நீரே வராத மகாவலி ஆற்றுத்திட்டத்திற்கு புதிய வலயம் எதற்கு?: சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவையும் முல்லைத்தீவு மாவட்டத்தையும் மையப்படுத்தி மகாவலி ஜெ வலயம் என்ற பெயரில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் புதிய வலயம் ஒன்றைத் தோற்றுவிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. ஏற்கனவே மகாவலி ஆற்றின் நீர் வடக்கு மாகாணத்திற்கு வருவதற்கு சாத்தியமேயில்லை என்று மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் தெரிவித்துள்ள நிலையில் புதிதாக உருவாக்கப்படும் ஜெ வலயத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை உருவாக்குவதற்கான முயற்சியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

நாடு சுதந்திரமடைந்த பின்பு, பல இலட்சம் மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக்கி, அவர்களை நாடுகடத்தினீர்கள். பின்னர் இனக்கலவரங்கள் என்ற பெயரில் தென்பகுதியில் இருந்த தமிழ் மக்களைக் கொன்று, அவர்களது வியாபாரம், சொத்துகளை அழித்து, அவர்களது பூர்வீகத் தாயகமான வடக்கு-கிழக்கிற்குத் துரத்தினீர்கள். பின்னர் யுத்தம் ஒன்றைத் தொடங்கி, வடக்கு-கிழக்குத் தமிழர்களை உலகெங்கும் அகதிகளாகத் துரத்தினீர்கள். அவர்களது காணிகளைப் பறிமுதல் செய்து சிங்கள மக்களைக் குடியேற்றினீர்கள்.

இன்று தமிழ் மக்களின் பூர்வீக நிலமான முல்லைத்தீவு மணலாற்றை மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில், சிங்கள மக்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்து இதற்கு வெலிஓயா என்று பெயரையும் சூட்டியுள்ளீர்கள். மகாவலி எல் வலயம் என்று சொல்லப்படும் இந்தப் பிரதேசத்திற்கு இதுவரையில் மகாவலி நீர் எட்டிப்பார்த்ததும் கிடையாது. எட்டிப்பார்க்கப் போவதுமில்லை. மாறாக, அந்நிலங்களில் பூர்வீகமாக பயிர்செய்த தமிழ் மக்களின் காணிகள் பறிமுதல் செய்யப்பட்டு, சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

இன்று மகாவலி எல் வலயத்திற்கே அந்நதியின் நீர் வராத நிலையில், நெடுங்கேணி, மாங்குளம், வவுனிக்குளம், துணுக்காய் போன்ற பிரதேசங்களை உள்ளடக்கி மகாவலி ஜே என்னும் புதியதோர் வலயத்தை உருவாக்குகிறீர்கள். இதுவும் எல் வலயம் போன்று சிங்களக் குடியேற்றங்களுக்கே தவிர, இங்கு மகாவலி நீர் வரப்போவது கிடையாது. இந்த புதிய வலயம் தொடங்குவதற்கு முன்பாகவே, நெடுங்கேணியில் 1000ஏக்கர் நிலத்தை சீனக்கம்பெனியின் பினாமி நிறுவனமான தாய்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்கு, கரும்பு பயிருடுவதற்கு கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ள நிலங்கள் ஏற்கனவே மத்தியதர வகுப்பினருக்குப் பிரித்து வழங்கப்பட்ட நிலங்கள் ஆகும். யுத்தத்தின் காரணமாக அந்த நிலங்கள் காடுமண்டிப்போக, அவற்றை வன இலாகாவிற்குச் சொந்தமான காணிகள் எனக்கூறி, அவற்றை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கதும் கண்டனத்திற்குரியதுமாகும். இவ்வாறான கரும்பு பயிரிடுவதற்கு எத்தனையாயிரம் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்படும் என்பது யாருக்கும் தெரியாது. மணாலாற்றிற்கு நேர்ந்ததுதான் நெடுங்கேணி, மாங்குளம், வவுனிக்குளம் போன்றவற்றிற்கும் ஏற்படும் என்பதை தமிழ் மக்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் மனதில் கொள்ளவேண்டும். ஏற்கனவே திருகோணமலையைச் சுற்றிவளைத்து சிங்களக் குடியேற்றத்தின் மூலம், எவ்வாறு சேருவாவில என்ற சிங்கள தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டதோ, அதே போல வவுனியாவைச் சுற்றிவளைத்து, சிங்கள குடியேற்றங்களைக் கொண்டுவருவதற்கான ஒரு திட்டமாகவே இது இருக்கின்றது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், மகாவலி அபிவிருத்தி என்பது முழுக்க முழுக்க சிங்கள குடியேற்றங்களுக்கே என்பதை தமிழ்க் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். மிகப் பாரிய விவசாய நிலப்பரப்பைக் கொண்ட வன்னி மண்ணைப் பாதுகாப்பதன் ஊடாக தமிழ் மக்களின் விவசாயம், பொருளாதாரத்தை நிலைநிறுத்த முடியும். மாறாக இவற்றை வெளிநாட்டுக் கொம்பனிகளுக்கு விற்பதனூடாக அரசாங்கம் ஏதோவொரு வகையில் தான் நினைத்ததை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விவசாய நிலங்களைத் தாரை வார்ப்பதை தமிழ் மக்கள் முற்றுமுழுதாக நிராகரிப்பதுடன், வடக்கு மாகாண தமிழ் மக்களுக்கு மகாவலி அபிவிருத்தி சபை தேவையில்லை என்பதையும் அரசாங்கம் புரிந்துகொண்டு, அதனை வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோருகின்றோம்.

3KG தங்கத்துடன் அலி சப்றி விமான நிலையத்தில் கைது

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தங்கத்துடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய போது மூன்றரை கிலோ தங்கத்தை கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கனேடிய பூர்வகுடிகளின் இனப்படுகொலையை இலங்கையில் அனுட்டிக்க பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும் – விமல் வீரவன்ச

கனடாவில் பூர்வீக குடிகளான செவ்விந்தியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை, இலங்கையிலும் அனுட்டிக்க வேண்டுமென இலங்கை மேலவை சபை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இன்று (23) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கனடா பிரதமர் கூறியுள்ளார்.

இதனை இந்த சபை கண்டிக்க வேண்டும். கனடாவில் மண்ணின் மைந்தர்கள் செவ்விந்தியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அண்மையில் பெரிய புதைகுழியொன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

மண்ணின் மைந்தர்கள் கொன்று குவிக்கப்பட்டதை ஜூன் 21 ஆம் திகதி அனுட்டிக்கிறார்கள். இலங்கையில் நடக்காத இனப்படுகொலையை அவர்கள் அனுட்டிக்க முடியுமென்றால், கனடாவில் நடந்த இனப்படுகெ்கொலையை நாம் ஏன் அனுட்டிக்க முடியாது?

அதனால் ஜூன் 21ஆம் திகதி கனடா இனப்படுகொலையை நாம் அனுட்டிக்க பிரேரணை நிறைவேற்ற வேண்டுமென்றார்.

தமிழருக்கு இழைத்த அநீதியை மறைக்கவே பொதுவான நினைவு தினம்- சபா. குகதாஸ் ஆதங்கம்

ரணில் விக்கிரமசிங்கவின் பொது நினைவேந்தல் தினம் தமிழர்கள் மீது திணிக்கப்படுமாயின் அச் செயற்பாடு மீண்டும் ஒரு தமிழின அழிப்பாகவே அமையும் என தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

1983 இல் இருந்து 2009 வரை போராலும் வன்முறையாலும் கொல்லப்பட்ட அனைவரையும் நினைவு கூறும் வகையில் பொது நினைவு கூறும் தினத்தை பிரகடனப்படுத்துமாறு அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ளார்.

ரணிலின் இந்த செயற்பாடு இது வரை தமிழர்களுக்கு சிங்கள ஆட்சியாளர்களினாலும் அரச படைகளினாலும் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், அநியாயங்கள், படுகொலைகள், இனப்படுகொலைகள் போன்றவற்றுக்கான நீதி கிடைப்பதை தடுப்பதற்காகவும் குற்றம் இழைத்தவர்களை பாதுகாப்பதற்கும் அரசாங்கத்திற்கு ஏற்படும் சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்குமாக இந்த பொது நினைவு தினம் என்ற நாடகத்தை அரங்கேற்றவுள்ளார்.

14 ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் கனடா பிரதமரின் நினைவு கூறல் அறிக்கை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு மன ஆறுதலை கொடுத்த சம நேரம் சிங்கள ஆட்சியாளரின் போலி முகத்திரையை வெளிப்படுத்தியுள்ளது இதனால் தனித் தனியான நினைவேந்தல்களை நிறுத்த புதிய உத்தியை கையில் எடுத்துள்ளார் ஐனாதிபதி ரணில்.

தமிழர்களுக்கு பொது நினைவு தினம் ஏற்புடையது இல்லை காரணம் ஒவ்வொரு நினைவேந்தல் தினங்களும் தனித் தனியான வரலாற்றுப் பின்னணியை கொண்டவை அத்துடன் அவற்றுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை எனவே ரணிலில் விக்கிரமசிங்காவின் பொது நினைவேந்தல் தினம் தமிழர்கள் மீது திணிக்கப்படுமாயின் அச் செயற்பாடு மீண்டும் ஒரு தமிழின அழிப்பாகவே அமையும்.

தமிழின அழிப்புக்கு நீதி கோரியும், தமிழீழ கோரிக்கையை ஆதரித்தும் பிரித்தானிய பிரதமருக்கு முஸ்லீம்கள் மனு!

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்: இனப்படுகொலைக்கு எதிரான முஸ்லீம்கள் (MAG-SL) அறிக்கை

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை யுத்தம் இடம்பெற்று 14 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தாயகம் மற்றும் உலகமெங்கிலுமுள்ள தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அத்துடன் மே 18 ஆம் திகதியை இனப்படுகொலை தினமாக பிரகடனம் செய்து, நீதி தேடும் முயற்சியில் பலவழிகளில் போராடிவருகின்றர்.

இதே போல பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையமும் (ICPPG) பன்முகப்பட்ட முயற்சிகளை எடுத்து வருகின்றது. இவ்வாறான முயற்சிகளில் ஒன்றாக, தமிழரல்லாத வேற்று இன மக்களுக்கு, இலங்கையில் ஈழத்தமிழருக்கு எதிராக இடம்பெறுவது இனப்படுகொலையே என்பதையும், ஈழத்தமிழரின் விடுதலைப்போராட்டத்தின் நியாயப்பாட்டையும் உணர்த்தி, அவர்களின் ஆதரவை திரட்டும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த அடிப்படையில், கடந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாளில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான பிரித்தானியா வாழ் முஸ்லீம் மக்களை ஒன்றுதிரட்டி, “இலங்கையில் இனப்படுகொலைக்கு எதிரான முஸ்லீம்கள்” [Muslims Against Genocide in Sri Lanka (MAG-SL)] என்ற அமைப்பை ஆரம்பித்துவைத்து, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக களமிறக்கியுள்ளனர்.

18ம் திகதி தமிழர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டதையடுத்து, 19ம் திகதி, இந்த அமைப்பை சேர்ந்த முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, பிரித்தானியா மற்றும்
வெளிநாடுகளில் வாழும் பாதிக்கப்பட்ட தமிழ் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம்களின் சார்பாக, பிரித்தானிய பிரதமருக்கு மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

அந்த மனுவின் சாராம்சம் வருமாறு;

“இலங்கையில் இனப்படுகொலைக்கு எதிரான முஸ்லீம்கள் (MAG-SL)” என்ற இந்த அமைப்பானது இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக, சிங்கள-பெளத்த பேரினவாத இலங்கை அரசால் நடாத்தப்படும் திட்டமிட்ட மனித உரிமை மீறல்களை வெளிக்கொணரவும், தடுப்பதற்கும், அதற்கான நீதி தேடுவதற்குமாக, தமிழ் பேசும் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட மனித உரிமைகள் அமைப்பு ஆகும். தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் சிங்கள-பெளத்த பேரினவாத அரசாங்கங்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை இல்லாதொழித்து, இலங்கையை தனித்த பௌத்த-சிங்கள நாடாக உருவாக்கும் தமது தீவிரவாத நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காக, தொடர்ந்து கேவலமான சதிகளையும் தந்திரங்களையும் மேற்கொண்டு, தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களிடையே முரண்பாடுகளை உருவாக்கி வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் என்பன இதற்கு நல்ல உதாரணங்கள் ஆகும்.

காத்தான்குடி பள்ளிவாசல் மற்றும் பள்ளியத்திடல் போன்ற இடங்களில் சிங்கள காடையர்களை வைத்து இலங்கை அரசே அப்பாவி முஸ்லீம் மக்களை படுகொலை செய்ததுக்கு எங்களில் பலர் கண்கண்ட சாட்சியாவோம். ஆயினும் திட்டமிட்டே விடுதலைப்புலிகள் மீது இந்த வீண்பழி சுமத்தப்பட்டு, தமிழ் முஸ்லீம் மக்களிடையே ஆறாத வடு உருவாக்கப்பட்டது. இது போலவே, யாழ்ப்பாணத்தில் இருந்த முஸ்லீம் மக்களிடையே தீவிரவாத குழு ஒன்றை ஊடுருவச்செய்து, ஆயுதங்கள் வெடிபொருட்களை வழங்கி, பெரும் மதக்கலவரத்தை திட்டமிட்டது இலங்கை அரசு. தகவல் அறிந்த விடுதலைப்புலிகள் சில மசூதிகளில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் வெடிபொருட்களை கையும் களவுமாக கைப்பற்றினர். எனினும் வெடிபொருட்களை முழுமையாக மீட்க முடியாமையாலும், யாழ் முஸ்லீம் மக்களிடையே குற்றவாளிகளை மட்டும் இனங்காண முடியாமல்போன காரணத்தாலும், நடக்கவிருந்த பெரும் இரத்தக்களரியை தவிர்ப்பதற்காக, வேறுவழியி்ன்றி குறுகிய கால அவகாசத்தில் முஸ்லிம் மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

விடுதலைப்புலிகள் அந்த இக்கட்டான நிலையில் எடுத்த இந்த மிகவும் சாதுரியமான தந்திரோபாய முடிவு உண்மையில் பாராட்டப்பட வேண்டியதாகும். ஆனால் இதனை ‘இனச்சுத்திகரிப்பு’ என இலங்கை அரசு பொய்ப்பிரச்சாரம் செய்கிறது. விடுதலைப்புலிகள் எடுத்த இந்த முடிவால் பெரும் மதக்கலவரம் தடுக்கப்பட்டு, பல ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட போதும், விடுதலைப்புலிகளால் யாரும் கொல்லப்படவில்லை, அவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படவில்லை, அவர்கள் சொத்துக்கள் சூறையாடப்படவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியின் படி, சமாதான பேச்சு காலப்பகுதியில் அவர்கள் மீள அழைக்கப்பட்டு, அவர்கள் காணிகள் திரும்ப வழங்கப்பட்டு, மீள குடியேற அனுமதிக்கப்பட்டார்கள். அத்துடன்,
விடுதலைப்புலிகளின் தலைவர் முஸ்லீம் தலைமை உரிய மரியாதையுடன் அழைத்து, பேசியதுடன், இதற்கு பகிரங்க மன்னிப்பும் கேட்டது.

இது அவர்களின் நேர்மைக்கும் பெருத்தன்மைக்கும் எடுத்துக்காட்டு. விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்லர். அவர்கள் போராட்டம் நியாயமானது. அவர்கள் ஒழுக்கத்துடனும் நேர்மையுடனும் போரிட்டார்கள். அவர்கள் என்றும் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டது இல்லை. அமையவிருந்த தமிழீழத்தில் முஸ்லீம்களுக்கு சம உரிமை உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தது. இந்த உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு, அப்பாவி முஸ்லீம் சிங்கள மக்கள் மற்றும் உலகநாடுகள் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என தவறாக நம்பவைக்கப்பட்டுள்ளனர். இந்த உண்மைகளை அப்பலப்படுத்தி, ஆதாரங்களுடன் நிரூபிக்கவும்
MAG-SL அமைப்பு உறுதி பூண்டுள்ளது.

இவ்வாறு உண்மைகளை வெளிக்கொண்டுவருவதன் மூலம், இலங்கையில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான முரண்பாடுகளை விலக்கி, புரிந்துணர்வை ஏற்படுத்தி, ஒற்றுமையை வலுப்படுத்த MAG-SL அமைப்பு கடுமையாக பாடுபடும். தமிழர்களும் முஸ்லீம்களும் சகோதர சகோதரிகளே. இலங்கையில் முஸ்லீம் மக்கள் பேசுவது தமிழ் மொழியே. இதனால் எமது உறவு பிரிக்கமுடியாதது. கோவிட் காலத்தில் ஐனசா நல்லடக்கம் தடுக்கப்பட்டு எமது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டபோது தமிழ் மக்களே எமக்கு ஆதரவாக போராடினார்கள். அதுபோல, ஈஸ்டர் குண்டுவெடிப்பில் முஸ்லீம்கள் மீது வீண்பழி சுமந்தப்பட்ட போதும் தமிழர்களே எமக்காக குரல்கொடுத்தார்கள். இனிமேலும், சிங்கள-பெளத்த பேரினவாத அரசின் சதிக்கு பலிக்கடாவாக இடம்கொடுக்க மாட்டோம்.

அல்லாஹ்வின் வழியில் செல்லும் விசுவாசி பற்றி குர்ஆனில் அல்லாஹ் தெளிவாக கூறப்பட்டுள்ளது. உண்மையான முஃமின்கள் யார் (23ம் அத்தியாயம்) நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள் (அல்குர்ஆன் 13:22). பொய் சாட்சி சொல்லமாட்டார்கள் (அல்குர்ஆன் 25:72). எந்த உண்மையான முஸ்லீமும் இலங்கை அரசின் இரத்தவெறிக்கு உடந்தையாக மாட்டார்கள். அல்லாஹ் காட்டிய வழியில், பாதிக்கப்பட்ட ஈழத்தமிழருக்கு நன்மை செய்தன் மூலம் இலங்கை அரசின் தீமையை தடுப்போம். பொய்சாட்சி சொல்வதன் மூலம் காப்பாற்றமாட்டோம்.
அந்த வழியில், உண்மையாக தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் உறுதுணையாக இருப்போம். அவர்களின் சுதந்திர தமிழீழ நாடு என்ற இலட்சியத்தை முழுமையாக ஆதரிப்போம்” என்றும் இந்த மனுவின் அறிமுகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பின்வரும் 5 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:

(1) இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது/இடம்பெற்றுக்கொண்டிருப்பது “இனப்படுகொலை” (Genocide) என்பதை பிரித்தானிய அரசு உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
(2) இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான நீதி வழங்கும் பொறுப்பை பிரித்தானியாவே முன்னெடுக்க வேண்டும்.
(3) அதன் முதல்படியாக, யுத்த குற்றவாளிகளான ஜெனரல் சவேந்திரசில்வா உட்பட்ட இலங்கை அதிகாரிகள் மீது பிரித்தானியா தடைவிதிக்க வேண்டும்.
(4) இலங்கையில் வாழும் தமிழ்மக்களின் தாயகபகுதி “தமிழீழம்” என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.
(5) இலங்கையில் தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையின் படி தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்க பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்.

இந்த மனுவை, ICPPG மற்றும் MAG-SL அமைப்புக்களின் இணைப்பாளரான விதுரா விவேகானந்தன், MAG-SL அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான முகமத் லாபிர் முகமத் ரோஷன், நிரபாஸ் முகமத் நாவ்பெர், ஷாவ்உள் ஹமீது ரோஷன் கான் , சம்சுதீபன் முகமத் சபைக்கு அபிரீன் முகமத், தூஉங் பாரூக் முகமத் ரிஸ்மி ஆகியோர் பிரதமர் அலுவலகத்தில் நேரில் சென்று சமர்ப்பித்தனர்.

கனேடியப் பிரதமர் தனது கருத்தை மீளப்பெறக் கோரி காலி முகத்திடல் மக்கள் அமைப்பு கனடிய தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்

முப்படையினரும் , பொலிஸாரும் இலங்கையில் தமிழினப்படுகொலையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள கருத்தை கனேடியப் பிரதமர் மீளப் பெற வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏன் மௌனம் காக்கின்றார்? என காலி முகத்திடல் மக்கள் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.

கனேடிய பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்பினை வெளியிட்டு காலி முகத்திடல் மக்கள் அமைப்பு திங்கட்கிழமை (22) கொழும்பிலுள்ள கனடா உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு , கடிதமொன்றையும் கையளித்திருந்தது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட் காலி முகத்திடல் மக்கள் அமைப்பின் உறுப்பினர் பலங்கொட கஸ்வத்த தேரர்,

இலங்கையில் முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தமிழ் இனப் படுகொலை செய்துள்ளனர் என கனேடிய பிரதமர் தெரிவித்திருந்தார். இவ்வாறான கருத்துக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பதிலளிக்க வேண்டியதில்லை. மாறாக ஜனாதிபதியும் , பிரதமரும் நேரடியாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்திருக்க வேண்டும்.

கனேடிய பிரதமரின் ஆதரமற்ற கருத்துக்களை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இலங்கையில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கனடா அறியாத பல தகவல்களை நாம் இந்தக் கடிதத்தில் உள்ளடக்கியுள்ளோம்.

தளதா மாளிகை மீதான தாக்குதல்கள் , ஸ்ரீமகா போதி தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களால் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அந்த சந்தர்ப்பத்தில் தமது குடும்பத்தினரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக குடும்ப அங்கத்தவர்கள் வெவ்வேறு பேரூந்துகளில் பயணிக்க வேண்டிய நிலைமை காணப்பட்டது.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களின் காரணமாக எமக்கும் பதில் தாக்குதல்களை நடத்த வேண்டியேற்பட்டது. இறுதியில் அனைத்து இன மக்களும் அழிவை எதிர்கொண்டனர். இவற்றை ஜனாதிபதியும் , பிரதமரும் கனடாவுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி ஏன் அமைதி காக்கின்றார்?

சிங்கள பௌத்த மக்களை இனவாதிகளெனக் குறிப்பிட்டு , எமக்கு கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை மறுக்கின்றனர். ஜனாதிபதியும் , பிரதமரும் இது குறித்து தமது நிலைப்பாட்டை அறிவிக்காவிட்டால் நாம் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று உரிய நடவடிக்கைகளை எடுப்போம். எனவே கனேடிய பிரதமர் வெளியிட்ட கருத்துக்களை உடனடியாக மீளப்பெற வேண்டும் என்றார்.

பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

கொழும்பு, ஜயவர்த்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில் பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் டிரான் அலஸூடன் இடம்பெற்ற சந்திப்புக்களின்போது துணைவேந்தர்கள் முன்வைத்த கோரிக்கைகளை அடுத்து இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சந்திப்புக்களின் போது, பல்கலைக்கழக மாணவர்களின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள், மற்றும் திருட்டு சம்பவங்களின் அதிகரிப்பு போன்ற விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் மீண்டும் ஆட்சிக்கு வர இனவாதம்,மதவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் – அனுர குமார

மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியல்வாதிகளை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர இனவாதம்,மதவாத கருத்துக்கள் சமூகத்தின் மத்தியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

களனி விகாரையில் நாக பாம்பு தோற்றம் பெற்றதாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் ஜெரோம் பெர்னாண்டோ என்ற மத போதகர் குறிப்பிட்ட கருத்துக்கு முன்னுரிமை வழங்குவது சிறந்ததல்ல என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

குருநாகல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் காலரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதால் மக்கள் விடுதலைக்கான மக்கள் அலை குறைவடைந்துள்ளது.மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டமும் முடிவடைந்து விட்டது என அரசியல் களத்தில் குறிப்பிடப்படுகிறது.

மக்கள் கூட்டத்தால் மக்கள் முன்னணி தோற்றம் பெறவில்லை.மக்களின் நம்பிக்கையை கொண்டு மக்களாதரவை தற்போது ஒன்றுத்திரட்டியுள்ளாம்.எம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஒருபோதும் சிதைவடைய செய்ய மாட்டோம்.

வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இயற்றை அனர்த்தத்தினால் நாட்டு மக்களுக்கு இந்த நிலை ஏற்படவில்லை.அரச தலைவர்களின் தவறான நிர்வாகத்தினால் நாட்டு மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆகவே இந்த நிலையை இனியாவது மாற்றியமைக்க வேண்டும்.நாட்டுக்கு பொருத்தமான அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கையை செயற்படுத்த வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு விட்டோம் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.ஆனால் மொத்த சனத்தொகையில் 68 சதவீதமானோர் மூன்று வேளை உணவை இரு வேளையாக குறைத்துள்ளார்கள்.40 சதவீதமானோர் அத்தியாவசிய மருந்து கொள்வனவை புறக்கணித்துள்ளார்கள்.40 சதவீதமானோர் அத்தியாவசிய தேவைகளை வரையறைத்துள்ளார்கள்.ஆகவே பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்துக்கும்,சமூக கட்டமைப்பின் உண்மை தன்மைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.

பொருளாதார பாதிப்பு காரணமாக சுமார் 5 இலட்சம் பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளார்கள்.இதனால் சமூக விரோத செயல்கள் தீவிரமடைந்துள்ளன.ஒரு நாடு பொருளாதார பாதிப்புக்கு முகம் கொடுக்கும் போது சமூக விரோத செயற்பாடுகள் இயல்பாகவே தோற்றம் பெறும்.பிரேசில் நாட்டிலும் இவ்வாறான தன்மையே காணப்படுகிறது.

யுத்த காலத்தில் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியதை போன்று பொருளாதார அநாதைகளாக மக்கள் நாட்டை விட்டு வெளியேற குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் முன்பாக இரவு பகலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.2021 ஆம் ஆண்டு 13 இலட்சம் பெண்கள் வெளிநாட்டு பணி பெண்களாகவும்,2022 ஆம் ஆண்டு 74 இலட்சம் பெண்கள் பணி பெண்களாகவும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார்கள்.இதுவே சமூக கட்டமைப்பின் தற்போதைய நிலை.ஆனால் ஜனாதிபதியோ சுபீட்சமான எதிர்காலம் என்று பொருளாதாரத்தை முன்னேற்றி விட்டதாக கருத்து தெரிவித்து தன்னை காட்சிப்படுத்தி உலகத்தை வலம் வருகிறார்.

பொருளாதார பாதிப்புக்கு தீர்வு கண்டு விட்டோம் என ஜனாதிபதி குறிப்பிடுவது அடிப்படையற்றது.வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.வெளிநாட்டு அரச முறை கடன்களை செலுத்தல்,டொலர்களை மத்திய வங்கி கொள்வனவு செய்தல்,அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி ஆகிய மூன்று காரணிகளுக்காகவே டொலர் அத்தியாவசியமானது.

அரசாங்கம் இந்த மூன்று செயற்பாடுகளிலும் இருந்து விலகியுள்ளது.ஆகவே டொலர் கையிருப்பு மிகுதியாகும்.அதை கொண்டே எரிபொருள்,எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.ஆகவே இது நிலையான பொருளாதார தீர்வு அல்ல பெற்றுக்கொண்ட அரசமுறை நிச்சயம் கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டும்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய அரசியல்வாதிகளை மக்கள் துரத்தியடித்தார்கள்.மக்களால் வெறுக்கப்பட்ட தரப்பினரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர இனவாதம் மற்றும் மதவாத கருத்துக்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.ஜெரோம் பெர்னாண்டோ என மதபோதகர் குறிப்பிட்ட கருத்து தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.

இவர் பல முரண்பட்ட கருத்துக்களை ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டுள்ளார்.அப்போது எவரும் கவனம் செலுத்தவில்லை.களனி விகாரையில் நாக பாம்பு தோற்றம் பெற்றதாக குறிப்பிட்ட ஊடகங்கள் இவர் விடயத்துக்கு முன்னுரிமை வழங்குவது சிறந்ததல்ல ஆகவே மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

யாராவது தும்மினால் கூட கருத்து வெளியிடும் ஜூலி சங் திருந்திவிட்டார் – விமல் வீரவன்ச

ஜூலி சங் திருந்திவிட்டார் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை அவர் வெளியிடுவதில்லை- விமல்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஜூலிசங் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டார் என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அரகலய பிளான் பி தற்போது முன்னெடுக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தற்போது சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவதில்லை, அவர் நல்லவராக மாறிவிட்டார் யாராவது தும்மினால் கூட டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார் என விமல்வீரவன்சதெரிவித்துள்ளார்

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சிப்பேன்; பதவியேற்ற பின் வட மாகாண ஆளுநர் அறிவிப்பு

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (22) காலை 9.30 மணியளவில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி அதற்கு தீர்வு பெற்று தர முயல்வேன் தெரிவித்தார்.

அனைத்து மதங்களும் தங்களுடைய மத அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்கான உரிமைகளை வழங்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என்றும் அதற்கான சகல ஏற்பாடுகளையும் எடுக்க தான் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல மாகாண மக்கள் குறிப்பாக யாழ் மாவட்ட மக்களின் கொண்ட குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக வடக்கு மாகாண அவைத்தலைவர் எடுத்துக் கூறியிருந்த நிலையில் அது சம்பந்தமாகவும் நான் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

யாழ்ப்பாண மக்களுக்கு நீண்ட காலமாக இருக்கின்ற குடிநீர் பிரச்சினையை தனிப்பட்ட ரீதியாக தான் உணர்ந்திருப்பதாகவும் எனவே அந்த பிரச்சனையயை தீர்க்க நிச்சியமாக முக்கியமாக கவனம் எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.