போயா தினத்தில் யாழ் பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த ஆக்கிரமிப்பு புத்தர்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், நேற்று போயா தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் கட்டி, புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

வழமைக்கு மாறாக அதிகளவான பௌத்த கொடிகள் பல்கலையினுள் கட்டிக்கொண்டிருந்தபோது அதனை பார்ப்பதற்கு கலைப்பீட தமிழ் மாணவர்கள் அங்கு சென்றவேளை, அங்கு வந்த ஒழுக்காற்று விசாரணை அதிகாரி விஜயேந்திரா மாணவர்களை அங்கு செல்ல வேண்டாம் என தடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து விஞ்ஞான பீடத்தின் பின்புறத்தினூடாக புத்தர் சிலை எடுத்து வரப்பட்டது.

இதன்போது ஒரு கறுப்பு நிற மர்ம வாகனமும் பல்கலையினுள் நுழைந்தது.

இதன்போது அங்கு சென்ற கலைப்பீட தமிழ் மாணவர்களை அவ்விடத்திற்கு வந்த பிக்கு ஒருவர் காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் புத்தர் சிலையை எடுத்து வந்த பெரும்பான்மையின மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பெற்ற அனுமதி கடிதத்தை காண்பித்து, “நாங்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுத்தான் புத்தர் சிலையை கொண்டு வருகின்றோம்” என்றனர்.

ஆனால் அந்த மர்மம வாகனத்தில் வந்தது யார்? எதற்காக அந்த மர்ம வாகனம் பல்கலைக்கழகத்தினுள் வந்தது? என்ற எந்தவிதமான தகவல்களும் தெரியவரவில்லை.

இந்நிலையில் இன்றையதினம் சட்ட நிறைவேற்று அதிகாரி வெங்கட் ரமணன் மற்றும் ஒழுக்காற்று விசாரணை அதிகாரி விஜயேந்திரா ஆகியோர், கலைப்பீட தமிழ் மாணவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

தமிழர்களது நிலங்கள் பறிபோகின்ற சந்தர்ப்பத்தில், பல்கலைக்கழகத்தையும் பறி கொடுப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முயல்கிறதா என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மாதவனை மயிலத்தமடுவில் மீளவும் முளைத்த ஆக்கிரமிப்பு புத்தர்

இலங்கையின் கிழக்கே பண்ணையாளர்களுக்கு என ஒதுக்கப்பட்ட மாதவனை மயிலத்தமடு விடயம் பலராலும் அறியப்பட்டது.

மாதவனை மயிலத்தமடு பகுதியில் அதிகமான பண்ணையாளர்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காகவும் தங்களது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காகவும் அப்பகுதி ஒதுக்கப்பட்டிருந்தமை வரலாறாகும்.

ஆனால் கடந்த சில வருடங்களாக மாதவனை மயிலத்தமடு பகுதியில் மகாவலியின் தலையீடு காரணமாக பண்ணையாளர்களும் கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளானதுடன் பல கால்நடைகளும் சுடப்பட்டும் கத்திகளால் வெட்டப்பட்டும் உயிரிழந்த சம்பவங்கள் அரங்கேறி இருந்தது.

அதே வேளையில், அங்கு சென்று வருகின்ற பண்ணையாளர்களின் உயிர்களும் உத்தரவாதம் இல்லாதா நிலையும் என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு நிலைமையும் உருவாகி இருந்தது.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் விவசாயம் செய்வதற்காகவும் பயிர் செய்வதற்காவும் கால்நடைகளின் இடமாக கருதப்படும் மாதவனை மயிலத்தமடு பகுதியில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி அவர்களை பயிர்செய்கை மற்றும் விவசாயம் போன்ற தொழில்களில் ஈடுபடுத்தி பண்ணையாளர்களுக்கும் மகாவலிக்கும் பெரும்பான்மை இன மக்களுடனும் முரண்பாடு ஏற்படுத்தும் விதத்தில் பல முன்னெடுப்புகளை முன்னெடுத்திருந்தார்.

மயிலத்தமடு மாதவணையில் மகாவலியால் 2019 இல் அகற்றப்பட்ட விகாரை இருந்த இடத்தில் 2023.07.30 ஆம் திகதி மீண்டும் துப்பரவு பணியில் ஈடுபட்டுவருவதாகவும் மாறாக பண்ணையாளர்களை மகாவலி அதிகாரிகள் கைது செய்வதற்கு முயற்சிக்கின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக வடக்கு கிழக்கில் தொல்பொருள் எனும் போர்வையில் தமிழர்களின் பாரம்பரிய காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் பௌத்த மத இனவாத அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

தற்போது கிழக்கு மாகாணத்திலும் அவர்கள் தங்களது கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளமை பண்ணையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் இருந்த கிழக்கு மாகாண ஆளுநர் கடும்போக்கு சிங்கள வாத சிந்தனையுடன் சிங்கள குடியேற்றம் இடம்பெற வேண்டும் என்றும் பண்ணையாளர்களை அடித்து துரத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கள விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா இடமாற்றப்பட்டு சென்றிருந்தார்.

ஆனால் இன்று கிழக்கு மாகாணத்தில் ஒரு புதிய ஒரு ஆளுநர் வந்திருக்கின்ற போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து இந்த கிழக்கு மாகாண பண்ணையாளர்களின் முதுகெலும்பாக இருக்கும் இந்த மாதவனை மயிலத்த மடு மேச்சல் தரை பகுதியை உடனடியாக பண்ணையாளர்களுக்கு வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தையும் கிழக்கு மாகாண மக்களுடைய பிரச்சனைக்கு உடனடியாக தீர்வையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பினர் சமஷ்டியைக் கோரினால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் எச்சரித்த உதய கம்மன்பில

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமஷ்டி வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தால் இந்த நாட்டில் மீண்டும் இரத்தக்களரி ஓடும் என்று கூறிவைக்க விரும்புகின்றோம் என புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

‘கிடைக்க மாட்டாத ஒன்றைத் திருப்பித் திருப்பிக் கேட்டால் கிடைக்கும் என்று கூட்டமைப்பினர் எண்ணுகின்றனர். கிடைக்க மாட்டாத சமஷ்டியைக் அவர்கள் கேட்பதால் அதில் விடாப்பிடியாக இருப்பதால் இன முரண்பாடு மேலும் உச்சமடையும். மீண்டும் இரத்தக்களரிதான் ஓடும்.

நாட்டில் இன முரண்பாடு உக்கிரமடைய நாம் விரும்பவில்லை. ஆனால், அந்த மோசமான நிலைமையைத் தமிழ்த் தலைவர்கள் விரும்புகின்றனர். அதை வைத்து நீண்ட காலத்துக்கு அரசியல் பிழைப்பு நடத்தலாம் என்று அவர்கள் தப்புக்கணக்குப் போடுகின்றனர் என தெரிவித்தார்.

இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பது தவறு – காமினி லொக்குகே

தேசிய கீதத்தை திரிபுபடுத்தி பாடுவது தண்டனைக்குரிய தவறாகும். தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பதும் தவறு. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் 13 ஆவது அரசியலமைப்பு தேவையற்றதாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.

கொழும்பில் (01) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் அதிகாரம் தனக்கு இல்லை. பாராளுமன்றமே அதை தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வக்கட்சி மாநாட்டில் தெளிவாக குறிப்பிட்டார்.

நாட்டில் தமிழர்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களுக்கும் பிரச்சினை உள்ளது. ஒரு தரப்பினரது பிரச்சினைக்கு அரசியலமைப்பு ஊடாக மாத்திரம் எவ்வாறு தீர்வு காண்பது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு தென்னிலங்கையில் கடும் எதிர்ப்பு காணப்படும் பின்னணியில் அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது.

30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை துரிதமாக அபிவிருத்தி செய்து மாகாண சபைத் தேர்தலை நடத்தி அப்பிரதேச மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தினார். அந்த உரிமையை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாதுகாத்துக் கொள்ளவில்லை.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதை காட்டிலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

69 இலட்ச மக்களின் கோரிக்கை புதிய அரசியலமைப்பை மையப்படுத்தியதாக உள்ளது.ஆகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் 13 ஆவது திருத்தம் தேவையற்றதாக்கப்படும்.

தேசிய கீதத்தை ஒவ்வொருவரின் விருப்பத்துக்கு ஏற்ப திரிபுபடுத்தி பாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதும் தவறாகும்,நான் அதற்கு நேரடியாகவே எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளேன்.- என்றார்.

உள்ளூர் கொடுக்கல் வாங்கல்களுக்கு இலங்கை ரூபாயே செல்லுபடியாகும் – இலங்கை மத்திய வங்கி

இந்திய ரூபாய் தொடர்பான தவறான தகவல்களை தெளிவுபடுத்தி இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதன்படி உள்ளூர் கொடுக்கல் வாங்கல்களுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக இலங்கை ரூபாயே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் சுற்றுலாவுக்கு இந்தியா முக்கிய ஆதாரமாக இருப்பதால், வங்கி பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிப்பது இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்திய ரூபாயை ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிப்பது இந்திய ரூபாயை இலங்கையில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்களுக்கு செல்லுபடியாகும் நாணயமாக மாற்றாது என்பதையும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் வசிப்பவர்களுக்கிடையிலான அனைத்து கொடுக்கல் வாங்கல்களுக்கும் இலங்கையின் செல்லுபடியாகும் நாணயமான இலங்கை ரூபாவை மாத்திரமே பயன்படுத்த முடியும் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஜனாதிபதியாக பசில் ராஜபக்ச கிடைக்கவுள்ளமை நாட்டுக்கு கிடைத்த பேரதிஷ்டம் – காமினி லொக்குகே

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பசில் ராஜபக்ச களமிறக்கப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தீர்மானங்களுக்கு கட்சி என்ற ரீதியில் நாடாளுமன்றத்தின் ஊடாகவும் ஒத்துழைப்பு வழங்குகிறோம். சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் வெற்றிக்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே வேட்பாளராக களமிறக்கவுள்ளதாகவும், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பிலான பிரேரணை அடுத்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் பிரேரணையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை விடுத்து இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி பல சுற்று கலந்துரையாடல்களை நடத்தியதுடன் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு சர்வகட்சி மாநாட்டிற்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

அரசியலமைப்பில் உள்ளடங்கியுள்ள 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு தமக்கு எதிர்ப்பு இல்லையென்றாலும், நாட்டில் பெரும்பான்மையினரால் எழுந்துள்ள கரிசனை காரணமாக ஆரம்பத்தில் பொலிஸ் அதிகாரம் இல்லாமல் 13வது திருத்தத்தை அமுல்படுத்த ஜனாதிபதி முன்வந்துள்ளார்.

இந்தப் பிரச்சினையை அரசியலாக்காமல் விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருப்பதால், இந்தப் பிரேரணைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆராய்ந்து இந்த விடயம் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது விசேட உரையின் போது மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான யோசனைகளையும் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா – இலங்கை இடையே தரைவழித் தொடர்புகள் அவசியம் – மிலிந்த மொராகொட

தரைப்பாலங்கள் பாலங்கள் மின்விநியோக கட்டமைப்புகள் தரையிறங்கும் உட்கட்டமைப்புகளை போன்றவற்றை ஏற்படுத்துவதிலேயே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலிருந்து பயன்பெறும் பொருளாதாரவளர்ச்சியிலிருந்து மீளும் இலங்கையின் நம்பிக்கைகள் தங்கியுள்ளன என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார்.

தரைப்பாலங்களை அமைப்பதன் மூலம் இருநாடுகளின் மத்தியிலான பயணங்களை அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ள அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஐக்கிய இலங்கைக்குள்ளேயே காணவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கும் அதன் அயல்நாடான இலங்கைக்கும் இடையிலான போக்குவரத்துகள் அதிகமாவதற்கு தரைத்தொடர்புகள் அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர் சூழல் குறித்த கரிசனைகளிற்கு தீர்வு காணப்பட்டால் பிரிட்டனிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான கால்வாய் போன்ற திட்டங்களை உருவாக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

வீதிகளில் நெடுஞ்சாலைகள் பெருந்தெருக்கள் போன்றவற்றை அமைப்பாதற்கு சூழல்பாதிப்பு குறித்த மதிப்பீடுகளை பெறவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் இந்தியாவின் வளர்ச்சியிலிருந்து நன்மை பெறும் எண்ணம் இலங்கைக்கு காணப்பட்டால் அது நிலரீதியான இணைப்புகள் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

13வது திருத்தத்தை அடிப்படையாக கொண்ட அதிகாரப்பகிர்வு குறித்து இந்திய பிரதமர் வெளியிட்ட கரிசனைகள் ஏன் இரு நாடுகளிற்கும் இடையிலான கூட்டறிக்கையில் ஏன் இடம்பெறவில்லை என்ற கேள்விக்கு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தனது சமீபத்தைய யோசனைகளை பிரதமர் நரேந்திரமோடியுடன் விவாதித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரதமர் தனது கருத்துக்களை வெளியிட்டார் இலங்கை ஜனாதிபதி தனது நிலைப்பாட்டினை வலியுறுத்தினார் இந்த பேச்சுவார்த்தைகள் தொடரும் என குறிப்பிட்டுள்ள மிலிந்தமொராகொட இறுதியில் தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஐக்கிய இலங்கைக்குள் காணவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு திருகோணமலை துறைமுகம் போன்றவற்றிற்கு செல்வதற்கும் இலங்கையிலும் இந்தியாவிலும் பொருளாதாரவளர்ச்சியை செழிப்பை ஊக்குவிப்பதற்கும். இருநாடுகளிற்கும் இடையிலான மில்லேனிய வருட உறவுகளை மேலும் ஸ்திரப்படுத்துவதற்கும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நிலத்தொடர்பினை ஏற்படுத்த இரு தலைவர்களும் தீர்மானித்துள்ளனர் எனவும் மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார்.

எனினும் இதன் அர்த்தம் சேதுசமுத்திர திட்டமா என்பது குறித்து அவர் கருத்து தெரிவிக்கமறுத்துவிட்டார்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்தியப்பிரதமர் கோரிக்கை

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அதிலுள்ள அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார் என்று இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் இன்று நேரில் தெரிவித்தார்.

அதேவேளை, மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் எனவும் இலங்கை ஜனாதிபதியிடம் இந்தியப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என்று இந்தியத் தூதுவர் மேலும் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் இன்று முற்பகல் கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே இந்தியத் தூதுவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தச் சந்திப்பில் இந்தியத் தூதுவருடன் பிரதித் தூதுவர், அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் கோவிந்தன் கருணாகரம், சி.சிறிதரன்,  சார்ள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன், ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டபோது, என்னென்ன விடயங்கள் இந்தியத் தரப்பினால் அறிவுறுத்தப்பட்டது என்பது குறித்து இந்தியத் தூதுவர் விளக்கமளித்தார். அத்துடன் இலங்கை – இந்தியக் கூட்டறிக்கையையும் கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் இந்தியத் தூதுவர் கையளித்தார்.

இரண்டு கட்சிகளும் எப்படியான தீர்வை எதிர்பார்க்கிறீர்கள் என தூதர் கேட்டார்.

13வது திருத்தத்தை இறுதி இலக்காக கொள்ளவில்லையென்றும், சமஸ்டி அடிப்படையிலான தீர்வை பெற விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தை தாம் அபிவிருத்தி செய்யவுள்ளதாக இந்திய தூதர் குறிப்பிட்டார். துறைமுகம், சக்தி, முதலீட்டு வலயம் ஆகியவற்றில் இந்தியா பங்களிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

Posted in Uncategorized

மாகாணசபைத் தேர்தலை விரைந்து நடாத்த அழுத்தங்களை வழங்குமாறு இந்தியத் தூதுவரிடம் கூட்டமைப்பு கோரிக்கை

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.