வெளியே உள்ள கட்சிகளும் அந்த அழைப்பை பொருட்படுத்தவில்லை.சம்பந்தர் அழைத்தால் மேசைக்கு வரலாம் என்ற நிலைப்பாட்டை ஏனைய கட்சிகள் கொண்டிருப்பதாக தெரிகிறது. இதனால் சுமந்திரனின் அழைப்பு வெற்றி பெறவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை சம்மந்தனின் கொழும்பு இல்லத்தில் இடம்பெறவிருந்த அந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.அதாவது பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக தமிழ்த்தரப்பு தங்களிடையே பேசவேண்டிய விடயங்கள் தொடர்பில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு முயற்சி சறுக்கிவிட்டது.

அப்படி ஒரு முயற்சி அவசியமானது. அதை கட்சிகள் தங்களுக்கிடையே தாங்களாக செய்ய வேண்டும். அல்லது குடிமக்கள் சமூகங்கள் அதை நோக்கி கட்சிகளை உந்தித்தள்ள வேண்டும்.ஏனென்றால் தமிழ்த்தரப்பு என்ன கேட்கின்றது என்பதனை ஒரே குரலில் சொன்னால் அதற்குப் பலம் அதிகம் என்று அபிப்பிராயம் பெரும்பாலான வெளிநாட்டுத் தூதரகங்கள் மத்தியில் உண்டு. தமிழ் குடிமக்கள் சமூகங்களை சந்திக்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அதை வலியுறுத்திப் பேசுவதுண்டு. தமிழ்மக்கள் மத்தியில் இருக்கும் பிரதான பலவீனமாக அதைச் சுட்டிக்காட்டிப் பேசும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் உண்டு.இப்படிப்பட்டதோர் பின்னணியில் தமிழ்த்தரப்பு தான் எதைக் கேட்கிறது என்பதனை ஒரே குரலில் முன்வைக்க வேண்டிய ஒரு கட்டாயத் தேவை உண்டு.

தமிழ் கட்சிகள் என்ன கேட்கின்றன ?இதுவரையிலும் தமிழ்த் தரப்பு முன்வைத்த தீர்வு முன்மொழிவுகளை தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளுமே,எல்லாக் குடிமக்கள் சமூகங்களுமே ஒற்றையாட்சியை நிராகரிக்கின்றன.அவை கூட்டாட்சிப் பண்புடைய -சமஸ்ரிப் பண்புடைய தீர்வைத்தான் – கேட்கின்றன.

இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில் தமிழ்த்தரப்பு அதிகளவு தீர்வு முன்மொழிவுகளை முன்வைத்த ஒரு காலகட்டம் எதுவென்றால் கடந்த ஆறு ஆண்டுகாலப் பகுதிதான்.2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 ஐநா தீர்மானத்தின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்க நிலைமாறுகால நீதிச் செய்முறைகளின் கீழ் நாடாளுமன்றத்தை சாசனப் பேரவையாக மாற்றினார். அதாவது ஒரு புதிய யாப்பை உருவாக்கும் நோக்கத்தோடு நாடாளுமன்றம் சாசன பேரவையாக மாற்றப்பட்டது.அதிலிருந்து தொடங்கி கோத்தாபயவின் யாப்புருவாக்கத்திற்கான நிபுணர்குழு வரையிலும் தமிழ்த்தரப்பு தனது முன்மொழிவுகளை முன்வைத்து வருகிறது.இதில் தமிழ்க்கட்சிகள்,தமிழ் குடிமக்கள் சமூகங்கள்,தமிழ் மக்கள் பேரவை போன்ற மக்கள் அமைப்புக்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் அமைப்புகள் போன்ற பல்வேறு தரப்புகளும் கடந்த 6 ஆண்டு கால பகுதிக்குள் அதிகளவு முன்மொழிவுகளை வைத்திருக்கின்றன.

இதில் குறிப்பாக தமிழ் மக்கள் பேரவை முன்வைத்தது ஒரு சமஸ்ரி முன்மொழிவு.அதுபோலவே வட மாகாண சபை முன் வைத்ததும் ஒரு சமஸ்ரி முன்மொழிவு.விக்னேஸ்வரனின் கட்சி கொன்பெடரேஷனை கேட்கின்றது.அதுவும் உயர்வான ஒரு சமஸ்ரிதான்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு சமஸ்ரிக் கட்டமைப்பைக் கேட்கிறது.அரசாங்கம் ஒற்றை ஆட்சி முறைமையை மாற்றி கூட்டாட்சிக்குத் தயார் என்று அறிவித்தால் தாம் ரணிலுடன் பேசத்தயார் என்று அக்கட்சி கூறுகிறது.

இதில் கூட்டமைப்பு ரணிலோடு இணைந்து உருவாக்க முயன்ற யாப்பைக் குறித்து விமர்சனங்கள் உண்டு.தமிழ் மக்களின் பங்களிப்போடு முன்னெடுக்கப்படும் முதலாவது யாப்புருவாக்க முயற்சி அதுவென்று சம்பந்தர் சொன்னார். கூட்டமைப்பு அதை சமஸ்ரிப் பண்புடையது என்று கூறியது. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவும் அவருடைய அமைச்சர்களும் அது ஒற்றை ஆட்சிதான் என்று சொன்னார்கள்.சம்பந்தர் “பிரிக்கப்படமுடியாத, பிளவுபடாத இலங்கைத் தீவு” என்று திரும்பத் திரும்ப ஒரு மந்திரம் போல சொல்லிக் கொண்டிருந்தார்.சமஸ்ரி என்று வெளிப்படையாக லேபலை ஒட்டினால் அதைச் சிங்கள மக்கள் எதிர்பார்கள் என்றும் காரணம் கூறப்பட்டது. அதாவது நடைமுறையில் அந்தத் தீர்வு முயற்சியை அவர்கள் சிங்கள மக்களுக்கு ஒற்றை ஆட்சி என்று வியாக்கியானம் செய்தார்கள். தமிழ் மக்களுக்கு அது கூட்டாட்சி என்று வியாக்கியானம் செய்தார்கள். ஆனால் இப்பொழுது சுமந்திரன் கூறுகிறார் ஒரு சமஸ்ரித் தீர்வை நோக்கி எல்லாக் கட்சிகளும் ஒரு குரலில் பேச வேண்டும் என்று.

அவர் ஏனைய கட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறப்பட்டபடி சமஸ்ரிதான் தீர்வு என்பதனை தமிழரசுக்கட்சி உறுதியாகவும் வெளிப்படையாகவும் விட்டுக்கொடுப்பின்றியும் கூறுமாயிருந்தால் ஏனைய கட்சிகளும் அவர்களோடு இணைந்து ஒரே குரலில் அந்தக் கோரிக்கையை முன்வைக்கலாம். இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணைய மறுத்தால் அதுவும் நல்லதே.அக்கட்சி வெளியில் நின்று கொண்டு ஏனைய கட்சிகளை கண்காணித்துக் கொண்டிருக்கும். எனைய கட்சிகள் தமது கோரிக்கைகளில் இருந்து இறங்கினால் அவற்றை முன்னணி அம்பலப்படுத்தும். எனவே ஒரு கட்சி எதிர் நிலையில் நிற்பதும் நல்லது.

ரணில் இனப்பிரச்சினையை சர்வதேசமயநீக்கம் செய்ய முற்படுகிறார்.வெளியாரின் தலையீடின்றி பிரச்சினையைத் தீர்க்க வருமாறு தமிழர்களை அழைத்திருக்கிறரார்.போரில் வெல்வதற்கு அவர்களுக்கு வெளி நாடுகளின் ஆயுதமும் உதவிகளும் தேவை.ஆனால் சமாதானத்துக்கு அது தேவையில்லையாம்.தமிழ்த் தரப்பு அதை ஏற்கக்கூடாது.இந்தியாவையும் உள்ளடக்கிய ஒரு மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தத்தைக் கேட்க வேண்டும்.அந்த மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தத்தின்கீழ் சிங்கள-தமிழ்-முஸ்லீம் மக்கள் கூட்டாட்சிக்கான ஓர் அரசியல் உடன்படிக்கையை எழுதுவதற்காகப் பேச வேண்டும்.

மேலும் இலங்கை அரசாங்கத்தை பிணை எடுக்க முயலும் ஐ.எம்.எப் போன்ற அனைத்துலக அமைப்புக்களிடம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது என்பதை பொருளாதார பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு முன்நிபந்தனையாக வைக்குமாறு நிர்பந்திக்க வேண்டும்

ரணில் இப்பொழுது நிறைவேற்று அதிகாரமுடைய ஒரு ஜனாதிபதி.தந்திரமும் நிறைவேற்று அதிகாரமும் ஒன்று சேர்ந்திருக்கின்றன.ரணில் ஒரு நரி.அவர் தந்திரங்கள் செய்வார் என்று தமிழ்த்தரப்பு தங்களுக்குள் புறுபுறுத்துக் கொண்டிருக்க முடியாது.தமிழ்மக்கள் தாங்களும் புத்திசாலிகள் என்பதனை நிரூபிக்க வேண்டிய ஆகப்பிந்திய தருணம் இது.

– நிலாந்தன்